Tuesday, August 18, 2026

முதுமை பாகம் 1


வல்லிசிம்ஹன்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
என் பாட்டியின் கதையைப் பதிக்க ஆசை. 
பெயர்களை மாற்றி ஊரை மாற்றி எழுதிவிட்டேன்:)


1963 பாட்டி;

அம்மா..... பாட்டி படிலயே ஈரம் செய்துட்டார்.
பெண்ணின் குரல் கேட்டு பின்புறம் விரைந்தாள் நீலா.

ரொம்ப அவசரம். படி இறங்கி கொல்லைப்பக்கம் போவதற்குள்
வந்துவிட்டது.
உனக்கு வேலை வைத்து விட்டேன் மா என்று சொல்வதற்குள்
மாமியாரின் கண்களில் நீர்.
சர்க்கரை ரத்தத்தில் சேர்ந்ததிலிருந்து 65 வயது வனஜாம்மாவுக்கு
பழக்க வழக்கங்கள் மாறின.
அதிக பசி, அதிக தாகம்,அடிக்கடி சிறு நீர் கழித்தல் என்று நீண்டது பட்டியல்.

எது கொடுத்தாலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டி இருந்தது.

குளித்து வெகு ஆசாரமாக ஸ்வாமிக்குப் பூஜை செய்பவர்.
கணவர் தவறியதும் இன்னும் தீவிரமாக எல்லா விரதங்களையும் கடை பிடித்தவருக்கு
இந்த சர்க்கரை மிக அதிர்ச்சியைக் கொடுத்தது.

ஒன்பது கஜம் கட்டிக் கொள்வதே அசௌகரியமாக இருந்ததால்
மாம்பழக்கட்டு என்று அவர் சொல்லும் ஆறுகஜப் புடவைக்கு மாற வேண்டி வந்தது.
எல்லா நேரமும் அசதி வந்து தொந்தரவு கொடுத்தது.

நல்ல கனத்த சரீரம் இப்போது பாரமாகியது.
மருமகள் நீலா, மாமியாரிடம் அதிக அளவு மரியாதை வைத்திருந்தது தான் அவரைப்
பல நேரங்களில் ஆறுதல் அடைய வைத்தது.
இன்சுலின் ஊசி போட வைத்தியர் ஏற்பாடு செய்த நர்சம்மா தினம் ஒரு வேளை
வந்து ,சகல விதத்திலும் கண்காணித்து மருந்தும் கொடுத்துப் போனார்.
இப்போது இன்னும் ஐந்து வருடங்கள் கழிந்த நிலையில்
உடல் மிகவும் பலவீனமாகிவிட்டது.
பேரன், பேத்தி பாட்டியுடன் தாயக்கட்டம், சோழி என்று விளையாடுவதில் பாதி
சோகம் மறைந்தாலும், தலைசுற்றலும், இந்த சிறு நீர் உபாதையும்
மனசை அலைக்கழித்தன.
நீலா வேளை தவறாமல் ,உணவும், நீர் மோரும்,உப்பு குறைவான
 பலகாரங்களும் கொடுத்து கவனித்துக் கொண்டாள்.

வியாதியின் தீவிரம் இப்பொழுது ,இந்த நிலமையில் வந்து நின்றது.

வனஜா பாட்டிக்கு இடம் மாறுதல் தேவைப்பட்டது.
மருமகள் நீலாவின் கவலையைக் குறைக்க எண்ணி

மகள் பத்மாவுடன் சிலகாலம் இருந்து விட்டு வரலாம் என்று நினைவு

 வனஜா பாட்டியின் மகள் பத்மா ,மதுரையில் இருந்தார்.
பெரியகுளத்திலிருந்து போய்.
அங்கிருக்கும் பெரிய டாக்டரிடம் பார்த்துக் கொள்ளவேண்டும்
என்று பாட்டிக்கு ஆசை.
நீலா நீயும் கொஞ்ச நாள் நிம்மதியா இரு. நான் மதுரைக்குப் போய் டாக்டர் கிட்டுவைப் பார்த்துவிட்டு,

மருந்து வகையறா வாங்கி வருகிறேன் என்று சொல்லிப் பார்த்தார்.
அவரது மகனுக்கு அம்மா அவ்வளவு தூரம் சென்று
 அவஸ்தைப் பட வேண்டாமே என்றிருந்தது.

