Tuesday, August 25, 2026

இரவும் வரும் பகலும் வரும் 2010இல் எழுதிய கதை:)




வல்லிசிம்ஹன்

இரவும் வரும் பகலும் வரும்....1 

கதை எழுதிய காலம் 2010 ஆகஸ்ட்.

தம்பி ஒருவர் வீட்டில் நடந்த கலகல சம்பவம். 
எல்லோரும் நல் வாழ்வு பெற இறைவன் அருளட்டும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++கதை ஆரம்பம்.

***********************
''வாழ்வென்றால் சிரித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று ஏதாவது சட்டம் போட்டு இருக்கா என்ன? எனக்கு கோபம்தான். அதைக் காண்பிக்க எனக்கு ரைட்டு இருக்காக்கும் ''

முணுமுணுக்கும் ஜானு என்கிற ஜானகியை அலுப்போடு பார்த்தேன்.

''பின்ன என்ன முணுக்'னால் பிறந்த வீட்டுக்கு ஓடறது எந்த விதத்தில நியாயம்?
புருஷன் பொண்டாட்டிக்குள்ள இதுவரை சண்டையே வந்தது கிடையாதா .?


அப்படிப் போவதானால் நானே நானூறு தடவை காரைக்குடிக்கு ஓடி இருக்கணும்.'"

'எதுடி, அப்ப எல்லாம் நீ பொட்டி கட்டரத்துக்குள்ள ,சின்னத்துக்கு சளி பிடிச்சுக்கிம்,
பெரிசுக்கு வயத்தவலி வந்துடும்.
சரி நாளைக்குப் போலாம்னு பொத்துன்னு உட்கார்ந்துடுவே.
கார்த்தால உனக்கு கோவம் வந்தது கூட நினைவில்லாம, இட்லி வேக வைத்துண்டு இருப்பன்னுதும் ஜானுவுக்கே சிரிப்பு வந்தது. கூடவே சுய பச்சாத்தாபமும் சேர்ந்து கொண்டது.

அடச்சே கோவிச்சுக்கரத்துக்கூட நேரமில்லாமல் என்ன தான் குப்பை கொட்டினேனோ'' என்றாள்.
சரி 45 வருஷம் கழிச்சு இப்ப வருத்தப் படாதே. எதுக்காக இவ்வளவு கோபம்.
சனி ஞாயிறு வந்தால் நடக்கிற கூத்துதானே.?

''வாராவாரம் நடக்கணும்னு எங்கயாவது காலட்சேபத்தில கேட்டுண்டு வந்தீர்களா,
அதென்ன பழக்கம் ?
நாளைக்கு எனக்கு அறுபது வயசாகப் போகிறதுன்னு தெரியாதா.
பிரமாதமா பட்டும், வைர நெக்லஸும் கேட்டேனா.

எல்லாரும் ஒண்ணா இங்க இருக்கற மதுராந்தகத்துக்குப் போய் வரலாம்னு தானே

சொன்னேன்.
புளிக்காய்ச்சல் கூட காய்ச்சி வச்சுட்டேன். இட்லிமாவு பந்து பந்தா உருட்டி
வச்ச மாதிரி அரைச்சு வைத்தாச்சு. ராத்திரி சாதம் வடிச்சு, தயிர் சாதத்துக்கு

ரெடி செய்யணும். அவ்வளவுதான்.

இப்ப இந்த வெள்ளிக்கிழமை சாயந்திரம் ரெண்டு பையன்களுக்கும்
காரைக் கிளப்பிக் கொண்டு மாமனார் மாமியாரை
அழைத்துக் கொண்டு அந்த ரிசார்ட் ,இந்த ரிசார்ட்னு போகணுமா.?""
குமுறியவளை அநுதாபத்தோடு பார்ப்பதைத் தவிர என்னால் ஒன்றும் முடியவில்லை.
அவளது ஆற்றாமைக்கும் காரணம் உண்டு.

இரண்டு பிள்ளைகளக் கொடுத்த கடவுள் இன்னோரு பெண்ணையும்
கொடுத்திருக்கலாம்.
பெற்றோர்கள் நாலு பெற்றுக் கொண்டால் , எங்கள் காலத்தில் இரண்டு பெற்றுக் கொள்வது தான் அளவாக இருந்தது.!!
ஜானுவின் உடல் நிலையும் ஒத்து வரவில்லை. அதனால் இரண்டோடு

போதும் என்று நிறுத்தி ஆச்சு .
 August 17, 2010  
Tuesday, August 17, 2010
இரவும் வரும் பகலும் வரும்---2
இத்தனைக்கும் உங்க அம்மாவோட அறுபதுக்கு சம்பந்திகள் வரலைன்னு ஒரு இஷ்யூ ஆச்சே அதுமாதிரி ஏதாவது கேட்டேனா'' என்று மீண்டும் புலம்பலை ஆரம்பித்தவளைப் பார்த்து எனக்குக் கோபம் வந்தது.


''அம்மா அம்மானு நீயும் தான் எங்க அம்மாகிட்டப் பாசமாயிருந்த. அவளும் பெருமாள் கிட்டப் போய் 15 வருஷம் ஆச்சு . இப்ப என்னத்துக்கு அவளை இழுக்கிற??



