வல்லிசிம்ஹன்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
என் பாட்டியின் கதையைப் பதிக்க ஆசை.
பெயர்களை மாற்றி ஊரை மாற்றி எழுதிவிட்டேன்:)
1963 பாட்டி;
அம்மா..... பாட்டி படிலயே ஈரம் செய்துட்டார்.
பெண்ணின் குரல் கேட்டு பின்புறம் விரைந்தாள் நீலா.
ரொம்ப அவசரம். படி இறங்கி கொல்லைப்பக்கம் போவதற்குள்
வந்துவிட்டது.
உனக்கு வேலை வைத்து விட்டேன் மா என்று சொல்வதற்குள்
மாமியாரின் கண்களில் நீர்.
சர்க்கரை ரத்தத்தில் சேர்ந்ததிலிருந்து 65 வயது வனஜாம்மாவுக்கு
பழக்க வழக்கங்கள் மாறின.
அதிக பசி, அதிக தாகம்,அடிக்கடி சிறு நீர் கழித்தல் என்று நீண்டது பட்டியல்.
எது கொடுத்தாலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டி இருந்தது.
குளித்து வெகு ஆசாரமாக ஸ்வாமிக்குப் பூஜை செய்பவர்.
கணவர் தவறியதும் இன்னும் தீவிரமாக எல்லா விரதங்களையும் கடை பிடித்தவருக்கு
இந்த சர்க்கரை மிக அதிர்ச்சியைக் கொடுத்தது.
ஒன்பது கஜம் கட்டிக் கொள்வதே அசௌகரியமாக இருந்ததால்
மாம்பழக்கட்டு என்று அவர் சொல்லும் ஆறுகஜப் புடவைக்கு மாற வேண்டி வந்தது.
எல்லா நேரமும் அசதி வந்து தொந்தரவு கொடுத்தது.
நல்ல கனத்த சரீரம் இப்போது பாரமாகியது.
மருமகள் நீலா, மாமியாரிடம் அதிக அளவு மரியாதை வைத்திருந்தது தான் அவரைப்
பல நேரங்களில் ஆறுதல் அடைய வைத்தது.
இன்சுலின் ஊசி போட வைத்தியர் ஏற்பாடு செய்த நர்சம்மா தினம் ஒரு வேளை
வந்து ,சகல விதத்திலும் கண்காணித்து மருந்தும் கொடுத்துப் போனார்.
இப்போது இன்னும் ஐந்து வருடங்கள் கழிந்த நிலையில்
உடல் மிகவும் பலவீனமாகிவிட்டது.
பேரன், பேத்தி பாட்டியுடன் தாயக்கட்டம், சோழி என்று விளையாடுவதில் பாதி
சோகம் மறைந்தாலும், தலைசுற்றலும், இந்த சிறு நீர் உபாதையும்
மனசை அலைக்கழித்தன.
நீலா வேளை தவறாமல் ,உணவும், நீர் மோரும்,உப்பு குறைவான
பலகாரங்களும் கொடுத்து கவனித்துக் கொண்டாள்.
வியாதியின் தீவிரம் இப்பொழுது ,இந்த நிலமையில் வந்து நின்றது.
வனஜா பாட்டிக்கு இடம் மாறுதல் தேவைப்பட்டது.
மருமகள் நீலாவின் கவலையைக் குறைக்க எண்ணி
மகள் பத்மாவுடன் சிலகாலம் இருந்து விட்டு வரலாம் என்று நினைவு
வனஜா பாட்டியின் மகள் பத்மா ,மதுரையில் இருந்தார்.
பெரியகுளத்திலிருந்து போய்.
அங்கிருக்கும் பெரிய டாக்டரிடம் பார்த்துக் கொள்ளவேண்டும்
என்று பாட்டிக்கு ஆசை.
நீலா நீயும் கொஞ்ச நாள் நிம்மதியா இரு. நான் மதுரைக்குப் போய் டாக்டர் கிட்டுவைப் பார்த்துவிட்டு,
மருந்து வகையறா வாங்கி வருகிறேன் என்று சொல்லிப் பார்த்தார்.
அவரது மகனுக்கு அம்மா அவ்வளவு தூரம் சென்று
அவஸ்தைப் பட வேண்டாமே என்றிருந்தது.
பாட்டிக்கு இரு சகோதரிகள் மதுரையில் இருந்தார்கள்.
மகளும் பெரிய இடத்தில் வாக்கப் பட்டிருந்தாள்.
வாகனம்,பங்களோ,வேலைக்காரர்கள் என்று வசதியான இடம்.
பத்மாவுக்கு.
கணவர் அங்கு போக்குவரத்து நிறுவனம் ஒன்றில்
உயர் பதவியில் இருந்தார்.
அவளுக்கும் இரு மகள்கள். அங்கே ஆங்கிலப் பள்ளியில்
படித்துவந்தார்கள்.
மதுரையில் அப்போது,பாடல் பள்ளிகளும், நடனப் பயிற்சிக் கூடங்களும்
இருந்ததால் பொதுவாகவே கலகலப்பு மிகுந்த இடமாக இருந்தது
பத்மாவின் அகம்.
மதுரை விஜயத்துக்கு முக்கிய காரணம்,
பாட்டிக்குத் தன் பாரம்பரிய வெள்ளிப் பாத்திரங்கள்
நகைகள் புடவைகளை, மூன்று பேத்திகளுக்கும்
பிரித்துக் கொடுத்துவிடவேண்டும் என்பதே.
அதுவும் மகனுடைய பெண் சுந்தரியிடம் பாசம் அதிகம்.
ஏற்கனவே தன்னிடம் இருந்த காசுமாலையை அந்தப் பெண் கழுத்தில் அணிவித்து அழகு
பார்ப்பார்.
இன்னும் பவழ மாலை, கெம்புத் தோடு,காஞ்சிரக்காய் மாலை,
காசிமணிமாலை இரட்டைவடம் என்று
வரிசையாக இருந்த நகைகளை மகளுக்கும் மருமகளுக்கும்
பிரித்துக் கொடுக்க எண்ணம்.
மகனிடம் சொல்லி மகளை வண்டி அனுப்ப சொன்னார்.
மனமில்லாமல் தங்கைக்குத் தொலை பேசினார் நடராஜன்.
அவளும் வார இறுதியில் வண்டியை அனுப்புவதாகவும்,
அம்மாவுக்குத் துணையாக பேத்தி பேரன் இருவரையும் அனுப்பும்படியும்
சொன்னாள்.
குழந்தைகளுக்குக் கார் பயணம், அத்தை வீட்டுக்குப் போவது
என்று இரட்டை சந்தோஷம்.. பயணத்திற்கு வேண்டிய உணவு,
தன் மாமியாருக்கான மருந்துகள்,நல்ல பட்டுப் புடவைகளாக
நான்கு,
அவசரத்தேவைக்குத் துண்டுகள் என்று
தயார் செய்தாள் நீலா. மனம் முழுவதும் கவலை.
அம்மா ஒரு வாரத்தில் வந்துவிடுங்கள்
என்று கேட்டுக் கொண்டாள். ஓ. அப்படியே
செய்துடறேன். நீ கவலைப் படாதே. பத்மா எட்டூருக்குப் பாத்துப்பாள் என்று
கிளம்பியே விட்டார் வனஜாபாட்டி.



