Blog Archive

Monday, June 03, 2024

கர்ம பலன்..

வல்லிசிம்ஹன்

 இறைவன் அருள் என்றும் வேண்டும்.

 செயல்கள் நம் வாழ்வை நிர்ணயிக்கின்றன.

 நம் கடமைகளை  நாம் செய்து விட்டால் 
அதற்கான  பலன் கிடைக்கின்றன.

 நற்செயலுக்கு நல்ல நிலைமை கிடைக்கிறதோ இல்லையோ

தெரிந்தே செய்யும்  நல்லது அல்லாத செயலுக்கு  உடனே தீர்ப்பு உண்டு.

அனைவரும்  நலமாக நினைக்க செய்ய இறைவன் அருளட்டும்.

Monday, May 20, 2024

அம்மாவுடனான் நாட்கள்.........



வல்லிசிம்ஹன்அம்மாவுக்குக்  குழந்தைகள் என்றாலே ஒரு பரிவு. இது ஒன்றும் 
புதிதில்லையே  எல்லா அம்மாக்களுக்கும் உண்டான 
சுபாவம் தானே என்று தோன்றுகிறதல்லவா.....

ஒரே ஒரு வித்தியாசம் நானே அவளைப் போல இல்லை.
அந்தப் பொறுமை, பாசம், எல்லோருடனும் இணைந்து
செல்லும் நேர்த்தி, எது வந்த போதும் கலங்காத
தைரியம்,

பொருளைத் தேடி நிம்மதி தொலைக்காத நேர்மை,
சிக்கனம், செய்திகளை எழுதி வைக்கும் பாங்கு

தன் சுத்தம், சுற்றுப்புற சுத்தம்....கிட்டத்தட்ட  என் அம்மா எனக்கு
ஒரு தேவதை. வரங்களைத் தவிர வேறெதுவும் தரத் தெரியாத
பெரிய மனுஷி.

அம்மா என்றும் உன் நினைவில் என்று சொல்லியே 
20 ஆண்டுகளைக் கடந்துவிட்டேன்.
உன் ஆசிகள் என்றும் உன் குடும்பத்துடன் இருக்கும்.

இந்தப் பாடல் வந்த நாட்களில் எங்கள் வீட்டில்
தொலைக்காட்சி, ஏன் இந்தியாவிலேயே
கிடையாது. வானொலியில் கேட்டு மிக ரசித்த 
அம்மாவின் விருப்பப்பாடல்.

வானவெளியில் கேட்டு மகிழ்வார் என்று நம்புகிறேன்

Thursday, May 02, 2024

அஞ்சலி ....உமா ரமணன்.....



வல்லிசிம்ஹன்









  எல்லோரும் வளமுடன் இருக்க இறைவன் அருள வேண்டும்.

இனிமையான குரல் வளத்தால் தமிழ் மக்களைமகிழ்வித்து வந்த திருமதி உமா ரமணன்
இறைவனை மகிழ்விக்க சென்று விட்டார். 
இணையைப் பிரிந்த திரு ரமணன் அவர்களுக்கு நம் அனுதாபங்கள்.


சென்னையில் இருக்கும் போது மியூசியானோ  முழுவின் பல நிகழ்வுகளுக்குச்
சென்று  ரசித்துக் கேட்டிருக்கிறேன்.

ஓ மானே மானே பாடல் கேட்கும் போது 
நம்மையே மறக்கும் அளவுக்கு அவர்களின் குழு இசை

மெய் சிலிர்க்க வைக்கும். 1980 லிருந்து பல வருடங்கள்
இவர்களின் இசையை அனுபவித்திருக்கிறேன்.

திருமதி உமா ரமணனின் குரல் ஒரு அபூர்வ மென்மை
கொண்டது.
அவரௌக்கு இசைப் பயிற்சியுடன் நடனமும் தெரியும் 
என்று பிற்பாடே தெரியும்.

திரு ரமணன் மேடை முழுவதும் பாட்டுக்கு ஏற்ப 
அசைவார்.
உமாவோ ஆடாமல் அசையாமல் ஒரு  அமைதிச் சிலையாக
உதடுகள் அசைவது கூடத் தெரியாமல்

பாடல்களை வழங்குவார்.
69 வயது இந்தக் காலத்தில் மிகக் குறைந்த வயதே.

இசைத்தட்டுகளில் ,யூடியூபில் அவரைக் கேட்போம்.
அமைதி அடையட்டும் அவர் ஆன்மா.






Sunday, April 21, 2024

2822 முழுமை பெற்ற காதல் எல்லாம்.....3




வல்லிசிம்ஹன்
 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.







கும்பகோணம் ரயில் நிலையத்தில்  மக்கள்
கூட்டமும் விடாமல் பெய்த மழையும் 
சத்தம் போட்ட வண்ணம் இருந்தன.