'அப்ப எல்லாரும்(என் அக்கா,தங்கை,பாட்டி) சேர்ந்து நான் அன்னிக்கு சாயந்திரம் காரைக்குடிக்குப் போறேன்னூ

சொன்னதுக்கு'' ..........,சரி வேண்டாம் நான் ஒண்ணும் சொல்லலை. விடுங்கோ.

என்னைக்கு ஏழை சொல் அம்பலம் ஏறியிருக்கு.!

இவள் ஏழையா:)

ஒரு தனியார் கம்பனியின் தலைமை அதிகாரியின் பெண்டாட்டி. வாழ்க்கைத்துணை.

அண்ணா நகர்லியே முதலாக வீடு வாங்கின பெருமை. ஊஞ்சலென்ன, போர்ட்டிகோ என்ன,

தோட்டம் என்ன. மாடு ஒன்றுதான் இல்லை.

அலுக்காமல் என் உயர்வுக்கு துணை இருந்தவள் தான். எத்தனை வெளிநாடுகள்

போய்வந்தாலும் அலுக்காமல் துணிமணிகள் ,மருந்துகள் மொத்தமும்

அழகாக அன்போடு எடுத்து வைப்பாள்.

'எங்க இரண்டு பேருக்கும் இதுதான் சரிப்படும். அவரோட ஸ்டைலே வேற. நானே வேற.

கூடவே இருந்தால் தகறார் வரச் சந்தர்ப்பங்கள் அதிகம்''னு தோழியிடம் 
வேற சொல்லுவாள்..

இதோ ரிடயரும் ஆகி   இரண்டு வருஷங்கள் போயாச்சு.
அதிலயும் அவளுக்கு ஆதங்கம்.
''ஊர்ல  உலகத்தில  ரிடயராவதற்கும் ,எங்க வீட்ல ரிடயராகரதுக்கும் வித்யாசம் உண்டு  தெரியுமோ   விமலா.?
இவர் இன்னமும் ஆஃபீஸ் போகிறார்..என்னன்னால்  கன்சல்டண்டாம் !!
நினைத்த பொது போகலாம் வரலாம் .மீட்டிங் இருக்கிற அன்னிக்கு முழு நாள்  என்று யாரிடமோ  அளந்து கொண்டிருந்தாள்.
என்  கதையை யார்கிட்டயோ சொல்றியே 'என்று கேட்டால்  '' நிஜத்தைத் தானே சொல்றேன்.
நீங்க ரிடையரானால்'' என்ன கோவிலுக்குப் போகணும், எந்த பாக்கேஜ் டூர்  எடுக்கனும்னு கனவு கண்டு கொன்டிருந்தால்,'' நீங்கள்  இப்படி செய்து இருக்கிறீர்கள்.''
என்கிறாள் .

''நான் வீட்டிலிருந்தால்  உனக்குத் தான்  சிரமம்.
இப்பப் பாரு   சுலபமா கார்ந்ப்லேக்ஸ்   சாப்பிட்டு விட்டு  ,மதியம் அலுவலக காண்டீனில்  பத்திய சாப்பாட்டை  முடித்துக் கொள்கிறேன்.
சாயந்திரம் நானும் நீயும் பேரக்குழந்தைகளும் பார்க் போகிறோம்.
உனக்கு நடையாச்சு.எனக்கு  குழந்தைகளோடு இருக்கும் சந்தோஷம்.
இதில கஷ்டப்பட என்ன இருக்கு ?''

''அதானே!!   நான் செய்ததையே  செய்துண்டு இருக்கேன்.  ஒரு மாற்றமும்
இல்லை. நாப்பைந்து  வருஷம்  இப்படியே போயாச்சு.
செக்கு மாடு மாதிரி  சுத்தி வந்து.''....முடிக்காமல் கண்கலங்குவது தெரிந்தது .

என்னையும் பட்டம் படிக்க விட்டிருந்தால் , வேலைக்குப் போயிருக்கலாம்.
இப்ப  இந்தப் பெண்கள் ,
பறக்கிற மாதிரி  நானும் ஏதாவது சாதிச்சிருப்பேன்.''

''அதுக்குப்புறம்  எனக்கும் என் வயசுக்கு ஏத்த தோழிகள், எனக்கு என்று ஒரு
குரூப், சிரிக்க,பேச,அழ எல்லாத்துக்கும்தான். ''

எனக்குப் புரியலை  ஜானு. இப்ப இந்த வாழ்வுல என்ன குறை ?
நீ சந்தோஷமாத் தான  இருக்க.
இந்த அறுபதாவது பிறந்த நாளுக்கு மட்டும் ,  உனக்கு திடீர்னு
என்ன ஆச்சு.
பிள்ளைகள் உன்னிடம் அன்பாகத் தான் இருக்கிறார்கள்.
பெரியவன்  நுங்கம்பாக்கம்  ஸ்ரீநிவாசர்  கோவிலில்  சர்க்கரைப் பொங்கல் சொல்லி இருக்கிறான். சின்னவன்   புரசைவாக்கம்  பிள்ளையார் கோவிலில் நூத்தி எட்டு கொழுக்கட்டைக்கு சொல்லி இருக்கிறான்.
நாளை சாயந்திரம் வந்துவிடுவார்கள்.
நேத்திக்கு  நடந்த  சமாசாரத்துக்கு இன்னிக்கு வருத்தப் படாதே.!  என்றேன்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
at August 17, 2010  

