Sunday, April 19, 2026

திருக்குறுங்குடி நோக்கி....2


திருக்குறுங்குடி





வல்லிசிம்ஹன்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.


                                                          குறத்தி,  தன் குழந்தைகளுடன்  ,,,,நம்பி கோயிலில்.
மதுரைக்கு அடுத்த  நிறுத்தம்  ஶ்ரீவில்லிபுத்தூர்.  மொத்த குடும்பத்துக்கும்  ஆண்டாள் அம்மாவிடம் அதீதப்  ப்ரேமை.

அதனால்  ஓட்டுனர் மாயாண்டி  ,தாத்தா வின் விருப்பபடி கோவில் அருகே வந்து நிறுத்தினார்.  பலராமா பல பத்திரா சீட்டு விளையாடிக் கொண்டிருந்த நாங்கள் நால்வரும் கீழே இறக்கப் பட்டோம்:)"வெறும் சீட்டு விளையாட்டு மட்டுமல்ல அது, நாங்களே கார்ட்போர்டு அட்டைகளைச் சதுரமாக வெட்டி, கைப்பட எழுதித் தயாரித்த எங்களின் பொக்கிஷம். மொத்தம் 54 கார்டுகள்! காரில் வரும்போது அந்தச் சீட்டுகளோடு எங்கள் நேரமும், நினைவுகளும் அத்தனை அழகாகக் கழிந்தன."

"அன்றைய காலத்து வண்டிகளில் 'டிக்கி' என்பது ஒரு தனி உலகம். சுமார் 5 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட அந்தப் பெரிய இடத்தில், அப்பா மெத்தை விரித்துத் தயார் செய்திருந்தார். எங்களைப் போன்ற சிறுவர்களுக்கு அது ஒரு மகா சௌகரியமான சொர்க்கம். வண்டி ஓடிக்கொண்டிருக்கும்போது அந்த மெத்தையில் அமர்ந்து கொண்டு பலராமா பலபத்திரா விளையாடுவது ஒரு தனி சுகம்."

பலராமா கார்டுகள் நாங்களே தயாரிப்போம். வீட்டுக்கு வரும் எந்த அட்டையும் எங்களைத் தாண்டிப் போகாது.:)
சின்னச் சின்னக் கத்திரிக்கோலால் 3"பை 3" கத்திரித்துக்
கடவுள்கள் பெயர்களை பென்சிலால் எழுதி( பேனாவுக்கு அனுமதி 
இல்லை) மிகுந்த சிரமப் பட்டுத் தயாரிப்போம்.
இங்கே  தாத்தா பாட்டி பற்றி ஒரு சிறு குறிப்பு.

"எங்கள் பாட்டி திருவேங்கடம், தாத்தா ஸ்ரீநிவாசன். பெயரிலேயே மஹா பெயர்ப் பொருத்தம்! அந்தப் பெயர்களுக்குள் அடங்கியிருந்த தெய்வீகமும் அன்பும் தான் எங்களை அந்த 14 ஆண்டுகள் பத்திரமாக அரவணைத்தன. பாட்டிக்குச் சர்க்கரை வியாதி இருந்தும், எங்களைப் பசி ஆற வைப்பதிலேயே அவர் குறியாக இருந்தார்."



பாட்டி  கொண்டு வந்திருந்த ஜமக்காளத்தைக் 
கோவில்
முன் பிரகாரத்தில் கடைகளிலிருந்து ஒதுங்கி இருந்த
இடத்தில் இரண்டு தூண்களுக்கு இடையில்
விரித்தார் அப்பா. சித்தப்பா உணவுப் பாத்திரங்களையும் 
பெரிய  தெர்மாஸ்  குடுவையையும்  கொண்டு வர
தண்ணீர்க் குடத்தை நான் தூக்கிவந்தேன். 
முதல்னாளே  தயாரித்து வைத்திருந்த பொல பொல சாதம்.
இரண்டு பெரிய பாத்திரங்களில் புளியோதரையாகவும் , தயிர் சாதமாகவும்   மணம் வீசியபடி இருந்தன. 
கூடவே ஒரு கூடையில் அப்பள வடகங்கள்.  ஒரு சின்ன எவெர்சில்வரில் சம்புடத்தில்  துண்டு போட்ட மாங்காய் ஊறுகாய்

என்று ஒரே  அமர்க்களம் தான்.  அம்மா, சித்தி,பாட்டி அனைவரும் விறகடுப்பில் சமைத்த உணவு.
இந்தத் தாம்பாளம் எங்கே போச்சோ:)
ஸ்ரிவில்லிபுத்தூர் கோவில் பிராகாரம்,   அங்கே இனிமையாகக்
கூவிக்கொண்டிருந்த கிளிகள், பூக்கடைகளின் 
மல்லிகை மணம், யானைக் கொட்டாரத்திலிருந்து வந்த
பிளிறல் சத்தம், கோவில் மேளக் கொட்டு,நாதஸ்வர இசை,
உள்ளே தாயாருக்கு நடக்கும் அர்ச்சனைகள் ஒலிகள்

எல்லாம் மிக இனிமையாக இன்னும் என் மனதில் நிற்கின்றன.
அடுத்தாற்போல்  திருனெல்வேலி பக்கம் நகர வேண்டும்.
மீண்டும் பார்க்கலாமா. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!




Friday, April 17, 2026

1957 இல் திருக்குறுங்குடி நோக்கி ஒரு பயணம் Part 1



வல்லிசிம்ஹன்
1957 செவர்லெ ஸ்டேஷன் வாகனம்:)
தாத்தாவுக்குத் தான் பிறந்த ஊரைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல்
திடீரென்று அதிகரித்தது.

குறுங்குடி நம்பி கோயிலில் இருந்து  வந்திருந்த அர்ச்சகர் ஸ்வாமிகள்
கொடுத்த செய்திதான் காரணம். 

ஊரில் இருந்தவர்கள் எல்லாம் குடும்ப நிமித்தம் வேறு வேறு
இடங்களுக்குச் சென்று விட்ட நிலையில் பெருமாளுக்கு
ஒரு வேளை தான்  ஆராதனை நடப்பதாகவும்
 வஸ்த்திரம் தட்டுப்பாடுகள் இருப்பதாகவும் சொன்னபோது
மனம் வருத்தத்தில்  ஆழ்ந்து விட்டது.(இது  70 வருடத்துக்கு முந்திய கதை. இப்போது எல்லாம் திருத்தப் பட்டு விட்டது.)

ஒரு கிராம சூழல். 

திருக்குறுங்குடி ஆறு. 1957 மே மாத வெய்யிலில் எங்கள் வண்டி தாத்தா பாட்டி அப்பா அம்மா நாங்கள் மூவர். சித்தப்பா
சித்தி அவரின்  பெண். என்று பத்து நபர்களை ஏற்றிக்கொண்டு பழங்கானத்தத்தை விட்டுக் கிளம்பியது. தொடரும்.....






Tuesday, April 14, 2026

14 th April Parabhava New Year.

வல்லிசிம்ஹன்  

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நல்ல செய்திகளே காதில் வந்து சேரவும் அனைவரும் இனிய வாழ்வு பெறவும் இறைவன் 
அருள பிரார்த்திக்கிறேன்.

வாழ்க வளமுடன்.

Sunday, April 12, 2026

Asha Bhosle

வல்லிசிம்ஹன்
12th April 2026. 

The world lost a glorious voice  which will echoing in our hearts. Rest in Peace,

Thursday, March 26, 2026

ராமா நீயே சரணம்

வல்லிசிம்ஹன்

திரு.மகராஜபுரம் சந்தானம் 'ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா'
என்று பாடும்போது எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார் இவர் இந்த ராம நாமத்தைப் பாட என்று நினைத்துக் கொள்வேன்.
கேட்பதற்கும் நமக்குக் காதுகளும் கொடுத்தாரே இந்த ராமன்!!
மகான்கள் பாடும் போதும் ,ராமனைப் பற்றி உபன்யாசங்கள் கேட்கும் போதும் இந்த பக்தியும் பற்றுதலும் எப்படி என்னுள்ளும் மற்றவர்கள் உள்ளத்திலும் வளர்ந்தது என்று உணரும்போது ஏற்படும் சிலிர்ப்பு சொல்ல முடியாதது.
வெறும் சாதாரண கடைநிலை மனுஷிக்கே இந்த உணர்வு வரும் என்றால்,
பக்த ராமதாஸ்,தியாகய்யா இவர்களின் பக்தியைய் என்ன சொல்வது.
ராமா உன்னை நேருக்கு நேர் பார்த்தவர்கள்,உன்னை தன்
ஒவ்வொரு அணுவிலும் உணர்ந்த இந்த மகானுபாவர்களை
எப்படி ஏற்றிப் புகழ்வது.!
எவ்வளவு கோடி முறை உன்னை நாவால் பூசித்தாலும்,மனசால் ஸ்மரித்தாலும்,உடலால் வணங்கினாலும் இந்த பக்தி கிடைக்குமோ ராமா.
எங்கே தேடினால் வருவாய்.
ராமா நீ
மதுராந்தக ஏரிக்கரையிலா
பத்ராசல சிறைச்சாலையிலா
தியாகய்யாவின் நிறைவிடத்திலா
பக்தர்களின் உள்ளத்தில் நிறைந்தவனே வெளியே தேட வேண்டாம் உன்னை. என்னுள்ளே இருக்கும் ராமனையே துதிக்கிறேன்.
வாழி பல்லாண்டு உன் சீதையுடனும்
உன்னுயிர்ச் சகோதரர்களுடனும்.
சிரஞ்சீவிஅனுமனுடன்
விபீஷண சுக்ரிவர்களோடு

எப்பொழுதும்
 எங்களோடு நீ இரு.
 ராமன் மீண்டும் வருகிறான். மார்ச் 27 ஆம் நாள், பங்குனி 13 ஆம் நாள்...
அவன் வருவதற்கு ஆயத்தம் செய்ய வேண்டாமா?
அதற்குத்தான் இந்தப் பதிவு.:)
-


Friday, March 13, 2026

சிங்கம் மீட்ட கன்றுக்குட்டி.

வல்லிசிம்ஹன்


இந்தக் கதை சிங்கத்தின் பதினாறு வயதில் நடந்தது. அப்பொழுது இருந்த 12   க்ரவுண்டில்    பெரிய அளவில் தோட்டம் துறவு ,மாடுகள் கன்றுகள்  என்று  இருந்தது.       மாமனார் பண்ணை நடத்திவந்தார்.   தீவன வியாபாரமும் செய்து வந்தார்.  
  சிங்கம் சாருக்குப் படிப்பு முடிந்து விடுமுறை.
 மும்பையிலிருந்து சென்னைக்கு வந்த புதிது.                                    புதிதாகச் சேர்ந்த நண்பர்களுடன் சென்னையை  வலம் வந்து  அவ்வப்போது அப்பாவின் செவர்லே காரையும் ஓட்டப் பழகி ,

அதை இடித்துத் திட்டு வாங்கி  எல்லாக் கலகங்களும் நடந்த நேரம்.                        தாத்தா   கண்டிப்புக்குப் பயந்து   தினமும் வீட்டுக்கு வரும் நேரம்   மழைநீர்க் குழாயைப் பிடித்து ஏறித் தன் படுக்கை அறைக்குப் போய்விடுவாரம். இந்த   விஷமங்களுக்கெல்லாம் துணை அவரின் அன்பு சித்தி.     மறுநாள் தாத்தா கேட்டால் நான் எட்டு மணிக்கே வந்துட்டேன் . சித்திதான் கதவைத் திறந்தார் என்பாராம்.                                                                                    
 இப்படி ஒரு காலை   கன்றுக்குட்டி ஒன்று  அம்மாவைப் பிரிந்து வீட்டுக்குள் ஓடிவந்து விட்டது. அது வழி தெரியாமல் அங்குமிங்கும்     துள்ளிக்குதித்து எல்லோரையும் மிரளவைத்து தானு மிரண்டு புழக்கடையை நோக்கிப் பாய்ந்தது. அதன் அம்மா   லக்ஷ்மி ஒரு பக்கம் கதற ,கன்னுக்குட்டி பாய நடுவி   தோட்டத்துக்கான  10 அடி       விட்டக் கிணறு குறுக்கிட்டது.  இளங்கன்று.....கிணற்றைத்தாண்டப்   பார்த்துக்    கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.  
           உடனே வீட்டில்  உள்ள அனைவரும்  அலற ஆரம்பித்துவிட்டனர். மாடுகளைப் பார்த்துக் கொள்ளும் அய்யனார்  தன்னால் முடியாது என்று கைவிரிக்க  கன்றுக்குட்டி  தத்தளிக்க ஆரம்பித்தது. நல்ல ஆழக் கிணறு.
எதேச்சையாக வீட்டில் இருந்த மாடியில் இருந்து இந்த அமர்க்களத்தைக் கேட்டிருக்கிறார்.                                    மிச்சதெல்லாம் நான் சொல்ல வேண்டுமா. ராட்டினக் கயிற்றைத் தன் இடுப்பில் கட்டிகொண்டு சரசர்வென கிணற்றில்  இறங்கிவிட்டார்.    கன்றுக்குட்டி இன்னும் மிரள. கண்ணனின் தாய் யசோதையாக எங்க மாமியார் கைகளைப் பிசைய  கன்றுக்குட்டியைப் பிடித்துவிட்டார். நல்ல கொழு கொழு  கன்று நல்ல ஊட்டமிக்கது. எடையும்   நிறைய.   நீ மேல வாடான்னு அலறல் மாமியாரிடமிருந்து.  இதோம்மா என்று தன் கயிற்றைக் கன்றுக்குட்டியின் மேல் கட்டி மேலே இழுக்கச் சொல்லி விட்டு                                கிணற்றின்    சுவற்றில்  இருக்கும் பள்ளங்களைப் பிடித்துக் கொண்டு மேலே வந்தாராம்.  பாவம் எங்க மாமியார்.. அதிலிருந்து அந்தக் கிணற்றுக்கு வலை எல்லாம் போட்டு மூடினார்களாம்.


திருக்குறுங்குடி நோக்கி....2

திருக்குறுங்குடி வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.                                                           குறத்தி,  தன் குழந்தை...