Blog Archive

Monday, May 26, 2008

ஓஹோ எந்தன் பேபி






எங்க வீட்டுப் பாப்பாக்கு இன்னும் திரும்பக் கூடத் தெரியலை. அதனால கிடைச்ச படத்தைப் போட்டுட்டேன்.
கவுந்தக்கலைன்னா என்ன.அம்மா எல்லாம் கண்ணாலியே கவர் செய்துடறாங்க.
உலகத்திலேயே சமத்துப் பொண்ணு யாருன்னு கேட்டா எங்க மானுதான். அஃப்கோர்ஸ் அவங்க அக்காவத் தவிர.
அவங்க அக்காவும் இங்க ரெண்டு நாளுக்கு வராங்களாம்.
அவங்களுக்கு,தன்னைத் தவிர வேற யாரையும் தாத்தா பாட்டி கொஞ்சக் கூடாது.
பாட்டி'' பாப்பாவ விட்டுடு. பாவம் அழும்'' என்று சொல்லும்.:)
அதே சமயம் வெளி மனிதர்கள் யாராவது வந்தால் தான் பாடிகார்ட் மாதிரி நின்னுக்கும்.
பாப்பா தொடாதே. எங்க குட்டி என்று வேறு சொல்லும்
மானுவோட அண்ணா வெப்காமிரா பார்த்தே தங்கச்சிக்கு அழைப்பு கொடுத்துட்டான்.
பொம்மையெல்லாம் காண்பித்து 'விளையாட வானு' கூப்பிடுகிறான்.
எங்களை மாதிரியோ அடுத்த தலை முறைகளான எங்கள் வீட்டு பத்துப் பதினைந்து பேரன்கள் பேத்திகள் கோடை காலம் வந்தால் எங்கிருந்தெல்லாமோ வந்து சேருவார்கள்.
அது 25 வருடங்கள் முன்னால்.
அந்தப் பத்து பதினைந்து இப்போது ஐந்து ஆறகக் குறுகிவிட்டது. ஒரு பெற்றோர் ஒரு குழந்தை என்றால் இப்படித்தான் ஆகும். அப்புறம் சம்மர் காம்ப் உறவுகளைத்தான் பிடித்துக் கொள்ளவேண்டும்.
அப்படியும் வாழ்க்கையில் சேர்ந்து வாழ இந்தத் தலைமுறை கற்றுக் கொண்டு விட்டால் வாழ்க்கை நலம் பெறும்.

Saturday, May 24, 2008

303, நினைத்தாலே ...நடுங்கும்:)
















