Blog Archive

Saturday, March 31, 2012

ஸ்ரீ ராமன் வருகிறான் பகுதி 2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 Posted by Picasaஸ்ரீ ராமசுவாமி கோவில் கும்பகோணம் போக வாய்ப்புக் கிடைத்தது ஒரு சம்பவம்.
எங்கள் அப்பாவுக்கு, சுந்தர காண்டம் ஒரு வாரத்தில் படித்து முடித்தால், தீராத பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கும் என்பதில் தீவிரமாக நம்பிக்கை.

உடல், மனம்,சுகம் என்று எல்லோருக்கும் வேண்டிய தருணங்களில் மிகவும் சிரத்தையுடன் ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை ஆரம்பித்து ஓரொரு நாளும் ஒன்பது அத்தியாயமாகப் படித்து அடுத்த வெள்ளிகிழமை சுந்தர காண்டம் பூர்த்தி செய்து ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகமும் படித்து முடிப்பார்.
அந்த வெள்ளியன்று இனிப்பு வகையறா ஏதாவது கண்டிப்பாக இருக்கும்.
அப்பா படித்து முடிக்கும் அழகும் அம்மா பக்கத்தில் இருந்து பக்தியோடு கேட்கும் அழகும், அப்பா உட்கார்ந்து இருக்கும் இடத்தின் அருகில் அனுமனுக்கு ஒரு இருக்கை போடப்பட்டு, கோலமிட்டு பழஙகள் சமர்ப்பிக்கப் பட்டு இருக்கும்.
ஓரோரு தடவையும் சீதை, ராமர் படும் துன்பங்கள் வரும் கட்டங்களைப் படிக்கும் வேளைகளில் எங்கள் அப்பா கண்கலங்காமல் படித்ததாக எனக்கு நினைவே இல்லை.

சீதா அசோகவனத்தில் ஸ்ரீராமனை நினைத்து கலங்கும் நேரம், அனுமன் ராமர் நாமத்தை உச்சரித்து அவள் கவனத்தைக் கவர்ந்து அவளை அமைதிவழியில் இருத்தி கணையாழி கொடுத்து,
சூடாமணி பெற்றுக்கொண்டு, அரக்கரை அழித்து,இராவணனிடம் வாதிட்டு, இலங்கையை தீக்கிரையாக்கி மீண்டும் சீதையம்மாவைப் பார்த்து ஆறுதல் சொல்லி, ராமலக்ஷ்மணரோடு வருவேன் என்று உறுதி கூறி,
மீண்டும் வானில் பாய்ந்து ஸ்ரீ ராமரை வந்து அடைகிறார்.
சீதையைப் பார்த்து வரும் அனுமனை ராமன் நெஞ்சாரத் தழுவிகொள்கிரார்.
இவ்வளவும் எங்கள் அப்பா படிக்கும்போது மீண்டும் அந்தக் காலத்துக்கே போன உணர்ச்சி வந்துவிடும்.
அதே இன்பம் அவர், திருராமர் சீதை பரத,லக்ஷ்மண சத்ருக்னன் அனுமன்,அங்கதன்,விபீஷணனுடன் நடைபெரும் பட்டாபிஷேக காட்சி மனத்தில் உறுதியோடு படிந்துவிடும்.
இந்தக் காட்சிதான் அப்படியே திரு இராமசுவாமி கோவிலில் கல்சிற்பஙகளாகக் கம்பீரமாகக் காணக் கிடைக்கிறது.
வேறு எங்கேயும் காணக்கிடைக்காத காட்சி இது.
மிகப்பெரிய சிலா ரூபங்கள் அரியணையில் ராமனும் சீதையும் வீற்றிருக்க, பரதன் குடை பிடிக்க,சத்ருக்கினனும்,இலக்குவனும், (சில படங்களில் இலக்குவன் கை கூப்பி நிற்பது போல் இருக்கும்) சாமரம் வீச
அனுமன் பக்கத்தில் ஒரு கையில் வீணையை மீட்டிக் கொண்டு( வழக்கம் போல் ராமாயணம் படிக்கவில்லை) காட்சி.
எவ்வளவு தரம் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கவைக்கும் அருமையான சிறப்பு மிக்க தரிசனம்.
இங்கெ நிகழ்ந்த அதிசயங்கள் எவ்வளவோ இருக்கலாம்.
நம்மைப் பாதிப்பது நமக்கு நிகழும்
நடப்புகள் தானே.
முன்பே சொன்னது போல் கும்பகோணம் முதல் டிரிப்பின் போது சாரங்கபாணியைக் கண்ட பிறகுப் பார்க்கப் போன,உணரப் போன அடுத்த அதிசயம் இந்த சாமி தான்.


நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று இடியுடன் கூடிய மழை.
இதில் என்ன அதிசயம் இருக்கிறது.? கோடை மழை எப்போது வேண்டுமானாலும் வரும், அது என்ன டிவி சானல் பார்த்து விட்டு வரலாமா வேண்டாமா என்று யோசிக்குமா, இல்லையென்றால் இந்த(நான்) அம்மா வருதே, இடியும் மின்னலும் இவங்களுக்கு ஆகாதே.
கண்ணூ காது மூடிக்கொண்டால் சாமியைப் பார்ப்பது எப்படி என்று எல்லாம் வருண பகவானுக்கு நினைவு இல்லை.