Thursday, August 20, 2026

முதுமையில் வேண்டும் இனிமை

வல்லிசிம்ஹன்

முதுமை சிறப்பு .3
Vallisimhan
எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும்.
  வந்து இரண்டு நாட்களுக்குப் பேச நிறைய விஷயங்கள் இருந்தன அம்மாவுக்கும் பெண்ணுக்கும்.
பாட்டியோட வண்டியில் வந்த குழந்தைகள் , திங்கள் காலை
வீடு திரும்பினர்.
அத்தையின் வீட்டை விட்டுப் போகவே மனமில்லை.
தோட்டம், அங்கிருக்கிற மாமரம், ,அதில் அத்திம்பேர் தொங்க விட்டிருந்த
ஊஞ்சல்,
நல்ல நட்பு காட்டிய அத்தையின் பெண்கள் எல்லாமே
குழந்தைகளுக்கு  வெகு இனிமையாக இருந்தன.
வசதியான வீடும்,அலங்காரமும், எங்கும் வீசிய இனிமையான வாசம்

எல்லாம் பிடித்து இருந்தன. அடுத்த ஞாயிறு அவர்கள் பெரிய குளம் வருவதாகக் கூறியதும் இவர்கள் கிளம்பினர்.
அடுத்த நாள் மருத்துவரோடு சந்திப்பு.
 வனஜாபாட்டியை அன்புடன் வரவேற்றவர் எல்லாவற்றையும் விசாரித்துத் தெரிந்து கொண்டார்.
இன்னும்  இதய பரிசோதனை செய்ய வேண்டும் அம்மா.
நீரிழிவு நோயால் வரும் பாதிப்புகளைச் சொன்னதும் பாட்டிக்கு
வருத்தம் அதிகரித்தது.

டாக்டர் ,பாட்டியின் அண்ணா 51 வயதிலியே இருதய நோயில் இறைவனடி
சேர்ந்ததை நினைவுக்கு  கொண்டு வந்தார்.
தனக்கு மருந்துகள் கொடுக்கும் படியும்,பரிசோதனை எல்லாம் வேண்டாம் என்றும் சொல்லிவிட்டார்
வனஜா பாட்டி.
தன் மருமகள் நன்றாகப் பார்த்துக் கொள்வதாகவும்.
உணவுக் கட்டுப்பாடில் இருப்பதாகவும், அடிக்கடி நீர் கழிப்பதுதான் வேதனையாக இருப்பதாகவும்
சொன்னார்.

இங்கு மகள் வீட்டில் பாட்டிக்கு அந்த வசதிகள் இருப்பதை
டாக்டர் அறிவார். இங்கேயே இருந்துவிடுங்கள்.
அவர்கள் உங்களை வாராவாரம் வந்து பார்க்கலாமே என்று யோசனை
சொன்னார்.
மகனை விட்டுக் கொடுக்க விரும்பாத பாட்டிம்மா
யோசனை செய்வதாகச் சொன்னார்.
கூட வந்த பத்மாவிடம்  விஷயங்களைக் கண்டிப்பாகச் சொன்னார்.
வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கட்டாயத்தையும் சொன்னார்.
பத்மாவைப் பயம் சூழ்ந்தது.
வீடு திரும்பும்போது களைப்புடன் சீட்டில் சாய்ந்து
உறங்கிவிட்ட அம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.
வீடு வந்ததும் பழைய உற்சாகத்துடன்
தன் அறைக்குச் சென்று பெட்டியைத் திறந்தார்  பாட்டி.
அம்மா அவசரம் இல்லை .நீ கொஞ்ச நேரம் படுத்துக் கொள்.
என்ற பத்மாவிடம், சும்மா இருடி,
இதுக்காகத்தான் வந்தேன்.
நீ வேண்டாம்னு சொல்லாதே.
உன் கணவர் நன்றாக எல்லாம் செய்கிறார். இருந்தாலும் பாட்டியின் ஆசீர்வாதமாக
உன் குழந்தைகளுக்கு நான் கொடுக்க வேண்டும்.
இந்த காசிமணி மாலை இரட்டை வடம், 20 பவுன் தேறும்.
சிகப்பு அட்டிகை நீலாவுக்குக் கொடுக்கிறேன்.
இந்தக் கெம்பு ராக்கொடியும், தோடுகளும்
புது மோஸ்தரில்  செய்து உன் பெண்களுக்குக் கொடு.
அப்பாவுக்கு  மலேயாவிலிருந்து  வைரம் கொண்டுவந்து கொடுத்தார்
ஒரு நண்பர். அதான் சாமினாதன்.  அவர்தான்.

