Blog Archive

Monday, January 31, 2022

வாழ்த்துகள் ,ஆசிகள் தொடரும்.......

வல்லிசிம்ஹன்,

அன்பின் அனைவருக்கும் மங்கள வாழ்த்துகளும் ஆசிகளும்.
தை மாதமும் ,சித்திரை வைகாசி
மாதங்களும்    மிக மிகச் சிறப்பானவை.

மனையின் மங்கலங்கள் அதிகரிக்கும் நாட்கள் நம்மை வந்து சேரும் வேளை.

எங்கள் குடும்பத்தில் எனக்கு மட்டுமே
துரிதமாகக் கல்யாணம் ஆனது.

தம்பிகளுக்கு முறையே 28 வயதிலும் ,29 வயதிலும்
நடந்தேறின அவர்களது திருமணங்கள்.

வேறு வேறு ஊர்களில் இருந்ததால்
பையன், அவன் பார்க்கும் பெண் என்று
சந்திக்க வைப்பது ரொம்ப சிரமமாக இருந்தது.
அதுவும் ஒரு பெண்ணைத் தான் பார்ப்பேன் அவளையே தான்
மணமுடிப்பேன் என்று தீர்மானமாகச் சொன்னதால்,
பெற்றோரும், நானும்  அந்த சுமையை
ஏற்றுக் கொண்டோம்.

எவ்வளவு கடுமையான வேலை அது என்று முதலில்
தெரியவில்லை.
ஜாதகம் பொருந்தி, பெற்றோர் பொருந்தி,
பெண் சிரித்த முகமாக இருந்து
நிறைய சகோதர சகோதரிகளுடன் பிறந்தவளாகவும்
இருக்க வேண்டும்.:)

அழகாகவும் இருந்தால் + பாயிண்ட்.!!
இல்லாவிட்டாலும் ஓகே.
பெற்றோருடன் ஒத்துப் போகும் குணம்(!) வேண்டும்.

ஹப்பாடி.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
4 வருடங்கள் ஆயிற்று.
கல்கத்தாவிலிருந்து பெரிய தம்பி 
வரவேண்டும்.15  நாட்களில்  10 நாட்கள்
எங்களுடன் இருந்து விடுவான் ,அதாவது திருச்சியில்.
கல்பாக்கம் போடா என்றால் நீயும் அத்திம்பேரும் வரணும் என்பான்.

எங்கள் அருமை வண்டி அந்த மாதிரிப் பயணங்களைச் சுலபமாக
முடித்தது.
ஒரு நவராத்திரி விடுமுறையில்

அவனும் ,வந்து நல்ல பெண்ணும் அமைந்து
இருவரும் பார்த்துக் கொண்டு
உமாபதி தெருவே வெளியே வந்து அவனைப் 
பார்த்து,
மணமகளும் ஒரு வைகாசி மாதம் எங்கள் 
வீட்டுக்கு வந்தாள்.
நலமே வாழ்க.
இவன் இப்படி என்றால் சின்னவன் ,
பெண்ணே பார்க்க வேண்டாம். அக்கா சரின்னு சொன்னால்
போதும்.
நன்றாகப் பழக வேண்டும், வேலைக்குப் 
போனால் தேவலை என்று சொல்லிவிட்டான்.
அவனுக்கும் மூன்று வருடங்கள்
தேடினோம்.


இது 44 வருடங்களுக்கு முன் நடந்த கதை.

அதற்குப் பிறகு 2000த்தில் தொடங்கியா saga
எங்கள் பிள்ளைகளுக்கானது.

முப்பதையும் தாண்டிய பிறகே
அவர்கள் திருமணத்துக்கே சரி என்றார்கள்.
அது அடுத்த பதிவுக்கான விஷயம்.

இந்தத் தையில் திருமண நாள் காணுவது  இன்னோரு தோழி,
நம் திருமதி கோமதி அரசு.

ஏழாம் தேதி வரும் அந்தத் திரு நாள் என்றும் அவர் மனதில் 
பசுமை கூட்டி, அவர்கள் மக்களின் வாழ்வு செழித்திருக்க இறை அருளை
வேண்டுவோம்.சார் எப்பொழுதும் அவர்களுடன்.

எட்டாம் தேதி என் மாமனார் மாமியார் இணைந்த நாள். மஹா உன்னத தம்பதி.

இவர்கள் ஆசி எல்லாம் அடுத்துக்
காத்திருக்கும்  நம்  எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் மகனுக்குக் கிடைத்து
சீக்கிரமே அவர்கள் வீட்டில் திருமணம் நடக்க
இறையருள் கூடி வரட்டும்.
அவரைப் போலவே மண வாழ்க்கைக்குக் காத்திருக்கும் இன்னும் சில 
பெண்குழந்தைகள், பையன்கள்  அனைவருக்கும்
நல் வாழ்வு அமைய வேண்டும்.

வாழ்வில் இன்பம் மட்டுமே கூட வேண்டும்.
வயது முதிர்ந்த பெண்கள் வீட்டில் இருப்பது
பெற்றோருக்கு எத்தனை வேதனை என்று 
அந்தக் குடும்பத்தைப் பார்த்தால் உணர முடிகிறது.

தாயே மாங்காட்டு காமாக்ஷி அனைவருக்கும் உன் கருணா
கடாக்ஷம் நிரம்பட்டும்.




இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன்
 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

தை பிறந்ததிலிருந்து திருமண அனிவெர்சரிகளும் வர ஆரம்பித்தன.

மனம் நிறை வாழ்த்துகளை
அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.
சிலரைக் குறிப்பிட மறந்தும் விட்டேன்.


  மன்னிக்கணும்.

திருமணம் என்ற பந்தத்தில் 
இணைந்த அனைவரும் ,முதல் நாள் அடைந்த
மகிழ்ச்சி மாறாமல்.,அன்பு கலையாமல்

இனிய வாழ்க்கை பலப் பல சோதனைகளுக்கு 
நடுவிலேயும் 
ஒற்றுமையாக இருந்து நல் வாழ்வு பெற
இறைவன் அருள வேண்டும்.
எங்கள் மூன்று செல்வங்களுக்கும் 
எங்களுக்கும் தை மங்கை வழி காட்டினாள்.
அவர்களுக்கு ஆசிகள்.
இனிவரப் போகும் திருமண ஆண்டு நிறைவுகள்
சுபமாக அவரவர் குழந்தைகளின் நல்வாழ்வு 
ஓங்க நிம்மதியோடு இருக்க வேண்டும்.

எல்லோருக்கும் வாழ்த்துகள்.







Saturday, January 29, 2022

மொழி அறியா நிலா!!!!


வல்லிசிம்ஹன்நிலா எங்கே வந்தாலும் பாட்டுகளும்
தொடரும். 
பலப்பல  இலக்கியத் தரம் வாய்ந்த படைப்புகளை முழு நிலவு
கொடுத்திருக்கிறது.

பழைய பழைய இந்திப் பாடல்கள்
எங்கள் சிங்கத்துக்கு மனப்பாடம்.


நல்ல நிலவை அனுபவிக்கும் போது 
இதமான அவர் குரலையும், அமைதியையும்
  உணர்ந்து நிலைக்கிறேன்.
மோன நிலைக்குக் கொண்டு செல்லும்
மன  சலனத்தை நிறுத்தும் பாடல்கள் 
நேர்( பாசிடிவ்)எண்ணங்களை விதைக்கின்றன.

நூதனோடு தேவ் ஆனந்தைப் பார்க்கும்போது

நல்ல மைசூர்பாகு பக்கத்தில்
ஸ்திரமில்லாத வேறெதையோ பார்க்கும் 
நினைவு.:))))))) நம் அப்பாதுரை கைதட்டும் சத்தம் கேட்கிறதோ:)

   பிஸ்வஜித் வஹீதா ரஹ்மானின் பீஸ் சால் பாத்
படம் சக்கைப் போடு போட்டது.
வஹீதாவின் கரிஸ்மா படம் முழுவதும்.
நமது பழைய முதல்வர் செல்வி இந்தப் பாடலை
அருமையாகப் பாடி இருப்பார். ஒரு பேட்டியில் தன் இளமைக் கால நினைவாகப்
பகிர்ந்து கொண்ட பாடல்
ஆஜா  ஸனம் ! மதுர சாந்தினி  மேன் ஹை ஹம்........
மீண்டும் தேவ் ஆனந்த் ,,கீதா தத்.

பிரபலமான 1952 பாடல்.
இந்த மாதத்துக்கான நிலவுப் பாடல்கள் இத்துடன் அமர்கின்றன. 
அடுத்த நிலவில் சந்திக்கலாம்:)


Namo Namo - Lyrical | Kedarnath | Sushant Rajput | Sara Ali Khan | Amit ...

Thursday, January 27, 2022

கேள்விகளும் அவைகளின் பயனும்




வல்லிசிம்ஹன்எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்.

ஏன். எதற்கு, எதனால்  என்ற கேள்விகளுக்கு  எல்லா வேளைகளிலும் பதில்
கிடைப்பதில்லை.


பல விசாரங்களும் விசாரணைகளும்  பயன் தராமல் இருக்கும்.
சில கேள்விகளுக்கு. உரியவர் களிடமிருந்தோ
இல்லை. குருவினடமிருந்தோ பதில் கிடைக்கலாம்.

குழந்தைகள் கேட்கும் சில கேள்விகளுக்கு இப்போது கூட பதில்
சொல்ல முடியவில்லை என்னால்.

பல விசாரங்களும்  ஆய்வுகளும்.  பதில் கிடைக்காமலேயே  மறைகின்றன.
நாம் வளர்ந்த போது. பெரியவர்கள் சொல்வார்கள் 
அதன்படி நடப்போம்.
ஆராய வேண்டும் என்று  தோன்றியதில்லை.

இப்போது அப்படி இல்லை. பிறக்கும் போதே ஆராய்ந்து கொண்டே
பிறப்பார்கள் என்று தினைக்கிறேன்:)
எழுதி வைத்த அத்தனையும் காணோம்:)

பரவாயில்லை. பாடல்களைக் கேட்கலாம்.


வானம்பாடி என்று கவிஞர் எடுத்த படம்.
பாடல்களில் இனிமை சொல்லி முடியாது. அதிலிருந்து ஒரு கேள்வி
பதில் பாடல்.
ஆயிரத்தில் ஒருவன் படம் வந்த போது

மதுரை திமிலோகப் பட்டது. அதன் கருத்து, படம் எடுக்கப் பட்டவிதம்
வாலியின் பாடல்கள் எல்லாமே 
அருமை.
அதில் வந்த பாடல் ஏன் என்ற கேள்வி.

சிறப்பாகப் படம் பிடித்திருப்பார்கள்.

Tuesday, January 25, 2022

பனி பொழிந்து கொண்டே இருக்கும்!


வல்லிசிம்ஹன்





 எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

பனி பொழிவது நிறகவே இல்லை. நாளை ஆகக் குளிர் நிறைந்த நாளாம்.!!
மதி நிறைந்த  நன்னாள் தான் நமக்குப் பிடிக்கும்.

பனிஉறை நிலைக்குக் கீழே போகும் சீதோஷ்ணமானி.
 
மரங்களின் இலைகளோடே
இந்தக் குளிரில் வாழும் குருவிகளையும் 
அணில்களையும் பார்க்கிறேன்.

சரசரவென்று கீழே இறங்கி அவை வருவதும், நம் கண்ணுக்குத் தெரியாத
இரையை எடுத்துக் கொண்டு மேலும் கீழும் ஓடுவது ஒரு ஆனந்த
அதிசயம்.
அதுவும் கனுப்பொங்கல் அன்று வைத்த கலந்த சாதங்களை
ஸ்னோ ஐஸ்ஸிலிருந்து தோண்டி எடுத்து
அவை வாயில் கவ்விச் செல்லும் லாவகம் மிக மிக அருமை.
படம் எடுக்காமல் விட்டேனே என்று அலுத்துக் கொள்கிறேன்.

படம் பிடிப்பதைவிடப் பார்ப்பது இன்னும் ரசனை.

இறைவன் அனைவரையும் காக்க வேண்டும்.

Monday, January 24, 2022

வெள்ளி நிலா.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.


தை வெள்ளிக்கிழமை அனைவருக்கும் நன்மைகள் தொடரட்டும்.

நிலவைத் தொடர்ந்து கண்டு வரும் இன்பமே
தனி. இந்தக் குளிர்காலத்தில் வானத்த்ன் நீல நிறம்
அதீதமாகச் சிறப்பாக விளங்குகிறது. 
கோடை காலத்தில் மேகங்கள் திரண்டு நிலவை மறைக்கும்.

மார்ச் ,ஏப்ரிலில் ஆரம்பிக்கும் மழை காலங்களில்
நிலவைக் காணமுடியாமல் வருத்தமாக
இருக்கும். அனேகமாகக் குளிர் மாதங்களிலும் இந்த
நிலைமை வரும்.
இப்போது  அதிசயமாக பௌர்ணமி நாளிலிருந்து
காட்சி தரும் நிலா அன்னை,அத்தனையும் வெள்ளி
உருக்கிவிட்டது போல தக தகவென்று
ஒளிவிடுகிறாள்.

காலையில் எழுந்ததும்   முதலில் வரும் நினைப்பு
நிலாவைப் பற்றிதான்.
மழை வராத இந்த நாட்களையும்,
மேகங்கள் இல்லாத வானையும் நன்றியுடன்
வாழ்த்துகிறேன்.



காதல் நிலவையும்  சேர்த்துக் கொள்கிறேன்:)


பாக்யலக்ஷ்மி படப் பாடல்கள்
அனைத்தும் திண்டுக்கல்லில் இருந்த போது கேட்டது.
காண வந்த காட்சியென்ன பாடல்

அப்போது புரியாவிட்டாலும், பின்னர் தொலைக்காட்சியில் பார்க்கும் போது
ரசிக்க முடிந்தது.



Saturday, January 22, 2022

(மீண்டும்) பாட்டி,அம்மா, நான்,பெண், பேத்தி பேரன்.

வல்லிசிம்ஹன்

Vallisimhan  October 2011

  ஸ்ரீ ஸ்ரீனிவாசர் கோவில், வெள்ளாளத் தெரு
புரசவாக்கம் தெரு   
1970 வரை என் சொர்க்கமாக இருந்த இடம்:)


புரசவாக்கத்து வீடு, மூன்று அறைகளும் வீட்டுக்கு வெளியே இருக்கும் வெளிவசதிகளும் கொண்டது.

கோலம் போடும் இடத்தைத் தாண்டியதும் ஒரு பத்துக்குப் பத்து வரவேற்பறை. ஒரே ஒரு நாற்காலியும் பெஞ்சும் உண்டு:)

கம்பித்தடுப்பும் அதற்கு மூங்கில் தட்டியினாலான மறைப்பும்(கர்ட்டன்)உண்டு.
இதைத் தாண்டியதும் நான் சொன்ன கூடம். அதில் ஒரு காத்ரேஜ் பீரோ, அரிசி மூட்டை வைக்கும் ஒரு  பெஞ்ச்.

அத்ற்கு முட்டுக் கொடுக்க இரண்டு செங்கல்கள்
அந்தப்பக்கம் சுவரில் ஒரு குட்டி ஜன்னல்.
இந்தப்பக்கம் சுவரில் முப்பத்திரண்டு கடவுள் படங்கள்.:)
மூலையில் நல்ல மரத்தால் செய்த அலமாரி
ஒன்று.
மேல்தட்டில் அலங்கார பொருட்கள்.
இரண்டாவது தட்டில் தாத்தாவின் பிரபந்தம்,பாட்டியின் சிவகாமீயின் சபதம்
மாமாக்களின் எகனாமிக்ஸ் புத்தகங்கள் ,,
அந்தக் காலத்து விஞ்ஞான புத்தகங்கள்
கீழ் தட்டில் இவர்கள் பரிசாக வாங்கிய கோப்பைகள்,தட்டுகள் என்று வரிசையாக இருக்கும்.
அதற்கு
அடுத்த அறை கொஞ்சமே பெரீய புழக்கடையைப் பார்த்த சமையல் அறை.
அதீல் அடுப்பு மேடையின் கீழெ
கற்சட்டிகள் அடுக்கி வைக்கப் பட்டு இருக்கும்.
அதைத்தவிர பாட்டியின் தம்பி, ஹைதராபாத் மிலிட்டரி மாமா வாங்கி வரும்
பீங்கான் ஊறுகாய் ஜாடிகள். என் உயரத்துக்கு இருக்கும்.
கலயங்களில் காய்கறிகள் கழுவி வைக்கப் பட்டிருக்கும்.

தையல் இலைக்கட்டுகளும் இருக்கும்.
எதிர்த்த சுவரில் பருப்பு வகையறாக்களை வைக்கும் காரைக்குடி டப்பாக்கள்
வைக்க ஒரு மரத்தட்டு சுவற்றில் அடித்து வைத்திருப்பார்கள்.
அதன் அருகிலேயே காப்பிக் கொட்டை அரைக்கும் மெஷினும் இருக்கும்..

அந்தப்பலகையில் மாட்டியிருக்கும் கொக்கிகளில் நல்லெண்ணை,தேங்காயெண்ணை,
நெய், 

  நெய். டால்டாவா என்று நினைவில்லை.
ஒரு இனிய பெண்மணி, நெற்றியில் கருப்புக்கலரில் நாமம்
டாட்டூ மாதிரி போட்டிருப்பார்.
அவர் கொண்டு வந்து கொடுக்கும் பட்சண நெய்.  
எவர்சில்வர் தூக்குகளில் தொங்கும்.