நீலாவின் பெற்றோர் அவர்களது உறவினர்கள் கல்யாண
தம்பதி பெண் தோழி மாப்பிள்ளைத் தோழன்
என்று கலாட்டாவுக்குப் பஞ்சம் இல்லை.

ஜானியும் முதல் நாள் காவிரி பொங்கி வந்த வேகம்
எல்லோரும் தப்பித்து வந்த கதை என்று
நண்பர்களிடம் சிரிக்கச் சிரிக்கப் பேசிக் 
கொண்டிருந்தான். 
அவ்வப்போது நீலாவைத் தேடி கண்கள் ஓடுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நடுவில் கடந்த சில வருடங்கள் எப்படி ஒரு
பெண்ணை இவ்வளவு அழகாகச் செதுக்கி இருக்கிறது.?

 நீலாவும் அந்தப் பார்வைகளைத் தவிர்க்க முயற்சித்து
விட்டு விட்டாள். 
என்ன இந்த உணர்ச்சி என்றே புரியாமல்
அவஸ்தையாக இருந்தது. நம்ம ஜானி  தானே
வித்தியாசமாக ஏன் தோன்றுகிறது.
இதோ ரயில் வரப் போகிறது,
ஒரே வண்டியில் போனாலும்  திருச்சியில் இறங்கி
விடுவான். பின் எப்பவோ. நாமோ சென்னையில் கல்லூரியில்
சேரப் போகிறோம்.
போகாத ஊருக்கு வழி தேடாதே என்று மனதைக் கடிந்தாள்.

வெள்ளம் வந்ததும் ஜானி அவளைப் பத்திரப் படுத்தியதையும் நினைக்கும் போதே
அவளுக்குக் கண்ணில் நீர் கட்டியது.
அந்த மாலை அனைவரும் சேர்ந்து 
புதிதாக வந்திருந்த சிவகுமார் அம்பிகா படம் ஒன்றைப்
பார்க்கப் போனார்கள். நான் பாடும் பாடல் என்று பெயர்.

கொஞ்சம் சோகம் கொஞ்சம் மகிழ்ச்சி திருப்பம்
மைக் மோஹன் பாடுவது எல்லாமே அவர்களுக்குப்
பிடித்தது.
திரும்பி வரும்போது எல்லார் நினைவிலும் ';பாடும் வானம்பாடி வா''
பாட்டே மனதைச் சுற்றி வந்தது.
''சே இந்த எஸ்பி பி ஸாருக்குத் தான் என்ன ஒரு குரல்.!"
என்று பேசாதவர்கள் இல்லை.

இதோ மீண்டும் யார் பாடுகிறார்கள் ?என்று திரும்பினால்
ஜானி நிற்கிறான் அருகே.
நீலா!! இந்த வருஷ கல்ச்சுரல்ஸில் 
ஐயா இந்தப் பாட்டாலயே ஜெயிக்கப் போகிறேன்
என்று சிரித்தபடி சொன்னான் ஜானி.

அவளும் விட்டுக் கொடுக்காமல் ''நானும் 
எதிராஜ் கல்ச்சுரல்ஸில் உங்க கல்லூரியை 
ஜெயிக்கிறேனா இல்லையா பாரு'' என்றாள்.


 ப்ளாட்ஃபார்மில் பரபரப்பு அதிகரித்தது.
ஜானி , நீலா குடும்பத்தைக் கவனித்துப் பத்திரமாக
ஏற்றி விட்டான். அனைவரும் அவரவர் பர்த்தில் அமர்ந்ததும்

'' மாமா, நான் திருச்சியில் 10 மணிக்கு இறங்கி விடுவேன்.
அப்புறமா ஜூலை மாதம் பாட்டியைப் பார்க்க சென்னை 
வருவேன். நீங்களும் அதற்குள்
மாற்ற்லாகி வந்துடுவீர்களா? '' என்று கேட்டான்.

ஆமாம் பா நீலா காலேஜ் ல சேரணும்  அவள் தங்கை ப்ளஸ்1
சேரணும். வீடு பார்க்கணும். மே மாதம் சென்னை வந்து விடுவோம்.
நீ பத்திரமாகப் போய் வா" என்றார்.

வரேன் மாமி, வரேன் நீலா, மாலா.சீ யூ என்றபடி விடை பெற்றான் ஜானி.
அப்புறம் சந்தித்தார்களா என்பதை அடுத்தாற்போல்
பார்க்கலாம்.  தொடரும்



Friday, April 05, 2024

முழுமை பெற்ற காதல் எல்லாம்.......பகுதி 2

வல்லிசிம்ஹன்
   எல்லோரும் வளமாக வாழ வேண்டும்


சில வருடங்களுக்கு முன் எழுதிருந்த கதையில் ஆரம்பித்தது ஜானகிராமன் மற்றும்
நீலாவின் இளவயது ஈர்ப்பு.
திண்டுக்கல்லில் நடப்பதாக எழுதி இருந்தேன்.

