Wednesday, May 06, 2026

2008 இல் ஒரு அனுபவம்.

வல்லிசிம்ஹன்






ஊரைச் சுற்றி வம்பு பிடித்து.............
இன்னொமொரு வீகெண்ட் முடிந்தது. 14/7/2008
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வெள்ளி காலை, வீட்டுக்கு வெளியே இருக்கும் /////corridor
வராந்தா,வழிப்பாதையில் இருந்த(நான்கு ஐந்து ஃபயர் அலார்ம் இருக்கு)
மணி விடாமல் ஒலித்தது. நான் வந்த பிறகு இவ்வாறு ஒலிப்பது இது நாலாவது தடவை. நாந்தான் அவசர அவசரமாக வெளியே வருவேன். காரிடார் நிசப்தமாக இருக்கும்.
இந்த அமைப்பு எனக்குப் புரியவில்லை. ஏன் ஒருத்தருக்கும் பயம் கிடையாதா என்று இங்கே கேட்டால், அது அலார்ம் சரியில்லைம்மா என்கிறார்கள்.
அப்புறம் தெரிந்தது,யாரோ ஒருத்தர் , வெளி ஆள் புகைபிடித்திருக்கிறார் என்று.
அப்ப உண்மையாவே ஏதாவது நெருக்கடி வந்தால்(வராம இருக்கணும் சாமி)
மெத்தனமாகவே இருந்து விடுவார்களா:(
இந்த பில்டிங்கில் தமிழ்க்காரர்கள் 4 பேர் இருப்பார்கள் . மற்றவரெல்லாம் ஐரோப்பியர்கள்,மற்றும் அண்டை நாட்டவர்கள்.
பகல் இரவென்று வேலைக்குப் போய் வருபவர்கள், பூட்ஸ் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.
மத்தபடி அமைதியான இடம்தான். பக்கத்து வீட்டுகாரர் கூட ராத்திரி 11 மணிக்கு ட்ரில்லிங் செய்வதை நிறுத்தி விட்டார்:)
அவர் பைலட்டாக வேலை செய்பவர். அவருக்கு விமானம் ஓட்டும் போது விதவித உத்திகள் தோன்றுமாம்:).அப்படியே நினைவில் பதிந்து கொண்டு வருகிற வழியில் ரெண்டு கட்டை வாங்கிக் கொண்டு வந்து விடுவார்.
சரியாக என் தலைப் பக்கம் ,
அவங்க வீட்டுச் சுவற்றின் பக்கத்தில் 10 மணிக்கு நான் தூங்கும் நேரம்,சரியாகப் பார்த்து அந்த வண்டு செய்யும்ரீங்காரம் மாதிரி சவுண்டு ஆரம்பிக்கும்.
எனக்குக் ( கனவில்) பெருச்சாளி பக்கத்தில் உட்கார்ந்து பிராண்டுவது போல
கற்பனை தோன்றும்.
அப்புறம் கட்டிடக் காவலுக்கு இருப்பவரிடம் சொல்லி ஒரு மாதிரி அதைச் சமாளித்தோம்.
இப்படியாகத் தானே ஊரை விட்டுக் கிளம்ப இன்னும் இரண்டே வாரம் இருக்கும் இந்த சமயத்தில் திடீரென நாலாவது அபார்ட்மெண்டில் இருக்கும்
ஒரு எகிப்து நாட்டுப் பெண் வந்து கதவைத் தட்டினாள். அவளையும் அவள் குழந்தையையும் மாடியில் நீச்சல் குளத்தருகே பார்த்த ஞாபகம்.
மொழி தெரியாததால் புன்னகையோடு நிறுத்திக் கொள்வேன்.
இந்த மதிய வேளையில் என்ன பிரச்சினையோ தெரியலையே என்று எனக்கு யோசனை.
குழந்தையும் கூட இருந்தது. அவள் சொன்ன அரை குறை இந்தியின் விஷயம் இதுதான்.
அவர்கள் வீட்டில் வேலை செய்யும் குணா திடீரென்று தன் கையில்
வைத்து இருந்த பாத்திரத்தை விட்டெறிந்து விட்டாளாம்.
பெருக்கும் துடப்பத்தையும் தூக்கிப் போட்டு விட்டாளாம். கத்த வேறு செய்கிறாளாம்.
என்னவென்று விசாரிக்க எங்க மருமகளைக் கூப்பிட வந்திருக்கிறாள்.
நான் பாப்பாவைப் பார்த்துக்கிறேன் ,நீ என்னவென்று விசாரித்துவிட்டு வா,
எதுக்கும் தள்ளி நின்னே பேசும்மான்னு சொல்லி அனுப்பினேன்.
நிறைய இடங்களில் வீட்டு வேலை செய்பவள் அந்த குணா என்கிற பெண்.
நல்ல சம்பளம். நாலைந்து பெண்களோடு வில்லா எனப்படும் குடி இருப்பில் இருப்பவள்.ஆனால் கொஞ்சம் முரடு.
கறார் ஆசாமி.
மருமகள் போய்விட்டு வந்து சொன்ன கதை இதுதான்.
நாலாம் வீட்டுக்கு ப் பெற்றோர்கள் வந்திருப்பதால் வேலை அதிகரித்து விட்டது.
அதற்காகப் பணம் கூடுதலாகத் தரச் சொல்லி கேட்டிருக்கிறாள் குணா.
''சரோஜா பாத்திரம் நிக்காலோ'' அப்டீன்னு சொல்கிறதாக நினைத்துக் கொண்டு மாமியார்க்காரி இன்னும் நிறைய பாத்திரங்களை, அலமாரியில் இருந்து எடுத்துப் போட்டு இருக்கிறாள்:)
''இத்னா பஹுத் காம்!!, ஹம்
'அவுர் குச் பைசா ,800 டிர்ஹம் ''னு அவள் சொன்னதை
அந்த அம்மா புரிந்து கொள்ளாமல் இன்னும் வேலை கொடுக்க இவளுக்குக் கோபம் வந்து கையிலிருந்ததை விட்டெறிந்ததும்.
மாமியாரும்,மாமனாரும் வெளியே வந்துவிட்டார்கள்:)
குணாவின் ஹிந்தி என் ஹிந்தியைவிட மோசம். அவள் அரபி, இந்தி கலந்து பேசுவாள்.
அவர்கள் புரிதலோ அதைவிட மோசம்.
நாளைக்குத்தான் தெரியும் குணா மறுபடி வேலைக்கு வருவாளா என்று 30ஆம் தேதியாச்சே. சம்பள நாள்.
தற்போது மெயிட்ஸ் மாநாடு லிஃப்ட் பக்கத்தில் நடக்கிறது. என்ன ஆகிறது என்று பார்க்கலாம்.!!