சமையலறைக்கு மட்டும் ஓடு வேய்ந்திருக்கும்.
அவ்வப்போது சீனிம்மாவை மட்டும் கடிக்கும் தேள்களும் அங்கிருந்து விழுவதுண்டு.
நான் ஒன்று கூட பார்த்ததில்லை.

தேள் கொட்டினால்,சீனிம்மா,தன் வேலையெல்லாம் முடித்துக் கொண்டுதான்,
டாக்டரைப் பார்க்கப் போவார்.
இல்லாவிட்டால் வீட்டுக்கே வந்து ஊசி போடும்  டாக்டரை
அவர் பெயர் நடராஜன் என்று நினைவு.
எல் எம் டி என்று ஞாபகம்.
 வரவழைப்பார்.

இதே வீட்டில் அம்மாவைப் பெண் பார்க்க அப்பா குடும்பம் வந்திருக்கிறது.
மாமாக்கள் திருமணங்கள்,
பிறகு என் திருமணம் எல்லாம் நடந்தன.
வாசல் சிமெண்ட் தரையில் கட்டில்கள் போட்டு ஆண்களும்,
வீட்டின் உள்ளே பெண்களும்,முதல் அறையில் குழந்தைகளும் படுப்போம்.
சரி பாத்திரங்கள் அலம்பற சீனுக்குப் போவோமா::)

அப்போதெல்லாம் சமையலறைக் குழாயில்
சரியாக காலை மூன்று மணி அளவில் கொட கொட
சப்தத்துடன் தண்ணீர்
வரும் சப்தம் கேட்டு நான் விழித்துக் கொ;வேன்.
அதற்கு முன் சீனிம்மா,சமையல் அறையில் பாத்திரங்கள் போட்டு வைத்திருக்கும் இடத்தில்
ஔ மணை போட்டு
அங்கிருக்கும் பாத்திரங்களுக்கு
வேண்டிய உபசாரங்கள் செய்து அலம்ப ஆரம்பிப்பார்.
நடு நடுவில் பக்கத்து மேடையின் மீதிருக்கும் சிமெண்ட்
தொட்டியில்
நல்ல தண்ணீரைப்
பிடித்துச் சேமிப்பார்.
எத்தனை உழைப்பு. (கடைசி வரை இடுப்பு
வலி இருந்தாலும் முகத்தில் காண்பித்துக் கொள்ள
மாட்டார்.)
06.00 Am.
அப்போது மணி ஆறு ஆகியிருக்கும். ஒவ்வொருவராக மாமாக்கள்,தம்பிகள்,அம்மா எல்லோரும் எழுந்து கூடத்தில் அவரவர் படுக்கைகளில் உட்கார்ந்து ,பேசிக்கொள்ள ஆரம்பிப்பார்கள். அது நாட்டு நடவடிக்கைகளிலிருந்து ஊர் நடப்பு,யாருக்குக் கல்யாணம்,என்ன படம்,சிவாஜி மாதிரி உண்டா இப்படி போகும்.


நானும் சீனிம்மா குளிக்கப் போகும்போது இங்கே வந்துவிடுவேன். அம்மாவுடன் ஒட்டியபடி அவர்கள் பேச்சைக் கேட்பதில்,அந்தக் குரல்களின் அன்பு மொழியில் ஒருவிதப் பாதுகாப்பு இருக்கும்.

சீனிம்மா தான் மட்டும் சில்லென்ற பச்சைத்தண்ணீரில் குளித்துவிட்டு,மற்றவர்களுக்கு பெரிய வென்னீர்த்தவலையில் தண்ணீரை நிரப்பிவிட்டு
அடுப்பு மூட்ட அம்மாவைக் கூப்பிடுவார்.
''போறும் பாப்பா, அதுகள் இன்னும் வெளியே கிளம்பணும். பேச்சு நிறுத்திக் கொள்ளுங்கள்''
என்று குரல் கதவுக்குப் பின்னாலிருந்து வரும்.

அத்தனையூண்டு மூன்றே அறை கொண்ட வீட்டில் அத்தனை பேர் எப்படி இருந்தோம்!!

உடமைகள் கொஞ்சம். மனம் பெரிய விசாலமானது.அது ஒன்றுதான் காரணமாக இருக்க முடியும்.
மீண்டும் சீனிம்மா ஒரு பெரிய பாத்திரத்தோடு வாசலில் பால் வாங்கக் கிளம்புவார்.

மாடு ஒன்று கட்டியிருக்கும். தோலால் தைத்த கன்று ஒன்றும் நிறுத்தி இருக்கும்.நானும்
அந்தக் கோபாலுக் கோனாரிடம் கேட்பேன். '' இந்தக் கன்னுக்குட்டி கத்தாதா '' என்று அவரும் சலிக்காமல் சொல்லுவார். அது புல் மேயப் போயிருக்கு. நான்
 திரும்பிப்  போகும்போது இந்த உடம்புக்குள்ள வந்துவிடும் என்று.

ஆறு வயதில் எனக்கேன் இந்தச் சின்ன விஷயம் கூட எட்டவில்லை என்று,
இப்பொது யோசிக்கிறேன்.

இப்போது என்றால் காலமே வேறு. பெரிய பேரன் (2006)சொல்கிறான்
 ,150 வருடங்கள் வாழ மருந்து கூடிய சீக்கிரம் வந்துவிடுமாம். முடிந்தால் அவனே கண்டு பிடீக்கப்போகிறானாம்

''நோ படி ஹேஸ் டு டை பாட்டி'':)

இப்போது இந்தக் கதை எழுத என்ன காரணம்???
இருக்கு.அது அடுத்த பகுதியில்

வரும்:))))
அன்று சீனிம்மா எங்களைப் பராமரித்ததற்கும், இப்போது இங்கே நாங்கள்
 வந்து இங்கு(சிகாகோ)

இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இல்லை.
பாட்டிகள் மாறுவதில்லை.
அநுபவங்கள் மாறுகின்றன. அவ்வளவுதான்.

அன்றைய பாட்டிக்கு வேலை செய்ய ஆள் கிடையாது.
இங்கே பேத்திக்கும் அதே நிலைமை.

அவளும் பாத்திரம் தேய்த்து,துணி உலர்த்தி,
வீடு பெருக்கித் துடைத்து எல்லாம் செய்தாள்.
இங்கு பேத்தியும் அதையே இன்னும் கொஞ்சம் நாகரீக லெவலில் செய்கிறாள்.
அப்பளம் வடகம் வத்தல் எல்லாம் செய்ய நேரம் இருந்தது.
இன்றைய பாட்டியான எனக்கு இங்கே வந்தால்தான் அந்த வேலை.
நம்ம ஊரில்தான்
க்ராண்ட் ஸ்நாக்ஸ் எனக்காகவே திறந்திருக்கிறார்களே;)
மேலும் எங்க வீட்டு மொட்டை மாடிக்கு தூசிதும்பு அதிகம் வரும்.
ரோட்டு மேல வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம்.
இந்த ''ஐக் புயல்'' சூறாவளி வருவதற்கு முன்பே கொஞ்சம் ஊறுகாய் வடாம் எல்லாம் போட்டாச்சு.
இரண்டு நாட்களாக சூரியனைக் கண்ணால் பார்க்கவில்லை.
நடுநடுவே பேஸ்மெண்ட் செக்கிங் வேற. அங்க தண்ணீர் சரியாக
வெளியேற்றப் படுகிறதா என்று பார்க்க வேண்டுமாம்.
சரி இந்த தற்கால நிகழ்வுகளுக்கும் சீனிம்மாவுக்கும் என்ன சம்பந்தம்.
அவருக்கு இந்த அமெரிக்க மனிதர்கள் பற்றிய நாவல்கள் ரொம்பவும் பிடிக்கும்.


எல்லா
எழுத்தாளர்கள்,ஆர்தர் ஹெய்லி,டானியல் ஸ்டீல்,ஜெஃப்ரி ஆர்ச்சர் இவர்களுடைய ஆக்கங்களைத் தமிழ்ப் படுத்தி ராகி.ரங்கராஜன் அவர்கள் குமுதத்தில் எழுதும்போது ஒரு வரி விடாமல் படிப்பார்.
எதைப் பற்றியுமோ யாரைப் பற்றியுமோ அவசரமாகக் கணித்து விடமாட்டார்.
எல்லோருடைய செய்கைகளுக்கும் ஏதாவது காரணம் இருக்கும்,
என்று நிதானமாக அதர்சைட் ஆஃப் மிட்னைட் கதாநாயகியை அலசுவார்.
என்னுடைய திருமணத்தின் போது இருந்த சீனிம்மாவுக்கும்,இப்போது
30 வருடங்கள் கழிந்த நிலையில் புத்தம் புதிதான சீனிம்மாவைப் பார்ப்பதற்கும்
ஏகப்பட்ட வித்தியாசம்.
சந்தோஷமாக இருந்தார். நான் முதல்தடவை டெட்ராய்ட்டுக்கு (1998)வந்த போது நிறைய விவரங்கள் எனக்குக்
கொடுத்தார்.அவரையும் அழைத்து வந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாரோ.
வருவதற்கு சம்மதித்திருக்க மாட்டார்;)பிள்ளைகளை விட்டு வரவேண்டுமே!!
காரணங்கள் இவ்வளவுதான் இந்தக் கொசுவத்திக்கு.
இந்தச் செல்லப்பாட்டி   என்  வாழ்வின்   வெகு முக்கிய அங்கம்
அவளை நட்சத்திரப் பதிவில் கவுரவிக்கணுமா இல்லையா.


