Showing posts with label நினைவுகள். Show all posts
Showing posts with label நினைவுகள். Show all posts

Thursday, August 21, 2014

இன்னுமொரு கொசு வர்த்தி



நாம் எதிர்பார்க்காத போது பொக்கிஷங்கள் நம் கையில் அகப் படும்.
எப்போதும் எதையாவது தேடாவிட்டால் எனக்கு அன்றையப் பொழுது சரியாகப் போகவில்லை என்று அர்த்தம்:)

எதையோ தேடப் போவேன் எதுவோ அகப்படும்,.
அதுவும் போன மாதம் தேடின பொருளாக இருக்கும். அப்படி ஒரு அவஸ்தைப் பட்டோமே இங்க இருக்கே என்னும் முணுமுணுப்போடு அதை மீண்டும் பத்திரமான(மறுபடியும் தேடும் விதமாக) இடத்தில் வைத்துவிடுவேன்:)

போன வாரத்தில் தேடிய விஷயம் என் மருத்துவர் எழுதிக் கொடுத்த என்னைப் பற்றியும் என் உடல் நலம் பற்றியுமான
குறிப்புகள் கொண்ட புத்தகம்.

அதை நான்கு நாட்கள் தேடிக் கொண்டிருந்தேன். இணையம் வர நேரமில்லை, தொலைபேசியில் யார் பேசினாலும் அவர்களிடம் புலம்பல்கள்,
இரண்டு நாட்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தொலைபேசியில் கூப்பிடுவதையே நிறுத்திவிட்டார்கள்.:))
கோவில் பைகள், துணிக்கடைப் பைகள், அங்காடிப் பைகள் ....எல்லாம் வித விதமான பொருட்களை உள்ளடக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
அப்படி ஒரு பையில் வைத்ததுதான் பழைய கடிதங்கள்.

ஒரே ஒரு வருடக் கல்லூரி வாழ்க்கையில் கிடைத்த தோழிகளின் கடிதங்கள் வர்ணம் மாறி, எண்ணம் மாறாமல் 17 வயதுப் பெண்கள் அப்போது கடந்து கொண்டிருந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பு
கிடைத்தது.

ஏதோ ஒன்றைத் தொலைத்துவிட்டு, ஏதோ ஒன்றைப் பிடித்துக் கொண்டோம் என்பதை உணர்த்திய கடிதம் ஒன்றை வாசித்தேன்.
இதோ அந்த 1965 அக்டோபர் மாதம் எழுதப் பட்ட கடிதம்.
நாற்பத்து நாலு வருடங்களுக்குப் பிறகு கூட என்னை வசீகரித்த வரிகள்.
எழுதியவர் மல்லிகா என்கிற மாலு,.
*******************************************************************************

அன்பு ரேவா,
எனக்குத்தான் இத்தனை நாட்களாகக் கடிதம் எழுத நேரம் இல்லை. உனக்குமா.

இல்லையாகில் நான் , கடிதம் எழுதினால் ,பதில் கடிதம் போட்டால் போதும் என்கிற எண்ணமா.அவ்வளவுதான் நம் நட்பா.
கடந்த ஒரு மாதத்தில் கடந்த ஒரு வருடத்தை எப்படி உன்னால் மறக்க முடிந்தது?
(just for reply sake if you want to write to me ., pl give up that idea.)
பொழுது போவதற்காகக் கடிதம் எழுதுபவள் நானில்லை.
எனக்கென்று ஏற்பட்ட வாழ்க்கையில் உண்டான கஷ்ட நஷ்டங்களை அறிவாய்.
உன் கடிதம் வந்து பத்து நாட்கள் ஆகின்றன. நீ பசுமலைக்குப் போய்விட்டாய் என்று தெரிந்தது. அதற்கப்புறம் எவ்வளவு விஷயங்கள் நடந்தது உனக்குத் தெரியுமா.
தம்பி கண்ணனுக்கு பொன்னுக்கு வீங்கி,
தங்கை ஜானி(ஜானகி)க்கு ஹார்ட் வீக்காம். தினம் என்ஜெக்ஷன் (ஊசி) போட்டுக் கொள்கிறாள் .
என் தலையோ வலிப்பதற்காகவே பிறவி எடுத்தது போலிருக்கிறது.
இத்தனைக்கும் நடுவில் நன் படிப்பேனா, ஆஸ்பத்திரிக்குப் போவேனா
,சமைப்பேனா நீயே சொல். உனக்குக் கடிதம் எழுத எனக்கு ஏது நேரம்!!
இதற்கிடையில் எனக்கொரு மகன் பிறந்தான்.
முழிக்காதே.
என் அக்காவிற்குப் பிறந்தால் என் மகன் தானே!!
பட்டுவிற்குப் பிறந்த மகன் அழகுச் செல்வம். அவனையும் அவன் அம்மாவையும் அவள் புக்ககத்தில் விட்டு வந்தோம்.

