Saturday, February 21, 2026

பழைய பிரதாபம்.

வல்லிசிம்ஹன்

Wednesday, July 25, 2007
205,குடமிளகாய் கட்லட் 1966
----------------------------------------------------------
முன்னமேயே சொல்லி இருந்தது போல எங்க சிங்கத்துக்கு ஊரோட ஒட்டி வாழப் பிடிக்காது. அதனால் நாங்க வாடகைக்கு இருக்கிற இடமெல்லாம் தனியா, கொஞ்ச தூரத்தில தேசிய நெடுஞ்சாலை கண்ணில தென் படற மாதிரிஅமைந்திருக்கும்.அப்படி அமைந்த வீடு ,சேலத்தில ரயில் நிலையத்திலிருந்து பக்கத்தில, உமா தியேட்டர ஒட்டி ஒரு பத்து வீடுகளுக்கு நடுவில் ஒரு வீடு.
சுத்திவர வயக்காடு.
தவளை சார் தினம் வாசப்படியில் தவம் கிடப்பார்.வீட்டுக்கு வேலைக்கு வர
 சின்னப் பொண்ணு தவளை இருந்தா அதைப் பிடிக்கப்
பாம்பும் வரும் என்று பயமுறுத்தும்.:)
தவளையார்,
நான் வாசல் தெளிக்கும் போது
தண்ணீர் மேலே பட்டபிறகு என்னை ஒருதடவை முறைத்துவிட்டு தாவுவார், அவர் என் மேல் தாவாமல் இருக்கணுமே பெருமாளேனு நினைச்சுப்பேன்.

அந்தப் பத்து வீட்டில முத வீட்டில் ஒரு வயசானவர்,நடு வீட்டில் நான்,
அந்தக் கோடியில் ஒரு பாட்டி,தன் பேரன் நாச்சியப்பனோடு ....இவ்வளவுதான் ஜனம்.
காலை 7.25க்கு ஜீப் வரும் ,ஐய்யா ஏறிப் போய் முனை திரும்பும் வரை பார்த்துவிட்டு, உள்ள வந்து ராத்திரி மிச்சம் வைத்த சாதமும்,தயிரும் பாட்டி கொடுத்த ஆவக்காயும் ஒரு கிண்ணத்தில் வைத்து உள்ள தள்ளினால் அடுத்த இரண்டு மணி தூக்கம்தான்.
  முதல் மகன் எண்ணில் கருக்கொண்ட நான்காவது மாதம். 
மதுரைக்குப் பிரசவத்துக்குப் போக இன்னும் நாலு மாதம் இருக்கே ,எப்படிடா பொழுது போகும் என்று யோசிப்பேன்.
கதையெல்லாம் படிச்சு முடிச்சாச்சு. வானொலி கிடையாது.
வரிந்து வரிந்து உற்றார் உறவினருக்கெல்லாம் கடிதம் போட்டாச்சு.
கடிதம் கொண்டுவரும் தபால்காரர்,பால்காரம்மா,நாடார்கடைப்பையன்,காய்வண்டிக்காரர் எல்லோருடய குடும்ப க்ஷேமலாபங்களெல்லாம் விசாரித்து வைத்தாச்சு.

வயல்களைத் தாண்டி இருக்கும் ரோட்டில் எப்பவாவது இருக்கும் 
போக்குவரத்தையும் ஜன்னல் வழியாப் பார்த்து அலுத்துப் போன நாட்களில்தான் ரேவதி பஞ்சரத்தினம் பக்கத்து வீட்டுக்குக் குடி வந்தாள்.

அவளும்,அவளுடய ரயில்வே அண்ணாவும்,அம்மாவும்
சென்னையிலிருந்து சேலத்துக்கு மாற்றல் கிடைத்து,
ரயில் நிலையத்துக்குப் பக்கத்திலிருப்பதால் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து வந்தார்கள்.
என்னைப் போலவே படிப்பு,பாட்டு, சினிமா என்று ஒரே ஒத்த விஷயங்களில் ஈடுபாடு. ஒரு வயது என்னை விட மூத்தவள். கல்லூரியில் ஹோம்சயன்ஸ் முடித்துவிட்டு யார்மேல் தன் பிராக்டிகல் வகுப்பை நடத்தலாம்னு நினைச்ச போது நான் கிடைத்ததாகச் சொல்லுவாள்.

