Showing posts with label 1954. Show all posts
Showing posts with label 1954. Show all posts

Tuesday, March 15, 2022

1954 இல் ஒரு நோன்பு மீள் பதிவு.

வல்லிசிம்ஹன்






Monday, March 12, 2012

காரடையும் நானும்

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 1954 மார்ச் 14
மற்றுமொரு காரடையான் நோம்புக்குத் தயாரானது சென்னை வீடு.
3 மணிக்கே எழுத்துவிட்ட ருக்மணிம்மா
ஆசாரமாகக் குளித்துவிட்டுப் பெருமாள் விளக்கு ஏற்றிவிட்டு இரு
விறகடுப்புகளையும் ஏற்றி,
இட்லிப்பானையில் தண்ணீரைக் கொட்டி, அரிந்த வைத்திருந்த காராமணிப் பயறுகளைச் சேர்த்தாள்.
மற்றவர்கள் எழுந்திருப்பதற்கு முன்னால்  சத்தம் போடாமல் வந்து நிற்கும் பேத்தியைப் பார்த்து நீ தூங்குமா. இன்னும் நேரமாகும்.
பசிக்கிறது பாட்டி என்னும் ஆறு வயசுக் குழந்தைக்கு ஹார்லிக்ஸ்  கரைத்துக் கொடுத்துவிட்டு, தன் ஆசாரத்தைக் கொஞ்சம் மீறினாள்.

இன்னிக்கு நோம்பு மா. பாட்டி வெந்நீர் போட்டு வைக்கிறேன். அம்மா எழுந்ததும்
உனக்குப் புதுப் பாவாடை எல்லாம்  கொடுப்பா. நீ சமத்தாக் குளித்துவிட்டு
அதுக்கப்புறம் பசிக்கிறதுன்னு சொல்லாம இருக்கணும்  சரியா என்றதும்.
சரி உன்னைத் தொடக் கூடாதா என்று பக்கத்தில வர பெண்ணைப் பின்னாலிருந்து இழுத்தாள்
ஜயாம்மா.
பாட்டி குளித்தாச்சு. நீ என்னோட வா.
என்று அழைத்துப் போய் பின்புற விளக்கைப் போட்டு''சமத்தாக் குளிச்சுட்டு வா.

வெந்நீர்ல கையை விட்டுடாதே.பத்ரம் என்றவாறு வெளியேறினாள்.
வெந்நீர்ல கைவைக்காட்டா எப்படிக் குளிக்கிறது என்று முணுமுணுத்தபடி
இன்னோரு பக்கெட்டில் இருந்த தண்ணீரில் குளித்தகையோடு வெள்ளைத் துண்டையும்
இடுப்பில் சுற்றிக் கொண்டு ஐந்து நிமிடங்களில் வந்தாச்சு.
அம்மா நான் ரெடி.
பாவாடை கொடு. ஒரு புட்டுக் கூடையில் இருந்த புதுப்பாவாடையைத்  துணி உலர்த்தும்  கொம்பால்
எடுத்து அவள் மேல் வைத்துவிட்டு அம்மா குளிக்க நகர்ந்தாள்.
பாடிப்பாவாடை, அதன் மேல்  சிவப்பு வெல்வெட் சட்டை. இரண்டு கைப்புறங்களிலும் மாங்காய் வேலைப்பாடு. ஸ்ரீராம் டெய்லர் அளவெடுத்து அழகாகத் தைத்தது.

வீட்டிற்கு வந்திருந்த  அனைத்துப் பெண்டிரும் குளித்து முடிக்கவும் காரடைகளும் வெண்ணேயும் தயாரகவும் சரியாக இருந்தது. தம்பிகள் எட்டிப் பார்த்து,அக்காவைச் சற்றே கோபத்தோடு கண்டுகொண்டார்கள். பாட்டி எங்களுக்கும் கட்டிவிடு என்பது அவர்கள் வேண்டுகோள்:)

கோலங்கள் இட்டு இலைகளைப் போட்டு, இலை ஒரங்களில் வெற்றிலை பாக்கு,சரடு,பூச்சரம் எல்லம் துரிதமாக வந்து சேர்ந்தன. மாசி முடிவதற்குள் நோம்பு முடிக்க பாட்டிக்கு ஆசை.
அம்மா ஆரம்பித்து,தலையில் பூ வைத்துக் கொண்டு,இலையில் இருந்த வெல்ல அடையில் பாதியைக் கணவனுக்காக எடுத்துவைத்துவிட்டு, ''உருக்காத வெண்ணெயும் ஓரடையும் நான்நூற்றேன், ஒருக்காலும் என் கணவன் என்னைப் பிரியாதிருக்கணும்னு சொல்லிவிட்டு மஞ்சள்
சரடை அணிந்து கொண்டாள் அதன் நடுவே கோர்க்கப் பட்டிருந்த மல்லிச்சரம் அழகாக அவள் தொண்டைப் பகுதியில் அமர்ந்தது.
திரும்பி பெண்ணைப் பார்த்தால், அவள் கண்கள் வெண்ணேய் மேலயேஇருந்தது. சொல்லுமா உருக்காத.. என்றதும் பசி காதை அடைக்க உட்கார்ந்திருந்த பெண், எனக்குத்தான் கல்யாணமே ஆகலியே என்னை ஏன் இதெல்லாம் சொல்லச் சொல்ற'என்று முணுமுணுக்க,
சமாதானப் படுத்தித் தானே கட்டிவிட்டாள் அந்தப் பொறுமையின் பூஷணம்.

பிறகுதான் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டது அந்தப் பலகாரங்கள்.
 வெற்றிலை பாக்கு சிறிதே சுண்ணாம்பு தடவின தாம்பூலத்தை உண்ண ஆண்டாளுக்குக் கொஞ்சமாகத் தலை சுற்றுவது கூட ஆநந்தமாக இருந்தது. அத்தோடூ புதுப்பாவாடையில் தட்டாமாலை வேறு.

இதோ இன்னோரு நோம்பு நாள். அனைவரும் இனிய இல்லற வாழ்வில் மகிழ்வுடன் இருக்க என் பிரார்த்தனைகள்.

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...