நீ கல்லூரியில் இல்லாதது எனக்குத் தான் நஷ்டம். நம் குரூப் சிதறிவிட்டது. ராஜேஸ்வரி ஒரு பக்கம் ,நான் வேறு கிளையில் படிக்கிறேன். கிரிஜா இன்னோரு கிளை.

ஒரே கல்லூரியில் இருந்தும் , நாங்கள் எப்பவாவது பார்த்துக் கொள்வது ஆர்ட்ஸ் காலேஜ் பஸ் நிறுத்தத்தில்தான்.
ஹை!! பை!! சீ யூ என்று போய்விடுகிறது.

எது நம் நட்பைப் பிரித்தது என்று கூடத் தெரியவில்லை.
போகட்டும் நீ மேற்கொண்டு என்ன செய்வதாக இருக்கிறாய்.

நிறையப் படி. கல்லூரிக்குப் போகவில்லையே என்று வருத்தப் படாதே.

இப்போது பி.யூ.சி யில் சேர்ந்திருக்கும் பெண்கள் நம்மைப் போல இல்லை.
ஒரே வண்ணமய நாகரீகப் பட்டாம்பூச்சிகள் போல இருக்கிறார்கள்.
எனக்கு வயதாகி விட்டதோ:))

உன் விவரங்களை எழுது. அம்மா அப்பாவுக்கு நமஸ்காரங்கள்.
தம்பி மதுரையில் பி.யு.சி சேர்ந்துவிட்டானா.
சின்னத்தம்பி என்ன படிக்கிறான்.

எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.
இப்படிக்கு,
உன் அன்புத்தோழி, மாலு.
11/10/65
சென்னை.
பி.கு.
எப்படி என் தமிழ்க் கடிதம். அசத்திவிட்டேனா????
உனக்காகத் தமிழில் எழுதினேன்.(இங்கே கொஞ்சம் சிரித்துக் கொள்) .
*****************************************************************************
என் குறிப்பு.
இவள் கடிதம் எழுதி இருபது நாட்களில் என் வாழ்க்கை திசை திரும்பியதும் கதை.:) அதுவும் ஒரு கடிதம் வழியாகத்தான்.!!!


எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Sunday, April 28, 2013

2009 இல் இட்ட பதிவு.இப்பவும் இதே.




































































எதற்கு இவ்வளவு குழப்பம்??

எல்லாம் ஒரு பெயரால் வந்ததுதான்.


சிறு வயதிலிருந்து முகங்களை நான் மறப்பதில்லை. ஆனால் பெயர்கள்??
அது பெரிய விஷயம்.:)

சரி, பத்து வயதில் நாலைந்து தோழிகள். நினைவில் நிற்கும் நபர்கள். பேய்க்கதைகளிலிருந்து, கல்லா மண்ணாக் காலங்கள் வரை
ஒன்றாகக் கழிந்த காலங்கள். யாரையும் மறக்கவில்லை.
அதற்கப்புறம் 18 வயது சினெகிதிகளையும் மறக்கவில்லை. இன்னும் சில நண்பிகளோடு கடித அளவிலாவது நட்பு தொடர்கிறது.

மறதி, ஒருத்தருக்குப் பதிலாக இன்னொருத்தரைச் சொல்வது ,
எங்கள் குழந்தைகள் வளர்ந்து அவர்களுடைய தோழர்கள், தோழிகள்
வர ஆரம்பித்ததும்தான் குழப்பம் ஆரம்பித்தது.

அது என்னவோ சொல்லி வைத்த மாதிரி 'சாந்தி'ல மூணு, 'சரவணன்'ல ரெண்டு, செந்தில் நாலு, கார்த்திக் ரெண்டு ,சம்பத் ரெண்டு என்று
போய்க் கொண்டிருந்தது.

பெண்ணின் தோழிகள் பற்றிக் கூட கவலை இல்லை. கூட்டமா வரும் ஒருத்தருக்கொருத்தர் அழைத்துப் பேசிக் கொள்வதிலிருந்தும் கேட்டுச் சமாளித்து விடுவேன்.

பத்துவருடங்கள் கழிந்து மயிலை மாட வீதிகளில் ஹலோ அம்மா எப்படி இருக்கிறீர்கள் என்னும் போது இது முத்து லட்சுமியா, பாமதியா,சௌம்யாவா என்று திணறிவிடுவேன்.

நல்ல வேளையாகக் கைகளில் குழந்தைகள் வைத்திருப்பார்கள்.
'அடச் செல்லமே எத்தனை வயசாகிறது. எல்லோரும் சுகமா'' என்று விசாரித்து விட்டு,பெண்ணின் குடும்ப விஷயங்களை நலங்களைச் சொல்லிவிட்டு 'வரேண்டா' அப்புறம் பார்க்கலாம்.'' என்று
சந்தோஷமாக நகர்ந்து விடுவேன்.

மாட்டிக் கொள்வது பெண் இந்தச் சந்திப்பை இமெயிலில் அந்தப் பெண்ணுடன் சம்பாஷித்த பிறகு,
''ஏம்மா வசுமதியைப் பார்த்தியாமே, என்னிடம் சொல்லவே இல்லையே''
என்பாள்.
ஓ, அது வசுமதியா. மறந்துவிட்டது, அவளுக்குத் தானே அக்கா கல்யாணத்தின் போது சூறைக்காற்று அடித்து இலையெல்லாம் பறந்ததே''
என்று சொன்னால் பெண் தலையில் கைவைத்துக்கொள்ளுவாள்.

''கடவுளே!! அவளிடம் அதைக் கேட்டியா. அது ஸ்ரீவித்யா மா''
என்பாள்.
என்னை அவ்வளவு இங்கிதம் தெரியாதவளா இந்தப் பொண்ணு சொல்கிறதே என்று யோசித்துவிட்டு, ''இல்லையம்மா , அவ அம்மா நியுசிலாந்திலிருந்து வந்து விட்டாளான்னு கேட்டேன்.'' என்பேன்.

அது வெறும் வித்யா. ..'ஒண்ணு பண்ணும்மா.நீ குடும்பமெல்லாம் விசாரிக்காதே. என் விஷயம் பற்றிக் கேட்டாச் சொல்லிவிட்டு ஃப்ரியா விடும்மா'' என்பாள்:)))

பெண் விஷயம் எப்படியாவது சமளித்து விடுவேன்.
இந்தப் பசங்க விஷயம் தான் என்னைப் பல இடர்களில் மாட்டி விட்டிருக்கிறது.

இரண்டு பேருக்கும் முருகனுடைய எல்லா நாமங்களிலும் தோழர்கள் உண்டு. இவனுக்கு ஒரு செந்தில் விஸ்காம் படித்தவன்.
அவனுக்கு ஒரு செந்தில் விவேகா தோழன்., இன்னோருத்தர் பாரதிதாசனில் எம் பிஏ சிநேகிதன்..அதைத்தவிர ஆத்மார்த்தமா வசந்தராஜ்னு ஒரு தோழன் .அவனும் விஸ்காம் லயோலாவில் படித்துவிட்டு மும்பைக்குப் போனவன். கார்த்திக்,சரவணன்,ஷண்முகசுந்தரம்,சிங்காரவேலன்.......
சாமி.. கடவுளே..

