Showing posts with label தீபாவளி. Show all posts
Showing posts with label தீபாவளி. Show all posts

Saturday, October 22, 2011

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு,தீபாவளி 2011


1992   ஆம் வருடம் எடுத்த  தீபாவளிப் படம். குடும்பத்தினர்  பட்டாசு கொளுத்திய கலகலப்பில்  போஸ் கொடுக்க  வேறு ஒருவர் க்ளிக்கியிருக்கிறார். 
ஆங்கிலத்தில்
கிறிஸ்துமஸ் பாஸ்ட் கிருஸ்துமஸ் பிரசன்ட் என்று ஒரு    பழமொழி வரும். முந்திய வருடங்கள் இந்த வருடம் என்று  அசை போடுவதாக அந்த   நிகழ்ச்சி அமையும்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான  நினைவுகள். அனுபவங்கள்.பெற்றோர்களாக எங்களது தீபாவளிகள் வேறாக அமைந்தன.
நம் குழந்தைகள் குழந்தைகளாக   இருக்கும்பூது
  துணிமணிகள் எடுப்பது பெரிய விஷயமே இல்லை.
23   ரூபாய்க்கெல்லாம்   புது கவுன்
எடுத்த நாட்களும் உண்டு. பெரியவனுக்கு ராஜேஷ்  கன்னா  ஸ்டைலில்   வாங்கின உடை
 இருபத்தி ஐந்தேதான்.
பிறகு
 அவர்கள் வளர செலவும் அதிகரிக்க  அவர்களாக ஆசைப்பட்ட 
ஆடைகளைத் தேர்ந்தெடுக்க
பணம் கட்டும் வேலை மட்டும் நம்முடையதாக இருந்தது.:)
அப்போது எங்கே பார்த்தாலும்    சேல்  போய்க்கொண்டிருக்கும்.
குவித்து வைத்திருக்கும் ஆடைகளில்

நமக்குப் பிடித்ததை  விலை பேசி வாங்கின அனுபவ
மும் உண்டு.
பத்மாவதி திருமண மண்டபம் என்று அண்ணா  சாலையில் இருக்கும். அங்கு  ஒருதடவை பன்னிரண்டு ரூபாய்க்கு  புடவை  ,அதன் பெயர் நிழல் நிஜமாகிறது!
அதை வெற்றிகரமாக  வாங்கி வந்ததும் ,உடுத்தித் தண்ணீரில் போட்ட அடுத்த நிமிடம் அது  அப்படியே  சுருங்கிக் கைகள்   துடைக்கும் துணி   அளவுக்கு மாயமனதும், நிஜம் நிழலாகிவிட்டது:)
சிங்கம் ''அட   வீடு துடைக்க இவ்வளவு காஸ்ட்லியா வாங்கி இருக்கியே என்று கேலி செய்ததும் நினைவுக்கு வருகிறது. அதெல்லாம் எண்பதுகளில்.

பதின்ம  வயதைக் குழந்தைகள் எட்டியதும், ஜீன்ஸ்   வழக்கத்துக்கு வந்தது.
கார்டுராய், காட்டன் டெனிம் என்று   நீளப்  பாவாடைகளும்   ப்ரில் வைத்த சட்டைகளும் வந்தன.

பட்டாசு மத்தாப்பு வகையறா வாங்க  நம்ம ஊர்ப்
 பாரீசுக்குப் போன  அனுபவங்களும் உண்டு.

தவறாமல் மழையும் பெய்யும். மழையில் நனைந்த பட்டாசுகளைக் காய வைக்க வெய்யிலும் வரும்.

நாத்தனார்  பசங்களும், என் தம்பிகள் அவர்கள் குழந்தைகள் எல்லாம்
தீபாவளி அன்று   இங்கே வர
பிறகென்ன வெடிச்சத்தம் தூள் கிளப்பும்.
அடுத்த நாள் பக்கத்துவீட்டில்  பட்டாசுக் குப்பை ஜாஸ்தியா
நம்ம வீட்டிலா என்று ஆராய்ச்சி
நடக்கும்.
தௌசண்ட் வாலா, டென் தவுசண்ட் வாலா என்று கரியாக்குபவர்களும் இருந்தார்கள். இருக்கிறார்கள்.
நம் காது  கிர்ரென்று
இரண்டு மூன்று நாட்களுக்குக் கேட்டுக்
கொண்டிருக்கும.
 இதில்  ஒரு பக்கத்துவீட்டுப் பையன் இரவு பத்து மணிக்கு மேல் ஒரு ஒரு லக்ஷ்மி வெடியாகப் போடுவான். .
திடும் திடும் என்று வெடிப்பது கட்டிடமே ஆடுவது போல இருக்கும்.

அடுத்த தலைமுறை வந்தாச்சு. பேசி வைத்துக் கொண்டு இந்தக் குழந்தைகள் ஒருவர் மாற்றி ஒருவர் வெடிப்பது அழகாகத் தான் இருக்கிறது..விலை ஏற்றம் எல்லாம் இவர்களைப் பாதித்ததாகத் தெரியவில்லை.

என் காமிராவுக்குத்தான் வேலை கொடுக்கப் போகிறேன். அவர்கள் பட்டாசு வெடிப்பதையும் ,அந்தச் சந்தோசம் முகத்தில் தெரிவதையும் எடுக்க


வேண்டும்


     
எங்கள் இருவருக்கும் புஸ்வாணமும் ஒரு சீனிச்ச்சரமும் போதும்.:)

அனைவருக்கும் மனம் நிறைந்த தீபாவளி நல் வாழ்த்துகள்.
பட்டாசு செய்த சின்னக் கரங்களுக்கும் வணக்கம்.
 அந்தக் கைககள்  புத்தகங்கள் ஏந்தும் நாட்களும் வரட்டும்.











எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Tuesday, October 18, 2011

பசுமை என்றும் வாழ்வில் நிலைக்கப் பகிர்ந்து கொள்ளவேண்டும்




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
    சற்றே    நீண்ட  கதை.:)  தீபாவளி  ஸ்பெஷல்(நாற்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு தீபாவளி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 
வாயிலைப் பார்த்தபடி போட்டிருந்த சாய்வுநாற்காலியில்
சாய்ந்த வண்ணம் தன்னைத் தாண்டி போகிறவர்களையும்
இருந்து பேசுபவர்களையும் கவனித்த வண்ணம் இருந்தார் விஜயாப் பாட்டி.

கண்சதை வளர்ச்சிக்கான அறுவைசெய்த பிறகு கண்கள் மிக நன்றாகத் தெரிந்தன.
குப்பையைக் கொட்டும் பாவனையில்  பக்கெட்டையும்
 எடுத்துச் செல்லும்  ரங்கம்மா,

விளையாட்டுக்காக புளி உப்பு இரண்டையும் சமையலறையிலிருந்து எடுக்கும் கொள்ளுப் பேத்தி

பென்சில் வாங்கக் காசு கேட்பதற்காகத் தயங்கி நிற்கும்  கொள்ளுப் பேரன்,

விசாலமாக எழுப்பப் பட்ட  ஆஸ்பெஸ்டாஸ்  கொட்டகையின் கீழே
நான்கு ஐந்து  கார்களை (உதவிக்கு வைத்திருக்கும் மெக்கானிக்குகளின் துணையோடு)

ரிப்பேர் செய்து கொண்டிருக்கும்  பேரன்.


ஸ்வாமி அறையில் இராமாயணம் படித்துக் கொண்டிருக்கும்  மருமகள்.
வசந்தா.

அந்த மருமகளின் மருமகள்(பேரனின் பெண்டாட்டி) சந்திரா  ஒருஅறையிலிருந்து
 இன்னோரு அறைக்கு விரைந்து கொண்டிருப்பதையும்
 ஒரே  நோட்டத்தில் பார்த்துவிட்டுக் கையில்  இருக்கும் புத்தகத்தின் பக்கத்தைப் புரட்டினார்.
தீபாவளிக்கு இன்னும் ஒரு நாலு நாள் தான் இருக்கிறது.

பேரன் குடும்பத்துக்கு  என்ன வாங்கித் தரப் போகிறான். இந்த ரேசன் காலத்தில் பா(ல்)ம் ஆயில்  கிடைக்குமா.
என்னவெல்லாமோ கவலை பாட்டிக்கு.

சாப்பிட உள்ளே வந்த பேரனிடம் ,
''தீபாவளி வருதேடா, குழந்தைகளுக்கு ஜவுளி எடுக்கவேண்டாமா?"
என்றாள்.
ம்ம்  வாங்கலாம். கஸ்டமர் வண்டி இன்னிக்குப் போய்விடும்'
ஒரு ஆயிரம் ரூபாய் கிடைக்கும். வேலை செய்யும் பசங்களுக்கு ஐன்னூறு ரூபாய் கொடுத்துவிட்டால்
 மிஞ்சும் ஐன்னூறில் குழந்தைகளுக்கு ரெடிமேட் எடுத்துவிடலாம்'' என்ற வண்ணம்
நகர்ந்த பேரனைச் சலிப்போடு பார்த்தாள் பாட்டி.
மருமகள் வசந்தாவை விளித்தாள்.
நீயாவது ஏதாவது செய்யக் கூடாதாமா. அந்தப் பெண்(பேரன் பெண்டாட்டி)
புதுசு போட்டுக்க வேண்டாமா. ஒரு ஒக்கோரையாவது
மனோகரமாவது  செய்யவேண்டாமா.


கேட்டார்.
கோ ஆப்டெக்ஸ்  அட்டை இருக்குமா. சிரமம் ஒண்ணும் இல்லை.
எல்லாம் சமாளிக்கலாம்மா என்ற வண்ணம் மதியம் காப்பி டிபனுக்கு ஏற்பாடு செய்யச் சந்திரா
விரைந்துவிட்டாள்.

 பாட்டிக்குப் பிடித்த குணுக்குப் பலகாரத்தையும், இலையில் வைத்து
அப்போது இறக்கின டிகாக்ஷனில் போட்ட காப்பியை வெள்ளி டம்ப்ளரிலும்
ஒரு மரத்தட்டில் கிண்ணத்தில் வைத்துக் கொடுத்தாள்.'

பேசாம இருக்கியே அவன்கிட்டக் கேட்டு நல்ல புடவையா வாங்கிக்கக் கூடாதோ என்று
 ஆதங்கத்தோடு கேட்கும் பாட்டியை
 ஏதாவது  வாங்கிடலாம்   பாட்டி''சமாதானப் படுத்திவிட்டுக் குழந்தைகளின்
 வீட்டுப் பாடத்தைக் கவனிக்கச் சென்றாள்.

அடுத்தநாள் குழந்தைகள் வந்ததும்  பெண்ணுக்குப் பிடித்த பாவாடை சட்டையும்  மகன்கள்

 இருவருக்கும் பாண்ட்  சட்டைகளும் முந்நூறு ரூபாய்க்குள் வாங்கி வந்துவிட்டாள் சந்திரா.

டியூசிஎஸ் கடையில் விற்ற நல்லெண்ணெய், சீயக்காய்த் தூள்,  விதவிதமான பட்டாசுகள்,

 மத்தாப்புகள் எல்லாம் வீடு வந்து சேர்ந்ததும் குழந்தைகளின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

பக்கத்துவீட்டு மருதாணி மரத்திலிருந்து ஒரு பை நிறைய இலைகளைப் பறித்து வந்த பெண்ணிற்கு
இரவு சாப்பாடு முடிந்ததும்,
கைகள் கால்களில் மருதாணி இட்டுவிட்டுத் தானும் வைத்துக் கொண்டாள்.

மருதாணிவைக்கும்போது அம்மாவின் நினைவு வர ,பழைய தீபாவளிகளைப் பற்றிக்
குழந்தைகளிடம் சொல்லியபடியே அன்றிரவு  கழிந்தது.

மறுநாள்  பாட்டியிடம் கேட்டுக் கொண்டு  பச்சரிசி,உளுந்து,கடலைப் பருப்பு ,பயத்தம்பருப்பு இவையெல்லாம்
 கொடுத்துவிட்டு வீதிமுனையில் இருக்கும் மாவு மெஷினில்
 ரங்கம்மாவிடம் சொல்லி அரைத்து வைத்தாள்.
அன்று பகல்தான் எல்லோருக்கும் ஒரு ஆச்சரிய அதிர்ச்சி காத்திருந்தது.

வாசலில் ஆட்டோ நிற்கும் சத்தம் கேட்டுப் பாட்டி'யாரூன்னு போய்ப் பாரு.
 தீபாவளிக்கு முதல்நாள் யார் வரப் போகிறா என்றதும்,

கதவைத் திறந்த சந்திராவுக்கு ஒரு நிமிடம் பேச்சே வரவில்லை.
''சம்பந்தியா  வாங்கோ வாங்கோ  வாம்மா ஜயா, நாராயணன்
வாங்கோ.
வசந்தா உன் சம்பந்திகள் வந்திருக்கா பாரு''என்று பாட்டியின் குரல் உச்சஸ்தாயியில்
சென்றது.

அம்மாவின் கையில்  இருந்த  வயர் கூடையில் பழங்களும் வெற்றிலை பாக்கு மஞ்சள்
இருப்பது தெரிந்தது.
அப்பாவும் மெதுவே உள்ளே வந்தார்.
இருவரும் பாட்டியை நமஸ்கரித்தனர்.
''எங்களுக்கு  சென்னைக்குப் பக்கத்தில் அச்சரப் பாக்கத்துக்கு மாற்றலாகி இருக்கிறது..இப்பதான் ஒருவாரம் ஆகிறது.
ஜயாவின் தம்பிக்குத் திருமணம் நிச்சயம் ஆகிறது.
அதற்காக  மாம்பலம் கிளம்பிவந்தோம். அப்படியே மைலாப்பூருக்கும் வரலாம் என்று வந்தோம் என்றார்.

''சந்திரா கொஞ்சம் ஒரு தாம்பாளம் எடுத்து வரயாம்மா என்றதும்,
முதலில் அவர்களுக்குக் காப்பி ஏதாவது கொடு. என்ற வண்ணம் வசந்தம்மாவின் குரல்
 கேட்டுச் சந்திரா தன்னிலைக்குத் திரும்பினாள்.
எப்படிம்மா இருக்க அப்பா நீ எப்படி இருக்க. வயிற்று வலி தேவலையா,
என்றபடி தாம்பாளத்தையும் கொண்டுவந்தாள்.
உன் தம்பி சிங்கப்பூரிலிருந்து மருந்து வரவழைத்துக் கொடுத்தான்மா.அவனுக்குத்
தெரிந்த பைலட் தினம் அங்கு சென்று வருவாராம்
என்று சொல்லித் தன் கையிலிருந்த்க பையிலிருந்து ஒரு எட்டு முழ வேட்டியும்,
ஒரு  பாம்பே டையிங் துண்டும் எடுத்து வைத்தார்.
சந்திராவுக்கு மிகவும் பிடித்த கடாவ் டெரகோசா  புடவை அடுத்ததாக வெளியே வந்தது.
மனதை அள்ளும் மெல்லிய மஞ்சள் நிறத்தில் பச்சைக் கொடிகள் சுற்றி வரும் அந்தப் புடவையின் அழகு
இதமாக இருந்தது.