யேதோ நல்லவங்க கும்பகோண்த்துக்கு வந்துட்டாங்கன்னு பார்க்க வந்துட்டார்.(நீங்கள் இங்கே சிரிக்க உரிமை உண்டு)
சைகிள் ரிக்சாவில் இருந்து இறங்க முடியாதபடி பிரளய மழை.
ஒரே ஒட்டம் கோவிலுக்குள். (ஆமாம் ,நானும் ஓடினேன்.)!
உள்ளே சிற்பங்கள் வரிசையாக நின்றன. அறுபத்தினாலு கால் மண்டபம் வேறு. ஒவ்வொன்றிலும் அற்புதமான சிற்பங்கள்.
எந்த சிற்பி கொடுத்து வைத்தானொ, ராமனையும் சீதையையும் சேர்த்து வைத்துப் பார்க்கிறான். என்ன கருணை அவனைத் தேடி வந்ததோ.
ஸ்ரீ ராமனின் பரிவு அவனை அணைத்திருக்கும்.

எல்லா கற்களும் உயிர் பெற்று அங்கெ ராமன் புகழ் பாடின.
நமது மெயின் கதை நம்மளைச் சுற்றித் தான்.

அங்கெ சன்னிதியை அடைந்ததும் மஹா பெரிய இடி, மின்னலோடு நுழைந்தது.
அவ்வளவுதான் என் பக்தி பின்னடைந்தது. பயம் பிடித்தது.
அங்கே இருந்த பட்டாச்சாரியாருக்கு இந்த மழை பத்தி எல்லாம் பயம் இல்லை போல.
அவர் சாவதானமாக. பெரிய விளக்குகளை ஏற்றி ,ஒளி ஏற்றி எங்கள் எல்லோருக்கும் கர்பக்ருஹத்தைக் காண்பித்தார்.
என்ன அழகுடா ராமா நீ?
உண்மையான ராமராஜியத்தினுள் வந்து விட்ட உணர்வு.
உடனேயே எங்கள் அப்பாவின் குரல், காதில், பயம் வரும் போது சொல்ல சொன்ன பஞ்ஜாயுத ஸ்தோதிரம் நினைவு வருகிறது.
அங்கெயெ கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து விட்டேன்,.
என்னுடன் வந்த தம்பிகள்,அவர்களின் மனைவிகள்,குழந்தைகள் மற்றவர்கள் சுற்றிப்பார்க்கக் கிளம்பினாலும் எனக்கு மனம் வரவில்லை. இடி வேறு பயமுறுத்தியதால் அந்த தெய்வக் குடும்பத்தையே பார்த்து என் பயம் போக்க வேண்டினேன்.


(இப்போது சிரிப்பு வரலாம். அப்போது அதுதான் என்னை கவ்விக்கொண்டு இருந்தது .பயம். பயம். )
உடனேயெ மனதில் அச்சம் குறையத் தொடங்கினது. நம்ப முடிகிறதா.
அனலைசிங் இங்கே வேலை செய்யாது. முடியாது.
எனக்குக் கிடைத்தது ஒரு காப்பு.
ஒரு அம்மாவும் அப்பாவும் ஒரு குடும்பமே எனக்குக் கருணை செய்ததாக உணர்வு.
நான் என் நினைவுகளில் இருந்து நான் மீண்டபோது மழை
நின்று இருந்தது.
சுற்றுப் பிரகாரங்களில் எல்லாம் தண்ணீர். மின்னல் இன்னும் வெட்டிக் கொண்டுதான் இருந்தது. ஆனால் என் பயம் தான் வேறு எங்கோஒளிந்து கொண்டது.
வெளி சுற்று எல்லாம் ராமாயணக்காட்சிகள்.
ஒரே ராம மந்திரம் ஒலிக்கிறது.
நீங்களும் இந்த மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டாமா?
ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராமா.



Friday, March 30, 2012

ஸ்ரீராமன் வருகிறார்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

நாளை ஸ்ரீராமஜனனம்.
கொண்டாட்டத்துக்குக் கேட்கணுமா.
சுற்றியிருக்கும் அனுமன் கோவிலெல்லாம் கதாகாலாட்சேபங்களும்
கச்சேரிகளும்.

நமக்கு விஜய் டிவி தான் கோவில். அங்கே  ஒளிபரப்புவதுதான்
ராமராஜ்யம்.
வேளுக்குடி திரு கிருஷ்ணன் சொல்வதுதான் ராமாயணம்.

இப்போதும் பாட்டி சொல்வது கேட்கிறது. கால்ல செருப்பை மாட்டிக்கோ.
ஊர்ல உலகத்தில ஜனங்க சந்தோஷமா ஆஞ்சனேயர் கோவில் ராமர் பட்டாபிஷேகம்
பார்க்கப் போவதைப் பாரு.
அப்படியே வரவழியில  கீரைத்தண்டும் வாங்கிண்டு வா.