at October 23, 2011 7 comments:  

என் பேத்தியும் நானும்.  2010
+++++++++++++++++++++++++++++
'பாட்டி,நான் உனக்கு காயெல்லாம் கட் செய்து கொடுக்கிறேன்.
காஃபி கூட மைக்ரொவேவ்ல போடுவேன்.
உன்னோடயே இருந்துடறேனே. அம்மா அப்பா மட்டும் போட்டும்''
இது ஸ்விஸ் பேத்தியின் கொஞ்சல்.
''இந்த ஊர்ல கொசு இருக்குடா,, கால் வைக்கிற இடமெல்லாம் அழுக்கு இருக்கும்,
தோட்டத்திலிருந்து பூச்சியெல்லாம் உள்ள வந்துடும்''
நீதான் அந்த பெரிய புஸ் புஸ் வச்சிருக்கியே, நாம அதெல்லாம் விரட்டிடலாம்.
நான் சமத்தா சாப்பிடறேன்.

அப்புறமா புதுப் பாப்பா வந்தாட்டு நாம ''பாசல்'' போகலாம்.

இப்படி விதமா விதமாகப் பேசி இங்கேயெ இருக்கேன்னு சொன்ன குழந்தை இதோ கிளம்பப் போகிறது:)

நீ கோவிந்தா உம்மாச்சி,சாயித்தாத்தா உம்மாச்சி எல்லார்கிட்டயும் பெசிண்டிரு பாட்டி.
நான் அப்புறமா வரேன்.
அப்பா பாவம் ,தனியா இருக்கப் பயமா இருக்கும். நான் அவாளோடயே போகிறேன் என்று
''டோரா'' பையையும் தூக்கிக் கொண்டது.

வசந்தமெல்லாம் கொஞ்ச நாட்கள் தான் என்று நமக்குத் தெரியாதா என்ன!!!



எல்லோரும் வாழ வேண்டும்.








Friday, January 21, 2022

அதிசயம்ஒற்றுமை,அன்பு.

வல்லிசிம்ஹன்


எல்லோரும் என்றும் வளமாக வாழ வேண்டும்.
எது  விந்தை ...எது அதிசயம்.
இவை காலங்காலமாக 
நான்  ,நாம் ஆராய்ந்து வரும் உண்மை.
அன்பின் சகோதரி கமலா ஹரிஹரன் சொல்லி இருக்கும் கவிதை
போல பெற்றோர் பிள்ளைகள் 
உறவு மாறிக் கொண்டே தான் இருக்கிறது.

நான் சிறியவளாக இருக்கும்போது எனக்குக் கிடைத்த கூட்டுக் குடும்பம்
என் குழந்தைகளுக்குக் கிடைக்கவில்லை.
அவர்களுக்கு ஆதரவாக இருந்தது பெரும்பாலும் என் பெற்றோர்.

அதனால அங்கே ஆகர்ஷணை அதிகம்.

சிங்கத்தின் அம்மா மிக அருமையாக இருப்பார். இருந்தாலும்
12 பேரன் பேத்திகளுக்கு நடுவே
நம் குழந்தைகளுக்குக் கிடைக்கும் சலுகை
கொஞ்சம் மட்டுப் படும்:)

அதனாலயே அவர்கள் இன்னும் உரம் பெற்றார்கள்.
அதனால் நஷ்டம் ஒன்றும் இல்லை.

இப்போது நான் பாட்டியாக இருக்கும் போது
இளைய தலைமுறைகளின் சொற்களைக் கேட்டுக் 
கொள்கிறேன். அவர்களுக்கே உண்டான வேலை அழுத்தம், படிப்பு அழுத்தம்
எல்லா வற்றையும் பார்க்கும் போது இன்னும்
கொஞ்சம் பரிவுதான் காட்ட வேண்டி இருக்கிறது.

மிகவும் பிடித்த படங்கள் ஆனந்தம், பாண்டவர் பூமி,
எங்கள் குடும்பம் பெரிசு, மக்களைப் பெற்ற மகராசி 
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

நாம்  நம் குடும்பத்தைக் கவனித்தது போலவே
இப்பொழுது நம் மக்கள் அவர்கள் குடும்பத்தை க்
கவனிக்கிறார்கள்.

நம்மைக் கண்காணிக்க வீட்டில் மாமியார்,பாட்டி எல்லோரும் இருந்தார்கள்.
இப்போது இவர்களுக்கு அந்தத் தொந்தரவும் இல்லை.:)

சம்சாரம் மின்சாரம் படத்தில் வரும் அழும் லக்ஷ்மி மாதிரி
இருக்க இப்போது யாரும் தயாரில்லை.

பெற்றோர்களே முதலில் அவர்களைத் தனிக் குடித்தனம்
வைக்கவே ஆசைப் படுகிறார்கள்.:)

எப்படியோ எல்லோரும் அவரவர் கணவனையும், பெண்டாட்டியையும்
,குழந்தைகளையும் நல்லபடியாகக்
கவனித்துக் கொண்டால் போதும் என்று நினைக்கிறார்கள்.
இருக்கலாம் தான். நமக்கும் வயது 80க்கு மேல் ஆகும்போது?

யாராவது வேண்டாமா. தனி வீட்டில் குடி இருக்கும் மூன்று
பெண்களை எனக்குத் தெரியும். 80க்கு மேல் வயதானவர்கள்தான்.

நலம் வாழப் பிரார்த்தனைகள்.




Wednesday, January 19, 2022

நிலவைப் பார்த்து...



வல்லிசிம்ஹன்எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

நிலாப் பைத்தியம் என்னை விடுவதாக இல்லை:)

இரவு  நேரம் பனி மூட்டத்தில் மறையும்
நிலா அன்னை காலையில்
படி இறங்கி வருகையில்
 வாசல் கண்ணாடிக் கதவுகளுக்கு அப்பால்
வந்து குதிக்கிறாள்.
உன்னை விட்டு நான் ஓட மாட்டேன்.
என்றும் உன்னுடனே நான் என்று சொல்கிறாளோ.!

15 வருடங்களாகப் படங்கள் எடுத்து வருகிறேன்,
அலுக்கவில்லை.
அப்படியே ஒரு கனிவான முகம் அதில் தெரிகிறது.

அப்படியே கதவோரம் ஒரு நாற்காலியைப் போட்டுக் 
கொண்டு உட்கார்ந்து பார்க்க ஆசைதான்.
கண்ணாடியைத் தாண்டி வரும்  குளிர்
என்னை நகரச் சொல்கிறது.

குளிர் கிரணங்களால் நிலத்தை அணைக்கும் அன்பு.
மலையோ மடுவோ, வீடோ ,காடோ
எதுவுமே  அவளுக்கு வேறுபாடு இல்லை.
மனித மனங்களின் காயங்கள் ஓடிப் 
போவதும் அவளால் தான். 
பழைய நினைவுகளைக் கொண்டு வந்து கொட்டி
அசை போட வைப்பதும் அவள்தான்.
நன்றி நிலாவே.






எல்லோரும் வளமுடன் வாழவேண்டும்.

யாரோடு....யார்.



வல்லிசிம்ஹன், 

 நான் யார் என்ற கேள்வி 
அடிக்கடி தோன்றிக் கொண்டே இருக்கும் சில சமயம்.:)

நிறைய ஆன்மீக சிந்தனைகளைக் கேட்பதனால் 
இருக்கலாம்.
கேட்டால் மட்டும் பதில் கிடைத்துவிடுமா என்ன.!!!

மன இறுக்கம் போக்க சில பாடல்கள்.




மிகப் பிடித்தது "யார் அந்த நிலவு. "
இந்தப் பாடல் காட்சியின் அமைப்பு,
சிவாஜியின் நடை, விஸ்வனாதன் ராமமூர்த்தி இசை,
கவிஞரின் பாடல்வரிகள்...

எப்படித்தான் இப்படி ஒரு காட்சியை
அமைத்தார்களோ.டி எம்  எஸ் அவர்களின் 

மிக மிக நிதானமான குரல்,இரவின் அமைதிக்கு ஏற்ற
கவிதை.


மேலே இருக்கும் மோஹன் பாடல்  எஸ்பி பி
அவர்களின் குரலில் மிதந்து வரும்போது
1980 களில் பார்த்த படம் நினைவில் வருகிறது.



