| அந்தக் காலத்துப் பெண்குழந்தைகள் |
| அந்தக் காலத்துக்குக் குழந்தைகள் |
![]() |
| இன்றைய திருமங்கலம் |
![]() |
| திருமங்கலம் மெயின் சாலை |
கஸ்தூரிபாய் காந்தி ஆதாரப் பள்ளியில்
பலவித கைவேலைகள், ராட்டினம் நூற்பது, நூற்ற நூலைச் சர்வோதய சங்கத்தில் கொடுப்பது என்றெல்லாம் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டோம்.
அப்பா வீட்டிலேயே கைராட்டினமும், தக்கிளியும் வாங்கிக் கொடுத்தார்.
பஞ்சு வாங்கி வந்து நூற்பதற்குப் போட்டி போடுவோம்.:)
அப்போது 'புல்புல் தாரா'' வந்த புதிது .
பிருந்தாவனமும் நந்த குமாரனும் வாசிக்கக் கற்றுக்கொண்டோம்.
இன்ஃப்ளுயன்சா என்ற புதுக் காய்ச்சல் வந்தது . நானும் தம்பியும்
ஜுரம் வந்து சிரமப்பட்டோம்.
அந்தத் தலைவலி போல் எப்போதும் வந்ததில்லை.
ரேஷன் அறிமுகப் படுத்தப் பட்டது.
ஏதோ ஒரு கியூ வரிசையில் நின்ற நினைவு கூட இருக்கிறது..
அரிசிக்குக் கட்டுப்பாடு வந்தது என்று நினைக்கிறேன்.
அப்பா கூடப் பரீட்சையெல்லாம் எழுதுவார் என்று அந்த நாளில் தெரிந்து கொண்டேன்:)
நாற்பது நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு அடுத்த பதவிக்காகப் படித்தார்.
அந்த நாட்கள் வீடு குதூகலமாக இருக்கும்.
எப்பொழுதும் அப்பா அலுவலகத்திலிருந்து வர நேரமாகும்.
மதியம் காப்பி மட்டும் ஒருவர் வந்து வங்கிப் போவார். இன்னும் அந்தத் தெர்மாஸ் ஃப்ளாஸ்க் சந்தனக்கலரில் இருப்பதும், மணக்க மணக்க அம்மா
அதில் காப்பியை ஊற்றுவதும் நிழலாடுகிறது.
அந்தக் காஃபிக்குடுவைக்காக அம்மா போட்ட
க்ரோஷாப் பின்னல் பையும் ரொம்ப நாள் இருந்தது.
ஏதோ காரணம். அம்மாவின் கைவண்ணம் எனக்கு லபிக்கவில்லை.:(
தையல் ஊசியும் என் விரல்களும் பள்ளிக்கூட நாட்களுக்குப் பிறகு
தோழமையைக் கத்திரித்துக் கொண்டன:)
பட்டாம்பூச்சி, ரோஜா இவைகளை வரைந்து எம்ப்ராய்டரி
செய்யக் கற்றுக் கொடுத்தார் அம்மா.
எல்லாக் கைக் குட்டைகளும் ரோஜாவும் பட்டாம்பூச்சிகளுமாகத் திரிந்தன.:)
ஆநந்தவிகடனும் குமுதமும் நாலணாவுக்குக் கிடைத்தன.
வெள்ளியன்று விகடனும் , ஞாயிரன்று குமுதமும் வரும்.
அப்போது அந்தப் பத்திரிகைகளில் நகைச்சுவையும்,சிறுகதைகளும். சில விளம்பரங்களும்,தொடர் கதைகளும் வரும். சினிமாச் செய்திகள் அவ்வளவு படித்ததாக நினைவில்லை.
ஆநந்தாத் தியேட்டரில்
நீலமலைத்திருடன்(சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா)
மஞ்சள் மகிமை,
வீரபாண்டியக் கட்டபொம்மன்,
மின்னல் வீரன்,
கற்புக்கரசி, மணாளனே மங்கையின் பாக்கியம்,
கணவனே கண் கண்ட தெய்வம் எல்லாம் பார்த்தோம்.
திருமங்கலத்தை விட்டுக் கிளம்பும் நாட்களும் வந்தது.
மக்களே,
சில நாட்கள் ஊரைவிட்டுப் பயணம் கிளம்புகிறோம்.
பயணம் சௌகரியமாக அமைய உங்கள் வாழ்த்துகள் வேண்டும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