சொன்ன பத்து தடவைக்கு ஒரு தரம் போயிருப்பேன்:)
ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் மனித வாழ்கைக்கு மதிப்பு இல்லை.

பழங்கள் வாங்கிக் கொண்டு கோவிலுக்குள் நுழைவதற்குள் பல்லவராயர் நம்மைப் பதம் பார்த்துவிடுவார்.
இரண்டு நாட்கள் கழித்துப் போய் ராமா  
சுபஜனனம் ஆச்சா.
அம்மா சௌக்கியமா. தம்பிகள் சௌக்கியமா என்று கேட்டு வரணும்.

ஜானகி காந்தன் நம் எல்லோரையும் ரக்ஷிக்கட்டும்.
 

Wednesday, March 28, 2012

பாலைவன ரோஜாக்களும் பஞ்சகல்யாணியும்

 


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


பாலைவன ரோஜாக்களுக்கு ஏது  வாசம்
என்று நினைத்தே  காமிராக்களுக்குள் அடைத்தேன்.

மக்கள் தொலைக்காட்சியில்
வேறுவிதமாக விளக்கினார்கள்.
இந்த ரோஜாக்களுக்கும் வித வித வாசனைகள் உண்டாம்.
அதற்காக  ஒரு இணைய தளமும் இருக்கிறது.
www.adeniumsindia.com

இதில்  இந்த அழகான செடிகளை வளர்ப்பது,  உரமிடுவது,ஒட்டுச் செடிகள்
உற்பத்தி செய்து பலவித வாசனைகளைக் கொண்ட
மற்றவகை  ரோஜாக்களை   உற்பத்தி செய்வது பற்றியும்
விரிவாக க் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
நம் பதிவர்களில்  பலருக்கு தோட்டக்கலையில்
மிகவும் ஆர்வம் இருப்பது தெரிந்ததே.
அதுவும்  டெல்லி,   ஜெய்ப்பூர்  பகுதிகள்,
அஹமதாபாது போன்ற வெயிலும்   குளிரும் அதிகமாக
இருக்கும் இடங்களிலும் இதன் வளர்ச்சி  அபரிமிதமாக இருக்கும் என்றும் விவரித்துச் சொன்ன அம்மா, மற்ற இடங்களிலும் வளர்க்க உபயோகமான குறிப்புகளைக் கொடுத்தார்கள்.

இந்தப் பதிவும்   நண்பர்களுக்குப் பயன்படும் என்று
நினைக்கிறேன்.

பஞ்சகல்யாணிக்கு என்ன வேலை என்று கேட்காதீர்கள். அது படிக்க வந்திருக்கிறது   செயிண்ட் லூயிஸ் நகரத்திலிருந்து.:)
Posted by Picasa

Saturday, March 24, 2012

பங்குனி வந்து பத்துநாட்கள் ஆச்சு:)

ஸ்ரீஆண்டாள்   கண்ணாடி மண்டபத்தில்
ஸ்ரீகருடன்
பங்குனி உத்திரம்


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இன்று  திரு வேளுக்குடி  அவர்களின்
உரையை விஜய் டிவியில் கேட்டதும்
உடனே   பறந்து ஸ்ரீரங்கம் போக ஆசை.

நம் கருடன் ரங்கமன்னாரை விட்டு வரமாட்டார்.
இருக்கவே இருக்கிறார் கூகிளார்.

கண்ணார மனமார  சேவித்துக் கொள்ளலாம்.

Posted by Picasa

Friday, March 23, 2012

அனைவருக்கும் உகாதி மங்கள வாழ்த்துகள்

 


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அன்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த
யுகாதி தின  வாழ்த்துகள். எல்லா வளங்களும் பெற்று அனைவரும் இன்புற்று இருக்கவேண்டும்
Posted by Picasa

Saturday, March 17, 2012

டிஸ்கி பதிவு (சென்ற பதிவுக்கான பின்னுரை)

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 நெல்லைக் குசும்பு  என்பதெல்லாம் ஒரு தனித்துவமான குணம் இல்லை.
எல்லா ஊர் மக்களிடமும் இருப்பதுதான்.

ஒருத்தரை ஒருத்தர் விமர்சிக்க, சிலசமயம் புண்படுத்தப்  பலசமயம் கேலிகாட்ட
இந்தக் குசும்பு என்னும் சிறு   கருவி பயன்படும்.

இதில் எல்லா ஊர்களிலும் காணப்படும் குணம்தான். தஞ்சைக் குசும்பு பற்றிக் கேட்டால்  நம் கீதாசாம்பசிவம் சொல்வார்கள்.
கோவையில் நான் கண்டதெல்லாம் நட்புதான்.நல்ல மரியாதை.

