Friday, April 17, 2026

1957 இல் திருக்குறுங்குடி நோக்கி ஒரு பயணம்



வல்லிசிம்ஹன்
1957 செவர்லெ ஸ்டேஷன் வாகனம்:)
தாத்தாவுக்குத் தான் பிறந்த ஊரைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல்
திடீரென்று அதிகரித்தது.

குறுங்குடி நம்பி கோயிலில் இருந்து  வந்திருந்த அர்ச்சகர் ஸ்வாமிகள்
கொடுத்த செய்திதான் காரணம். 

ஊரில் இருந்தவர்கள் எல்லாம் குடும்ப நிமித்தம் வேறு வேறு
இடங்களுக்குச் சென்று விட்ட நிலையில் பெருமாளுக்கு
ஒரு வேளை தான்  ஆராதனை நடப்பதாகவும்
 வஸ்த்திரம் தட்டுப்பாடுகள் இருப்பதாகவும் சொன்னபோது
மனம் வருத்தத்தில்  ஆழ்ந்து விட்டது.(இது  70 வருடத்துக்கு முந்திய கதை. இப்போது எல்லாம் திருத்தப் பட்டு விட்டது.)

ஒரு கிராம சூழல். 

திருக்குறுங்குடி ஆறு. 1957 மே மாத வெய்யிலில் எங்கள் வண்டி தாத்தா பாட்டி அப்பா அம்மா நாங்கள் மூவர். சித்தப்பா
சித்தி அவரின்  பெண். என்று பத்து நபர்களை ஏற்றிக்கொண்டு பழங்கானத்தத்தை விட்டுக் கிளம்பியது. தொடரும்.....






Tuesday, April 14, 2026

14 th April Parabhava New Year.

வல்லிசிம்ஹன்  

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நல்ல செய்திகளே காதில் வந்து சேரவும் அனைவரும் இனிய வாழ்வு பெறவும் இறைவன் 
அருள பிரார்த்திக்கிறேன்.

வாழ்க வளமுடன்.

Sunday, April 12, 2026

Asha Bhosle

வல்லிசிம்ஹன்
12th April 2026. 

The world lost a glorious voice  which will echoing in our hearts. Rest in Peace,

Thursday, March 26, 2026

ராமா நீயே சரணம்

வல்லிசிம்ஹன்

திரு.மகராஜபுரம் சந்தானம் 'ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா'
என்று பாடும்போது எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார் இவர் இந்த ராம நாமத்தைப் பாட என்று நினைத்துக் கொள்வேன்.
கேட்பதற்கும் நமக்குக் காதுகளும் கொடுத்தாரே இந்த ராமன்!!
மகான்கள் பாடும் போதும் ,ராமனைப் பற்றி உபன்யாசங்கள் கேட்கும் போதும் இந்த பக்தியும் பற்றுதலும் எப்படி என்னுள்ளும் மற்றவர்கள் உள்ளத்திலும் வளர்ந்தது என்று உணரும்போது ஏற்படும் சிலிர்ப்பு சொல்ல முடியாதது.
வெறும் சாதாரண கடைநிலை மனுஷிக்கே இந்த உணர்வு வரும் என்றால்,
பக்த ராமதாஸ்,தியாகய்யா இவர்களின் பக்தியைய் என்ன சொல்வது.
ராமா உன்னை நேருக்கு நேர் பார்த்தவர்கள்,உன்னை தன்
ஒவ்வொரு அணுவிலும் உணர்ந்த இந்த மகானுபாவர்களை
எப்படி ஏற்றிப் புகழ்வது.!
எவ்வளவு கோடி முறை உன்னை நாவால் பூசித்தாலும்,மனசால் ஸ்மரித்தாலும்,உடலால் வணங்கினாலும் இந்த பக்தி கிடைக்குமோ ராமா.
எங்கே தேடினால் வருவாய்.
ராமா நீ
மதுராந்தக ஏரிக்கரையிலா
பத்ராசல சிறைச்சாலையிலா
தியாகய்யாவின் நிறைவிடத்திலா
பக்தர்களின் உள்ளத்தில் நிறைந்தவனே வெளியே தேட வேண்டாம் உன்னை. என்னுள்ளே இருக்கும் ராமனையே துதிக்கிறேன்.
வாழி பல்லாண்டு உன் சீதையுடனும்
உன்னுயிர்ச் சகோதரர்களுடனும்.
சிரஞ்சீவிஅனுமனுடன்
விபீஷண சுக்ரிவர்களோடு

