தானும் லிஸாவும் சேர்ந்து இசைத் தட்டுகளை ரசித்த காலங்கள்
நினைவில் வர வைத்த பாடல் கார் ரேடியோவில் ஒலித்தபடி ஏரிக்கரையோரம்
மார்ட்டின் வண்டியை விரட்டினான்.
மனம் முழுவதும் நிறைய நினைவுகள் விரட்ட,
மனதில் நின்ற ஒரே வார்த்தை" ஏன்?"
Yesterday once more.
எங்கே தவறு நிகழ்ந்தது? ஏன் எனக்குத் தெரிவிக்கப்
படவில்லை. யார் இதற்குக் காரணம்.
வண்டியைத் திருப்பி லிஸாவை நேருக்கு நேர் சென்று
அவளைக் கேள்விகளால் உலுக்கி எடுத்துப்
பதிலை வாங்க வேண்டும் என்ற வேகம்
அவனுள் எழுந்தது.
எங்கள் இளமைக் காலத்தை அழித்தது யார்.
இப்போது என்னை விரோதி போலப்
பார்க்கும் இந்தப் பெண்குழந்தைக்கு எப்படி என் சாயல் வந்தது.
லிஸா எப்படி அந்த எவெரார்ட் ஐத் திருமணம்
செய்தாள்?
லிஸாவின் கணவனை நினைத்த போதே
மார்ட்டினுக்குக் கசந்தது.
அவன் ஐந்து வருடத் திருமண வாழ்வில் மறைந்தது
இவனுக்கு இன்னும் கோபம் வந்தது!!
இவ்வளவு நிகழ்வுகளுக்குப் பின்னால் யார்?
மனதில் லிஸாவின் தந்தை உருவம் தான் தோன்றியது.
அப்போது நடந்த நிகழ்வுகள், பள்ளி இறுதி நாட்களில்
உறுதிப்பட்ட தங்கள் காதல்,
உள்ளங்கள் சேர்ந்ததால் உணர்வுகளும் கூடிய மாலை
நேரங்களில் ஏரிக்கரையின் காற்று துணைவர
தங்களின் எதிர்கால வீடு, குழந்தைகள்
என்று திட்டம் போட்ட காலம்.
அந்தக் கோடையின் முடிவில் லிஸாவின் குடும்பம்
காணாமல் போனது. தான் எங்கு தேட வேண்டும் என்ற
ஒரு திட்டம் இல்லாமல்
நாட்டின் ஒரு கோடிக்கும் மறு கோடிக்கும் அலைந்தது
என்று எல்லாவற்றையும் நினைக்கக் கண்கள்
கலங்கின.
அவன் வீட்டுக்குள் திரும்பின வேளை மழை பெய்ய ஆரம்பித்தது.
அதுவரை காத்திருந்த வீட்டின் ஹௌஸ்கீப்பர்,
சமைத்து வைத்திருந்த பண்டங்களை
சாப்பிடும் மேஜை மேல் வைத்து விட்டு
விடை பெற்றாள்.
கையில் பானம் ஒன்றை ஏந்தியபடி பெரிய பெரிய ஜன்னல் வழியே தெரிந்த
ஏரியின் தண்ணீரை வெறித்தான்.
'Yesterday once more" என்று முணுமுணுத்தபடி
அடுத்து வரும் நாட்களுக்கான திட்டத்தை யோசிக்கும் போதே
தெளிவு வந்தது. என் லிஸாவையும் என் மகளையும்
இந்தத் தடவை விட மாட்டேன்.
சமூகத்துக்குப் பயந்து ஓட மாட்டேன்.
எந்த ஏரி எங்களை இணைத்ததோ
அங்கேயே எங்கள் திருமணமும் நடக்கும் என்று
தீர்மானித்ததும் மனம் நிம்மதி பெற ,
சாப்பிட்டு விட்டு லிஸாவின் தொலைபேசி எண்ணைச் சுழற்றினான்.
தான் பெற்ற மகளின் சம்மதத்தைப் பெறுவது
ஒரு சவால் என்பதை அந்தத் தந்தையான காதலன்
உணர்ந்திருக்கவில்லை...............................தொடரும்.



