Blog Archive

Friday, September 28, 2018

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.N.RENGAN

Vallisimhan

   1974 டிசம்பரில்  திருச்சி ,சமயபுரம் அம்மா என்னை விட்டுவிட்டு மற்ற நால்வரிடம் குடி புகுந்தாள். பெற்றொர்களால் வரமுடியாத நிலை.
மன உரம் என்று மைவிட்டதில்லை.
வீடு நிறைய இளனீர், பருத்திப்பால்,வேப்பிலைக் கொத்துகள். ஜட்டி மட்டும் போட்டுத் திரிந்த சிறார்கள். சற்றே தீரமானான நிலையில் கண்வர். 
உதவிக்கு இருந்த மேரி,
சொன்ன வழி முறைப்படி
எல்லா சாங்கியங்களும் செய்து வந்தேன்.

என் பொறுமை ஆவியாகிவிடப் போகிறதே என்னும் நேரம் 
வந்தான் என் சின்னத் தம்பி.

அதுவரை அடக்கி வைத்திருந்த அழ்கை எல்லாம் அவனைக் கண்டதும்
பொங்கியது.
தே, அம்மா வந்த வீட்டில்  அழக்கூடாது என்று மேரி அதட்ட,

அவன் என்னிடம் சொன்னது இதுதான். 22 வயதில் என்ன
செய்ய முடியுமோ அத்தனை உதவிகளையும் செய்தான்.
மொந்தன் பழம் வாங்கி வந்தான். சமையல் நேரத்தில் கீரை கடைந்து கொடுத்தான்.
குழந்தைகளுக்குத் தள்ளி நின்று விளையாட்டுக் காட்டினான்.
என்னை மதிய நேரம் ஓய்வெடுக்க வைத்தான்.

வீட்டுப் பொருட்களை
 வாங்கிப் போட்டான்.
ஒரு வாரம் என் பாரம் முழுவதுமாகக் குறைய சிங்கத்துக்கு மூன்றாம் முறையும் தண்ணீர் விட்ட பிறகே கிளம்பினான்.

அந்தச் செல்லத்தம்பிக்கு இன்று பிறந்த நாள். 

அம்மா, அப்பா, சிங்கம், என் பெரிய தம்பியுடன்,
என்னைப் பார்க்க இங்கே கூட வந்திருப்பான்.
பித்ரு பக்ஷ்மாச்சே.

நன்றி டா ரங்கா. உன் குடும்பம் தழைக்க ஆசிகள் தருவாய்.

Thursday, September 27, 2018

மஹாலய நாட்களின் கடைப்பிடிக்க வேண்டியவிதிமுறைகள்..

Vallisimhan
    அனேகமாக எல்லொருக்கும் தெரிந்த விதி முறைகள் தான். 

அப்பா, கீதயை மொழி பெயர்த்து எழுதிக் கொண்டே வந்தார். 
எதுக்குப்பா கஷ்டப் படறேன்னு கேட்பேன். நீங்கள் எல்லோரும் படிக்கணும் என்பதற்காகத்தான்.

எழுதி முடிப்பதற்குள் பகவான் அழைத்துக் கொண்டான்.

அது போலத்தான் மஹாலய முறைகளை என் நம்பிக்கையை விருத்தி செய்து கொள்ளவே
எழுதுகிறேன்.
வாழ்வில் நஷ்டம், கஷ்டம், மகிழ்ச்சி என்று உருண்டோடி வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் நிற்கிறேன்.
எத்தனை நாட்கள்  விதிக்கப் பட்டிருக்கிறதோ அத்தனை நாட்கள்
நல்ல விதமாக இருந்துவிட்டுப் போகவேண்டும்.

இதோ நான் அறிந்த விதிமுறைகளும்,
இது போலச் செய்வதால் ஏற்படும் நன்மைகளும்.

பக்ஷம் ஆரம்பித்த நாட்களிலிருந்து எள்ளும் தண்ணிரும் இறைப்பது என்பார்களே அதைச் செய்யலாம்.
16 நாட்களும் செய்யலாம். முடியாதவர்கள் பெரியவர்கள் அறிவுறுத்திய,மஹா பரணி, மத்யாஷ்டமி, அல்லது பித்ருக்கள் இறைவனடி சேர்ந்த நாட்களில் செய்யலாம்.

முடிந்தவரை உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. வெளியே எங்கேயும் சாப்பிடாமல் வீட்டு உணவையே சாப்பிடலாம்.

வெங்காயம் பூண்டு முதலியவற்றை விட்டுவிடலாம்.
சிலவீடுகளில்  ,குறிப்பாக இங்கே அவற்றை எப்பொழுதும் சேர்ப்பது இல்லை.

சென்னையில் சிங்கமும் நானும் இருந்த காலங்களில் வெங்காயம் இல்லை என்றால் அதகளம் தான்.

தினம் கோவில்கள் செல்வது. எண்ணெய் வழங்குவது. நெய் தீபத்துக்கு
உதவி செய்வது எல்லாம் செய்யலாம்.

யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு கைப்புல் என்ற வாக்கியங்களின் படி,
இன்சொல் சொல்லி, மற்றவரைப் பகைமையாகப் பார்க்காமல்,
கோபத்தைக் கட்டுப் படுத்தி,நல் வார்த்தைகளே சொல்லி
விரதம்போல் இந்த நாட்களைக் கடக்கவேண்டும்.

ஏழைகளைத் தேடிப்போய் புதிய உடைகள், வயிறு நிறைய அன்னம் 
கொடுக்கலாம். இதற்கே ஏற்பட்டிருக்கும் கோவில் அன்னதானங்களில் பங்கேற்கலாம்.

இவ்வளவும் செய்வது நம் பூர்வ, இப்போதையப் பாபங்களைலிருந்து மீள ஒரு வழி.
எத்தனையோ முன்னோர்களுக்கு  திதிகள் கொடுக்காமல் விட்டுப் போனதால்
இப்போது பலவிதமாக அவதிப் படுபவர்களைப்
பார்த்திருக்கிறேன்.
ஒரு தப்பை, ஒரு நல்லது செய்தே திருத்த வேண்டும்.

செய்யச் செய்ய தீமைகள் விலகும்.
மனதில் நிம்மதி பிறக்கும்.
தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும்.

நதி நீர், சுத்தப் படுத்தப் பட்ட வாய்க்கால்கள் வழியே
வயல்களுக்குப் பாய்வது போல
வருங்காலப் பயிர்கள் செழிக்கும்.

நாம் சிரமப்படுவதையாவது
 பொறுத்துக் கொள்ளலாம்.
நம் சந்ததியினர்  சிரமப் பட்டால் மனம் தாங்காது இல்லையா.
அதற்காகவே நல்ல விஷயங்களையும், மஹாலயத்தில் செய்ய வேண்டிய கர்மாக்களையும்
அவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டியது நம். கடமை.

அனைவரும் அருமையான வாழ்வு நெறிகளைக் கடைப்பிடித்து
நல வாழ்வு பெறுவோம்.

பெற்றோரின் மஹாலய நாட்கள்.

Vallisimhan
1994  November. 24 ஆம்  தேதி எடுத்த படம்.

  ஒரு செப்டம்பர் 27 ஆம் நாள் 1960இல் அப்பாவின் அப்பா இறைவனடி சேர்ந்தார்.
அதற்கு முன் வருடம் தான்,  மதுரையிலிருந்து வண்டி எடுத்துக்  கொண்டு
நவ திருப்பதிகளையும், திருக்குறுங்குடியையும்  தரிசித்து வந்தோம். 
இனிமையான பயணம். அதன் பிறகு சதாபிஷேகம் நடந்தது.

பாட்டியின் உறவுகளும், தாத்தாவின் உறவுகளும் நிறைந்து மிக மகிழ்வாகக் கொண்டாடினோம்.
பாட்டி தனக்கு வந்து விலை உயர்ந்த புடவைகளை இரண்டு பெண்களுக்கும், மூன்று மருமகள்களுக்கும்  கொடுத்தார்.
மிகவும் மதிக்கப் பட்ட மனுஷி. தாத்தாவின் மனைவி என்பதினாலா ,அவளுக்கே இருந்த ஆளுமையாலா தெரியவில்லை.