எப்பொழுதும்
 எங்களோடு நீ இரு.
 ராமன் மீண்டும் வருகிறான். மார்ச் 27 ஆம் நாள், பங்குனி 13 ஆம் நாள்...
அவன் வருவதற்கு ஆயத்தம் செய்ய வேண்டாமா?
அதற்குத்தான் இந்தப் பதிவு.:)
-


Friday, March 13, 2026

சிங்கம் மீட்ட கன்றுக்குட்டி.

வல்லிசிம்ஹன்


இந்தக் கதை சிங்கத்தின் பதினாறு வயதில் நடந்தது. அப்பொழுது இருந்த 12   க்ரவுண்டில்    பெரிய அளவில் தோட்டம் துறவு ,மாடுகள் கன்றுகள்  என்று  இருந்தது.       மாமனார் பண்ணை நடத்திவந்தார்.   தீவன வியாபாரமும் செய்து வந்தார்.  
  சிங்கம் சாருக்குப் படிப்பு முடிந்து விடுமுறை.
 மும்பையிலிருந்து சென்னைக்கு வந்த புதிது.                                    புதிதாகச் சேர்ந்த நண்பர்களுடன் சென்னையை  வலம் வந்து  அவ்வப்போது அப்பாவின் செவர்லே காரையும் ஓட்டப் பழகி ,

அதை இடித்துத் திட்டு வாங்கி  எல்லாக் கலகங்களும் நடந்த நேரம்.                        தாத்தா   கண்டிப்புக்குப் பயந்து   தினமும் வீட்டுக்கு வரும் நேரம்   மழைநீர்க் குழாயைப் பிடித்து ஏறித் தன் படுக்கை அறைக்குப் போய்விடுவாரம். இந்த   விஷமங்களுக்கெல்லாம் துணை அவரின் அன்பு சித்தி.     மறுநாள் தாத்தா கேட்டால் நான் எட்டு மணிக்கே வந்துட்டேன் . சித்திதான் கதவைத் திறந்தார் என்பாராம்.                                                                                    
 இப்படி ஒரு காலை   கன்றுக்குட்டி ஒன்று  அம்மாவைப் பிரிந்து வீட்டுக்குள் ஓடிவந்து விட்டது. அது வழி தெரியாமல் அங்குமிங்கும்     துள்ளிக்குதித்து எல்லோரையும் மிரளவைத்து தானு மிரண்டு புழக்கடையை நோக்கிப் பாய்ந்தது. அதன் அம்மா   லக்ஷ்மி ஒரு பக்கம் கதற ,கன்னுக்குட்டி பாய நடுவி   தோட்டத்துக்கான  10 அடி       விட்டக் கிணறு குறுக்கிட்டது.  இளங்கன்று.....கிணற்றைத்தாண்டப்   பார்த்துக்    கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.  
           உடனே வீட்டில்  உள்ள அனைவரும்  அலற ஆரம்பித்துவிட்டனர். மாடுகளைப் பார்த்துக் கொள்ளும் அய்யனார்  தன்னால் முடியாது என்று கைவிரிக்க  கன்றுக்குட்டி  தத்தளிக்க ஆரம்பித்தது. நல்ல ஆழக் கிணறு.
எதேச்சையாக வீட்டில் இருந்த மாடியில் இருந்து இந்த அமர்க்களத்தைக் கேட்டிருக்கிறார்.                                    மிச்சதெல்லாம் நான் சொல்ல வேண்டுமா. ராட்டினக் கயிற்றைத் தன் இடுப்பில் கட்டிகொண்டு சரசர்வென கிணற்றில்  இறங்கிவிட்டார்.    கன்றுக்குட்டி இன்னும் மிரள. கண்ணனின் தாய் யசோதையாக எங்க மாமியார் கைகளைப் பிசைய  கன்றுக்குட்டியைப் பிடித்துவிட்டார். நல்ல கொழு கொழு  கன்று நல்ல ஊட்டமிக்கது. எடையும்   நிறைய.   நீ மேல வாடான்னு அலறல் மாமியாரிடமிருந்து.  இதோம்மா என்று தன் கயிற்றைக் கன்றுக்குட்டியின் மேல் கட்டி மேலே இழுக்கச் சொல்லி விட்டு                                கிணற்றின்    சுவற்றில்  இருக்கும் பள்ளங்களைப் பிடித்துக் கொண்டு மேலே வந்தாராம்.  பாவம் எங்க மாமியார்.. அதிலிருந்து அந்தக் கிணற்றுக்கு வலை எல்லாம் போட்டு மூடினார்களாம்.


