Friday, September 18, 2026

ஶ்ரீனிவாசா கோவிந்தா ஶ்ரீ வேங்கடேசா கோவிந்தா.

வல்லிசிம்ஹன்



எல்லோரும் வளமாக நலமாக வாழ வேண்டும்.

பெருமாளுக்கு நாராயணன், வெங்கடேஷ்வரா, பாலாஜி, ஸ்ரீஹரி என எத்தனையோ திருநாமங்கள் இருந்தாலும் அனைவரும் அதிகமாக சொல்லி அழைக்கும் திருநாமம் கோவிந்தா என்பது தான். ஆன்மீக நூல்களும் கோவிந்த நாமமே அனைத்து நாமங்களை விடவும் உயர்வான நாமம், புண்ணியம் தரும் நாமம் என சொல்கின்றன. 
கோவிந்தா என்றால் என்ன அர்த்தம், இதன் சிறப்பு என்ன, இதை சொல்லுவதால் நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்பது தெரியாமலேயே நம்மில் பலரும் கோவிந்த நாமத்தை சொல்லுவது உண்டு. ஆனால் இதன் அர்த்தம் புரிந்து, பக்தியுடன் சொன்னால் எத்தனை சிறப்புகள் நமக்கு கிடைக்கும்?

புரட்டாசி மாதத்தின் முதல் நாள் என்பது வைணவ பக்தர்களுக்கு மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளை நினைத்து, "கோவிந்தா! கோவிந்தா!" என்று பக்தியுடன் அழைப்பது நம் பாரம்பரியத்தில் ஒரு சிறப்பான வழிபாடாக உள்ளது. இந்த புனித நாளை இன்னும் அழகாக்குவது ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் சுப்ரபாதம்.


"அத்ர்யாதி ஸப்தரிஷய: ஸமுபாஸ்ய ஸந்த்யாம்..." என்ற இந்தப் பாடல், பக்தியின் ஆழமான அர்த்தத்தை நமக்குக் கற்றுத் தருகிறது. ஐதீக மரபின்படி, அத்ரி முனிவரை முதலாகக் கொண்ட ஏழு மகரிஷிகளும் தங்கள் காலைப் பிரார்த்தனையை நிறைவு செய்து, ஆகாய கங்கையிலிருந்து மனம் கவரும் மலர்களை எடுத்துக் கொண்டு, சேஷாத்ரி மலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் திருவடிகளை வழிபட வருகிறார்கள் என்பதே இந்த வரியின் அர்த்தம்.
  



இங்கு ஒரு பெரிய ஆன்மீக உண்மை மறைந்திருக்கிறது. ரிஷிகள் மலர்களை மட்டும் கொண்டு வரவில்லை. அவர்கள் கொண்டு வந்தது தூய மனம், பணிவு, சரணாகதி. அதனால்தான் இந்த சுப்ரபாதம், "பெருமாளே! உமக்கு இந்தப் பொழுது இனிய மங்களப் பொழுதாக அமையட்டும்" என்று பக்தியுடன் வணங்குகிறது.

புரட்டாசி நமக்குச் சொல்லும் செய்தி :
இந்த மாதத்தில் நாம் பெருமாளிடம் எண்ணற்ற வேண்டுதல்களை வைக்கலாம். ஆனால் அதைவிட உயர்ந்த பிரார்த்தனை ஒன்று இருக்கிறது.

"பெருமாளே... என் மனதை உமது திருவடிகளில் நிலைத்திருக்க அருள்வாயாக!"

என்ற வேண்டுதலே உண்மையான சரணாகதி என்று பக்தி மரபு எடுத்துரைக்கிறது. எத்தனை கவலைகள் வாழ்க்கையில் இருந்தாலும், எத்தனை எண்ணங்கள் மனதைச் சுற்றியிருந்தாலும் ஒரு கணம் கண்களை மூடி, ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் திருவடிகளை நினைத்து, "

கோவிந்தா... என் மனம் உன் திருவடிகளில் நிலைத்திருக்கட்டும்!" என்று மனமாரச் சொல்லுங்கள். புரட்டாசியின் முதல் நாளை பக்தியுடனும் நம்பிக்கையுடனும் தொடங்குவோம்.

ஏன் கோவிந்த நாமத்திற்கு இத்தனை சிறப்பு?
பெருமாளை அழைப்பதற்கு எத்தனையோ திருநாமங்கள் இருந்தாலும், கோவிந்தா என்ற நாமமே அவை அனைத்தையும் விட மேலானதாக சொல்லப்படுகிறது.இந்த நாமத்திற்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு? ஏன் அனைவரும் பெருமாளை "கோவிந்தா" என்று நாமத்தையே முதன்மையாக கொண்டு அழைக்கிறார்கள்? என்ற காரணம் பலருக்கும் தெரியாது.

கோவிந்தா என்னும் நாமம் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலும், ஆன்மீக பலனும் நிறைந்தது என்பதால் மிகச் சிறப்பானதாக சொல்லப்படுகிறது. இந்திரன் பகவான் கிருஷ்ணருக்குப் பட்டாபிஷேகம் செய்து 'கோவிந்தா' என்று அழைத்ததாக பாகவதம் மற்றும் ஹரிவம்சம் கூறுகிறது. 'கோ' என்றால் பசு, பூமி மற்றும் வாக்கு (வேதம்) என்று பொருள். இத்தகைய அனைத்தையும் காத்து அருள்பவர் கோவிந்தன் ஆவார். கலியுகத்தில் எளிமையாகக் கூறி இறைவனின் அருள் பெற உகந்த நாமம் இதுவென்று ஆன்மீக நூல்கள் கூறுகின்றன. ஆதி சங்கரர் தனது 'பஜ கோவிந்தம்' பாடலிலும், ஆண்டாள் 'குறையொன்றும் இல்லாத கோவிந்தா' என்றும் இந்த நாமத்தைப் போற்றியுள்ளார்.

கோவிந்தன் என்ற பெயர் இந்து சமயத் தோத்திரமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 187-வது, 539-வது பெயர்களாக வருகின்ற பெயர். "கோவிந்தா" என்பதற்கு "பசுக்களைப் பாதுகாப்பவர்" அல்லது "புலன்களுக்கு இன்பம் அளிப்பவர்" என்று பலபொருள்கள் உண்டு. "கோ", "இந்தா" எனப் பிரித்துப் பார்த்தால் "கோ" என்றால் பசு, "இந்தா" என்றால் வாங்கிக்கொள் என்றும் பொருள் கொள்ளலாம். கோவர்த்தன மலையைத் தூக்கி மக்களையும் பசுக்களையும் காப்பாற்றிய கண்ணனுக்கு தேவேந்திரன் சூட்டிய பெயர் இது.

கோவிந்தா என்றால் போனால் திரும்ப வராது என்னும் அர்த்தத்தையும் கொண்டது. அதாவது பூவுலகில் மனிதப்பிறவியாய் அவதரித்து அவதிப்படுபவன் இத்திருநாமத்தை விடாது பற்றிக் கொண்டால் மீண்டும் இப்பூமியில் பிறப்பெடுக்க மாட்டான் என்பதையே குறிக்கும். கோவிந்த நாமம் சொல்ல சொல்ல போன உயிர் மீண்டும் திரும்பாது என்பதே இதன் பொருள். அதாவது மறுபிறவியில்லாத நிலை என்று சொல்லலாம்.