மன உறுதி மிகப் படைத்தவர்.கம்பீரம். அந்த கெம்புத் தோடு காதில் ஆடும் அழகே தனி.
ஒரு வளையத்தில் கட்டின மாதிரி இருக்கும்.
கண்ணில் குறும்பு எப்பொழுதும் உண்டு. வாக்கில் சாதுர்யம்.
கணவரின் சகோதரி தொழிலதிபர் மனைவி என்பதால், அவர் எத்தனை பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்திருப்பார் என்பதற்குக் கணக்கே தெரியாது.
அப்பா அந்த வட்டத்தில் மாட்டவில்லை.

தன் தந்தை போலவே தபால் துறையில் இருந்தார்.
அதில் அவருக்கு நிம்மதியும்  திருப்தியும் இருந்தன,.

தாத்தாவுக்கு உடம்பு முடியவில்லை என்றதும், அவசரமாகத் தன்னை ரிலீவ் செய்யச் 
சொல்லி மதுரைக்குத் தந்தி அடித்து, திண்டுக்கல்லிலிருந்து
பழங்கா நத்தம் வந்தோம்.

39 வயது அப்பா முகம் சிவக்க அழ்ததை அன்றுதான் பார்த்தேன்.
மாத  காரியங்களைச் செய்து வைக்க,மதுரையிலிருந்து
காளி என்கிற காளமேகம் தான் வரவேண்டும்.

ஓராண்டு பூர்த்தியானதும் மஹாலயம் வந்தது.
அம்மாவுக்கு எல்லா சிராத்த காரியங்களும் அத்துபடி.
பாட்டியும் எங்களுடன் இருந்தார்.
அந்த ஊரில் மருந்துக்குக்கூட ஒரு அதிதி கிடைக்க மாட்டார். 
ஊரைவிட்டுத் தள்ளி,கொடைக்கானல் ரோடு பக்கத்தில் இருந்தோம்.
அப்பாவுக்கும் ஒரு பள்ளிக்கூட வாத்தியார் கிடைத்தார்.
சிராத்த தினத்துக்கு முன் நாகல் நகருக்குச் சென்று
அவரை முறையாக அழைத்து அடுத்த நாள் வரச் சொல்வார்.
அவரும் நாங்கள்  அங்கே இருந்தவரை  எல்லாக் கிரமங்களுக்கும் 
வந்து சென்றதை நன்றியோடு நினைக்கிறேன்

பாட்டி உட்கார்ந்தபடி வேலைகள் செய்வார். காய்கறி நறுக்குவது மட்டும் அவருக்கு அம்மா
கொடுப்பார்.
அடுப்பு விறகு காயவைத்து, விராட்டி, சிராய்த்தூள் வாங்குவது சின்னத் தம்பியின் பொறுப்பு..
பெரியவன்  அப்பா வேஷ்டியத் தோய்த்து வைப்பான். உலர்த்துவதெல்லாம் அம்மாதான்.

காலையில் குடித்த காப்பியுடன் அப்பா காத்திருக்க
வருவார் காளி ஸ்வாமி 11 மணிக்கு.
பிறகு குளித்து ஸ்ராத்தம் முடிய மதியம் ஒன்றரை ஆகிவிடும்.

ஈரத்தலையோடு புகையுடன் போராடிய அம்மாவுக்குத் தலைவலி 
நிச்சயம்.
நாங்கள் பள்ளியிலிருந்து வரும்போது  ,பாட்டிதான் வரவேற்பார். 
கை கால் அலம்பிண்டு தாத்தா படத்தை  சேவிங்கோ.
அம்மா வந்து எங்களைப் பாட்டியையும் வணங்கச் சொல்லுவார்.
 ஆசிகளை மனமார வழங்குவார் பாட்டி.
பிறகே, தேகுழல், அப்பம், சுகியன், வடை,எள்ளுருண்டை
எல்லாம் கிடைக்கும்.
மிளகு காரத்தோடு ரசம் சாப்பிட்டு ரங்கனுக்கு எப்பவும் புரைக்கேறும்.
பாயாஸம் சாப்பிட்டதும் தான் அடங்கும்.

அம்மா காக்கா இன்னும் கத்தறது மா. கொஞ்சம் பட்சணம் குடேன் என்பான்.
முரளி, டேய் ரங்கலாலா உன்னோட வடையைப் போடு. அதுதான் வேணுமாம்.
என்று கேலிகாட்டுவான்.

அப்பாவும் தன் தந்தைக்கு 36 வருடங்கள்  சிரத்தையுடன் செய்தார்.
தம்பிகள் தொடர்ந்தனர்.
இப்போது தம்பியின் மகனும், எங்கள் பிள்ளைகளும் செய்கிறார்கள். பெரியோர் ஆசிகள் அனைவரையும் அடையட்டும். வாழ்க வளமுடன்.

Sunday, September 23, 2018

மஹாலய பக்ஷம்

Vallisimhan
மஹாலய  பக்ஷம் 
ஆரம்பிக்கிறது.

பித்ருக்கள், தேவர்கள்,வசுக்கள் எல்லோரும் நதி தீரத்தில்வந்து காத்து இருப்பார்களாம்.
இந்தப் பவுர்ணமி தினத்திலிருந்து அமாவாசை வரை.

எனக்குத் தெரிந்து தினமும்மே அர்க்கியம் விடுபவர்கள் இருந்திருக்கிறார்கள்.

நம்மைப் பொழிந்து வளர்த்தவர்களு க்கு 
இந்த பக்ஷத்தில்  எள்ளும் நீரும் கொடுத்து 
வணங்கலாம்.
ஏழைகளுக்குத்துணிமணி தானம் ,உணவு தானம் செய்யலாம்.
எல்லாவற்றையும் விட உயிரோடு இருக்கும் முதியவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம்.
இங்கு ஒருவர், முதியோர் இல்லத்தில் உள்ளவர்களைக் கண் பரிசோதனை செய்ய அழைத்துப் போய் 
கண்ணாடியும் வாங்கி கொடுக்கிறார்.

பூலோகத்தை விட்டுச் சென்ற உயிர்களுக்கு மட்டுமில்லாமல் இருக்கும் உயிர்களுக்கும் நன்மை செய்யும் 
மனம் நமக்கு வரட்டும்.

Saturday, September 22, 2018

சீதா கல்யாண வைபோகமே..6

Vallisimhan
எல்லோரும்  இன்பமாக  வாழ வேண்டும் 

   அடுத்த நாளும் வந்தது. ரங்கனாதனும்  சென்ட்ரலுக்குக்
கிளம்பிப் போனார்.

அங்கே ரயில் பயணத்திலேயே  பேசித் தீர்த்தார்கள் ரகுராமனும் சீதாவும்.
அவர்களது  பழக்க வழக்கங்கள், மதம், வணங்கும் தெய்வங்கள், உணவு முறை எல்லாம் 
ஒளிவு மறைவில்லாமல் சொன்னான் ரகுராமன்.

தங்கள் பிரிவு இந்து ஜெயின் மதக்கலப்பு என்றும், தன் பாட்டி இன்னும் த்வாரகா வருவதை
வழக்கமாக வைத்திருப்பதையும் சொன்னான்.
அவர்களின் ஆசார வழக்கங்கள் தங்கள் வீட்டை விட மேலாக இருப்பதை அறிந்து 
அதிசயப் பட்டாள். அவர்கள் உணவில் பூண்டு வெங்காயம் கூடக் கலப்பதில்லையாம்.
சீதாவுக்குக் கொஞ்சம் கலக்கம் கூட வந்தது.
தன் குடும்பத்தை அவர்கள் ஒத்துக் கொள்வார்களோ என்று.

ரகுராமன் சிரித்துவிட்டான். அவ்வளவு குறுகிய மனம் கொண்டவர்கள் இல்லை
என் குடும்பத்தினர். எப்போது உன்னைப் பார்க்கிறார்களோ
அப்பொழுதே  சம்மதித்து விடுவார்கள்.