பயணக் களைப்பில் இருந்து வெளியே வர பழைய பதிவு 2008 இல் எழுதியதைப் பகிர்கிறேன்:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))


எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

Monday, May 04, 2026

கன்யாகுமரி ......1957 பாகம் 7.

வல்லிசிம்ஹன்
எல்லோரும்  வளமாக வாழ வேண்டும்.




மேலே இருக்கும் படம்  எங்கள்  குடும்பப் படத்திலிருந்து அமைக்கப் பட்டது:)
                                           ++++++++++++++++++++++++++++++++++++++++++++



கன்யாகுமரி கடற்கரையில் குடும்பம்.


இந்தப் படத்தைப் பார்க்கும் போது என் பெற்றோர் நினைவில் வந்தனர்.


திருக்குறுங்குடியிலிருந்து கிளம்பி  திருச்செந்தூர்  வந்தோம்.

அந்தப் பிராகாரம்  செல்லும் மண்டபப் பாதையில் காற்றும் மேகமும் சூழ்ந்திருந்தது. அங்கு உட்கார்ந்து  மதிய உணவை உண்டதும்
நினைவில் இருக்கிறது.  

இப்போது எல்லாம் மாறி இருக்கலாம். தாத்தா பாட்டி வண்டியில்
அமர்ந்திருக்க நாங்கள் மட்டும் கடலருகே நின்று 
முருகன் சன்னிதிக்கும் சென்று வந்தோம்.


இந்தப் பாடல் வெளிவந்த போது நாங்கள்  திருச்சியில் இருந்தோம்.

நாங்கள்  சென்ற போது  இவ்வளவு கூட்டம் இருக்கவில்லை.

''ஆவணி ,மாசியிலும், வரும் ஐப்பசித் திங்களிலும்''
என்ற  வரி பாடலில் இருக்கிறது.   தை மாதம் தாத்தாவின் 

பிறந்த நாள் ( 78ஆவது) கொண்டாடினோம். 
தாத்தாவுக்கு எப்பொழுதும்  ஆஸ்துமா இருமல்  இருக்கும்.

இந்தத் தொல்லைகளிலிருந்து விடுபட இந்தக் கோவில்
பயணங்களை மேற் கொண்டிருக்கலாம்.

 மதிய சாப்பாடு முடிந்ததும்  மீண்டும் அலைகளில்
அருகினில் சென்றோம். கடல்  கொஞ்சம் உள் வாங்கி இருந்தது.
அதை நம்பி  அலைகள்  பக்கம் சென்றால் பெரிய அலையொன்று
சீறிக் கொண்டு வந்து என் கைகளிலும் அப்பா கைகளிலும் இருந்த பாத்திரங்களை அடித்து சென்றது.