Wednesday, September 16, 2026

பாட்டி.

வல்லிசிம்ஹன்


2007இல் எழுதிய பதிவு

பாட்டி சுட்ட தோசை
+++++++++++++++++++++++++++
தோசை என்றால் பிடிக்காத மனிதர்கள் உண்டா.?

அதுவும் ஒரு அம்மாவோ பாட்டியோ
ஒரு கரி அடுப்பு,
இல்லாட்டா ஒரு கெரசின் வாசனை அடிக்காத ஒரு ஸ்டவ் அடுப்பில் 
செங்கோட்டைக்கல்லைப் போட்டு
முதல்நாள் ஊறப்போட்டு அரைச்சு வைத்துப் புளித்த மாவில் ..அதாவது நாலு பங்கு புழுங்கலரிசி ஒரு பங்கு கறுப்பு உளுந்து போட்டு ,நல்லாக்
களைந்து பிறகு ,உரல்ல போட்டு ஊர்க்கதையெல்லாம் அவள் சொல்ல 
நான் கேட்க
நிதானமாக அரைத்து வழித்து
பெரிய கல்சட்டி ,அதுஇல்லைன்னா ஒரு பீங்கான் பாத்திரத்தில்  *(மங்கு) வைத்துப்
புளித்த மாவு.

சீனிம்மா , மாவு அரைக்கிற பாங்கும்,அடுப்பை நிதானமாக எரிய விட்டு வேலை செய்யும் அழகும்,
இலையில் ,கையால் தைத்த தையல் இலையில் சிறிது அளவு
சாப்பாடே போட்டுக் கொண்டு,கருவேப்பிலை கூட மிச்சம் வைக்காமல்
உண்ணும் விதமும் என்னைக் கண் கொட்டாமல் பார்க்க வைக்கும்.

அந்தத் தோசையின் ருசி ,வேறு இடத்தில் நான் கண்டதில்லை.
எங்க அம்மா வார்க்கும் தோசையிலும் வட்டம்,அளவு
 எல்லாம் வேறு விதமாக இருக்கும்.

சீனிம்மா வீட்டு சமையலறை ஓடு மேய்ந்தது.
கூரையில் வெளிச்சம் வர ஒரு சின்னக் கண்ணாடி.

ஒரு மேடை கட்டி அதில் தினம் சாணி போட்டு மெழுகுவதுபோல
மண்ணால் ஆன அடுப்பு.
கொடி அடுப்புனு கூட ஒன்று இருக்கும்.
பெரிய அடுப்பில் நாலு விறகு என்றால் அதில் வரும் சூட்டில் சாதம் கொதிக்கும் போதே, கொடியடுப்பில் பருப்பு ஒரு குண்டானில் வேகும்.

கீழே தரையில் மாமாக்கள் உட்கார்ந்து அன்று வேண்டிய
காய்கறிகளை அரிந்து கொடுக்க
ஒரு பத்து நபர்களுக்கான சாப்பாட்டை இரண்டு மணி நேரத்தில் சமைத்து விடுவார்.
இப்போது அந்தத் தோசை நாட்களை நினைத்து
உச்சுக் கொட்டுவதற்குக் காரணம்,இங்கே ஸ்விஸில்(இந்தப் பதிவு எழுதிய காலம்)
அரிசி,பருப்பு எல்லாம் சேர்ந்து நல்ல தோசை கிடைக்கவில்லை,
அதான் காரணம்.
உயர்ந்த வகை க்ரைண்டர்தான். அளவும் அதேதான்.
வார்ப்பதும் நானே.

அந்த மாவு அரைக்கும்போதெ அந்தப் பாட்டி அன்பும் பொறுமையும் கலந்து அரைத்தாளோ.
லீவுக்கு வந்திருக்கும் பேரன் பேத்திகள் வயிறு வாட விட்டு
ஊருக்கு அனுப்பக் கூடாது என்று
பொன்னிறத்தில் கொஞ்சம் கூடக் கருகாமல் உணவு தயாரித்தாளோ.

அவள் மனம் பூரிக்க நான்கு வார்த்தையாவது சொல்லி இருப்பேனா.
இல்லை நாங்கள் சாப்பிட்டு விளையாடுவதையே
பாராட்டாக எடுத்துக் கொண்டாளோ...
எதையும் யாரிடத்திலும் எதிர்பாராமல் கடமையும் நேர்மையுமே
எங்கள் எல்லோருக்கும் சொத்தாகக் கொடுத்தாள்.
அதனால்தான் எதிர்காலம் எதிர்கொள்வது சுலபமாக இருந்தது எங்களுக்கு.

Thursday, September 10, 2026

கோவிந்தா கோவிந்தா சரணம்.

வல்லிசிம்ஹன்


எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்.



திருப்பதியில் ஏன் 'கோவிந்தா... கோவிந்தா...' என்று விண்ணதிர முழங்குகிறார்கள் தெரியுமா? ஶ்ரீமகாலட்சுமி தேவியுடன் ஏற்பட்ட பிரிவின் காரணமாக, உலக நலனுக்காக வைகுண்டத்தை விட்டு பூமிக்கு வந்தார் ஸ்ரீமந்நாராயணன். அவர் மனிதர்களுக்கு அருள் புரிய ஸ்ரீநிவாசன் என்ற திருநாமத்துடன் திருமலையில் தங்கினார்.
அந்தப் புனித மண்ணில் வாழ்ந்த மிக உயர்ந்த ஞானிகளில் ஒருவர் அகத்திய மகரிஷி. அவரது ஆசிரமம் அமைதியின் அடையாளமாக இருந்தது.
அந்த ஆசிரமத்தின் இன்னொரு பெருமை... அங்கிருந்த கோசாலை.

அவற்றில் இருந்தவை சாதாரணப் பசுக்கள் அல்ல... காமதேனுவை ஒத்தவை. ஒருநாள்...அந்த ஆசிரமத்திற்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் வந்தார். "முனிவரே... எனக்கு ஒரு பசுவை தானமாக வழங்க முடியுமா?" அகத்தியர் ஒரு கணம் அமைதியாக நின்றார். வந்து இருப்பவர் சாதாரண மனிதர் அல்ல என்பதை அவர் அறிந்து இருந்தார். அவர் பரம்பொருளே என்பதை அவரது ஞானக் கண்கள் உணர்ந்திருந்தன. ஆனால்...தர்மம் என்பது அனைவருக்கும் ஒன்றே. எனவே அன்புடன் கைகளை கூப்பி "சுவாமி சாஸ்திரப்படி பிரம்மச்சாரிக்கு பசுதானம் வழங்கக் கூடாது. தர்மத்தை மீறி நான் செயல்பட முடியாது. என்னை மன்னிக்க வேண்டும்." அந்த பதிலில் பக்தியும் மரியாதையும் இருந்தது. பெருமாளும் புன்னகைத்தார். அவர் கோபப்படவில்லை. வருத்தப்படவில்லை. அமைதியாக அங்கு இருந்து புறப்பட்டுச் சென்றார். அவரது அமைதியைப் பார்த்த அகத்தியரின் மனம் நெகிழ்ந்தது. "நான் சரியானதைத்தான் செய்தேன்...