இந்தப் பிள்ளைகள் கல்லூரியில் படிக்கும் காலங்களிலும்,அதற்குப் பிறகு சென்னையில் வேலைக்குப் போகும்போதும்,
தொலைபேசியில் அழைப்பு வரும்போது தவித்துப் போய் விடுவேன்.
''அம்மா நான் செந்தில்மா. தலைவர்.........இருக்காரா..... மா''
இப்படிப் பொத்தாம்பொதுவாகக் கேட்டால் என்ன சொல்வது:)
''
விருதுநகர்ல இருந்து எப்ப வந்தப்பா. அம்மா அப்பா சௌக்கியமா''ன்னு கேட்பேன்.
அவன் நல்ல பிள்ளை. நீங்க சொல்றது செந்தில் குமார்மா. நான் சென்னைதான் .என்பான்.
அப்போ நீ பெரியவனைக் கேக்கறியான்னு துப்பறிவேன்..
ஆமாம்மா, கூப்பிடுங்க என்று சிரிக்கும் அந்தப் பையன்.

இதெல்லாம் பெரிய விஷயமில்லை. கல்யாணம் ஆனவர்கள், ஆகாதவர்கள், பெண் பெற்றவர்கள், ஆண் குழந்தை பெற்றவர்கள் என்று இரண்டு வருடங்கள் தள்ளி வந்த பிரச்சினைகள் என்னைப் பயங்கரக் குழப்பத்தில் தள்ளிவிட்டன. அந்தக் கதை அப்புறம்:)



இதைத்தவிர ........
**************************8

இதன் தொடர்ச்சி இந்தப் பதிவு....
***********************************88


சரி ஒரு வழியாப் பசங்களுக்கும் பெண்ணுக்கும் திருமணங்கள் நடந்து முடிந்ததும் ,நமக்கு'' நீ யாரு...''.கேள்வி அவ்வளவாக எழாது என்று நினைத்தேன்.

அப்படியெல்லாம் நிற்குமா.
நாங்களும் பசங்க இருக்கிற ஊருக்குப் போக ஆரம்பித்தோம்.
அங்கே ஏற்கனவே இந்தச் சிநேகிதப் பசங்க போய் செட்டிலாயிருக்காங்க.
முதல் குழப்பம் பார்க்கலாமா.!
மும்பையில் போய் இறங்கியதும், வீட்டில் எல்லாம் சரியாக இருக்கிறதா, வேறு ஏதாவது வாங்கி வரணுமா என்று கேட்டபடி வந்த மனிதரைப்
பார்த்தால், ஏதோ தெரிந்த மாதிரி இருக்கிறதேஎன்று நினைத்தபடி,
அவரை வரவேற்று,'' வசந்தன் தானே நீ''
விவேகாவில ரேஸ் எல்லாம் ஓடுவியே.கல்ச்சுரல்ஸ்ல மோகன் பாட்டுக்கள் எல்லாம் பாடுவியே'' என்றதும்
அவன் சிரித்துவிட்டான்...
இல்லைம்மா, நீங்க என்னைப் பார்த்ததே இல்லை. ''பார்ன் அண்ட் ப்ராட் அப்
இன் மும்பை.''
என்றது அந்தப் பையன்.
எங்க பையனோட ஃப்ரண்ட் ஒருத்தன் இங்க இருக்கான் அவந்தானோ
என்று நினைத்தேன்.''என்றேன்.
மேற்கொண்டு அவனிடம் ஒன்றும் பேசாமல் இவர் தடுத்தாட் கொண்டார்.


சாயந்திரம் பையன் வந்ததும் அப்பாவுக்கும் மகனுக்கும் சிரிக்க விஷயம் கிடைத்தது.
அதன் பிறகு நிஜ வசந்தனே வந்த போது அடையாளமே தெரியவில்லை.
1988ல் பார்த்த முகம் 96ஆம் வருடத்துக்குள் மாறிவிட்டிருந்தது.
தலையில் வழுக்கை. அவனும் முன் பின் சொல்லாமல் வந்தான்.
''
''
அம்மா அப்பா எப்படி இருக்கிறீர்கள் மும்பையில் இன்னும் எவ்வளவு நாள் இருக்கப் போகிறீர்கள். நான் பக்கத்துத் தெருவில் இருக்கிறேன்.
இன்று ரயிலில் பையனைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன்'' இன்னும் ''அதே மாதிரி டிவியை மியூட்டிலயும், ரேடியோவில பாட்டுக் கேக்கறதுமா இருக்கீங்களான்னு ''வேற சிரித்ததும், ஆஹா இவந்தான் வசந்தன் என்று புரிந்தது.