இப்பொழுதாவது சொல்வியா ,உனக்கு என்னைப் பிடித்திருக்கிறதா
அதற்குப் பதில் சொல்வது   போலத் தலையை ஆமாம் என்று 
அசைத்தாள். முகம் முழுவதும் மகிழ்ச்சியில் மலர்ந்தது.
 ஓகே. Let us seal the deal  என்று கைகளை நீட்டினான்.
சுற்று முற்றும் பார்த்த சீதா யாரும் இல்லை என்று
பார்த்துவிட்டு  தன் கைகளை அவனிடம் ஒப்படைத்தாள்.

சிவந்து போன அவள் முகத்தைப் பார்த்து தானும் மகிழ்ச்சியில் 
அமிழ்ந்தான் ரகுராமன்.

பின்னிருந்து கைதட்டல் வண்டியை மீறி வெளியே ஒலித்தது.

 எப்போது திருமணம்  என்று ஒரே கோரசாகக் குரல்கள்
கேட்டன. மேம் சாப் சொன்ன நாள் என்றான் ரகு..

அதன் பிறகு ஒரே உற்சாகக் குரல்கள் வாழ்த்துகளைச் சொல்ல சென்னை வந்தடைந்தனர்.

ரங்கனாதனுக்கு மனதில் இருந்த  கவலை எல்லாம், ரகுராமனையும் சீதாவையும் கண்டதுமே
பறந்துவிட்டது.

பத்மனாபன்  அவரைப் பார்த்து, உங்களுக்கு மாப்பிள்ளையைக் கொண்டுவந்த 
விஸ்வாமித்திரர் நான் தான் என்று சிரித்தார்.

அடுத்த ஒரு மாதத்தில் ரகுராமனின் பெற்றோர்கள் வர,
செல்லிப் பாட்டி உட்பட அத்தனை குடும்பத்தினரிடமும்
அப்ரூவல் வாங்கி விட்டார்கள்.
 தை பிறந்ததும் திருமணம் ரங்கனாதன் வீட்டு வழக்கப் படியும் முறைப்படியும், ஆர்ய சமாஜ் முறைப்படியும்
செய்வதாகத் தீர்மானமானது.

அதன் பின்னர் நடந்த ஆய்வுகள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றனர் தம்பதியினர்.
இந்தியா மாரிஷியஸ் என்று இரு குடும்பங்களும் பறந்து கொண்டிருந்தனர்.

செல்லிப் பாட்டிக்கு, ரகுவம்ச ராமனே தன் பேத்தியை மணந்ததாக
ஆனந்தம் பொங்கியது. 
அனைவரும் இந்தத் தம்பதிகளுக்கு வாழ்த்து சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்.

Friday, September 21, 2018

சீதா ராம கல்யாணம். .நிச்சயம்..5

Vallisimhan
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் 

  குழுவினர் கலந்து பேசி, இன்னும் ஒரு பத்து நாட்கள் இந்தியாவில் தங்க அனுமதி வாங்கிக் கொண்டு 
சென்னைக்குக் கிளம்பினார்கள்.

இன்னும் ஒரு தடவை மொஹஞ்ச தாரோவையும் , சேர்த்து
புதிதாக வந்திருக்கும் கருவிகளுடன் வந்து ஆய்வை மேற்கொள்ளலாம். அதற்கு உரிய
மாதம் டிசம்பர், உஷ்ணம் குறைவான மாதமாக இருக்கும் என்ற தீர்மானத்துடன்,
மாரிஷியஸ் உறுப்பினர்கள் மட்டும் இந்தியக் குழுவுடன் கிளம்பினார்கள்.

எல்லோரும் கடைசியாக ஒரு முறை ஒவ்வொரு இடத்திலும் தமக்கு ஏற்பட்ட
கண்டுபிடிப்புகளை  ஒத்து நோக்கி மகிழ்ந்த வண்ணம், புது தில்லி வந்து 
அங்கிருந்து சென்னைக்கு ரயிலேறினர்.

இங்கே சென்னையில் செல்லிப் பாட்டிக்கு இருப்புக் கொள்ளவில்லை.
இதென்ன இந்தப் பொண்ணு  போனாப் போன இடம் இருக்கே.
முன்ன மாதிரி உனக்கு போன் கூட பேசலியே
 அப்படி என்ன பெரிய ஆராய்ச்சி. இவனாவது போயிருக்கணும். 
ஏதோ வனாந்தரத்துல அத்தனை  ஆண்பிள்ளைகளுக்குச் சமமா
இவளால ஈடு கொடுக்க முடியுமா.

இத்தோட மூட்டை கட்டச் சொல்லு. போறும் எல்லாம்
என்று பொரிந்து கொண்டிருந்தாள்.

அம்மா இன்னிக்கு இப்போ தபால் அனுப்பி இருக்கா பாரு. எத்தனை அழகான 
இடங்கள் இதோ அந்த பத்ம நாபன் மாமா. அதான் பொறுப்பாப் பார்த்துக் கொள்கிறேன்னு அழைத்துக் கொண்டு போனாரே.

அடுத்த படங்களைப் பார்த்துக் கொண்டு வந்த செல்லிப்பாட்டி, இது யாரு 
,சீதா பக்கத்தில உசரமா நிக்கறானே.
அவர்கள் எல்லாரும் மாரிஷியஸ்லேருந்து வந்தவர்கள் அம்மா.
 வேற ஒரு பொண்ணையும் காணமே
அடுத்த கேள்வி.
 எல்லாம் பாண்ட், ஜாக்கெட் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்
அம்மா, வெளினாட்டுக்காரர்கள்..
  
இதோ லெட்டர் எழுதி இருக்கிறாள் பாருங்கோ உங்களுக்குத் தான்.
 பாட்டி உடனே படிக்க ஆரம்பித்தார், பாட்டி இத்தனை அழகான 
இடத்தை நான் பார்த்ததே இல்லை.
 ஏதோ பழைய ராஜாங்கம் இங்க இருந்திருக்கு.
 பாதி இடங்களைத் தான் ஆராய்ந்து முடித்திருக்கிறோம்.
லேசில முடிக்கக் கூடிய வேலை இல்லை இது.

உன்னுடன் முக்கியமாகச் சொல்ல ஒரு விஷயம் இருக்கு. நேரில் சொன்னால்
ஆச்சரியப்படுவே.
என் பக்கத்துல ஒருவர் நிக்கிறார் பார்த்தியா. அவரைப் பார்த்தியா.
அவரைப் பத்திதான்.
தயாரா இரு.
அம்மா அப்பாவுக்கு என் உம்மா சொல்லிடு.
நாளை மறு நாள் அங்கே இருப்பேன்
என்று எழுதி இருந்தாள்.
அத்தேரிமாக்குன்னு பிடித்துக் கொண்டார் பாட்டி.

தானாப் பாத்துண்ட மாப்பிள்ளையோடு வருகிறாளா இந்தப் பொண்ணு.
என்ன விஷயம் புரியலையே.
யாரூ, என்ன குடும்பம், அவளுக்கு ஒத்துக்குமா. 
சைவமா,அசைவமா .இதுக்கு என்ன தெரியும்னு இப்படி எழுதி இருக்கு.

தேவகிக்கு லேசாகத் தலைவலிப்பது போலிருந்தது.
அசட்டுப் பெண். கடிதத்தில் இதை எல்லாம் எழுத வேண்டூமா.
இனி ஓய மாட்டாரே என்றபடி கணவரைப் பார்த்தாள்.

அவர்  கண்ணல் சைகை செய்து தன் கையில் இருந்த கடிதத்தைக் காண்பித்தார்.
தேவகியின் கண்கள் விரிந்தன.
வயிற்றில் ஏதோ சங்கடம் செய்தது.
அம்மா சூடாக் காப்பி கொண்டுவரேன்.
நீங்கள் ஊஞ்சலில் உட்காருங்கள்
நம்மை மீறி  ஒன்றும் நடக்காது.  நம் சீதா நல்ல சூடிகையான பெண்.
இப்போதையப் பெண்கள் போல நாளுக்கு ஒரு உடை உடுத்தி சுற்றுபவள் இல்லை.
படிப்பிலும், சரித்திர ஆராய்ச்சியிலும் தான் அவளுக்கு
முனைப்பு.
எல்லாம் நல்லதுக்குத் தான் நடக்கும்
என்றபடிக் கணவரை உள்ளே வரச் சொல்லி சைகை காண்பித்து
சமையலறைக்குச் சென்றாள்.

என்ன விஷயம் சொல்லுங்கோ எனக்குப் பயமா இருக்கே
என்றவளைப் பார்த்து
சிரிப்பு வந்தது ரங்கனாதனுக்கு.
நீயும் ஒரு போஸ்ட் க்ராஜுவேட் தானே.
பட்டிக்காடு மாதிரி கவலைப் படறியே.
அவளுக்கு அந்தப் பையனைப் பிடித்திருக்கு. அவனும் அப்படித்தான் நினைக்கிறான் 
போலிருக்கு.
அந்தப் பையன் ரகுராமன் குஜராத்திலிருந்து போன ஜெயின் குடும்பம்.
சைவம் தான்.
அவன் பெற்றொருக்கு ஏற்கனவே சொல்லிட்டானாம். அவர்கள் இவன் அங்கு போனபிறகு இங்கே நம்மைச் சந்திக்க வருகிறார்கள்.
சரி சொல்ல வேண்டியதுதான் நம் கடமை.
மற்றவை தன்னைப் போல நடக்கும் என்று கடிதத்தைக் கொடுத்தார்.

உடல் தூக்கிவாரிப் போட்டது. தேவகிக்கு. ஜெயின் பையனா. அவர்கள் கடவுளே வேற
ஆச்சே. நீங்க இப்படி அமைதியாக இருக்கிறீர்களே.
அம்மாவை என்ன சொல்லி சமாளிப்பேன் என்று,முணுமுணுத்தபடி,
 தயாரித்த காப்பியை எடுத்துக்
கொண்டு கூடத்துக்கு வந்தாள்.
என்னடிம்மா ரெண்டு பெறும் மந்திராலோசனை செய்தீர்கள். என்னதான் செய்யப் போகிறா சீதா.
நாளைக்குக் காலையில் வருகிறார்கள் அம்மா. மற்றவர்கள் தாஜ் ஹோட்டலில் இறங்கிக் கொள்வார்கள்
இவள் இங்கே வந்துவிடுவாள் என்று விவரம் சொன்னாள் தேவகி.
ஆரத்தி கரைச்சு வைக்கச் சொல்லி இருக்காளோ
என்று சிரித்த மாமியாரைப் பார்த்து அதிர்ந்து விட்டாள்
மருமகள். அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லம்மா.
 எப்படி வேணா இருக்கட்டும். அவள் சந்தோஷம் தான் முக்கியம். 
நீ கவலைப் படாதே நான் பார்த்துக் கொள்கிறேன், என்று ஆதரவாகத் தேவகியின் முதுகைத் தட்டிக் கொடுத்தாள்.
தன் மாமியாரின் தீர்க்க புத்தியைப் பார்த்து ஆனந்தப் பட்டாள் தேவகி.

Wednesday, September 19, 2018

சீதை மனம் சிரித்தது...4

Vallisimhan
எல்லோரும் இன்பமாக  வாழவேண்டும்.

   ஆராய்ச்சிகள் முடிய இன்னும் 5 நாட்களே இருக்கின்றன.
சீதாவுக்கு, ரகுராமனிடம் ஏற்பட்ட நட்பு வளர்ந்தது.
அவனைச் சென்னைக்கு வரும்மாறு அழைக்கத் தயக்கம்.
குழுவோடு வந்தவனைத் தனிப்பட்ட முறையில் அழைக்க என்னவோ போலிருந்தது.

காணொளி 
குழுத்தலைவரோடு பேச விரைந்தாள் சீதா.
இவர்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள்.
நம் சொகைட்டியின் வழியாக இவர்களைச் சென்னை அழைத்தால் என்ன சார். ஹெரிடேஜ் சைட்ஸ் அங்கேயும் இருக்கிறதல்லவா. சென்னை மட்டுமில்லை. உத்தமர் கோவில், தஞ்சாவூர்,
கங்கை கொண்ட சோழபுரம், சித்தன்ன வாசல் இன்னும் எத்தனையோ இடங்கள்
பார்க்கலாமே.
நம் கைலாசனாதர் கோவிலைப் பார்த்து முடிக்கவே ஒரு வாரம் ஆகுமே.
நீங்கள் அவர்கள் குழுத்தலைவரிடம் 
கேட்டுப் பாருங்கள்.
அடுத்த திட்டமாக நாமும் மாரிஷியஸ் போகலாம்
என்று உற்சாகத்தோடு பேசும் சீதாவைப் 
புன்முறுவலுடன் பார்த்தார் குழுத்தலைவர்  பத்மனாபன்.



ஆரம்ப நாட்களிலிருந்து அவளது ஆர்வத்தை மெச்சியவர் அவர்,.
இப்போது ஆராய்ச்சியையும் மீறி அவள் கண்கள் அதிகமாக
ஒளிவிடுவதைக் காணத்தவறவில்லை.
Add caption

யோசிக்கலாம் அம்மா. நான் இன்று மதிய இடைவேளையில் அவரிடம்
இதைக் கேட்கிறேன். ஆமாம் நம் ஊர்ப் பெருமைகள் அவர்களுக்குத் தெரிய வேண்டும்.

உன் தயாரிப்பு எந்த அளவில் இருக்கிறது என்று கேட்டார்.

என்னைப் பொருத்தவரை இது ஒரு சமாதான பூமியாகத் தான் இருந்திருக்கிறது. நான் படித்த புத்தகங்களும் அதை உறுதிப் படுத்துகின்றன.
மொஹஞ்சதாரோ சென்றால் மேலும் ஆவணப்படுத்தலாம், என்றாள்.
உன் தோழன் ரகுராமன் என்ன சொல்கிறான்
என்றதும் திடுக்கிட்டு அவரைப் பார்த்தாள் சீதா.
Add caption

அவர் கட்டிட அமைப்புகளின் அடிப்படைகளையும், இவர்களுக்கு இந்தக் கட்டுக் கோப்பு எங்கிருந்து 
கிடைத்தது. அதுவும் ரோமன் நாகரீகத்துக்கு முன்பே தெரிந்த அற்புத மனிதர்களாக இருக்கிறார்களே

என்று, மேலும் அதில் ஆழ்ந்திருக்கிறார். என்று பதில் சொன்னாள்.
மாரிஷியஸ் 
நல்லதும்மா. சரித்திரம் படிப்பதே நம்மைப் பண்படுத்தும்.
வாழ்த்துகள் என்று சொல்லிச் சென்றார்.
சீதையின் மனம் அமைதியில் ஆழ்ந்தது.
ஆராய்ந்தே நட்பைத் தொடர வேண்டும் என்று தீர்மானித்தாள்.
அதில் வெற்றியும் நிச்சயம் என்ற முடிவோடு நிமிர்ந்தவளின் 
முன்னால் ரகுராமன். 
இன்று சாப்பிட வரவில்லையா. do you have date with Arjuna. என்றவனைப் பார்த்து நகைத்துவிட்டாள்.

mm you can say that. He is here// என்று புன்னகைத்த வண்ணம் அவனுடன் நடக்கத் தொடங்கினாள்.
தொடரும்.

Tuesday, September 18, 2018

சீதையின் முகத்திலும் சிரிப்பு வருமோ..3

Vallisimhan
எல்லோரும் வாழ வேண்டும் 
ஹரப்பா  நாகரீகம் 
 சீதா, இளைய வயதிலிருந்தே புராண இதிகாசங்களில்  நிறைய
ஈடுபாடு  கொண்டிருந்தாள்.
பாட்டி கதைகள் சொல்லும்போதே இது போல உண்மையாகவே நடந்திருக்குமா என்ற கேள்விகளை
எழுப்புவாள்.
சரித்திரங்கள் படிப்பதே முக்கிய வேலையானது.

பல ஆசிரியர்களின் கதைகளையும், நடந்த காலங்களையும்
சித்திரிக்கப்பட்டிருந்த அணிகளன்கள்,போர்ப்பயிற்சி,அரசியல் எல்லாவற்றையும் ஒப்பு
நோக்குவாள்.