அவள் சொல்லிக் கொடுத்த குடமிளகாய்க் கட்லெட் செய்முறை இங்கே பதிகிறேன்.
உங்களுக்கும் தெரிந்திருக்கும். இன்னோரு தடவைப் படிப்பதால் குடமிளகாய் கோபிக்காது.:))

இரண்டு பேருக்கு கட்லெட் செய்ய 2 பெரிய குடமிளகாய் சரியாக இருக்கும்.
சிற்றுண்டி...
தேவை....

திடமான பெரிய குடமிளகாய் இரண்டு.

ஸ்டஃப் செய்யத் தேவையான காய்கறிகள்
1, பட்டாணி,
2,காலிஃப்ளவர்,
3,காரட்,
4,பீன்ஸ்,

வேகவைத்து உரித்த உருளைக்கிழங்கு 4 பெரியது.

சேர்க்க வேண்டிய மசாலா
கசகசா,சோன்ஃப்,கிராம்பு,துளி இஞ்சி,சின்னவெங்காயம் 3,பச்சைமிளகாய் 4

மேல்மாவு மைதாவும்+கொஞ்சம் அரிசிமாவும்+ ப்ரெட் தூளும்.

செய்முறை.
-------------------------------இரண்டு பேருக்கு:)

1, இரண்டு குடமிளகாயையும் நன்குக் கழுவித் துடைத்து,
நான்கு பாதிகளாகச் செய்து கொள்ளணும்.
அதில் இருக்கிற விதையெல்லாம் எடுத்துவிட்டுத் தயாரா வைத்துக் கொண்டு,
நாலு உருளைக் கிழங்கையும் குக்கரில் உப்புப் போட்டுவேகவைத்துப் பொடித்து மாஷ் பண்ணவேண்டும்.
,
2 காய்கறிகளைப் பொடியாக அரிந்துகொள்ளணும்.
எல்லாவற்றையும் உப்பு,மஞ்சப்பொடியோடு வேகவைக்கணும்.

3,
மசாலா விஷயங்களை வாணலியில் வறுத்துப் பொடி செய்து கொள்ளணும்.

4,மைதாமாவையும் அரிசிமாவையும் கொஞ்சம் உப்பு போட்டுத்
 தண்ணீர் விட்டு பஜ்ஜிமாவு மாதிரிக் கரைத்துக் கொள்ளணும்.
5,
காய்ஞ்சுபோன ப்ரெட்டைத் தூள் செய்து தனியாக வைத்தால் நநம் ரெடி.
வேகவைத்த உருளைக்கிழங்கோடு ,வேகவைத்த காய்கறி,அரைத்தமசாலா எல்லாவற்றையும் சேர்த்துப் பிசைந்து வைத்துக் கொள்ளணும்.

ஒரு பெரிய வாணலியில் நாலே நாலு கரண்டி ரிஃபைண்ட் எண்ணையை விட்டு மிதமான சூட்டில் வைக்கணும்.
குடமிளகாய்க் கிண்ணங்களில் இந்தக் காய்கறிக் கலவையை நிரப்பி,
மைதாமாவுக் கரைசலில் முக்கி எடுத்து ப்ரெட் தூளில் ஒத்தி
சுட்ட எண்ணையில் ஜாக்கிரதையாக வைக்கணும்.
ஒரு பக்கம் வெந்தவுடன்
அப்படியே மாற்றி குடைமிளகாயோடத் தலைப்பக்கத்தை வைக்கணும்.
வடிவம் மாறாமல் அழகா இருக்கணும் இல்லையா.
இப்படியே பொறுமையா நாலு கட்லெட் என்று சொல்லப்படும் இந்த டிபனை
செய்து
புதிதாக் கலயாணமான,
நல்லா இருந்தா வல்லிம்மா காம்ப்ளிமெண்ட்.:))
சொல்ல மறந்துட்டேனே,
புதிசா ஒரு தோழி எங்க பேத்திக்குக் கிடச்சிருக்கா. அவ பேரு லல்லிம்மா:))
- July 25, 2007 20 comment

Nadigai Bhanumathi

வல்லிசிம்ஹன்

 வல்லிசிம்ஹன்

மீண்டும்மீண்டும் 
பார்த்து வியக்கும் நடிப்பு.
இத்தனை ஆளுமை ஒரு பெண்ணிற்கு
அமைந்திருந்தது
என்னை மிகவும் கவர்ந்தது.
அதுவும் அவரது குரலினிமை அவர் நடித்த படங்கள்
அத்தனையிலும் வரும் பாடல்களில்

