Blog Archive

Tuesday, October 12, 2021

லிஸா மார்ட்டின் கதை 3

வல்லிசிம்ஹன்,

   தானும் லிஸாவும் சேர்ந்து இசைத் தட்டுகளை ரசித்த காலங்கள்
நினைவில் வர  வைத்த பாடல் கார் ரேடியோவில் ஒலித்தபடி ஏரிக்கரையோரம்

மார்ட்டின் வண்டியை விரட்டினான். 
மனம் முழுவதும் நிறைய நினைவுகள் விரட்ட,
மனதில் நின்ற ஒரே வார்த்தை"  ஏன்?"






Yesterday once more.
எங்கே தவறு  நிகழ்ந்தது? ஏன் எனக்குத் தெரிவிக்கப் 
படவில்லை. யார் இதற்குக் காரணம்.

வண்டியைத் திருப்பி லிஸாவை நேருக்கு நேர் சென்று 
அவளைக் கேள்விகளால் உலுக்கி எடுத்துப்
பதிலை வாங்க வேண்டும் என்ற வேகம்
அவனுள் எழுந்தது.


எங்கள் இளமைக் காலத்தை அழித்தது யார். 
இப்போது என்னை விரோதி போலப் 
பார்க்கும் இந்தப் பெண்குழந்தைக்கு எப்படி என் சாயல் வந்தது.
லிஸா எப்படி அந்த    எவெரார்ட் ஐத்    திருமணம்
செய்தாள்? 

லிஸாவின் கணவனை நினைத்த போதே 
மார்ட்டினுக்குக் கசந்தது.

அவன் ஐந்து வருடத் திருமண வாழ்வில் மறைந்தது
இவனுக்கு இன்னும் கோபம் வந்தது!!

இவ்வளவு நிகழ்வுகளுக்குப் பின்னால் யார்?
மனதில் லிஸாவின் தந்தை உருவம் தான் தோன்றியது.


அப்போது நடந்த நிகழ்வுகள்,  பள்ளி இறுதி நாட்களில்
உறுதிப்பட்ட தங்கள் காதல்,

உள்ளங்கள் சேர்ந்ததால் உணர்வுகளும் கூடிய மாலை 
நேரங்களில் ஏரிக்கரையின் காற்று துணைவர 
தங்களின் எதிர்கால வீடு, குழந்தைகள் 
என்று திட்டம் போட்ட  காலம்.
அந்தக் கோடையின் முடிவில் லிஸாவின் குடும்பம்
காணாமல் போனது.  தான் எங்கு தேட வேண்டும் என்ற
ஒரு திட்டம் இல்லாமல் 
நாட்டின் ஒரு கோடிக்கும் மறு கோடிக்கும் அலைந்தது
என்று எல்லாவற்றையும் நினைக்கக் கண்கள் 
கலங்கின.

அவன் வீட்டுக்குள் திரும்பின வேளை மழை பெய்ய ஆரம்பித்தது.

அதுவரை காத்திருந்த வீட்டின் ஹௌஸ்கீப்பர்,
சமைத்து வைத்திருந்த பண்டங்களை
சாப்பிடும் மேஜை மேல் வைத்து விட்டு
விடை பெற்றாள்.

கையில் பானம் ஒன்றை ஏந்தியபடி பெரிய பெரிய  ஜன்னல் வழியே தெரிந்த 
ஏரியின் தண்ணீரை வெறித்தான்.
'Yesterday once more"  என்று முணுமுணுத்தபடி
அடுத்து வரும் நாட்களுக்கான  திட்டத்தை யோசிக்கும் போதே
தெளிவு வந்தது. என் லிஸாவையும் என் மகளையும் 
இந்தத் தடவை விட மாட்டேன்.

சமூகத்துக்குப் பயந்து ஓட மாட்டேன்.
எந்த ஏரி எங்களை இணைத்ததோ
அங்கேயே எங்கள் திருமணமும் நடக்கும் என்று
தீர்மானித்ததும் மனம் நிம்மதி பெற ,
சாப்பிட்டு விட்டு லிஸாவின் தொலைபேசி எண்ணைச் சுழற்றினான்.

தான் பெற்ற மகளின் சம்மதத்தைப் பெறுவது
ஒரு சவால் என்பதை அந்தத் தந்தையான காதலன்
உணர்ந்திருக்கவில்லை...............................தொடரும்.

12 comments:

ஸ்ரீராம். said...

மீள் பதிவு என்றால் நானும் முன்னரே படித்திருக்கிறேனா?  எனக்கு என்னவோ கதை புதிதாகவே இருக்கிறது!  தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

கனம் கோர்ட்டார் அவர்களே,
இது புதுப் பதிவு. புதுக்கதை. கருத்து பாதி கற்பனை
கலந்து வரும் கதை இதுதான் அன்பு ஸ்ரீராம்.

உங்களுக்கெல்லாம் பிடித்தால் சரி. நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா கதை செம....எவ்வளவு நன்றாக எழுதறீங்க!!!

அந்த ஃப்ளாஷ்பேக், பொண்ணு எப்படிச்சம்மதிக்கறா எல்லாம் தெரிய ஆவல்..கூடுகிறது. கதை என்றால் நீளம் பாக்காம படிப்போமே போட்டுருக்கலாமே அம்மா..முழு கதையையும்...

நீங்க எழுதின விதத்தையும் ரசித்தேன் அம்மா

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

நீளம் பார்க்காமல் அடுத்த பகுதியை எழுதிவிடுகிறேன் ராஜா.

இதையே நடு நடுவில் எதையாவது விட்டுவிட்டேனோ
என்று பார்த்துதான் எழுதினேன்.

பெரிய சைக்கலாஜிக்கல் முயற்சியில் தான்
இவர்கள் திருமணம் நடந்தது.
இதுவரை தான் தகப்பன் என்று
நினைத்தவன் தன் தகப்பன் இல்லை
என்றால் எத்தனை அதிர்ச்சி அந்தக் குழந்தைக்கு.
எல்லாவற்றையும் எழுத வேண்டும்.
நன்றி மா.

கோமதி அரசு said...

பாடல் இனிமை.
//தான் பெற்ற மகளின் சம்மதத்தைப் பெறுவது
ஒரு சவால் என்பதை அந்தத் தந்தையான காதலன்
உணர்ந்திருக்கவில்லை....//
நீங்கள் சொல்வதை பார்த்தால் அது மிகவும் கஷ்டம் என்று தெரிகிறது.


மார்டின் லிஸா மீண்டும் சேர்ந்து வாழ்வார்களா? குழந்தை அதை ஏற்றுக் கொள்வாளா?
பொறுத்து இருந்து பார்ப்போம்.
தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.

35 வருடங்கள் முன் அவர்கள் வசித்து வந்த சமூகம் மிகவும் பாரம்பரியம்
வாய்ந்தது.
அந்த விதத்தில் காதல் ஒப்புக் கொள்ளப்
பட்டாலும் மற்ற விஷயங்களில்

கண்டிப்பு காட்டப்பட்டது.
இன்னும் கூட அது போலப்
பெற்றோர்கள் இருக்கிறார்கள். எனக்குத் தான் இவர்கள்
வரலாறு மிக அபூர்வமாகப் பட்டது.
திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழ்வதே
அங்கீகரிக்கப் பட்ட காலம் இது.

அவர்களுக்குப் பெண்ணின் வழி தடை
வந்தது. எப்படி மீள் வாழ்க்கை பெற்றார்கள்
என்பதே கதை மா. மிக மிக நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

விறுவிறுப்பு. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

Geetha Sambasivam said...

முதல் இரண்டும் எப்போ வந்தது? இன்னிக்குத் தான் பார்க்கிறேன். இதான் அப்டேட் ஆகி இருக்கு! சுவாரசியம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட் நன்றி மா.

என்னால் சீக்கிரம் எழுத முடியவில்லை. படித்துக்
கருத்தும் சொன்னதற்கு மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
அதனால் என்னம்மா.
எல்லோரும் நவராத்திரியில் பிசியாக
இருக்கும் காலம் இது.
இதோ இன்னிக்கு துர்காஷ்டமி வந்து விட்டது.

நம்மால் முடிந்த அளவு
அன்னையை நினைக்கலாம்.பதிவுகள் இருக்கவே இருக்கு,.
நன்றி மா.

மாதேவி said...

அடுத்து காத்திருக்கிறோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
இனிய விஜய தசமி நன்னாள் வாழ்த்துகள்.
நவராத்திரி பரபரப்பு முடிகிறது இன்றோடு. சனி ஞாயிறுகளில்
எழுதி முடிக்க வேண்டும் அம்மா. நன்றி.