நூலகமே அவளின் ஆராய்ச்சிக் கூடம்.
பட்டப் படிப்பையும் ,மேற்படிப்பையும் சரித்திரத்தை முதன்மையான பாடமாக வைத்துப்
படித்தாள். தொடர்ந்து ஆராய்ச்சியையும் அகழ்வாராய்ச்சியிலியே தொடர்ந்து மூன்று வருடங்களில்
முடித்தாள்.
இத்தனை தீவிரம் ஏற்பட்டதில், அவளுக்கு வேறு எதிலும் கவனம் செல்லவில்லை.

நண்பர்கள் அதிகம் இருந்தாலும்  அவர்கள் மன நிலையும் அவளை ஒட்டியே
இருந்ததால்  குழப்பங்கள் இல்லாத வாழ்வே அவளுடையதாக இருந்தது.

சிந்து சமவெளி அமைப்புகள், அவளுடைய கற்பனைகளைத்தாண்டி
எங்கேயோ போவதாக இருந்தது. பரந்து கிடந்த அந்த நகர அமைப்பு
மீண்டும் மீண்டும் அவளை வேறு உலகத்துக்கு அழைத்துச் சென்றது.

இந்த உலகத்தில் பங்கெடுப்பவனாகவே அவள் ரகுராமனைப் பார்த்தாள்.

ஒவ்வொரு மாலையும்  விவாதங்களும் எண்ணப் பரிமாற்றங்களும் 
நடந்த பிறகு இருவரும் அமைதியான இரவில் ,மீட்கப்பட்ட நகரத்தின்
வெவ்வேறு இடங்களைப் பார்வை இடுவதை வழக்கமாகக் 
கொண்டிருந்தார்கள்.
கி.மு 3000 ஆண்டுகளில் இருந்த நாகரிகம் எப்படி இவ்வளவு சீரிய முறையில் 
இயங்கியது. ஏன் அழிந்தது. இதெல்லாம்  அவர்களின் மனதில்
ஓடிய கேள்விகள்.

ரகுராமனின் நிதானமான பேச்சும், அணுகு முறையும் அவளுக்குப் பிடித்திருந்தது.
தான் சொன்னதே சரி என்று விவாதிக்காமல், எல்லோர் பேச்சையும்

நுணுக்கமாகக் காது கொடுத்துக் கேட்கும் முறையையும் வியந்து பார்த்தாள்.

ஒருவாரம் கடந்து போனதே தெரியவில்லை.
இன்றைய ஆய்வில்  மஹாபாரதக் காலமும் , சிந்து சமவெளி நாகரீகமும் ஒத்த காலமா
என்ற முடிவுக்கு அவர்களால் வரமுடியவில்லை.
கங்கைக் கரை ஓரம் நடந்தது அல்லவா பாரதம்
என்றான் ரகுராமன்.

உண்மைதான், இது காந்தாரியின் பிறப்பிடமாக இருந்திருக்குமோ
என்று மறு கேள்வி வந்தது சீதாவிடமிருந்து.
ம்ம். இருக்கலாம். உன் உலகத்தில் அர்ஜுனனும் த்ரௌபதியும் இங்கே டூயட்
பாடுகிறார்களோ என்று கேலி செய்தான் ரகுராமன்.

வாழ்வில் முதல் முறையாக நாணம் வந்தது சீதாவுக்கு.
இந்த இடமே ஒரு கனவு பூமியாகத் தோன்றுகிறது எனக்கு.
மிகச்சரி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள்
இப்போது இருப்பது இதோ இந்த மகத்தான குளமும்
படிக்கட்டுகளும்.
அவர்கள் அப்போது கண்ட கனவு நம் வடிவில் இப்போது
தொடர்கிறது என்று முடித்தான் ரகுராமன்.  தொடரும்.

Mohenjo Daro 101 | National Geographic

Vallisimhan

Monday, September 17, 2018

சீதையின் முகத்தில் சிரிப்பு வந்த காரணம்..2

Vallisimhan

சீதாவின் அகழ்வாராய்ச்சி குழுவுக்கு சுற்றுலா செல்ல ஹரப்பா /சிந்து வாய்ப்பு
கிடைத்தது. வெளி நாட்டிலிருந்தெல்லாம்  வந்து அங்கே முகாமிட்டிருந்தார்கள்.
முக்கால்வாசி  கண்டுபிடிக்கப் பட்ட அகழ்வுகளிலிருந்து கிடைத்த தகவல்களே
மிக அதிகமாக இருந்தது.
அந்த நாகரீகம் இன்னும்  எல்லோரையும் ஈர்த்துக் கொண்டிருந்தது.

எல்லோரும்  ஒவ்வொரு விதமான துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் கலாசாரம், பொருளாதாரம், போக்கு வரத்து, ஆயுதங்கள்,
அவர்கள் காலமும் மஹாபாரதக் காலமும் ஒன்றா என்று வெவ்வேறு
வித ஆராய்ச்சிகள்.
 பார்க்கப் பார்க்கப் பிரமித்துப் போனாள் சீதா.

 இதுவரை செய்த ஆராய்ச்சிகளீலேயே பிரம்மாண்டமானது.
அவளுக்கு  முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது, மஹா பாரதத்துக் காலமும்
சிந்து சமவெளி நாகரீகமும் ஒன்று தானா.
துவாரகையில் கண்டெடுத்த கண்ணன் உலகத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு.

வருடங்கள் கணக்கில்  ஒத்து வருவதாக முந்தின ஆராய்ச்சிகள்
சொல்லிக் கொண்டிருந்தன.

வந்திருந்த குழுக்களில் ஒரு குழு மரிஷியஸ் தீவிலிருந்து வந்தவர்கள்.
அதில் ஒருவன் தான் ரகுராம் ஜகன்னாதம்.


அவனது முன்னோர்கள் குஜராத்திலிருந்து 100 வருடங்களுக்கு முன்பெ
மாரிஷியஸ் சென்று விட்டனராம். கொஞ்சம் ஹிந்தி தெரியும் 
போல இருந்தது. ஃப்ரென்சும் ஆங்கிலமும் நன்றாகப் பேசும் மொழியாக இருந்தது.

இந்திய பாரம்பரியம் தெரிந்து கொள்ளவே இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்துப்
படித்ததாகவும், தான் படித்த கல்லூரியிலேயே  பேராசிரியராக இருப்பதாகவும் 
அவனுடன் பேசிய போது தெரியவந்தது.

இதுவரை ஆராய்ச்சி, அதைப் பற்றி எழுத்து, ,கட்டுரைகள் அனுப்புவது
என்று மும்முரமாக இருந்ததில் 
வேறெதிலும் நாட்டம் இல்லாமல் இறுகலான முகத்துடன்
உலவிக் கொண்டிருந்த சீதாவின் மனமும் கொஞ்சம் இளகியது.  தொடரும் 

Sunday, September 16, 2018

சீதையின் முகத்திலே சிரிப்பு வந்ததோ....

Vallisimhan

தேவகிக்கும் ரங்கனாதனுக்கும் பிறந்த  முதல் பெண் குழந்தை சீதா.
அதன் பிறகு பிறந்தவர்கள்  சேஷனும்  மாதவனும்.

 ரங்க நாதனின் அம்மா முதல் பேரக்குழந்தை பிறக்கப் போகிறது என்றதுமே

ராமாயணத்திலிருந்து பெயர்  வைக்க வேண்டும் என்று விட்டார்.
சரி பிள்ளை பிறந்தால் ராமன் ,பெண் பிறந்தால் சீதை  என்று தீர்மானம் ஆனது.

வைகாசி மாத இளவேனில் காலையில் ஒரு வியாழன் அன்று 
பிறந்தது பெண்தான். அம்மாவைப் போலவே  கரு கரு வென்று
சுருட்டை முடியும், அப்பாவின் நிறமும் கொண்டிருந்த பெண்
பாட்டியை மயக்கிவிட்டாள்.

தாத்தாவோ மைதிலின்னு வைத்தால் என்ன.இல்லை, ஜானகின்னு 
சொல்லலாமே   என்றால் பாட்டி மறுத்துவிட்டார்.

சீதா அழகு வடிவமாக வளர்ந்தாள்.
மேலும் மேலும் படித்துக் கொண்டே இருந்தவள், வரலாற்றில்
 பிஹெச் டி வரை படிக்கும் போது 24 ஐத் தொட்டுவிட்டாள்.
அதுவும் அவள் செய்யும் ஆராய்ச்சி, கோவில்கள், கட்டிய அரசர்கள்,
அவர்களைப் பற்றிய கல்லெழுத்து என்று ஆவணப் படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
இந்தியா முழுவதும் சென்று வரும்  வேளையில், துணைக்கு
அப்பாவும் செல்வார்,.

