
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
களக்காட்டம்மை
++++++++++++++++++++
நாங்கள் சென்னையில் பாட்டி வீட்டுக்கு வரும்போதெல்லாம்
நான் எதிர்பார்ப்பது எதிர் வீட்டுக்கு வருகை தரும் விருந்தாளியான
களக்காட்டம்மை.
ஒரு சிரித்த முகத்தோடு,தன் கஷ்டங்கள் எத்தனையோ இருந்தாலும்
அதைப் பற்றி முகத்தில் ஒரு துளி கூடக் காண்பிக்காமல்
கதைகள் சொல்வார்.
எதிர்வீடு என்பது பெரிய குடும்பத்தைக் கொண்டது. அப்பா
ஒரு ஹோட்டல் வைத்து நடத்திக் கொண்டிருந்தார்.
மனைவி சிறிது நோயாளி.
வரிசையாகக் குழந்தைகள் பெற்றதால் வந்த களைப்பு அது.
இந்தச் சிரமமான நேரங்களில் களக்காட்டம்மை வந்து உதவி செய்வார்.
பெரிய பையன் கல்லூரியிலும் ,கடைசிப் பையன் ஒன்றாம் வகுப்பிலும்
இருந்ததாக நினைப்பு. நடுவில் மூன்று பெண்கள்.. பாப்பா,தைலா,லக்ஷ்மி. கையில் இரண்டு புடவைகள். தலை தோட்ட துண்டு என்று சிறிய பையில் வைத்து கூடவே குழந்தைகளுக்கான முறுக்கு, தட்டை என்று ஏதாவது. சூளையிலிருந்து வருவதால் சூளையம்மை என்றும் கூப்பிடுவார்கள். அவரிடம் மிகப் பிடித்த விஷயம் அவர் இந்த மடி, ஆசாரம் எல்லாம் பார்க்க மாட்டார். எப்பொழுது வேணுமானாலும் அருகில் போகலாம் . கதை கேட்கலாம். அவருடைய ஊரில் நடந்த திருமணம், மறைந்த தன் கணவர், ஊரின் செழிப்பு என்று ஏகப்பட்ட கதைகள் அவரிடம் கேட்கலாம். எந்த வீட்டில் அப்பளம் ,வடாம் இடுவதாக இருந்தாலும் முதல் அழைப்பு அம்மைக்கு தான். அங்கே நாங்களும் போய் விடுவோம். எண்ணி வைக்கப் பட்ட அப்பள உருண்டைகள எங்கள எல்லோருக்கும் அளவோடு கிடைக்கும். மொட்டை மாடியில் அப்பளம் உலர்த்த, அதைத் திருப்பிப் போட, காகம் கொத்தாமல் குடை பிடித்துக் காவல் இருக்க இந்த வேலைகளை செய்ய எங்கள் பட்டாளத்தின் உதவி அவர்களுக்கு வேண்டி இருந்தது.
வேலை முடியும் நேரம் அம்மையும் மற்றவர்களும் வந்து விடுவார்கள். சொளகு, முறம் இவைகளில் அப்பளங்களும், வேஷ்டியில் மடித்து வடாம் வற்றல் களும் கீழே இறங்க,
நாங்களும் களக்காட்டம்மையோடு வீட்டுக்கு வந்துவிடுவோம். ஒருவரும் அவரவர் வீட்டுக்குப் போகமாட்டோம்.
அம்மை கையால் வேகவைத்த நேந்திரம் பழம், புட்டு எல்லாம் கிடைக்கும். குறைந்த வெளிச்சமே இருக்கும் சமையல் அறையில் கிட்டத்தட்ட 10 குழந்தைகளுக்கு பசி தணித்துவிடுவார்.
அந்த வெள்ளைச் சுருட்டமுடியும் ,கழுத்தின் அடியில் பம்மென்று முடியப்பட்ட கூ ந்தலும் வெகு அழகாக இருக்கும்.
நிதானமாகக் குளித்து குருவாயூரப்பன் படைத்து முன் விளக்கேற்றி. வணங்கும் பொது நாங்கள் வெளியே விளையாடப் போவோம்.
இரவு இந்தப் பாட்டி வீட்டு முற்றத்தில் அனைவருக்கும்
பெரிய கற்சட்டியில் பிசையப் பட்ட குழம்பு சாதமும் சுட்ட அப்பளமும் உண்டு.
அது மாயமான வுடன் கெட்டி மோர் விட்டுப் பிசைந்த சாதம்
மாவடு, சாறு என்று தனித்தனியாக வாழைப்பூ இதழில்
பாட்டி கொடுப்பார். அமிர்தமான கோடை நாட்கள்.
ஒருநாள் மதியம் அனைவருக்கும் உணவு கொடுத்துவிட்டு
தலைக் கோசரக் கட்டையில் ஈரத்தலையை உலர்த்தியபடி இருந்த அம்மைக்கு, நெஞ்சுக்குத்தும் வழியும். முதல் நாள் அப்பள மாவு இடிக்கும் போதே நிறைய வியர்த்துக் கொட்டியதாம் .
உடனே ஆச்சார்யா டாக்டர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று ஜிஹெச்சிலும் சேர்த்தாச்சு.
எங்களுக்கெல்லாம் ஒரே பயமாக இருந்தது.
யாருக்கும் ஒன்றும் செய்யத் தோன்றவில்லை.
ஆனால் நல்ல வேலையாக அம்மைக்கு ஒன்றும் ஆகவில்லை. 20 நாட்கள் கழித்து வீட்டுக்கு ஆம்புலன்சில் வந்துவிட்டார்.
பழைய குண்டுக்கு காட்டுது தேகம் மெலிந்து
களைப்புடன் வந்தவர் முகத்தில் சிரிப்பு மட்டும் மாறவில்லை.
நாங்களும் அவரோட அதிகமாகப் பேச முடியவில்லை.
தான் சூளைக்குத் திரும்புவதாகவும்,களக்காட்டுக்கே
ரயிலில் சென்று விடுவதாகவும் பாட்டியிடம் சொன்னாராம்.
அதற்குள் எங்கள் விடுமுறை நாட்களும் முடிந்ததால்.
நாங்களும் கிளம்பினோம்.
களக்காட்டம்மையைப் பிறகு பார்க்கவில்லை.
நான்கைந்து ஆண்டுகளில் என் திருமணம் நிச்சயிக்கப்பட்டபோது அவருக்கும் கடிதம் எழுதி போட்டேன்.
ஆசைகளுடன் 25 ரூபாய்ப் பணமும் மணி ஆர்டரில் வந்தது.