நான் பாத்திரங்கள் பின்னால் போன போது அப்பா என்னைப் பின்னிழுத்தார். கூடவே இருந்த ஒரு மீனவர்
சொன்ன சொற்கள்  இப்போதும் என் காதில் ஒலிக்கிறது
''பாப்பா கடலம்மா திருட மாட்டா.  அதெல்லாம் திரும்பிடும் பார்''

அவர் சொன்னது போலவே அடுத்த அலையில் அவை திரும்பி வந்தன.
தாத்தா எங்கள் இருவரையும் கடிந்து கொண்டார்.
வெறும் பாத்திரம் தானே. ஏன் இப்படி அவஸ்திப் பட்டீர்கள் என்றார்.






2004 சுனாமியின் போது  ஏன் இப்படிக் கடல் பொங்கியது என்று யோசித்தேன்:((
1957க்கும் 2004க்கும் இடையே   47 வருடங்களில் இயற்கைக்கு ஒவ்வாத
செயல்கள் நிகழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மீண்டும் பயணம்   தொடங்கிக்  கன்யாகுமரி செல்லும் 
சாலையில் திரும்பினோம்.








Saturday, May 02, 2026

திருக்குறுங்குடி நாட்கள். பாகம் 6

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழவேண்டும்.




இந்தத்  தாத்தா கூட அருமையாக இருக்கிறார்.
மறு நாள் காலையில் பொங்கலும்  தேங்காய்த்  தொகையல், தயிர்
சாதம் என்று தயார் செய்துகொண்டு  மலை மேல் நம்பியைத்
தரிசித்து வருவதாகத் திட்டம்.

தாத்தாவுக்கும் பாட்டிக்கும் மலை ஏறுவதில்  தயக்கம் இருந்தது.
சித்தப்பாவும் அப்பாவும் உடனே ஏற்றுக் கொண்டனர்.  அப்போது

வழிப்பாதை எல்லாம் கல்லும் முள்ளுமாக இருக்கும் 
என்று நினைவு.கிட்டத்தட்ட 5000 அடிகள் இருக்கலாம் என்றார்கள்.


''திருமலைநம்பி இங்கு ” சங்கு சக்ர கதாபானே துவாரஹா நிலயாச்சுத” என்ற ஸ்லோகத்திற்க்கிணங்க பெருமாள் சங்கு, சக்ர, கதையுடன், ஸ்ரீதேவி பூதேவி ஸமேத காட்சியளிக்கிறார். மேலும் சித்தர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், ரிஷிகள் அனைவருக்கும் அருள்பாலிக்கும் விதமாக நின்ற கோலத்தில் ஸேவை சாதிக்கிறார். இங்கு வீற்றிருக்கும் உற்சவர் வருடத்திற்கு இரண்டு தடவை மட்டுமே கீழே இருக்கும் கோவிலுக்கு எழுந்தருள்வார். ஒன்று தை மாதம் நடக்கும் தெப்போத்ஸவத்திற்கு மற்றொன்று பங்குனி மாதம் நடக்கும் ப்ரம்மோத்ஸவத்திற்கு எழுந்தருளி தன்னுடைய அண்ணன்மார்கள் நால்வருடன் பக்தர்களுக்கு ஸேவை ஸாதிக்கிறார்."

செய்தி தந்தது  Thirukkurugudi.com website .
மனம் நிறை நன்றி அவருக்கு.  ''திருக்குறுங்குடி பெரிய கோவிலில் உள்ள மூன்று நம்பிகள், குறுங்குடி வல்லி நாச்சியார் மற்றும் ஆழ்வார் ஆச்சாரியார்கள், பக்கம் நின்றார் என்றழைக்கப்படும் சிவன் சந்நிதி, காலபைரவர் சந்நிதி ஆகியோரை தரிசித்து விட்டு அங்கிருந்து நாம் 1 கி.மீ தொலைவில் உள்ள திருப்பாற்கடல் நம்பி என்று அழைக்கப்படும் நான்காவது நம்பி “க்ஷீரம்” நதிக்கரையில் அமைந்துள்ள திருப்பாற்கடல் நம்பியை தரிசித்து விட்டு அங்கிருந்து மலைநம்பி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள “உச்சிமாகாளி அம்மன் கோவிலை அடையலாம். அங்கு தான் பங்குனி மாதம் நடைபெறும் ப்ரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளில் ஐந்து கருட வாஹனத்தில் ஐந்து நம்பிகளும் ஒன்றாக அந்த இடத்தில் தான் மலை மேல் வாழும் முனிவர்கள் ,சித்தர்கள், அனைவருக்கும் காட்சி கொடுப்பதாக ஐதீகம்."