அதை இரண்டு பதக்கமாக்கி வைத்திருக்கிறேன்.
உனக்கும் ,நீலாவுக்கும் ஒவ்வொன்று.

ஒரு மோதிரம் பேரனுக்கு செய்து வைத்துவிட்டேன்.
அப்பாவுக்கும் இதெல்லாம் தெரியும்.
என்று சொல்லி ஓய்ந்தாள்.
சரிம்மா. இப்ப சாப்பிட வா. காரமில்லாத கூட்டும், வேக வைத்த கொண்டக்கடலை சுண்டலும் கீரையும் இருக்கிறது.
உனக்குப் பிடித்ததைச் சாப்பிடு.
உன் பாத்ரூம் சௌகர்யமா இருக்கா.
ஆமாம் பத்மா. படுக்கும் அறைக்கு வெளியிலேயே அழகாகக் கட்டி இருக்கியே.
ரொம்ப சௌகரியம்.
இதோ கைகால் அலம்பிக் கொண்டு வந்துவிடுகிறேன்.
உன் அண்ணா கிட்ட பேச வேணும். பக்கத்துத் தபால் ஆபீஸிற்கு வந்து அவன் பேசணும்.

சாயந்திரமா அவனைக் கூப்பிடு. நான் இல்லாமல் அவன் இருந்ததே இல்லை.
பாவம் குழந்தை என்று சொல்லும் அம்மாவைப் பார்த்து சிரித்துவிட்டாள்
பத்மா.  

  simhan

எல்லோரும் இன்பமாக வாழவேண்டும்.

  அடுத்த நாள், பத்மா தன் பெரியம்மா,சித்திகளை அழைத்து வந்தாள்.
என்னடி வஞ்சி, இப்படி தளர்ந்து போய் விட்டாய்
என்று ஆதங்கப் பட்ட அவர்களை
வரவேற்று,
அம்மாவுடன் பேசவிட்டாள்.
வெளியே போய் அண்ணாவுக்குத் தொலைபேசினாள்.

மருத்துவர் சொன்ன புத்திமதிகளை அவனிடம் சொன்னதும் கலவரப்
பட்டான். என்ன செய்வது பத்து. இங்க வசதி போதாதுதான்.
அம்மா சந்தோஷமாகத்தான் இருக்கிறாள்.

அவள் ஒன்றும் சொல்லவில்லைடா அண்ணா.
அங்கே போக வேண்டும்  என்ற நினைப்பில தான்
வந்திருக்கிறாள்.

அடிக்கடி தலை சுற்றல் வருகிறது. அங்கே படி இறங்கும் போது
விழுந்துவிட்டால்  என்ன செய்வாய் நீ. இந்த வாரம்
டிசம்பர் லீவு ஆரம்பிக்கிறது. நீ மன்னியோடும், குழந்தைகளுடனும்
வா.  உன்னைப் பார்த்தாலே அவளுக்குத் தெம்பு வந்துவிடும்.

மாப்பிள்ளைகூட உன்னுடன் பேச ஆசையாகக்
காத்துக் கொண்டிருக்கிறார்.
ஓய்வும், நல்ல தூக்கமும், மருத்துவரின் கண்காணிப்பும் அவளுக்குத்
தேவை டா.
அவளுடன் துணைக்கு இருக்க, உதவி செய்ய ,பேச
சிதம்பரத்திலிருந்து  அம்மாவின் சித்தி பெண்ணை
வரச் சொல்லி இருக்கேன்.
 திருப்பி ஃபோன் செய்கிறேன். நீ சாதாரணமாக
அம்மாவிடம் பேசு என்று வைத்துவிட்டாள்.

உள்ளே ஒரே உற்சாகமான பேச்சுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது.
அம்மா, அக்கா தங்கையைப் பார்த்தால்
உனக்கு எத்தனை சந்தோஷம்மா
உனக்கு. எங்களைக் கூட மறந்து விடுவாய்
 என்று கேலி செய்தவள். கையோடு
கொண்டு போன காப்பி, பலகார வகைகளை வைத்தாள்

அம்மா இந்தா உன் சாக்ரின் மாத்திரை என்று
அம்மாவிடம் கொடுத்தாள்..
 ஏன் பத்மா!, எங்களோடு அனுப்பி வையேன். இராத்திரி இருந்துவிட்டு வருவாள்
என்று பெரியம்மா சொன்னதை அன்பாக மறுத்தாள்.
அம்மாவுக்கு ஓய்வு தேவை பெரியம்மா. இன்னும் இரண்டு
நாள் போகட்டும் அழைத்து வருகிறேன்.
 அம்மாவுக்கு பிள்ளைக்கு மாகாளிக்கிழங்கு, சுண்டைக்காய்,
நார்த்தங்காய் எல்லாம் வாங்க வேண்டுமாம்.

ஸரிதான். எங்களுக்கெல்லாம் இல்லாத உடம்பு உனக்கு எப்படி வந்தது.
என்று கேட்ட அவர்களிடம் ,பத்மா பதில் சொன்னாள்.
ராஜாமணி மாமாவுக்கு இருந்ததாமே. பொன்னா பாட்டிக்கும் இருந்துதானே
அம்மியில் அரைத்துக் கொண்டிருந்த போதே
பகவான் கிட்டப் போனா என்று கேட்டாள்.

