Blog Archive

Friday, May 28, 2010

மீண்டோம் சென்னை...

 
மதிய தூக்கத்துக்குப் பேத்தி தயார் ஆனதும் ''பாப்பா ,அப்புறமா பார்க்கலாம்' என்று பயந்துகொண்டே சொன்னோம். ''நின்னி தாச்சி.ஈவனிங் வவ்வா'' என்று அவளும்
சம்மதம் சொல்ல அறைக்கதவு சாத்திக் கொண்டது.
அதாவது நான் தூங்கப் போகிறேன். சாயந்திரம் வருவேன் என்கிற அர்த்தம்.:)

சத்தம் போடாமல் பெட்டிகளை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டோம்.
எழுந்ததும் எங்களைத் தேடுமே என்கிற பயம்.
இன்னும் கொஞ்சம் மாதங்கள் ஆகுமே என்கிற மனக் கிலேசம், எல்லாம் கலந்து
எங்களை மௌனமாக்கியது.

வெளியில் வந்து கண்கூசும் ,சுட்டெரிக்கும் பாலைவெய்யிலைக் கண்டதும் ,ஆளைவிடு !
சென்னை இதற்கு எவ்வளவோ தேவலை என்று விமான நிலையம் வந்தடைந்தோம்.
அதி நவீன புதிய டெர்மினல்.வரிசையில் நிற்கவேண்டிய அவசியமில்லாத போர்டிங் ரொடீன்.

212ஆம் எண் கொண்ட எமிரெட்ஸ் வாயிலுக்கு வந்ததுதான் கையில் தண்ணீர் இல்லை என்று தெரிந்தது.
உடனெ வீட்டு எஜமானர் நான் வாங்கி வரேன்,நீ வேணுமானால் ட்யூட்டி ஃப்ரீல ஏதாவது வாங்கிக் கொள் என்றதும், பழைய அனுபவங்கள் காரணமாக நான் நாற்காலியை விட்டு நகரமாட்டேன், நீங்கள் போய் வந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டேன்.

அவரும் போனார். போனார்.போனார்.
என்ன வாழ்க்கையின் ஓரத்துக்கே போய் விட்டாரா என்று நான் பயப்பட ஆரம்பிக்கும்போதே லாஸ்ட் அண்ட் ஃபைனல் கால் ஃபார் போர்டிங் சென்னை ஃப்ளைட்'' ஒலிபெருக்கியில் வந்தது.
அங்கு நின்றுகொண்டிருந்த பெண்ணிடம் ''அம்மா, எங்க வூட்டுக்காரர் தண்ணி பிடிச்சாரப் போயிருக்காரு. நீ கொஞ்சம் பொறுமையா இரு தாயீ'' ன்னு சொல்லிட்டு நான் ஒரு காலில் தவம் இயற்ற ஆரம்பித்தேன். நிமிடம் நகர எனக்கு துடிப்பு அதிகமாகியது. இப்போது அந்த லௌஞ்சில் நான் மட்டுமே திக்கற்ற பார்வதியாக நின்று கொண்டிருந்தேன்.

இதென்னடா கஷ்டகாலம், ஓரோரு தடவையும் நாந்தானே தொலைவேன். இப்ப இவர் எங்க போனார்.எங்கபோய்த் தேடுகிறது. இந்தப் பொண்ணு வேற மகா க் கேலியாக என்னைப் பார்க்கிறாள். ''ஹி ஹேஸ் டு கம் நௌ''என்று மிரட்டல் அவள் கண்ணில்.
சடக்கென்று எதிர்வரிசையில் நடக்கும் உருவம் ரொம்பப் பழகினதாகத் தெரியவே
நம்ப முடியாத வேகத்தில் அந்தத்திசையில் பாய்ந்தேன்.
சத்தியவான் சாவித்திரி கூட அப்படி இரைச்சல் போட்டு இருக்க மாட்டாள்.
இவர் பெயரைச் சொல்லிக் கையைத் தட்டி..ம்ஹூம், மனுஷன் திரும்பணுமே!!

அவர் பாட்டு எண்களைப் பார்த்துக் கொண்டே எதிவரிசையில் போய்க் கொண்டிருக்கிறார்.
இந்தச் சமயம் ஒன்று சொல்லியே ஆகணும். அவருக்கு எப்பவுமே ஏகாக்கிர சிந்தனை தான்.
ரிஷப ராசி. ஒன்றில் முனைந்தால் வேறு எதுவும் அவர் சிந்தனையைக் கலைக்க முடியாது!!!

ஒரே எட்டு. இருபது நொடிகள் தான் ஆகியிருந்தது. அவர்கையைப் பிடித்துவிட்டேன்.
ஏனோ சுஜாதா சாரின் பத்துசெகண்ட்.....கதை நினைவுக்கு வந்து தொலைத்தது:)
எப்பவுமே யாராவது மேலெ இடிப்பதோ கையைப் பிடிப்பதையோ விரும்பாத அவர், படு கோபமாக இன்னோரு கையை என்னைப் பார்த்துத் திருப்பினார்.
சாமி, நாந்தான்பா எங்க போறதா நினைப்பு, கேட் இந்தப் பக்கம்னு அவரைத் திருப்பினேன்.
ஓ,இங்கேயா இருக்கு. நான் கீழ் தளத்துக்குப் போய்த் தண்ணீர் வாங்கிக் கொண்டு வந்து தப்பான படிகளில் ஏறி விட்டேன் போலிருக்கிறது''என்றவரைப் பார்த்து
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

என் முகத்தைப் பார்த்துப் புரிந்துகொண்டு,சரிம்மா என்ன ஆச்சு இப்ப, ப்ளேனைக் கிளப்பிட்டானா? என்று சிரிக்கிறார்.
கஷ்டப்பட்டுக் கோபத்தை அடக்கிக் கொண்டு அவர்கையிலிருந்து
தண்ணீரை வாங்கி குடித்துக் கொண்டே எங்கள் போர்டிங் கேட்டு'க்கு வந்தேன்.
அவரும் பாஸ்போர்ட்,டிக்கட் எல்லாவற்றையும் காட்ட ஒருவழியாக ,
விமானத்தில் போய் உட்கார்ந்தோம்.
இதில் சுவை என்ன வென்றால் எங்களுக்கு அப்புறமாக ஐந்து நபர்கள் வந்ததுதான்.:)

பற்றாததற்கு விமானம் பல தடவை. கீழே இறங்கி,குதித்து,ஆடி எங்கள் பயணத்தை இன்பமாக முடித்து வைத்தது.
வந்துட்டோம்பா.:)



எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

Sunday, May 23, 2010

நன்றி, மீண்டும் வருகிறோம்














எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa
அமீரகம் வந்ததும் கிளம்புவதும் உடனே உடனே நடப்பது
போலத் தோன்றுகிறது;)

அறிந்தே நடைபெறும் வாழ்க்கை நாடகம். எதுவுமெ சிறிய அளவில் இருந்தால்
இனிமையாக இருக்கும் என்பதற்கு இந்த விடுமுறை ஒரு உதாரணம்.

சௌகரியம்,வாகன வசதி,வாசலில் கதவைத்தட்டித்
தொந்தரவு செய்யாத விசாரணைகள்,
படிக்க இன்னும் நேரம்,எல்லாவற்றுக்கும் மேல்,
எதிர்பார்க்காமல் அன்பு வழங்கும் மழலை.
வந்தபிறகு ஒரெ ஒரு அபுதாபிப் பதிவர் அனன்யா மஹாதேவனை இரண்டு தடவை சந்திக்க முடிந்தது.
மற்றுமொரு இனிய நட்பு ஹுசைனம்மா. பார்க்க முடியவில்லை. இருந்தும் தொலைபேசியிலியே

அன்பும் பாசமும் நிறைந்த வார்த்தைகளால் மனம் இனிமையானது.
இங்கே இருந்து கொண்டு இணையத்தில் சாதனை
பதித்திருக்கும் ''மனொ சாமிநாதன்'' அவர்கள்.

ஜலீலா,ஸாதிகா இவர்கள் அறிமுகமும் கிடைத்தது.
பழைய நண்பர்கள் பினாத்தலார் அவர்களிடம் தொலைபேச முடிந்தது.
தொலைபேசியிலும் கோபிநாத்தைப் பிடிக்க முடியவில்லை:)
மற்றவர்களின் எண்கள் என்னிடம் இல்லாததால் அவர்களிடமும் பேச முடியவில்லை.

பேசாவிட்டால் என்ன. நண்பர்கள் எப்பொழுதும் நண்பர்கள் தான்.:)
வருகிறேன் நண்பர்களே. கடவுளின் இஷ்டப்படி
மீண்டும் பார்க்கலாம்.

Tuesday, May 18, 2010

சோலைவனத்தில் ஒரு நாள்


Add caption








எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasaவெள்ளிக்கிழமை
என்றால் எப்படித்தான் தெரியுமோ இந்தக் குட்டிப் பொண்ணுக்கு!
அப்பா,தாதிர்ர்ர்,கீக் பார்க்! 
தாத்தி நீயும் வடியா,தாத்தாவும் வா.
பக்கத்தில் இருக்கும் க்ரீக் பார்க்குக்குக்(creek park) காரில்
அப்பாவும் தானும் போகும்போது எங்களையும் அழைக்கிறாள்.

மிகவும் வெய்யில் ஏறும் முன் நாங்கள் போய் வந்த நந்தவனம்
உண்மையிலியே வெகு அழகாகக்  காப்பாற்றப் பட்டு வருகிறது.
நல்ல பராமரிப்பு.
நிழல் தரும் மரங்கள்.
கீழே உட்கார பச்சைப் புல்வெளிகள். மற்றும் என்னை மாதிரி முழங்கால் வாதம்,
பிடிவாதக் காரர்களுக்கு உட்காரத் தோதாக சாய்மானங்கள்.
கூடவே பறக்கும் மைனாக்கள் . ஹோபோ எனும் மரங்கொத்தியின் உடல் அமைப்புக் கொண்ட ஒரு பறவை.,புறாக்கள்.
சிட்டுக் குருவிகள்.
நம்ப முடியாத ஒரு நீலக்கலர் வானம்.

இந்தப் பார்க்குக்குள் நுழைய ஒரு டிக்கெட் 5 திரம் என்று நினைக்கிறேன்.
அந்தச் சீட்டைக் கொடுப்பவர் சுதேசி.குளிரூட்டப்பட்ட அறை.

வெளியே வேலை செய்து கொண்டிருப்பவர்கள் ,நம் ஊரும் ,பக்கத்து ஊர்களிலும்
இருந்து வந்தவர்கள்.
(சென்னையில்)
எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வரும் நாகேஸ்வர ராவ் பார்க் ஊழியர்
ஒருவரின் முகத்தில் இருக்கும் சந்தோஷமோ,
செடிகளின் மேல் அவர் காட்டும் பாசமோ,
துளியும் காணப்படாத இறுகிப் போன முகங்கள்.
காரணம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. தெரிந்த ஒன்றுதான்.

இந்தப் பாலைவன வெய்யிலில் இந்த மாதிரி ஒரு பசுமையைக் காட்ட முடியுமானால்
எத்தனை உழைப்பும் பொருட்செலவும்
அந்த மண்ணுக்குள் போயிருக்க வேண்டும்.!!

திண்ணைப் பேச்சாக உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
நம் ஊரில் விளை நிலங்கள் விலைபோய்விட்டன.
இவர்கள் ஊரில் தரிசுகள் விளை நிலமாகி வருகின்றன.
நம்மூரின் அறிவு, உழைப்பு இங்கே நல்ல விலைக்கு விற்கப் படுகிறது.


Sunday, May 09, 2010

அன்னையர் அனைவருக்கும் வாழ்த்துகள்




எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa
பதிவுலக பாசமிகு அன்னையருக்கும் அவர்களைப் பெற்ற
அன்னையருக்கும்,சுற்றம்,பந்தம் என்று அனைத்து அம்மாக்களுக்கும்,
இனிமேல் அம்மாவாகப் போகிறவர்களுக்கும்
எல்லோருக்கும் என் மனம் கனிந்த அன்னையர் தின வாழ்த்துகள்.

அன்னையுள்ளம் கொண்டு நம்மப் பேணிக் காத்துக் கல்வி அளித்தப்
பள்ளியிலிருக்கும் கன்னித்தாய்களுக்கும்,
அண்டை வீட்டுக் குழந்தையயும் தன் குழந்தையாகப் பாதுகாக்கும்
அடுத்த வீட்டு அம்மாக்கள்,அத்தைகள் அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்.

பாட்டியான பிறகும், தன் தள்ளாத வயதில், பள்ளியிலிருந்து திரும்பும் பேரன்கள் பேத்திகளுக்கு
உணவு அளித்து மகிழ்ச்சியும் பாதுகாப்பும் தரும்
ஆயாக்களுக்கும்,அம்மம்மாக்களுக்கும், கூடவே உதவும் அன்னையுள்ளம் கொண்ட
தாத்தாக்களுக்கும் நமஸ்காரங்களும் வாழ்த்துகளும்.
தாயுள்ளம் உலகில் உயிர்த்திருக்கும் வரை குழந்தைகளும்
தழைத்தோங்கும் என்பதில் சந்தேகமென்ன,.!!

மே மாத சூரியன்


சூரியன் உதிப்பதற்கு முன்னால்

உதிக்கும் நேரம்

சூரியன் வந்தாச்சு
துபாய்  வந்த   நாள்   முதலாக  ஒரே  மேக  மூட்டம்.
இரண்டு நாட்களாகத்தான்   கொஞ்ச்சம்   தலை தூக்கினார்.:)
முடிந்த வரை எடுத்திருக்கிறேன் . எடுத்ததேன்னவோ பத்துப் பதினைந்து படங்கள்.  மற்றவற்றை  அடுத்த பதிவில் போடலாம் என்று யோசனை!
பார்த்து மார்க் போடுங்கப்பா:)


எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa