Blog Archive

Wednesday, November 21, 2007

அம்மா,குழந்தை+அன்பு


அன்பு எத்தன அழகு மிக்கது எனறு அறிய அருமையான
அனுபவம் ஒன்று கிடைத்தது.
என்
சில காலைகள் தவிர அநேகமாக எல்லாக் காலைகளுமே சன்ஸ்கார்
தொலைக் காட்சியின் சஹஸ்ரநாம துதியுடன் ஆரம்பிக்கும்.
அத்துடன் த்யானம், உடல் பயிற்சி
என்று தொடரும்
இன்றும் நேற்றும் அந்த பயிற்சி முகாமில் ஒரு அன்னையும் அவரது மூன்று வயது மகனும்
பங்கு கொண்டார்கள்.
அந்த மகனையும் கையில் வைத்துக் கொண்டு வெகு தீவிரமாக சின்சியராக
அவங்க செய்ததும்,
செய்ய முடியாத பகுதிகளில் மகனுக்குப் பயிற்சி கொடுத்ததும்,
அந்தக் குட்டியும் ஜிவ் ஜிவ் என்று குதித்துவிட்டு அம்மா முகத்தை''சரியா அம்மா என்று ஆமோதிப்பை எதிர்பார்க்கும் அழகும்,
அவள் அதை வாரி அணைத்துக் கொண்டுமீண்டும் பயிற்சிகளைத் தொடருவதும்
வெகு அழகாக இருந்தது.
தேகப் பயிற்சிக்கு நடுவே ஓய்வு எடுக்கும் நேரங்களில் அவன் அம்மாவை அணைத்தபடி கண்களை மூடிக் கொள்ளுவதும்(ச்சும்மா):))
அதி அற்புதமாக இருந்தது.


அந்த அம்மா,குழந்தையை வீட்டில் விட்டு வந்து இருக்கலாம்.
ஒருவேளை அவனைக் கவனிக்கச்  சரியான ஆள் இல்லையோ.
வேலைக்குப் போகும் அம்மாவோ
அதனால் கிடைக்கும் நேரத்தைக் குழந்தையுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினாளோ...
ஒன்றும் தெரியாது.
நாளைக்கும் அவர்கள் வந்தால் பார்க்கக் காத்துக் கொண்டிருப்பேன்.:)))
இதில் லாஃபிங் தெரபியும் இருந்தது.
காமிரா வைத்திருப்பவர் அந்தக் குழந்தையைத் தேடிக்
கண்டுபிடித்து அவனோடேயே லயித்த அழகையும் சொல்ல வேண்டும்.

Monday, November 19, 2007

251, வீட்டில விருந்தாளிங்க:))




தமிழில் எழுத ஆரம்பித்துத் தமிழ்மணத்திற்கு வந்து, புது உலகைக் கண்டுபிடித்தோம் என்று மகிழ்ச்சி. புதிததகத் தமிழ்வலைப் பூ ஆரம்பிக்கலாமே என்று சொன்னது நம்ம டீசசரம்மா.(வேற யாரு ஸ்ரீமதி துளசிகோபால்ங்க)
பின்னூட்டம் போட்டு வளப்படுத்தியது அவங்களும்,கீதா சாம்பசிவமும், அம்பியும் தான்.

அப்புறமா வந்தது வடுவூர் குமார்.:))இ.கொ இப்படி வரிசையா நம்ம வலை உறவுகள் கூடிக்கொண்டே போச்சு.அப்ப,
நாச்சியார் ஆரம்ப வரிகளாக '' வந்தவர்களுக்கும் வருபவர்களுக்கும்'' என்ற வார்த்தைகளை உபயோகித்தது
நினைவு வருகிறது.
அப்படி ஒரு நினைவு ஏன் வந்தது இப்போது ஆராய்ச்சி செய்யவில்லை:))
இந்த நாள் வீட்டுக்கு வந்திருக்கின்ற விருந்தாளிகள் மிகவும் இளையவர்கள்.
நமது கவனம் அவர்கள் பக்கம் இருந்தே ஆக வேண்டும்.
அபூர்வமாகத்தானே வருகிறார்கள்.
இதைத்தவிர வேறு சில குட்டிஸும் வரப்போவதாகக் கேள்விப்படுகிறோம்.
அதனால் வலைப்பூ ஆரம்பித்த நல்வேளை
வந்தவர்கள் வருபவர்கள் எல்லாம்
நலமோடு வாழ நம் பிரார்த்தனைகள்.
உறவுகள் நலம் பார்க்கவேண்டுமானால் கொஞ்சம் கணினி அருகில் வராமல் இருக்கவேண்டும்.
நமக்கே தெரியும் அதென்னவோ ஆணி களையறதுனு சொல்றாங்களே.
நமக்கும் இப்ப இந்தச் சுகமான வேலைகள்(ஆணினு சொல்லக் கஷ்டமாக இருக்கிறது) வருவதால்
சிறிய இடைவெளி விட வேண்டியதுதான்.:))
ஏனென்றால் ஒரு நிமிடம் இணையத்துக்கு வந்தால்
அது பலமணிநேரமாக நீள்வது தெரிந்த விஷயம்தானே!!!!!
மீண்டும் சந்திக்கும் வரை.......
கவலையற்று ஆரோக்கியமாக வாழ
வாழ்த்துக்களுடன்.


Thursday, November 15, 2007

250,சின்னக் குழந்தை சேவடி போற்றி..


பாடல்:
சொல்லாத நாளில்லை
குரல்:
டி எம் சௌந்தரராஜன்
வரிகள்:
ராகம்:
தாளம்:
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே உன்னைச்(சொல்லாத)

கல்லாத எளியோரின் உள்ளமுன் ஆலயமோ

கழல் ஆறு படைவீடும் நிலையான ஜோதியுன்னைச்(சொல்லாத)

இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்இணையில்லா நின் திருப்புகழினை நான் பாட

அன்பும் அறனெறியும் அகமும் புறமும் நாட

அரஹரசிவ குக மால் மருகா எனஅனுதினம் ஒருதரமாகினும் உன்னைச்(சொல்லாத)




நேற்று டி டி பொதிகையில் சூரசம்ஹாரக் காட்சியை மாலை வேளைச் சூரியனும் கடலும் மஞ்சளும் நீலமுமாக மினுமினுக்க,

முருகன் ,கந்தன்,குமரன்,வேலன்,தண்டாயுதபாணி,அழகன்,
அகங்காரம்,ஆணவம் உருக்கொண்ட
சூரபதுமனை சம்ஹாரம் செய்த காட்சி!!!
கடல் ஆரவாரம்,
அடியார்களின் வெற்றிவேல் கோஷம்,
உண்மையாகவேத் திருச்செந்தூர்க் கடலோரம்
செந்தில்நாதன் அரசாங்கம் ஆகக் காட்சி கொடுத்தது.
இந்த அழகை வர்ணிக்க என் வார்த்தைகள் போதாது.
நன்றி இந்த நேர் ஒளிபரப்புக்கு.
நேரில் போய்ப் பார்க்கமுடியாதவர்களுக்கு
தூர்தர்ஷன் செய்த உபகாரம் மறக்க முடியாது.















Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Saturday, November 10, 2007

கிருஷ்ணை என்னும் த்ரௌபதி


அழைத்தாலே வருபவனாம் கண்ணன். கூவி அழைத்தால் கட்டாயம் வருவான்.
கதறியே அழைத்தாலும் வராத கண்ணன் தெரியுமா உங்களுக்கு.

