Friday, May 15, 2026

மறு பக்கம்.

வல்லிசிம்ஹன்






 ஒரு புலிவால்

நான் சமூக வலைதளங்களில் அமெரிக்காவிற்கு படிக்க சென்ற பெண்/ பிள்ளைகள் திரும்பி வருவதில்லை . பெற்றோரின் கடைசி காலத்தில் அவர்களுடன் வந்து இருப்பதில்லை . அவர்கள் அந்த சௌகரியத்திற்கு பழகி விட்டார்கள் திரும்பி வர மனமில்லை என்று பலர் எழுதுவதை பார்த்திருக்கிறேன். அவர்கள் நினைப்பது அவர்கள் பணமும் வசதியுமே பெரியது என்று அங்கு போகிறார்கள் என்று. 

ஆனால் Ground reality வேறு. 

நாணயத்துக்கு 2 பக்கம் உண்டு. நான் அவர்கள் பக்கத்தையும் பார்க்க விரும்புகிறேன்.  அவர்களாகவே foreign college க்கு apply செய்து போவதில்லை. நாமதான் அனுப்பறோம். ஆனால் தான் விரும்பிய படிப்பை படிக்க வரும் குழந்தைகளின் student life எப்படிபட்டது தெரியுமா? Middle class அப்பாவால் fees boarding கொஞ்சம் கைச்செலவுக்கு மட்டும்தான் பணம் அனுப்பமுடியும். எல்லோருக்கும் scholarship கிடைப்பதில்லை .நிறைய குழந்தைகள் பணத்தேவைக்காக அந்த குளிரில் part time வேலை செய்யும். வீட்டில் சாப்பிட்ட தட்டை அலம்பாத பையன் அங்கே hotelல் தட்டை எடுத்து table clean பண்ணுவான். வீட்டில் துடைப்பத்தை எடுத்து பெருக்காத பெண் அங்கு canteenல் தரைக்கு mob போடுவாள். வீட்டு வேலை செய்ய ஆண் பெண் வித்தியாசம் இல்லை என்பதை அம்மா சொல்லி தர மாட்டாள். அமெரிக்கா சொல்லி தரும். 

Vacationல் அமெரிக்க குழந்தைகள் அவரவர்கள் வீட்டிற்கு போய்விடும். உறவினர்கள் யாராவது அமெரிக்காவில் இருந்து அவர்கள் மனது வைத்து நம் குழந்தைகளை ticket வாங்கி அழைத்துக்கொண்டால் உண்டு. இல்லையென்றால் homesickல் அம்மாவை நினைத்துக்கொண்டு அழுது கொண்டிருக்கும்.
படிப்பு மிகவும் கடினம். நல்ல grade வாங்கவில்லை என்றால் collegeல் திருப்பி அனுப்பி விடுவார்கள். Tension.
படிப்பு முடிந்தவுடன் ஒரு வருடத்திற்குள் வேலை கிடைக்கவில்லை என்றால் திரும்பி போக வேண்டும் . பணம் waste. அப்பா மூஞ்சியை திருப்புவார். Tension.
வேலை கிடைத்தவுடன் 3 வருடத்திற்குள் h1b work visa lotteryல் விழ வேண்டும்.இல்லாவிட்டால் திரும்பி போக
வேண்டும். Tension. 
 
இத்தனையையும் தாண்டி வந்தால் அடுத்தது கல்யாணம். இங்கே வேலை பார்க்க தகுதி உள்ள பெண்/பையன் அல்லது இங்கேயே வேலை பார்ப்பவர்களை பார்க்க வேண்டும். இந்தியாவாக இருந்தால் படிப்பு, வேலை, family background பார்த்தால் போதும்.
இங்கே location, career முக்யம்.
North carolina, south carolina - 
Low cost area. Bay area, California. அதே area வரன்தான் வேண்டும். cost of living அதிகம். வேறு state வரன் என்றால் வேலையை விட்டு விட்டு இங்கு வந்து வேலை தேட முடியாது.  Visa transfer ,amendment என்று ஏகப்பட்ட ப்ரச்னை. ஒருசம்பளத்தில் California வில் குடுத்தனம் பண்ண முடியாது.
Minasotta, Detroit, Chicago - snow area- 
Social drinking- NO
பாதி பேர் west coast california Bay areaல் இருப்பார்கள். அவர்கள் east coast வரன்களை திரும்பி கூட பார்க்க மாட்டார்கள். 
இந்தியாவிலிருந்து பெண்/பையன் கல்யாணம் பண்ணிக்கொண்டு இங்கு வந்தால் அவர்கள் இங்கு வேலை பார்க்க EAD permit உள்ள வரன் வேண்டும். வீட்டில் வருடக்கணக்கில் வேலைக்கு போகாமல் உட்கார்ந்து இருக்க முடியாது.அப்படியே வேலை பார்த்தாலும் dependent visa என்றால் ஒருத்தருக்கு வேலை போனால் அடுத்தவருக்கும் போய்விடும். இப்போதெல்லாம் இந்தியாவிலேயே எல்லா வசதியும் இருப்பதால் கல்யாணம் பண்ணிக்கொண்டு அமெரிக்கா வர யாரும் ஆர்வம் காட்டுவதும் இல்லை.
Citizen வரன்கள் born and brought up in USA வரன்தான் வேண்டும் என்பார்கள்.
அதற்குள் நிறைய குழந்தைகளுக்குஇந்த ஊர் climate ,தண்ணிக்கு முடி கொட்டிவிடும். இதெல்லாம் தெரியாமல் இந்தியாவில் அப்பா அம்மா நட்சத்திர பொருத்தம் ஜாதக பொருத்தம் பார்த்துக்கொண்டு வரும் வரனையெல்லாம் reject பண்ணிக்கொண்டிருப்பார்கள்.