அவன் நிறைய ஏமாந்திருக்கிறான்.
ரேடியோவில் ஏதாவது பாடும். தொலைக்காட்சியில் ஏதோ படம் போய்க் கொண்டிருக்கும். '''அம்மா எப்படி இந்தப் படத்தில அந்தப் பாட்டு வருது? என்று, வெறித்தபடி இருப்பான்.
அப்புறமாகப் பக்கத்தில் பாடிக் கொண்டிருந்த கையடக்க ட்ரான்சிஸ்டரைக் காண்பித்ததும் ,
ஏமாந்து போயிட்டேனே என்பான்:))


சிலபல குளறுபடிகள் இப்ப வேண்டாம். பெரியதாக நான் செய்த கோளாறைப் பார்க்கலாம்:)
ஸ்விட்சர்லாண்டில் போய் இறங்கினோம்.
அங்கும் அவன் சிநேகிதர்கள்சிலர் ஒரு நாலைந்து பேர்,நாங்கள் சென்றுகொண்டிருந்த வண்டியில் வந்துகொண்டிருந்தார்கள்.
எனக்கு மற்றவர்களைப் பற்றி அதிகம் தெரியாது. அவர்களில் ஒருத்தருக்கு அப்பதான் மணமாகியிருந்தது. இன்னோருவருக்கு குழந்தைகள் உண்டு என்று தெரியும்.

இருவர் முகங்களும் அறிமுகமான பழகிய முகங்களாகவே இருந்தன.
மருமகள் என்னிடம் ஒருவரைக் காட்டி அவர் இவர்தாம்மா மனோஜ்கஷ்யப் என்றதும்,
நானும் அவருக்கு ஒரு ஹலோ சொல்லிவிட்டு'' ஓஹோ நீங்கள் எங்க வீட்டிற்கு வந்திருக்கிறீர்களே'
உங்க மாம்னார் , கஷாயம் ச்யவனப்ராசம் எல்லாம் கொண்டு கொடுத்ததை எடுத்துக் கொள்ள வந்தீர்கள் இல்லையா? குழந்தைகள் எப்படி இருக்கிறீர்கள் என்று (ஆங்கிலத்தில்தான்) கேட்டதும்.
அவர் முகம் சிவந்து விட்டது..

இதற்குள் எங்களுக்கு எதிர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சின்னவன் திரும்பிப் பார்க்க, சரி அம்மா பேசிட்டார் போல இருக்கு என்று பக்கத்தில் வந்தான். என்னம்மா என்ன கேட்ட அவர் முகம் இப்படி சிவந்து போச்சு, என்று கேட்க,மருமகள் விவரம் அளிக்க ,''
''சாரி மனோஜ், ஷி மஸ்ட் ஹேவ் கன்ஃபுயூஸ்ட் யூ வித் அதர் கஷ்யப்''''
என்றபடி என்னைப் பார்த்தான். என்னாச்சுடா என்றால், இப்போது அவன் முகம் சிவந்தது. சிப்பை அடக்க முடியாமல்.

ஐய்யோ அம்மா நீ பார்த்தது ,நம்ம வீட்டுக்கு வந்தது பரத்வாஜ் கஷ்யப்.
இவனுக்கு இன்னும் ஆங்கிலமே சரியா வராது. வேற ஊர்க்காரன். இவனிடம் குழந்தை பொண்டாட்டின்னு சொன்னேனா.என்ன அர்த்தம்.
அவனுக்கு இன்னும் கல்யாணமே ஆகலைம்மா'' என்றான்.

அந்தப் பையன் என்ன நினைத்ததோ அடுத்த ஸ்டாப்பில இறங்கிடுத்து.
அது அவன் இறங்க வேண்டிய இடமாக இருக்கலாம். ஆனால்
தந்தையும் தனயனுமாக என்னைப் பார்த்து'' பார் நீ பண்ண கலாட்டாவில
அவன் அம்போன்னு தெரியாத இடத்தில இறங்கிட்டான். ஏம்மா உனக்கு இந்தப் பாடு''
என்று சிரிப்பாகச் சிரிக்கிறார்கள். ''எனக்கு அவன் முகத்தைப் பார்த்ததிலிருந்து,
அதில இருந்த திகிலைப் பார்த்து விபரீதமாஏதோ செய்திருப்பேன்னு தெரியும்.''
பாவம் அவனைச் சாப்பிடக் கூப்பிடலாம்னு இருந்தேன். இப்போ கூப்பிட்டாலும் வர மாட்டான்.''
எனக்கென்னடா தெரியும் எல்லாம் மகரிஷிகள் பேரை வைத்துக் கொண்டு ஒரே
மாதிரி வேற இருக்கிறார்கள். என்றேன்.:)