மற்ற ஊர்க்காரர்களுலும் மிகுதியாக நல்லவர்களையே தான் கண்டு பழகி வந்திருக்கிறோம்
சில மனிதர்கள் இந்த ஊரென்றெல்லாம் சொல்ல முடியாது.
ஊரென்ன  செய்யும். அவர்கள்
பேச்சில் அடக்கிவாசிக்கப்பட்டாலும் பீறிட்டு வரும்  அடர்த்தியான வார்த்தைகள். கூராயிருக்கும்
பென்சில் முனை போல.
எனக்குத் தெரிந்த  வட்டத்தை  மட்டும் சொல்கிறேன்:)

நாம் ஒதுங்கிப் போனாலும் மேல பாய்ந்துலேசாகக் கீறும்:)

இந்த மாதிரி ஒரு சம்பவத்தைத் தான் வேடிக்கையாக எழுத இந்தத்
திருமணத்தில் நடந்த மைக்கூத்தைத் தேர்ந்தெடுத்தேன்.
ஒன்றுமில்லாத  சின்ன விஷயங்களுக்கெல்லாம் மனக்கசப்பை
சம்பந்தமில்லாதவர்களே  கிளப்பிவிடுவார்கள்.
அதையும் மீறிச்  சுமுகமாக நிறைவேறும் சம்பவங்கள் அழகு.
யாராவது என்ன ஊரைச் சேர்ந்தவர்கள்  என்று கேட்டால் ,
பூர்வீகம்  திருநெல்வேலி என்று சொன்னாலும் தொடர்பு விட்டு நிறைய நாளாச்சே.
எனக்குத் தெரிந்து  எங்க அப்பாவின்  நமட்டுச் சிரிப்புதான் நல்ல குசும்பு.:0)
அதவும் அம்மாவைக் கேலி செய்து அம்மா முகம் சிவக்கவைத்துவிடுவார்.:)

அதனால்  ஒரு நல்லவார்த்தையைத் தப்பாகப் புரிந்தவரைப் பற்றி எழுதப் போய் நேற்றைய பதிவு வந்துவிட்டது.
எங்க ஊர்


மதுரைன்னு சொல்லலாம் என்றால் பெரியவர்கள் இருந்தவரை அது  சொந்தம்.

எல்லாம் விட்டுச் சென்னைக்கு வந்தே37  வருடங்கள் ஆச்சு.
இதில் நமக்கு யாரோட குசும்பும் ஒட்ட வாய்ப்பே இல்லை.

யாரோ திருநெல்வேலிக்காரர்,  ஏதோ ஒரு சமயத்தில் ஒரு குடும்பத்தில்
தகறாரு  செய்துவிட்டால்  நெல்லை முழுவதும் விஷமக்காரகள் என்று
சொன்னார்  பாதிக்கப் பட்டவர்.
அந்த வார்த்தை என்னைக்  குடைந்து கொண்டே இருந்தது.
சொன்னவருக்கு நானும் அங்கிருந்துதான் வருகிறேன் என்று
தெரியும்.
தெரிந்தே  சொல்கிறார் என்றால்.. கொஞ்ச நேரத்துக்கு  வருத்தமாக இருந்தது.

யாரோ செய்த  தவறுக்கு நம்மைச்   சுட்டுகிறாரே என்று நினைத்தேன்.
எதுவுமே  பலிக்கும் இடத்தில்  ஸ்வாதீனம்(அதாவது இவர்களைச் சொன்னாலும் ரியாக்ட் செய்ய மாட்டர்கள் என்ற   தீர்மானம்!!)  நிறைய  இருக்கும்
அதனால்  பரவாயில்லை. மனசால மன்னித்துவிடலாம் என்று பெருந்தன்மையாக
நினைத்துக் கொண்டேன்:)
பதிவு போட்டால் தப்பில்லை இல்லையா!!!!!  ஒரு டைஜீன் சாப்பிட்டப் பலன் ஒரு பதிவு கொடுத்துவிடும்:0))))))))))))))))))))))))))))))

Friday, March 16, 2012

நாற்பது வருடங்களுக்கு முன்பு ஒரு நோம்பு

மார்ச் 14      1974 இல்  நடந்த  நோம்பு

சிறுவயதில்   நோம்பு   கொண்டாடிய  பெண்ணுக்கு
 இந்தக் காலகட்டத்தில்  மூன்று குழந்தைகள்.
அப்பா அம்மா ஊட்டிவைத்த  தெய்வ நம்பிக்கை,  கலாசாரப் பழக்கங்கள்
ஒன்றும் அவளை  விடவில்லை.

திருச்சி மன்னார்புரத்தில்   பால்  காவிரியுடன் கலந்துதான் வரும்.ஒரு லிட்டர்   மூன்று ரூபாய் வீதம் தினப்படிக்கு  மூன்று லிட்டர் பால் வாங்கினாலும் போதாது.

அதை உரை குத்தி வெண்ணெய் எடுக்கவும் கற்றுக் கொண்டாலும்  ஒரு வார  பாலேடு   சேகரித்து  ஹார்லிக்ஸ் பாட்டிலில் போட்டுக் குலுக்கி எடுத்தால்  சின்னக் கிண்ணியினடிமட்டத்தில் எட்டிப் பார்க்கும் வெண்ணெய்.:)

அந்த வருட நோம்பு    சாயந்திர நேரத்தில் வந்ததால்
குளித்து,வீட்டைச் சுத்தம் செய்து  தெய்வங்களின் படங்களுக்கு மலர்கள் சார்த்திவிட்டு,
காரடை செய்ய  ஆரம்பித்தாள்   ஆண்டாள்.
முதல்நாளே ஊறவைத்து இடித்த அரிசி  கொஞ்சம் கரகர என்றுதான் இருந்தது.