ஆனால்... இறைவனையே வெறுங்கையுடன் அனுப்பி விட்டேனே..." என்ற எண்ணம் அவரை நீண்ட நேரம் வாட்டியது. காலங்கள் நகர்ந்தன. பின்னர் ஸ்ரீநிவாசப் பெருமாள், பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொண்டார். 
அந்த தெய்வீகத் திருமணத்திற்குப் பிறகு, ஒரு நாள் தாயாருடன் அகத்தியர் ஆசிரமத்திற்கு மீண்டும் வந்தார்.

 இப்போது நான் கிரகஸ்தன்... இப்போது தர்மத்திற்கு எந்தத் தடையும் இல்லையே..." என்ற அமைதியான புன்னகை அவரது முகத்தில் தெரிந்தது.

அந்த நேரத்தில் அகத்தியர் ஆசிரமத்தில் இல்லை. சீடர்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் பெருமாளை மரியாதையுடன் வரவேற்றனர்.

 ஆனால், முனிவர் இல்லாததால் தாங்களாக எந்த முடிவையும் எடுக்கத் தயங்கினர். சிறிது நேரம் காத்து இருந்த பெருமாள், "முனிவரிடம் என் வருகையைச் சொல்லுங்கள்" என்று கூறிவிட்டு, பத்மாவதி தாயாருடன் அங்கிருந்து புறப்பட்டார்.

_தவத்தை முடித்து விட்டு தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார் அகத்திய மகரிஷி. வாசலிலேயே அனைத்து சீடர்களும் கைகளை கூப்பி நின்றனர்.

அவர்களின் முகத்தில் ஒரு பதற்றம். "என்ன நடந்தது?" என்று அமைதியாகக் கேட்டார் முனிவர்.

ஒரு சீடன் பணிவுடன் கூறினான்.
"குருவே... இன்று ஸ்ரீநிவாசப் பெருமாளும், பத்மாவதி தாயாரும் தங்களைத் தரிசிக்க வந்திருந்தார்கள்.

 தாங்கள் இல்லாததால் எங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது போனது. அவர்கள் தங்களைப் பற்றி விசாரித்துவிட்டு இப்போது தான் திரும்பிச் சென்றார்கள்."

அந்த வார்த்தைகள் அகத்தியரின் இதயத்தில் மின்னலாய் விழுந்தன. ஒரு கணம் அவர் பேசவே முடியவில்லை. அவரது கண்கள் கலங்கின. "என்ன செய்துவிட்டேன் நான்..." என்று தனக்குள் வருந்தினார்.

முதல் முறை தர்மத்தை காப்பாற்ற வேண்டி பெருமாளுக்கு பசுவை அளிக்கவில்லை. இரண்டாவது முறை..அவரே நேரில் வந்த போதும் தன்னைச் சந்திக்க முடியாமல் திரும்பிச் சென்று விட்டார். அவரது மனம் குற்ற உணர்ச்சியால் கனத்தது. அந்த நொடியில் ஒரு முடிவை எடுத்தார் முனிவர். "இனி ஒரு கணம் கூட தாமதிக்கக் கூடாது." ஆசிரமத்தில் இருந்த சிறந்த பசுவை அழைத்து வருமாறு சீடர்களிடம் கூறினார். அது சாதாரண பசு அல்ல, காமதேனுவிற்கு இணையான புனிதப் பசுவாகப் போற்றப் பட்டது. அதன் கழுத்தில் புதிய மாலை அணிவிக்கப்பட்டது. அன்புடன் அதன் தலையைத் தடவிய அகத்தியர் கூறினார். "இன்று நீ செல்லும் இடம் சாதாரணமல்ல... உலகைக் காக்கும் பரம்பொருளின் திருக்கரங்களில் நீ சேரப் போகிறாய்." சீடர்களும் உணர்ச்சியுடன் நின்றனர். "குருவே... நாம் பெருமாளை அடைய முடியுமா?" அகத்தியர் புன்னகைத்தார். "இறைவனைத் தேடி ஒரு அடி நடந்தால்... அவர் ஆயிரம் அடிகள் நம்மை நோக்கி வருவார். வாருங்கள்!" அனைவரும் உடனே புறப்பட்டனர்.

 திருமலையின் இயற்கை அற்புதமாக இருந்தது. சிறிது தூரத்தில், பத்மாவதி தாயாருடன் அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்தார் ஸ்ரீநிவாசப் பெருமாள்."சுவாமி...! சுவாமி...!" இது அகத்தியரின் குரல். கையில் பசுவின் கயிறு.
அவர் வேகமாக ஓடிக்கொண்டே வந்தார்.

"கோவு... இந்தா..." பெருமாளை அடைந்துவிட வேண்டும் என்ற ஆவலில் அகத்தியர் மீண்டும் மீண்டும் குரல் கொடுத்தார். சுவாமி... கோவு இந்தா..."
தெலுங்கில்... "கோவு" என்றால் பசு.

"இந்தா" என்றால் "எடுத்துக் கொள்ளுங்கள்" என்று பொருள்." 

அகத்தியர் மூச்சு இறைக்க தொடர்ந்து அழைத்தார். 'கோவு... இந்தா" "கோவு... இந்தா..." "கோவு... இந்தா...
"மலைகளில் எதிரொலித்த அந்த இரண்டு சொற்கள்...மெல்ல...ஒரே நாமமாக உருமாறின.

 கோவிந்தா 
என்ற அந்த ஒலி மலையைத் தாண்டி விண்ணையும் எட்டியது.

திரும்பிப் பார்த்தார் பெருமாள். அகத்தியரின் உண்மையான பக்தியையும், தர்மத்தின் மீதான நேர்மையையும் பார்த்த பெருமாள் மெதுவாக நின்றார். பத்மாவதி தாயாரும் புன்னகையுடன் திரும்பிப் பார்த்தார். மூச்சு திணறியபடி வந்து நின்ற அகத்தியர், பெருமாளின் திருவடிகளில் விழுந்தார். "சுவாமி... என்னை மன்னித்து விடுங்கள், உலகத்தையே காக்கும் உங்களை ஒரு பசுவிற்காக இரண்டு முறை காத்திருக்க வைத்துவிட்டேன்,

இன்று இந்தப் பசுவை என் உயிராக நினைத்து ஏற்றுக்கொள்ள வேண்டும்." அவரது குரல் நடுங்கியது. கண்களில் கண்ணீர் வழிந்தது. கருணை வடிவான ஸ்ரீநிவாசப்பெருமாள் உடனே அகத்தியரை எழுப்பினார். அவரது தோளில் கை வைத்து மெதுவாகச் சொன்னார். "முனிவரே...

நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை, தர்மத்தை காத்தீர்கள்,

 அதனால்தான் இன்று உங்கள் பக்தி உலகிற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது." அகத்தியர் தலை குனிந்தார். பின்னர் காமதேனுவைப் போன்ற அந்தப் புனிதப் பசுவை பெருமாளிடம் தானமாக அளித்தார்.

 பெருமாளும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டார். அந்தக் கணத்தில் தேவர்களே மலர்மழை பொழிந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

இனி என்னை கோவிந்தா என்றே அழையுங்கள், நீங்கள் என்னை அழைத்த இந்த நாமம் இனி கலியுகத்தின் மிகப் புனிதமான நாமமாக விளங்கும்

"'கோவிந்தா' என்று யார் மனமுருகி அழைக்கிறார் களோ..." அவர்களின் அழைப்பை நான் உடனே ஏற்றுக் கொள்வேன், அவர்களின் நம்பிக்கையை ஒருபோதும் கைவிட மாட்டேன்." அந்த அருள்வாக்கே... இன்று வரை கோடிக் கணக்கான பக்தர்களின் உதடுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
 அந்த நாள் முதல்... திருமலைக்கு வரும் ஒவ்வொரு பக்தரும்... பெருமாளை தரிசிப்பதற்கு முன்பே... *கோவிந்தா நாமத்தை உச்சரிக்கத் தொடங்கினர்.

ஓம் நமோ நாராயணாய

Saturday, September 05, 2026

முதுமையின் இரவும் பகலும் 4


வல்லிசிம்ஹன்

எல்லோரும் இனிதே வாழ இறைவன் வழி வகுப்பான்.
அனைவருக்கும்


கலியுகத்திலும் கண்ணன் நாமம் பாடக் கவலைகள்
தீரும்
கண்ணன் பிறந்து சிறப்பித்த நாள் இன்று.
கண்ணன் இருக்கக் கவலை ஏன்...
ஆவணி ரோகிணி அஷ்டமி சிறக்க வந்த எம்பிரான்
அனைவரையும்  சிறப்புறக் காப்பான்.

பழைய பதிவொன்றைத் தூசி தட்டி இன்னும் சுவை
கூட்டிப் பதிவிடுகிறேன். முன்கதை சுருக்கம், 
அறுபதை எட்டிய மனைவியை  அலுப்பிலிருந்து
மீட்கக் கணவன் மேற்கொள்ளும் அன்பு முயற்சி.

கலங்கியவளை எப்படி மீட்பது என்று யோசித்த
ராகவனுக்குத் தோன்றியது புது எண்ணம்.
வண்டியை ஒரு லாங் டிரைவ்க்கு உபயோகப்படுத்தினால்
என்ன ?மனசு தெளிவாகும் . புதுக் காற்று  
அனுபவிக்க ஜானகியும் தெளிவடைவாள்.

தனக்கே உற்சாகம் பிறப்பதை உணர்ந்தான். இந்த 
66 வயதில் நமக்காக  என்ன செய்திருக்கிறோம்?
எப்போது பார்த்தாலும் பயணம், அலுவலகம், அன்னியர்களுடன் 
பேச்சு, மீட்டிங், விராலி மலை  பாக்டரி   ஸ்ஸ்ஸ்ஸப்பா. போதும் இந்த அலைச்சல்.

மனம் பரபரக்க அடுத்த நிமிடம் கரங்கள் செயல்பட தன்
உதவியாளரை அழைத்து அன்றைய
ஏற்பாடுகளை ரத்து செய்தான்.

இன்னும்  ஒரு மாதத்துக்குத் தான் விடுமுறையில் இருப்பதாகவும்
குடும்பத்தில்  ஒரு எமெர்ஜென்சி,,, உடனே கவனிக்க வேண்டும்
என்று  அவரிடம் சொல்ல
அவர் திகைத்தாலும்  தன் ''பாஸ்'' சொல்வதைச் செய்ய ஆரம்பித்தார்.

ராகவனின் திட்டம் பெரிதாக இருந்தது.
கீழே அந்த லிஸ்ட்.
1  மதுரைக்கு தனக்கும் மனைவிக்குமான விமான பயணம்.
2, அங்கே  டி வி எஸ் விருந்தினர் மாளிகையில்
ஒரு மாதம் தங்கி சுற்றி இருக்கும் தலங்களுக்கும்
கொடைக்கானலுக்கும் சென்று வர நல்லதொரு
வண்டி  +ஓட்டுனர் மாயாண்டி.
3,அழகர் மலை
திண்டுக்கல்,வைகை அணைக்கட்டு
கோடைக்கானல் விடுதி.
4,சமையலுக்கு ஆள், தூய்மைப்படுத்த ஒருவர்.

திகைத்தார் உதவியாளர் சீனு.
அத்துடன் நிற்கவில்லை ராகவன். 
''உனக்கும் விடுமுறை தேவை. நீயும் உன்
பிறந்த ஊர் கும்பகோனத்துக்கு சென்று

நிம்மதியாக இருந்து  வா.''
நம் கம்பெனி எங்கயும் போகாது. சரியான
ஆளை நியமித்துவிட்டு நீயும் கிளம்பு என்றார்.








Thursday, August 27, 2026

முதுமையின் புது ஆரம்பம்..3 இரவும்பகலும்

வல்லிசிம்ஹன்
 இரவும் பகலும் இவை எல்லாம் நலமே.

இந்தக் கதையின் ஆதாரமாக இன்னோரு கதை உண்டு.

1976இல் என் தாய்க்கு 60 பூர்த்தியானது. இந்த நிகழ்வுக்கு
ஒருவாரம் முன்னால் தான் நாங்கள் சேலத்திலிருந்து
சென்னைக்கு மாற்றலாகி வந்தோம்.
திருமணமாகி உடனே புதுக்கோட்டை சேலம் என்று சென்று விட்டோம்.

அதனால் குடும்ப நிலவரம் எல்லாம் கொஞ்சம் தடுமாற்றம் தான்.
பாட்டி வேறு வெகு கண்டிப்பாக இருப்பார்.
என் சகோதரிகள் அடிக்கடி வந்து போவார்கள்.

ஜானகிக்கு ஓயாத உழைப்புதான்.
அம்மாவின் அறுபதாவது பிறந்த நாளுக்கு சகோதரிகள்
புடவைகள் வாங்கி வந்து இனிப்புகள் செய்து
கொடுத்து மகிழ்ந்தபோது தான், பாட்டி ஒரு சொல்லம்பு தொடுத்தார்.

''ஏன் ஜானா உன் பெற்றோர் வந்திருக்கலாமே. இங்கே மஹாபலிபுரத்திலிருந்து
சென்னை வந்து சம்பந்தியை வாழ்த்துவதில் 
என்ன சிரமம் இருக்கு ?'' என்று கேட்க
ஜானகி, ''பாட்டி ...அவர்களுக்கு அம்மா பிறந்த நாள் பற்றித் தெரியாது.
அப்பாவுக்கும் இப்போ உடல் நலம் சரியில்லை.