என்னைப் பற்றித் தெரிந்த மற்ற சினேகிதர்கள் வீட்டுக்கு வரும்போதே 'அம்மா நாந்தான் இவன். அவனில்லை'' என்று சொல்லிக் கொண்டேதான் வருவர்கள்:)

















எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழவேண்டும்




































































































































































































































































































































எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.




























































Tuesday, March 17, 2009

அம்மாவின் கொடை.

ஒரு டயரி, ஒரு புத்தகம்,ஒரு சிவப்பு பேழை,ஒரு கையில வச்சிருக்கிற பர்ஸ்!




மகாத்மா காந்தியின் பொருட்களுக்கும் ஒரு விலை வைத்துக் கொண்டு வந்து விட்டார்கள்.
எனக்கும் கிடைத்த சில பொருட்கள் என் அன்பு அம்மாவிடமிருந்து கிடைத்தன.
அவள் இருக்கும் போது அனுபவித்த அன்பைப் போலவே இந்தப் பொருட்களும் கலப்படமில்லாத ஒரு நிறைவான மனுஷியின் உயர்ந்த நோக்குகளையே எடுத்துச் சொல்கின்றன.
அவள் தினம் சேவித்த பிரபந்தப் புத்தகம். யாரோ சொன்னார்கள் என்பதற்காக தனது உடன்பிறப்புகளுக்காகவும் எங்களுக்காகவும் அவள் சொல்லிய ஸ்லோகங்கள் அடங்கிய புத்தகம்.
உறவினர்களின் தொலைபேசி எண்களும் ,விலாசங்களும்(ஏனெனில் என்னுடைய மறதி அவளுக்குத் தெரியும்),
ஒரு காரைக்குடி பழுக்கா திருகு பொட்டி.
கடைசியாக எனக்குக் கிடைத்தது ஒரு சிறிய சிவப்புப் பெட்டி. அதைத் திறந்து பார்த்தால் இரு பவளத்தோடுகள்.
அவள் உடல் நிலை சரியில்லாமல் போன போது காதுகள் வெறிச்சோடி இருப்பதைப் பார்த்து நொந்து போய் அவளிடம் நான் கொடுத்த இரு சின்னத் தோடுகள்.
அதைத் தன் கடைசி நாளில் திருப்பிக் கொடுத்திருக்கிறாள் என் தம்பி மனைவியிடம்.
உள்ளே ஒரு சிறிய குறிப்படங்கிய தாள் ''இவை ரேவதியோடது'',.
என்று.
இத்தனை அறிவுள்ள முன்னெச்சரிக்கையான அம்மாவாக நீ இருந்ததை நான் ஏன் இவ்வளவு நாட்கள் கழித்துப் புரிந்து கொள்ளுகிறேன் அம்மா!!!

கடவுளின் மேல் அவளுக்கிருந்த அபார நம்பிக்கை.
எது வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம்.
மற்றவர்களை உடனுக்குடன் புரிந்து கொள்ளும் சூக்க்ஷமமான புத்தி,
அநுசரித்துப் போகும் தன்மை.
இதெல்லாம் எனக்கு நினைவு படுத்திய மகாத்மாவுக்கு நன்றி. எங்க அம்மா கூட மகாத்மாதான்.



Posted by Picasa

Saturday, May 24, 2008

303, நினைத்தாலே ...நடுங்கும்:)
















