
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
சற்றே நீண்ட கதை.:) தீபாவளி ஸ்பெஷல்(நாற்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு தீபாவளி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாயிலைப் பார்த்தபடி போட்டிருந்த சாய்வுநாற்காலியில்
சாய்ந்த வண்ணம் தன்னைத் தாண்டி போகிறவர்களையும்
இருந்து பேசுபவர்களையும் கவனித்த வண்ணம் இருந்தார் விஜயாப் பாட்டி.
கண்சதை வளர்ச்சிக்கான அறுவைசெய்த பிறகு கண்கள் மிக நன்றாகத் தெரிந்தன.
குப்பையைக் கொட்டும் பாவனையில் பக்கெட்டையும்
எடுத்துச் செல்லும் ரங்கம்மா,
விளையாட்டுக்காக புளி உப்பு இரண்டையும் சமையலறையிலிருந்து எடுக்கும் கொள்ளுப் பேத்தி
பென்சில் வாங்கக் காசு கேட்பதற்காகத் தயங்கி நிற்கும் கொள்ளுப் பேரன்,
விசாலமாக எழுப்பப் பட்ட ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகையின் கீழே
நான்கு ஐந்து கார்களை (உதவிக்கு வைத்திருக்கும் மெக்கானிக்குகளின் துணையோடு)
ரிப்பேர் செய்து கொண்டிருக்கும் பேரன்.
ஸ்வாமி அறையில் இராமாயணம் படித்துக் கொண்டிருக்கும் மருமகள்.
வசந்தா.
அந்த மருமகளின் மருமகள்(பேரனின் பெண்டாட்டி) சந்திரா ஒருஅறையிலிருந்து
இன்னோரு அறைக்கு விரைந்து கொண்டிருப்பதையும்
ஒரே நோட்டத்தில் பார்த்துவிட்டுக் கையில் இருக்கும் புத்தகத்தின் பக்கத்தைப் புரட்டினார்.
தீபாவளிக்கு இன்னும் ஒரு நாலு நாள் தான் இருக்கிறது.
பேரன் குடும்பத்துக்கு என்ன வாங்கித் தரப் போகிறான். இந்த ரேசன் காலத்தில் பா(ல்)ம் ஆயில் கிடைக்குமா.
என்னவெல்லாமோ கவலை பாட்டிக்கு.
சாப்பிட உள்ளே வந்த பேரனிடம் ,
''தீபாவளி வருதேடா, குழந்தைகளுக்கு ஜவுளி எடுக்கவேண்டாமா?"
என்றாள்.
ம்ம் வாங்கலாம். கஸ்டமர் வண்டி இன்னிக்குப் போய்விடும்'
ஒரு ஆயிரம் ரூபாய் கிடைக்கும். வேலை செய்யும் பசங்களுக்கு ஐன்னூறு ரூபாய் கொடுத்துவிட்டால்
மிஞ்சும் ஐன்னூறில் குழந்தைகளுக்கு ரெடிமேட் எடுத்துவிடலாம்'' என்ற வண்ணம்
நகர்ந்த பேரனைச் சலிப்போடு பார்த்தாள் பாட்டி.
மருமகள் வசந்தாவை விளித்தாள்.
நீயாவது ஏதாவது செய்யக் கூடாதாமா. அந்தப் பெண்(பேரன் பெண்டாட்டி)
புதுசு போட்டுக்க வேண்டாமா. ஒரு ஒக்கோரையாவது
மனோகரமாவது செய்யவேண்டாமா.
கேட்டார்.
கோ ஆப்டெக்ஸ் அட்டை இருக்குமா. சிரமம் ஒண்ணும் இல்லை.
எல்லாம் சமாளிக்கலாம்மா என்ற வண்ணம் மதியம் காப்பி டிபனுக்கு ஏற்பாடு செய்யச் சந்திரா
விரைந்துவிட்டாள்.
பாட்டிக்குப் பிடித்த குணுக்குப் பலகாரத்தையும், இலையில் வைத்து
அப்போது இறக்கின டிகாக்ஷனில் போட்ட காப்பியை வெள்ளி டம்ப்ளரிலும்
ஒரு மரத்தட்டில் கிண்ணத்தில் வைத்துக் கொடுத்தாள்.'
பேசாம இருக்கியே அவன்கிட்டக் கேட்டு நல்ல புடவையா வாங்கிக்கக் கூடாதோ என்று
ஆதங்கத்தோடு கேட்கும் பாட்டியை
ஏதாவது வாங்கிடலாம் பாட்டி''சமாதானப் படுத்திவிட்டுக் குழந்தைகளின்
வீட்டுப் பாடத்தைக் கவனிக்கச் சென்றாள்.
அடுத்தநாள் குழந்தைகள் வந்ததும் பெண்ணுக்குப் பிடித்த பாவாடை சட்டையும் மகன்கள்
இருவருக்கும் பாண்ட் சட்டைகளும் முந்நூறு ரூபாய்க்குள் வாங்கி வந்துவிட்டாள் சந்திரா.
டியூசிஎஸ் கடையில் விற்ற நல்லெண்ணெய், சீயக்காய்த் தூள், விதவிதமான பட்டாசுகள்,
மத்தாப்புகள் எல்லாம் வீடு வந்து சேர்ந்ததும் குழந்தைகளின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
பக்கத்துவீட்டு மருதாணி மரத்திலிருந்து ஒரு பை நிறைய இலைகளைப் பறித்து வந்த பெண்ணிற்கு
இரவு சாப்பாடு முடிந்ததும்,
கைகள் கால்களில் மருதாணி இட்டுவிட்டுத் தானும் வைத்துக் கொண்டாள்.
மருதாணிவைக்கும்போது அம்மாவின் நினைவு வர ,பழைய தீபாவளிகளைப் பற்றிக்
குழந்தைகளிடம் சொல்லியபடியே அன்றிரவு கழிந்தது.
மறுநாள் பாட்டியிடம் கேட்டுக் கொண்டு பச்சரிசி,உளுந்து,கடலைப் பருப்பு ,பயத்தம்பருப்பு இவையெல்லாம்
கொடுத்துவிட்டு வீதிமுனையில் இருக்கும் மாவு மெஷினில்
ரங்கம்மாவிடம் சொல்லி அரைத்து வைத்தாள்.
அன்று பகல்தான் எல்லோருக்கும் ஒரு ஆச்சரிய அதிர்ச்சி காத்திருந்தது.
வாசலில் ஆட்டோ நிற்கும் சத்தம் கேட்டுப் பாட்டி'யாரூன்னு போய்ப் பாரு.
தீபாவளிக்கு முதல்நாள் யார் வரப் போகிறா என்றதும்,
கதவைத் திறந்த சந்திராவுக்கு ஒரு நிமிடம் பேச்சே வரவில்லை.
''சம்பந்தியா வாங்கோ வாங்கோ வாம்மா ஜயா, நாராயணன்
வாங்கோ.
வசந்தா உன் சம்பந்திகள் வந்திருக்கா பாரு''என்று பாட்டியின் குரல் உச்சஸ்தாயியில்
சென்றது.
அம்மாவின் கையில் இருந்த வயர் கூடையில் பழங்களும் வெற்றிலை பாக்கு மஞ்சள்
இருப்பது தெரிந்தது.
அப்பாவும் மெதுவே உள்ளே வந்தார்.
இருவரும் பாட்டியை நமஸ்கரித்தனர்.
''எங்களுக்கு சென்னைக்குப் பக்கத்தில் அச்சரப் பாக்கத்துக்கு மாற்றலாகி இருக்கிறது..இப்பதான் ஒருவாரம் ஆகிறது.
ஜயாவின் தம்பிக்குத் திருமணம் நிச்சயம் ஆகிறது.
அதற்காக மாம்பலம் கிளம்பிவந்தோம். அப்படியே மைலாப்பூருக்கும் வரலாம் என்று வந்தோம் என்றார்.
''சந்திரா கொஞ்சம் ஒரு தாம்பாளம் எடுத்து வரயாம்மா என்றதும்,
முதலில் அவர்களுக்குக் காப்பி ஏதாவது கொடு. என்ற வண்ணம் வசந்தம்மாவின் குரல்
கேட்டுச் சந்திரா தன்னிலைக்குத் திரும்பினாள்.
எப்படிம்மா இருக்க அப்பா நீ எப்படி இருக்க. வயிற்று வலி தேவலையா,
என்றபடி தாம்பாளத்தையும் கொண்டுவந்தாள்.
உன் தம்பி சிங்கப்பூரிலிருந்து மருந்து வரவழைத்துக் கொடுத்தான்மா.அவனுக்குத்
தெரிந்த பைலட் தினம் அங்கு சென்று வருவாராம்
என்று சொல்லித் தன் கையிலிருந்த்க பையிலிருந்து ஒரு எட்டு முழ வேட்டியும்,
ஒரு பாம்பே டையிங் துண்டும் எடுத்து வைத்தார்.
சந்திராவுக்கு மிகவும் பிடித்த கடாவ் டெரகோசா புடவை அடுத்ததாக வெளியே வந்தது.
மனதை அள்ளும் மெல்லிய மஞ்சள் நிறத்தில் பச்சைக் கொடிகள் சுற்றி வரும் அந்தப் புடவையின் அழகு
இதமாக இருந்தது.
என்ன மாமா என்று கேட்டபடியே க்ரீஸ் படிந்த கைகளோட வந்த மாப்பிள்ளையைப்
பார்த்து இருவரும் எழுந்தார்கள்.
கூடத்தில் வைக்கப் பட்டிருந்த பொருட்களைப்
பார்த்து எனக்கு என்ன வேண்டும் என்று எங்க மாமாவுக்குத்தான் தெரியும் என்ற வண்ணம் சிரித்தபடி
உள்ளே சென்ற மகனை அம்மா'' வந்து உட்காருடா''' என்று அழைத்தார்.
அதற்குள் வேட்டி துண்டுக்கு மேல் மாப்பிள்ளைக்குச் சட்டை வாங்க ஒரு நூற்றியோரூ
ரூபாயும் வைத்தார் நாராயணன்.
அதன் பின்னே ஒரு எவர்சில்வர் டப்பாவில் திரட்டிப் பாலும், இன்னோரு டப்பாவில்
தேங்காய் பர்ஃபியும் அம்மா வைத்தார். இன்னோடு குட்டி டப்பாவைப் பார்த்ததுமே சந்திரா என்னவென்று கண்டு கொண்டாள். ''மருதாணியாம்மா'' என்று அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
''தீபாவளி அமர்க்களமா இப்பவே வந்தாச்சு. வந்தாச்சு. நாராயணா, ஜயா இரண்டு பேரும் இருந்து சாப்பிட்டு விட்டுப் போங்கோ
என்று வாயார அவர்களை உபசரித்தார் .
தயங்கியவர்களை மாப்பிள்ளை வற்புறுத்த பிறகு சம்மதித்தனர்.
அன்று இரவு அவர்களை பஸ் நிறுத்தத்திற்குச் சென்று 12 பி பஸ்ஸில் ஏற்றிவிட்டுத் திரும்பிய
சந்திராவின் மனம்
சுற்றிவெடிக்கும் பட்டாசுகள் மத்தாப்புகள் வெளிச்சத்தை விட பல மடங்கு ஒளிர்ந்தது.
வருடம் தவறாமல் இந்த வழக்கத்தைக் கடைப் பிடித்த பெரிய தம்பி,சின்னத்தம்பி இருவரின் நினைவுக்கும் நன்றியுடன் எழுதப்பட்ட பதிவு.