Monday, February 23, 2026

ருக்மணி கல்யாணம்

வல்லிசிம்ஹன்

Saturday, July 22, 2006
ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார்



கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி.

கண்ணனைப் பார்த்ததில்லை அவள். காணாமலே , கேட்டே, காதல் கொண்டாள்.
அவனில்லாமல் தன் வாழ்வு இல்லை என்ற தீர்மானத்துக்கு
உடனே வநதாள்.
இது , இந்த முறை நடப்பது வழக்கம்தான்.
பத்து வயதோ ,அதற்கு முன்னால் திருமணம் செய்யும் நாட்கள் அவை.
பத்து வயதில் காதல் வருமா.?
வரும். 
வந்து காதலித்த பெண்களையும் நான் பார்த்திருக்கிறேன் பேதைப்பருவம் 
என்று சொல்லப்படும்
என்று அழைக்கப்படும் அந்தக் காலங்களில்,
அத்தை மகனும் மாமன் மகளும் அறிமுகம் செய்து கொள்வதே கணவனும் மனைவியாகத்தான்.
இப்போது எங்களுக்கு அடுத்த தலைமுறையில் அனைவரும் சகோதர சகோதரியாகவே அறியப்படும் அழகும் இருக்கிறது.
இப்போது, இந்தப்பதிவில்
ருக்மிணியின் காதல் நிறைவேறப்போகும் நேரம்!

அது ஒரு கனவுகளில் சஞ்சரிக்கும் காலங்களாக இருக்கத் தேவை இல்லை.
உணர்வுகள் மட்டுமே அறிந்து தேர்ந்து தன் துணையை 
அடையாளம் கண்டு கொள்ளும்.அந்த துவாபரயுகத்தில்,

அரசுகளும் அரசுகளும் திருமணம் செய்து கொண்டன.
ருக்மிணியின் தந்தைக்குக் கண்ணன் மேல்தான் நினைவு
தன் சிறு மகளுக்கு ஏற்ற காளை அவன் என்று தீர்மானம்.
செய்து ஆண்டுகளாகிவிட்டன.

நடுவில் வந்தவன் சிசுபாலன்.

கண்ணனிடம் வேண்டுமென்றே பகை வளர்த்தவன்
இல்லாததும் பொல்லாததுமாக தூற்றுக்களை பரப்பி
தனக்கென ஒரு கும்பலைச் சேர்த்துக்கொண்டான்.

அவன் வலையில் சிக்கினவர்களில் ஒருவன் ருக்மி...ருக்மிணியின் அண்ணன்.

அவன் நினைப்பு வேறாகப் போயிற்று.
ஜரசந்தன்,சிசுபாலன் இவர்கள் கூட்டத்தில் தன் பெருமை உயரும்,
தன் தங்கையைக் கடி மணம் செய்து கொடுத்து விடலாம் என்று நினைத்து ,
தன் தந்தையிடமும் சொல்லி விட்டான்.
அவருக்கோ தனக்குப் பிறகு நாட்டை ஆளப்போகும் மகனை மறுத்து சொல்ல பயம்.
ஜராசந்தனின் கொடூரமான குணநலங்களையும் அறிந்தவர் அவர்.
சிசுபாலனின் அக்கிரமங்களும் தெரியும்.
 இந்த அரக்கர்கள் முன்னால் ஒரு சிற்றரசன் தானே அவர்,?
வாய்மூடி மௌனியானார்.

ருக்மிணியின் மனதறிந்தவன் கண்ணன்.
அவனுக்குப் பொறுப்பும் நிறைய. பொறுமையும் அப்படியே.
அவன் உலக அதிபதி. அவனுக்கு இந்த அரசியல் முறைகள் தெரிந்ததால் அமைதியாக இருந்தான்.
காலம் கனிவது என்று ஒரு சொல் அப்போதும் உண்டு.
ருக்மிணிக்கு ஒரு நாள் நகருவதே நரகமாக இருக்கிறது.
சுயம்வரம் ஏற்பாடுகள் என்ற பெயரில் சிசுபாலனுக்கு அவளை மணமுடிக்க ஆலோசனைகள் ஆரம்பித்து முன்னேறிக்கொண்டு இருந்தன.
மனதுக்கு ஆதரவாக இருக்கும் ஒரு ஏழைப் புரோஹிதரை அழைத்து ஆலோசனை
கேட்கிறாள்.
அழகாக ஒரு எளிமையான கடிதம் கிருஷ்ணனுக்கு
வரைகிறாள்.
"கிருஷ்ணா,
என் உயிர்,என் தலைவன்,என் கடவுள் நீதான்.
உன் ஒருவனுக்குத்தான் நான் உரிமை,
இங்கே சேடி நாட்டு அரசனுக்கு என்னை
மணமுடிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

என் அன்பிற்கு பாத்திரமான இந்தப் புரோஹிதரோடு
நீ வரவேண்டும்.உடனே.
நானும் தோழியருடன் மங்கள கௌரி விரதத்தைப்
பூர்த்தி செய்ய
கோவிலுக்கு வருவேன்,அந்த க்ஷணம் நீ என்னைக் காத்து உன்னுடன்
அழைத்துச் செல்ல வேண்டும்.
உன்னுடைய வீரமும் ,என் கற்பும் இதில்  பரிமளிக்க வேண்டும்.
அப்போதுதான் எனக்கும் உனக்கும் பெருமை,
என்று
எழுதி அனுப்பி விட்டுத் தவிப்புடன் காத்திருக்கிறாள்.

வேதியரும் கண்ணனைக் கடுகி அணுகுகிறார்.
ஒரே ஒரு பார்வைதான் கடிதத்தைப் பார்க்கிறான்.
அடுத்த நிமிட்ம அவன் தேர் அந்தணரோடு
ருக்குமணியைத் தேடிப் பறக்கிறது.

(அப்போதிலிருந்தே பழகி இருக்க வேண்டும் இந்த சாரதி.பிறகுதான் பார்த்தனுக்கு சாரதி ஆகிறான்.)

மாயன் விதர்ப்ப நாட்டில் காலடி பதித்தான்..
ருக்மணி, தன் தந்தை பீஷ்மகனிடம் ஆசி பெற்று விரைகிறாள்
தன் மங்கள கௌரியைத் தரிசிக்க.

கோவிலில் பூஜித்து வெளியே வரும்போது
வருகிறது கண்ணன் ரதம்.
நீட்டுகிறான் கண்ணன் தன் பொற்கரத்தை.
பிடிக்கிறாள் ருக்மிணி தன் வாழ்வை.
அணைத்து அவளை அமர வைக்கிறான் ரதத்தில்.
துரத்தி
வரும் அத்தனை பேரையும்
வென்று த்வாரகை வந்து கோலாஹலமாக
மணம் முடிக்கிறான். மஹாராணி, கண்ணனின்
பட்டமஹிஷி ருக்மிணி தன் நாயகனுடன்
அரியணை ஏறினாள்.
மங்களம் சுப மங்களம்..



- July 22, 2006  

1957 இல் திருக்குறுங்குடி நோக்கி ஒரு பயணம்

வல்லிசிம்ஹன் 1957 செவர்லெ ஸ்டேஷன் வாகனம்:) தாத்தாவுக்குத் தான் பிறந்த ஊரைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் திடீரென்று அதிகரித்தது. குறுங்குடி ...