படங்கள் கூகிளாண்டவர் துணை.
டிஸ்கிப்பா.
துபாயில ஹெரிடேஜ் மியூசியம்னு ஒண்ணு இருக்கு.பழம் களப் பெருமைகள் அழகாக எடுத்து வைத்து விளக்கப்படும் இடம்.
இந்தப் பதிவில நான் சொல்ல வருவது அதைப் பத்தி அல்ல.
துபாய் ஹெரிடேஜ் கிராமம் ஒண்ணு எங்க வீட்டிலேருந்து கொஞ்சம் தொலவில் இருக்கு.
மம்சா பார்க்குக்கு அந்த வழியாப் போகும்போது நாந்தான் பையனிடம் இங்க ஒரு பழமையான கிராமத்தைக் கட்டி வைத்திருக்கிறார்களாமே.அதுவும் பவுர்ணமி அன்னிக்கு ரொம்ப அழகா இருக்குமே போலாமேப்பா என்றேன்.
தாய் சொல்லைத் தட்ட விரும்பாத மகனும் அப்பா மறுப்பதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் வண்டியைப் பார்க்கிங் லாட்டில் நிறுத்தினான்.
ஒரு பெரிய காம்பவுண்ட். அதற்குள் ஒட்டகங்களின் கனைப்புச் சத்தம், ஏதோ ஒரு அதீத இனிப்பு வாசனை காத்தில மிதந்து வந்தது.
ம்ம். நல்ல சாப்பாடும் இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டு ,நீளக்கால் ஜன்மங்கள்(என் புத்திரனும்,அவனைப் பெற்றவரும் தான்:)) உள்ளே சீக்கிரமாகப் போய் விட்டன.
மெதுவாக ஆடி அசைந்து கொண்டு அந்த இனிப்பு வாசனை வந்த இடத்துக்கு வந்து விட்டேன்.
பௌர்ணமினு சொன்னேன் இல்லையா. அங்கே நிஜமாகவே கிராமத்துப் பவுர்ணமி.
விளக்கே இல்லை. பெட்ரொமாக்ஸ் வெளிச்சத்தில் புஸ் புஸ் என்று மூச்சு விட்டுக் கொண்டு நாலைந்து ஒட்டகம். அதுக்குச் சற்றுத் தள்ளி அடுப்புகள். அடுப்புகள் முன்னால் கறுப்பு புர்கா தரித்த அழகுப் பெண்கள் அவர்கள் ஊர்த் தின்பண்டம் ஆட்டா மாவில் ரொட்டி மாதிரி செய்து அதை திறந்த அடுப்பில் வாட்டி எடுத்து அதன் மேல் பேரீச்சம்பழ சிரப்பை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் செய்யும் அழகைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு நிமிர்ந்தால்
அப்பனையும் பிள்ளையையும் காணொம்.
சுற்றிவர ஒட்டகமும் பாஷைதெரியாத பெண்களும் இருட்டும் தான்.
இருட்டுக்கு அப்பால் சிரிப்பும் சத்தமுமாக சில யூரோப்பியர்கள்.
அந்தப் பெண்கள் செய்யும் பலகாரத்தைச் சாப்பிட்டு ஏதோ கதை பேசிக்கொண்டிருந்தார்கள்.
(இந்த ஊரில் தனியாக ஒரு பெண் நடந்து போவது அதுவும் அந்த இருட்டில்
தப்புதான். சந்தேகத்துக்கு இடமாகிறது)
நான்கு புறமும் பார்த்தபோது இன்னோரு கட்டிடம் தெரிந்தது. மெதுவாக வெளிச்சம் தெரிந்த அந்தக் கட்டிடத்துக்குள் போனதும் ஒரு குதிரையின் ஓவியத்தின் முன்னால் இவங்க இரண்டு பேரும் அலசிக் கொண்டிருந்தார்கள். பையன் நிலைமை புரியாமல் என்னம்மா அப்படியே M&B காலத்துக்குப் போயிட்டுயா அப்படீனு கேலி செய்கிறான்.
ஆமாண்டா வெள்ளைக் குதிரையும் ஆரப் ரோபும் போட்டுக் கொண்டு யாரோ வந்த மாதிரி இருந்தது. லட்சியம் செய்யாம ,என்ன இருந்தாலும் தமிழ்ப் பொண்ணாச்சேனு இங்க வந்தேன். என்ன ஆச்சர்யம் நீங்க இங்க இருக்கீங்க!!!!!
அப்படீனு பல்லைக் கடித்தபடி சொன்னதும், பையன் ஓஹோ டேஞ்சர் சிக்னல் என்று அனுமானித்தபடி,
என் கையைப் பிடித்துக் கொண்டு இன்னோரு அறைக்கு அழைத்துப் போனான். அதில் 400 வருடங்களுக்கு முன்னால் இருந்த ராஜா ராணி படம், வெள்ளைக்காரன், நாணயங்கள் எல்லாம் வரிசையாக இருந்தது. கூடவே அந்தக் காலத்தில் பயன் படுத்திய வாட்கள் எல்லாம்(படு கோரம்)
இருக்கவே இருவரும் மீண்டும் அங்கேயே மூழ்கி விட்டார்கள்.
சரி நாம் அடுத்த அறைக்குப் போகலாம் ,அவங்க வெளில வரும்போது சட்டுனு வெளில வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று நல்ல வெளிச்சமாக இருந்த அறைக்குள் போனேன்.
அங்கே ஏற்கனவே ஒரு அராபியக் குடும்ப வாசனைத் திரவியத்தில் குளித்து குஞ்சு குளுவான்களோடு குடும்பமாக பேசிக் கொண்டிருந்ததும்
நான் மறுபடி வெளியே வந்துவிட்டேன்.
இங்கதான்பா தப்பாப் போச்சு.
நான் வெளீயே வந்த அறைக்கும் உள்ளே வந்த அறைக்கும் சம்பந்தமே இல்லை. இந்த அறையிலிருந்து இன்னோரு வாசல்... அது வழியாப் போனா இன்னோரு குட்டி அறை. அதுக்கு வாசலே இல்லை.
அது பிரேயர் செய்யற இடம் போலிருந்தது.
ஆத்தாடீனு பைத்தியம் பிடிச்ச மாதிரி ஒரு ஒரு அறையாப் போக ஆரம்பித்தேன். முதல் ரூமைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை.
அந்தப் பத்து நிமிஷத்தில் எனக்கு மூச்சு நிற்கும் அளவிற்குப் பயம் தொற்றிக்கொண்டது.
மெல்ல ''பாபு'' என்று கூப்பிட்டால் ஒரு குட்டிக் குழந்தை எட்டிப் பார்த்தது. அது எப்படியும் பெற்றோரோடுதானே இருக்கும்னு அது பின்னால் போனால் அந்தப் பழைய ஒட்டக,பலகாரம் செய்கிற இடம் வந்தது.
அங்க இருக்கிற பெண்ணிடம் '' ஹமாரா பதி தேகா??'' என்று கேட்டேன். அவள் சிரித்தாள். இங்க்லீஷ் நோ நோ. '' அடப்பாவி. நீ உருது பேசுவாய், உனக்கு இந்தி தெரியும்னுதானே கேட்டேன்.
என்று நொந்தபடி லம்பா டால் பாபா,சோடா புத்தர் என்றேல்லாம் சொல்லிப் பார்த்தேன்.
தூகான் கயா?? என்றாள். ஆஹா, என்று கொஞ்ச தூரத்தில் பார்த்தால் வாட்கள், ஓவியங்கள் என்று விற்கும் கடைகள் வரிசையாக இருந்தன.
அதில் சிங்கத்தோட குரல் சத்தமாகக் கேட்டதும், கோபம் பாதி,அழுகை பாதி என்று விரைந்து அங்கே போய் நின்றேன்.
இருவரும் என்னைப் பார்த்து ஏம்மா திருப்பித் தொலஞ்சு போயிட்டியே.
அந்தக் கட்டிடமெல்லாம் பூட்டறதுக்கு முன்னாடி வந்தியே என்றனர்.
''இல்லடா அம்மா இஸ் கோயிங் த்ரூ அ டஃப் பீரியட். மறந்து போயிடறது பாவம் ''
என்று கேலி செய்கிறார் இவர்.
காருக்குப் போகும் வரை ஒன்றும் பேசவில்லை நான்.
காருக்குள் வந்து கதவைச் சாத்தியதும் இருவரையும் நான் போட்ட போடில் பையன் வாயே திறக்காமல் வண்டியை எடுத்து ஒரு நல்ல பானிப்பூரி கடை முன்னால் நிறுத்தினான்.
பசியினால் அம்மாவுக்குக் கோபம்னு நினைக்கும் மகனை என்ன செய்ய!!!.
கடவுளே காப்பாத்து என்று நெற்றியில் தட்டிக் கொண்டு
கீழே இறங்கினேன்.:)





அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...