குழந்தைகள் பள்ளியிலிருந்து வருவதற்கு முன்னால்
செய்து முடித்தால்  நோம்பு அமைதியாகச் செய்து முடிக்கலாம் என்று
அவசரமாகச்  செயல் படும்போது  ,காஸ் தீர்ந்துவிட்டது.
அப்போதெல்லாம் ஒரே ஒரு காஸ் சிலிண்டர்தான்.
  ஒன்றைக் கொடுத்து ஒன்றை வாங்க வேண்டும். வீட்டில்   தொலைபேசி வசதி எல்லாம் கிடையாது.

இதை எதிபார்த்து தயாராக வைத்திருந்த     ஜனதா ஸ்டவ்வை ஏற்றி
  இலுப்பச்சட்டியில்  ஏற்கனவே ஊறவைத்திருந்த  காராமணியை

வேகவைத்து எடுக்க அரைமணி.   ஆச்சு. அதற்குள் மாடிப்படிகளில்
குழந்தைகளின்   ஷுக்கள்   சத்தமும், அம்மா  என்ன பண்றே, ஏன் வாசலில் கோலம் போட்டு இருக்கு?
இனி வேலை ஆன மாதிரிதான் என்றபடி

கொண்டுவந்துவிட்ட ஆயாவை நோக்கினாள்.
மூணு மணிக்கே  மணி அடிச்சுட்டாங்கம்மா.
சின்னவரு  ஓடப் பார்த்தாரு. நான் தான்  பிடிச்சாந்தேன்  என்று   அலுத்துக் கொண்டாள்  இமாமி   (நம்புங்கள் அதுதான் அந்த அம்மா பேரு)
பெரியவன் மெதுவாக வந்து ,ஷூக்களை அவிழ்த்துவிட்டு
கைகால்களை அலம்பிக் கொண்டு
மௌனமாக வந்து நின்றான்.
பசி:)
பெண்குதித்துக் கொண்டு வந்தது. அம்மா பாவாடை போட்டுக்கறேன்.
உனக்கு எல்ப்  எதாவது வேணுமா. ஹால் எல்லாம் பெருக்கட்டுமா.
மாவிலை வேணுமாமாம்மா''என்று ஓடிய வண்ணம் இருந்தாள்..


ஒண்ணும் வேண்டாம் கண்ணா, மாமரத்துல பூச்சி இருக்கு
நான் முன்னாலியே  சுந்தரத்தை எடுத்துக் கொடுக்கச் சொல்லிவிட்டேன்.

சாப்பிட என்னமா இருக்கு.

டோஸ்டும் பாலும் போதுமா  என்றவாறு  தட்டுகளில்  ரொட்டித்துண்டுகளையும்  ஆளுக்கொரு    ப்ரிட்டானியா பிஸ்கட்
பொட்டலங்களையும் பாலையும் வைத்துவிட்டு,
சாப்பாட்டு மேஜையைவிட்டு நகர்ந்தாள்.
எப்பவோ அவசரத்துக்கு வாங்கிய பஜாஜ் ஹாட்ப்ளேட்டில்

தட்டையான    வாணலியை வைத்து மாவுகளைக் கிளறி வைக்க
அரைமணி பிடித்தது.
இட்லி குக்கரில்  விசில் வரவும்  கீழே  கணவரின்   ஃபியட் வண்டி நிற்கும் சத்தம் கேட்கவும்  சரியாக  இருந்தது.

டாடி டாடி என்று  குழந்தைகள் கீழே ஓடிவிட்டன. என்னடா  இன்னிக்கு. அம்மா கோலமெல்லாம் போட்டிருக்கா.
மஞ்சள் கயிறு ஃபங்ஷன் பா  பெரியவன் விளக்கினான்.

ஓ. !!உங்க அம்மா  பயங்கர மூட்ல இருப்பாளே'
நான் வேணா  இங்க ஒளிஞ்சுக்கட்டுமா

அய்ய  இல்லைப்பா. காஸ் இல்லாமைலியே அம்மா எல்லாம் செய்தாச்சு.
ஆனா எல்லாருக்கும் இரண்டு இரண்டு ஸ்வீட் தான் கிடைக்கும்.த்சு! என்று பெண் உதட்டைப் பிதுக்க.
ஆஹா அப்படியா சேதி.. சரி நானும்  அண்ணா ,சின்னவன் குட்டி  ரெண்டுபேரும் ஒரு ரவுண்டு போய்விட்டு வரோம்.
அதற்குள்
நீங்கள் சரடெல்லாம் கட்டிக்கொண்டு ரெடியாக இருங்கோ.
நாமெல்லாம் கல்லுக்குழி ஆஞ்சனேயரைப் பார்த்துட்டு வரலாம்  என்றது கார் கிளம்பிவிட்டது.
மாடி டெர்ரஸ் வழியாக அவர்களுக்குக் கையாட்டிவிட்டு
மிச்ச  புனஸ்காரங்களையும் முடித்தாள் ஆண்டாள். பெண்ணும்சமத்தாகத் தன் புது  கவுனைப் போட்டுக் கொண்டு வந்தது.