60களில் வெளிவந்த பார்த்தால் பசி தீரும் 
படப் பாடல். இதிலும் அந்த நாளையக் கனவுக் கன்னி சரோஜாதேவி
அவர்களின் நடிப்பும்,
சிவாஜி அவர்களின் முக பாவமும், நடையும்
சுசீலா அம்மாவின் குரலும்
சேர்ந்து படைத்த காவியம்.
எப்பொழுதும் அனுபவிப்பது.


1998 எங்களைச் சுற்றி வந்த மஹராஜபுரம் சந்தானம் அவர்களின்
குரலில் இந்தப் பாடல் எப்பொழுதும் பிடிக்கும்.
பாடலின் வரிகளில் உள்ள ஊக்கம்
அனைவரையும் கவரும்.ஆஸ்வாஸப்படுத்தும்.

யாரை நம்பி யார்,
இந்தப் பாடலுக்கு சிவாஜி சாரின் நடிப்பு,
டி எம் எஸ்ஸின் குரல்

எந்த நாளும் உண்மை. இந்த நிலைமை எல்லோருக்கும்
கிடைத்தால் அது பெரிய விடுதலையாக
இருக்கும்.
ஆனால் யாரும் இல்லாமல் இருப்பது மிக மிகக் கஷ்டம்.


பாசமலர் சாவித்ரி இல்லாமல் பதிவு இருக்குமா.

இந்த  ஜோடியின்  நடிப்பு, இயற்கையின் அருமை

பி பி எஸ், மற்றும் சுசீலாம்மா குரல்,
கண்ணதாசன் கவிதை, மெல்லிசை மன்னர்களின் இசை
எல்லாவற்றையும் சேர்த்துக் கேட்பதே அருமை.
எப்படிப் பாடினரோ  என்று தான் தோன்றுகிறது.
அனைவரும் வாழ்க நலமுடன்.

Tuesday, January 18, 2022

Prathapa Mudhaliar Charithiramஒலிப்பதிவின் ஒன்பது பாகங்கள்.

ஒன்பது பாகங்களும் இதில் இருக்கின்றன.

அன்பின் மதுமிதா ராஜா அவர்களுக்கு 
நன்றி.
அரிய நூலின் ஒலிப்பதிவை நட்புகள்
இவைகளைக் கேட்க வேண்டும் என்று

வேண்டிக் கொள்கிறேன்.

பழைய படப் பாடல்கள் புதுமைப் பித்தன்

வல்லிசிம்ஹன்

இனிய இசையும் நல்ல திரைக் கதையும்
அமைந்த படம்.
இனிய இசையும் நல்ல திரைக் கதையும்
அமைந்த படம்.

புதுமைப் பித்தன் படம் 1957இல்  வெளியானது.

ராஜா ராணி கதை தான்.

திரு ஜி.ராமனாதன் இசையில் வந்த பாடல்கள்.

 பாடல்கள்  திரு தஞ்சை ராமதாஸின் கைவண்ணம்.

எம் ஜி ஆர், டி ஆர் ராஜகுமாரி,
பி எஸ் சரோஜா, ஈவி சரோஜா, சந்திரபாபு, பாலையா
என்று பிரபல நடிகர்களின் அசத்தலான நடிப்பு.

அப்போதெல்லாம் கிடைக்காத சான்ஸ் இப்போது
யூடியூப்  சேவையில் கிடைக்கிறது.:)

ஏதோ பழைய ஷேக்ஸ்பியர் டிராமா
பார்ப்பது போல இருந்தது.
இரண்டு மூன்று ஆங்கிலப் படங்கள் சாயல்.

இருந்தாலும் அருமையான உழைப்புடன்
எடுக்கப் பட்டிருக்கும் திரைப் படம்.

டி ஆர் ராமண்ணா இயக்கியிருக்கிறார்.
ஒவ்வொருவர் வரலாற்றையும் படிக்கும் போது ஆச்சரியமாக
இருக்கிறது.

சீக்கிரமே ஒரு ஆராய்ச்சிப் பட்டம் வாங்கும்
அளவுக்குத் தேறிவிடுவேன் என்று நினைக்கிறேன்:))

எல்லோரும் நலமுடன் நோய்த் தொற்று 
பயமில்லாமல் வாழ வேண்டும்.

Sunday, January 16, 2022

பிரதாப முதலியார் சரித்திரம் 8 | Prathapa Mudhaliar Charithiram | Audio b...

அன்புத் தோழி ஆடியோ பதிவாக வெளியிட்டு வரும்
பிரதாப முதலியார் சரித்திரம்,

தமிழ் நாட்டின் முதல் நாவல்.
எழுதியவர் திரு. மாயூரம் வேத நாயகம் பிள்ளை.

இந்த புதினத்தைப் பற்றி

பழைய க்விஸ் நிகழ்ச்சிகளுக்காகத் தெரிந்து கொண்ட
நினைவு.

இதை ஒரு பெரிய ப்ராஜெக்ட்டாக  அன்பு மதுமிதா
எடுத்துப் பொறுமையாகப் படித்து வருகிறார்.
அந்த ஏற்றத் தாழ்வுடன் , இதமான குரலில் 
அவர் படிக்கும் அருமை ,
அந்தக் கதையை வேத நாயகம் அவர்கள்
எழுதி இருக்கும் சிறப்பு  எல்லாமே  

அசர வைக்கிறது.
இந்த எழுத்து நடை நான் இது வரை படிக்காதது.

நிறைய பேரை சென்றடைய வேண்டும்
என்பதற்காக  இங்கே பதிகிறேன்.
இவ்வளவு ஈடுபாட்டுடன்  ஒருவர் முனையும் போது அதைக்
கேட்டுப் பயன் அடையலாமே என்ற ஆசைதான்.

படிக்க முடியாதவர்கள் கேட்டுப் பயன் அடையலாம்.
அந்தக் கால வாழ்வு எத்தனை உன்னதமாக
நேர்மையாக இருந்திருகிறது என்று உணர முடிகிறது.

நிகழ்வுகள் நடந்த காலத்தின் சரித்திரம்
கண்முன்னே நிகழ்வுது போல ஆசிரியர் எழுதி இருக்கிறார்.

அனைவரும் கேட்க வேண்டிய ஆடியோ புத்தகம்.

ஒரு இழப்பிலிருந்திலிருந்து வெளி வந்திருக்கும் தோழி
எடுத்திருக்கும் நல்ல திடமான முயற்சி வெற்றி பெற வேண்டும்
என்பதே என் ஆசை.

நன்றி.

Saturday, January 15, 2022

காணும் பொங்கல் வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன்

நம் நாட்டுக்கே உரிமையான
சகோதரபாசம் கொண்டாடும் நாள் இன்று.
கனுப்பொங்கல். 
சிலபேருக்கு இன்றுதான் பொங்கல் விழா.
தை மகள் தினந்தோறும் பிறக்கிறாள்
போல இருக்கிறது.

எப்படியோ
ஆதவன் செழிப்புடன் நம்மைக் காக்கட்டும்.
நீர் வளம் நிரம்பி,பயிர் வளம் செழித்து,
மக்கள் மனம் நிறைய நல் வாழ்வு கிடைக்க வேண்டும்.

இறைவன் நம் அனைத்து சகோதரகளையும் 
சகோதரிகளையும்
பாசம் குன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அனைத்து நட்புகளுக்கும் வாழ்த்துகள்.

Friday, January 14, 2022

பொங்கல் வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன்


அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். வாழ்வில் வளம் பெருக இறைவனிடம் பிரார்த்தனைகள்.
பால் வளம் பொங்கி இதயங்கள் நலம் பெற வேண்டும்.

Thursday, January 13, 2022

மிஸ்ஸியம்மா. மீண்டும் மீண்டும்.




வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் பார்க்கிறேன்.
அலுக்கவே இல்லை. அதுதான் சுத்த சினிமாவின் லட்சியமும் லட்சணமும்.



இனிய பொங்கல் நன்னாள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன்


 இவ்வுலகிலும் எவ்வுலகிலும் என்றும் நன்மைகள் அளிக்கும்
ஸ்ரீ பெருமாளும் பிராட்டியும்
அன்னையும் தந்தையுமாக இருந்து நம்மைக் காக்க வேண்டும்.

அனைவர் வாழ்வும் இனிமை சிறக்கத் தைத்திங்கள்
பிறக்கும்  நன்னாள்
நம் அனைவரின் நலனும் மேம்பட அவர்களே
அருள்வார்கள். எல்லோரும் நன்றே வாழ இறைவனும் இறைவியும்
துணை.




Wednesday, January 12, 2022

கண்ணுக்குள்ளே……..


வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும். தொற்றில்லா
வாழ்வு அனைவருக்கும் கிட்ட இறைவன் துணை.

கண்கள் மனதின் வாசல். உள்ளத்தின் ஜன்னல் என்றெல்லாம் பழைய 
கவிதைகள் வரும்.

விழிகள் பற்றிய பாடல்கள்.
பார்வை பற்றிய பாடல்கள்  எல்லாம் கொஞ்சம் பதிந்திருக்கிறேன்.