நீலாவுக்கு 14 , ஜானகிராமன் ''ஜானி''க்கு 16.

இருவருக்கும் பக்கத்துப் பக்கத்து வீடு,
   ஜானியின் தங்கையும் நீலாவும் பள்ளித் தோழிகள்.

1978இல் ஆரம்பித்த நட்பு, நீலாவின் அப்பாவுக்கு
 செங்கல்பட்டுக்கு மாற்றல் ஆனதும்
சில வருட கடிதப் போக்குவரத்துடன்  தொடர்ந்தது. 1984கலாவின் அக்கா திருமணத்துக்கு
நீலாவும் பெற்றோர்களும் போயிருந்தார்கள்.
தஞ்சாவூரில் வெண்ணாற்றங்கரையில்
திருமணம் படு உத்சாகமாக நடந்தது. அப்போதுதான் இருவரும் 
ப்ளஸ் 2 பரீட்சைத் தேர்வுகள் எழுதி முடித்திருந்த உத்சாகம்.

ஜானி திருச்சி சைண்ட் ஜோசஃபில் பி.காம் இரண்டாவது
ஆண்டில் படித்துக் கொண் டிருந்தான்.....

தஞ்சாவூர் மண்ணில் ஜானி ,நீலா இருவருக்கும் பது உணர்வுகள்
நினைப்புகள் தோன்றின. கல்யாண கோலாஹலங்களில்
நிறைய தருணங்களில்  பேசிக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது,

கலா, நீலா, ஜானி இன்னும் இரண்டு பொடிசுகள் என்று 
மலர்கள், மாலைகள், ஜமக்காளங்கள், மாப்பிள்ளைக்குக் குடை, பாய்
என்று  கலாவின் சித்தப்பா வண்டியில்
போய் வந்த வண்ணம் இருந்தார்கள்.கவலையின்றிக் குதூகலமாக அப்போது வந்த திரைப் படப் பாடல்கள்
பின்னணியில் ஒலிக்க நேரம் நிற்காமல் ஓடியது!!!!!

திருமணம் இனிது நடை பெற்றது.
மதிய வேளையில் திருமணத்தில் சேர்த்து வந்திருந்த பாலிகைகளைக்
காவேரியில் கரைக்க மகளிர் திரண்டனர். 
நாயனக்காரர் நையாண்டி வாசிக்கப் பெண்கள் குழாம்
மெதுவாக மணல் திட்டில் ஏறிக் கொண்டிருந்தனர்.

கூடவே காளைகள் குழுவும்.பெண்களுக்குப் பாதுகாவலாம்.:))))))))))
சந்தனம் கதம்பம் பன்னீர்  தெளிப்பு என்று 
ஒரே மயக்கக் கலவையாக விளங்கியது அந்த மதிய மாலை நேரம்.

ஆற்றில் காவிரி வேகமாக ஓடிக்கொண்டிருந்தாள்.
எப்பொழுதும் குறுகலாகக் காணப்படும் வெண்ணாறு
அன்று அகலமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. 


ஜானிக்கு இந்தப் பெண்கள் படை இத்தனை உத்சாகமாகக்
காவிரியை நோக்கிப் பாய்வது நயத்தைக் கொடுத்தது.

கரையோரம் ஆழம் இருக்கும் ஜாக்கிரதை என்றவாறே 
பின்தொடர்ந்தான்.
அவர்கள் அவனை லக்ஷியம்  செய்யவில்லை.
பாவாடைகள் நனையும் போது அவர்களுக்கு ஆற்றுன் வேகம் 
தட்டுப் பட்டது. 
அதே சமயம் எதிர்க்கரையில்  தம்பட்டம் அடிப்பவர் ஒருவர்
அதிவேகமாகத் தட்டியபடி
''
பிள்ளைகளா ஓடுங்கள்,
வெள்ளம் வருகிறது. அணை திறந்துவிட்டார்கள்''
என்று அலறியபடியே இருந்தான்.
அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தண்ணீர் 
கால்களை இழுப்பது தெரிய அலற ஆரம்பித்தனர்.


ஜானியும் உடன் வந்த அவன் வயது பசங்களும்
இந்த 7, 8  சிறுமிகளைப் பத்திரமாகப் பிடித்துக் 
கரைக்குக் கொண்டுவந்தனர்.
கண்முன்னால்  மரமும் செடிகளும் ஆடுகள் என்று 
வெள்ளம் சுழித்துக் கொண்டு ஓடுவதைப் 
பார்த்துப் பிரமித்தனர் வந்த பெண்கள்........தொடருவோம்.