ஒரு கஜேந்திரனுக்கு உயிர் பிழைக்கக் கருடன் மேலேறி
பறந்து வரும்போது
கருடனின் வேகமும் அவருக்குப் போதவில்லையாம்.
பக்தனின் வேதனை போக்க,
பறந்து கொண்டிருந்த கருடனின் மேலேயிருந்து குதித்து வந்து கஜேந்திரனைக் காப்பாற்றினான் அந்த ஆதி மூலம்..
ஒரு பீஷ்மரின் சபதத்தை நிறைவேற்ற தேர்ச்சக்கரத்தையே சுழற்றிக் கொண்டு
அவரை நோக்கிப் பாய்கிறான்
பாண்டவர்களின் வனவாசத்தில் துர்வாச கோபத்திலிருந்து
அவர்களைத் தப்பிவிக்கத் தன் பசி போக்குவது போல ஒரு பருக்கை அக்ஷய பாத்திரத்தில்
இருந்து எடுத்து, உண்ண,
புயலாக வந்த முனிவர், தென்றலாக அவர்களை வாழ்த்தி செல்லுகிறார்.

இவ்வளவு காத்து இருக்கும் கண்ணன்,
த்ரௌபதி அழைக்கும் போது நேரில் வந்து அவளைக் காப்பாற்றாமல்
ஆடையை மட்டும் அனுப்பி அவள் மானம் காத்தது ஏன்
என்ற விசாரம் எழுந்ததாம் பாகவதர்களுக்குள்.

எங்கள் வீட்டிற்கு ஒரு பெரியவர் (இதுவும் இருபது வருடங்களுக்கு முன்னால் தான்)வந்து பல புராண இதிகாசக் கதைகளின் அர்த்தங்களும், அந்த செய்திகளுக்குப் பின்னால் இருக்கும் தாத்பர்யங்களையும் விளக்கி உதவுவார்.
அவர் எடுக்கப் போகும் வகுப்புகளுக்காகவே காத்து இருப்போம் நானும் எங்க கமலம்மாவும். (மாமியார்)

குழந்தைகளும். அந்த ஒரு மணி நேரம் போவதே தெரியாது.



பகவானைப் பற்றீய பல விஷயங்களில் இருந்த சந்தேகங்களை அவரிடம் கேட்டுத் தெளிந்து கொள்வோம்.

அப்போது கேட்ட கேள்விதான் '' கண்ணன் ஆடைகளை அனுப்பித் தான் வராதிருந்த'' காரணத்தைப் பற்றியது.

அதுவும் த்ரௌபதி 'கிருஷ்ணை' என்றே அழைக்கப் படுபவள், அவ்வளவு அதீதப் பாசமும் மதிப்பும் கண்ணனிடம் அவளுக்கு.

இன்னது என்று விளக்கமுடியாத பந்தம்.

அவள் அந்த பாஞ்சாலி, துரியோதனனின் சபையில்



கௌரவகுலப் பெரியோர் மத்தியில் அவள் ஆடை அபகரிக்கப் படும்போது,

அவளின் ஐந்து கணவர்களும் அவளைக் கைவிட்ட நிலையில்,

கண்ணா சரணம் என்று ஓலமிடுகிறாள்.

அதுவும் எப்படி!!ஹே கிருஷ்ணா த்வாரகா வாசி!!

நான் உன்னிடமிருந்து மிகத் தொலைவில் இருக்கிறேன்.

என்னைக் காப்பாற்று. உன்தாள் பரிபூரண சரணம்''

என்று மனம் கொதித்து அழுகிறாள்.

கண்ணனின் காதில் அபயக் குரல் விழுந்ததுமே எழுந்துவிடுகிறான் விரைந்து உதவ.

அடுத்த வார்த்தை காதில் விழுகிறது. ''நீ துவாரகையில் இருக்கிறாய். நான் உன்னிடமிருந்து வெகுதொலைவில்

இருக்கிறேன்''

இதுதான் பஞ்சாலியின் கதறல்.

இப்போது அவனுக்கு அவள் வார்த்தையை மெய்ப்பிக்க வேண்டிய அவசியம் வந்து விடுகிறது.அடியவர்களின் வாக்கு மீறாதவன் அவன் இல்லையா.

பீஷ்மர் சபதம் கண்ணனை ஆயுதம் எடுக்க வைப்பது.

பிரஹ்லாதனின் வவர்த்தை ஹரி எங்கும் உளன் என்பது.

அதுபோல இப்போது துரௌபதியின் வாக்கு. அவள் சொன்ன வார்த்தைக்குக் கட்டுப்பட்டு,கண்ணன் துவாரகையிலிருந்தே தன் கருணை பிரவாகத்தை அனுப்புகிறான்.

இன்னும் ஒரு காரணம் உண்டு. அவன் நேரில் வந்திருந்தால் பாண்டவர்கள் வதைக்கு அவனே காரணம் ஆகி இருப்பான்..

சிஷ்ட பரிபாலனம் என்றால் துஷ்ட நிக்கிரகம் அல்லவா.

த்ரௌபதியின் இந்த நிலைக்குக் காரணம் அவளைப் பாதுகாக்க வேண்டிய அவள் கணவர்களே அவளுடைய இந்தத் தீனமான கட்டத்தில் அவளை நிறுத்தி

விட்டார்கள்.இப்போது அவளைக் காக்க நேரில் வந்தால்,

கணவர்களான பாண்டவர்களையும் தண்டிக்க வேண்டிய இக்கட்டான முடிவைக் கண்ணன் எடுக்க நேரிடும்.

அந்த ஒரு காரணத்திற்காகவும் இருந்த இடத்திலிருந்த நகரவில்லை கண்ணன்.

இதெல்லாம் இப்போது எழுத,

கீழே உள்ள செய்தி காரணம்.

தினமலரில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னால் படித்தது

ஐ ஐ எம் முதலான மேலாண்மை முதுகலைப் பட்டம் அளிக்கும் கல்லூரிகளில் மஹா பாரதமும்,

இராமாயணமும் மனித வள மேம்பாட்டு வகுப்புகளில்

பயன்படுத்தப் படுகின்றன.

முக்கியமாகக் கண்ணன் முக்கிய மேனேஜ்மெண்ட் குரு,பிரதிநிதியாக எடுத்துக்காட்டுகள், உதாரணங்கள் சொல்லப் படுகின்றனவாம்.:)))























Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Tuesday, November 06, 2007

248,ஒரு தூண் பாட்டியானது

நம் எல்லோருக்கும் தீபாவளி நல்ல ஆனந்த்தத்தையும், நிம்மதி,ஆரோக்கியத்தையும் கொடுக்க இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன்.



நம்பிக்கை வைத்தால் அதுவும் சிறிதும் தளர்வில்லா நம்பிக்கை இறைவனிடம் வைத்த சிறுவன் பிரகலாதன்.,போல் வைக்கவேண்டும்.

ஞானமும் பக்தியும் ஒன்று சேர மாலிடம் சரணம் அடைந்தவன்.



எத்தனை தடவை படித்தாலும் அலுக்காத அவதார மகிமை.

ஹிரண்யன் எப்போது என்ன கேட்பன், பிரகலாதன் அவனுக்கு என்ன பதில் சொல்வான்

என்று தெரிந்து கொள்ள நம் அழகிய சிங்கப் பெருமான் அத்தனை இடத்தில் அணுக் கூட இடைவெளி இல்லாது நிறைந்து இருந்தான்.

அந்தச் சின்னக் குழந்தைக்குப் பங்கம் வராமல் எல்லா இடர்களிலிருந்தும் காப்பாற்றிய நரஹரியே !!உனக்கு வணக்கம்.



ஹிரண்யன் மகனைப் பார்த்துப் பார்த்து வெதும்புகிறான்

அசுரகுலக் கொழுந்து,

இப்படி நாரணன் நாமம் சொல்லி

தன் எண்ணப்படி உய்யாமல், வேறு வழிப்படுகிறானே என்ற வருத்தம் மேலிட, இன்னும் ஒரு முறை முயற்சிக்கிறான்.



நீ சொல்லும் ஹரி எங்கே இருக்கிறான் என்று மகனை விளிக்க,

எங்கும் உளன் என் ஹரி என்று உறுதியுடனும் திண்ணமாகப் பதிலளிக்கிறான் சிறுவன்.



வெகுண்டெழும் அகங்காரத்துடன் பக்கத்திலிருந்த ஒரு தூணை உதைக்க,

தூண் பிளந்து நரசிம்மம் வெளி வருகிறது.



அதென்ன காட்சி!!!

அந்தத் தூணும் மற்ற எல்லா ஸ்தம்பங்களும் ஹிரண்யன் பார்த்துப் பார்த்துத் திட்டமிட்டுக் கட்டியது.

அதனால் கட்டிடம் கட்டிய போதே ஹரி அங்கே ஆவிர்ப்பவித்து விட்டான் என்று சொல்ல முடியாது!!



பன்னெடுங்காலம் காத்திருந்து , தான் அழிக்கப் போகும் அரக்கன்

எங்கே தட்டினலும் வெளிவரத் தயாராக எல்லாத் தூண்களிலும் விஷ்ணு இருந்தானாம்.



உலகைப் படைத்த பிரமன், அவனைத் தன் திரு வயிற்று உந்தியில் தாங்கும் பெருமாள்,

அவனையே ஈன்று புறம் தந்ததால் அந்த தூண் பாட்டியாகி விட்டது,.

நரசிம்ஹ அவதார வைபவத்தால்.
பொன்னிற பிடரி சிலிர்த்து எழ,

செந்நிறத் தாமரைக் கண்கள் சீற்றத்துடன் ஹிரண்யனை நோக்க,
சங்கும் சக்கரமும்
மேலிரு கைகளில் இருக்க
மற்ற இருகைகளில் நகங்களால் அரக்கனை இழுத்து
வீட்டு வாயில் படியில் பகலும் இரவும் சந்திக்கும் அந்திப் பொழுதில்
அமர்கிறான் நரசிம்மன்.
சிங்கத்தின் கர்ஜனை கேட்கிறது.
அடுத்த நிமிடம் அரக்கனின் வயிறு கிழிக்கப்படுகிறது.

அவன் வயிற்றிலும் நெஞ்சிலும் ஹரி துழாவிப் பார்க்கிறானாம். ஒருவேளை நம் நினைவு இவன் இதயத்தில் இருந்தால் அவனை வாழ விடலாம் என்று.

அந்தக் கருணையும் கண்மூடி நாரண ஜபத்தில் இருக்கும் பிள்ளை பிரகலாதனுக்காக!!

ஹிரண்யன் குடலை எடுத்து மாலையாகப் போட்டுக் கொள்ளும் பெருமாள் அதே கரத்தைப் பிரகலாதன் தலையில் வைக்கிறான்.

ஒரு க்ஷணத்துக்கு முன்னால் தீ உமிழ்ந்த கண்கள்
பிரகலாதனை வாஞ்சையோடு பார்க்கின்றன.

இனி உன் சந்ததிக்கு தீங்கு செய்யேன்.
உன் வழி பிறந்த வம்சத்திற்கு என்னால்
அரக்க வதை இனி கிடையாது என்று
வரம் கொடுக்கிறான்.
அந்தப் பிரதிக்ஞையால் தான் மஹா பலிச் சக்கரவர்த்தி,
தாத்தா பிரகலாதன் செய்த புண்ணியத்தால்,
வாமன அவதாரத்தில்,
திருமால் காலடியைத் தலையில் தாங்கி, உயிர் பிழைக்கிறான்.

காருண்யா,லக்ஷ்மிந்ருசிம்ஹா
எங்கும் என்றும் சுபிக்ஷம் நிலவ நீதான் அருள வேண்டும்.

அனைத்து வலை நண்பர்களுக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.




























Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Saturday, November 03, 2007

பிரிந்தோம் சந்தித்தோம்...2

முந்தைய பதிவில் கணினி உடல் நலம் இல்லாமல் போனதை எழுதினேன்.
இவ்வளவு சங்கடப் பட வேண்டிய அவசியம் என்ன.
நிதானமாக யோசித்துச் செய்ய வேண்டிய மருத்துவத்தைச் செய்தால் போச்சு.
இத்தனை பதட்டம் இருந்தால் மூளை செயல் பாடு குறையும்னு தான் தெரியுமே.
அதான் டாக்டர் ஷ்ஆலினி தினம் சின்ன மூளை, பெரிய மூளை, எப்படி எமோஷன்ஸ் கட்டுப்படுத்தறது எல்லாம் சொல்றாங்களெ
இதைத்தவிர வேளுக்குடி திரு .கிருஷ்ணனின் பகவத் கீதா சாரம் வேற கேட்டாகிறது.
அப்போது கூட ஒரு டிடாச்மெண்ட் வரலை என்றால் வயசாகி என்ன பயன்.

த்சோ த்சொ(இந்த வார்த்தைகள் கூட மத்தவங்க எழுத்திலிருந்து எடுத்ததுதான்:))) )
என்று தலையைத் தட்டி யோசித்தேன்
இந்த உணர்ச்சி பூர்வமான பந்தம்,வருவதற்குக் காரணம் உண்டு.
''எம்ப்டி நெஸ்ட் சிண்ட்றோம்'' கேள்விப் பட்டு இருப்பிர்கள்.
அந்த மாதிரி ஒரு நாள் ,,
நம்மோடு அதுவரை இருந்த குழந்தைகள் அவரவர் பொறுப்புகளைக் கவனிக்க வேறு இடங்களுக்குச் சென்று விட்டார்கள்.
எனக்கென்று தனிப்பட்ட வேலை ஒன்றும் இல்லை. பார்த்துக் கொண்டிருந்த வேலையையும் உடல் நலம்
காரணமாக
விட்டாச்சு:))
நெக்ஸ்ட் ஸ்டெப் என்ன??
யோசிக்கையில் சின்ன மகனுக்குத் தோன்றியதுதான் இந்தக் கணினி வாங்கும் யோசனை,.
இப்போது புரிந்திருக்கும் எனக்கும் இந்த அழகான அற்புதமான கணிப்பொறிக்கும் உண்டான நட்பு.
இது எனக்கும் வெளி உலகத்துக்கும் என் உறவுகளுக்கும் பாலம் அமைத்துக் கொடுத்தது.
இதுவரை கேள்விப் பட்டிராத இடங்களுக்கு அழைத்துச் சென்றது.
கடந்த மூன்று வருடங்களாகத் தமிழையும் கொடுத்திருக்கிறது.
சொந்தக் கதை முடிந்து இப்போது வெள்ளிக்கிழமை விவகாரத்துக்கு வருவோம்.
காப்பி குடித்த கையோடு மேஜையருகில் வந்து மீண்டும் ஒரு தடவை ஆரம்பித்தேன்.
திடீரென கணினி பின்புறம் இருக்கும் ஒயர்களை ஒழுங்கு படுத்தலாமே,
ஒரு வேளை ரிப்பேர் செய்பவர் வந்தாலும் இடம் சுத்தமாக இருக்கணுமே:((
மேஜையைத் திருப்பி யுபிஎஸ் ப்ளக்கை எடுத்து விட்டு , தூசியெல்லாம் தட்டி மீண்டும் ப்ளக்கைப் பொருத்திக்
கணினி முன்புறம் வந்தால்...ஆஆஹா!!!
மானிட்டர் ஆன் ஆகிவிட்டது.
All it needed was a complete restart !
கதை முடிஞ்சுதுப்பா.
அதுக்கப்புறம் உடனே போட்டோ போட்டிக்கு அனுப்பிட்டேன் படங்களை.
கொஞ்ச நேரம் பிடித்தது.
ஆனால் மறுபடி கீபோர்ட்,நான் ,மானிட்டர்,தமிழ்.
போதும்.
செலவேதும் வைக்காமல் ஒரு குட்டிப் பிரச்சினை, பெரிதாகாமல் தீர்ந்தது.
நன்றி என் கணினிக்கு.
என் தொலை தொடர்பு சாதனம், எண்டர்டெயின்மெண்ட் செந்டர், இன்னும் எத்தனையோ.(ஆல் இன் ஆல்)
நான் விசாரப்பட்டதில் ஒன்றும் தப்பில்லை. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்??
ஓ பத்துவரிகள் முப்பது வரிகள் ஆகிட்டதே என்றா.
என்ன செய்வது.
கணினி என் சாஃப்ட் கார்னர்:))))

பன்னிரண்டு மணி நேரம் பிரிவு

மன அலைபாயாம இருக்க எத்தனையோ விதமான ஸ்ட்ரெஸ்மேனேஜ்மெண்ட் வழிகள் வந்துவிட்ட நிலையில்,
வயசான காலத்தில் கிருஷ்ணா,ராமானு இருக்காமல்,
இமெயிலில் ஆரம்பித்து, பேரனோட முகம் பார்ப்பதற்காகக் கணினி வாங்கி, பீச்சோரமா இருக்கிற அப்போதைய விஎஸென் எல் லில் கணக்கு ஆரம்பித்து, மாசம் மாசம் பணம் கட்டி ஈமெயில் அனுப்பறத்துக்கு ஒரு மணி நேரம் காத்திருந்து(ஏனெனில் மோடம் வேகம் எடுக்க அத்தனை நேரம் ஆகும்):)),

ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை மோடத்தை நிறுத்தி விட்டு, மத்தவர்கள் யாராவது வீட்டுக்குப்போன் செய்தால் போன் எடுக்கணும் இல்லையா, அதற்காக
இமெயில் +கணினியை நிறுத்தி வேற வேலைகள் எல்லாம் பார்த்துவிட்டுத் திருப்பி ஒரு மணி நேரம் லாகின் செய்து, பாஸ்வேர்ட் மறக்காமல் எழுதி வைத்துக் கொண்டு,(ஒரு எழுத்து மாறினால் கூட படு சிரமம்)
இந்தப் பத்து வருடங்களில் எத்தனையோ மாற்றம்.

சின்னக் கணினி,கறுப்பு வெள்ளை திரை மாறி பெரிய ஸ்க்ரீன்,கலர் கலராக வந்த போது வாழ்க்கையில் மிகப் பெரிய சந்தோஷம்.
பிறகு வந்தது விண்டோஸ் எx பி& ஏடிஎஸெல்.
தமிழ்மணம்,தேன்கூடு,இ-கலப்பை,இணையம் தமிழில்.
நண்பர்கள்.
இந்தச் சரித்திரத்தில் சில சமயங்கள் தடங்கல்கள் வந்திருக்கின்றன.
நிபுணர்கள்(!!!) வந்து 6,7 மணிநேரம் உட்கார்ந்து சரிசெய்து கொடுத்து விட்டுப் போவார்கள்.அது அந்தக் காலம். விண்டோஸ் 95 போய் 98 வந்தது. இன்னோரு தடவை
சங்கடம் வந்த போது இப்போதைய எக்ஸ் பி நிறுவியாகி
விட்டது.

சரிப்பா முன்னுரை முடிந்துவிட்டது. இப்ப, தலைப்புக்கு வரலாம்:))
ஒழுங்காக ஓடிக்கொண்டிருந்த கணினி வண்டி, திடீர் வேலை நிறுத்தம் செய்துவிட்டது.
பத்துமாதம் வெளியூர் சுற்றிவிட்டு வந்து , on செய்ததும் உடனே இயங்க ஆரம்பித்த என் உயிர்த் தோழி,
...என்ன பேரு வைக்கலாம்:))
இப்போது ஒரு திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு(நான்) மீண்டும் ஸ்விட்ச் ஆன் செய்தால் கணினி மானிட்டர் திரை(?) திறக்கவில்லை. அதல பாதாளத்துக்குப் போன மாதிரி ஒரு உணர்வு..