   உண்மையில் கண்களைப் பரிசோதித்ததால்
ஒரு உயிர் காப்பாற்றப் பட்டது.அந்தக் கதையே இங்கே.

இன்று கண்ணுக்குள் பார்க்கலாம்.
அண்மையில் இங்கே இருக்கும் குடும்ப நண்பர் ஒருவருக்கு 
சர்க்கரை நோய்க்கான கண் பரிசோதனையின் போது

 ரெடினா, கண்ணிலிருக்கும் இரத்தக் குழாய் ப்பரி
சோதனையில் ஆஞ்சியோ செய்த போது'
செலுத்தப்பட்ட டை( சாயம்) ஒத்துக்கொள்ளாமல்
வாந்தி வந்திருக்கிறது.
அதன் பின் உடல் நலம் சரியில்லை .வெறும் அசிடிட்டி என்று நினைத்துப்
பின் அதுவும் சரிப்படாமல்    திகைத்து, ஓமிக்ரான் டெஸ்ட்.....
அதுவும் இல்லை.ஆனால் மூச்சுத் திணறல்.
 உடனே இருதயப்
பரிசோதனை. அடைப்பு கண்டுபிடித்து இரண்டு ஸ்டெண்ட்கள்
பொருத்தப் பட்டிருக்கின்றன.

என்னடா இது என்று வருத்தமாக இருந்தது.
48 வயதுதான் ஆகிறது.
நல்லவேளை இத்துடன் போச்சே என்று
அவர் மனைவிக்கு ஆறுதல் சொன்னோம்.

அவர் வீட்டுக்கு வந்து வேலையும் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

பெரிய கம்பெனி வைத்திருக்கிறார்.
நல்ல சம்பாத்யம். 
எதற்காக இத்தனை வேலை.?


சம்பாதித்தது போதும் என்று நிறுத்த முடியாதோ?

இறைவன் துணை.

இந்தப் பதிவில் நண்பரைப் பற்றி எழுதினதற்குக் 
காரணம் நெடு நாட்களாகக் கண் பரிசோதனையைத் தள்ளிப் 
போட்டார்.
ரத்த அழுத்தம், சர்க்கரை,கொலெஸ்டிரால் 
என்று வேறு தொந்தரவுகள்.

சரியான சமயத்தில் வெங்கடாசலபதி, நம் அரோரா பாலாஜி
ஆட்கொண்டார்.
நமக்குத்தான் கவலைப் படத்தெம்பில்லை.

Tuesday, January 11, 2022

பழைய திரைப்பட நடிகர்கள் வரிசை.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்.
எங்கள் பள்ளி நாட்களில் பிரபலமான ஹீரோ.!

இவர் திண்டுக்கல்லில் பிறந்தவர் என்பதில்
எங்களுக்கெல்லாம் பெருமை.


பேசும்படம் புத்தகம் படிப்பது
ஒரு பெரிய பொழுது போக்கு.

தோழி ஷாந்தி என்ற ஆறுமுகத்தாய்
திண்டுக்கல்லில் பிரபல சமூகத்தாரின் வீட்டுப் பெண்.
திரை போட்ட மாட்டு வண்டியில் வந்து இறங்குவாள்.

மதியம் அண்ணியுடன் அவர்கள் வீட்டு 
சமையல் செய்யும் ஆச்சியும் வருவார்கள்.

ஒரு பெரிய டிஃபன் காரியர் கூடவே வரும்.
தோசைகள்,
இட்லிகள், வடை, சாதம் ,குழம்பு ,பொரியல் என்று தனிதனி டப்பாக்களில்
அடைத்து வரும்.
நாசூக்காக மரத்தடியில்

ஜமக்காளம் விரித்து அவர்கள் 
உட்கார,
தனக்கு வேண்டும் என்பதைக் கொண்டு எங்கள்
டிஃபன் பாக்ஸில் போட்டு விடுவாள்.
அண்ணியின் அன்புமுகம் இன்னும் நினைவில்.

அவளது சோமு அண்ணன் சிங்கப்பூரிலிருந்து
வாங்கி வந்த கல் பதித்த வாட்ச் கூட
நினைவில் படமாக நிழலாடுகிறது.

அவளையும் அவளின் அன்பையும்
நினைத்து மகிழ்கிறேன்.
அவளுக்குப் பிடித்த பாடல்கள்.
அவளும் கணவர் சிதம்பரமும். பெண்கள்,பையன்
அனைவரும் திருமணமாகி நல்வாழ்வு
வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

மறக்காத அன்புத்தோழி நீ வாழ்க வளமுடன்.

Monday, January 10, 2022

கோவிந்தா கோவிந்தா.

வல்லிசிம்ஹன்

அன்பின் தம்பி முகுந்தன், மதுரை அனுப்பிய செய்தி


[8:39 PM, 1/8/2022] Revathi Narasimhan: 
[9:41 PM, 1/8/2022] Muguntan Rajagopal: திருமலையில் நித்ய அன்னதானம் மிகச்சிறப்பாக கோடானு கோடி பக்தர்களுக்கு வயிறார சாப்பாடு போடப்பட்டு வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் பக்தர்கள் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய நிலை ஏனெனில் முன் பந்தியில் குறைந்த அளவே மக்கள் அமர்ந்து சாப்பிடும் அளவில் மண்டபம் அமைந்து இருந்தது.
நம் கருணைக்கடல் திருவேங்கடவன் மெய் சிலிர்க்கும் ஓர் அற்புத நாடகத்தை நடத்தினார்.
ஒருநாள் மதியம் 2.00 மணி அளவில் திருமலை E.O அலுவலகத்திற்கு ஒருவர் வந்தார் .

அங்கிருந்த உதவி செயலாட்சி தலைவரிடம் 
அய்யா ஒரு வேண்டுகோள், இங்கு ஸ்ரீனிவாசனை தரிசனம் செய்த பக்தர்கள் அன்னதான கூடத்தில்
நீண்ட நேரம் காத்து இருக்கிறார்களே கொஞ்சம் பெரிய மண்டபம் இருந்தால் இன்னும் நிறைய பேர் சாப்பிட முடியும் அல்லவா என்று கூறினார்.
அதற்கு அவர் நீங்கள் வரிசையில் நின்று சாப்பிட முடிந்தால் சாப்பிடலாம் இல்லை என்றால் செல்லுங்கள் என்று சற்று கோபத்துடன் கூறினார்.
ஐயையோ ! நான் எனக்காக சொல்லவில்லை ஸ்ரீனிவாசனின் பக்தர்களுக்காகத்தான் கூறினேன் என்றார். அப்படி என்றால் நீங்களே ஒரு மண்டபம் கட்டி கொடுங்கள் அதில் நீங்கள் சொன்னபடி சாப்பாடு போடலாம் என்றார்.

உடனே அந்த பக்தர் சரி புதிய அன்னதான கூடம் கட்டுவதற்கு என்ன செலவு ஆகும் என்றார்.
அந்த அதிகாரி மிகுந்த கோபத்துடன் ஓஹோ அப்படியா ஒரு 25 கோடி கொடுங்கள் பெருசா மண்டபம் கட்டி உங்கள் பெயரிலேயே சாப்பாடு போடலாம் போய் வேலைய பாருங்க சார் என்றார்.
உடனே அந்த பக்தர் தான் வைத்திருந்த கைப் பையில் இருந்த காசோலை புத்தகத்தை எடுத்து 25 கோடிக்கு ஒரே காசோலையாக திருமலை தேவஸ்தானத்தின் பெயரில் எழுதி அந்த அதிகாரியிடம் கொடுத்தார்.

ஆனால் அந்த உதவி செயலாட்சி தலைவர் வாயடைத்து போய் மிகுந்த அதிர்சியுடன் வேர்த்து விருவிருக்க விரைந்து சென்றுசெயலாட்சி தலைவரை அழைத்து வந்து நடந்தவற்றை கூறினார்.அவரும் ஆடிப்போனார்.
பின்னர் தாங்கள் யார் என்று மிகுந்த மரியாதையுடன் அவரை அமர வைத்து
கேட்டார்.அவர் அய்யா நான் ஆரம்ப காலத்தில் மிகுந்த ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன் ஒரு வேலை சாப்பாட்டுக்கே கஷ்டபட்ட குடும்பம் .
அப்படி இருந்தும் எழுமலை ஆண்டவன் மீது மிகுந்த பாசத்துடன் பக்தியும் வைத்து இருந்தேன் .
திருமலைக்கு ஒவ்வொரு முறையும் நடந்தே வருவேன் தர்ம தரிசனத்தில்எவ்வளவு நேரம் ஆனாலும் என் அப்பன் ஏழுமலையானை பொறுமையுடன்தரிசனம் செய்து, எனக்கு ஒருவழி காட்டி நேர்மையுடன் நான் வாழ ஒரு தொழில் வேண்டும் அதில் உனக்கு லாபத்தில் சரி பாதி உன்னிடம் சேர்க்கிறேன் தந்தையே என்று வேண்டி பின்னர் இலவச சாப்பாடு வரிசையில் நின்று என் வயிறார நான் சாப்பிட்டு செல்வேன்.
பின்னர் நடைபாதை வழியாக மலையிறங்கி வீட்டிற்கு செல்வேன்.நாட்கள் செல்ல செல்ல பின்னர் என் தொழில் வளர்ச்சி அடைந்து இன்று மிகப்பெரிய செல்வந்தனாக இருந்தாலும் இது எல்லாம் என் அப்பன் எழுமலையான் சொத்து.
இன்று வரை நான் தனியாகவே ஒவ்வொரு முறையும் நடந்தே மலைக்கு வந்து தர்மதரிசனத்தில் நின்று தரிசனம் செய்து அவருக்கு சேர வேண்டிய பங்கை உண்டியில் போட்டு விட்டு அன்னதான கூடத்தில் வரிசையில் நின்று ஆனந்தமாய் சாப்பாடு சாப்பிட்டு விட்டு செல்வேன் .