2019 ஆம் ஆண்டு  எங்கள் மகன்களோடு போகும் போது
மலை மேல் ஏற முடியவில்லை.
:(   

எங்களுக்கு கடவுள் பற்றிய சகல விஷயங்களை சொல்லிக் கொடுத்த ஒரு ஆசிரியர் அடிக்கடி அறிவுறுத்திய ஒரு செய்தி. கை கால்களில் தெம்பு வலு இருக்கும் போதே எல்லா ஆலயங்களுக்கும் சென்று வாருங்கள்  என்பதுதான்.


ஐந்து கருட  சேவை.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அழகிய நம்பி ராயரும் தேவிகளும்.
நாங்கள் கீழே இறங்கி வருவதற்குள் பாட்டியும்
தாத்தாவும்  இட்லிக்கு  அரைத்துக் கொண்டிருந்தார்கள். சித்தப்பாவுக்குக் காலை உணவு மிக அவசியம். அவர் வேலை அப்படி.

அப்பாவுக்கு வெற்றிலையும் காப்பியும் போதும்.

எங்களுக்குக் காலையில் பழைய சாதமும்  குழம்பும்,.

இப்போது பாட்டியும் அம்மா சித்தி மூவரும் இரவுக்கு
சமைக்க ஆரம்பித்தார்கள். தோட்டத்துக் கீரையும்

காய்ச்சின அப்பளமும் தேங்காய்த் தொகையலும்
பிரமாதமாக இருந்தன.
எல்லாமே பின்னால் இருக்கும் வீட்டின் தோட்டத்தில் இருந்து வந்தவை.


கத்திரி, சுண்டை, வாழை, கொத்தவரங்காய் எல்லாமே வளர்த்திருந்தார்கள்.
தாத்தாவின் குத்தகைக்காரர் வைரக்கண்ணுவும் மலைப் பழங்கள்
நேந்திரங்காய்,  மாங்காய், எலுமிச்சம்பழம்
என்று கொண்டு வந்ததும் பாட்டியின் கண்கள்
மின்னின:) 
''இந்தா நீ ஊறுகாய் போடக் கிளம்பிடாதே!
நாளைக்குக் கன்யாகுமரி  திருச்செந்தூர் எல்லாம்
போகணும் '' என்று மிரட்டினார்:)

நவதிருப்பதியில்  இரண்டு கோயிலாவது காண 
தாத்தாவுக்கு ஆசை. அதுவும்  முதலில் வேலைக்குச் சேர்ந்த
ஶ்ரீவைகுண்டம், நாங்குனேரி சென்ற நினைவு இருக்கிறது.

சித்தப்பா ஆசைக்காகத் திருச்செந்தூர் அலைகளில் நின்ற  
பயம். அன்று பௌர்ணமியோ என்னவோ. கால்கள் தடுமாறி
விழுந்ததும் நினைவில். சற்று  அருகில்  இருந்த அப்பா
என்னைப் பிடித்து நிறுத்தியதும் அழியாத

ஞாபகங்களில் ஒன்று:) 

திருச்செந்தூர்.
தொடரலாம்.


மே மாதத் திருமணங்கள் .

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமாக இருக்க வேண்டும்.
















Thursday, August 02, 2007

ஆனந்தம் ஆனந்தமே ஜயாநாராயணன் கல்யாணம் சுபமே
நடுவில் கடிதங்கள் ,கேள்விகள் மாப்பிள்ளைக்கு சூட்,





பெண்ணுக்கு எத்தனை பட்டுப்புடவை,நாத்தனார்களுக்குச் சீர்,

கல்யாண சாப்பாடு மெனு எல்லாம் விவாதிக்கப் பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

மாப்பிள்ளை வீட்டாருக்கு வேண்டிய அப்பளம் வடகம்,வடாம் எல்லாம் பெண்வீட்டார் கீழநத்தம் வந்து இறங்கிய அடுத்த நாளிலிருந்து தயாரிக்கப்பட்டன.

அவர்கள் ஒரு மாதம் முன்னதாகவே எம்.சி.எம் ஸ்கூல் விடுமுறை நாட்கள் ஆரம்பித்ததுமே திருநெல்வேலி எக்ஸ்பிரசில் வந்து இறங்கிவிட்டார்கள்.

ஸ்ரீவீரராகவனின் சகோதரசகோதரிகள், திருமதி ருக்குமணியின் அக்கா,தங்கைகள்,பெற்றோர்,பெண்ணின் நான்கு குட்டி சகோதரர்கள் (12,10,6,4)எல்லோரும் வெய்யில் வீணாகாமல் கிராமத்துக்கு வந்தார்கள்.





திருமதி ருக்குமணி...அலையஸ்  சீனிம்மா  எங்க அம்மா வழிப்பாட்டி..அவர்களின் மூத்த சகோதரியும் இளைய சகோதரியும் சமையல் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்கள்.

வாசலை அடைத்து அழகான பந்தல் போடப்பட்டது. பிள்ளைவீட்டார் வீட்டு முன்பாகவும் பந்தலும் கோலங்களும் போடப்பட்டன.





பிள்ளைவீட்டார் வரும் நாளும் வந்தது.அவர்கள் வீட்டு மனிதர்களாக ஐம்பது நபர்கள் தான் வரமுடிந்தது. மற்றவர்கள் பெண்ணை திருநெல்வேலியில் பார்த்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டார்கள்.

வந்திறங்கியதும் உபசாரக்காப்பி,கேசரி,போண்டாஎல்லாம் முடிந்தது.



மாப்பிள்ளைக்குத் தோழனாக அவர் சகோதரரே இருந்ததால் அநேகமாக அவர் திருமணமும் அப்போதே நிச்சயமானதாக அம்மா சொல்லுவார்.



அடுத்த நாள் ஜானுவாசம் . காலையிலிருந்தே பரபரப்பு. திருநெல்வேலியிலிருந்து ஏற்பாடாகி இருந்த சாரட் வண்டிக்காரன் திடீரென உடல்நலமில்லை என்று ஆளனுப்பிவிட்டான். அவன் குதிரைகள் நலமாக இருந்தன நல்லவேளை:)))



அதனால் வேறு ஆள் ஏற்பாடு செய்ய பெண்ணின் மாமா விரைந்தார்.

கையோடு இன்னோரு குதிரைக்காரனோடு அந்த சாரட்டிலேயே கீழநத்தம் வந்துவிட்டார். அதுவே பெரிய அதிசயமாகிவிட்டது அந்தத் தெரு மக்களுக்கு. எட்டாம் வீட்டுக் கல்யாணம் அமர்க்களப்பட்டது. எட்டாம்வீடு என்று அழைக்கப் படுவது பெருமாள் கோவிலுக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் வீடு.



இப்பவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.





ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி சன்னிதியிலிருந்து ஊர்வலம் புறப்படுவதாக திட்டம்.கோவிலில் சர்க்கரைப்பொங்கல் ஏற்பாடு ஆகி இருந்தது.

பெண்வீட்டாரும்,மாப்பிள்ளைவீட்டாரும் ஒரு எட்டில் கோவிலுக்கு வந்து விட்டனர். அலங்கரம் செய்யப்பட்ட 

சாரட்டும் ஒரு ஒல்லிக் குதிரைக்காரரும்:)

அவரைவிடச் சுமாரான வெள்ளளக்குதிரைகளும் நின்றுகொண்டிருந்தன.









அதில் ஒரு குதிரைக்கு வயிறு சரியில்லை. எந்தப் புல்லைச் சாப்பிட்டதோ.





ஸ்ரீவேணுகோபல சுவாமிக்கு அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல் வினியோகம் செய்து, மாப்பிள்ளைக்கு வேஷ்டி,ஷர்ட்,சூட் எல்லாம் வெற்றிலை பாக்குத் தட்டில் வைத்து சம்பிரதாயமாகக் கொடுக்கப்பட்டது.



சி.நாராயணனுக்கு குதிரை வண்டி பழக்கம் உண்டு.என்றாலும் இது போல ஓப்பன் ஊர்வலம் வந்ததில்லை.

தயங்கியவாறு தன் அக்காபிள்ளைகளையும் துணைக்கு அழைத்துக் கொண்டு ஏறி அமர்ந்தார். நான்கு பசங்களும் உற்சாகக் கோஷமிட ஊர்வலம் கிளம்பியது.

நான்கு தப்படி போயிருக்காது.,அதற்குள் பாண்டு வாத்தியக்காரர், ஒரு யானை பிளிறன மாதீரி ஒரு நோட் வாசிக்கவும் குதிரை மிரண்டது.



ஒரே தாவல், அடுத்த குதிரையும் மிரள நான்கு கால்களும் மேலே தூக்க சாரட் கவிழ்ந்தது.



அனைவரும் ஆ என்று அலறுவதற்கு முன்னாலேயே மாப்பிள்ளையும் குழந்தைகளும் வெளில வந்தாச்சு. ஒரு சிராய்ப்பு கூட இல்லை.



அப்பாவின் சித்தி கொஞ்சம் கடுபிடு பண்ணினாராம்.



சகுனமே சரியில்லையே.அது எப்படி இந்த மமதிரி உலகத்த்திலே இல்லாத குதிரை கொண்டுவந்தார் உங்க சம்பந்தி என்றெல்லாம் பேச்சு வர,

மாப்பிள்ளை அசராமல் இருந்ததால் மேற்கொண்டு சிரிப்புகளுடன்



ஒரு வழியாக  இனிமையாக ஜானுவாசம் நடந்து முடிந்தது.



சாயந்திர நிச்சயதார்த்தம் எல்லாம் நிறைவேறி, பந்திக்கு அமர்ந்தபோது மீண்டும் ஒரு சின்ன பிரச்சினை.



மாப்பிள்ளையின் மாமாவைச் சரியாக உபசாரம் செய்து சாப்பிடக் கூப்பிடவில்லை என்று. உடனே ஒரு வயதானவர்கள் படை பிள்ளை தங்கியிருக்கும் வீட்டீற்குக் காசி அல்வாவோடு போய் அழைத்துவிட்டு வந்தார்கள்.



அல்வா செய்த வேலையோ என்னவோ அவர் பிறகு வாய் திறக்கவில்லை.



இலைகள் போடப்பட்டு உட்கார்ந்தவர்களுக்கு நல்ல விருந்துபசாரம் நடந்தது.



திரட்டிப்பால், மைசூர்பாகு அன்றைய இனிப்பு. வழக்கம்போல கதம்ப சாதம்,சித்திரான்னம்,தயிர்ப்பச்சடி,மாங்காய்ப் பச்சடி. சுக்குவெல்லப் பொடி. உருளைக் கிழங்கு பொடிமாஸ்,வாழைக்காய் வறுவல் ,திருக்கண்ணமுது என்று எளிமையான சமையல் தான்.



அடுத்த நாள் விடிந்து காலையிலேயே முகூர்த்தம்.



மாப்பிள்ளையை நல்ல படியாகக் கவனித்துக்கொள்ள இங்கிருந்து இரண்டு பேர் பக்கத்திலேயே இருந்து வென்னீர் வைத்துக் கொடுத்து உண்மையான அன்பில் திக்கு முக்காட வைத்ததாக அப்பா பின்னாட்களில் சொல்வார்.





இப்படியாகத்தானே சௌபாக்கியவதி ஜெயலட்சுமிக்கும் சிரஞ்சீவி நாராயணனுக்கும் இனிதே கல்யாண வைபவம் நடந்து முடிந்தது. மேற்கொண்டு எந்த வித சங்கடமும் இல்லாமல் கட்டுசசதத்துடன், ஏகப்பட்ட பொரித்த பொரிக்காத அப்பளக் கூடைகள்,முறுக்கு சம்புடங்கள்,திரட்டிப்பாலோடு வெள்ளிக்குடம், என்று பலவித சீர் செனத்தியோடு புக்ககம் புகுந்தாள் சேச்சிப் பாப்பா என்கிற புஷ்பாவாக இருந்து மாறிய ஜெயலட்சுமி நாராயணன். சுபம்.

மேற்கொண்டு 1943ல் திருமணம் நடந்தாலும் அவர்கள் தனிக்குடித்தனம் வைக்கப்பட்டது 1945ல் தான். சென்னையில் மிச்சப் படிப்பை முடித்து 15 வயதில்தான் அப்பாவும் அம்மாவும் அப்பாவுக்குப் போஸ்டிங் ஆன கயத்தாறுக்குத் தனிக்குடித்தனம் வைக்கப் பட்டார்கள். அது தனிக்கதை.:)))













-





மே மாதத் திருமணங்கள்.

வல்லிசிம்ஹன்


எல்லோரும் வளமாக வாழ வேண்டும்

லக்ஷ்மிகல்யாண வைபோகமே...2 என் அப்பா அம்மா திருமணம் மே 17 1943.

புஷ்பா என்கிற பாப்பாவுக்கு ஜாதாகம் கணிக்கவில்லை.

பெற்றோர் ஸ்ரீ வீரரரகவனுக்கும் அவரது மனைவி திருமதி.ருக்குமணிக்கும் வயது வித்தியாசம் கொஞ்சம் நிறைய.

ருக்குமணி அம்மா ஆயில்ய நட்சத்திரமானதால் திருமணம் தடைப்பட்டு

12 வயதில்தான் தன்னைவிட 14 வயது மூத்த ஸ்ரீ வீரராகவனைத் திருமணம் செய்தாராம்.

அதுவும் அவருடைய அப்பா ,அம்மா இருவரும் ஏற்கனவே காலமாகிவிட்டதால்தான் இந்தத் திருமணம் நடந்ததாக எங்க கொள்ளுத் தாத்தா செவல் ராமய்யங்கார் சொன்னதாக புஷ்பா என்ற பாப்பா அதான் எங்க அம்மா ஜயலக்ஷ்மி நாராயணன் சொல்வாங்க.

அதனால்தான் பெண் பிறந்ததும் ஜாதகம் குறிக்கவில்லையாம்.


குழப்பிட்டேனா. சரி, ஒரிஜனல் கதைக்கு வரலாம்.

இந்த மாதிரி ஜாதகம் இரண்டுபேருக்குமே இல்லைன்னதும்

திருநெல்வேலிலேருந்து தாத்தா ஸ்ரீனிவாசன் சென்னைக்கு கடிதம் போட்டாராம்.


எல்லாம் பகவான் விருப்பம் சங்கல்பம்.

நாராயணனுக்குப் பெண்ணைப் பிடித்தால் பூக்கட்டிப் போட்டு கோவிலில் சம்மதம் வாங்கலாம் என்று சொன்னாராம்.

அதன் படி 22 வயது சிஞ்சீவி நாரயணன் தன் அக்காவோடும் அத்திம்பேர் இன்னும்  ஒரு கசின் அக்கா  (என் வருங்கால மாமியார் திருமதி கமலா சுந்தரராஜன் )இவர்கள் சகிதம் ஒரு டாக்ஸியில்,

அந்த வரிசை ஸ்டோர்வீட்டில் பெண் பார்க்க வந்தார்களாம்.


சேச்சிப்பாப்பாவும் தூக்க முடியாத ஒரு பட்டுப்புடவை கட்டி,கழுத்து நிறைய நாலு வடம் சங்கிலி போட்டு, புதிதாகத் தைத்த பஃப் ஸ்லீவ் ரவிக்கை போட்டு, ஜயதி ஜயதி பாரத மாதா பாடிக் காண்பித்துக் குரல்வளம் உண்டு என்று நிரூபிக்க,


தலை கூட நிமிராமல் உட்கார்ந்திருந்த மாப்பிள்ளை சாரும் சரின்னு சொல்லிட்டாராம்.

மேற்கொண்டு சம்பந்தம் பற்றிப் பேச, பெண்ணின் அப்பா திருநெல்வேலி வந்து சேர்ந்தார். அங்கு காருகுறிச்சியில் ஏற்கனவே சகலை இருந்ததால்

அவரையும் அழைத்துப் போய் லௌகீகம் பேசி முடித்தனர்.

திருமணம் வரும் வைகாசி மாதம்,மே 17 நடக்க நிச்சயம் செய்தனர்.

கீழநத்தத்தில்தான் திருமணம் என்பது உறுதியானது.


அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்த சமயம்.விலை வாசிகள் உயர்ந்த பட்ச விலையில் இருந்ததால் கிராமத்தில் திருமணம் நடத்த ,தீர்மானம் செய்திருக்கவேண்டும்.

பிள்ளை வீட்டார்

திருநெல்வேலியிலிருந்து கீழநத்தம் வரும் வண்டி செலவை பெண்ணின் அப்பா ஏற்றுக்கொண்டார்.

மூன்று நாட்கள் திருமணம். பிள்ளைவீட்டாருக்குத் தனி வீடு அமைத்துக் கொடுத்து சமைக்க ஆளும் ரெடி.

வெள்ளைக்குதிரைகள் பூட்டின சாரட் வண்டியில் மாப்பிள்ளை அழைக்க வேண்டும்,

புஷ்பா என்கிற படு நாகரீகமான பேரை (!) ஜெயலக்ஷ்மி என்று மாற்ற வேண்டும், இதெல்லாம் திருமதி திருவேங்கடவல்லி ஸ்ரீனிவாசன், பையனோட அம்மா போட்ட கண்டிஷன்.:)))

ஆனால் இந்த வெள்ளைக் குதிரை வேற நினைத்து விட்டது.

எங்கள் வீட்டு காமெடி டைம் நிகழ்ச்சி அப்பாவின் குதிரைவண்டி சவாரியும்

குதிரை தறிகெட்டு ஓடினதும்தான்.:))))

Tuesday, April 28, 2026

திருக்குறுங்குடி 5 வீட்டுக்கு வந்தோம்.............


வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

நம்பியாற்றுப் பாலத்தைத்  தாண்டி அக்ரஹாரத்துக்குள்  
நுழைந்தோம்.

பழைய பாலம்.         
திருனெல்வேலி சுலோச்சனா முதலியார் பாலம்.


 பக்கத்து எதிர் வீட்டு ஜன்னல்கள் எட்டிப் பார்த்தாலும் தாத்தா முனைப்பாக
உள்ளெ வந்து விட்டார்.

கொண்டு வந்திருந்த மீதமிருந்த கட்டு சாதங்கள் வடைகள் வடாம் 
தயிர்சாதம் என்று பாட்டியின் கையிலிருந்து வாங்கிக்
கொண்டு  உறங்கத் தயாரானோம்.
அப்பாவும் சித்தப்பாவும் படுக்கை விரிக்கத் தாத்தா பெஞ்சு
மேலயும்  பாட்டி தரையிலும் ராம நாமத்துடன்
படுத்துக் கொண்டார்கள்.




இந்தப் படம் புதிதாக இருக்கிறது:) அப்பாவை சைவமாக மற்றி, வீட்டை
மாடர்ன் ஆகச் செய்துவிட்டது ஏஐ. சொற்களும் கட்டளைகளும் சரியாக
இல்லாவிடில்  வரைபடம் கூடச் சரியாக அமைவதில்லை.:)பிறகு
வாழ்க்கை நேரே இல்லையென்றால் வார்த்தைகள் தானே



தம்பியும் அவன் மகனும். அவர்கள் திருக்குறுங்குடி சென்ற போது.


திருக்குறுங்குடி வீடு.(கூகிள்)




தாத்தா ஶ்ரீனிவாசன்.
சகோதரர்கள்

பாட்டி சாதங்களைக் கலக்க அம்மா தயாராகக் பாத்திரங்களில் எடுத்து வைக்கிறார்.பின்னால் மஹேந்த்ர கிரி தெரிகிறது.



Saturday, April 25, 2026

திருக்குறுங்குடி பயணம் 4

வல்லிசிம்ஹன்




எல்லோரும் நலமாக வளமாக வாழ வேண்டும். வில்லிபுத்துரிலிருந்து
தென்காசி,குற்றாலம் என்று திருக்குறுங்குடி அருகில் வர மாலை ஆறு
ஆகிவிட்டது. பக்கத்து வீட்டில் தாத்தாவின் தம்பி வீடு என்பதாலும்
அவர்கள் இரண்டு நாட்கள் முன் தான் இங்கே இருந்துவிட்டு
சென்னைக்குச் சென்றதாகவும்

அவர்கள் கிளம்பு முன் இந்த வீட்டையும்  சுத்தம் செய்து
சமையலுக்குத் தேவையான பொருட்களையும் வாங்கி வைத்ததாகப்
பெரியவர்கள் பேசிக்கொண்ட நினைவு.. அப்போது தெரியுமா, அந்தக் குழுவில் இருந்த பேரனைத்தான் நான் மணம் முடிக்கப்
போகிறேன் என்று தெரியாமல் போய்விட்டது:))))





தோட்டப் பகுதி. (கொல்லைப் புறம்)



தாத்தா ஆராதனை செய்யும் நேரம்


திருக்குறுங்குடி மலை மேல் நம்பி பயணம் ஆரம்பம். தாத்தா பாட்டி, அம்மா அப்பா, நாங்கள் மூவர், இன்னோரு உறவினர். கற்பனை என்னுது. வடிவம் ஜெமினி ஏஐ:)

அழகிய நம்பி திருக்கோயில்


  அருள்மிகு மலைமேல் நம்பி.
 இப்பொழுதும் என் மாமா மகள் இந்த  மலை ஏறிச் சாதனை படைத்திருக்கிறாள்.  அவளுடைய மூட்டு வலியுடன் ஏறி இறங்கியது
நம்பியின் அருளை நம்பி மட்டும்.

மஹேந்திர கிரி மலையிலிருந்தே அனுமன் இலங்கையை நோக்கித்
தாவியதாக புராண வரலாறு.

பாட்டி அங்கே இருந்த மூன்று நாட்களும் எங்களுக்கு இரவு வேளை சாப்பாட்டைக் கையில் பிசைந்து போடுபோது, கதைகள் சொல்வார். நாம் பின் பக்கம் போய்ப்
பேசினால்  பெருமாளுக்குக் கேட்கும் என்று. நானும் என் தம்பிகளும்

வீட்டுக்குள் கூட மெதுவாகப் பேசிக்கொள்வோம்:) 
பிற்காலத்தில் தி ஜானகிராமன் கிராம  வீட்டு வர்ணனை
எனக்குப் புதிதாகவே தெரியவில்லை. 

எங்கள் திருக்குறுங்குடி வீட்டு அமைப்பாகவே தெரிந்தது.  தொடரலாம்



என்றும் நலமுடன் வாழ்க.

2008 இல் ஒரு அனுபவம்.

வல்லிசிம்ஹன் ஊரைச் சுற்றி வம்பு பிடித்து............. இன்னொமொரு வீகெண்ட் முடிந்தது. 14/7/2008 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++...