அதென்ன அதிசயமோ. வனஜாப் பாட்டி எதற்கும் அலுக்கவில்லை.
எல்லாம் சரியாகிடும் .நீங்க போயிட்டு வாங்கோ.
நாளைக்குப் பார்க்கலாம் என்று  ஈசிச்சேரில் சாய்ந்து கொண்டாள்
 வெள்ளி சாயந்திரம் பஸ்ஸில் வந்துவிட்டது நடராஜன் குடும்பம்.

கால்களைக் கழுவின அடுத்த நிமிடம் அம்மாவிடம் சென்ற அந்தக் குடும்பத்தை
மகிழ்ச்சியுடன் வரவேற்றால் வனஜாப் பாட்டி.
நால்வரும் அவளை கீழே விழுந்து நமஸ்கரித்தார்கள்.
அம்மா,பாட்டி  என்று குரல்கள் சூழ அதீதப் புன்னகையுடன்
கேட்டுக் கொண்டிருந்தார் அவர்.
உள்ளே வந்த மாப்பிள்ளை,பத்மா, அவள் குழந்தைகளைக்
கண்டு இன்னும் சத்தம் அதிகமானது.
பசங்களா வெளியில் போய் விளையாடுங்கள்
என்று விரட்டிவிட்டு,
அம்மா நீயும் கூடத்துக்கு வா. புதுசா எம்.எஸ் அம்மாவோட
 ரெகார்ட் வந்திருக்கு.
வா கேக்கலாம் என்று கைபிடித்து அழைத்து வந்தாள் பத்மா.
ஒரு வாரத்தில் அம்மாவுக்கு  என்ன ஆச்சு இப்படி இளைத்திருக்கிறாரே என்று
கலங்கினாள்
நீலா,  நடராஜனுக்கோ பிரமை பிடித்தால் போல ஆச்சு.
ஆனால் அம்மா மகிழ்ச்சியாக இருந்தாள்.
 தெளிவாக இருந்தாள்.
நடராஜனை அருகே வைத்துக் கொண்டு விவரங்களை விசாரித்தாள்.

நீலாவிடம் பெரிய குளத்தில் என்ன வம்பு. பக்கத்து 
அகத்து விசாலி, கடைசி அகத்து  ஐய்யங்கார் மாமி 
என்று ஒவ்வொன்றாக விசாரிக்க நிலமை தெளிந்தது.

இரவு சாப்பாட்டிற்குப் பிறகு, பத்மா
 தன் அண்ணாவிடம்
 அம்மாவின் இதயம் கொஞ்சம் பலவீனமாக  இருப்பதால் டாக்டர்
மருந்துகள் அதிகரித்திருப்பதாகச் சொன்னாள்.
அதில்தான் உடம்பு இளைத்திருப்பதாகவும் இன்னும்
 இரண்டு மாதங்களில் முன்னேற்றம் இருக்கும் என்றும் 
சொன்னாள்.
கிரஹித்துக் கொள்ள நடராஜன்,நீலாவுக்குக் கொஞ்சம்
நேரம் ஆச்சு.

பத்மாவின் கணவர் வெங்கட், அவனுடன் உட்கார்ந்து
அன்புடன் பேசினார்.
நீதான் அம்மா இங்கே இருக்க வேண்டிய அவசியத்தைச் சொல்லணும் பா.
இங்கே இருப்பதே தப்பு என்று யோசனை அவருக்கு என்றார்.

அம்மாவை அவள் அறையில் பார்த்த நடரஜனுக்கு,
அவள் முகத்தில் நிலவிய அமைதி தெம்பு கொடுத்தது.

அடுத்த நாள் அம்மாவை ,தங்கள் திட்டத்துக்குச் சம்மதிக்க
வைக்க அக்கா,தம்பிக்கு சுலபமாகிற்று.
இன்னும் இரண்டு மாதங்களில் தனக்கே மதுரைக்கு மாற்றலாக
சந்தர்ப்பம் வரும் என்றும்.
பங்குனி மாத முடிவில் 
குடும்பத்தோடு  பக்கத்திலேயே வீடு பார்த்துக் கொண்டு
வந்துவிடுவதாகச் சொன்னான்.
அம்மா இங்கயும் அங்கேயுமாக இருக்கலாம் 
என்று அம்மாவை அணைத்துக் கொண்டான்.
இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் கிளம்பும்போது
கூடவே வந்தது, அம்மா போட்டுக் கொடுத்த சுண்டைக்காய், மாகாளி,
நார்த்தங்காய் ஊறுகாய்கள்.
டேய் நீ வரும்போது, மாவடு 15 படி வாங்கிண்டு வந்துடு. எல்லோருக்கும் 
வேண்டும் இல்லையா என்ற அம்மாவைப் பார்த்து மனம்
பொங்கச் சிரித்தார்கள் நீலாவும் நடராஜனும். மங்களம் எங்கும் தங்கட்டும்..
   சுபம்.