நீங்கள் பலமுறை தினசரி பத்திரிக்கையில் அடையாளம் தெரியாத பக்தர் ஒருவர் உண்டியலில் இரண்டு கோடி ,மூன்று கோடி ஒரே பண்டிலாக
போட்டுள்ளார் என்று செய்தி வெளியிட்டுள்ளீர்கள் .
அதை நான் தான் போட்டேன் . ஏனென்றால் இதை தேவஸ்தான அதிகாரி வாயிலாக கொடுத்திருந்தால் என்னை மிகுந்த மரியாதை செய்து சிறப்பு தரிசனம் அளித்திருப்பார்கள் .
ஆனால் அதை நான் விரும்ப வில்லை .
எந்த சூழ் நிலையிலும் என்னுடைய தந்தைக்கும் எனக்கும் உள்ள அந்த ஆரம்ப கால நினைவுகள் மாறிவிடக்கூடாது . இந்த பணம் என்னை என் பழைய வாழ்க்கையை மாற்றினாலும் நான் என்னுடைய நன்றியை மறக்காமல் இன்றும் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன் நான் எப்படி திருமலைக்கு வந்தேனோ அதை போலவே இன்றும் நடந்தே வந்து நடந்தே செல்கிறேன் .

என் நண்பர்களையோ என் உறவினர்களையோ நான் அழைத்து வந்தால்அவர்கள் எண்ணப்படி நான் மாற வேண்டும் .இவ்வளவு வசதி இருந்தும் நடந்து செல்வதா , தர்ம தரிசனத்தில் காத்து இருப்பதா இலவச சாப்பாட்டிற்காக வரிசையில் நிற்பதா என்று புலம்பி தள்ளுவார்கள்.அதனால் தான் எப்பொழுதும் தனியாகவே வருவேன் .இன்று தரிசனம் முடிந்து அன்னதான கூடத்தில் வரிசையில் நிற்கும் போது
நிறைய பேர் வரிசையில் காத்து நிற்பதை பார்த்து இன்று திடீரெனஎன் மனதில் இதை விட பெரிய மண்டபம் இருந்தால் ஒரே நேரத்தில் நிறைய பக்தர்கள் அமர்ந்து சாப்பிட முடியும் அல்லவா?
இந்த எண்ணத்தை என்னில் உருவாக்கியதும் என் தந்தை திருவேங்கடவன் தான் .அவர் சொல்ல சொல்ல அவரை சுற்றி இருந்த அதிகாரிகளின் கண்களில்நீர் அருவியாய் பெருகி பெருமாளின் லீலைகளையும் ,அவர் பக்தரின் பக்தியையும் பார்த்து வாயடைத்து அமைதியாய் நின்றிருந்தனர் .

அந்த அறையில் மின் விசிறியின் சப்தம் மட்டுமே இருந்தது.பின்பு தான் அவர் ஆந்திரமாநிலத்தில் ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று அறிந்து ஆச்சர்யத்துடன் அவரிடம் உங்கள் விருப்ப படி புதிய அன்னதான கூடம் கட்டி உங்கள் பெயரையே அதற்கு வைத்து விடலாம் என்றனர்.வேண்டாம்! வேண்டாம் ! சாதாரண ஏழை என்னை செல்வந்தனாக வாழவைத்தது இந்த திருமலை அப்பனே இந்த பணம் என்னுடையதல்ல எழுமலையானுக்கு சொந்தமானது.தேவஸ்தானம் விரும்பும் பெயரில் நடக்கட்டும் என்றதும்,அதிகாரிகள் மெய்சிலிர்த்து போனார்கள்.ஒரே வருடத்தில் கட்டப்பட்ட இந்த புதிய அன்னதான கூடம்ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு கட்டப்பட்டு அதற்கு "மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வேங்கமாம்பா" அன்னதான கூடம் என்று பெயரிடப்பட்டு உள்ளது . 
இது ஆசியாவிலேயே பெரிய அன்னதான கூடமாகும்

Sunday, January 09, 2022

பழைய கானங்கள்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமுடன் வாழவேண்டும்

மனதைக் கவர்ந்த. பழைய பaaடல்கள் வரிசையில் இந்தப் பதிவும்:)

படம் சண்டிராணி!


படம் வாழ்விலே ஒருநாள்.   ஜி வரலக்ஷ்மி  சிவாஜி.


நம் ராஜா ராணி. பத்மினி சிவாஜி.
காத்திருந்த கண்கள் படம் நடிகையர் திலகம் ஜெமினி.
பார்க்காதபடங்களின் பாடல்களை மட்டும் கேட்டு வளர்ந்தோம்.

இடையில் அப்பாவின் கையில் வானொலி போய் விட்டால்
டிசம்பர் சீசனின் கச்சேரிகள் தொடரும்.

அதுவும் இரவு ஒன்பது மணிக்கு.
அம்மா அப்பா இருவருக்கும் கர்னாடக இசை எவ்வளவு பிடிக்குமோ
அவ்வளவு எனக்கு சினிமா பாடல்கள்
மேல் மோகம்.

பெரிய தம்பிக்கு எதுவும் வேண்டாம். விளையாட்டு,
சினிமா எதுவுமே வேண்டாம்.
படிப்பும் புத்தகங்களும் இருந்தால் போதும்.

சின்னவனுக்குப் படிப்பு வேப்பங்காய். விளையாட 
எப்பொழுதும் தயார். அவன் வெளியே போவான். 
இல்லையெனில்  அவர்கள் நம் வீட்டு முற்றத்துக்கு 
வந்துவிடுவார்கள்.
பாப்பா மலர் என்று ஒரு நிகழ்ச்சி.
அதைக் கேட்க நான் வெளியே பக்கத்து வீட்டுக்குப் 
போகிறேன் ,
என்பதற்காக அப்பா மதுரை சென்று
வாங்கி வந்த ரேடியோ எங்கள் குடும்பத்தோடு

26  வருடங்கள் தொடர்ந்தது.
என் திருமணத்துக்குப் பிறகு சிங்கம் வாங்கிக் கொடுத்த ஃபிலிப்ஸ்
பெரிய ரேடியோ.
புஷ் டிரான்ஸிஸ்டர் எல்லாமே என் பிரிய சினேகிதிகள்.
1978இல்   அப்பா வீட்டுக்கு
முதல் சாலிடேர் டிவி வந்ததும் பழைய
ரேடியோவை எங்கள் வீட்டுக்கு எடுத்து வந்து
விட்டேன்.:)
என் அருமை ரீஸா ரேடியோ நன்றாக உழைத்து, வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா,பிபிசி,
ரேடியோ சிலோன் என்று உலகத்தின் 
பலபாகங்களை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தது.
  ரேடியோ குவைத் கூட சில வருடங்கள் கேட்டிருக்கிறேன்.

ஏன் இந்த ரேடியோ நினைவுகள் என்று தெரியவில்லை.
இப்போது இணையத்திலேயே வானொலி 
இசையையும் கேட்கலாம்.
அப்படியும் கையடக்கமாக மகன் வாங்கிக் கொடுத்த 
லண்டன் ரேடியோ அலமாரியில் பத்திரமாக
இருக்கிறது.
இறைவன் அள்ளிக் கொடுக்கும் இசை அனுபவங்களை இங்கே பதிவதில்
ஒரு மகிழ்ச்சி. வெளியே பனி மழை. ஐஸ் மழை..:)பனிஸ்னொ மழையை விட ஐஸ் மழை மிக 
ஆபத்தானது.
ஸ்னோ வழுக்காது .ஐஸ் வழுக்கிவிடும். 
அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.
இறைவன் காக்க வேண்டும்.

Friday, January 07, 2022

அமைதி வேண்டும் என்னாளும்...


vallisimhan


அனைவரும் நலமாக இருக்க இறைவன் துணை.
எங்கு தேடுவேன் என்று அமைதியைத் தேடாமல்
தானே அதைத் தன்னிடம் காண்பது
இசையின் வழியே.