என்ன மாமா என்று கேட்டபடியே  க்ரீஸ் படிந்த கைகளோட வந்த மாப்பிள்ளையைப்
பார்த்து இருவரும் எழுந்தார்கள்.

கூடத்தில் வைக்கப் பட்டிருந்த   பொருட்களைப்
பார்த்து  எனக்கு என்ன வேண்டும் என்று எங்க மாமாவுக்குத்தான் தெரியும் என்ற வண்ணம் சிரித்தபடி
உள்ளே சென்ற  மகனை  அம்மா'' வந்து உட்காருடா''' என்று அழைத்தார்.
அதற்குள்  வேட்டி துண்டுக்கு மேல் மாப்பிள்ளைக்குச் சட்டை வாங்க ஒரு நூற்றியோரூ
 ரூபாயும் வைத்தார் நாராயணன்.
அதன் பின்னே ஒரு எவர்சில்வர் டப்பாவில்  திரட்டிப் பாலும், இன்னோரு டப்பாவில்
 தேங்காய் பர்ஃபியும் அம்மா வைத்தார். இன்னோடு குட்டி டப்பாவைப் பார்த்ததுமே சந்திரா என்னவென்று  கண்டு கொண்டாள். ''மருதாணியாம்மா'' என்று அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

''தீபாவளி  அமர்க்களமா  இப்பவே வந்தாச்சு. வந்தாச்சு. நாராயணா, ஜயா இரண்டு பேரும் இருந்து சாப்பிட்டு விட்டுப் போங்கோ
என்று வாயார  அவர்களை உபசரித்தார் .
தயங்கியவர்களை  மாப்பிள்ளை வற்புறுத்த  பிறகு சம்மதித்தனர்.

அன்று  இரவு அவர்களை பஸ் நிறுத்தத்திற்குச்  சென்று 12 பி  பஸ்ஸில் ஏற்றிவிட்டுத் திரும்பிய
சந்திராவின் மனம்
சுற்றிவெடிக்கும் பட்டாசுகள் மத்தாப்புகள் வெளிச்சத்தை விட பல மடங்கு ஒளிர்ந்தது.

வருடம் தவறாமல் இந்த வழக்கத்தைக் கடைப் பிடித்த பெரிய தம்பி,சின்னத்தம்பி இருவரின் நினைவுக்கும் நன்றியுடன் எழுதப்பட்ட பதிவு.








Posted by Picasa

Monday, November 02, 2009

விழா புதுசு மனசு பழசு

திருப்பரங்குன்றம்




பைபாஸ் ரோட்



மதுரை டவுன் ரோடு






ஒரு கிராம ரயில் நிலையம் .



பசுமலை















சதங்கா அழைப்பு விடுத்து வெகு நாட்கள் சென்று விட்டன. தாமதத்திற்கு மன்னிக்கணும் சதங்கா.


சதங்கா கேட்டிருக்கும் முதல் கேள்வி

1,உங்களைப் பற்றிச் சிலவரிகள்.
-----------------------------------------------------------------


பெரிய நோட்டுப் புத்தகங்களில் கிறுக்கிக் கொண்டிருந்ததைப் பதிவுகளில் எழுதலாமே என்று நினைத்தாதுதான்.

தந்தை பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பின் வரும் தலைமுறைக்காக. முடிக்கவில்லை. முடிக்க முடியவில்லை.
இப்பொழுது நான் எழுதுவதைப் பிற்கால குடும்ப அங்கத்தினர்கள் யாராவது படிப்பார்கள் என்ற நம்பிக்கை.

2,தீபாவளி என்றதும் நினைவுக்கு வரும் மறக்க முடியாத சம்பவம்.....
-------------------------------------------------------------------------------------------------------------------------------நாங்கள் எல்லாரும் உறங்கிய பிறகு அம்மாவும் அப்பாவும் எங்கள் தீபாவளிப் புதுத்துணிகளுக்கு மஞ்சள்,குங்குமம் வைப்பதும், அடிக்குரலில் அடுத்த தீபாவளிக்கு இன்னும் நல்லதாக உடைகள் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று பேசிக்கொள்வது,.
அம்மாவுக்கு எப்பவும் ஒரு சின்னாளப்பட்டுச் சேலைதான். அப்பாவுக்கு அதே எட்டு முழம் வேஷ்டியும் ஒரு பூத்துவாலையும்.

மறக்க முடியாதவற்றை எழுதத் தனிப் பதிவு போடவேண்டும்.:)



3, 2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருந்தீர்கள்/இருப்பீர்கள்.
------------------------------------------------------------------------------------------------------------

தருமமிகுச் சென்னையில் தான்.

4,தற்போது இருக்கும் ஊரில் தீபாவளி கொண்டாடும் முறையைப் பற்றி?
---------------------------------------------------------------------------------------------------------------------------

ஆளுக்கொரு தரைச் சக்கரம், இரண்டு சீனிச்சரம், புஸ்வாணம், கம்பி மத்தாப்புகள் வெடித்துவிட்டு மற்றதைப் பார்க்க வரும் சிறுவர்களுக்குக் கொடுத்துவிடுவது.
போன வருடம் சிகாகோவில் பட்டாசு வெடிக்காதபோதும் குழந்தைகளோடு இருந்ததால் ஆனந்தம் கொண்டாடியது. எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளவேண்டியக் காலத்தின் கட்டாயத்துக்கு வந்துவிட்டது.

எல்லோரிடமும் மணிக்கணக்கில் வாழ்த்துகள் பரிமாறிக்கொண்டது.

5,புத்தாடை எங்கு வாங்கினீர்கள், தைத்தீர்கள்.?
-----------------------------------------------------------------------------

நல்லியில் புடவை பட்டும் பருத்தியும் கலந்தது.

சிங்கத்துக்கு வேஷ்டியும் ஆயத்த உடை சட்டையும்.

6,உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள், வாங்கினீர்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------

செய்தது ஓமப்பொடியும்,க்ஷீரா எனப்படும் கோதுமை மாவு கேசரியும், வாங்கினது மிக்ஸரும்,லட்டுவும் மற்றவருடன் பகிர்ந்து கொள்ள.

7,உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துகள் எவ்வாறு தெரிவிக்கிறீர்கள்.?
---------------------------------------------------------------------------------------------------------------

முக்கால்வாசி தொலைபேசி.
இணையத்துக்குப் பதிவின் மூலம்.

ஈமெயில் வாழ்த்துகளும் உண்டு.
பெரியவர்களை நேரில் சென்று வணங்குவதும் வழக்கம்.
8,தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா
---------------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டும் தான். வெளியே மற்றவர் வீட்டுக்குப் போனாலும் அவர்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கி இருப்பார்கள்:))))

9,இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?
------------------------------------------------------------------------------------------------------
வீட்டில் நமக்கு உதவியாக இருப்பவர்கள் குடும்பங்களுக்கு புத்தாடைகளும் ,பட்டாசும் தருவது வழக்கம்.
அதைத்தவிர உதவி கேட்டு வருபவர்களுக்கும் கொடுப்பதுண்டு.
10,நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
****************************************************************
அனைவரும் எழுதலாம். ஏனெனில் எல்லோரும் எழுதி முடித்திருப்பார்கள்.
நான்தான் கடைசி என்று நினைக்கிறேன்.
நன்றி சதங்கா. உங்களால் ஒரு டைம் மெஷின் எனக்குக் கிடைத்தது. நினைவுகளில் மூழ்கி எழுந்திருக்க இன்னோரு சந்தர்ப்பம். அனைவருக்கும் நன்றி.
சக்கரவர்த்தினி என்று முடிசூட்டிய சீனா ஐயாவுக்கும் நன்றி.












எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...