அடுத்தவாரம் பரிசோதனை செய்து கொள்ள வருவார்கள்.
ஜானுவின் அப்பாவுக்கு அல்சர் பிரச்சினை இருந்ததால்
அவர் அந்த வருடம் ரிட்டயராக நினைத்திருந்தார்.
வார நடுவில் லீவு எடுக்க முடியாது.

அப்பாவை நினைத்தால் ஜானுவின் கண்களில் நீர் கோர்த்துக் கொள்ளும்.

மாமியாரின்  உறவுகள் வந்து போனபிறகு, வீட்டுக்கு அருகில் உள்ள தொலைபேசி பூத்துக்குச் சென்று அப்பாவுக்கு
டிரன்க் கால் பேசினாள். ''அப்பா எங்க மாமியாருக்கு
இன்னிக்கு அறுபது நிறைகிறது. நீயும் அம்மாவும், போனில்

வாழ்த்துகள் சொல்லுங்கள்'' என்று சுருக்கமாகப் பேசிவிட்டு, மறக்காமல்  அதிகப்படி பாக்கெட் பாலையும்
வாங்கி வந்தாள். அடுத்த சாய் (டீ)செஷன் ஆரம்பிக்கணுமே!!


அடுத்த நாள் வெள்ளியன்று காலை 10 மணிக்கு  திரு நாராயணனும் ஜெயலக்‌ஷ்மியும் தட்டு நிறைய மல்லிகை, திரட்டிப்பால்,என் தாயாருக்கு அப்போது பிரபலமாக இருந்த தேவேந்திரா புடவை ஒன்று.  உமாராணி என்று அப்போது
அதற்குப் பெயர்  எங்கள் வீட்டுக்கு ஆஜரானார்கள்.

''எனக்கு உங்களுக்கு 60 நிறைவது தெரியாது..தாமதாக வருகிறோம்'' என்று மன்னிப்புக் கேட்டபடி பாட்டி 
பாதங்களிலும்  என் அம்மா பாதங்களிலும் 
விழுந்து வணங்கினார்கள்.

இந்த சம்பவம் 1976இல்.
இப்போது நினைத்தாலும் மனம்  சங்கடப் படுகிறது.
மீண்டும் பார்க்கலாம்.

ஜானகி ராகவன் கதை என் வாழ்க்கையிலும், தம்பிகள்

வாழ்க்கையிலும் கலந்து கட்டி எழுதப் படுகிறது.
தம்பியின் பெயர் ராகவன்.  அவன் பெயரில் அவதாரம் எடுப்பவர் எங்கள் சிம்மம் ஆகிய நரசிம்ஹன்.
இங்கு வரும் புக்ககம் என்னுடையது:) வாழ்க வளமுடன்.







எனக்கும் என் அம்மாவுக்கும் என் மனைவிக்கும் 
இருந்த பந்தம் வினோதமானது:)






Tuesday, August 25, 2026

இரவும் வரும் பகலும் வரும் 2010இல் எழுதிய கதை:)




வல்லிசிம்ஹன்

இரவும் வரும் பகலும் வரும்....1 

கதை எழுதிய காலம் 2010 ஆகஸ்ட்.

தம்பி ஒருவர் வீட்டில் நடந்த கலகல சம்பவம். 
எல்லோரும் நல் வாழ்வு பெற இறைவன் அருளட்டும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++கதை ஆரம்பம்.

***********************
''வாழ்வென்றால் சிரித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று ஏதாவது சட்டம் போட்டு இருக்கா என்ன? எனக்கு கோபம்தான். அதைக் காண்பிக்க எனக்கு ரைட்டு இருக்காக்கும் ''

முணுமுணுக்கும் ஜானு என்கிற ஜானகியை அலுப்போடு பார்த்தேன்.

''பின்ன என்ன முணுக்'னால் பிறந்த வீட்டுக்கு ஓடறது எந்த விதத்தில நியாயம்?
புருஷன் பொண்டாட்டிக்குள்ள இதுவரை சண்டையே வந்தது கிடையாதா .?


அப்படிப் போவதானால் நானே நானூறு தடவை காரைக்குடிக்கு ஓடி இருக்கணும்.'"

'எதுடி, அப்ப எல்லாம் நீ பொட்டி கட்டரத்துக்குள்ள ,சின்னத்துக்கு சளி பிடிச்சுக்கிம்,
பெரிசுக்கு வயத்தவலி வந்துடும்.
சரி நாளைக்குப் போலாம்னு பொத்துன்னு உட்கார்ந்துடுவே.
கார்த்தால உனக்கு கோவம் வந்தது கூட நினைவில்லாம, இட்லி வேக வைத்துண்டு இருப்பன்னுதும் ஜானுவுக்கே சிரிப்பு வந்தது. கூடவே சுய பச்சாத்தாபமும் சேர்ந்து கொண்டது.

அடச்சே கோவிச்சுக்கரத்துக்கூட நேரமில்லாமல் என்ன தான் குப்பை கொட்டினேனோ'' என்றாள்.
சரி 45 வருஷம் கழிச்சு இப்ப வருத்தப் படாதே. எதுக்காக இவ்வளவு கோபம்.
சனி ஞாயிறு வந்தால் நடக்கிற கூத்துதானே.?

''வாராவாரம் நடக்கணும்னு எங்கயாவது காலட்சேபத்தில கேட்டுண்டு வந்தீர்களா,
அதென்ன பழக்கம் ?
நாளைக்கு எனக்கு அறுபது வயசாகப் போகிறதுன்னு தெரியாதா.
பிரமாதமா பட்டும், வைர நெக்லஸும் கேட்டேனா.

எல்லாரும் ஒண்ணா இங்க இருக்கற மதுராந்தகத்துக்குப் போய் வரலாம்னு தானே

சொன்னேன்.
புளிக்காய்ச்சல் கூட காய்ச்சி வச்சுட்டேன். இட்லிமாவு பந்து பந்தா உருட்டி
வச்ச மாதிரி அரைச்சு வைத்தாச்சு. ராத்திரி சாதம் வடிச்சு, தயிர் சாதத்துக்கு

ரெடி செய்யணும். அவ்வளவுதான்.

இப்ப இந்த வெள்ளிக்கிழமை சாயந்திரம் ரெண்டு பையன்களுக்கும்
காரைக் கிளப்பிக் கொண்டு மாமனார் மாமியாரை
அழைத்துக் கொண்டு அந்த ரிசார்ட் ,இந்த ரிசார்ட்னு போகணுமா.?""
குமுறியவளை அநுதாபத்தோடு பார்ப்பதைத் தவிர என்னால் ஒன்றும் முடியவில்லை.
அவளது ஆற்றாமைக்கும் காரணம் உண்டு.

இரண்டு பிள்ளைகளக் கொடுத்த கடவுள் இன்னோரு பெண்ணையும்
கொடுத்திருக்கலாம்.
பெற்றோர்கள் நாலு பெற்றுக் கொண்டால் , எங்கள் காலத்தில் இரண்டு பெற்றுக் கொள்வது தான் அளவாக இருந்தது.!!
ஜானுவின் உடல் நிலையும் ஒத்து வரவில்லை. அதனால் இரண்டோடு

போதும் என்று நிறுத்தி ஆச்சு .
 August 17, 2010  
Tuesday, August 17, 2010
இரவும் வரும் பகலும் வரும்---2
இத்தனைக்கும் உங்க அம்மாவோட அறுபதுக்கு சம்பந்திகள் வரலைன்னு ஒரு இஷ்யூ ஆச்சே அதுமாதிரி ஏதாவது கேட்டேனா'' என்று மீண்டும் புலம்பலை ஆரம்பித்தவளைப் பார்த்து எனக்குக் கோபம் வந்தது.