Tuesday, August 18, 2026

முதுமை பாகம் 1


வல்லிசிம்ஹன்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
என் பாட்டியின் கதையைப் பதிக்க ஆசை. 
பெயர்களை மாற்றி ஊரை மாற்றி எழுதிவிட்டேன்:)


1963 பாட்டி;

அம்மா..... பாட்டி படிலயே ஈரம் செய்துட்டார்.
பெண்ணின் குரல் கேட்டு பின்புறம் விரைந்தாள் நீலா.

ரொம்ப அவசரம். படி இறங்கி கொல்லைப்பக்கம் போவதற்குள்
வந்துவிட்டது.
உனக்கு வேலை வைத்து விட்டேன் மா என்று சொல்வதற்குள்
மாமியாரின் கண்களில் நீர்.
சர்க்கரை ரத்தத்தில் சேர்ந்ததிலிருந்து 65 வயது வனஜாம்மாவுக்கு
பழக்க வழக்கங்கள் மாறின.
அதிக பசி, அதிக தாகம்,அடிக்கடி சிறு நீர் கழித்தல் என்று நீண்டது பட்டியல்.

எது கொடுத்தாலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டி இருந்தது.

குளித்து வெகு ஆசாரமாக ஸ்வாமிக்குப் பூஜை செய்பவர்.
கணவர் தவறியதும் இன்னும் தீவிரமாக எல்லா விரதங்களையும் கடை பிடித்தவருக்கு
இந்த சர்க்கரை மிக அதிர்ச்சியைக் கொடுத்தது.

ஒன்பது கஜம் கட்டிக் கொள்வதே அசௌகரியமாக இருந்ததால்
மாம்பழக்கட்டு என்று அவர் சொல்லும் ஆறுகஜப் புடவைக்கு மாற வேண்டி வந்தது.
எல்லா நேரமும் அசதி வந்து தொந்தரவு கொடுத்தது.

நல்ல கனத்த சரீரம் இப்போது பாரமாகியது.
மருமகள் நீலா, மாமியாரிடம் அதிக அளவு மரியாதை வைத்திருந்தது தான் அவரைப்
பல நேரங்களில் ஆறுதல் அடைய வைத்தது.
இன்சுலின் ஊசி போட வைத்தியர் ஏற்பாடு செய்த நர்சம்மா தினம் ஒரு வேளை
வந்து ,சகல விதத்திலும் கண்காணித்து மருந்தும் கொடுத்துப் போனார்.
இப்போது இன்னும் ஐந்து வருடங்கள் கழிந்த நிலையில்
உடல் மிகவும் பலவீனமாகிவிட்டது.
பேரன், பேத்தி பாட்டியுடன் தாயக்கட்டம், சோழி என்று விளையாடுவதில் பாதி
சோகம் மறைந்தாலும், தலைசுற்றலும், இந்த சிறு நீர் உபாதையும்
மனசை அலைக்கழித்தன.
நீலா வேளை தவறாமல் ,உணவும், நீர் மோரும்,உப்பு குறைவான
 பலகாரங்களும் கொடுத்து கவனித்துக் கொண்டாள்.

வியாதியின் தீவிரம் இப்பொழுது ,இந்த நிலமையில் வந்து நின்றது.

வனஜா பாட்டிக்கு இடம் மாறுதல் தேவைப்பட்டது.
மருமகள் நீலாவின் கவலையைக் குறைக்க எண்ணி

மகள் பத்மாவுடன் சிலகாலம் இருந்து விட்டு வரலாம் என்று நினைவு

 வனஜா பாட்டியின் மகள் பத்மா ,மதுரையில் இருந்தார்.
பெரியகுளத்திலிருந்து போய்.
அங்கிருக்கும் பெரிய டாக்டரிடம் பார்த்துக் கொள்ளவேண்டும்
என்று பாட்டிக்கு ஆசை.
நீலா நீயும் கொஞ்ச நாள் நிம்மதியா இரு. நான் மதுரைக்குப் போய் டாக்டர் கிட்டுவைப் பார்த்துவிட்டு,

மருந்து வகையறா வாங்கி வருகிறேன் என்று சொல்லிப் பார்த்தார்.
அவரது மகனுக்கு அம்மா அவ்வளவு தூரம் சென்று
 அவஸ்தைப் பட வேண்டாமே என்றிருந்தது.

பாட்டிக்கு இரு   சகோதரிகள் மதுரையில் இருந்தார்கள்.

மகளும் பெரிய இடத்தில் வாக்கப் பட்டிருந்தாள்.
வாகனம்,பங்களோ,வேலைக்காரர்கள் என்று வசதியான இடம்.
பத்மாவுக்கு.
கணவர் அங்கு போக்குவரத்து நிறுவனம் ஒன்றில்
உயர் பதவியில் இருந்தார்.
அவளுக்கும் இரு மகள்கள். அங்கே ஆங்கிலப் பள்ளியில்
படித்துவந்தார்கள்.
மதுரையில் அப்போது,பாடல் பள்ளிகளும், நடனப் பயிற்சிக் கூடங்களும்
 இருந்ததால் பொதுவாகவே கலகலப்பு மிகுந்த இடமாக இருந்தது
பத்மாவின் அகம்.