2 வருடத்திற்கு ஒரு முறைதான் 3 weeks leave கிடைக்கும். இரண்டு குழந்தைகளுடன் ஒருமுறை இந்தியா போய் வந்தால் இரண்டு வருட savings காலி. 
பெற்றோர்கள் இங்கு வரும்போது அவர்களை Nayagara falls, New york, Sanfrancisco, Disneyland என்று சுற்றிக்காட்டிவிட்டு கைநிறைய சாமானும் வாங்கி கொடுத்து அனுப்புவார்கள். 

வயதான பெற்றோர்களை இங்கே அழைத்துக்கொண்டு வந்து வைத்துக்கொண்டால் life, health, பல்லுக்கு என்று தனித்தனியாக insurance எடுக்க வேண்டும். Insuranceல் cover ஆகாத வியாதி வந்தால் அவ்வளவுதான். சொத்தையே எழுதி வைக்க வேண்டும். 
Doctor appointment கிடைக்க நாட்கணக்கில் காத்திருக்க வேண்டும் அதற்குள் ஒண்ணு வந்த வியாதி அதுவாகவே  போய் விடும் அல்லது நாமளே போய்விடுவோம்.
Doctors உம் சனி, ஞாயிறு லீவு எடுப்பார்கள். சனி, ஞாயிறு உடம்புக்கு எதுவும் வரக்கூடாது என்று வேண்டிக் கொள்ள வேண்டும். 
Weekdaysல் நட்ட நடு பகல் நேரத்தில் doctor appointment குடுப்பார்கள். அப்போதுதான் இவர்களுக்கு office meeting இருக்கும். அதற்கு நடுவில் நமக்காக வருவார்கள். அதனால்தான் பணத்தை இந்தியாவுக்கு  அனுப்பி இங்கேயே ராஜ வைத்யம் பார்த்துக்கொள் என்கிறார்கள்.

நினைத்தபோது இந்தியா போக முடியுமா? முடியாது. சமீபத்தில் அப்பா மறைவுக்கு சொந்த ஊருக்கு போய் வந்த ஒரு பையனை companyல் ஆட்குறைப்பு நடவடிக்கையில் வேலையிலிருந்து தூக்கி விட்டார்கள்.
Survival முக்கியம். வேலை எப்போது போகுமோ என்ற பயத்திலேயே வாழ்க்கையை ஓட்ட வேண்டும். இப்போது இந்தியாவிலும் இப்படித்தான். Greencard கிடைக்க வருடங்கள் ஆகலாம். 

Coronaவா? ஊருக்கு போக முடியாது Stamping வாங்கலையா. இந்தியா போனால் stamping வாங்காமல் USA க்குள் திரும்ப முடியாது. Stamping வாங்க  Indian embassy slotக்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். நடுவில் அப்பா போனாலோ அம்மா போனாலோ USA வை விட்டு கிளம்ப முடியாது. ஊரார் சாபத்தையும் வாங்கிக்கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்கு குழந்தைகள் நிலைமை புரிந்தாலும் சுற்றி உள்ளவர்கள் பேசும்போது என்ன செய்வது. Society pressure.

சரி. பரவாயில்லை ஊரோடு போய்விடுவோம் என்றால் இங்கேயே பிறந்து வளர்ந்த குழந்தைகள் மக்கர் பண்ணும்.

இந்தியாவுக்கு திரும்பி போவதென்று முடிவு எடுத்தால் வீட்டு கடன் கார் கடன் என எல்லா கடனையும் அடைத்து விட்டு 
எஞ்சிய சொற்ப பணத்தோடு ஊர்போனால் மாசா மாசம் லட்சலட்சமாய் சம்பாதித்தெல்லாம் என்ன செய்தாய் என்று பெற்றோரை அலட்சியம் செய்ததாக சொன்னவர்கள் கேட்பார்கள். 

இந்தியாவுக்கு திரும்பி போனவர்களும் இருக்கிறார்கள். அது அவரவர் குடும்ப சூழ்நிலயை பொறுத்தது.
Company மூலமாக onsiteல் வந்து போகிறவர்களுக்கு இது பொருந்தாது. அவர்களுக்கு இந்தியா திரும்பி போனாலும் வேலை இருக்கும்.

இவ்வளவையும் தாண்டித்தான் இங்கு settle ஆனவர்கள் பெற்றோர்களை பார்க்க ஓடி வருகிறார்கள். இது அங்கிருப்பவர்களுக்கு புரிவதில்லை.

மொத்தத்தில் அமெரிக்கா புலி வால் பிடித்த கதைதான். விடவும் முடியாது. கூடவே ஓடவும் முடியாது.

அட இவ்வளவு கஷ்டம் இருந்தால் அப்படியாவது அமெரிக்கா போகாட்டா என்ன  என்கிறீர்களா.  மற்றவர்கள் நினைப்பது போல் பணம் வசதிக்காக மட்டும் யாரும் இங்கு வருவது இல்லை. இங்கு நிறைய கனவுகளோடு சாதிக்க வந்திருப்பவர்கள் அவரவர் துறையில் சாதித்தும்  இருக்கிறார்கள். இந்த மனித சமுதாயத்துக்கு நாம் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இங்கு படிப்பு/research வசதி வாய்ப்புகள் சற்று அதிகம். சொந்தமாக startup companyகள் ஆரம்பித்து அமெரிக்கர்களுக்கே வேலை கொடுக்கும் கண்ணுக்கு தெரியாத சுந்தர் பிச்சைகள் இங்கு ஏராளம். 

எனக்கு தெரிந்தவர் ஒருவரின் பையன் இங்கு ஆராய்ச்சி படிப்புக்கு வந்து ஒரு குறிப்பிட்ட cancerக்கு மருந்து கண்டு பிடித்து இங்குள்ளவர்களின் பாராட்டை பெற்றிருக்கிறார்.
வெறும் பணத்துக்காக என்று பொதுவாக முத்திரை குத்தாமல் “”அவர்களின்  கனவுகளையும் நாம் மதிப்போம்””” எப்போதோ  வந்த  செய்தி. இப்போதும் பொருந்துவதுதான் அதிசயம்.

Thursday, May 14, 2026

மே மாதத் திருமணங்கள்

வல்லிசிம்ஹன்

பெற்றோரின் திருமண நாள் மே 17 ஆம் தேதி.





இரண்டு தம்பிகளின் மண நாட்கள் மே  14 ம்
மே 31ஆம் தேதியும்.
 மே   17 நிகழ்வுகளை முன்பே பதிந்து விட்டேன்.

கீழ நத்தம் கிராமத்தில்  1943 இல் நடந்த அருமையான
சிறப்பான நிகழ்ச்சி. அந்தக் காலத்துக்கே உரிய
சுவையோடு நடந்தேறியது.

சாரட் வண்டி , மாப்பிள்ளை ஊர்வலம், 
சம்பந்தி பந்தாக்கள், பரிவு பாசம் இவற்றோடு

கலகலப்பாக  ,நிகழ்ந்த சிறப்பு.
இவற்றை வர்ணித்து சொன்னவர் என் அம்மாவின்
பாசமான தம்பி. இல்லாவிட்டால் இந்த நிகழ்வுகள் எனக்குத்
தெரியாமலே  போயிருக்கும். 
மாமாவுக்குக் குறிப்புகள் எழுதும் வழக்கம் இருந்ததால்

அதைப் படித்த எனக்கு இவ்வளவு விவரங்கள் தெரிய வந்தது.
நல்லதொரு ஆய்வுக் கட்டுரைக்கு வேண்டிய

குறிப்புகள். அந்தந்த தேதிகளில் பதிவு செய்திருக்கிறார்
என் அன்பு ஶ்ரீ ராமசாமி மாமா.
14 வயது ஜெயலக்‌ஷ்மிக்கும் 22 வயது ஶ்ரீ நாராயணனுக்கும் 1943இல் திருமணம்
நடந்தபோது  அம்மாவின் தம்பிகள்  முறையே 13, 11,4,2  என்ற வயதில் இருந்தார்கள்.

அம்மா அவர்களை எவ்வளவு நேசித்தார் என்று அனுமானிக்கவே முடியாது.
அக்காவுக்காக என்ன வேண்டுமானாலும் சேவை செய்ய அவர்கள்
 தயார். நான் கண்கூடாகப் பார்த்த பாசம். அவர்கள் இல்லாமல்
எங்கள் அனைவரின் வாழ்வும்  சிறந்திருக்குமா
என்று எண்ணிப் பார்க்க முடியாது.  வாழ்க வளமுடன்.


 நால்வர் ஶ்ரீ அம்பிமாமா, ஶ்ரீராமசாமி மாமா, ஶ்ரீ கோபு மாமா, ஶ்ரீ ஶ்ரீனிவாசன் மாமா.  இன்றும்( 85  வயது)என் நலனை விசாரிக்கும் கடைசி மாமா ஶ்ரீனிவாசன். கீழனத்தம் வீரராகவன் பெயரைச் சொல்லும் அருமைப்
புத்திரர்கள்.

முன்பெல்லாம் சித்திரை வைகாசியில் திருமணங்கள் நிச்சயிக்கப்படும்.

பள்ளி விடுமுறை நாட்களில் சங்கடம் இல்லாமல்
பெற்றோர் கலந்து கொள்வதற்காகச்  செய்யப்படும் ஏற்பாடு இது.

என் வீட்டுத் திருமணங்கள் எல்லாம் தை மாதத் திருவிழாக்கள்.

அனைவரும் சிறப்புடன் வாழப் பிரார்த்தனைகள்.



Monday, May 11, 2026

பழைய அனுபவம்.

வல்லிசிம்ஹன்

Wednesday, September 27, 2006இல் எழுதியது.
       அம்மா சரணம்.

நடந்த கதை 1974
வேறு யாரும் துணை இல்லாத போது..
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
டிசம்பர் மாதம் மிகவும் பிடித்தமாதம் எனக்கு.


படிப்பு, திருமணம் ,குழந்தைகள் பிறந்து அவைகளும் பள்ளி செல்ல ஆரம்பித்ததும் அவர்கள் லீவு நாட்களும்
இனிமையாகக் கழியும்.

அதனால் ஒரு டிசம்பர் சோதனையாக மாறும் என்று நான் நினைக்கவே இல்லை.
அப்போது நாங்கள் திருச்சியில் இருந்தோம்.

சிறு குழந்தைகள். ஒரு நாள் சாயந்திரம்
இவர் வீட்டுக்கு வரும் போதே கடும் காய்ச்சலுடன் வந்தார்.
எப்போதும் எதற்கும் அலட்டிக் கொள்ளாத ஆசாமி
சுருண்டு படுப்பதைப் பார்த்து
பயமாகி விட்டது.
சரி ஜுரத்துக்கு மருந்து கொடுப்போம் என்று ரசம் சாதமும்
பிறகு பாராசிடமால் ஒன்றும் கொடுத்து
தூங்கலாம் என்று பார்த்தால் இரவு 10.30 மணி வாக்கில் உடல் நெருப்பாகக் கொதிக்க சப்தமாக முனக ஆரம்பித்து விட்டார்.
குழந்தைகள் அரண்டு விட்டன.
அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள் ஏதொ அலுவலாக வெளீயூர் போயிருந்தார்கள். 
நாங்கள் இருந்த மன்னார்புரம்
அப்போது அவ்வளவாக ஜனநடமாட்டம்
இல்லாத இடம்.