''அம்மா அம்மானு நீயும் தான் எங்க அம்மாகிட்டப் பாசமாயிருந்த. அவளும் பெருமாள் கிட்டப் போய் 15 வருஷம் ஆச்சு . இப்ப என்னத்துக்கு அவளை இழுக்கிற??



'அப்ப எல்லாரும்(என் அக்கா,தங்கை,பாட்டி) சேர்ந்து நான் அன்னிக்கு சாயந்திரம் காரைக்குடிக்குப் போறேன்னூ

சொன்னதுக்கு'' ..........,சரி வேண்டாம் நான் ஒண்ணும் சொல்லலை. விடுங்கோ.

என்னைக்கு ஏழை சொல் அம்பலம் ஏறியிருக்கு.!

இவள் ஏழையா:)

ஒரு தனியார் கம்பனியின் தலைமை அதிகாரியின் பெண்டாட்டி. வாழ்க்கைத்துணை.

அண்ணா நகர்லியே முதலாக வீடு வாங்கின பெருமை. ஊஞ்சலென்ன, போர்ட்டிகோ என்ன,

தோட்டம் என்ன. மாடு ஒன்றுதான் இல்லை.

அலுக்காமல் என் உயர்வுக்கு துணை இருந்தவள் தான். எத்தனை வெளிநாடுகள்

போய்வந்தாலும் அலுக்காமல் துணிமணிகள் ,மருந்துகள் மொத்தமும்

அழகாக அன்போடு எடுத்து வைப்பாள்.

'எங்க இரண்டு பேருக்கும் இதுதான் சரிப்படும். அவரோட ஸ்டைலே வேற. நானே வேற.

கூடவே இருந்தால் தகறார் வரச் சந்தர்ப்பங்கள் அதிகம்''னு தோழியிடம் 
வேற சொல்லுவாள்..

இதோ ரிடயரும் ஆகி   இரண்டு வருஷங்கள் போயாச்சு.
அதிலயும் அவளுக்கு ஆதங்கம்.
''ஊர்ல  உலகத்தில  ரிடயராவதற்கும் ,எங்க வீட்ல ரிடயராகரதுக்கும் வித்யாசம் உண்டு  தெரியுமோ   விமலா.?
இவர் இன்னமும் ஆஃபீஸ் போகிறார்..என்னன்னால்  கன்சல்டண்டாம் !!
நினைத்த பொது போகலாம் வரலாம் .மீட்டிங் இருக்கிற அன்னிக்கு முழு நாள்  என்று யாரிடமோ  அளந்து கொண்டிருந்தாள்.
என்  கதையை யார்கிட்டயோ சொல்றியே 'என்று கேட்டால்  '' நிஜத்தைத் தானே சொல்றேன்.
நீங்க ரிடையரானால்'' என்ன கோவிலுக்குப் போகணும், எந்த பாக்கேஜ் டூர்  எடுக்கனும்னு கனவு கண்டு கொன்டிருந்தால்,'' நீங்கள்  இப்படி செய்து இருக்கிறீர்கள்.''
என்கிறாள் .

''நான் வீட்டிலிருந்தால்  உனக்குத் தான்  சிரமம்.
இப்பப் பாரு   சுலபமா கார்ந்ப்லேக்ஸ்   சாப்பிட்டு விட்டு  ,மதியம் அலுவலக காண்டீனில்  பத்திய சாப்பாட்டை  முடித்துக் கொள்கிறேன்.
சாயந்திரம் நானும் நீயும் பேரக்குழந்தைகளும் பார்க் போகிறோம்.
உனக்கு நடையாச்சு.எனக்கு  குழந்தைகளோடு இருக்கும் சந்தோஷம்.
இதில கஷ்டப்பட என்ன இருக்கு ?''

''அதானே!!   நான் செய்ததையே  செய்துண்டு இருக்கேன்.  ஒரு மாற்றமும்
இல்லை. நாப்பைந்து  வருஷம்  இப்படியே போயாச்சு.
செக்கு மாடு மாதிரி  சுத்தி வந்து.''....முடிக்காமல் கண்கலங்குவது தெரிந்தது .

என்னையும் பட்டம் படிக்க விட்டிருந்தால் , வேலைக்குப் போயிருக்கலாம்.
இப்ப  இந்தப் பெண்கள் ,
பறக்கிற மாதிரி  நானும் ஏதாவது சாதிச்சிருப்பேன்.''

''அதுக்குப்புறம்  எனக்கும் என் வயசுக்கு ஏத்த தோழிகள், எனக்கு என்று ஒரு
குரூப், சிரிக்க,பேச,அழ எல்லாத்துக்கும்தான். ''

எனக்குப் புரியலை  ஜானு. இப்ப இந்த வாழ்வுல என்ன குறை ?
நீ சந்தோஷமாத் தான  இருக்க.
இந்த அறுபதாவது பிறந்த நாளுக்கு மட்டும் ,  உனக்கு திடீர்னு
என்ன ஆச்சு.
பிள்ளைகள் உன்னிடம் அன்பாகத் தான் இருக்கிறார்கள்.
பெரியவன்  நுங்கம்பாக்கம்  ஸ்ரீநிவாசர்  கோவிலில்  சர்க்கரைப் பொங்கல் சொல்லி இருக்கிறான். சின்னவன்   புரசைவாக்கம்  பிள்ளையார் கோவிலில் நூத்தி எட்டு கொழுக்கட்டைக்கு சொல்லி இருக்கிறான்.
நாளை சாயந்திரம் வந்துவிடுவார்கள்.
நேத்திக்கு  நடந்த  சமாசாரத்துக்கு இன்னிக்கு வருத்தப் படாதே.!  என்றேன்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
at August 17, 2010  

Thursday, August 20, 2026

முதுமையில் வேண்டும் இனிமை

வல்லிசிம்ஹன்

முதுமை சிறப்பு .3
Vallisimhan
எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும்.
  வந்து இரண்டு நாட்களுக்குப் பேச நிறைய விஷயங்கள் இருந்தன அம்மாவுக்கும் பெண்ணுக்கும்.
பாட்டியோட வண்டியில் வந்த குழந்தைகள் , திங்கள் காலை
வீடு திரும்பினர்.
அத்தையின் வீட்டை விட்டுப் போகவே மனமில்லை.
தோட்டம், அங்கிருக்கிற மாமரம், ,அதில் அத்திம்பேர் தொங்க விட்டிருந்த
ஊஞ்சல்,
நல்ல நட்பு காட்டிய அத்தையின் பெண்கள் எல்லாமே
குழந்தைகளுக்கு  வெகு இனிமையாக இருந்தன.
வசதியான வீடும்,அலங்காரமும், எங்கும் வீசிய இனிமையான வாசம்

எல்லாம் பிடித்து இருந்தன. அடுத்த ஞாயிறு அவர்கள் பெரிய குளம் வருவதாகக் கூறியதும் இவர்கள் கிளம்பினர்.
அடுத்த நாள் மருத்துவரோடு சந்திப்பு.
 வனஜாபாட்டியை அன்புடன் வரவேற்றவர் எல்லாவற்றையும் விசாரித்துத் தெரிந்து கொண்டார்.
இன்னும்  இதய பரிசோதனை செய்ய வேண்டும் அம்மா.
நீரிழிவு நோயால் வரும் பாதிப்புகளைச் சொன்னதும் பாட்டிக்கு
வருத்தம் அதிகரித்தது.