 மதுரை விஜயத்துக்கு முக்கிய காரணம்,
பாட்டிக்குத் தன் பாரம்பரிய வெள்ளிப் பாத்திரங்கள்
 நகைகள் புடவைகளை, மூன்று பேத்திகளுக்கும்
பிரித்துக் கொடுத்துவிடவேண்டும் என்பதே.
அதுவும் மகனுடைய பெண் சுந்தரியிடம் பாசம் அதிகம்.
ஏற்கனவே தன்னிடம் இருந்த காசுமாலையை அந்தப் பெண் கழுத்தில் அணிவித்து அழகு
பார்ப்பார்.
இன்னும் பவழ மாலை, கெம்புத் தோடு,காஞ்சிரக்காய் மாலை,
காசிமணிமாலை இரட்டைவடம் என்று
வரிசையாக இருந்த நகைகளை மகளுக்கும் மருமகளுக்கும்
 பிரித்துக் கொடுக்க எண்ணம்.
மகனிடம் சொல்லி மகளை வண்டி அனுப்ப சொன்னார்.
மனமில்லாமல் தங்கைக்குத் தொலை பேசினார் நடராஜன்.

அவளும் வார இறுதியில் வண்டியை அனுப்புவதாகவும்,
அம்மாவுக்குத் துணையாக பேத்தி பேரன் இருவரையும் அனுப்பும்படியும்
சொன்னாள்.
குழந்தைகளுக்குக் கார் பயணம், அத்தை வீட்டுக்குப் போவது
என்று இரட்டை சந்தோஷம்.. பயணத்திற்கு வேண்டிய உணவு,
தன் மாமியாருக்கான மருந்துகள்,நல்ல பட்டுப் புடவைகளாக
நான்கு, 
அவசரத்தேவைக்குத் துண்டுகள் என்று
தயார் செய்தாள் நீலா. மனம் முழுவதும் கவலை.
அம்மா ஒரு வாரத்தில் வந்துவிடுங்கள்
என்று கேட்டுக் கொண்டாள். ஓ. அப்படியே
செய்துடறேன். நீ கவலைப் படாதே. பத்மா எட்டூருக்குப் பாத்துப்பாள் என்று
கிளம்பியே விட்டார் வனஜாபாட்டி.

Wednesday, July 22, 2026

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன்

வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள்.

சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந்தைக் குரல் ராஜேஸ்வரி அம்மா குரல்களைக் கேட்டு
வளர்ந்த பொன்னான நேரங்கள் வானொலிக் காலங்கள்.


முதன் முதல் அவர் குரலை ''மலரோடு விளையாடும் தென்றலே
வாராய் என்ற பாட்டை 1958இல் கேட்டிருப்பேன் என்று
நினைவு. சுசீலாவின் குரலுக்கு ஒரு மாற்றுக் குரலாக
அமைந்தது. நானும் தோழியரும் அவ்வளவு 
சீக்கிரம் அவர் குரலுக்கு மாறவில்லை.
பிறகு வந்த சிங்கார வேலனே தேவா பாட்டு
எங்கள் மனதை எல்லாம் மாற்றிவிட்டது.

அப்படியே அந்த மயக்கம்  தொடர்ந்தது.
இருவரும் சேர்ந்து பாடிய பாடல்கள்
மிகப் பிரபலமாயின.





என்றும் நம் நினைவில் அழியாத குரலாக அவர் நிலைத்திருப்பார். 


Sunday, June 28, 2026

கதம்பம்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்

2011  Trip in Swiss.






அம்மாவின் குடும்பத்தினர்

பயணங்களில் பதிந்த படம்.


நிலா அது வானத்தின் மேலே .அது பரப்பும் அமைதி நம்மிடம்.
தோழியும் நானும்  இரண்டு வருடங்களுக்கு முன்.


கடவுள் எனும்   முதலாளி கண்டெடுத்த    தொழிலாளி. 2011


எதிர்சேவை 2026
 2024நவராத்திரி கலகலப்பு
 அப்புறம் என்ன ஆச்சு? இது நேற்று என்னுடன் 
பேச வந்திருந்த குட்டியின் வினா. என் லாப்டாப் பக்கத்துல உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தது இந்த ஐந்து வயசு
பெண்ணழகி. என்ன கதை சொல்லப் போறே பாட்டி  என்று கேட்டது.

கதை இல்லடா. பழைய படங்களைப் புதுசா
பண்ணிக் கொண்டிருக்கேன் என்றேன். ஏஐ  ஆ? என்று கேட்டதும் எனக்கு  கொஞ்சம்  பரபரப்பு:) 
அட உனக்கும் தெரியுமா என்றேன். 
ஓ! எங்க க்ளாஸ்ல மிஸ் சொல்வாங்க என்றது.

ஹ்ம்ம்ம். சரிதான்.  எனக்குப் படம் மட்டும் போடத்தெரியும். இன்னும் கத்துக்கலைன்னு சொன்னேன்:)

என்னைத் தன் பள்ளிக்கு அழைத்துச் செல்வதாக ப்ராமிஸ் செய்திருக்கு. பார்க்கலாம்:)))

Saturday, June 27, 2026

குடும்பம் 1997


வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமுடன் வாழ வேண்டும்.

1996இல்   அப்பாவின் முயற்சியால்  மகள் திருமணம் ஒரே நாளில்
தீர்மானம் ஆகி 
அடுத்த 15 நாட்களில்  நாளும் குறிக்கப் பட்டது.
தம்பிகள் இருவரும் மாவிலைத் தோரணம்   தயார் செய்கிறார்கள்
எப்போதுமே சிரித்த முகத்துடன் அம்மா.
ஆரத்தி எடுக்கும்  என் சின்ன மாமியார்
பந்தக்கால் நடப்படுகிறது
அம்மாவும் தம்பி  குடும்பம்  இன்னோரு உறவினரும்
ஒரு  சரித்திரம் படைத்தவர்கள் தம்பிகளும், அப்பாவும் அம்மாவும்.
வம்பு பேச மாட்டார்கள். நாள் முழுவதும் கடும் உழைப்பைக் கொடுக்க அஞ்சாதவர்கள். உண்மை மட்டுமே பேசுவது என்று அப்பா சொல்லிக் கொடுத்ததால் பல ஏணிகளில் ஏற முடியாமல்
விட்டவர்கள்.   அதனால் தான் என் கணவருடன் அத்தனை அன்பு பாராட்டினார்கள்.
மேல் கோட்டே   திரு நாராயணன், யோக நரசிம்ஹன் பயணம். தம்பிகளுக்கும், தந்தைக்கும்   அஞ்சலிகள்.

Sunday, June 21, 2026

தம்பிகள் பாசம்

வல்லிசிம்ஹன் 
எல்லோரும் வளமாகவாழ வேண்டும். 
படிக்காத மேதை. ரங்கன். 

என் தம்பி ரங்கன்படித்த பண்பான அன்பானவன்,
இந்தப் பாட்டில் வரும் அத்தனை
வரிகளுக்கும் சொந்த மானவன் . 
சிவாஜி பக்தன்.

ஒரு சிவாஜி சார் படத்தையும் பார்க்காமல் இருக்க மாட்டான். சினிமா, பாட்டு, நண்பர்கள் என்று அவனைச் சுற்றி பெரிய கூட்டமே இருக்கும். 

எல்லோருக்கும் நண்பன். என் கணவரிடம் அதீத பக்தி. எத்தனையோ. தருணங்களில் என்னுடன். தோள் கொடுத்து நிற்பான்.
தந்தை மறைந்த போது தம்பிகள் இருவரும்  என் கைகளைப் பற்றி. கலங்கியபோது நான் கலங்கமல் இருந்தது தான் அதிசயம். மகளின் திருமணம் பத்து நாட்களில். அம்மான் சீர் வந்து சேரும் என்று என் அம்மாவும் தம்பிகளும். சொல்லி அணைத்தார்கள்.

திருமணம் நடந்த அன்று இருவரும் அப்பாவின் படத்தை
மண்டபத்துக்கே கொண்டுவந்தார்கள்.
மணமக்களின் பின்னால் அவர் படம் வைக்கப் பட்டது.




தம்பிகள் இருவரும் என் இருபக்கத்திலும் நின்று நான் கலங்காமல்
பார்த்துக் கொண்டார்கள்.

பெரிய தம்பி கல்கத்தாவில்  பாட்டா கம்பெனியில் வேலை பார்க்கிறவன் சென்னை திரும்பும் போது .பெற்றோரைப் பார்த்து விட்டு அடுத்த நாள் திருச்சிக்கு வந்து விடுவான். கல்கத்தா ரசகுல்லா, இன்னும்  பாட்டா  செருப்புகள் கலகத்தாவிலிருந்து,  ஆடைகள் என்று கொண்டு வருவான் பெட்டி நிறைய!!எங்களுடன் ஒரு வாரம் தங்கி விட்டு
மனமில்லாமல் திரும்பி  செல்வான்.

சிங்கத்துக்கு வயிற்றில் ஏதோ பிரச்சினை அறுவை சிகித்சை
செய்ய வேண்டுமோ என்று பயந்த போது சின்னவன் ஓடி வந்து விட்டான்.  22 வயதுக்கு மிகப் பெரிய பொறுப்பு.
தன் அத்திம்பேருக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை 
என்று  தெரிந்த பிறகே திரும்பினான்.

இன்னும் நிறைய செய்திகள் உண்டு. மீண்டும் பார்க்கலாம். வாழ்க சகோதர பாசம்.


இரவும் வரும் பகலும் வரும் 2010இல் எழுதிய கதை:)

வல்லிசிம்ஹன் இரவும் வரும் பகலும் வரும்....1  கதை எழுதிய காலம் 2010 ஆகஸ்ட். தம்பி ஒருவர் வீட்டில் நடந்த கலகல சம்பவம்.  எல்லோரும் நல் வாழ்வு ப...