கேள்வியே கேட்காமல் அம்மா சொன்னது எல்லாம் செய்தது.

நம்ஸ்காரம் செய்து எழுந்திருந்து வெளியில் போனவர்களுக்காகக் காத்திருந்தார்கள்.
வீட்டு எஜமானருக்கு  நமஸ்காரம் செய்ய வேணுமே.
ஒன்பது கஜத்தை இழுத்துவிட்டுக் கொள்வதிலியே
பாதிநேரம் போனது ஆண்ட்டாளுக்கு.
பத்துகஜம் என்றால்  சும்மாவா.:)

வந்தாச்சு வந்தாச்சு என்ற பெண்ணின் குரலைக் கேட்டு எழுந்து aவர்களுக்கும் காரடைகளையும் வெண்ணெயையும்
எடுத்து வைத்தாள்.

என்ன ஆண்டாள் மாமி ஒரே ஆசாரமா  ;) என்ற கிண்டலுடன் நுழைந்த கணவரை முறைத்தாள்.
காஸ் கிடையாதுப்பா. நாளைக்கு டிபன்  பவானி  லாட்ஜ்லதான்.

''இப்ப எல்லாம் இருக்கு இல்லையாம்மா. சமாளிச்சுக்கலாம்.
நாளைக்கு எட்டு மணிக்கு  சிலிண்டர்  சுந்தரம் கொண்டுவந்துவிடுவான்.''
சரி இப்ப கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ.;)
ஆளுக்குப் பத்துரூபாய் கிடைத்தது.
பெண் இருபது ரூபாயையும் எடுத்துக் கொண்டு தன் உண்டியலில் போட்டுக் கொண்டது.

இப்படியாகத்தானே இன்னோரு யாகமும் முடிந்தது.
மங்களம் எங்கும் தங்குக.





எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Monday, March 12, 2012

காரடையும் நானும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 1954 மார்ச் 14
மற்றுமொரு காரடையான் நோம்புக்குத் தயாரானது சென்னை வீடு.
3 மணிக்கே எழுத்துவிட்ட ருக்மணிம்மா
ஆசாரமாகக் குளித்துவிட்டுப் பெருமாள் விளக்கு ஏற்றிவிட்டு இரு
விறகடுப்புகளையும் ஏற்றி,
இட்லிப்பானையில் தண்ணீரைக் கொட்டி, அரிந்த வைத்திருந்த காராமணிப் பயறுகளைச் சேர்த்தாள்.
மற்றவர்கள் எழுந்திருப்பதற்கு முன்னால்  சத்தம் போடாமல் வந்து நிற்கும் பேத்தியைப் பார்த்து நீ தூங்குமா. இன்னும் நேரமாகும்.
பசிக்கிறது பாட்டி என்னும் ஆறு வயசுக் குழந்தைக்கு ஹார்லிக்ஸ்  கரைத்துக் கொடுத்துவிட்டு, தன் ஆசாரத்தைக் கொஞ்சம் மீறினாள்.

இன்னிக்கு நோம்பு மா. பாட்டி வெந்நீர் போட்டு வைக்கிறேன். அம்மா எழுந்ததும்
உனக்குப் புதுப் பாவாடை எல்லாம்  கொடுப்பா. நீ சமத்தாக் குளித்துவிட்டு
அதுக்கப்புறம் பசிக்கிறதுன்னு சொல்லாம இருக்கணும்  சரியா என்றதும்.
சரி உன்னைத் தொடக் கூடாதா என்று பக்கத்தில வர பெண்ணைப் பின்னாலிருந்து இழுத்தாள்
ஜயாம்மா.
பாட்டி குளித்தாச்சு. நீ என்னோட வா.
என்று அழைத்துப் போய் பின்புற விளக்கைப் போட்டு''சமத்தாக் குளிச்சுட்டு வா.

வெந்நீர்ல கையை விட்டுடாதே.பத்ரம் என்றவாறு வெளியேறினாள்.
வெந்நீர்ல கைவைக்காட்டா எப்படிக் குளிக்கிறது என்று முணுமுணுத்தபடி
இன்னோரு பக்கெட்டில் இருந்த தண்ணீரில் குளித்தகையோடு வெள்ளைத் துண்டையும்
இடுப்பில் சுற்றிக் கொண்டு ஐந்து நிமிடங்களில் வந்தாச்சு.
அம்மா நான் ரெடி.
பாவாடை கொடு. ஒரு புட்டுக் கூடையில் இருந்த புதுப்பாவாடையைத்  துணி உலர்த்தும்  கொம்பால்
எடுத்து அவள் மேல் வைத்துவிட்டு அம்மா குளிக்க நகர்ந்தாள்.
பாடிப்பாவாடை, அதன் மேல்  சிவப்பு வெல்வெட் சட்டை. இரண்டு கைப்புறங்களிலும் மாங்காய் வேலைப்பாடு. ஸ்ரீராம் டெய்லர் அளவெடுத்து அழகாகத் தைத்தது.