படங்கள் கூகிளாண்டவர் துணை.
டிஸ்கிப்பா.
துபாயில ஹெரிடேஜ் மியூசியம்னு ஒண்ணு இருக்கு.பழம் களப் பெருமைகள் அழகாக எடுத்து வைத்து விளக்கப்படும் இடம்.
இந்தப் பதிவில நான் சொல்ல வருவது அதைப் பத்தி அல்ல.
துபாய் ஹெரிடேஜ் கிராமம் ஒண்ணு எங்க வீட்டிலேருந்து கொஞ்சம் தொலவில் இருக்கு.
மம்சா பார்க்குக்கு அந்த வழியாப் போகும்போது நாந்தான் பையனிடம் இங்க ஒரு பழமையான கிராமத்தைக் கட்டி வைத்திருக்கிறார்களாமே.அதுவும் பவுர்ணமி அன்னிக்கு ரொம்ப அழகா இருக்குமே போலாமேப்பா என்றேன்.
தாய் சொல்லைத் தட்ட விரும்பாத மகனும் அப்பா மறுப்பதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் வண்டியைப் பார்க்கிங் லாட்டில் நிறுத்தினான்.
ஒரு பெரிய காம்பவுண்ட். அதற்குள் ஒட்டகங்களின் கனைப்புச் சத்தம், ஏதோ ஒரு அதீத இனிப்பு வாசனை காத்தில மிதந்து வந்தது.
ம்ம். நல்ல சாப்பாடும் இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டு ,நீளக்கால் ஜன்மங்கள்(என் புத்திரனும்,அவனைப் பெற்றவரும் தான்:)) உள்ளே சீக்கிரமாகப் போய் விட்டன.
மெதுவாக ஆடி அசைந்து கொண்டு அந்த இனிப்பு வாசனை வந்த இடத்துக்கு வந்து விட்டேன்.
பௌர்ணமினு சொன்னேன் இல்லையா. அங்கே நிஜமாகவே கிராமத்துப் பவுர்ணமி.
விளக்கே இல்லை. பெட்ரொமாக்ஸ் வெளிச்சத்தில் புஸ் புஸ் என்று மூச்சு விட்டுக் கொண்டு நாலைந்து ஒட்டகம். அதுக்குச் சற்றுத் தள்ளி அடுப்புகள். அடுப்புகள் முன்னால் கறுப்பு புர்கா தரித்த அழகுப் பெண்கள் அவர்கள் ஊர்த் தின்பண்டம் ஆட்டா மாவில் ரொட்டி மாதிரி செய்து அதை திறந்த அடுப்பில் வாட்டி எடுத்து அதன் மேல் பேரீச்சம்பழ சிரப்பை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் செய்யும் அழகைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு நிமிர்ந்தால்
அப்பனையும் பிள்ளையையும் காணொம்.
சுற்றிவர ஒட்டகமும் பாஷைதெரியாத பெண்களும் இருட்டும் தான்.
இருட்டுக்கு அப்பால் சிரிப்பும் சத்தமுமாக சில யூரோப்பியர்கள்.
அந்தப் பெண்கள் செய்யும் பலகாரத்தைச் சாப்பிட்டு ஏதோ கதை பேசிக்கொண்டிருந்தார்கள்.
(இந்த ஊரில் தனியாக ஒரு பெண் நடந்து போவது அதுவும் அந்த இருட்டில்
தப்புதான். சந்தேகத்துக்கு இடமாகிறது)
நான்கு புறமும் பார்த்தபோது இன்னோரு கட்டிடம் தெரிந்தது. மெதுவாக வெளிச்சம் தெரிந்த அந்தக் கட்டிடத்துக்குள் போனதும் ஒரு குதிரையின் ஓவியத்தின் முன்னால் இவங்க இரண்டு பேரும் அலசிக் கொண்டிருந்தார்கள். பையன் நிலைமை புரியாமல் என்னம்மா அப்படியே M&B காலத்துக்குப் போயிட்டுயா அப்படீனு கேலி செய்கிறான்.
ஆமாண்டா வெள்ளைக் குதிரையும் ஆரப் ரோபும் போட்டுக் கொண்டு யாரோ வந்த மாதிரி இருந்தது. லட்சியம் செய்யாம ,என்ன இருந்தாலும் தமிழ்ப் பொண்ணாச்சேனு இங்க வந்தேன். என்ன ஆச்சர்யம் நீங்க இங்க இருக்கீங்க!!!!!
அப்படீனு பல்லைக் கடித்தபடி சொன்னதும், பையன் ஓஹோ டேஞ்சர் சிக்னல் என்று அனுமானித்தபடி,
என் கையைப் பிடித்துக் கொண்டு இன்னோரு அறைக்கு அழைத்துப் போனான். அதில் 400 வருடங்களுக்கு முன்னால் இருந்த ராஜா ராணி படம், வெள்ளைக்காரன், நாணயங்கள் எல்லாம் வரிசையாக இருந்தது. கூடவே அந்தக் காலத்தில் பயன் படுத்திய வாட்கள் எல்லாம்(படு கோரம்)
இருக்கவே இருவரும் மீண்டும் அங்கேயே மூழ்கி விட்டார்கள்.
சரி நாம் அடுத்த அறைக்குப் போகலாம் ,அவங்க வெளில வரும்போது சட்டுனு வெளில வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று நல்ல வெளிச்சமாக இருந்த அறைக்குள் போனேன்.
அங்கே ஏற்கனவே ஒரு அராபியக் குடும்ப வாசனைத் திரவியத்தில் குளித்து குஞ்சு குளுவான்களோடு குடும்பமாக பேசிக் கொண்டிருந்ததும்
நான் மறுபடி வெளியே வந்துவிட்டேன்.
இங்கதான்பா தப்பாப் போச்சு.
நான் வெளீயே வந்த அறைக்கும் உள்ளே வந்த அறைக்கும் சம்பந்தமே இல்லை. இந்த அறையிலிருந்து இன்னோரு வாசல்... அது வழியாப் போனா இன்னோரு குட்டி அறை. அதுக்கு வாசலே இல்லை.
அது பிரேயர் செய்யற இடம் போலிருந்தது.
ஆத்தாடீனு பைத்தியம் பிடிச்ச மாதிரி ஒரு ஒரு அறையாப் போக ஆரம்பித்தேன். முதல் ரூமைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை.
அந்தப் பத்து நிமிஷத்தில் எனக்கு மூச்சு நிற்கும் அளவிற்குப் பயம் தொற்றிக்கொண்டது.
மெல்ல ''பாபு'' என்று கூப்பிட்டால் ஒரு குட்டிக் குழந்தை எட்டிப் பார்த்தது. அது எப்படியும் பெற்றோரோடுதானே இருக்கும்னு அது பின்னால் போனால் அந்தப் பழைய ஒட்டக,பலகாரம் செய்கிற இடம் வந்தது.
அங்க இருக்கிற பெண்ணிடம் '' ஹமாரா பதி தேகா??'' என்று கேட்டேன். அவள் சிரித்தாள். இங்க்லீஷ் நோ நோ. '' அடப்பாவி. நீ உருது பேசுவாய், உனக்கு இந்தி தெரியும்னுதானே கேட்டேன்.
என்று நொந்தபடி லம்பா டால் பாபா,சோடா புத்தர் என்றேல்லாம் சொல்லிப் பார்த்தேன்.
தூகான் கயா?? என்றாள். ஆஹா, என்று கொஞ்ச தூரத்தில் பார்த்தால் வாட்கள், ஓவியங்கள் என்று விற்கும் கடைகள் வரிசையாக இருந்தன.
அதில் சிங்கத்தோட குரல் சத்தமாகக் கேட்டதும், கோபம் பாதி,அழுகை பாதி என்று விரைந்து அங்கே போய் நின்றேன்.
இருவரும் என்னைப் பார்த்து ஏம்மா திருப்பித் தொலஞ்சு போயிட்டியே.
அந்தக் கட்டிடமெல்லாம் பூட்டறதுக்கு முன்னாடி வந்தியே என்றனர்.
''இல்லடா அம்மா இஸ் கோயிங் த்ரூ அ டஃப் பீரியட். மறந்து போயிடறது பாவம் ''
என்று கேலி செய்கிறார் இவர்.
காருக்குப் போகும் வரை ஒன்றும் பேசவில்லை நான்.
காருக்குள் வந்து கதவைச் சாத்தியதும் இருவரையும் நான் போட்ட போடில் பையன் வாயே திறக்காமல் வண்டியை எடுத்து ஒரு நல்ல பானிப்பூரி கடை முன்னால் நிறுத்தினான்.
பசியினால் அம்மாவுக்குக் கோபம்னு நினைக்கும் மகனை என்ன செய்ய!!!.
கடவுளே காப்பாத்து என்று நெற்றியில் தட்டிக் கொண்டு
கீழே இறங்கினேன்.:)





Thursday, May 22, 2008

302, அமீரகத்தின் அழகிய பக்கம்




























தலைப்பிலே சொல்லியது போல ஊருக்கு வந்ததும் கண்களில் படும் சில அழகிய காட்சிகள்.
நிறைய,ஏகப்பட்ட உழைப்பை இவை உள்வாங்கி இருக்கின்றன.
உழைத்திருக்கக் கூடியவர்கள் யார் என்றும் நமக்குத் தெரியும்.
துபாய் படகுகள் போக்குவரத்துக்கு மிகுதியாகப் பயன்படுத்தப் படுகின்றன.
கூலியும் குறைவுதான்.
இப்பொது கட்டப் பட்டுக் கொண்டிருக்கும் மெட்ரோ திட்டம் பூர்த்தியாகும் சமயம் இந்த ஆப்ரா படகுகளுக்கு வருமானம் குறையத்தான் செய்யும்.
விதவிதமான மனிதர்கள் வேறு வேறு இலக்குகளை நோக்கிப் பயணிக்கும் பாங்கு அமைதியாக இருக்கும்.
இந்தக் கரைகளின் ஓரம் அமர்ந்து விரையும் படகுகளைப் பார்ப்பதும் சுவாரஸ்யமாக இருக்கும்
துபாய் க்ரீக் அரபிக்கடலின் பாக்வாடர்ஸ் (backwaters) என்று நினைக்கிறேன்.
தெரிந்தவர்கள் சொல்லலாம்.
இங்கு நவநாகரீகமாகக் கட்டப்பட்ட க்ரூயிஸ் படகுகள் ஏகப்பட்ட விளக்குகளுடன் பயணிகளை ஏற்றி மாலை வேளைகளில் இந்த ஆற்றில்(?) ஆடல் பாடலுடன் மிதப்பது
பார்க்க நன்றாக இருக்கும்.,.100 திரமோ என்னவோ டிக்கட்டாம்:)








Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Monday, May 19, 2008

ஆரம்பம் நேற்றே ஆனது

















Posted by Picasaஇப்படியெல்லாம் மலர்கள் பூத்துக் குலுங்குகிறது இங்கே.
துபாய் விமான நிலையத்திலிருந்து வீடு வரும் வழியில் ஒரே ஒரு மரத்தில் ஆரஞ்சு நிறப்பூக்கள் பூத்திருப்பதைப் பார்த்தேன்.
சென்னை வெய்யிலுக்கு இங்கே சூடு தேவலை என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்னும் ''ப்ரோப்பர் சம்மர்'' ஆரம்பிக்கவில்லை என்று சொன்னார்கள்.
வந்ததும் கீழெ உள்ள மருந்துக்கடையில் இருமலுக்கு மருந்து வாங்கப் போனேன்.
''அம்மை அதுக்குள்ள திரும்பியோ'' என்று என்னை வினோதமாகப் பார்த்தார் கடையிலிருப்பவர்.
அதாகப்பட்டது ஆதௌ கீர்த்தனாரம்பத்திலேனு சொல்லத் தெம்பில்லாத ஒரே காரணத்தினால் பரிதாப லுக் ஒன்றைத் தந்து விட்டுத் திரும்பினேன்.
சென்னையில் பலருக்கு நான் கிளம்புவது கூடத் தெரியாது. எல்லோருக்கும் மயில் அனுப்பணும்.
பால்காரர் கூட அம்மா நாளைக்கு இங்கயா வெளியூரானு கேக்கிற நிலைமையாகி விட்டது.
பத்திரிகை போடுபவரோ ஊர் விலாசம் கொடுங்கம்மா அங்க அனுப்பறேன்னு நக்கலாகச் சிரிக்கிறார்.
ரெண்டு வீடு தள்ளியிருக்கிற சினேகிதி கூட, கல்யாணத்துக்கு உன்னைக் கூப்பிடணும்னு நினைச்சேன்,நீ ஊர்ல இருப்பியோ, பறப்பியோனு விட்டு விட்டேன் என்கிறாள்.!!!!!
என்ன செய்யறதுப்பா.
இப்படி ஒரு திரிசங்கு நிலைமை:))
ஆனா ஒண்ணு எங்க போனாலும் இணையம் நம்மைக் கைவிடாது. அவிங்க நம்மளை எப்பவும் போலக் கண்டுப்பாங்க. ஹ்ம்ம்.அதுதான் நமக்கு ஆறுதல்.
பார்க்கலாம்பா.

Thursday, May 15, 2008

299,பாதைகள்




























சௌண்ட் ஆஃப் மியூசிக் படம் 1965ல் நாங்கள் பார்த்தோம்.


அது ஒரு காதல் கதைதான். இருந்தாலும் எடுக்கப்பட்ட விதம் மனதை இனிக்க வைக்கும்.


எல்லாப்பாடல்களும் சூப்பர் ஹிட்தான்.

அதில் ஒன்றே ஒன்று ரொம்ப சீரிய அர்த்தத்தோடு எல்லாக் காலத்துக்கும் பொருத்தமா இருக்கிறது.

யூ டியூபில் போட்டுக் கேட்கும் போது இப்பவும் உற்சாகப் படுத்தும் விதத்தில் தான் ஒலிக்கிறது.

அதன் தமிழ்ப் பொருளை

முடிந்தவரையில் எனக்குப் புரிந்த வகையில் கொடுக்கிறேன்.


//மலைகள் எல்லாவற்றையும் ஏறிவிடு.

ஆறுகள் குறுக்கிட்டால் பாலமிடு

எந்த ஒரு பாதையோ சாலையொ உயரமோ பள்ளமோ

விடாமல் தேடு.

வானவில் வண்ணங்களில் வாழ்க்கைக் கனவை நாடு.எந்தக் கனவு உன் ஆழ்ந்த ஆசைகளையும் உயர்ந்த எண்ணங்களையும் மேன்மைப் படுத்துகிறதோஅதை விடாமல் தேடிப் பூர்த்தி செய்.//

இந்தப் பாடல் படத்தின் கதாநாயகியை ஊக்குவிப்பதாக, அவள் இருக்கும் கன்னியர்கள் மடத் தலைவி பாடுவதாகப் பின்னணியில் ஒலிக்கும்.

வாழ்வின் கஷ்ட நஷ்டங்களைப் பொருட்படுத்தாமல்முன்னேற ஒரு பாசிடிவ் எண்ணம் மனதில் வேண்டும் இல்லையா.

தன்னம்பிக்கை,உற்சாகம் இதுவே வாழ்க்கைக்கு வேண்டிய மந்திரங்கள்.
இதெல்லாம் எனக்கு நானே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.

கொஞ்ச நாட்கள் முன்னால் வெளிவந்த பாடல் ''வெய்யிலோடு விளையாடி'' பாட்டும்,''வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல் ''பாட்டும் இந்தப் பாடலைக் கேட்கும் போது நினைவுக்கு வரும்.


Wednesday, May 14, 2008

300,அற்றைத் திங்கள்!!































Posted by Picasaபோன வருடம் மே மாதம் இந்த டுலிப் கண்காட்சிக்குப் போயிருந்தோம்.
வலைப்பூக்கள் என்று சொல்கிறொம்.
இந்த டுலிப் பூக்களை என் வலைப்பதிவின்
முன்னூறாவது பூவாக சமர்ப்பிக்கிறேன்.:)

Saturday, May 10, 2008

298,அம்மாவுக்கு என்ன கொடுக்கலாம்?

அம்மா, அன்னையர் தின வாழ்த்துகள். உனக்கு 50 வயது ஆனபோது ஒரு ஒன்பது ரூபாய்க்கு வாங்கின விக்டோரியா தொழில் கழகத்தில வாங்கின கூடை கொடுத்தேன். அதில பேரனோட பொம்மைகளைப் போட்டுக் கொள்வதாகச் சொன்னாய்.

உனக்குப் பிடித்தவங்களோட படமெல்லாம் பதிவில போட்டு விடுகிறேன்.



மேல இருக்கிற மூல ராமன் படம் உனக்குப் பிடிக்கும் அப்பாவுக்கு ராமனைப் பிடித்த ஒரே காரணத்தினால்.அதனால் உனக்குக் கொடுக்கிறேன்.


பத்மினி ராகினி நாட்டியம் நீங்கள் புரசைவாக்கத்தில் இருந்தபோதே பார்த்ததாகச் சொல்வாய்.
அவர்கள் போடும் சட்டை (ப்ளௌஸ்) டிசைனில் ஒரு வெல்வெட் துணியில் மாங்காய் சரிகை வைத்துத் தைத்த உடை ஒன்று தயாரித்துக் கொடுத்தாயில்லையா....




எம்.எஸ் அம்மா குரல் உனக்குத் தெய்வத்தை வழிகாட்டுகிறது என்று சொன்னதால் உனக்கு அவங்க பாடின பாடல்களை வாங்கிக் கொடுத்தேன் ஒரு வருடம்.






வைஜயந்திமாலா நடித்த படம் பெண். அதில் வரும் "அகில பாரதப் பெண்கள் திலகமாய் அவனியில் வாழ்வேன் நானே ''என்ற பாட்டை என்னை அடிக்கடி பாடச் சொல்வாய்.
மனமிருந்தால் பாடிக்காட்டுவேன்.
''இத்தனையும் நீ செய்தும்,நான் உன் அருகாமையை விரும்பிய அந்தக் கடைசி நாளில் நீ எங்கே இருந்தாய்னு ''
நீ கேட்கிற மாதிரி
எனக்கு அடிக்கடி தோன்றுகிறது.
அம்மா மன்னித்துவிடு.
வாழ்க அன்னையர்கள்.
அவர்கள் பெற்ற பெண்கள் அந்தப் பெண்களின் செல்வங்கள். தொடரட்டும்
பரம்பரை. அன்பும் அறனும் எங்கும் தங்கட்டும்.






Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

297,அன்னை,அம்மா,மாயி,ஆயா வாழ்த்துகள்

அகில உலக அன்னையரனைவருக்கும் வணக்கம்.
இந்தத் தமிழன்னைக்கும் வந்தனம்.உன்கண்களில் ஆனந்தம்பொங்காட்டும்
ஏசுவைஈன்று உலகத்துக்க்கு விட்டுக்கொடுத்த அம்மா.


நாளைய அம்மாவா?பிரதமமந்திரியா,விண்ணுலகமங்கையா.......



கனியாகாமல் அன்னையான பானுமதி





நம்ம் அன்னைதுர்கா.




பாண்டிச்சேரி அம்மா.
எல்லோரும் நமக்குக்காவலிருந்து வாழ்த்தட்டும்..
அன்னையர் தினா வாழ்த்துகள்.
மே 11.(மற்ற எல்லாதினங்களூம் க்கூடத்தான்)






Thursday, May 08, 2008

296,மாறுவது,, இயற்கையில் இல்லை

நாம் பிறக்கும்போது சில குணங்களுடன்தான் பிறக்கிறோம்.
உற்றார் ,ரத்தபந்தங்களின் சாயல் படியும்.

வளர்க்கப் படும் விதத்தில் மாறுபாடுகள் ஏதும் இல்லையானால் குழந்தைகளின் குணங்களிலும் மாற்றம் இருப்பதில்லை.
முதலில் பிறந்தவனுக்குச் செல்லம் கடைசியில் பிறந்தவளுக்குச் செல்லம்.

நடுவில் பிறந்ததற்கு ஒண்ணும் கிடையாது என்பது வழக்கமான நாட்களும் உண்டாம்.

அப்படிப்பட்டவர்கள் வாழ்வில் ஏதாவது முனையில் ஜெயித்துக் காண்பிப்பதும் உண்டு.
மற்றவர்கள் மேல் காட்டம் கொள்பவர்களும் உண்டு.

அப்படிப்பட்ட ஒரு மனிதரை அண்மையில் சந்தித்தேன்.
அவரும் அந்தக் காலத்திலேயே அரபு நாடுகளுக்குச் சென்று செல்வம் சேர்த்து

இராக்கியப் போரின் போது தாயகம் திரும்பியவர்.

அவர்கள் நாடு பஹ்ரெயின், தாக்கப்படலாம் என்கிற நிலையில்,
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் உழைத்துக் கிடைத்த சொத்துகளைக் காப்பாற்றிக் கொண்டு நாடு திரும்பினர் அவரும் மனைவியும் ஒரு பெண்குழந்தையும்.

அந்தப் பெண்ணையும் திருமணம் செய்து கொடுத்து இரண்டு வீடுகள் இரண்டு கார்கள் என்று வசதியாகத் தான் இருக்கிறார்.
அவருடைய தாய் மிக வயதானவர்.

இவருடன் சேர்த்து இன்னும் ஐந்து பிள்ளைகளும் இரண்டு பெண்களும்.
நல்ல திட ஆரோக்கியத்துடன் நன்றாக இருக்கிறார். நல்ல உழைப்பாளி.

அதே பங்களூருவில் தனி வீட்டில் இன்னோரு வயதான அம்மையாரோடு வாழ்ந்து வருகிறார்.
அவருடய ஒரே வருத்தம் தன் இரண்டாவது மகன் தன்னை வந்து பார்த்துப் பேசுவதில்லை என்பதுதான்.

இந்த அம்மாவையும் பார்த்தேன், அவருடைய மகனையும் சந்தித்தேன்.
மகனிடம் பேசும்போது, தன்னை அம்மா சரியாகப் பேணவில்லை, அப்படியிருந்த போதும் தன் முயற்சியில் முன்னேறி இந்த செழிப்பான நிலைமையில் இருப்பதைச் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொண்டார்.

அவருக்கும் இப்போது அறுபதுக்கு மேல் வயதாகிறது.
இரண்டு வீடு தள்ளி இருக்கும் அம்மாவை ஏன் பார்ப்பதில்லை, என்ற கேள்விக்கு அவர் சொல்லும் ஒரே பதில் ,மற்றவர்களை எஞ்சினீயர்களாகவும் ,வைத்தியர்களாகவும் தன் பெற்றோர் படிக்க வைத்ததாகவும் தன்னை மட்டும்,

வெறும் பட்டதாரி நிலையில் கைவிட்டதாகவும் சொல்லித் தன் தீரா ஆற்றாமையைக் காட்டிக் கொண்டார்.

எனக்குத் தெரிந்தவரையில் அவர்கள் குடும்பத்தில் மிக்க நெருக்கமாகப் பழகியவள் ஆனதால், ரெண்டெட்டில் இருந்த ,அந்த அம்மாவைப் பார்க்கும் போது இந்த ஆதங்கத்தைப் பற்றிக் கேட்காமல் இருக்க முடியவில்லை.

அவர்கள் வீடு மிகவும் சிறியது. பழைய நாட்களில் வாங்கின வீடாகையால்
குளிர்ச்சியான செண்பகமரங்கள் இரண்டும்,
மல்லிகைச் செடிகள் பன்னீர்ப் புஷ்பங்கள் என்று வெகு அழகாகக் காட்சி அளித்தது.

அந்த முதிய நிலையிலும், வாயில் கதவைத் திறந்ததிலிருந்து
எங்களை உட்கார வைத்து உபசரித்துப் பேசிய இரண்டு மணிநேரமும் முகத்தில் புன்னகை மாறவில்லை.

எப்படி இந்த அம்மாவுக்கு அந்தப் பிள்ளை????? என்று தோன்றிக் கொண்டே இருந்தது.

கேட்கவும் கேட்டேன். எல்லாமே சரியாக இருந்துவிட்டால் எப்படிம்மா.
அவனுக்குச் சொல்லாத ரகசியம் இன்னும் ஒண்ணு இருக்கு என்று சிரிக்கிறார்.

ஓ, ஏதாவது தத்து எடுத்த பையன் என்ற கதையோ என்று எனக்கு மனதில் ஓடியது.

ஏனெனில் நான் குறிப்பிட்ட அந்த மனிதர் ''எங்க அம்மா என்னை மட்டும் தவிட்டுக்கு வாங்கிவிட்டாள்(அதாவது பஞ்ச காலத்தில் குழந்தையைத் தவிட்டுக்குக் கூட பண்டமாற்றாக விற்று விடுவார்களாம்.) என்று அடிக்கடி குறைப் படுவார்.;)


என் முகத்தைப் பார்த்து ருக்கு அம்மா(தாய்) நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லைம்மா.
இவன் எஸ்.எஸ்.எல்.சி படித்து வாங்கின மதிப்பெண் ரொம்பக் குறைவு.

இவன் அப்பா இவன் வாங்கின மார்க்கைப் பார்த்து அவனை அடிக்காத தோஷம் தான்.
நாந்தான் அப்போது எங்கள் பக்கத்து வீட்டில் விவேகானந்தா கல்லூரியில்
பேராசிரியராக இருந்த ஒருவரிடம் சொல்லி இவனுக்குப் ப்ரீயூனிவர்சிடி வகுப்பில் இடம் வாங்கிக் கொடுத்தேன்.

அதற்கப்புறமும் அவருடைய உதவியின் வழியாகவே அவனுக்குத் தெரியாமல் தனி வகுப்பு எடுக்க வைத்து முதுகலைப் பட்டமும் வாங்க வைத்தேன்.

இந்த செய்தியை அவன் காதுக்கு எட்டாமல் வைத்ததற்குக் காரணம்

அவனுடைய தாழ்வு மனப்பான்மை விலக வேண்டும் என்பதற்காக.

இப்போதும் அவனுக்கு மனக்குறை இருப்பதாகத் தான் நினைக்கிறேன்.
எந்த வழியில் அதைப் போக்குவது என்றுதான் தெரியவில்லை.

நீ ரொம்ப நாளையப் பழக்கம் என்பதால் சொன்னேன், மறந்தும் அவனிடம் இந்தக் கதையைச் சொல்லி விடாதே என்றார்.
உங்களுக்கு அவர் இப்படிப் பேசுவதில் வருத்தமில்லையா என்று கேட்டதில்
குழந்தை பேசினால் எனக்கேன்ன. அவன் இங்க வந்து போனால்
சந்தோஷமாக இருக்கும்.


இவ்வளவு பேரும் வந்துவிட்டுப் போகையில் இவன் மட்டும் வரவில்லை என்றால் வருத்தமாக இருக்கிறது. அவ்வளவுதான்.
நாங்கள் கிளம்புகையில் , போகும் போது ''இன்னிக்குத் தான் கிளறினேன். உனக்கு ஒரு டப்பா எடுத்துக் கொண்டு அவனுக்கு ஒரு டப்பா கொடு'' என்று
திரட்டிப்பால் இரண்டு டப்பர்வேர் பொட்டியில் அடைத்துக் கொடுத்தார்.

ஏதோ காரணத்தில் எங்கள் அம்மாவின் ஞாபகம் வர, கண் கலங்கிவிட்டது எனக்கு.

இருக்கிற அம்மாவைக் கொண்டாட அந்த மனிதருக்குத் தெரியவில்லையே
என்று பெருமூச்சு தான் வந்தது.

என்னைவிடப் பெரியவர் அவர். அறிவுரை சொல்லவா முடியும். இல்லை மனசில் இருக்கும் ஆழப் புதைந்து விட்ட எண்ணத்தை மாற்ற முடியுமா. தெரியவில்லை.

அந்த அம்மாவுக்கும் எண்பதுக்கு மேல் ஆகிவிட்டது.
அவளுக்கு மன நிம்மதி கிடைத்தால் நன்றாக இருக்கும்.

Saturday, May 03, 2008

295,திலகமா? வட்டப் பொட்டா:)


















இது ரொம்ப சீரியசான விஷயம்பா.
இப்போ யோசிச்சுப் பாருங்க. திருமணம் ஆகிறவரை ஒரு சுதந்திரம்.அதுக்கப்புறம் கொஞ்சம் பறி போகிறதா இல்லையா.



உண்மைதானே?



உடுத்துவது,அலங்காரம் செய்து கொள்வது,தூங்குவது விழிப்பது,வேலை செய்வதிலிருந்து எல்லாம் மாறும்.
பிறந்த வீட்டில் அரசாங்கம் செய்து விட்டு
புக்ககம் வரும்போது அவர்கள் விருப்பத்துக்கு நம்மை மாற்றிக் கொள்வோம். முக்கால்வாசி விருப்பமாகவே அவர்கள் முறைப்படி மாறுவோம்.



ஒரு மயக்கமான புதுமையானநாட்கள் :)





புதுப் புது மனிதர்கள், பரிசுகள்,பட்டாடைகள், விருந்துகள், அனுசரணையான விசாரிப்புகள் எல்லாம் அழகான உலகத்தில்நம்மைத் தள்ளும்.
அப்போது சரி சரி என்று எல்லாவற்றுக்குமே ஆமோதித்த பல விஷயங்களில்
இந்தப் பொட்டு விஷயமும் ஒன்று.



அந்தக் காலத்தில்(ஐய்யோ இன்னுமொரு மலரும் நினைவா!!!!) ஒரு பதினெட்டு வயது வரை தாவணி அனுமதிக்கப் பட்ட காலம்,
அப்போது பாவாடை ஒருகலர்,

மேலுடையாகிய தாவணி வேறு ஒருகலர்.
இது இரண்டும் இணைந்த வண்ணங்களில் ஒரு ரவிக்கை(ப்ளௌஸ்)


ஜார்ஜெட் தாவணிக்கு ஏற்ற வண்ணங்களில் சாந்துகள் வராதகாலம். வடநாட்டுப் பெண்கள் வைத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன்.

அதெல்லாம் எங்க அம்மாப்பாட்டி ஒத்துக்க மாட்டாங்க.

ஒரு மை இட்டுக்கலாம். சாந்து வட்டப் பொட்டு வைத்துக்கலாம். அவ்வளவுதான் அலங்காரம்.

ரொம்ப நாள் சாயந்திர வேளையாப் பார்த்துப் பாட்டியை வம்புக்கு இழுத்து மையில் தோய்த்த திலகம் அதான்பா அந்த நீட்டமா சரோஜாதேவி சாவித்திரிலாம் வச்சுப்பாங்களே அது மாதிரி(அந்த சைஸ் இல்ல, சின்னதா)
வைத்துக் கொள்ள அனுமதி வாங்கிக் கொண்டேன்.




தோழிகள் அனைவரும் இந்தத் திலகம்தான் சூப்பரா இருக்கு. மாத்தாதே,
என்று ஒரே முடிவாகச் சொன்னதும் அப்படியே இருந்தேன். வந்தது அதுக்கு வேட்டு.

ஒரு வருடச்சென்னை ஆட்டம்(கல்லூரிக் கதை பியுசி) முடிந்து மதுரைக்குத் திரும்பி, அதுக்கப்புறம் நடந்த கதையெல்லாம் எல்லாருக்கும் தெரியும்.


கல்யாணத்துக்கு முத நாள் மாப்பிள்ளை அழைப்புக்கு தயாராகிக் கொண்டிருந்தபோது,


மணப்பெண் அறைக்கு...அதாவது என் அறைக்கு என் குட்டி (ஆறு வயது மூத்தவர்) நாத்தனார் வந்தார்..



என் அலங்காரம் எல்லாம் ஓகே சொல்லிவிட்டு, அந்தத் திலகம் மாதிரி இட்டுக் கொண்டிருக்கிறாயே அது மட்டும் வேண்டாம். நம்ம வீட்டு சம்பிரதாயம் கோபுரம் மார்க் ஆறாம் நம்பர் கத்திரிப்புக் கலர் குங்குமம் தான்.

இதோ எடுத்துக்கோ.

(குங்குமம் ஒட்டணும்னா அதுக்கு முன்னாடி கோந்து ஒட்டணமான்னு கேட்கிற கேஸ் நான்:) )



மேடைக்கு வரும்போது வட்டமா குங்குமம் இட்டு வரச் சொல்லி ஆஜிப் பாட்டி சொன்னதை ஒப்பித்து விட்டு ஓடி விட்டார்.

அன்னிக்கு மாறினவள் தான் நான். எங்க பாட்டி என்னைப் பார்த்து அசந்து போயிட்டார். வேற ஒண்ணுமில்ல குங்குமம் வைக்கிறேன் பேர்வழினு அதை நெத்தியில் வைத்து அழித்து வைத்து அழித்து நெத்தியே ஒரு சிகப்பாக மாறி விட்டது.





எனக்குத் தோழிகளாக இருந்த ரெண்டு மூணு பெண்கள், ''அய்ய கல்யாணம் செய்யணுமுன்னாப் பொட்டு கூடவா மாத்த சொல்வாங்க?''

என்று அவரவர் இஷ்டத்துக்கு என்னைக் கலாய்க்க, அந்தப் பரிகாசத்தையெல்லாம் பொருட்படுத்தாமல் அவங்க சொன்ன மாதிரி வேஷம் கட்டி தஸ்ஸா புஸ்ஸா புடைவையோடு,ஜிமிக்கிகள் ஆட வந்ததும்,

இன்னோரு விண்ணப்பம் வந்தது. மாற்றுப் புடவை உடுத்தும்போது
ஜிமிக்கிகளையும் மாட்டலையும் கழட்டி வைக்கும்படி;0)




அதற்குக் கொஞ்ச நாட்கள் முன்னால்தான் கர்ணன் படம் பார்த்திருந்தேனா
... அந்தச் சோகத்தோட ,கண்ணாடியில் பார்த்தபடி மண்டையில்(இந்திரன்,குந்தி,
சூரியன் என்று சினி நட்சத்திரங்கள் பாட) பிஜிஎம் ஓட,அவைகளையும் கழட்டி வைத்தேன்.

இந்த பில்ட் அப் எல்லாம் எதற்குனு கேட்டீங்கன்னா மீண்டும் ஒரு இருபது வயது வேடம் போடலாமா வேண்டாமானு யோசனை வந்திருக்கு. நீங்களே சொல்லுங்க எது உசத்தி? வட்டப் பொட்டா, நீட்டத்திலகமா:)))