செல்லிப் பாட்டிக்கு இத்தனை அழகும் அனுபவிக்க ஒரு மன்மதன் வரணுமே, இது இப்படி

கோவில் கோவிலாகப் போய் என்ன சாதிக்கப் போகிறது.
என்றெல்லாம் விசாரப் பட்டாள். 
 தேவகிதான் சமாதானப் படுத்துவாள். 
அவள் எல்லாரையும் போல இல்லை அத்தை.
பெரிய பெரிய ஆராய்ச்சியாளர்களெல்லாம் அவளைப் பார்க்க வருகிறார்கள்.
இவளும் அவர்களுக்கு நிகராப் பேசி விவாதம் செய்யறா.
செய்யட்டுமே. தனக்காப் பிடித்த போது தானே மணம்
புரிந்து கொள்ளட்டும்.
இது போல ஆர்வத்தை நாம் தடை போடக் கூடாது. என்றெல்லாம் சொல்லி
ஆறுதல் சொல்வாள்.
.சீதைக்கு ஏற்ற ரகுராமனும் வந்தான்.  தொடரும்.

Thursday, September 13, 2018

இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்

Vallisimhan
1976 இல் சென்னையே சதம் என்று வந்த நாள் முதல் லஸ்ஸின் நவசக்தி கணபதியே
வாழ்க்கையின் எல்லா நலங்களுக்கும் ஆதாரம்.
கண் முன வந்து போகின்றன சதுர்த்தி அலங்கார மேடையும்
பாடல்களும், சொற்பொழிவுகளும்.
முதலில் குட்டிக் கோவிலாக இருந்த இடம் இப்போது பெரிய மண்டபமாகி வருடங்கள் ஆகிறது.
குட்டி குருக்கள் எல்லோரும் திருமணம்,பிள்ளை குட்டிகள்
என்று பெற்றுவிட்டார்கள். மாறாத இளம் பிள்ளை எங்கள் கணேசன் தான்.
என்றும் செவி மடுப்பான் ப்ரார்த்தனைகளை. எப்போதும் உனக்குத் துணை நான்
என்று சொல்லி என் கடமைகளை நிறைவேற்றுவான்.
அன்பு கணபதியே என்னாளும் உன் நினைவு அகலாமல்
என் புத்தியில் அமர்ந்திரு.
மனம் அலை பாயாமல் எங்கிருந்தாலும் நான் உன்னைக் காப்பேன்
என்று என்னிடம் செய்தி கொடுத்துவிடு.
அம்மாவின் அருமைப் பிள்ளையே அருள் தா.😍🙏🙏🙏🙏

கசப்பு நீங்கி பாயசம் சாப்பிடலாமா..

Vallisimhan
எல்லோரும் வாழ வேண்டும் .

சிறிது நேரம் படுத்து எழுந்திருந்த ஜானம்மாவுக்கு
ஒரு தெளிவு கிடைத்தது போல  நிம்மதி.

ஒரு நடை தன் கிராமத்து தேவதையைத் தரிசித்து வரவேண்டும்
என்ற ஆர்வம் மனதில் கிளம்பியது. வாழைத்தோப்பு அம்மன் என்ற பெயரில் 
இருக்கும் மாரியம்மன் ,ஜானம்மாவின் எல்லாத் துயரங்களுக்கும் பதில் சொன்னவள். 

கொஞ்சம் கிலேசம் ஏற்பட்டாலும் அந்த அம்மனைப் போய்ப் பார்த்துவிடுவார்.
நிம்மதி கிடைக்கும் வரை அவளிடம் தன் மன சங்கடங்களைச் சொல்லி
விட்டுத்தான் வருவார்.
பிறகு தன் கடமைகளைத் தொடருவார்.

தன் பக்கத்தில் அயர்ந்து உறங்கும் ஷண்முகத்தை ஆதுரத்துடன் 
பார்த்தார். எழுந்து சென்று தண்ணீர் அருந்திவிட்டு மீண்டும் வந்து உட்கார்ந்தார்.
சலனம் கேட்டு எழுந்துவீட்டான் மகன். அம்மா, காப்பி ஏதாவது வேணுமா
நான் வாங்கி வரவா என்றதும் சிரிப்பு வந்துவிட்டது அம்மாவுக்கு.
நாம வீட்டிலதானப்பா இருக்கோம். வாடாமல்லி உள்ளே காப்பி 
போட்டுக் கொண்டிருக்கா. 
செண்பகம் ஏதோ வேலையா வெளியே போயிருக்கா.

ஏம்மா எனக்கு ஒரு வரியாவது எழுதக் கூடாதா. 
நான் வந்து அழைத்துப் போயிருப்பேனே. இப்படி சங்கடத்தில இருக்கியே மா. உனக்கு இது தேவையா.
 நம் ஊரில் இல்லாத மருத்துவரா, கஷ்டமோ நஷ்டமோ , வாடாமல்லி
பார்த்துப்பா. 
உடம்பு இவ்வளவு தளர்ந்து போயிட்டயே என்று அலமந்து போய்விட்டான்.

நான் நல்லாத்தான் இருக்கேன். வயசானால் வரும்  ஓய்ச்சல் தான்.
நீ கவலைப் படாதே. அதற்காக என்னை அழைத்துப் போகணும்னு கட்டாயம்
இல்லை.
ஷண்முகம் வாயைத் திறக்கு முன் ,வாசலில் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது.

வியர்த்து விறுவிறுத்து குமரன் வந்தான்.
அவன் கையில் பால் பாக்கெட்களும், பழங்களும் இருந்தன.

ஃப்ரிட்ஜைத் திறந்து உள்ளே வைத்து, அண்ணா முகம் கழுவிப் புறப்படுங்க, திருவொத்தியூர்
வடிவுடை அம்மனைத் தரிசித்து விட்டு,
வெளியே  சாப்பிட்டு விட்டு வரலாம். நாளை வண்டிக்குச் சொல்லி இருக்கேன்.
உன்னுடன் வருகிறேன் வீட்டை ஒழுங்கு படுத்திவிட்டுத்தான் மறு வேலை
என்று பொரிந்து தள்ளும் தம்பியைப் பாசத்துடன் பார்த்தான் அண்ணன்.

நீ லீவு போட்டு அங்க செய்ய பெரிய அரண்மனை இல்லடா அது. எங்களுக்குத் தேவையும் குறைவு,அதற்கேற்ற  பொருட்களும் கொஞ்சம் தான்.என்றான்.
ஆஹா எல்லாம் தெரியும்.
நான் வரத்தான் செய்வேன் என்று அடம் பிடிக்கும் குழந்தை போல 
பேசும் தம்பியைப் பார்த்து சிரித்தான்.
சரிடா உன் விருப்பம். இப்போ கோவிலுக்குப் போகலாம் வா. அம்மா, தலையை வாரிக்கோமா.
நல்ல புடவை கட்டு, வா குடும்பத்தோடு போய் வரலாம் என்றான்.
 ஜானம்மாவுக்கு தன் தேவதையே அழைத்தது போல சமாதானம் பிறந்தது. 
பெரிய கால் டாக்சியை வரவழைத்த குமரன் ,மனைவியைத் தேடினான். இன்னுமா வரல அவ. ராயபுரம் போய் வரேன்னு சொன்னாளே, என்ற வண்ணம் யோசித்தவன், நாம் கிளம்பலாம். அவளை ஆட்டோவில் வரச் சொல்லலாம் என்று கிளம்பினான்.

வடிவுடைய அம்மன் கோவிலில் தாயைப் பார்த்ததும் மனம் நெகிழப் பிரார்த்தித்தாள்.
இந்தக் குடும்பம் தழைக்கட்டும் தாயே. எனக்கு  வேற என்ன வேணும் என்றவாறு, தியாகேஸ்வரரையும் வணங்கிவிட்டு,
குமரன் சொன்ன ஹோட்டலில் ,குழந்தைகள் கேட்ட அத்தனையும் வாங்கிக் கொடுத்தான்.
சாப்பிடுங்கடா. சத்தே இல்லாம இருக்கக் கூடாது 
என்று சிரித்து சந்தோஷப் படுத்தினான்.

 போன்ல சொன்னேன், யேன் இவளைக் காணொம் என்றவாறு வீடு திரும்பினார்கள்.
மணி எட்டரை தான் ஆகி இருந்தது.,
 செண்பகம் என்று அழைத்த வண்ணம் உள்ளே போனவனைச் சந்தித்தது
தன் மாமியாரைத்தான். 
மகள் ராயபுரம் அத்தைக்கு உடம்பு முடியாமல் போனதால் அங்கே தங்கிவிட்டுக்
காலையில் வருவாளாம். என்று சொன்னதும் குமரன் மனம் கொதித்தது.

சரி அத்தை நாங்க சாப்பிட்டாச்சு நீங்க இருந்து சொன்னதுக்கு நன்றி
 என்று அவளை அனுப்பினான்.
அண்ணா, பால் காய்ச்சி சாப்பிட பால் வாங்கி வந்திருக்கேன். நாளை வியாழன் எமகண்டம்
போனதும் எல்லோரும் சாஸ்திரி நகர் போறோம்.
என்று மங்களவைப் படுக்க வைத்தான்.
அசதி தாங்காமல் , எல்லோரும் பாய்களை விரித்துப் படுத்துவிட்டனர்.

 அடுத்த நாளும் விடிந்தது. அனைவரும் குளித்து,மங்களாவையும் அழைத்துக் கொண்டு
புது வீட்டுக் கிளம்பினர்.
அதுவரையில்  செண்பகத்தைக் காணோம்.
பிள்ளையைப் பத்திக் கூடக் கவலைப் படலியே என்று வருத்தப் பட்டார் ஜானம்மா.

காலைக் காற்றில் தூரத்தில் நீல வண்ணக் கடல் தெரியும் இடத்தில் வீடுகள்
அமைந்திருந்தன. முதல் மாடியில் அமைந்திருந்த வீடு
அமைப்பாக இருந்தது.அண்ணே நீங்க முதல்ல போங்க. அம்மா கூடப் 
போ. அண்ணீ உங்க வாழ்க்கை சுகமாக அமைய வாழ்த்துகள் என்றபடி கீழே
 ஸ்கூட்டர் நிறுத்திய இடத்துக்குப் போனான்.

அவர்கள் உள்ளே போய் பத்து நிமிடங்களில் மீண்டும் ஸ்கூட்டர் சத்தம்
கேட்டது. கையில் கொண்டு வந்திருந்த வாழைத்தோப்பு அம்மன் படமும், பிள்ளையார்
படத்தையும் சமையல் மேடையில் வைத்துக் கோலமிட்டாள்.
அழகான ஜோடி விளக்குகளை ஏற்றி வைத்தாள்.
ஆட்கள் வரும் சத்தம் கேட்க எல்லோரும் திரும்பினர்.
வரிசையாக வைக்கப் பட்ட பொருட்களைக் கண்டு ஆச்சரியம் அலையாகத் தாக்கியது.
அண்ணி முதல்ல பாலைக் காய்ச்சுங்க.எல்லாரும் சாப்பிடலாம்.
அண்ணா ,அழகாக் காஸ் கனெக்ஷன் எல்லாம் கொடுத்திட்டியா.

இதோ வரான் பாரு என் நண்பன் என்று கூச்சத்தோடு நின்றிருந்த
செல்வத்தைக் காண்பித்தான்.
பாலும் காய்ச்சப் பட்டது. மனதார வாழ்த்திக் கொண்டே பாலைக் குடித்தனர்.
குமரன் கொண்டுவந்த மின்விசிறிகள் இரண்டு படுக்கை அறையிலும் கூடத்திலும்
பொருத்தப் பட்டன.
அடுத்து வந்தது புது தொலைக்காட்சிப் பெட்டி.
அண்ணா ஒண்ணும் சொல்லாத. நீ அனுப்பின பணம் அப்படியே இருந்தது.
பயிரறுவடை ஆன பணத்தைச் செலவழிக்கவில்லை.
 இதோ அப்பா ஆசியா உனக்கு வந்துவிட்டது
என்று சொன்ன தம்பியைக் கண்ணீரோடு தழுவிக் கொண்டான் 
ஷண்முகம். 
சிலையாக நின்ற அம்மாவின் கால்களில் மொத்தக் குடும்பமும்
 விழுந்து ஆசி வாங்கிக் கொண்டது.
வாடாமல்லி மங்களாவுக்கு , தான் கொண்டு வந்த தாழம்பூவை 
வைத்துப் பின்னினாள். பக்கத்திலிருந்த உணவுவிடுதியிலிருந்து காலை உணவு வாங்கி வந்த குமரன், அண்ணி நீங்க சமைத்து நான் சாப்பிடணும், மத்த வேலைகளை நாங்கள் 
பார்த்துக் கொள்ளுகிறோம் என்ற போது,
 வாடாமல்லி திக்கு முக்காடிப் போனாள். 
மாயாபஜார் படம் போல எல்லப் பொருட்களும்  அதற்கான அலமாரிகளில் அமர்ந்தன.
பிள்ளைகளின் யூனிஃபார்ம் அடுத்த நாள் தான் வரும் என்பதால், திங்களிலிருந்து
பள்ளி போவதாக ஏற்பாடு.
அண்ணி,நீங்களும் அம்மாவும் இங்க இருக்கிற எல்லாக் கோவிலுக்குப் 
போய்வரலாம், கடைகண்ணி, டாக்டர் எல்லாம் இருக்காங்க.

நடப் பயிற்சிக்கு பீச் இருக்கு என்று அடுக்கின கொழுந்தனைப் 
பார்த்துச் சிரித்தாள் அண்ணி.
அப்ப நீங்களும் குடும்பத்தோட இங்கே இருக்கலாம்.

அதுவும் நடக்கும் அண்ணி. தண்டையார்ப் பேட்டையைவிட்டுக் கிளம்ப வேண்டிய நாள் வந்துவிட்டது என்று மலர்ந்த முகத்துடன் நிற்கும் குமரனை இன்னோரு லக்ஷ்மணனாகவே 
பார்த்தாள். 
மாமியார் முகம் முழுவதும் மகிழ்ச்சி.
இனி என்ன வந்தாலும் தன் தாயாக அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டிய
பொறுப்பு அவள் மனதில் இறங்கியது.
செண்பகத்தின் மனமும் குளிர்ந்து நல்லுறவு நீடிக்க அம்மனே அருள்வாள்
என்ற உறுதியும் தோன்றியது. 
அனைவரும் வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Wednesday, September 12, 2018

வேப்பம்பூ ரச ருசி.....2

Vallisimhan
   அசதியில் சாய்ந்த வண்ணமே தூங்கி விட்ட ஜானம்மாவை எழுப்பியது
பெரியமகன் ஷண்முகத்தின் குரல். உடல் பரபரக்க, எழுந்து உட்கார்ந்தார். கண்ணில் உடனே நீர் கட்டியது.
வந்தியாப்பா, எப்போ புறப்பட்டீங்க இத்தனை நேரமாச்சே. 
பசி தாங்காதேப்பா உனக்கு என்று மகனையும் பேரன்களையும் அணைத்துக் கொண்டார்.

எங்களை வரச் சொல்றது இருக்கட்டும் . வெய்யில் திண்ணை ஏறிச் சுடுவது கூடத்தெரியாமல் என்னம்மா  உனக்கு உறக்கம் என்று அன்புடன் கேட்டான் மகன். அத்தை  வணக்கம் என்று கால்களைத் தொட்டு கும்பிட்டாள் வாடாமல்லி.
நல்லா இருங்க பசங்களா, உள்ளே போங்க நானும் வரேன்
என்று இறங்க முற்பட்டவளின் தலை சுற்றியது.

சட்டெனப் பிடித்துக் கொண்டான் மகன்.
ஏம்மா சாப்பிடலியா மணி ரெண்டாகப் போகுதே 
என்று கடிந்தபடி அவளைக் கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் செல்லக் குடும்பம் பின் தொடர்ந்தது.