வீட்டிற்கு வந்திருந்த  அனைத்துப் பெண்டிரும் குளித்து முடிக்கவும் காரடைகளும் வெண்ணேயும் தயாரகவும் சரியாக இருந்தது. தம்பிகள் எட்டிப் பார்த்து,அக்காவைச் சற்றே கோபத்தோடு கண்டுகொண்டார்கள். பாட்டி எங்களுக்கும் கட்டிவிடு என்பது அவர்கள் வேண்டுகோள்:)

கோலங்கள் இட்டு இலைகளைப் போட்டு, இலை ஒரங்களில் வெற்றிலை பாக்கு,சரடு,பூச்சரம் எல்லம் துரிதமாக வந்து சேர்ந்தன. மாசி முடிவதற்குள் நோம்பு முடிக்க பாட்டிக்கு ஆசை.
அம்மா ஆரம்பித்து,தலையில் பூ வைத்துக் கொண்டு,இலையில் இருந்த வெல்ல அடையில் பாதியைக் கணவனுக்காக எடுத்துவைத்துவிட்டு, ''உருக்காத வெண்ணெயும் ஓரடையும் நான்நூற்றேன், ஒருக்காலும் என் கணவன் என்னைப் பிரியாதிருக்கணும்னு சொல்லிவிட்டு மஞ்சள்
சரடை அணிந்து கொண்டாள் அதன் நடுவே கோர்க்கப் பட்டிருந்த மல்லிச்சரம் அழகாக அவள் தொண்டைப் பகுதியில் அமர்ந்தது.
திரும்பி பெண்ணைப் பார்த்தால், அவள் கண்கள் வெண்ணேய் மேலயேஇருந்தது. சொல்லுமா உருக்காத.. என்றதும் பசி காதை அடைக்க உட்கார்ந்திருந்த பெண், எனக்குத்தான் கல்யாணமே ஆகலியே என்னை ஏன் இதெல்லாம் சொல்லச் சொல்ற'என்று முணுமுணுக்க,
சமாதானப் படுத்தித் தானே கட்டிவிட்டாள் அந்தப் பொறுமையின் பூஷணம்.

பிறகுதான் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டது அந்தப் பலகாரங்கள்.
 வெற்றிலை பாக்கு சிறிதே சுண்ணாம்பு தடவின தாம்பூலத்தை உண்ண ஆண்டாளுக்குக் கொஞ்சமாகத் தலை சுற்றுவது கூட ஆநந்தமாக இருந்தது. அத்தோடூ புதுப்பாவாடையில் தட்டாமாலை வேறு.

இதோ இன்னோரு நோம்பு நாள். அனைவரும் இனிய இல்லற வாழ்வில் மகிழ்வுடன் இருக்க என் பிரார்த்தனைகள்.

எழுதிவைத்த,பப்ளிஷ் செய்த பதிவு எப்படி காணாமல் போகும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Saturday, March 10, 2012

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம:) மாசி மாத நிலா.

 
மாசியும் மார்ச்சும் வந்தது.
பவுர்ணமியும் வந்தது.

புதிதாகக் கிடைத்த  லென்ஸ்  வழியாகப் பார்த்தால் நிலவு
இன்னும் அழகாகத் தெரியுமோ. ஆவலோடு ஓடி

ஓடிப் பார்த்தால் நிலவுகள் இரண்டு தெரிகின்றன.
நிலவின்   இரண்டு பாகங்கள் மிதக்கின்றன.
ஆஹா நீயுமான்னு  துக்கம் தொண்டையை அடைத்தது.

ஒரு வாரம் ஆனால் பார்வை தெளிவாகிவிடும் என்றாரே வைத்தியர்.
சிங்கத்தை அழைத்து  நிலா  சரியாகத் தான் இருக்கிறதான்னு கேட்டால்

லூசா  நீ'ன்னு கேக்கலை. எப்பவும் மாதிரி வெள்ளையா அழகா ரவுண்டாதான் இருக்கு.
கொஞ்சம் உள்ள வரியா;ன்னுட்டுப் போய்விட்டார்.

அடுத்தநாள் காமிராவோட போனபோது  
காமிராக் கண்ணுக்கு முழுவட்டம் தெரிந்தது.

