வல்லிசிம்ஹன் Norton Bikeசிங்கத்தின் உபயோகத்தில் கொஞ்ச நாட்கள் இருந்தது.
(●'◡'●)👩
வாழ்க்கையில்....... நம் கால்களுக்கு நடை வந்த
பிறகு ஒரே ஓட்டம் தான். பள்ளிக்குச் சென்றது முதல் எல்லா இடங்களுக்கும் நடைதான் .
நாங்கள் இருந்த இடங்கள் அது மாதிரி.
டவுன் பஸ்கள் வராத காலம்.
நடைக்கு அஞ்ச மாட்டோம்.
மதுரையிலிருந்து சித்தப்பா வரும் நாட்கள் அவரது அலுவலக
ஜீப்பில் வந்துவிடுவார். எங்களுக்கெல்லாம்
திருமங்கலம் டவுனை விட்டு வெளியே சென்று சுற்றிக் காட்டுவார்.
ஆனந்த நாட்கள் அவை.
தாத்தா,பாட்டி, சித்தப்பா குடும்பம்,எங்கள் குடும்பம்
மொத்தம் 10 நபர்கள் பயணம் செய்த நாட்கள் மதுரை யிலிருந்து கிளம்பி
திருநெல்வேலி,திருக்குறுங்குடி,ஸ்ரீவைகுண்டம்,
நாங்குநேரி,திருச்செந்தூர்,கன்யாகுமரி, குருவாயூர்
என்று சுற்றுலா செல்ல மிக சுகமாக அமைந்த ஒரு வாகனம்.
பாட்டி எங்களுடன் தங்கிய வருடங்களில்
அவரை மதுரை அழைத்துச் செல்ல,
மீண்டும் கொண்டுவந்து விட
எங்கள் சொர்க்க உலகமாக இருந்தது.
திருமணம் முடிந்த பிறகு, இரண்டு சக்கர வாகனங்கள்
யோகம் ஆரம்பம்.முதல் படத்தில் இருக்கும் ''நார்ட்டன்''பைக்
ஒரு நண்பருடையது. அவர் மேல் படிப்புக்காக
வெளி நாடு செல்ல, எங்கள் வீட்டில் இதை ஒப்படைக்க
புதுக்கோட்டை சாலைகள் எங்களுக்கு சொந்தமானது.
சேலம் சென்றதும் தட தட புல்லட் வண்டி
சொந்தமானது. முதலில் இருவர், பிறகு மூவர்,
அதற்கப்புறம் நால்வர் என்று பயணித்தோம்.
நாங்கள் அங்கு இல்லாத சமயம்
இந்த புல்லட் சத்தம் மதுரை, காரைக்குடி என்று
பயணம் வந்தது.
கோவை வந்த பிறகு ஐந்து பேரும் சென்றோம்.
கோவை தடாகம் ரோடில் இந்த புல்லட்டின் சத்தம் எங்கோ ஒலிக்கும் போதே பெரியவன் கண்டுபிடித்துவிடுவான்.
ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து கைகளை நீட்டுவான்.
அந்த இருட்டு வேளையில் எப்படித்தான் அறிவானோ.
வண்டி வந்து போர்ட்டிகோவில் நின்றதும்,
''அப்பா...நான் கை காட்டினேனே நீ பாத்தியா?''
என்றதும், ''அதனால் தான் நான் பத்திரமா வந்தேன்''
என்று சிங்கம் சொல்வதும்
வழக்கமான டயலாக்.!!
திருச்சிக்கு மாற்றலானதும் வாங்கிய வண்டி ஃபியட் 1100.
எங்கள் செல்ல வண்டியாக சென்னை, மதுரை, சமயபுரம், ஸ்ரீரங்கம் என்று வலம் வந்தது.
மீண்டும் பார்க்கலாம்......