பதிவு போடாட்டாலும் போகிறது. பின்னூட்டமாவது போடலாமே. யார் என்ன எழுதினார்கள் ஒன்றும் தெரியவில்லை.
ஒரு பெரிய நாட்டின் தலைவர் கூட இப்படிக் கவலைப் பட்டிருக்க மாட்டார்.:)

மாலை ஏழு மணியிலிருந்து ஸ்விட்ச் ஆன் செய்யறதும் ,காத்திருந்து ஸ்க்ரீன் வராமல் ஆஃப் செய்யறதும்,
லஸ் பிள்ளையார்,அதுதான் கம்யூட்டர் மானிட்டர் மேலே படத்தில இருக்காரே
அவர்கிட்ட சொல்றதும், பசங்க பேசும்போது சுரத்தில்லாமல் இருக்கிறதும்,
அம்மாக்கு உடம்பு முடியலையானு அவங்க மீண்டும் கேக்கறதும்,
உடனே சிங்கம்,
''கம்ப்யுட்டர்ல ஏதோ கோளாறுப்பா, அம்மா கொஞ்சம் என்னவோ மாதிரி இருக்கிறா''
அப்படினு மெசஜ் கொடுக்க,
''ப்பூ இவ்வளவுதானா. காலைல யூ கான் கால் சம்படி அண்ட் ரிபேர் இட்'' ணு
அவங்க போனை வச்சாச்சு.
பத்து மணி வரைக்கும் இருபது தடவை இதே ரொடீன்.
படுக்கப் போகும்போதும் எப்படியாவது காலையுஇல் சரியாகிவிடும். ஒரு வேளை மின்சக்தி பிரச்சினையா இருக்கலாம். யு பி எஸ் தகறாரோ என்னமோ.
எப்படியிருந்தாலும் கணினி ரிப்பேர் சர்வீஸைக் கூப்பிட்டுச் சரி செய்துடலாம்.
என்ன பரவாயில்லை. ஒரு நாள் இணையத்துக்குப் போகா விட்டால் என்ன. குடியா முழுகிடும்.
கோவிலுக்குப் போலாம், நெடுங்காலம் பேசாத உறவுகளோடு பேசலாம்,
மெரினாவில் நடக்கலாம், சாமி அறையை ஒட்டடை அடிக்கலாம். ஜன்னலை எல்லாம் துடைக்கலாம்.
ஹிக்கின் பாதம்ஸ் போய் புதிதாப் புத்தகம் வாங்கலாம்.
இப்படியெல்லாம் குழந்தைகளுக்கு சமாதானம் சொல்வது போல மனசுக்குள் சொல்லியபடியே தூங்கியாச்சு.
சரியா காலை நாலரைக்கு முழிப்பு வந்ததும்முதல் நினைவு ஐயோ கம்ப்யூட்டர் வராதே என்பதுதான்:)))
தேவையா இந்த நிலைமை.???


பின்குறிப்பு...
அடுத்த ''ஃபாலோ அப் '' பதிவைப் பத்தே வரிகளில் முடித்துவிடுகிறேன்.:))

Friday, November 02, 2007

போட்டா ஃபோட்டோ போட்டி

இவையெல்லாம் பாதைகள். யாரையோ தேடிச் செல்லுகின்றன. எதையோ அடைகின்றன.
பார்ப்பவர்களை யோசிக்க வைக்கின்ற,
பூரிக்க வைக்கின்ற பாதைகள்.
இந்தப் போட்டோக்களை போட்டோ போட்டிக்கு அனுப்புகிறேன்.:))







Posted by Picasa