பார்வை மாறினால் உலகம் மாறுமா என்ன.
அடுத்த மாதம் திருந்திய பார்வையோடு 
உன்னைப் பார்க்கிறேன். என்று   தீர்மானம் இயற்றிவிட்டு
உள்ளே வந்துப் பதிவிலும் போட்டாச்சு.:)

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Wednesday, March 07, 2012

பூக்களின் மொழி

வெள்ளை மனம் அதனுள் இன்பத்தேன்
அழகும்  அடக்கமும்
பட்டாம்பூச்சிப்  பூ

என்ன வேண்டும் எனக்கு
அன்பெனும் ஒளி

இந்த  வண்ணப் பூந்தோட்டத்துக்குப் போய் வந்து ஐந்து வருடங்கள்
ஓடிவிட்டன.
எப்பொழுதும் பற்றிக் கொள்ளும் அவசரம்.
காணச் சென்றவர்கள் நானும் பெண்ணும் கணவரும் குட்டிப்பாப்பாவும்.
அதுவும் மலர்களோடு மலராக   தள்ளுவண்டியில் வந்தது.
சிங்கத்துக்கு அங்கிருக்கும் எல்லா வண்ணங்களையும் அள்ள ஆசை.
எனக்கு எல்லாவற்றையும் காமிராவில் அடைக்க அவசரம்.
பெண்ணுக்குப் பிள்ளையின் பசி  பற்றிய அவசரம்.

கண்ணுக்கு விருந்தும் மனதுக்கு அமைதியும்
கொடுத்த மலர்களை மீண்டும்
புரட்டிப் பார்க்கிறேன்.

வாழ்க்கையையும் இப்படித்தான் கடந்து வைத்திருக்கிறேன்.

சோகங்களை   நினைத்த அளவு
சுகங்களை நினைக்கவில்லையோ
அழகான அன்புகளை அள்ளித்தர
அனைவரும் தயார்.
போர்வைக்குள்  ஓளிந்து சோர்வோடு இருப்பதால் சுகமென்ன கிடைத்தது.
வெய்யில் சுரீர்  என்று   உறைத்தால்
புலன்கள் விழிப்பது போல
இரு கோடுகளில் ஒன்று உயர்ந்த போது
மற்றவர்களின்    வாழ்விலும் துன்பம் வரும்போது

கூட்டிலிருந்து  வெளிவருகிறது  அழுக்கு நீங்கிய  பட்டாம்பூச்சி..
அனைவருக்கும் ஆரோக்கியம் கொடு தேவா.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Friday, March 02, 2012

என்ன பேசும் இலையும் பூவும்?


இலை கேட்டது பூவிடம்  உதிரமல்  இருக்க எங்க கற்றாய்  பூவக்கா

இருபத்தெட்டு ஆண்டுகளும்
கடந்தாச்சு தங்கச்சி.
என்னை முதலில் நட்ட போது இந்த இடம் கட்டாந்தரை.
கட்டாந்தரையைப் பண்படுத்த வந்த வீட்டுத் தலைவருக்குத்
தன் அருமைப் பாட்டியின் ஆசையான அழகுத் தோட்டத்துக்கு
ஒரு உரு கொடுக்க ஆசை.
உதவிக்கு வந்த மனைவி  காலில் கடப்பாறையைக்
காலில் போட்டுக் கொண்டதும் அவள்   
பார்வையாளராக நின்றுவிட்டாள்.:0)

நான்தான் வெய்யில் விரும்பி .
அதற்கு ஏற்ற திசையில் என்னை நட்டார்  என் நண்பர்.
முத்லில் குத்தும் முட்கள் குழந்தைகளை வருத்தினாலும்
நான் வளர வளர   என்பூக்களின் அழகு
அவர்களுக்குப் பிடித்துவிட்டது
நான் வளரஅவர்களும் வளரப்
பலவகைப் பருவங்களைக் கடந்தோம்.
எங்கவீட்டு அம்மா பூஜாடிகளை அலங்கரிக்க அவ்வப் போது என்னிடம் உத்திரவு பெற்றுக் கொண்டு
பூக்களை அள்ளிச் செல்வாள்.
ஜன்னல் வழியாக நானும் எட்டிபார்ப்பேன்.
என் குழந்தைகள் பத்துநாட்கள்
வரைத் தாக்குப் பிடிக்கும்.
அம்மா தாண்ணீரையும்  கொஞ்சம் உப்பும் கலந்து
இரு நாளுக்கொரு முறை மாற்றுவார்.

அவைகள் வாடும் தருணம் வந்தால் எஜமானருக்கு மனம் வாடும். இனிமேல் பூக்களை எடுக்க வேண்டாம்மா.
பாவம் அவைகள் என்று சொல்லிவிட்டார்.
இப்போது எனக்கும் வயசாகிவிட்டது. அவர்களுக்கும் வயசாகிவிட்டது.

புதிதாக இலைகளும் பூக்களும் வருவதால்
என் இளமை  என்றும் குறைவதில்லை.

இரண்டு மாடியேறி என் பழைய கிளைகளை
அழகாக  எடுத்துவீட்டு எனக்கு வேண்டும் என்கிற
கம்பி சட்டங்கள்  வைத்துப் பராமரிக்கும்  போது
எனக்கென்ன கவலை.
நீ புதிதாக வந்திருக்கிறாய்.
கவலைப் படாதே.  நீயும் பூத்துக் காய்த்து
நன்றாக இருப்பாய்.
நல்ல  இடம் தேடி வந்தால் எல்லாம் நன்மையே.




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa