Blog Archive

Tuesday, March 15, 2022

1954 இல் ஒரு நோன்பு மீள் பதிவு.

வல்லிசிம்ஹன்






Monday, March 12, 2012

காரடையும் நானும்

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 1954 மார்ச் 14
மற்றுமொரு காரடையான் நோம்புக்குத் தயாரானது சென்னை வீடு.
3 மணிக்கே எழுத்துவிட்ட ருக்மணிம்மா
ஆசாரமாகக் குளித்துவிட்டுப் பெருமாள் விளக்கு ஏற்றிவிட்டு இரு
விறகடுப்புகளையும் ஏற்றி,
இட்லிப்பானையில் தண்ணீரைக் கொட்டி, அரிந்த வைத்திருந்த காராமணிப் பயறுகளைச் சேர்த்தாள்.
மற்றவர்கள் எழுந்திருப்பதற்கு முன்னால்  சத்தம் போடாமல் வந்து நிற்கும் பேத்தியைப் பார்த்து நீ தூங்குமா. இன்னும் நேரமாகும்.
பசிக்கிறது பாட்டி என்னும் ஆறு வயசுக் குழந்தைக்கு ஹார்லிக்ஸ்  கரைத்துக் கொடுத்துவிட்டு, தன் ஆசாரத்தைக் கொஞ்சம் மீறினாள்.

இன்னிக்கு நோம்பு மா. பாட்டி வெந்நீர் போட்டு வைக்கிறேன். அம்மா எழுந்ததும்
உனக்குப் புதுப் பாவாடை எல்லாம்  கொடுப்பா. நீ சமத்தாக் குளித்துவிட்டு
அதுக்கப்புறம் பசிக்கிறதுன்னு சொல்லாம இருக்கணும்  சரியா என்றதும்.
சரி உன்னைத் தொடக் கூடாதா என்று பக்கத்தில வர பெண்ணைப் பின்னாலிருந்து இழுத்தாள்
ஜயாம்மா.
பாட்டி குளித்தாச்சு. நீ என்னோட வா.
என்று அழைத்துப் போய் பின்புற விளக்கைப் போட்டு''சமத்தாக் குளிச்சுட்டு வா.

வெந்நீர்ல கையை விட்டுடாதே.பத்ரம் என்றவாறு வெளியேறினாள்.
வெந்நீர்ல கைவைக்காட்டா எப்படிக் குளிக்கிறது என்று முணுமுணுத்தபடி
இன்னோரு பக்கெட்டில் இருந்த தண்ணீரில் குளித்தகையோடு வெள்ளைத் துண்டையும்
இடுப்பில் சுற்றிக் கொண்டு ஐந்து நிமிடங்களில் வந்தாச்சு.
அம்மா நான் ரெடி.
பாவாடை கொடு. ஒரு புட்டுக் கூடையில் இருந்த புதுப்பாவாடையைத்  துணி உலர்த்தும்  கொம்பால்
எடுத்து அவள் மேல் வைத்துவிட்டு அம்மா குளிக்க நகர்ந்தாள்.
பாடிப்பாவாடை, அதன் மேல்  சிவப்பு வெல்வெட் சட்டை. இரண்டு கைப்புறங்களிலும் மாங்காய் வேலைப்பாடு. ஸ்ரீராம் டெய்லர் அளவெடுத்து அழகாகத் தைத்தது.

வீட்டிற்கு வந்திருந்த  அனைத்துப் பெண்டிரும் குளித்து முடிக்கவும் காரடைகளும் வெண்ணேயும் தயாரகவும் சரியாக இருந்தது. தம்பிகள் எட்டிப் பார்த்து,அக்காவைச் சற்றே கோபத்தோடு கண்டுகொண்டார்கள். பாட்டி எங்களுக்கும் கட்டிவிடு என்பது அவர்கள் வேண்டுகோள்:)

கோலங்கள் இட்டு இலைகளைப் போட்டு, இலை ஒரங்களில் வெற்றிலை பாக்கு,சரடு,பூச்சரம் எல்லம் துரிதமாக வந்து சேர்ந்தன. மாசி முடிவதற்குள் நோம்பு முடிக்க பாட்டிக்கு ஆசை.
அம்மா ஆரம்பித்து,தலையில் பூ வைத்துக் கொண்டு,இலையில் இருந்த வெல்ல அடையில் பாதியைக் கணவனுக்காக எடுத்துவைத்துவிட்டு, ''உருக்காத வெண்ணெயும் ஓரடையும் நான்நூற்றேன், ஒருக்காலும் என் கணவன் என்னைப் பிரியாதிருக்கணும்னு சொல்லிவிட்டு மஞ்சள்
சரடை அணிந்து கொண்டாள் அதன் நடுவே கோர்க்கப் பட்டிருந்த மல்லிச்சரம் அழகாக அவள் தொண்டைப் பகுதியில் அமர்ந்தது.
திரும்பி பெண்ணைப் பார்த்தால், அவள் கண்கள் வெண்ணேய் மேலயேஇருந்தது. சொல்லுமா உருக்காத.. என்றதும் பசி காதை அடைக்க உட்கார்ந்திருந்த பெண், எனக்குத்தான் கல்யாணமே ஆகலியே என்னை ஏன் இதெல்லாம் சொல்லச் சொல்ற'என்று முணுமுணுக்க,
சமாதானப் படுத்தித் தானே கட்டிவிட்டாள் அந்தப் பொறுமையின் பூஷணம்.

பிறகுதான் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டது அந்தப் பலகாரங்கள்.
 வெற்றிலை பாக்கு சிறிதே சுண்ணாம்பு தடவின தாம்பூலத்தை உண்ண ஆண்டாளுக்குக் கொஞ்சமாகத் தலை சுற்றுவது கூட ஆநந்தமாக இருந்தது. அத்தோடூ புதுப்பாவாடையில் தட்டாமாலை வேறு.

இதோ இன்னோரு நோம்பு நாள். அனைவரும் இனிய இல்லற வாழ்வில் மகிழ்வுடன் இருக்க என் பிரார்த்தனைகள்.

18 comments:

கோமதி அரசு said...

பழைய நினைவுகளை எவ்வளவு அழகாய் சொல்கிறீர்கள்!

இரண்டு கைபுறங்களில் மாங்காய் வேலைப்பாடு வெல்வட் சட்டை அருமை. எனக்கும் அம்மா வாங்கி இருந்தார்கள், கறுப்பு, அரக்கு, மாம்பழ கலரில். கழுத்துக்கு தனியாக வேலைப்பாடு இருக்கும்.
முன்பே படித்து இருந்தாலும் மீண்டும் படிக்க நன்றாக இருக்கிறது.

நோம்பு நாளில் அனைவருக்கும் வாழ்த்துகள்.
மகிழ்வுடன் இருக்க நானும் பிரார்த்திக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கோமதிமா,

மிகச் செழிப்பான இளமைப் பருவத்தை இறைவன் நமக்கு
அளித்திருக்கிறார்.
எத்தனையோ நன்மைக்கு நாம் நன்றி சொல்ல வேண்டி இருக்கிறது.

ஆதரவு காட்டிய அனைவருக்கும்
அன்பு செலுத்திய பெரியவர்களுக்கும் நம்
நன்றி.
வாழ்க வளமுடன்.

ஸ்ரீராம். said...

இதை ஏற்கெனவே படித்திருக்கிறேனோ என்று தோன்றுகிறது.  அந்தச் சிறு பெண் நீங்கள்தானே?  கணவன் பிரியாதிருக்க நோன்பு.  என் அலுவலக தோழியிடம் சாதாரணமாக கேட்டு வாங்கி சுவைப்பேன்.  ஆனால் நாளை அம்மா திதி என்பதால் மற்றும் அந்தப் பெண் இன்று விடுப்பு என்பதால் சுவைக்கவில்லை!  வருடா வருடம் பாஸின் சித்தி கொண்டு வந்து தருவார்.  ஆம், எங்கள் வீட்டில் வழக்கமில்லை!

ஸ்ரீராம். said...

அம்மா வரலக்ஷ்மி விரதத்தின்போதும், நாக சதுர்த்தி, கருடபஞ்சமியின் போதும் அம்மா அதன் கதைகளை சொல்லிக்கொண்டே பூஜைகளை முடிப்பார்.  வருதுங்க செல்லச்செல்ல, அம்மாவால் முடியாத நிலை.  இயந்திரகதியில் பூஜைகளை முடித்துவிடுவார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஶ்ரீராம் எந்நாளும் நலமுடன் இருங்கள்.
புதிதாக எழுத கை வரவில்லை.
அதனால் காரடையான் நோம்புக்காக பழைய பதிவைப் புதுப்பித்த எழுத்தாகப் பதிவேற்றினேன் மா.

ஆமாம் அது நான் தான். :)

வல்லிசிம்ஹன் said...

உங்கள் வீட்டில் இந்த நோன்பு கிடையாதா!

இந்தக் காரடை வீட்டில் செய்யலாமே. அரிசி மாவும் வெல்லமும் தானே.
காராமணி சேர்க்க வேண்டும் . அவ்வளவு தான்.

செய்து பாருங்கள் மா.
அம்மா திதி யா. நல்ல படியாக நடக்கட்டும். சத்தியவான் சாவித்ரி கதை தான் ஆதாரம்., என்று சொல்வார்கள்.

Geetha Sambasivam said...

பழைய நினைவுகள் அருமை. ஏற்கெனவே படிச்சதுன்னாலும் உங்கள் நடையில் மீண்டும் படிக்க மகிழ்ச்சி. எனக்குச் சின்ன வயதுக் காரடையான் நோன்பு நினைவுகள் ஏதும் இல்லை. என்றாலும் அந்த நாட்களை நினைவூட்டி விட்டீர்கள். 54 ஆம் வருஷம் 3 வயது நிரம்பிய குழந்தை. :)))) என் நினைவுகள் எல்லாம் தம்பி பிறந்தப்புறமாவே தொடங்குகின்றன.

Geetha Sambasivam said...

@ஸ்ரீராம் இந்த நோன்பை யார் வேண்டுமானாலும் செய்யலாமே. இப்போதெல்லாம் பிராமணரல்லாதோர் கூடப் பண்ணுகின்றனர். அதோடு காரடை செய்வது எளிது. நோன்புனு பண்ணாட்டியும் ஒரு நாள் மாலை உணவுக்குப் பண்ணிச் சாப்பிடலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நலமுடன் இருங்கள். மார்ச் 14 க்கான நினைவாக முக நூலில் வந்தது.

எனக்குத் தான் ஒன்றும் மறப்பதில்லை:)
பழைய பதிவே சரியாகப் பட்டது .புதிதாக ஒன்றும் சொல்ல. இல்லை. உங்களுக்குப் பிடித்ததே. மகிழ்ச்சி.
தாமத நோம்பு வாழ்த்துகள்..

ஸ்ரீராம். said...

// @ஸ்ரீராம் இந்த நோன்பை யார் வேண்டுமானாலும் செய்யலாமே. இப்போதெல்லாம் பிராமணரல்லாதோர் கூடப் பண்ணுகின்றனர். //

திடீர்னு ஆரம்பிக்கலாமா என்று ஒரு கேள்வி.. மேலும் இப்போதைய நிலையில் பாஸால் நிச்சயம் முடியாது.

வெங்கட் நாகராஜ் said...

நோன்பு நினைவுகள் சிறப்பு. பண்டிகை நாட்கள் என்றாலே மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் தானே.

Thulasidharan V Thillaiakathu said...

எங்கள் அம்மா 6 வயதுக் குழந்தையாக!! ஹாஹாஹா

அதென்னவோ தெரியவில்லை நோன்பு அன்று மட்டும் காலையிலேயே பசிக்கும்!! ஹாஹா

அருமையான் நினைவுகள் அதைக் கதை போல அழகாகச் சொல்லியிருக்கீங்கம்மா...ரசித்து வாசித்தேன்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

''உருக்காத வெண்ணெயும் ஓரடையும் நான்நூற்றேன், ஒருக்காலும் என் கணவன் என்னைப் பிரியாதிருக்கணும்னு //

அம்மா ஜாலிக்கு சொல்லுகிறேன்...நோ அஃபன்ஸ் என்ற எச்சரிக்கையுடன் .....எனக்குச் சமீபகாலமாகத் தோன்றுவது...அம்மா இப்பல்லாம் ஆண்கள்தான் இந்த வாக்கியத்தைச் சொல்லி நோன்பு நூற்க வேண்டும் என்று தோன்றுகிறது....உருக்காத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன் ஒருக்காலும் என் மனைவி என்னைப் பிரியாதிருக்கணும்!!!! ஹாஹாஹாஹா....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா நீங்க சொல்லிருக்கற ஸ்ரீராம் டெய்லர் தி நகர்?

இப்பவும் ரங்கநாதன் தெருவில் ஒரு ஸ்‌ரீராம் டெய்லர் கடை இருக்கிறது ரொம்ப ஃபேமஸ். ரொம்ப வருஷமா இருப்பதாகச் சொல்லுவார்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

எனக்கு ரொம்பப் பிடிக்கும் நோன்புக் கொழுக்கட்டை...வெல்லமும் சரி உப்பும் சரி. அதுவும் வெண்ணையோடு சாப்பிட ஆஹா ஆஹா!!!அதுவும் பெரும்பயறு வாசனையுடன் தேங்காய்க் கீற்றின் வாசனையுடன்...ஹெவன்லி!!!

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
நலமுடன் இருங்கள்.

குடும்பத்துடன் கொண்டாடும் எல்லாப் பண்டிகைகளும்

நன்மையானது.
உங்களுக்கும் பதிவு பிடித்ததுதான் அருமை.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நலமுடன் இருங்கள்.

நோன்பு என்றில்லை. யாராவது இன்னிக்கு சாப்பிடாதே என்றவுடன்
பசி வந்து விடும்.:)
அது நமக்கு வழக்கம் தானே.

எப்படித்தான் விரதம் எல்லாம் இருக்கிறார்களோ:))

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன்,
நலமுடன் இருங்கள்.
நீங்கள் சொல்வது அஃப்ஃபென்ஸ் இல்லை.
ஆதங்கம்.
நிறைய ஆண்களைப் பார்க்கும் போது
நினைத்துக் கொள்வேன், இவர்களுக்கெல்லாம்
ஒரு நோன்பு விரதம் ஒன்றும் இல்லையே என்று.:)