சிறப்பாக இருக்கும். தாய்க்குப் பின் தாரம்,
மக்களைப் பெற்ற மகராசி,
சாரங்கதாரா,அன்னை,பத்து மாத பந்தம்,
மணமகன் தேவை, அறிவாளி இவை எல்லாம்
சட்டென்று மனதுக்கு வந்தவை.
நிறைய மகிழ்ச்சியைக் கொடுத்த இவர் போன்ற
நடிக நடிகையருக்கு நன்றி.
புரட்சித் தலைவர், சிவாஜி போன்ற 
மகா நடிகர்கள் அவர்களை மரியாதையுடன் நடத்தியதுதான்
என்னைக் கவர்ந்தது.
எதற்காகவும் யாரிடமும் தன் சுய மரியாதையை விட்டுக் கொடுக்காத
மனுஷி.

Tuesday, January 27, 2026

ஸோஹன் ஹல்வா.

வல்லிசிம்ஹன்

+2
சோஹன் ஹல்வா
 (Sohan Halwa) என்பது பால், சர்க்கரை, மற்றும் சோளமாவு (Cornflour) கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய, கடினமான, மற்றும் சுவையான இனிப்பு வகையாகும்.
 பாலில் சர்க்கரை மற்றும் சோளமாவைக் கலந்து, நெய் சேர்த்து நன்கு காய்ச்சி, முந்திரி, பாதாம், பிஸ்தா சேர்த்து தடிமனான பதம் வரும் வரை கிளறி, குளிர்வித்து துண்டுகளாக வெட்டி இது பரிமாறப்படுகிறது 
  • பால் - 1 லிட்டர்
  • சர்க்கரை - 1 கப்
  • சோளமாவு (Cornflour) - 1/2 கப் (சிறிது நீரில் கரைத்தது)
  • நெய் - 1/2 கிலோ (தேவைக்கேற்ப)
  • பாதாம், பிஸ்தா, முந்திரி - தேவையான அளவு
  • ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
  • குங்குமப்பூ - சிறிதளவு (விருப்பப்பட்டால்) 
செய்முறை விளக்கம்
  1. பால் தயாரிப்பு: ஒரு கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். பாலின் அளவு பாதியாகக் குறையும் வரை காய்ச்சவும்.
  2. கலவை சேர்த்தல்: காய்ந்த பாலில் சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ சேர்க்கவும்.
  3. சோளமாவு சேர்த்தல்: கரைத்து வைத்துள்ள சோளமாவை பாலுடன் மெதுவாகச் சேர்த்து, கட்டிகள் விழாமல் தொடர்ந்து கிளறவும்.
  4. நெய் சேர்த்து காய்ச்சுதல்: கலவை தடிமனாகத் தொடங்கும் போது, நெய்யை சிறிது சிறிதாகச் சேர்த்து கிளறவும்.
  5. பதம்: கலவை பாத்திரத்தின் ஓரங்களில் ஒட்டாமல், நெய் பிரிந்து வரும் வரை (சுமார் 30-40 நிமிடங்கள்) மிதமான தீயில் கிளறவும் Kitchen Diaries.
  6. செட் செய்தல்: ட்ரேயில் நெய் தடவி, நறுக்கிய நட்ஸ் (பாதாம், பிஸ்தா) தூவவும். ஹல்வா கலவையை அதில் ஊற்றி, சமப்படுத்தி 20 நிமிடங்கள் முதல் 6-7 மணி நேரம் வரை ஆற வைக்கவும் Kitchen Diaries.
  7. பரிமாறுதல்: நன்கு ஆறிய பின், துண்டுகளாக வெட்டி பரிமாறவும். 
முக்கிய குறிப்புகள்
  • அடிபிடிக்காமல் இருக்க: கனமான பாத்திரத்தைப் (Heavy-bottomed pan) பயன்படுத்தவும்.
  • பதம்: ஹல்வா மிகவும் கட்டியாக, அல்வா பதம் தாண்டி சற்றே முறுவலாக இருக்க வேண்டும் YouTube.
  • நெய் அளவு: சோஹன் ஹல்வாவிற்கு நெய் அதிகமாகத் தேவைப்படும், அதுதான் அதற்கே உரிய சுவையையும், கடினத்தன்மையையும் அளிக்கிறது. 

Friday, October 31, 2025

நினைவு நாள்.2025

வல்லிசிம்ஹன்
அக்டோபர் 31.
இன்றோடு 60 வருடங்கள் பூர்த்தியாகித் தொடர்கிறது எனக்கும் சிங்கத்துக்குமான
மானசீக உறவு.

இப்போதும் அவர் எப்போதும் விரும்பும் பாடல்களைக் கேட்டுக்கொண்டு
அவர் இங்கிருந்தால் எத்தனை இனிமையாக இருந்திருக்கும் என்று எண்ணி

இதுவும் கடக்கும் என்று நடந்து கொண்டிருக்கிறேன்.

இதைப் பரிபூரணம் என்று சொல்லாவிட்டாலும்
மறுபாதியாக அவர் நினைவு என்னிடம் எந்தத் தருணத்திலும்
இருந்து கொண்டே இருக்கிறது.

ஆதரவாக என்னைச் சுற்றி இருந்தவர் சட்டென விலகினாலும்
ஒரு சிறு சிரமம் கூட அனுபவிக்காமல்
மறைந்தார்.

மீண்டும் நாங்கள் சந்திப்போம் நம்பிக்கையுடன்.
அனைவரும் நலமாக இருக்க வேண்டும்.


Wednesday, February 12, 2025

ஞாபக மறதி

வல்லிசிம்ஹன்



ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!!
ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை.
மறதி வந்தால் நினைப்பதில்லை.
இப்படி இரு வார்த்தைகள் எப்படி ஒன்றாக முடியும்?


வாழ்க்கையில் பல சம்பவங்கள் நம்மைப் 
பாதிக்கின்றன. 
அல்லாதன மனதில் தங்குவது  அதிகம். 
நல்ல நிகழ்ச்சிகளைச் சுருக்க மறந்து விடுகிறேனோ
என்ற பயத்தில் தான் 20 வருடங்களுக்கு முன் எழுத 
ஆரம்பித்தேன்...........

பிறந்ததிலிருந்து ,பள்ளிக்கூடம், கல்லூரி முதல் நாள் இறுதி நாள்
என்று ஒருபாகம், திருமண வாழ்க்கையின் சில வருடங்கள், மகள் மகன்கள்
வரன் தேடல்,(!!!!!!!!) அந்தக் கால சிலசுவையானநிகழ்ச்சிகளைநினைக்கத்தான்   வேண்டும்:)

பிறகு அவர்களின் திருமணங்கள்.
இதுவரை நினைவு பசுமையாக இருக்கிறது.

பிறகுதான்  நினைவுகள் தடம் மாறுகின்றன.
தேதிகளில் மாற்றம் இல்லை. நிகழ்ச்சிகளின் கோர்வையில் தான்
மாறுதல்.:){))சார் யாருன்னு தெரியலையேன்னு ஒரு பதிவு 15 வருடங்களுக்கு 
முன் எழுதிய நினைவு.மகன்கள், மகள். படிக்கும் காலம் தோழர்களும் தோழிகளும் வந்து வீடே கலகலப்பாக இருக்கும். மகிழ்ச்சி தான்:) வீடு நிறைய செந்தில்களும். ஆனந்துகளும் கணேஷ், செல்வம் , ஆனந்தி , விஜி என்று நிரம்பும்போது. யாருடைய fரண்ட் யார், என்பதில் எனக்குக் குழப்பம் வரும்:)  இவர்களுக்கு எல்லாம் திருமணம் முடிந்த பிறகு இன்னும் அதிகம்.  என்னுடைய மறதியைப் பார்த்து அவர்களே நான் தான் மா விஜய் வந்திருக்கேன். மும்பைல இருக்கேன். இன்னோரு விஜய் லண்டனுக்குப் போயிட்டான் என்று அறிமுகப் படுத்திக் கொள்வார்கள்:)இது சுய புராணம்!!!

நினைப்பதும் சில வேண்டாத நிகழ்ச்சிகளை மறப்பதும் மெண்டல் ஹெல்த்துக்கு. மிக நல்லதாம்.  அல்லாத நிகழ்ச்சிகளை. மூளை ஏதோ ஒரு மூலையில் சேர்த்து வைத்து விடுமாம். மன நலம் கெடாமல் இருக்க வேண்டி மறைத்து வைக்குமாம். அப்படி இருப்பதால் தான் நம்மால் பல இழப்புகளிலிருந்து மீள முடிகிறது. 

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி  என்றும் இல்லை"

கண்ண தாசன் சொன்ன படி வாழ்க்கையில் எத்தனை நினைவுகளை
மனம் விழுங்கி விடுகிறது! பல  மகிழ் நினைவுகள் உடலையும் மனத்தையும் வளப்படுத்துகின்றன.   நினைவும் மறதியும் என்றும் தேவை. 










இந்தத் தனிமை அவளுக்குக் குழந்தைகள் பிறந்ததும்
மறைந்தது.
தன் உயிர் மூச்சே அவர்கள்தான் என்று சொல்லும்படி அளவில்லாத
அக்கறையோடு அவர்களை வளர்த்தாள்.




 

Tuesday, February 04, 2025

உன்னை நான் சந்தித்தேன்....



October 31st  1965

வருடா வருடம் நினைக்காமல் விட்டால்
ஏதோ தவறு செய்த மாதிரி இருக்கிறது.


நமக்கென்று காத்திருந்த ஒருவர் அவர்தான்.
சிங்கத்துக்கு முன் ,சிங்கத்துக்குப் பின்
இதுதான் வாழ்க்கை.

அழகான புன்னகையுடன் கம்பீரமாக அவர் உட்கார்ந்து இருந்தது,
ஒரே நோக்கிலேயே இவர்தான்
என்று தீர்மானித்தது
பூர்வ ஜன்ம புண்ணியம்.

என்றும் அவர் நினைவில் .
ஏன் அவர் சட்டென்று கிளம்பி இறைவனை அடைந்தார்?
இன்னும் புரியாத மர்மம்.  12 வருடங்களும் கடந்தாச்சு.






எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்.





Saturday, February 01, 2025

முழுமை பெற்ற காதல் எல்லாம்...7ஆம் பகுதி

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்




 நீலா மைலாப்பூரில் குடி வந்தது ஜானிக்குத் தெரியாது
என்று சொல்லி போன பதிவை முடித்திருந்தேன்.

பெற்றோரின் வீட்டுக்கு வேண்டிய வசதிகள்
செய்து முடிக்கும் வேலைகளை முடித்துக் கொண்டான்.
அவன் வேலை செய்யும் இடத்தில் 
ஒரு நெருக்கடியான நிலமை வந்ததால்
திரும்பிப் போகும் நாளைக் குறித்து
டிக்கெட்டும் வாங்கிக் கொண்டான். நீலாவைப் போய்ப்
பார்க்க வேண்டும் என்று மனம் விரும்பினாலும்
வேலைப் பளுவினால் முடியவில்லை.
யதேச்சையாகப் பேரனுடன் வெளிவந்த நீலா,
ஜானகிராமன்  ,பெட்டிகளை ஏற்றி ஊருகுக் கிளம்புவதைக்
காண நேர்ந்தது.
அதிர்ச்சியில் நகரக் கூட முடியவில்லை.
''ஜானியா அது.!! தலை நரைத்து வயதான தோற்றம் வந்துவிட்டதே''
என்று தொண்டையில் துக்கம் சேரத் தன்னைக் கட்டுப்
படுத்திக்கொண்டாள்.

 அதற்குப் பின் வந்த வருடங்களில் நீலாவின் வாழ்வில் 
மேலும் மாற்றம். பெற்றோர் இருவரும் ஒருவர் பின் ஒருவர் இயற்கை எய்த

தன் வாழ்க்கை முறையில் பல முடிவுகளுக்கு வர வேண்டி இருந்தது.
மகன் மகள் இருவரும் அவரவர் வாழ்க்கைத் துணைகளோடு
நியூசிலந்திற்கும்,சிங்கப்பூருக்கும் செல்ல

அவளும் அவர்களோடு இருக்க வேண்டிய சூழ்னிலை
வந்தது.அடிக்கடி வீட்டைப் பூட்டிவிட்டு அவர்கள் தேவைக்கேற்ப
சென்று வந்து கொண்டிருந்தாள். ஜானியின் 
சகோதரிகளையோ,பெற்றோரையோ
பார்த்துப் பேச அவள் முயற்சி செய்ய நேரமோ மனமோ
இருக்கவில்லை. ஒரு வெறுமையான விரக்தியான
மன நிலை அவளை எப்பொழுதும் சூழ்ந்திருந்தது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஜானி தன் தந்தை ,தாய் உடல் நிலை தளர்ந்ததும்
அடிக்கடி சென்னை வந்தாலும்
அவனும் நீலாவும் சந்திக்கவே முடியவில்லை.
2023 கோடையில் அவன் வந்தது தந்தையின் 
இறுதிச் சடங்குகளை நிறைவேற்றவே.
அடுத்த வருடம் வருஷ முடிவு சடங்குகளைப்
பூர்த்தி செய்துவிட்டுத் தன் தாயுடன் சிறிது
நாட்களைச் செலவழித்துக் கொண்டிருந்தான்.

மனம் மட்டும் நீலாவைக் கண்டு பேசவில்லை
என்று மிகமிக வருத்தப் பட்ட நிலையில் தான்
தோழன்  யோசனைப்படி கபாலி கோவில் 
பயணத்துக்கு வந்து சேர்ந்தான்.
அங்கு வந்தவர்களுடன் கலந்து கொள்ளவும் முடியாமல்
பிரிந்து நிற்கவும் முடியாமல் அவன் கண்கள் 
சுற்றுப் புறத்தைப் பார்த்துவரும்போது தான் நீலா
தோழியுடன் வந்தாள். ஒரு நிமிடம் ஜானிக்கு மூச்சே நின்று விடும்போல் 
இருந்தது. அவசரமாக அவளை நோக்கி விரைந்த
கால்களைச் சிரமப்பட்டு அடக்கி மெல்ல அவளை நோக்கி நகர்ந்தான்.

தன் அருகில் வந்து நின்ற ஆறடி உயரக் கம்பீரமான
ஆண் உருவத்தைக் கண்ட நொடியில்
ஜானகிராமனை அறிந்து கொண்டாள்.
இத்தனை நாட்களாக உயிர்ப்பே இல்லாமல் 
இருந்த உடலில் திடீரென்று சக்தி பாய்ந்தது போல
உணர்ந்தாள்.

18 வயதில் இருந்த சிலிர்ப்பு,உத்சாகம்,மன ஈர்ப்பு
இவை எல்லாம் இப்போது இல்லை.
எல்லாவித இடர்களையும் கவலைகளையும்
கடந்த பிறகு வரும் அமைதியே இருந்தது.
இருந்தாலும் ஒருவரை ஒருவர் காணும் போது
மனதில் பொங்கிய ஆனந்தம் முகங்களிலும் தெறித்தது.

அந்த ஒரு கணத்தில் அவர்களது எதிர்காலம் முடிவானது.

ஜானியின் குடும்பத்தைச் சந்தித்த நீலா,

சஞ்சலம் இல்லாமல் அவனுடன் சாந்தோமிலிருந்த
சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று  திருமணத்துக்கான
லைசென்ஸ் வாங்கிக் கொண்டாள்.

இரண்டு நாட்களில் வீடியோ கான்ஃபரன்சில் மகளும் மகனும் கலந்து கொள்ள
ஜானகிராமன் நீலா திருமண பந்தத்தில் இணைந்தனர்.
மற்றவர்களின் சம்மதம் ,மறுப்பு என்று எதையும் யோசிக்கவில்லை.
அந்த நிலையைத் தாண்டிய முதுனிலையை அடைந்து விட்டதால்

முழு சுதந்திரத்துடன் கைகள் கோர்த்து,
எதிர்காலத்தில் காலடி வைத்தனர்.
என்றும் மகிழ்வுடன் சேர்ந்திருக்க நம் வாழ்த்துகள்.
இன்னும் நிறைய உணர்வுகளை எழுதி இருக்கலாம்.
ஆனால் எனக்குச் சரியான வார்த்தைகள் கிடைக்கவில்லை.:))))))))))))))))))))))))))))))))))))))))
++++++++++++++++++++++++++++++++++++++++++++

மேலும் நான் பேச அங்கே ஒரு செய்தியும் இல்லை!!!!

இந்தக் கதை என் அன்புக் கணவர் சிங்க்கத்துக்கு சமர்ப்பணம்







பழைய பிரதாபம்.

வல்லிசிம்ஹன் Wednesday, July 25, 2007 205,குடமிளகாய் கட்லட் 1966 ---------------------------------------------------------- முன்னமேயே சொல்லி...