பாட்டிக்கு இரு   சகோதரிகள் மதுரையில் இருந்தார்கள்.

மகளும் பெரிய இடத்தில் வாக்கப் பட்டிருந்தாள்.
வாகனம்,பங்களோ,வேலைக்காரர்கள் என்று வசதியான இடம்.
பத்மாவுக்கு.
கணவர் அங்கு போக்குவரத்து நிறுவனம் ஒன்றில்
உயர் பதவியில் இருந்தார்.
அவளுக்கும் இரு மகள்கள். அங்கே ஆங்கிலப் பள்ளியில்
படித்துவந்தார்கள்.
மதுரையில் அப்போது,பாடல் பள்ளிகளும், நடனப் பயிற்சிக் கூடங்களும்
 இருந்ததால் பொதுவாகவே கலகலப்பு மிகுந்த இடமாக இருந்தது
பத்மாவின் அகம்.

 மதுரை விஜயத்துக்கு முக்கிய காரணம்,
பாட்டிக்குத் தன் பாரம்பரிய வெள்ளிப் பாத்திரங்கள்
 நகைகள் புடவைகளை, மூன்று பேத்திகளுக்கும்
பிரித்துக் கொடுத்துவிடவேண்டும் என்பதே.
அதுவும் மகனுடைய பெண் சுந்தரியிடம் பாசம் அதிகம்.
ஏற்கனவே தன்னிடம் இருந்த காசுமாலையை அந்தப் பெண் கழுத்தில் அணிவித்து அழகு
பார்ப்பார்.
இன்னும் பவழ மாலை, கெம்புத் தோடு,காஞ்சிரக்காய் மாலை,
காசிமணிமாலை இரட்டைவடம் என்று
வரிசையாக இருந்த நகைகளை மகளுக்கும் மருமகளுக்கும்
 பிரித்துக் கொடுக்க எண்ணம்.
மகனிடம் சொல்லி மகளை வண்டி அனுப்ப சொன்னார்.
மனமில்லாமல் தங்கைக்குத் தொலை பேசினார் நடராஜன்.

அவளும் வார இறுதியில் வண்டியை அனுப்புவதாகவும்,
அம்மாவுக்குத் துணையாக பேத்தி பேரன் இருவரையும் அனுப்பும்படியும்
சொன்னாள்.
குழந்தைகளுக்குக் கார் பயணம், அத்தை வீட்டுக்குப் போவது
என்று இரட்டை சந்தோஷம்.. பயணத்திற்கு வேண்டிய உணவு,
தன் மாமியாருக்கான மருந்துகள்,நல்ல பட்டுப் புடவைகளாக
நான்கு, 
அவசரத்தேவைக்குத் துண்டுகள் என்று
தயார் செய்தாள் நீலா. மனம் முழுவதும் கவலை.
அம்மா ஒரு வாரத்தில் வந்துவிடுங்கள்
என்று கேட்டுக் கொண்டாள். ஓ. அப்படியே
செய்துடறேன். நீ கவலைப் படாதே. பத்மா எட்டூருக்குப் பாத்துப்பாள் என்று
கிளம்பியே விட்டார் வனஜாபாட்டி.

Wednesday, July 22, 2026

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன்

வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள்.

சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந்தைக் குரல் ராஜேஸ்வரி அம்மா குரல்களைக் கேட்டு
வளர்ந்த பொன்னான நேரங்கள் வானொலிக் காலங்கள்.


முதன் முதல் அவர் குரலை ''மலரோடு விளையாடும் தென்றலே
வாராய் என்ற பாட்டை 1958இல் கேட்டிருப்பேன் என்று
நினைவு. சுசீலாவின் குரலுக்கு ஒரு மாற்றுக் குரலாக
அமைந்தது. நானும் தோழியரும் அவ்வளவு 
சீக்கிரம் அவர் குரலுக்கு மாறவில்லை.
பிறகு வந்த சிங்கார வேலனே தேவா பாட்டு
எங்கள் மனதை எல்லாம் மாற்றிவிட்டது.

அப்படியே அந்த மயக்கம்  தொடர்ந்தது.
இருவரும் சேர்ந்து பாடிய பாடல்கள்
மிகப் பிரபலமாயின.





என்றும் நம் நினைவில் அழியாத குரலாக அவர் நிலைத்திருப்பார். 


Sunday, June 28, 2026

கதம்பம்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்

2011  Trip in Swiss.






அம்மாவின் குடும்பத்தினர்

பயணங்களில் பதிந்த படம்.


நிலா அது வானத்தின் மேலே .அது பரப்பும் அமைதி நம்மிடம்.
தோழியும் நானும்  இரண்டு வருடங்களுக்கு முன்.


கடவுள் எனும்   முதலாளி கண்டெடுத்த    தொழிலாளி. 2011


எதிர்சேவை 2026
 2024நவராத்திரி கலகலப்பு
 அப்புறம் என்ன ஆச்சு? இது நேற்று என்னுடன் 
பேச வந்திருந்த குட்டியின் வினா. என் லாப்டாப் பக்கத்துல உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தது இந்த ஐந்து வயசு
பெண்ணழகி. என்ன கதை சொல்லப் போறே பாட்டி  என்று கேட்டது.

கதை இல்லடா. பழைய படங்களைப் புதுசா
பண்ணிக் கொண்டிருக்கேன் என்றேன். ஏஐ  ஆ? என்று கேட்டதும் எனக்கு  கொஞ்சம்  பரபரப்பு:) 
அட உனக்கும் தெரியுமா என்றேன். 
ஓ! எங்க க்ளாஸ்ல மிஸ் சொல்வாங்க என்றது.

ஹ்ம்ம்ம். சரிதான்.  எனக்குப் படம் மட்டும் போடத்தெரியும். இன்னும் கத்துக்கலைன்னு சொன்னேன்:)

என்னைத் தன் பள்ளிக்கு அழைத்துச் செல்வதாக ப்ராமிஸ் செய்திருக்கு. பார்க்கலாம்:)))

Saturday, June 27, 2026

குடும்பம் 1997


வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமுடன் வாழ வேண்டும்.

1996இல்   அப்பாவின் முயற்சியால்  மகள் திருமணம் ஒரே நாளில்
தீர்மானம் ஆகி 
அடுத்த 15 நாட்களில்  நாளும் குறிக்கப் பட்டது.
தம்பிகள் இருவரும் மாவிலைத் தோரணம்   தயார் செய்கிறார்கள்
எப்போதுமே சிரித்த முகத்துடன் அம்மா.
ஆரத்தி எடுக்கும்  என் சின்ன மாமியார்
பந்தக்கால் நடப்படுகிறது
அம்மாவும் தம்பி  குடும்பம்  இன்னோரு உறவினரும்
ஒரு  சரித்திரம் படைத்தவர்கள் தம்பிகளும், அப்பாவும் அம்மாவும்.
வம்பு பேச மாட்டார்கள். நாள் முழுவதும் கடும் உழைப்பைக் கொடுக்க அஞ்சாதவர்கள். உண்மை மட்டுமே பேசுவது என்று அப்பா சொல்லிக் கொடுத்ததால் பல ஏணிகளில் ஏற முடியாமல்
விட்டவர்கள்.   அதனால் தான் என் கணவருடன் அத்தனை அன்பு பாராட்டினார்கள்.
மேல் கோட்டே   திரு நாராயணன், யோக நரசிம்ஹன் பயணம். தம்பிகளுக்கும், தந்தைக்கும்   அஞ்சலிகள்.

Sunday, June 21, 2026

தம்பிகள் பாசம்

வல்லிசிம்ஹன் 
எல்லோரும் வளமாகவாழ வேண்டும். 
படிக்காத மேதை. ரங்கன். 

என் தம்பி ரங்கன்படித்த பண்பான அன்பானவன்,
இந்தப் பாட்டில் வரும் அத்தனை
வரிகளுக்கும் சொந்த மானவன் . 
சிவாஜி பக்தன்.

ஒரு சிவாஜி சார் படத்தையும் பார்க்காமல் இருக்க மாட்டான். சினிமா, பாட்டு, நண்பர்கள் என்று அவனைச் சுற்றி பெரிய கூட்டமே இருக்கும். 

எல்லோருக்கும் நண்பன். என் கணவரிடம் அதீத பக்தி. எத்தனையோ. தருணங்களில் என்னுடன். தோள் கொடுத்து நிற்பான்.
தந்தை மறைந்த போது தம்பிகள் இருவரும்  என் கைகளைப் பற்றி. கலங்கியபோது நான் கலங்கமல் இருந்தது தான் அதிசயம். மகளின் திருமணம் பத்து நாட்களில். அம்மான் சீர் வந்து சேரும் என்று என் அம்மாவும் தம்பிகளும். சொல்லி அணைத்தார்கள்.

திருமணம் நடந்த அன்று இருவரும் அப்பாவின் படத்தை
மண்டபத்துக்கே கொண்டுவந்தார்கள்.
மணமக்களின் பின்னால் அவர் படம் வைக்கப் பட்டது.




தம்பிகள் இருவரும் என் இருபக்கத்திலும் நின்று நான் கலங்காமல்
பார்த்துக் கொண்டார்கள்.

பெரிய தம்பி கல்கத்தாவில்  பாட்டா கம்பெனியில் வேலை பார்க்கிறவன் சென்னை திரும்பும் போது .பெற்றோரைப் பார்த்து விட்டு அடுத்த நாள் திருச்சிக்கு வந்து விடுவான். கல்கத்தா ரசகுல்லா, இன்னும்  பாட்டா  செருப்புகள் கலகத்தாவிலிருந்து,  ஆடைகள் என்று கொண்டு வருவான் பெட்டி நிறைய!!எங்களுடன் ஒரு வாரம் தங்கி விட்டு
மனமில்லாமல் திரும்பி  செல்வான்.

சிங்கத்துக்கு வயிற்றில் ஏதோ பிரச்சினை அறுவை சிகித்சை
செய்ய வேண்டுமோ என்று பயந்த போது சின்னவன் ஓடி வந்து விட்டான்.  22 வயதுக்கு மிகப் பெரிய பொறுப்பு.
தன் அத்திம்பேருக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை 
என்று  தெரிந்த பிறகே திரும்பினான்.

இன்னும் நிறைய செய்திகள் உண்டு. மீண்டும் பார்க்கலாம். வாழ்க சகோதர பாசம்.


Friday, June 19, 2026

அப்பா......தாத்தா,மகன்கள்.....

வல்லிசிம்ஹன்


அப்பா காரைக்குடி தபால் அலுவலகத்துக்கு முன் 
எடுத்துக் கொண்டபடம். அப்பாவைப் படம் எடுத்தது என் தம்பி ரங்கன்.

தந்தையர் தினம் தாத்தா பாட்டி தினம் என்று இங்கே
மே ஜூன் மாதங்களில் முழக்கம். நாங்கள் வசிக்கும் 
ஊரில் ஒரு  சீனியர் லிவிங் இருக்கிறது. அதாவது 
நாம் பணம் கட்டி சேர்ந்து கொள்வது.

அங்கே இருப்பவர்கள் அனைவரும் 80, 90 வயதுகளில் ஆரோக்கியமாக உற்சாகமாக இருப்பவர்கள்.

அந்த இடத்தை வண்டியில் கடக்கும் போதெல்லாம் அப்பா அம்மா
நினைவு வருவது அதிகமாகும். 
 எத்தனையோ பாடு பட்டுத்தான் அப்பாவும் அம்மாவும் எங்களை
வளர்த்தார்கள். 
தபால் அலுவலக   குமாஸ்தாவாக ஆரம்பித்து ஒரு  தலைமைப்
பொறுப்பை அடைய அப்பாவுக்கு முப்பது வருடங்கள்
ஆயிற்று.

அப்பழுக்கில்லாத பெயரோடு வெளியில் வந்த
அப்பாவைப் பார்க்க வந்தவர்கள் ஒரு நூறு பேர்
இருப்பார்கள். அவர்கள் தந்த பெரிய தஞ்சாவூர் 
Bronze sculpted plate. மற்றும் வெள்ளிப் பேலா, தங்க நாணயம்
எல்லாம் சென்னையில்  இருக்கும் என்று நம்புகிறேன்.

தன் பேத்தி திருமணத்துக்கு அந்த வெள்ளிப் பேலாவைக் கொண்டுவந்து வந்து கொடுத்தார்.வாழ்க வளமுடன் என்று
அதில் எழுதி இருக்கும்.

இதெல்லாவற்றையும் விட, 
அந்த தி நகர் தேனாம்பேட்டை பஸ்ஸில் என்னை 
ஏற்றிவிட அவர் என்னுடன் நடப்பதும், பஸ்ஸுக்கு வச்சுக்கோன்னு
என் கையில் ஐம்பது ரூபாயைக் கொடுப்பதும்
 பாண்டி பசாரை நான் பஸ்ஸில்  கடக்கும் போது 
அப்போது அங்கிருந்த பிள்ளையார் கோவில்
வாசலில் அவர் ஒரு கல்லில் மேல்
உட்கார்ந்து இருப்பதும் என்றும் நினைவில்.

தனிமை அவரை வாட்டி இருக்க வேண்டும். 

பெற்ற பிள்ளைகள் வேறு வேறு வேலையாக
வெளியே அலைய, இவர் பழைய  மிகப் பழைய படங்களைப்
புதுப்பிப்பதில்    , பகவத்ஹ் கீதைக்கு ஆங்கில
உரை எழுதுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

'Every action is for posterity'' என்பதில் தீவிர நம்பிக்கை.

இதோ நானும் எழுதி வைக்கிறேன்.
அப்பாவின் நற்குணங்கள் என் மேல் அவ்வளவாகப்
படியவில்லை. அந்தப் பெருந்தன்மை, கொடை, சகிப்புத்
தன்மை ,சேமிப்பு எல்லாம் என்னிடம்  வந்து சேரவில்லை.
குடும்பத்தில் என்னைத் தனியாளாக விட்ட
கோபம் இருக்கிறது.

அவரைப் போலவே என் சந்ததிகளுக்கு நல்ல  தாயாகப்,பாட்டியாக
இருக்க அவரே அருள வேண்டும். நன்றி அப்பா.









Tuesday, June 16, 2026

இருண்ட வானத்தில் ஒரு நீலக்கற்றை. (பழைய படம்)

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.




சமீபத்தில்(2010)
 டர்னர் க்ளாசிக் மூவீஸ் தொலைக்காட்சியில் இந்தப் படத்தைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது.
ஒரு கண் பார்வை இழந்த பெண்ணின் வாழ்க்கையின் சோகமும் சந்தோஷமும் மிக அழகான சந்தர்ப்பங்களின் நிகழ்ச்சிகளின் கோர்வையாகத் தொகுத்து வழங்கி இருக்கிறார்கள்.
பதினாறு வயது செலினா வும் அவள் அம்மாவும்,தாத்தாவும் ஒரு அபார்ட்மெண்டில் வசித்துவருகிறார்கள் . வறுமைக்கோட்டின் எல்லை.
பல வழிகளில் பணம் சம்பாதிக்கும் அம்மாவாக ஷெல்லி விண்டர்ஸ் Shelly Winters




செலினாவாக எலிசபெத் ஹார்ட்மேன் என்ற நடிகை கண்ணில்லாத பெண்ணாக வெகு அருமையாக நடித்திருக்கிறார்.
கோர்டன் என்னும் கறுப்பினத்தவராக சிட்னி பாட்டியெ(Sidney Poitier) சிட்னி பாட்டியே, ஓல் பா என்று அழைக்கப்படும் தாத்தா. இவர்களைச் சுற்றி வரும் கதை. ஐந்து வயதில் அம்மாவுக்கும் அவருடைய சினேகிதனுக்கும் சண்டையில் கண்கள் குருடாகின்றன செலினாவுக்கு.

அந்த நாட்களில் கறுப்பு வெள்ளை இனத்தவரிடையே மிகுந்த கசப்புணர்ச்சி கொந்தளித்துக் கொண்டிருந்த நேரம்.

வீட்டு வேலைகளைச் செய்வதற்கு மட்டுமேஅவளைப் பயன்படுத்திக் கொள்கிறாள் அம்மா.
செலினாவுக்கு ஒரே ஒரு மகிழ்ச்சி,பாசி மணி மாலைகளைக் கோர்த்து அதை இன்னொரு அன்புள்ளம் கொண்டவர் மூலம் விற்று அந்தப் பணத்தை அம்மாவிடம் கொடுப்பதுதான்.

அந்தச் சினேகிதரே சிலசமயங்கள் அருகில் இருக்கும் பார்க்கில் அழைத்துக் கொண்டு போய் விடுவார்,..அங்கு ஒரு மரத்தடியில் உட்கார்ந்து அன்று மாலை வரைச் சந்தோஷமாகப் பலவித பறவைகளின் சப்தங்களைக் கேட்டுக் கொண்டே மாலைகளைக் கோர்த்து முடிப்பாள்.
இரவு நேரம் நெருங்கும்போது அவளது தாத்தா குடி போதையோடு அங்கு வந்து அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்வார்.
இதைக் கண்டுபிடிக்கும் அம்மா அவளைப் பார்க்குக்குப் போகத்தடை விதிக்கிறாள்.