அப்போதுதான் கண் விழித்தவள் போல செண்பகா வந்தாள். குழந்தை மங்களா
தன் சகோதர்களைப் பார்த்துக் குதியாட்டம் போட்டது.
அடங்கி இருடி என்று விரட்டியவள், 
நீங்க எப்ப வரீங்கன்னு தெரியல.
நான் சாப்பிட்டுவிட்டேன். உங்க தம்பி சாயந்திரம் தான் வர முடியுமாம்.
அவசரப் பட்டு புது வீட்டுக்குப் போக வேணாம்னு சொன்னாரு.
இலை போடட்டுமான்னு திரும்பினாள்.
வாங்க என்று ஒரு வார்த்தை சொல்லாததைக் கவனித்த வாடாமல்லி,
செண்பகம், இந்தா உனக்கும், மங்களாவுக்கும்,
தாழம்பூ, மருக்கொழுந்து, மல்லி எல்லாம் நம் தோட்டத்திலிருந்து 
கொண்டு வந்திடருக்கிறோம். இந்தா, என்று ,பெரிய பெரிய மொந்தன் வாழைப்பழம், அறுவடை செய்த மணிலாக் கொட்டை என்று பைகளை வைத்தாள்.

எங்கக்கா இவ பூ வைக்கிறா. பள்ளிக்குப் பூ வைக்கக் கூடாது. தாழம்பூ
கை குத்துமே, பக்கத்து வீட்டம்மா இதெல்லாம் வச்சிக்கும் அவங்களுக்குக் கொடுக்கிறேன்
என்றபடி, தரையில் இலைகளை வைத்தாள். 
அம்மா உங்களுக்காகக் காத்திருந்தாங்க அவங்களைச் சாப்பிடச் சொல்லுங்க.
எனக்கு ரத்த அழுத்தம் இருக்காம். முன்ன மாதிரி ஒண்ணும் முடியல என்று கீழே உட்கார்ந்து கொண்டாள்.

அமைதியாகப் பார்த்த ஷண்முகம், குழந்தைகளைப் பின்புறம் அழைத்துச் சென்று கைகால் கழுவ வைத்து அழைத்து வந்தான்.
நீங்க சிரமப் படவேண்டாம் நாங்களே பார்த்துக்கறோம் என்று
அம்மாவுக்கு முதலில் சாதத்தை அளித்து,
சாப்பிடும்மா என்றான்.
அச்சத்துடன் அங்கு வைத்திருந்த சாப்பாட்டு பாத்திரங்களைப் பார்த்தார்
ஜானம்மா.
அம்மாவுக்குப் பத்திய சாப்பாடு, உங்களுக்கும் அதே செய்து விட்டேன்
என்றாள் சின்ன மருமகள்.
ரொம்ப நல்லா இருக்குமா என்று வாடாமல்லித் தானும் சாப்பிட்டுப் 
பிள்ளைகளையும் கவனித்தாள்.
மாமியாரின் தட்டில் சாதத்தைப் பிசிந்து குழம்பை விடும் போது 
அவள் கண்கள் கலங்கியது.

பையன் களும் அமைதியாகச் சாப்பிட்டு எழுந்தார்கள்.
 அனைவரும் இடத்தைச் சுத்தம் செய்யவும்,
சின்ன மகன் முத்துக் குமரன் வரவும் சரியாக இருந்தது.
அண்ணே, அண்ணி, சாப்பிட்டீங்களா வாங்க வாங்க 
இதோ வரவழியில் அல்வா பகோடா எல்லாம் வாங்கி வந்தேன், டேய் பசங்களா வாங்கடா சித்தப்பா கிட்ட என்று வாரி அணைத்துக் கொண்டான்.
என்ன படிக்கிறீங்க. 
இங்க பக்கத்திலியே நல்ல பள்ளி இருக்குது
மங்களா படிக்குது. அங்கேயே  நீங்களும் சேர்ந்துக்கலாம் டா
என்ற கணவனைச் சுட்டெரிப்பது போலப் பார்த்தாள் அவன் மனைவி.
ஏங்க அவங்க தாம்பரத்திலிருந்து தினமுமா இங்க வருவாங்க.
என்னமோ சொல்றீங்களே என்று கேலி காட்டினாள்.
ஷண்முகம் வாய் திறந்தான்.
தம்பி ,எனக்கு அடையாறு டிப்போவில் சூப்பர்வைசராகப் போட்டு இருக்காங்க.
பக்கத்திலியே சாஸ்திரி நகரில் வீடும் பார்த்துக் கொடுத்திருக்காங்க. 
 MIG  flats ல. சின்னதா இருந்தாலும் புதுசா இருக்கு. 
தன்னீர் பிரச்சினை எல்லாம் இல்லை, அங்கயே 
ஹிண்டு ஹை ஸ்கூலில் ,நண்பன் ஒருவன் தயவில் இடமும் கிடைத்துவிட்டது.
நான் பயந்தது போல நிறையக் கட்டணமும் இல்லை.

உன்னையும் அம்மாவையும் பார்த்துட்டு இன்னிக்கே அங்க போறோம்.
லாரியில் சாமான்கள்  வந்துவிட்டன. அவற்றை இறக்கிவிட்டு வரத்தாம் நேரமாகிவிட்டது.

நீ சிரமப் படாதேடா.
அடுத்த வாரம் வந்து அம்மாவையும் அழைத்துப் போகலாம்னு இருக்கேன்.
நீ என்ன சொல்லற.
அம்மாவுடன் இருந்து நாட்களாகி விட்டது.
வாடாமல்லியும் சேர்ந்து கொண்டாள். எப்பவும் அம்மா நினைப்புதான். சர்க்கரைக்கு மருந்து எடுத்துக் கிட்டாங்களா, சாப்பிட்டாங்களா என்று. சொல்லிக் கிட்டே இருப்பாங்க 
என்றாள்.
குமரன் அமைதியானான்.

பிள்ளைகளுக்கு ஏதாவது சினிமா போடு செண்பகா.
அப்படியே எனக்கும் சாதம் குழம்பு எடுத்துவை. 
இன்னிக்கு  வங்கியில் நேரமே கிடைக்கவில்லை என்று உள்ளே போனான்.
தட்டில் சாதமும் ,குழம்பு, பாவக்காய் கறியும், வேப்பம்பூ ரசமும் அவனை எதிர் நோக்கின.

இதுவா சமையல் என்று குரல் உயர்த்தினவனின் கண்களைச் சந்திக்கத் தயங்கினாள்
செண்பகம்.
அம்மாவுக்காக செய்தேங்க..
நீங்களும் வருவீங்கன்னு எதிர்பார்க்கல என்றாள். தயங்கியபடி.

அண்ணன் ,அண்ணி 2 வருஷம் கழிச்சி வராங்கன்னு நினைவிருக்கா உனக்கு
என்று அழுத்தமான குரலில் கேட்டான்.

குமரா என்று அண்ணன் விளிப்பது கேட்டதும் கசந்த உணவைச் சாப்பிட்டு முடித்தான்.

இதோ வரேன் அண்ணே  என்றபடி வெளியே வந்த
குமரன், அண்ணே நீங்க கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க,

நான் வெளிய போயி முக்கிய வேலையை முடிச்சுட்டு வரென்,
அம்மா நீங்களும் படுத்துக்கங்க மா.
என்றபடி அவசரமாய் வெளியேறினான்,

தம்பியின் போக்கு புரிபடாமல் அம்மாவோடு பேச உட்கார்ந்தான்
ஷண்முகம். 
நிமிடத்தில் புரிந்து கொண்டான் அம்மாவின் தள்ளாமையையும், சோகத்தையும்.
தந்தை இறந்த போது கூட இத்தனை தளர்வாக இல்லை அவள்.

கிராமத்தில் இருந்த போது ,வயல் வெளி, தன் தோழிகள், உறவுகளுடன்
வரவு செலவுக் கணக்கு எல்லாம் கவனித்துச் சுறு சுறுப்பாக இருந்தாள்.
சென்னை அவளுக்கு மாற்றம் கொடுக்கவில்லை. ஏமாற்றமே 
ஆலயம்.
கிடைத்திருக்கிறது.... நல்ல முடிவுடன் அடுத்து சந்திக்கலாம்.
திருவொற்றியூர் வடிவுடை அம்மன்.