டாக்டர் ,பாட்டியின் அண்ணா 51 வயதிலியே இருதய நோயில் இறைவனடி
சேர்ந்ததை நினைவுக்கு  கொண்டு வந்தார்.
தனக்கு மருந்துகள் கொடுக்கும் படியும்,பரிசோதனை எல்லாம் வேண்டாம் என்றும் சொல்லிவிட்டார்
வனஜா பாட்டி.
தன் மருமகள் நன்றாகப் பார்த்துக் கொள்வதாகவும்.
உணவுக் கட்டுப்பாடில் இருப்பதாகவும், அடிக்கடி நீர் கழிப்பதுதான் வேதனையாக இருப்பதாகவும்
சொன்னார்.

இங்கு மகள் வீட்டில் பாட்டிக்கு அந்த வசதிகள் இருப்பதை
டாக்டர் அறிவார். இங்கேயே இருந்துவிடுங்கள்.
அவர்கள் உங்களை வாராவாரம் வந்து பார்க்கலாமே என்று யோசனை
சொன்னார்.
மகனை விட்டுக் கொடுக்க விரும்பாத பாட்டிம்மா
யோசனை செய்வதாகச் சொன்னார்.
கூட வந்த பத்மாவிடம்  விஷயங்களைக் கண்டிப்பாகச் சொன்னார்.
வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கட்டாயத்தையும் சொன்னார்.
பத்மாவைப் பயம் சூழ்ந்தது.
வீடு திரும்பும்போது களைப்புடன் சீட்டில் சாய்ந்து
உறங்கிவிட்ட அம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.
வீடு வந்ததும் பழைய உற்சாகத்துடன்
தன் அறைக்குச் சென்று பெட்டியைத் திறந்தார்  பாட்டி.
அம்மா அவசரம் இல்லை .நீ கொஞ்ச நேரம் படுத்துக் கொள்.
என்ற பத்மாவிடம், சும்மா இருடி,
இதுக்காகத்தான் வந்தேன்.
நீ வேண்டாம்னு சொல்லாதே.
உன் கணவர் நன்றாக எல்லாம் செய்கிறார். இருந்தாலும் பாட்டியின் ஆசீர்வாதமாக
உன் குழந்தைகளுக்கு நான் கொடுக்க வேண்டும்.
இந்த காசிமணி மாலை இரட்டை வடம், 20 பவுன் தேறும்.
சிகப்பு அட்டிகை நீலாவுக்குக் கொடுக்கிறேன்.
இந்தக் கெம்பு ராக்கொடியும், தோடுகளும்
புது மோஸ்தரில்  செய்து உன் பெண்களுக்குக் கொடு.
அப்பாவுக்கு  மலேயாவிலிருந்து  வைரம் கொண்டுவந்து கொடுத்தார்
ஒரு நண்பர். அதான் சாமினாதன்.  அவர்தான்.

அதை இரண்டு பதக்கமாக்கி வைத்திருக்கிறேன்.
உனக்கும் ,நீலாவுக்கும் ஒவ்வொன்று.

ஒரு மோதிரம் பேரனுக்கு செய்து வைத்துவிட்டேன்.
அப்பாவுக்கும் இதெல்லாம் தெரியும்.
என்று சொல்லி ஓய்ந்தாள்.
சரிம்மா. இப்ப சாப்பிட வா. காரமில்லாத கூட்டும், வேக வைத்த கொண்டக்கடலை சுண்டலும் கீரையும் இருக்கிறது.
உனக்குப் பிடித்ததைச் சாப்பிடு.
உன் பாத்ரூம் சௌகர்யமா இருக்கா.
ஆமாம் பத்மா. படுக்கும் அறைக்கு வெளியிலேயே அழகாகக் கட்டி இருக்கியே.
ரொம்ப சௌகரியம்.
இதோ கைகால் அலம்பிக் கொண்டு வந்துவிடுகிறேன்.
உன் அண்ணா கிட்ட பேச வேணும். பக்கத்துத் தபால் ஆபீஸிற்கு வந்து அவன் பேசணும்.

சாயந்திரமா அவனைக் கூப்பிடு. நான் இல்லாமல் அவன் இருந்ததே இல்லை.
பாவம் குழந்தை என்று சொல்லும் அம்மாவைப் பார்த்து சிரித்துவிட்டாள்
பத்மா.  

  simhan

எல்லோரும் இன்பமாக வாழவேண்டும்.

  அடுத்த நாள், பத்மா தன் பெரியம்மா,சித்திகளை அழைத்து வந்தாள்.
என்னடி வஞ்சி, இப்படி தளர்ந்து போய் விட்டாய்
என்று ஆதங்கப் பட்ட அவர்களை
வரவேற்று,
அம்மாவுடன் பேசவிட்டாள்.
வெளியே போய் அண்ணாவுக்குத் தொலைபேசினாள்.

மருத்துவர் சொன்ன புத்திமதிகளை அவனிடம் சொன்னதும் கலவரப்
பட்டான். என்ன செய்வது பத்து. இங்க வசதி போதாதுதான்.
அம்மா சந்தோஷமாகத்தான் இருக்கிறாள்.

அவள் ஒன்றும் சொல்லவில்லைடா அண்ணா.
அங்கே போக வேண்டும்  என்ற நினைப்பில தான்
வந்திருக்கிறாள்.

அடிக்கடி தலை சுற்றல் வருகிறது. அங்கே படி இறங்கும் போது
விழுந்துவிட்டால்  என்ன செய்வாய் நீ. இந்த வாரம்
டிசம்பர் லீவு ஆரம்பிக்கிறது. நீ மன்னியோடும், குழந்தைகளுடனும்
வா.  உன்னைப் பார்த்தாலே அவளுக்குத் தெம்பு வந்துவிடும்.

மாப்பிள்ளைகூட உன்னுடன் பேச ஆசையாகக்
காத்துக் கொண்டிருக்கிறார்.
ஓய்வும், நல்ல தூக்கமும், மருத்துவரின் கண்காணிப்பும் அவளுக்குத்
தேவை டா.
அவளுடன் துணைக்கு இருக்க, உதவி செய்ய ,பேச
சிதம்பரத்திலிருந்து  அம்மாவின் சித்தி பெண்ணை
வரச் சொல்லி இருக்கேன்.
 திருப்பி ஃபோன் செய்கிறேன். நீ சாதாரணமாக
அம்மாவிடம் பேசு என்று வைத்துவிட்டாள்.

உள்ளே ஒரே உற்சாகமான பேச்சுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது.
அம்மா, அக்கா தங்கையைப் பார்த்தால்
உனக்கு எத்தனை சந்தோஷம்மா
உனக்கு. எங்களைக் கூட மறந்து விடுவாய்
 என்று கேலி செய்தவள். கையோடு
கொண்டு போன காப்பி, பலகார வகைகளை வைத்தாள்

அம்மா இந்தா உன் சாக்ரின் மாத்திரை என்று
அம்மாவிடம் கொடுத்தாள்..
 ஏன் பத்மா!, எங்களோடு அனுப்பி வையேன். இராத்திரி இருந்துவிட்டு வருவாள்
என்று பெரியம்மா சொன்னதை அன்பாக மறுத்தாள்.
அம்மாவுக்கு ஓய்வு தேவை பெரியம்மா. இன்னும் இரண்டு
நாள் போகட்டும் அழைத்து வருகிறேன்.
 அம்மாவுக்கு பிள்ளைக்கு மாகாளிக்கிழங்கு, சுண்டைக்காய்,
நார்த்தங்காய் எல்லாம் வாங்க வேண்டுமாம்.

ஸரிதான். எங்களுக்கெல்லாம் இல்லாத உடம்பு உனக்கு எப்படி வந்தது.
என்று கேட்ட அவர்களிடம் ,பத்மா பதில் சொன்னாள்.
ராஜாமணி மாமாவுக்கு இருந்ததாமே. பொன்னா பாட்டிக்கும் இருந்துதானே
அம்மியில் அரைத்துக் கொண்டிருந்த போதே
பகவான் கிட்டப் போனா என்று கேட்டாள்.

அதென்ன அதிசயமோ. வனஜாப் பாட்டி எதற்கும் அலுக்கவில்லை.
எல்லாம் சரியாகிடும் .நீங்க போயிட்டு வாங்கோ.
நாளைக்குப் பார்க்கலாம் என்று  ஈசிச்சேரில் சாய்ந்து கொண்டாள்
 வெள்ளி சாயந்திரம் பஸ்ஸில் வந்துவிட்டது நடராஜன் குடும்பம்.

கால்களைக் கழுவின அடுத்த நிமிடம் அம்மாவிடம் சென்ற அந்தக் குடும்பத்தை
மகிழ்ச்சியுடன் வரவேற்றால் வனஜாப் பாட்டி.
நால்வரும் அவளை கீழே விழுந்து நமஸ்கரித்தார்கள்.
அம்மா,பாட்டி  என்று குரல்கள் சூழ அதீதப் புன்னகையுடன்
கேட்டுக் கொண்டிருந்தார் அவர்.
உள்ளே வந்த மாப்பிள்ளை,பத்மா, அவள் குழந்தைகளைக்
கண்டு இன்னும் சத்தம் அதிகமானது.
பசங்களா வெளியில் போய் விளையாடுங்கள்
என்று விரட்டிவிட்டு,
அம்மா நீயும் கூடத்துக்கு வா. புதுசா எம்.எஸ் அம்மாவோட
 ரெகார்ட் வந்திருக்கு.
வா கேக்கலாம் என்று கைபிடித்து அழைத்து வந்தாள் பத்மா.
ஒரு வாரத்தில் அம்மாவுக்கு  என்ன ஆச்சு இப்படி இளைத்திருக்கிறாரே என்று
கலங்கினாள்
நீலா,  நடராஜனுக்கோ பிரமை பிடித்தால் போல ஆச்சு.
ஆனால் அம்மா மகிழ்ச்சியாக இருந்தாள்.
 தெளிவாக இருந்தாள்.
நடராஜனை அருகே வைத்துக் கொண்டு விவரங்களை விசாரித்தாள்.

நீலாவிடம் பெரிய குளத்தில் என்ன வம்பு. பக்கத்து 
அகத்து விசாலி, கடைசி அகத்து  ஐய்யங்கார் மாமி 
என்று ஒவ்வொன்றாக விசாரிக்க நிலமை தெளிந்தது.

இரவு சாப்பாட்டிற்குப் பிறகு, பத்மா
 தன் அண்ணாவிடம்
 அம்மாவின் இதயம் கொஞ்சம் பலவீனமாக  இருப்பதால் டாக்டர்
மருந்துகள் அதிகரித்திருப்பதாகச் சொன்னாள்.
அதில்தான் உடம்பு இளைத்திருப்பதாகவும் இன்னும்
 இரண்டு மாதங்களில் முன்னேற்றம் இருக்கும் என்றும் 
சொன்னாள்.
கிரஹித்துக் கொள்ள நடராஜன்,நீலாவுக்குக் கொஞ்சம்
நேரம் ஆச்சு.

பத்மாவின் கணவர் வெங்கட், அவனுடன் உட்கார்ந்து
அன்புடன் பேசினார்.
நீதான் அம்மா இங்கே இருக்க வேண்டிய அவசியத்தைச் சொல்லணும் பா.
இங்கே இருப்பதே தப்பு என்று யோசனை அவருக்கு என்றார்.

அம்மாவை அவள் அறையில் பார்த்த நடரஜனுக்கு,
அவள் முகத்தில் நிலவிய அமைதி தெம்பு கொடுத்தது.

அடுத்த நாள் அம்மாவை ,தங்கள் திட்டத்துக்குச் சம்மதிக்க
வைக்க அக்கா,தம்பிக்கு சுலபமாகிற்று.
இன்னும் இரண்டு மாதங்களில் தனக்கே மதுரைக்கு மாற்றலாக
சந்தர்ப்பம் வரும் என்றும்.
பங்குனி மாத முடிவில் 
குடும்பத்தோடு  பக்கத்திலேயே வீடு பார்த்துக் கொண்டு
வந்துவிடுவதாகச் சொன்னான்.
அம்மா இங்கயும் அங்கேயுமாக இருக்கலாம் 
என்று அம்மாவை அணைத்துக் கொண்டான்.
இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் கிளம்பும்போது
கூடவே வந்தது, அம்மா போட்டுக் கொடுத்த சுண்டைக்காய், மாகாளி,
நார்த்தங்காய் ஊறுகாய்கள்.
டேய் நீ வரும்போது, மாவடு 15 படி வாங்கிண்டு வந்துடு. எல்லோருக்கும் 
வேண்டும் இல்லையா என்ற அம்மாவைப் பார்த்து மனம்
பொங்கச் சிரித்தார்கள் நீலாவும் நடராஜனும். மங்களம் எங்கும் தங்கட்டும்..
   சுபம்.

ஶ்ரீனிவாசா கோவிந்தா ஶ்ரீ வேங்கடேசா கோவிந்தா.

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக நலமாக வாழ வேண்டும். பெருமாளுக்கு நாராயணன், வெங்கடேஷ்வரா, பாலாஜி, ஸ்ரீஹரி என எத்தனையோ திருநாமங்கள் இருந்தாலும் ...