அதையும் மீறி தாத்தாவுடன் வெளியே வரும்போதுதான்,அந்தப் பார்க்கில் மேற்பார்வையாளராக இருக்கும் கோர்டனைச் சந்திக்கிறாள்.
இருவருக்கும் அழகான நேசம் மலர்கிறது. கோர்டன், செலினாவின் வெகுளித்தனத்தையும், பொறுமையையும் கண்டு வியக்கிறான். அவளுக்குக் கண்பார்வையின் குறைப்பாடுகளை நீக மிகவும் முயற்சிக்கிறான். சாலையைக் கடப்பதற்கும்,,ப்ரெயில் முறையில் கல்வி அனுபவம் பெறுவதற்கும் பாடு படுகிறான்.

கண்பார்வையில்லாத அந்தச் சிறுமிக்கு உலகின் வெளிச்சமான பகுதியைக் காண்பிக்கிறான். இவர்களின் நட்பை அறியவரும், ரோசலின்(செலினாவின் அம்மா) கோர்டன் ஒரு கறுப்பு இனத்தவர் என்று சொல்லி செலினாவை மிரட்டி அடிக்கிறாள் .


இரண்டு நாட்களுக்கு மேல் செலினாவால் வீட்டில் இருக்க முடியவில்லை. தட்டுத் தடுமாறி வெளியே வந்து பார்க்குக்குச் செல்ல முயற்சிக்கிறாள். தோல்வியே ஏற்படுகிறது. ஒரு மழை இரவில் கோர்டனின் தொலைபேசி எண்ணை வாங்கிக் . கொள்கிறாள் .
கோர்டனுக்கு அவள் மீது காதல் இருந்தாலும் ,அவள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறான்.
அவளோ அவனை விட்டுப் போவதில் சம்மதம் இல்லாவிட்டாலும் அவன் ஏற்பாடு செய்யும் கண்தெரியாதவர்கள் பள்ளிக்குப் போகச் சம்மதிக்கிறாள்.

கடைசிக் காட்சியில் அவளுக்குக் கொடுக்க ஆசைப்பட்ட மியூசிக் பாக்ஸை எடுத்துக் கொண்டு படியிறங்குகிறான் கோர்டான்.
அவன் வாயிலுக்கு வருவதற்குள் அழைத்துச் செல்ல வந்த பள்ளி வண்டி கிளம்பிவிடுகிறது. கண்களில் இன்னதென்று தெரியாத உணர்ச்சியோடு பார்த்தவண்ணம் நிற்கிறான் கோர்டன்.

அருமையான முடிவு. மற்ற காதல் படங்களைப் போல், உன்னை நான் திருமணம் செய்து வாழ்நாள் பூராவும் காப்பாற்றுவேன் என்ற உறுதி மொழியெல்லாம் தராமல் அவள் உண்மையாகவே வாழ்க்கையில் முன்னேற வழிவகுக்கும் கோர்டன்….சிட்னி பாட்டரின். நடிப்பு மனதில் நிற்கிறது . ஆஸ்கார் வாங்கின படமென்று திரையில் காண்பித்தார்கள்.

இந்தப் படத்தில் , அந்த நாளைய வெள்ளை கறுப்பர்களின் இன பேதத்தை ஒட்டி எடுக்கப்பட்ட காட்சிகளும் , வார்த்தைகளும் மனதில் பதிகின்றன,.
இவர்களது நேசம் நிறைவேறாமல் போவதற்கும் இந்த பேதமே காரணமாகிறது.
:((
வெகு இயற்கையாக அவர்களது மெல்லிய உணர்வுகள் காண்பிக்கப் படுகின்றன.
வெகுநாளைக்கப்புறம் மிக நல்ல படமொன்றைப் பார்த்த நிறைவு எனக்குக் கிடைத்தது.





முதுமை பாகம் 1

வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும். என் பாட்டியின் கதையைப் பதிக்க ஆசை.  பெயர்களை மாற்றி ஊரை மாற்றி எழுதிவிட்டேன்:) 1963 பாட்டி; அம்ம...