சப்தம் நம்மை எப்பொழுதும் சுற்றிக் கொண்டு இருக்கிறது.
அந்த சப்தத்திலிருந்து
(   சப்தம் என்றால் சொல் என்றும் ஒரு பொருள் உண்டு  ))

நாம் எடுத்துக் கொள்ளும் சந்தோஷம், அமைதி, நேர் எண்ணங்கள்
எல்லாமே
நமக்கு நன்மை கொடுப்பவையே. 
அது கிடைப்பது மனம் செய்யும் மாயம்.


ஓடங்கள் நம்மை சிலசமயம் ஆட்டம் காண வைத்தாலும்,
சரியான ஓட்டுபவர் கைகள்,
தண்ணீர் ஓட்டத்தைத் தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு
போராடாமல் நதி வழியே
செல்வதும் ஒரு நன்மையே.
இறைவன் கருணை இருக்குமானால்
நல்ல கரையை அடைவோம்.

எத்தனை திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம்!!!!!!
எத்தனை கதைகளில்  படித்திருக்கிறோம்.
ஸ்ரீ ரபீந்திர நாத் டாகூரின்  The Wreck  நினைவுக்கு வருகிறது.
அதைப் பின்புலமாக வைத்து எத்தனை படங்கள்,கதைகள்.:)
அந்த அமைதி நம்மிடம் இருக்கும் போது
நாம் சொல்லும் வார்த்தைகளும் பலிக்கும்.

முடிந்த வரை பேரப் பசங்களுடன்
செலவிடும் மாலை நேரப் பாவை வகுப்புகளில்
அதைத்தான் சொல்கிறேன்.
சின்னவன் கொஞ்சம்  இருக்கையில் தவிப்பான். அவனுக்கு விளையாட நண்பர்கள்,
இணையத்தில் காத்துக் கொண்டிருப்பார்கள்.பாவம் என்று
   ஒரு பாசுரத்துடன் விட்டு விடுவேன்.:)
 பெரியவன் அலுவலக வேலைகள்
முடிந்தவுடன் ஆற அமர நான் சொல்வதைக் கேட்பான்.

அவனுடைய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்வான்.

வாழ்க வளமுடன்.
உடனே ஞாபகம் வருவது நம் கோமதி அரசைத்தான்.
அவர்கள் மதுரைக்குச் சென்றதில் இருந்து ஒரே வேலை.

நலமுடன் இருக்க வேண்டும். மீண்டும் வலை உலகிற்குள்
வரவேண்டும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்றைய பாசுரமான மாரி மலை முழைஞ்சில்





ஆண்டாள் விவரிக்கும் சிங்கத்தின் அழகே தனி. நம்
கண்ணெதிரே  தலையை உலுக்கிக்
கர்ஜனை செய்யும் காட்டரசன்.
அவனைப் போலவே நடந்து வரவேண்டுகிறாள்
கண்ணனi. அவன் நம்மைப் பரிபாலனம் செய்யட்டும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++

மனதுக்கு மிகப் பிடித்த நடிகர் Sidney Poitier

இன்று இறைவன் திருவடி அடைந்தார்.
அவர் நடித்த படங்கள் அனைத்திலும் அவரது உழைப்பு மிகச் சிறப்பாக 
இருக்கும்.
எங்கள் கால ஆணழகன் கூட. 94 வயது நிறைவாழ்வு.


Wednesday, January 05, 2022

ஊட்டியிலிருந்து ஒரு நினைவு

தம்பி ,குழந்தைகளோடு நான் ஹலெபிட், கர்னாடகா.


வல்லிசிம்ஹன்

Sing.
Sing a song.
Sing out loud, sing out strong.
Sing of good things, not bad.
Sing of happy, not sad.
Sing.
Sing a song.
Make it simple to last your whole life long.
Don´t worry that it´s not good enough for anyone else to hear.
Just sing.
Sing a song.
La La La La La La
La La La La La La
La La La La La La
Sing. Sing a song.
Let the world.
Sing out loud.
Sing of love there, could be.
Sing for you and for me.
Sing a song.
Make it simple to last your whole life long.
Don´t worry that it´s not good enough for anyone else to hear.
Just sing, sing a song.

That was our idea for life.

தடால் என்று ஒரு சத்தம் ,அடுத்த வினாடி, அந்த மனிதர்
அங்கிருந்த சோஃபாவில் சரிந்தார்.

!!!! குடகிலிருந்து வந்த அந்த தேனிலவு தம்பதி
பெயர் தெரியாது......
திருமண நாளிலிருந்து குடிக்க ஆரம்பித்தவர்கள் அந்த மிதப்பிலேயே
ஊட்டி வரை வந்துவிட்டனர்.
அது அவர்கள் வழக்கமாம்.!!
இப்பொது ஊட்டி அறைக்கு வருவோம்.:))

எல்லாம் ஒரே சமயத்தில் நடந்தன.
சிங்கமும் தம்பியும் உள்ளே வந்தனர்.

அந்தத் திருமணப் பெண் வந்து அலற ஆரம்பித்தார்.

அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை.
ஓட்டல் மேனேஜர் உள்ளே வர, குழந்தைகள் அலற ஆரம்பிக்க
ஹப்பா....களேயபரம்.:)))

மேனஜர் அந்தப் பெண்ணை அவள் மொழியில் 
விசாரிக்க உயர் போதையில் இருந்த அவள்
என்னைக் கை காண்பிக்க

சிங்கம் சிரிக்க ஆரம்பித்தார்.

அடுத்து அவர் செய்த நல்ல காரியம்... குளியலறையிலிருந்து 
பெரிய பாட்டில் நிறைய 
பச்சைத் தண்ணீர் பிடித்து
சோஃபாலிருந்த மனிதர் மேல் கொட்டியதுதான்.:)))

சட்டென்று எழுந்தவர் எல்லோரையும் பார்த்து
பேந்தப் பேந்த விழித்தார்.
இன்னும் அழுது கொண்டிருந்த அவர் மனைவி 
சிரிக்க,
தடுமாறும் நடையோடு மனைவியின் தோள்களைப்
பிடித்தவாறு வெளியேறினார் மஹானுபாவர்.

குழந்தைகள் கத்துவதை நிறுத்திவிட்டு குபீரென்று
சிரித்தவாறு அப்பாவைக் கட்டிக் கொண்டன.
தம்பி முரளி , 'ஆண்டாள் பயந்து போயிட்டியா'
என்று ஆதரவாகக் கேட்டான்.

எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை.
'ஏண்டா எங்கே இவ்வளவு நேரம் போனீர்கள்?"
என்று கேட்க, 
''கீழே காஃபி சாப்பிட்டுட்டு, உனக்கும் குழந்தைகளுக்கும் 
ஊட்டி பன் ,பிஸ்கட் கொண்டுவந்தோம்''
என்று நீட்டினான்.
''டேய் உங்க அக்காவுக்கு முதலில் காப்பிகொடுடா'
என்று பரிந்துரைத்தார் சிங்கம்.

'ரேவ், குழந்தைகளை ஸ்வெட்டர் போட்டு அழைத்து வா,
மழை நின்னாச்சு, பார்க் பக்கம் அதுகளை அழைத்துப் 
போகலாம்.
''காலையில் வெய்யில் வந்ததும், 
படகுல போகலாம்'' என்று சொன்னார்.

எனக்குப் படபடப்பே குறையவில்லை.
அடுத்த நாள் காலை நாங்கள் வெளியே வந்த போது 
அந்தத் தம்பதியினரும்  காலை உணவு எடுத்துக் கொண்டிருந்தனர்.

சிங்கம் அவர்கள் மேஜை அருகே சென்று
காலை வணக்கம் சொன்னார்.
இருவர் முகத்திலும் சிறிய வெட்கம்.

''வாழ்க்கை ,மது அருந்துவதால் மட்டும் செழிக்காது.
அரிய நாட்களை அனுபவியுங்கள்'.
என் மனைவியும் உங்களை மன்னித்து விட்டார் 'என்று 
சிறு பொய்யைச் சொல்லி 
எங்கள் மேஜைக்கு வந்தார்.
குழந்தைகளுக்கு ப்ரெட் டோஸ்ட்டில் வெண்ணெய் தடவியபடி
அவரை முறைத்தேன்.

நான் மன்னிக்கலையே. அந்தப் பொண்ணு 
என்னக் காண்பித்து அழுதாளே என்றேன்.

''ஏன், உனக்கு ஞாபகம் இல்லையா... நாம் ராஜகுமாரி 
தியேட்டரில்( படம் இப்போ நினைவில் இல்லை)
 இன்னோரு பெண் பக்கத்தில் இருட்டில் உட்கார்ந்து விட்டேன்.
கல்யாணம் ஆகி 4 நாள் ஆகி இருந்தது.
எவ்வளவு  கோபம் உனக்கு!!"" என்று 
மீண்டும் சிரிக்க, 
''சரியான சமாளிப்புத் திலகம் நீங்க"
என்று நானும் புன்னகைத்தேன்.
கதை முடிந்து கத்திரிக்காய் காய்த்தது:)