வெளியே டெர்ரஸில் வந்து மலைக்கோட்டைப் பிள்ளையாரை (விளக்குகள் தெரியும்) வேண்டிக்கொண்டு,

கீழே போய், ரோடு தாண்டினால் இருக்கும் ஒரு காலேஜ்
ஹாஸ்டலில் மாணவர்களிடம் (நேஷனல் கல்லூரி) டாக்டர் கிடைப்பாரா 
என்று தெரிந்து கொண்டு
அவரை அங்கிருந்த போனிலேயே
எங்க வீட்டுக்கு வரச்சொல்லி
வேண்டிக்கொண்டேன்.
அப்போதுதான் அங்கிருந்த காலண்டரில்
நம்ம சமயபுரம் அம்மா இருந்தது தெரிய வந்தது.

சாமி ஞாபகம் வருவது நமக்கு எமர்ஜென்சி டயத்தில் தானே. 
உடனே அவளைக் கைகூப்பிக் காப்பாத்து
என்று சொல்லி விட்டு,
வீட்டுக்குத் திரும்பினேன்.
டாக்டர் எங்கேயோ இருப்பவர். பெயர் கூடத் தெரியாது.

என் 26 வயதில் 
இப்போது இருக்கும் தெளிவோ
துணிவோ கிடையாது. :))) இப்போ இன்னும் 
20 வருடங்கள் சேர்த்தால் 50 வருடங்களுக்கு முன்!!!!!

ஆனால் டாக்டர் சொன்னதென்னவோ பெரிய வார்த்தை.
இவர் மேல் அம்மா வந்து இருக்கிறாள் என்று.
சிக்கன்பாக்ஸ்.

அறியாமை ,பயம் நிறைய என்னை ஆட்கொள்ள
அடுத்த வேண்டுதல் சமயபுரத்து மாரியிடம்தான்.

நீ காப்பாத்து என்பதைத் தவிர அந்த இரவு வேறு எந்த வார்த்தைகளும் என்னிடமிருந்து.

டெலிபோன் எல்லாம் வீட்டில் அப்போது கிடையாது.
காலை நெருங்கும்போது கொஞ்சம் தெளிவு வந்தது.

எங்கள் வீட்டு வேலைக்கார அம்மா பேரு மேரி.
அவங்க வந்ததும் அவரிடம் நானும் குழந்தைகளும்
அடைக்கலம்.

அவர்தான் எங்களைத் தேற்றினார்.
அய்யா வயசில (34) பெரியவரு இல்லை. வந்தா எல்லாம் கொஞ்சம் பயமாக இருக்கும்.
20 நாளில் எல்லாம் சரியாகி விடும்
என்று எனக்கு இந்த சமயம் செய்ய வேண்டிய பத்திய சாப்பாடு, வேப்பிலை பற்றி எல்லாம் சொல்லிக் கொடுத்தார்.
மறக்காமல் கடைக்குப் போய் (அப்போது) இரண்டு ரூபாய் விலையில் சமயபுரம் அம்மாவின் படமும் வாங்கி வந்தார்கள்.

என் பெற்றொருக்கும் இவர் பெற்றொருக்கும் கடிதங்கள் எழுதி போஸ்ட் செய்யச் சொன்னேன்.
பதில் 2 நாள் கழித்து வந்தது.
இருவராலும் வரமுடியாத நிலை.

அப்போது எனக்கு இன்னும் தைரியம் வந்தது.
இரண்டு நாட்களில்
 மூன்று குழந்தைகளுக்கும்
பரவி விட்டது.
அப்புறம் கேப்பானேன்.
திருச்செங்கோடு வாடிக்கையாளர்,வயதானவர் பார்க்க வந்து வெளியிலேயே
நின்று எனக்கு ஆதரவு சொல்லி,,
 ஒரு வாரத்துக்குத் தேவையான
இளனீர் அனுப்புவதாகச் சொல்லி அனுப்பிக் கொண்டே இருந்தார்.

அலுவலகப் பியூன் மணி இரண்டு குடங்களில்
தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். அங்கு
கிணற்றுத் தண்ணீர் உப்புக் கரிக்கும்!!

எல்லோருக்கும் தயிர் சாதம், இளநிர்,
பச்சை வெங்காயம், பூண்டு போட கீரை,
தக்காளி சூப்.
இதெதான் காலையும் மாலையும்.எண்ணெய் அடுப்பில் வைக்கக் கூடாது.
கடுகு சத்தம் ஆகாது எல்லாம் எனக்கு சொல்லப் பட்ட அறிவுரைகள்.

இரு வாரம் சென்றதும் மேரியம்மா
பருத்திக்கொட்டை கொண்டு வந்தார்.
எதற்கு என்றபோது அவைகளை ஊற வைத்து
பால் எடுத்து இவர்கள் குடிக்க வேண்டும் என்று

எடுத்து வைத்தார்.
இதுவரை பருத்தியும் பசுவும் தெரியும்
மனிதர்கள் சாப்பிடுவார்கள் என்று தெரியாது.
வேப்பிலை மஞ்சள் அரைத்துக் கொடுப்பது,
எப்போதும் துணையாகப் படுப்பது
என்று
சமயசஞ்சீவியாக வந்தது, காப்பாற்றியது அந்த அம்மாதான் என்று உணர்கிறேன்.

இது எங்கள் எல்லோருக்கும் சேர்ந்து
அனுபவமானதால் இன்னும் குடும்பத்தில் நெருக்கம்
சேர்ந்தது.
ஏனெனில் அப்பா என்பவரைப் பார்ப்பதே
குழந்தைகளுக்கு அபூர்வம்.
மூன்று வாரங்கள் அப்பா அவர்களுடன் வீட்டில் இருந்து
அவர்களோடு கதை பேசினது,
எல்லாம் நல்ல விதமாக முடிந்தது.
நாங்களும் சமயபுரம் 3 வாரங்கள் போய் வந்தோம்.
மேரியம்மாவுக்கு நான் என்ன கொடுத்து
கடன் தீர்க்க முடியும்?
அவருடைய இஷ்ட தெய்வமான வேளாங்கண்ணி அம்மாவுக்கு மெழுகு வர்த்தி ஏத்த சொன்னார்கள் செய்து விட்டேன்.
காலத்தில் செய்த உதவி.
அவர்கள் பேரன் பேத்தி கல்யாணங்கள்
முடிந்தததாக அறிந்தேன்.
நான் தினமும் செய்யும் வழிபாட்டில் மேரிக்கு எப்போதும் இடம் உண்டு.
திக்கற்றவற்குத் தெய்வமே துணை.
தெய்வம் மனித ரூபத்தில்
வந்து விட்டது.
- September 27, 2006  

Thursday, May 07, 2026

மதுரை மீளும் 1957 பயணம் 8

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்

கூகிள் படம்:)





        தம்பி முரளியும் பேத்தியும்

தம்பி ரங்கன்.
கோவில் பிரகாரம்.
மதுரையை நெருங்கும் நேரம்  திருப்பரங்குன்ற சாலை.

ஶ்ரீமன் நாராயணன்.

அடுத்த பயணம்  அடுத்த வாரம்.:)
தவறாக சேர்ந்து கொண்ட ரோஜாக் கூட்டம்:)


தம்பிகளோடும் பெற்றோர் தாத்தா பாட்டியுடன் செய்த பயணம் என்பதால்
பட உருவில் அவர்களை இணைத்துக் கொண்டேன்.

குமரித் தெய்வத்தை வழிபட்ட கையோடு  மதுரையை நோக்கித்
திரும்பியது வண்டி.

தென்காசியில்  சாரலை அனுபவித்துக்கொண்டே  பக்கோடா
வாங்கி ருசித்ததாக ஒரு நினைவு.  கடலை மிட்டாய்ப் பிரியனான
தம்பிக்காக அதையும் வாங்கிக் கொண்டோம்.

இரண்டு மணி நேரத்தில் பழங்கா நத்தம் வந்து விட்டது.

பெரியவர்களுக்கு அலுப்பு இருந்தாலும்
அடுப்பை மூட்டி சாதம் வடித்துத் தயிர்சாதம்  செய்ய முடிந்தது. பின் வீட்டில்
பாட்டியின் தங்கை குடி இருந்ததால் தயிரும் பாலும் கிடைத்தது:)


ரங்கச் சித்தி பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பார். 
குசும்பும் ஜாஸ்தி. அவர்கள் வீட்டிலும் இரண்டு பேரன்  ஒரு பேத்தி.

இவர்கள் வீட்டுக்கு அழைக்கப் பட்ட சிங்கத்தை
வளைத்துப் போட்டது நான்:)அது பத்து வருடங்களுக்குப்
பிறகு  நடந்த கதை:)

யாருக்கு மாப்பிள்ளை யாரோ ...இதுதான் உண்மை.

இந்த அருமையான அழகான பயணத்தில் என் நினைவில்
இருந்ததைப் பகிர்ந்தேன்.
அப்பாவிடம் கேட்டிருந்தால் அழகாகச் சொல்லி இருப்பார்.
அப்படி ஒரு மோகம் தன் ஊரின் மேல்.
1995 டிசம்பரில் தன் ஊருக்குப் போய் வந்தார். நானும்
போயிருக்க வேண்டியதுதான். அப்போது பார்த்து

எனக்கு ரத்த அழுத்தம் கூடிப் போய்த் தேவகியில் 
அனுமதிக்கப் பட்டேன்.  பாவம் அப்பா. தவித்துப் போனார். 
அப்போதிருந்த டாக்டர்  என்னை நன்றாகப் பார்த்துக் 
கொள்வதாக உறுதி அளித்ததும் அவர்கள் அனைவரும் 
கிளம்பினார்கள்.

நீண்ட காலத்துக்குப் பிறகு  2019இல் நானும் பசங்களும் போனோம்.

அப்பாவின் பரவசத்தை என்னால் அந்த ஊரில்
உணர முடிந்தது.
எங்களூர் நம்பி எல்லோரையும் காப்பார்.
இதுவரை என்னுடன் பயணித்து ஆதரவு கொடுத்த அனைவருக்கும்
நன்றி. வாழ்க வளமுடன்.

Wednesday, May 06, 2026

2008 இல் ஒரு அனுபவம்.

வல்லிசிம்ஹன்






ஊரைச் சுற்றி வம்பு பிடித்து.............
இன்னொமொரு வீகெண்ட் முடிந்தது. 14/7/2008
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வெள்ளி காலை, வீட்டுக்கு வெளியே இருக்கும் /////corridor
வராந்தா,வழிப்பாதையில் இருந்த(நான்கு ஐந்து ஃபயர் அலார்ம் இருக்கு)
மணி விடாமல் ஒலித்தது. நான் வந்த பிறகு இவ்வாறு ஒலிப்பது இது நாலாவது தடவை. நாந்தான் அவசர அவசரமாக வெளியே வருவேன். காரிடார் நிசப்தமாக இருக்கும்.
இந்த அமைப்பு எனக்குப் புரியவில்லை. ஏன் ஒருத்தருக்கும் பயம் கிடையாதா என்று இங்கே கேட்டால், அது அலார்ம் சரியில்லைம்மா என்கிறார்கள்.
அப்புறம் தெரிந்தது,யாரோ ஒருத்தர் , வெளி ஆள் புகைபிடித்திருக்கிறார் என்று.
அப்ப உண்மையாவே ஏதாவது நெருக்கடி வந்தால்(வராம இருக்கணும் சாமி)
மெத்தனமாகவே இருந்து விடுவார்களா:(
இந்த பில்டிங்கில் தமிழ்க்காரர்கள் 4 பேர் இருப்பார்கள் . மற்றவரெல்லாம் ஐரோப்பியர்கள்,மற்றும் அண்டை நாட்டவர்கள்.
பகல் இரவென்று வேலைக்குப் போய் வருபவர்கள், பூட்ஸ் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.
மத்தபடி அமைதியான இடம்தான். பக்கத்து வீட்டுகாரர் கூட ராத்திரி 11 மணிக்கு ட்ரில்லிங் செய்வதை நிறுத்தி விட்டார்:)
அவர் பைலட்டாக வேலை செய்பவர். அவருக்கு விமானம் ஓட்டும் போது விதவித உத்திகள் தோன்றுமாம்:).அப்படியே நினைவில் பதிந்து கொண்டு வருகிற வழியில் ரெண்டு கட்டை வாங்கிக் கொண்டு வந்து விடுவார்.
சரியாக என் தலைப் பக்கம் ,
அவங்க வீட்டுச் சுவற்றின் பக்கத்தில் 10 மணிக்கு நான் தூங்கும் நேரம்,சரியாகப் பார்த்து அந்த வண்டு செய்யும்ரீங்காரம் மாதிரி சவுண்டு ஆரம்பிக்கும்.
எனக்குக் ( கனவில்) பெருச்சாளி பக்கத்தில் உட்கார்ந்து பிராண்டுவது போல
கற்பனை தோன்றும்.
அப்புறம் கட்டிடக் காவலுக்கு இருப்பவரிடம் சொல்லி ஒரு மாதிரி அதைச் சமாளித்தோம்.
இப்படியாகத் தானே ஊரை விட்டுக் கிளம்ப இன்னும் இரண்டே வாரம் இருக்கும் இந்த சமயத்தில் திடீரென நாலாவது அபார்ட்மெண்டில் இருக்கும்
ஒரு எகிப்து நாட்டுப் பெண் வந்து கதவைத் தட்டினாள். அவளையும் அவள் குழந்தையையும் மாடியில் நீச்சல் குளத்தருகே பார்த்த ஞாபகம்.
மொழி தெரியாததால் புன்னகையோடு நிறுத்திக் கொள்வேன்.
இந்த மதிய வேளையில் என்ன பிரச்சினையோ தெரியலையே என்று எனக்கு யோசனை.
குழந்தையும் கூட இருந்தது. அவள் சொன்ன அரை குறை இந்தியின் விஷயம் இதுதான்.
அவர்கள் வீட்டில் வேலை செய்யும் குணா திடீரென்று தன் கையில்
வைத்து இருந்த பாத்திரத்தை விட்டெறிந்து விட்டாளாம்.
பெருக்கும் துடப்பத்தையும் தூக்கிப் போட்டு விட்டாளாம். கத்த வேறு செய்கிறாளாம்.
என்னவென்று விசாரிக்க எங்க மருமகளைக் கூப்பிட வந்திருக்கிறாள்.
நான் பாப்பாவைப் பார்த்துக்கிறேன் ,நீ என்னவென்று விசாரித்துவிட்டு வா,
எதுக்கும் தள்ளி நின்னே பேசும்மான்னு சொல்லி அனுப்பினேன்.
நிறைய இடங்களில் வீட்டு வேலை செய்பவள் அந்த குணா என்கிற பெண்.
நல்ல சம்பளம். நாலைந்து பெண்களோடு வில்லா எனப்படும் குடி இருப்பில் இருப்பவள்.ஆனால் கொஞ்சம் முரடு.
கறார் ஆசாமி.
மருமகள் போய்விட்டு வந்து சொன்ன கதை இதுதான்.
நாலாம் வீட்டுக்கு ப் பெற்றோர்கள் வந்திருப்பதால் வேலை அதிகரித்து விட்டது.
அதற்காகப் பணம் கூடுதலாகத் தரச் சொல்லி கேட்டிருக்கிறாள் குணா.
''சரோஜா பாத்திரம் நிக்காலோ'' அப்டீன்னு சொல்கிறதாக நினைத்துக் கொண்டு மாமியார்க்காரி இன்னும் நிறைய பாத்திரங்களை, அலமாரியில் இருந்து எடுத்துப் போட்டு இருக்கிறாள்:)
''இத்னா பஹுத் காம்!!, ஹம்
'அவுர் குச் பைசா ,800 டிர்ஹம் ''னு அவள் சொன்னதை
அந்த அம்மா புரிந்து கொள்ளாமல் இன்னும் வேலை கொடுக்க இவளுக்குக் கோபம் வந்து கையிலிருந்ததை விட்டெறிந்ததும்.
மாமியாரும்,மாமனாரும் வெளியே வந்துவிட்டார்கள்:)
குணாவின் ஹிந்தி என் ஹிந்தியைவிட மோசம். அவள் அரபி, இந்தி கலந்து பேசுவாள்.
அவர்கள் புரிதலோ அதைவிட மோசம்.
நாளைக்குத்தான் தெரியும் குணா மறுபடி வேலைக்கு வருவாளா என்று 30ஆம் தேதியாச்சே. சம்பள நாள்.
தற்போது மெயிட்ஸ் மாநாடு லிஃப்ட் பக்கத்தில் நடக்கிறது. என்ன ஆகிறது என்று பார்க்கலாம்.!!

பயணக் களைப்பில் இருந்து வெளியே வர பழைய பதிவு 2008 இல் எழுதியதைப் பகிர்கிறேன்:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))


எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

Monday, May 04, 2026

கன்யாகுமரி ......1957 பாகம் 7.

வல்லிசிம்ஹன்
எல்லோரும்  வளமாக வாழ வேண்டும்.




மேலே இருக்கும் படம்  எங்கள்  குடும்பப் படத்திலிருந்து அமைக்கப் பட்டது:)
                                           ++++++++++++++++++++++++++++++++++++++++++++



கன்யாகுமரி கடற்கரையில் குடும்பம்.


இந்தப் படத்தைப் பார்க்கும் போது என் பெற்றோர் நினைவில் வந்தனர்.


திருக்குறுங்குடியிலிருந்து கிளம்பி  திருச்செந்தூர்  வந்தோம்.

அந்தப் பிராகாரம்  செல்லும் மண்டபப் பாதையில் காற்றும் மேகமும் சூழ்ந்திருந்தது. அங்கு உட்கார்ந்து  மதிய உணவை உண்டதும்
நினைவில் இருக்கிறது.  

இப்போது எல்லாம் மாறி இருக்கலாம். தாத்தா பாட்டி வண்டியில்
அமர்ந்திருக்க நாங்கள் மட்டும் கடலருகே நின்று 
முருகன் சன்னிதிக்கும் சென்று வந்தோம்.


இந்தப் பாடல் வெளிவந்த போது நாங்கள்  திருச்சியில் இருந்தோம்.

நாங்கள்  சென்ற போது  இவ்வளவு கூட்டம் இருக்கவில்லை.

''ஆவணி ,மாசியிலும், வரும் ஐப்பசித் திங்களிலும்''
என்ற  வரி பாடலில் இருக்கிறது.   தை மாதம் தாத்தாவின் 

பிறந்த நாள் ( 78ஆவது) கொண்டாடினோம். 
தாத்தாவுக்கு எப்பொழுதும்  ஆஸ்துமா இருமல்  இருக்கும்.

இந்தத் தொல்லைகளிலிருந்து விடுபட இந்தக் கோவில்
பயணங்களை மேற் கொண்டிருக்கலாம்.

 மதிய சாப்பாடு முடிந்ததும்  மீண்டும் அலைகளில்
அருகினில் சென்றோம். கடல்  கொஞ்சம் உள் வாங்கி இருந்தது.
அதை நம்பி  அலைகள்  பக்கம் சென்றால் பெரிய அலையொன்று
சீறிக் கொண்டு வந்து என் கைகளிலும் அப்பா கைகளிலும் இருந்த பாத்திரங்களை அடித்து சென்றது.

நான் பாத்திரங்கள் பின்னால் போன போது அப்பா என்னைப் பின்னிழுத்தார். கூடவே இருந்த ஒரு மீனவர்
சொன்ன சொற்கள்  இப்போதும் என் காதில் ஒலிக்கிறது
''பாப்பா கடலம்மா திருட மாட்டா.  அதெல்லாம் திரும்பிடும் பார்''

அவர் சொன்னது போலவே அடுத்த அலையில் அவை திரும்பி வந்தன.
தாத்தா எங்கள் இருவரையும் கடிந்து கொண்டார்.
வெறும் பாத்திரம் தானே. ஏன் இப்படி அவஸ்திப் பட்டீர்கள் என்றார்.






2004 சுனாமியின் போது  ஏன் இப்படிக் கடல் பொங்கியது என்று யோசித்தேன்:((
1957க்கும் 2004க்கும் இடையே   47 வருடங்களில் இயற்கைக்கு ஒவ்வாத
செயல்கள் நிகழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மீண்டும் பயணம்   தொடங்கிக்  கன்யாகுமரி செல்லும் 
சாலையில் திரும்பினோம்.








Saturday, May 02, 2026

திருக்குறுங்குடி நாட்கள். பாகம் 6

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழவேண்டும்.




இந்தத்  தாத்தா கூட அருமையாக இருக்கிறார்.
மறு நாள் காலையில் பொங்கலும்  தேங்காய்த்  தொகையல், தயிர்
சாதம் என்று தயார் செய்துகொண்டு  மலை மேல் நம்பியைத்
தரிசித்து வருவதாகத் திட்டம்.

தாத்தாவுக்கும் பாட்டிக்கும் மலை ஏறுவதில்  தயக்கம் இருந்தது.
சித்தப்பாவும் அப்பாவும் உடனே ஏற்றுக் கொண்டனர்.  அப்போது

வழிப்பாதை எல்லாம் கல்லும் முள்ளுமாக இருக்கும் 
என்று நினைவு.கிட்டத்தட்ட 5000 அடிகள் இருக்கலாம் என்றார்கள்.


''திருமலைநம்பி இங்கு ” சங்கு சக்ர கதாபானே துவாரஹா நிலயாச்சுத” என்ற ஸ்லோகத்திற்க்கிணங்க பெருமாள் சங்கு, சக்ர, கதையுடன், ஸ்ரீதேவி பூதேவி ஸமேத காட்சியளிக்கிறார். மேலும் சித்தர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், ரிஷிகள் அனைவருக்கும் அருள்பாலிக்கும் விதமாக நின்ற கோலத்தில் ஸேவை சாதிக்கிறார். இங்கு வீற்றிருக்கும் உற்சவர் வருடத்திற்கு இரண்டு தடவை மட்டுமே கீழே இருக்கும் கோவிலுக்கு எழுந்தருள்வார். ஒன்று தை மாதம் நடக்கும் தெப்போத்ஸவத்திற்கு மற்றொன்று பங்குனி மாதம் நடக்கும் ப்ரம்மோத்ஸவத்திற்கு எழுந்தருளி தன்னுடைய அண்ணன்மார்கள் நால்வருடன் பக்தர்களுக்கு ஸேவை ஸாதிக்கிறார்."

செய்தி தந்தது  Thirukkurugudi.com website .
மனம் நிறை நன்றி அவருக்கு.  ''திருக்குறுங்குடி பெரிய கோவிலில் உள்ள மூன்று நம்பிகள், குறுங்குடி வல்லி நாச்சியார் மற்றும் ஆழ்வார் ஆச்சாரியார்கள், பக்கம் நின்றார் என்றழைக்கப்படும் சிவன் சந்நிதி, காலபைரவர் சந்நிதி ஆகியோரை தரிசித்து விட்டு அங்கிருந்து நாம் 1 கி.மீ தொலைவில் உள்ள திருப்பாற்கடல் நம்பி என்று அழைக்கப்படும் நான்காவது நம்பி “க்ஷீரம்” நதிக்கரையில் அமைந்துள்ள திருப்பாற்கடல் நம்பியை தரிசித்து விட்டு அங்கிருந்து மலைநம்பி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள “உச்சிமாகாளி அம்மன் கோவிலை அடையலாம். அங்கு தான் பங்குனி மாதம் நடைபெறும் ப்ரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளில் ஐந்து கருட வாஹனத்தில் ஐந்து நம்பிகளும் ஒன்றாக அந்த இடத்தில் தான் மலை மேல் வாழும் முனிவர்கள் ,சித்தர்கள், அனைவருக்கும் காட்சி கொடுப்பதாக ஐதீகம்."

2019 ஆம் ஆண்டு  எங்கள் மகன்களோடு போகும் போது
மலை மேல் ஏற முடியவில்லை.
:(   

எங்களுக்கு கடவுள் பற்றிய சகல விஷயங்களை சொல்லிக் கொடுத்த ஒரு ஆசிரியர் அடிக்கடி அறிவுறுத்திய ஒரு செய்தி. கை கால்களில் தெம்பு வலு இருக்கும் போதே எல்லா ஆலயங்களுக்கும் சென்று வாருங்கள்  என்பதுதான்.


ஐந்து கருட  சேவை.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அழகிய நம்பி ராயரும் தேவிகளும்.
நாங்கள் கீழே இறங்கி வருவதற்குள் பாட்டியும்
தாத்தாவும்  இட்லிக்கு  அரைத்துக் கொண்டிருந்தார்கள். சித்தப்பாவுக்குக் காலை உணவு மிக அவசியம். அவர் வேலை அப்படி.

அப்பாவுக்கு வெற்றிலையும் காப்பியும் போதும்.

எங்களுக்குக் காலையில் பழைய சாதமும்  குழம்பும்,.

இப்போது பாட்டியும் அம்மா சித்தி மூவரும் இரவுக்கு
சமைக்க ஆரம்பித்தார்கள். தோட்டத்துக் கீரையும்

காய்ச்சின அப்பளமும் தேங்காய்த் தொகையலும்
பிரமாதமாக இருந்தன.
எல்லாமே பின்னால் இருக்கும் வீட்டின் தோட்டத்தில் இருந்து வந்தவை.


கத்திரி, சுண்டை, வாழை, கொத்தவரங்காய் எல்லாமே வளர்த்திருந்தார்கள்.
தாத்தாவின் குத்தகைக்காரர் வைரக்கண்ணுவும் மலைப் பழங்கள்
நேந்திரங்காய்,  மாங்காய், எலுமிச்சம்பழம்
என்று கொண்டு வந்ததும் பாட்டியின் கண்கள்
மின்னின:) 
''இந்தா நீ ஊறுகாய் போடக் கிளம்பிடாதே!
நாளைக்குக் கன்யாகுமரி  திருச்செந்தூர் எல்லாம்
போகணும் '' என்று மிரட்டினார்:)

நவதிருப்பதியில்  இரண்டு கோயிலாவது காண 
தாத்தாவுக்கு ஆசை. அதுவும்  முதலில் வேலைக்குச் சேர்ந்த
ஶ்ரீவைகுண்டம், நாங்குனேரி சென்ற நினைவு இருக்கிறது.

சித்தப்பா ஆசைக்காகத் திருச்செந்தூர் அலைகளில் நின்ற  
பயம். அன்று பௌர்ணமியோ என்னவோ. கால்கள் தடுமாறி
விழுந்ததும் நினைவில். சற்று  அருகில்  இருந்த அப்பா
என்னைப் பிடித்து நிறுத்தியதும் அழியாத

ஞாபகங்களில் ஒன்று:) 

திருச்செந்தூர்.
தொடரலாம்.


மறு பக்கம்.

வல்லிசிம்ஹன்  ஒரு புலிவால் நான் சமூக வலைதளங்களில் அமெரிக்காவிற்கு படிக்க சென்ற பெண்/ பிள்ளைகள் திரும்பி வருவதில்லை . பெற்றோரின் கடைசி காலத்த...