Blog Archive

Thursday, December 28, 2006

ஸ்ரீ பாண்டுரங்க விட்டலா




இடுப்பில் கைவைத்துச் செங்கல் மேல் கால் வலிக்க நிற்கும் பெருமான் யார்?
நமது கண்ணன்தான்.
பார்க்கக், கேட்க வேண்டிய எத்தனையோ புராணங்களில் இந்தத் திருவிளையாடலும் அடங்கும்.

பண்டரீபுர விட்டலன் பரம குறும்புக்காரன்.
அவனோடு விளையாடின பக்தர்களும் எத்தனையோ.
அவர்கள் புராணமோ அவனை விடப் பெரியது. தொண்டர்தம் பெருமை இல்லையா.
பகவானை விட பகவானின் நாமத்துக்குப் பெருமை.

ராம நாமத்தை ஜபித்தேக் கடலைத் தாண்டியவன் நம் அனுமன்.
இங்கே பண்டரிபுரத்தில் இருக்கும் கிருஷ்ணன்
எப்படி இது போல நிற்க நேர்ந்தது?
துவரகையை விட்டு எங்கே இந்த வனாந்தரத்துக்கு வந்தான்?

அதுவும் ஒரு சின்னச் செங்கல் மேல் ஏன் நிற்கிறான்.!!

சில வருடங்களுக்கு முன்னால் கேட்க வாய்ப்புக் கிடைத்த
செய்தியை உங்களுக்குத் தருகிறேன்.
புண்டலிகன் என்று ஒரு சாதாரண மனிதன்.
அவனுக்கும் திருமணமாகி மனைவி வந்தாள்.


உலக வழக்கப் படி-----சில மனிதர்கள் செய்வது போல,
தன்னைப் பேணிக் காத்த பெற்றோரை
மறந்தான்.அவர்களைத் துன்புறுத்தவும் ஆரரம்பித்தான்.
இவன் தொல்லை தாளாமல் அவர்கள்
காசிக்குப் போய்விடலாம் என்று கிளம்புகிறார்கள்.

புண்டரீகனின் மனைவிக்கும் காசிக்குப் போகும் ஆசை வந்துவிட்டது.
புத்திர பாக்கியம் வேண்டுமே என்று கனவனை நச்சரித்து

முன்னால் போகும் பெற்றோரைத் தொடரும்படி சொன்னாள்.
போகும் பாதையில் பெற்றொரக் காணும் புண்டாலிகனுக்கு அவர்களை ஏளனம் செய்வதும் எடுபிடி ஆட்களாக
துன்புறுத்துவதும் வழக்கமாகிறது.
அவர்களும் பெற்ற பாவத்திற்கு அவனை அனுசரித்துப் போகிறார்கள்.

வாழ்க்கையும் மாற வேண்டும் அல்லவா?
துயரமே தொடர விதிப்படி முறை இல்லையே.

அதுபோல் புண்டலிகனுக்கும் ஒரு அதிசயம் நடந்தது.
ஒரு இரவு தூக்கம் பிடிக்காமல்
விழித்திருந்தவன் கண்களில் அழுக்குப் படிந்த ஆனால் அழகிய மங்கையர் கண்ணில் பட்டனர்.
அவர்கள் விரைந்து நடப்பதைப் பார்த்து, தன் விபரீத

புத்தியின் விளைவாக அவர்களைத் தொடர்ந்தான்.

அவர்கள் அருகிலிருந்த தவப் பெரியாரின் குடிலில் மறைந்து அந்த ஆசிரமத்தைச் சுத்தம் செய்து அழகான ஒளிபொருந்திய தேகப் பொலிவுடன் வெளி வருகிறார்கள்.

இத்தனைக்கும் அந்த மஹரிஷி அவ்ர்களைத் தியானம் கலைத்துத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

அந்த மங்கையர் அவரை வலம் வந்து வணங்கிவிட்டு
வெளியே வரும்போது
அவர்களை வழி மறிக்கிறான் புண்டலிகன்.

அவர்கள் சொல்லும் விவரம் அவனைத் தெளிவிக்கிறது.
அவர்கள் அனைவரும் புண்ணிய நதிகள்.
இவனைப் போல பாப ஆத்மாக்களின்
அழுக்கு அவர்கள் உடலில் ஒட்டிக் கொள்ள,
அந்த பாபங்களைப் போக்க இந்த மஹரிஷியின்

தவ வலிமை அவர்களுக்கு உதவி செய்கிறது
என்றும் புரிந்து கொள்கிறான்.

முன்னோர்களின் ஆசியினால் அவனுக்கும் தன் தவறை உணர வழி கிடைக்கிறது. ஏனெனில்
தவறுகிறோம் என்று உணர நல்ல நேரம் வேண்டுமில்லையா?
பெற்றோரை வணங்கி காசி போகும் எண்ணத்தையும் விடுகிறான்.
அவர்களைக் காப்பாற்றுவதைவிடக் காசிக்குப் போவது பெரிதாகத் தோன்றவில்லை அவனுக்கு.

இங்கே தான் கண்ணன் பிரவேசம் நடக்கிறது.
துவாரகையில் இருக்கும் கண்ணனிடம் ,
அங்கு சென்று ,அவனைத் தரிசனம் செய்யச்
சென்றவர்கள்
நாட்டு நடப்புகளைச் சொல்லும்போது புண்டலிகனைப்
பற்றியும் சொல்கிறார்கள்.


கன்னனுக்கு ஒரே ஆவல். இந்த அதிசயத்தையும் பார்த்து விடவேண்டும். பெற்றோர்களை அவர்களின்
அந்திம கால நோய் நொடிகளின் போதும் முகம் சுளிக்காமல் பாதுகாக்கும் மனிதன்,
இவனை நாம் கண்டுகொள்ளவேண்டும் என்று
தன் பக்கம் பிரியா ருக்குமணியுடன்
சந்திரபாகா நதிக்கரைக்கு விரைகிறான்.

அங்குள்ள மக்களுக்கு கிருஷ்ணனையும் அரசி ருக்குமணியையும் பார்த்து களிப்பு
பொங்குகிறது.
அவர்களிடம் விசாரித்துக் கொண்டுப்
புண்டாலிகன் குடிசைக்கும் வந்து வெளியே

நிற்கிறான்.
அவனோ அன்னை , தந்தையருக்குப் பாத சேவை புரிந்து கொண்டு இருக்கிறான்.

கண்ணன் அவனைக் கூப்பிடுகிறான்.
நான் துவரகை மன்னன் கண்ணன் என்றும் சொல்கிறான்.
புண்டலிகனோ சேவையிலேயே கவனம் கொள்கிறான்.
கண்ணன் மீண்டும் அவனை அழைக்கிறான்.

அவனோ தன் பணியை விட்டு வர மறுக்கிறான்.
''நான் துவாரகை மன்னன் கண்ணன் வந்துஇருக்கிறேன்' என்று கண்ணன் உரைத்தாலும்

''காத்து இருக்கலாம்.'' கவலை இல்லை.''
என்று சொல்லிவிடுகிறான்,. போதாதற்கு
ஒரு செங்கலையும் தூக்கிப் போட்டு இதில் நீங்கள் நிற்கலாம் என்கிறான்.

அன்னைதந்தை சேவையில் சொல்பவனின்
வாக்குக்குக் கட்டுப்பட்டு கண்னனும் அந்த கல்லின் மேல் நிற்கிறான்.

வெளியே வந்த புண்டலிகனுக்க்க் கண்ணனும் ருக்குமணியும் அலங்காரத்தோடு காத்து நிற்பது
தெரிகிறது.
மகிழ்ச்சி,பயம்,திண்மை இத்தனை உணர்வுகளும் மனதில் பொங்க அவன் திண்டாடுகிறான்.

கண்ணனும் அவனை மெச்சி,
பெற்றோர் சேவையின் மகிமைகளைக் கொண்டாடுகிறான்.
தனக்கு இங்கேயே கோவில் வேண்டும் என்று சொல்லி
மனசார ஆசீர்வாதங்கள் செய்து
துவாரகைக்குக் கிளம்புகிறான்.

அப்படிப் பிறந்ததுதான் இன்றைய
பண்டரீபுர கோவில்.

அந்தரங்கன்,இந்தரங்கன்
எல்லோரும் நம்மிடம் அருள் செய்யட்டும்.

ஜய ஜய விட்டல பாண்டுரங்கா.
ஹர ஹர விட்டல பாண்டுரங்கா
பாண்டுரங்கா
பண்டரிநாதா.

Wednesday, December 27, 2006

ஸ்ரீ வைகுந்த ஏகாதசி




அடுத்துவரும் ஏகாதசி டிசம்பர் 30ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி.
மார்கழி வளர்பிறை பதினோராம் நாள் புண்ணிய தினம்.
நம் நம்மாழ்வாருக்குப் பரமபதம் கொடுக்க ஸ்ரீரங்கன் மனமுவந்து வரும் நாள்.

அவரோ பெருமாளைக் கண்டுவிட்டு மீண்டும் ஆழ்வார்திருநகருக்கே வந்து விட்டதாகச் சொல்லுவார்கள். அவரால் தன் (திருக்குருகூர்) ஆதிபிரானைப் பிரிந்து இருக்க முடியவில்லையாம்.
வைகுண்டம் போய்த் திரும்பி வந்த நாளை ஆழ்வார்திருநகரியில்

அங்குள்ள கோயில் பட்டாச்சார் உருகிச் சொல்லும்,விவரிக்கும் அழகைக் கேட்க வேண்டும்.

இந்த பக்தி நமக்கு வாய்க்குமா என்று தெரியவில்லை. ஒரு துளிப் புண்ணியமாவது இருந்தால்,
உலக மாயையிலிருந்து விடுபட்டு
இறைவனையும் அவனது அடியவரையும் நினைக்கலாம்.
இதோ சில வாய்மொழிகள்.

''சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழங்கின
ஆழ்கடல் அலை திரை கையெடுத்து ஆடின
ஏழ்பொழிலும் வளம் ஏந்திய என்னப்பன்
வாழ்புகழ் நாராணன் தமரைக் கண்டு உகந்தே''

திரு நாரணனைக் கண்டு ஆகாயமும்,
அது உடுத்த முகிலும் மத்தளம் கொட்ட,
கடலைகள் ஆர்ப்பரித்து ஆடினவாம்.

வாழி குருகூர்ச் சடகோபன் நாமம்.

வாழி நாரணன் திரு அடியார்.

Friday, December 22, 2006

கோவில்கள் தரிசனம்





இராமனும் சீதையும் ,இலக்குவன் குடில் அமைத்துத் தர இருந்த இடம் கோதாவரி நதியின் புண்ணியம் வாய்ந்த கரையில்.
பத்ராசல ராமனை
நினைத்து இராமதாசர் பாடிய பாடல்கள் எல்லோருக்கும் தெரிந்ததே.

அதுவும் ஸ்ரீ பாலமுரளிக்ருஷ்ணா இந்தப் பாடல்களைப்
பாடி கேட்கவேண்டும்.

''அம்மா சீதா நீ இராமனுடன் உலவுப் போகும்
போது என்னைப் பற்றிச் சொல்லு.
என் கஷ்டம் தீரும்படி சிபாரிசு செய்''

என்று பாடும்போது மனம் உருகி விடும்.
அவரே தெலுங்கு தெரிந்தவர் என்பதால் இப்படி
மனம் இழைந்து பாட முடிகிறது என்றுதான் நினைக்கிறேன்.

எனக்கு அந்தப் பாடல் வரிகள்
நினைவு இருந்தாலும் நீங்களே


இந்தப் பாடலைக் கேட்க வேண்டும் என்று
விண்ணப்பிக்கிறேன்.
இந்தப் பதிவில் தொட்டமளூர் கண்ணன் படமும் கொடுத்து இருக்கிறேன்.

இவனைத் தான் இராமனுஜ மஹாமுனி
மிகவும் செல்லம் பாராட்டுவாராம்.

ஏற்கனவே அவருக்குச் செல்லப் பிள்ளை
திருநாரயணபுரம் சம்பத்குமாரன்.
அவரோடு இந்தக் குட்டித் தவழும் கண்ணனையும்
கொஞ்சுவாராம்.
நம்ம வீட்டிலே புதுக் கண்ணன் வந்து இருக்கிறானே.
இவனையும் பார்ப்போம் என்று நினைத்தேன்.

அவனைப் பார்த்த வேளை எனக்குத் தமிழ்
எழுத்தும் மீண்டும் கிடைத்து விட்டது.

கண்ணன் நாமம் வாழி.
வாழி பத்ராசல ராமன் நாமம்.






paRnasalai.and Bathraachalam Raamar.

Thursday, December 21, 2006

அனுமன் தாள் சரணம்




//யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர கிருதம் ஹஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதீம் நமத ராக்ஷசாந்தகம்.//

அஞ்சனா நந்தனம் வீரம்
ஜானகி சோக நாசனம்
கபீசமக்ஷஹந்தாரம்
வந்தே லங்கா பயங்கரம்//

ஆஞ்சனேயா உன் அடி சரணம் .
நீயில்லாமல் எங்கள் வாழ்க்கை ஏது?

எத்தனை வடைமாலை ஏற்றுக் கொண்டாய்.
ஒரு சின்ன மாலையில் எனக்கு கொடுத்த நிம்மதியை என்ன சொல்லுவது?

இதோ உன் கோவில் வாயிலில் பந்தல்.
இன்று உனக்குத் திருமஞ்சனம்,சேவை எல்லாம் நடந்திருக்கும்.

நீயும் உன் இராமன்,சீதை குடும்பத்தாருடனும் கூடி மகிழ்ந்து
அடியவருக்குத் தரிசனம் கொடுத்து இருப்பாய்.

ராமன் '' ம்ருது பாஷி''.
மெல்லப் பேசுகிறவன். இதமான வார்த்தைகள்
சொல்கிறவன்,
அவனே புகழும் வண்ணம் வார்த்தைகளை அளந்து
பேசி, அர்த்தத்தோடு பயன்படுத்தி சீதையின் சோகம்
தணித்தாய்.

அசகாய சூரனே,அஞ்சனை புதல்வா!

உன் அடக்கமும்,அறிவும்,மொழித் திறனும்
இருந்தால் உலகையே தோழமையோடு
பார்க்கலாம் அல்லவா.
அருள்வாய்.

படங்கள் ... கூகிள் ஆண்டவர்.
நாமக்கல் ஆஞ்சனேயர்,லஸ் அனுமார் கோவில் முகப்பு,
விஸ்வரூப அனுமான்.

Friday, December 15, 2006

(அமெரிக்காவில்)வளரும் குழந்தைகள்

கள்ளம் கபடமில்லாமல் வளரும் குழந்தைகள் உலகமே தனி.

அக்கம்பக்கத்துக் குழந்தைகளின் நாளுக்கு நாள்

மாறும் வார்த்தை ஜாலங்கள், ஈடுபாடுகள்,வழக்கங்கள்,
பெற்றவர்களின் நோக்கம் ,பள்ளிகள் படுத்தும் பாடு

அவைகளையும் மீறி விளையாட்டில் மகிழும்

சின்னதுகளைப் பார்க்க எனக்கு உற்சாகமாக இருக்கும்.

சென்னையில் எங்களுக்குக் (குழந்தைகள்
வழக்கில்) மீனாட்சி வீடு என்றுதான்
பெயர்.

மீனம்மா எப்படி இருக்கிறதோ!
சுறுசுறுப்பாக இருப்பதாகப் பார்த்துக் கொள்பவர் சொன்னார்.
அதுவும் வளரும் குழந்தைதானே:-)

இங்கே இவர்களைப் பார்க்கும் போது ஒரு பக்கம் ரொம்ப வியப்பாக இருக்கிறது.
ஒரு பக்கம் பயமாக இருக்கிறது.

ஏகப்பட்ட அறிவு. சுலபமாக எதற்கும் தீர்வு காணும் திறமை.
பயம் இல்லாமல் மற்றவர்களை அணுகுவது,
எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது.

ஆனால் நம்ம ஊரில் வளரும் குழந்தைகள் அளவுக்கு சூக்ஷ்மம்
போதாதோ??
வாயளுக்கும் நேரம் நிறைய.

பேச்சு பேச்சு & more பேச்சு.
எல்லா இனக் குழந்தைகளும் படிக்கும் பள்ளியில் பெற்றோர்
வளர்ந்த விதம்,
பிள்ளைகள் வளர்க்கப் படுவதில்லை.,
என்பது உண்மை.

எனக்குத்தான் பேரன் ஸ்கூலில் வித்தியாசம் தெரிந்ததே ஒழிய,
அவனுக்கு எல்லா நாட்டவரும் சினேகிதர்கள்.

எல்லாம் "பட்டீஸ்"தான் ''டியூட்ஸ்"" தான்.
வண்டியை விட்டு இறங்கினதும் திரும்பிக் கூட பார்க்க நேரம் கிடையாது.
'பை பாட்டி 'என்று ஓடி விடுகிறான்.
அந்த பள்ளிக்கூடப் பைதான் எவ்வளவு லேசாக இருக்கு.
வீட்டுப்பாட பேபரும், அவன் வகுப்பு டீச்சரோட நோட்டும் தான் பையில்.
வாரந்தோறும் பள்ளிப் படிப்பைத் தவிர மற்ற புத்தகங்களும் படித்து அதை ரிகார்டும் செய்யவேண்டும்.
ஒரு நாள் '' மாட் மாத்''. நம்ம மனக் கணக்குதான்.
இன்னோரு நாள் ஸ்பெல்லிங் டெஸ்ட்.
வார முதலில் கடினமான் வார்த்தைகள் கொடுத்து
எழுதச் ,சொல்ல
பழகி வரச் சொல்லுகிறார்கள்.
அதில் தொடர்ந்து 100% பாஸ் வாங்கி விட்டால் ஒரு

பரிசுக் கூப்பான் வேற.

அதை வைத்துப் போன வாரம் அவனே பீட்சா
வாங்கிக் கொண்டான்.

இவன் மட்டும் என்று இல்லை. அனேகமாக எதித்த வீட்டு
நடாஷா, நம்ம தமிழ்ப் பையன் இன்னொண்ணு
எல்லாமே ஒவ்வொரு விதத்தில்
சமத்துதான்.

இதுகளுக்குப் ''ப்ளே டேட் ' 'வேற,.

என்னன்னால் அந்தக் க்ளாஸ்,
இந்தக் க்ளாஸ் போக, நேரம் இருக்கும் போது
அம்மாக்கள் தீர்மானம் செய்து வாரத்தில்
சனி ஞாயிறில்
மற்ற பிள்ளைகளோடு இரண்டு மணி ,மூன்று மணி என்று விளையாடவிட்டுக் கூட்டி வருகிறார்கள்.

மற்ற நேரம் வீட்டில் முடிந்தவரப் பாதுகாக்கப் பட்டத்
தொலைக்காட்சி
நிகழ்ச்சிகள்.

இதை எல்லாம் பார்த்து எனக்கு நிறைவாக இருக்கிறதா
என்றால் அதுவும் இல்லை.
ஏதோ ஒன்று இல்லை.

சண்டைப் போட்டுக் கொண்டாலும்
சேர்ந்தாலும் ஒரே வட்டத்துக்குள் தான்.
இது பெரியவர்களுக்கும் பொருந்தும்.

லிமிட்டட் எவ்ரிதிங்.
சுத்தம் சுத்தம்.
ஆனால் ஸ்விட்சர்லாண்ட் மாதிரி குழந்தைகள்
அழாதே என்று மிரட்டப் படுவதில்லை.அங்கேதான்
ரூல்ஸ்படி,
எல்லாம்.
நாய்,பூனை,குழந்தை எதுவும் கத்தாது.
பூ வாசனையா இருக்காது.
ஆனால் எல்லாம் அழகா இருக்கும்.

ஒரே புலம்பலாத் தெரிகிறதோ.
இதெல்லாம் நம்ம ஊருக்குத் திரும்பி விடுவோம் என்கிற தைரியத்தில் எழுத முடிகிறது.
இங்கே இருக்கிற பெற்றோர்கள் என்னைத்
தப்பா நினைக்க வேண்டாம்.

என்ன இருந்தாலும் நம்ம ஊரு நம்ம ஊருதான்.
குப்பையா இருந்தா என்ன.
சத்தமாதான் இருக்கட்டுமே.
சரி நாளை பிறக்கும் மார்கழி.
பிள்ளையார் கோவிலில் நாலரை மணிக்குத்
திருப்பாவை ஆரம்பிக்கும்.

மதி நிறைந்த நன்னாட்களில்
புறம் சொல்லாமல் முடிக்கிறேன்.:-)

Monday, December 11, 2006

மாமி ... யார்?(சீனிம்மா)

அட

மாமியார் என்று யார் பெயர் கொடுத்து இருப்பார்கள்?
இந்த மாமி யார்? அவங்களோட மனைவி.
இவங்களோட அம்மா.

இவங்களோட பொண்ணு.(இது அந்தக் காலம்).
ஆரம்ப கால மாற்றுப்பெண் அடக்கத்துடன்,
அழகாகக் கோலம் போடுபவள். அடுக்களைக் கதவு
பின்னாலிருந்து
எட்டிப் பார்த்து(முதுகுப் புடவை போர்த்தி)
அவர் வீட்டில இல்லீங்களே என்று சொல்வதோடு சரி.

கணவனோட அம்மா அப்பா,பெரியவர்கள்,
எல்லோருடைய அனுமதியோடு வெளிலே
கணவனோட போலாம்.
ஆனால் குழந்தைகள் மத்திரம் சீக்கிரம் பிறந்து விட வேண்டும்.
அதற்குள் இன்னோரு ஓரகத்தி வந்துவிடுவாள்.
அவளும் இவளும் சண்டை போடாமல் சமையலறையில் வேலை செய்ய வேண்டும்.

மாமியாருக்கு அடுத்த இடம் முத்ல் மாற்றுப் பெண்ணுக்குத் தான்.

சில வீடுகளில்.
எப்பவுமே இறுதி வரை மாற்றுப் பெண்ணாகவே இருந்து
காணாமல் போனவர்களும் உண்டு.

இதில் அந்த மாமியாரும் அடங்குவார்.
இது மிகவும் சகஜம்.
ஏன் என்றால் மாமியாருக்கு ஒரு வயதான (புக்கக அத்தை, சித்தி)
இருந்தால்...
அவள் குரலும் அடங்கித் தான் ஒலிக்கும்.

அப்படி இருந்தவள் எங்க அம்மாவோட அம்மா.
பாட்டி என்று அழைக்க முடியாது என்று சொல்லி

அவளை நான்தான் ' சீனிம்மா ' என்று பெயர்
வைத்தேன்.
இப்போது அவளை நினைக்கக் காரணம்,
எங்க இரண்டாவது பேரன் கிருஷ்ணா.

இந்த ஊருக் குளிர், மற்றும் நமது வயது,
உடலுக்கு உண்டான உபாதைகள்
எல்லாம் என்னை யோசிக்க வைத்தன.

இறந்த காலம், நம் முன்னோர்கள்
எல்லோரையும் நாம் எப்போதும் நினைக்க
வாய்ப்பு கிடைப்பதில்லை.
ஆனால் இது போல் முக்கியமான சில சமயம் ஆனந்தமான
சிலசமயம் சிரமமான நேரங்களில் அவள் நினைவு என் அம்மா நினைவோடு சேர்த்து வரும்.

இப்போது நான் அலுத்துக் கொள்வது போல் அவளுக்கு
சொல்லிக் கொள்ள நேரம் கிடையாது.

வேலையை நிறுத்தினால் தானே
யோசிக்க நேரம்.?

ஒரு பெண், நான்கு மகன்கள் அவளுக்கு.

தன் 37 வயதில் தன்னைவிட 18 வயது மூத்த
கணவரை, பாரிச வாயுக்குக் கொடுத்துவிட்டு,
,மறுபடி வாழ்க்கையை ஆரம்பித்தவள்.

கலைமகள்,கல்கியிலிருந்து
அன்றைய தினமணி வரைத் தனக்கு
கிடைக்கும் ப்ரேக் டைமில் முடித்துவிடுவாள்.

அப்படி ஒரு வாசிக்கும் ,தெரிந்து கொள்ளும் ஆர்வம்.
அவள் படித்தது 4ஆம் வகுப்புத்தான் என்று நினைக்கிறேன்.
அழகான முகம்,
நரை படியாத, தலைமுடி.
(அப்போ 'லோரியால்' கிடையாது)
அவளும் அதைப் பற்றி யோசித்திருக்கமாட்டாள்.
நல்ல எண்ணைதடவி சிடுக்கு எடுத்து பந்து போல முடிந்து கொள்வாள்.

இரண்டு நூல் புடைவைகள்
அனேகமாக ஒரு காவிக்கலரில் இருக்கும்.
ஒரு வெள்ளை காடா ரவிக்கை.
அதுவும் முதுகு போர்த்தி இருக்கும்.

அவள் புடைவை கலைந்தோ அழுக்காகியோ
நான் பார்த்தது இல்லை.
இத்தனைக்கும் காலை மூன்று மணிக்குச்
சென்னைக் குடிநீர் வரும் நேரத்தில் பாத்திரங்கள்
கழுவ எழுந்து இருப்பவள்,

வாயில் கௌசல்யா சுப்ரஜா ராமாவோடு,
இடையிடையே கண்ணினுண்
சிறுத்தாம்பு '' என்று வாய் முணுமுணுக்க
அடுப்பு மெழுகிக் கோலம் போட்டு,
காப்பி மஷினில் காப்பிகொட்டை அரைத்து

வாசனையாக டிகாக்ஷன் இறக்கி
வைத்துவிடுவாள்.
அதற்குத் தனி உமியும் சிராய்த்தூளும் போட்ட அடுப்பு.
அழகான வளைந்த நுனிகொண்ட கெட்டில்.
அதில் தண்ணி நிரப்பிக் கொதிக்க வைத்து
ஃப்ல்ட்டரில் இதமாக விட்டு ம்ம்ம்ம்ம்.

அத்தனை மணம் கொண்ட காஃபியை நான் இதுவரைக்
குடிக்கவில்லை.
அப்போது ஆரம்பிக்கும் வேலைகள் குளித்த பிறகு தொடரும்.
வேலைக்குப் போகும் இரு பையன்கள். பள்ளிக்குப் போகும் இரு பையன்கள்.
பிரசவத்துக்கு வந்திருக்கும் மகள்(என் அம்மா),
அவளுடைய முதல் இரண்டு புத்திர ரத்தினங்கள்:-)
(நானும் என் தம்பியும்)
எல்லோருக்கும் வரிசையாகக் காப்பியோ,
கஞ்சியோ வயதுக்கு ஏற்ற மாதிரி கிடைக்கும்.

எட்டரை மணிக்கு மேடையில் இருக்கும் விறகு அடுப்பில்
தயாரித்த சாதமும் பருப்பும் ஸ்வாமிக்குக் கைகாட்டி பிறகு
குழம்பு ,ரசம் ,கூட்டுடன்
தாமரை இலையில் தைத்த சரகுத்தட்டில்

தயாராக இருக்கும்.

அவரவர் வேலைகளை முடித்து, சாப்பிட்டுக் கிளம்பியதும், 11 மணி
வாக்கில் சீனிம்மா சாபிட உட்காரும் அழகே தனி.

கூடவே இருந்து பார்க்கும் எனக்கு அதிசயம் தாங்காது.
ஒரு துளி மிச்சம் வைக்காமல்,
(மிளகாய் வற்றல் தவிர)
அத்தனை சின்ன இலையில் சாப்பிட்டு முடிப்பார்.

ஏன் சீனிம்மா உனக்கு மத்திரம் இலை?:
எங்களுக்கெல்லாம் தட்டு? என்று கேட்டால்

அதெல்லாம் ஒண்ணும் இல்லையே, எனக்குப் பிடிக்கும் இப்படிச் சாப்பிட என்பார்.
வருடங்களுக்கு அப்புறம் தான் அவர் இருந்த
தவம் புரிந்தது.
கணவனுக்கப்புறம் வீட்டை விட்டு வெளியே வராமலேயே
எல்லாரிடமும் உறவு காத்துத் தன் குழந்தைகள் மூலமே எல்லா
வேலைகளையும் செய்து முடித்தார்,.

அவர் பெற்ற புத்திரர்களும் அவர் போலவே
இருந்ததால் ஒன்றுமே தவறி நடக்கவில்லை.

அவரைத்தேடி எல்லோரும் பார்க்க வருவார்கள்.
ஒரு பெரிய லேடிஸ் க்ளப் நடத்தலாம்.

மாசி, புரட்டாசி மாதங்களில் அப்பளம் மாவு இடிக்கப் பட்டு
ஏழு எட்டு அம்மாக்களும் பாட்டிகளுமாக
ஊர்க்கதை பேசிக்கொண்டு அப்பளம் இடுவார்கள்.
மாங்காய் சீசனில் ஒரு நாலு ஐந்து அண்டாக்கள் நிறைய

துண்ட மாங்காய், ஆவக்காய், அடை மாங்காய்,கீத்து மாங்காய்
என்று வகை வகையாய்.
இதைத் தவிர சனி ஞாயிறுகளில்
முறுக்கு,தட்டை என்று ஒரு யாகம் நடக்கும்.

இத்தனைக்கும் அவர் கை நிறையக் காசு வைத்தவர் அல்ல.

மனம் நிறைய அன்பு. எல்லாவற்றையும் சாதித்தது
என்று நினைக்கிறேன்.

எங்கள் திருமணம் முடிந்து அடுத்துப் பிறந்த
மூன்று குழந்தைகளுக்கும்

எங்க அம்மாவீட்டுக்கு வந்து எல்லோரையும்
கவனித்துக் கொண்டு இடையிடையில்
ஒரு கோணல் கண்ணாடியையும் மாட்டிக்கொண்டு
எல்லப் புத்தகங்களையும் படிப்பார்.
சுவைபட பழைய காலக் கதைகளைச் சொல்லுவார்.

கண் முன்னாலே நடப்பது போல ஒரு பிரமை தோன்றும்.

எல்லா நூற்றுக்கணக்கான உறவுகளையும்
(ஓட ஓட) நினைவு வைத்திருப்பார்.
எப்போதோ யாரையோத் திருமணம் செய்து
காசிக்கு ஓடிவிட்டவரைப் பத்தி சொல்லி சிரிக்க வைப்பார்.
மனசு நொந்து நான் நிறைய பார்த்ததில்லை,.
எந்த விழாக்களிலும் அவர் திரை மறைவில் தான்.

யார் முன்னாலும் வரமாட்டார்.
எனக்குத் தான் வருத்தமாக இருக்கும்.

இவளும் இருந்தாள். மறைந்தாள் என்று இல்லாமல் அவரைப் பற்றி எழுதத் தோன்றியது.

''சீனிம்மா கொஞ்சம் சிக்காகோ வரியா??''


,

Friday, December 08, 2006

தாத்தா பாட்டி எக்ஸ்பிரஸ்



உங்களுக்குத் தெரியுமா சென்னையிலிருந்து நாள் தோறும்,
மாதங்கள் தோறும் இரவு புறப்படும்
விமானங்கள் பாட்டி,தாத்தாக்களைச் சுமந்து கொண்டு அமெரிக்காவோ,
இங்கிலாந்தோ,ஆஸ்திரேலியாவொ
போகின்றன.
அவைகளுக்கு கிராண்ட் பேரண்ட்ஸ்
எக்ஸ்பிரஸ் என்றும் பெயர்.

எதற்கு அந்தப் பெயர் வைத்தார்கள் என்பது
ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை.

இதுவரை விமானமே ஏறியிருக்க மாட்டார்கள்.
ஆனால் ஒரு பெண்ணொ இல்லை மகனோ

தங்கள் குழந்தைச் செல்வங்களை எதிபார்க்கிறார்கள்
என்றால் முதல் டெலிபோன் இரண்டு சைட் அம்மா அப்பாவுக்குத்தான்.

அப்போது ஆரம்பிக்கும் இந்தப் பயணத்தின்
விறுவிறுப்பு.
அமெரிகன் தூதரக வாசல், நேர்காணல்,அத்ற்கான படபடப்பு,
டிடி சரியா இருக்கா,
பாஸ்போர்ட்?

சரியாப் பார்க்கிறபடி உடை உடுத்தி இருக்கோமா/
அவன்(தூதரக அதிகாரிகள்)
ஏதாவது இடக்கு மடக்கா கேப்பானோ.
அதற்குள்
ஏற்கனவே போய் வந்தவர்கள் சொல்லும் புத்திமதிகள் பயமுறுத்தல்கள்
... ''உண்மையைப் பேசினா விட்டு விடுவான்''

எதுக்கும் பேரன் பிறப்பதற்கு உதவிக்குப்
போறேன்னு சொல்லாதீங்க.''

விஸிட் விசானு சொல்லிடுங்க.'

சில சமயம் கொடுக்க மாட்டான்.
எதுக்கும்ம்...'' இப்படித் தொடரும்.
ஒரு வழியா அங்கே விசா கௌவுண்டரில்
இரண்டே இரண்டு கேள்விகளுக்கு' வழிந்துவிட்டு'

அட இத்தனை சுலபமா விசா கிடைச்சுடுத்தே
என்று அதிசயப் பட்டால்
ஓ, உங்களுக்கு வயசு அறுபதுக்குப் பக்கம்

இல்லையா, அதான் மல்டிபிள் எண்ட்ரி கொடுத்திட்டான்
என்று சைட்ல காமெண்ட் கேக்கும்.

இதுக்கா இத்தனைப் பதட்டம் என்று
யோசிக்கும்போதுதான் புரியும்
நாம் சாதாரண இந்தியப் பிரஜைகள்
அவங்க ஊருக்கு ,அவங்க டூரிஸத்துக்கு
இன்னும் கொஞ்சமா இருந்தாலும்

பணம் சேர்க்கப் போறொம்னு மண்டையில் உறையும்படி
அறியாமை என்னும் பெரிய ஆமை
சொல்லும்.
அவசரம் அவசரமாக வாங்கிச் சேர்த்த பொருட்களுடன்,

நாம் மெதுவாக நாட்களைக் கடந்து

கிளம்பும் நேரமும் வந்துவிடும்.

அந்தப்பக்கம் பிள்ளையார், இந்தப் பக்கம் ஆஞ்சனேயர்னு எல்லா சாமிகள் கிட்டயும் சொல்லிட்டுக் கிளம்பி

நம்ம ஆகிருதிக்கும், முட்டு வலிக்கும் பொருந்தாத
எகானமி சீட்டில் அமர்ந்து,
பக்கத்தில் இருக்கிற வெள்ளைக்காரன் மேல் படாமல்

சுருக்கிக் கொண்டு,தூங்கும் நேரம் பார்த்து எழுப்பும்
விமானப் பணிப்பெண் கொடுக்கும் மசாலா மிகுந்த'' ஆசிய
சைவ உணவை''க் கடித்து,
நாசூக்காக வாய் துடைத்து
மறுபடியும் அந்தப் பெண் வந்து சாப்பாட்டுத் தட்டை
விலக்கும் வரை மோட்டு(விமான) வளையைப் பார்த்து

சாமி, கடவுளே எல்லாம் சரியா இருக்கணும்னு
வேண்டிக் கொண்டு இறங்கி,

கஷ்(ஸ்)டம் கடந்து,
அப்பாடா என்று நிமிரும்போது
பாட்டீ...
என்னும் குரல் காதில் விழும். முன்னைக்கு இப்போது
மிகவும் வளர்ந்துவிட்ட பேராண்டியைப்
பார்க்கும்போது அத்தனை களைப்பும்
எங்கேயோ போகும்.

சீக்கிரமே மற்ற இருவரையும் இன்னும்
ரெண்டு பெற்றுக் கொள்ளச் சொல்ல வேண்டும்
என்ற எண்ணத்தோடு ...
பயணம் தொடரும்.

Wednesday, December 06, 2006

தீபம்,கோலம் நன்மை



படங்களில் பார்க்கும்போதே
மகிழ்ச்சி தரும்
இந்தத் தீபங்களும் கோலங்களும் நமக்கே உரிமை என்பதில்தான் எத்தனை இன்பம்.
அதுவும் இங்கே வந்த பிறகு நம்ம ஊரு ஞாபகம் தரும் எதுவுமே
உணர வைப்பது நம் பூர்வீகர்களின் முன்யோசனைதான்.

இந்தக் குளிரில் வாசலில் கோலம் போட முடியாதுதான்.
ஆனால் உள்ளே அலமாரியிலோ, அறையின் ஒரு சுத்தமான ஓரத்திலோ
இருக்கும் தெய்வங்களைப் பார்க்கும் போது '
என்னப்பா, ! எப்போதும் என்னை விட்டு
விடாதே. நான் உன்னை மறந்தாலும்
நீ என்னைப் பிடித்துக்கொள்.

ந தர்ம நிஷ்டொஷ்மின்
ந சாத்மவேதி
ந பக்திமான் த்வம் சரணாரவிந்தே

அகின்சனஹ:
அனன்ய கதிஹி
சரண்யஹ/
த்வத்பாதமூலம் சரணம் ப்ரபத்யே.
அபராத சஹஸ்ர பாஜனம்
பதிதம்
பீம பவார்ணவோதரே
அகதிம்
சரணாகதம் ஹரே
கிருபயா கேவலம்
ஆத்மசாத் குருஹு//
இதை விட யார் சொல்ல முடியும்!!


அபத்தங்களின் சக்ரவர்த்தியான
என்னையும் காப்பாற்றவேண்டியது உன் பொறுப்பு
என்றல்லவா சொல்கிறார்.

ஞானிகளைக் காப்பாற்றுவது பெரிய வேலை இல்லை
அவனுக்கு.

எனக்கு எல்லாம் தெரியும் '
என்று நினைப்பவர்களையும்
காப்பாற்றவேண்டும்.

அப்போதைக் கப்போது பெரியவர்களின் (சிறார் உட்பட:-))
பதிவுகளைப் படிக்கும்போது எத்தனை அருமையான செய்திகளை நாம்
படிக்காமல் விட்டோமே
என்று தோன்றுகிறது.
இனிமேலாவது

தொடர்ந்து படிக்க வேண்டும்.

Tuesday, December 05, 2006

படங்கள்



வீட்டுக்குப் பின்னால் உறைந்த பனி.
வீட்டுக்கு முன்னால்
உழைக்கும்
வீட்டுக்காரர்கள்.
பொன்ஸ் இதில் நான் இல்லை!!

கமலம்மா


உயிரும் உடலும் கொடுத்தது ஒரு அம்மா.
அதன் பின்
பாதுகாத்தது இந்த அம்மாதான்.
இவரை விடப் பக்தியான,
உறுதியான,உழைப்பு மிகுந்த
பெண்மணி இதுவரை என் கண்ணில் படவில்லை.

அம்மாவாகவே இருந்து மறைந்த கமலம்மாவிற்கு
இந்த வருடம் தொண்ணூறு வயது ஆகியிருக்கும்.
இந்தக் கார்த்திகை நன்னாளில்
பிறந்த வீட்டை நினைப்பதைப் போலவே

புகுந்தவீட்டாரையும் நினைக்கவேண்டும்
என்று சொல்லுவார்.
மறக்கவில்லை. நினைக்கிறேன்.
நமஸ்காரங்கள் அம்மா.

Saturday, December 02, 2006

வந்ததே பனிஅருவிச் சாரல்



ஒரு இரவில் உலகமே மாறுமா என்ன?

வானிலை ஒளிபரப்பில் மதியம் 2 மணிக்கு ஸ்னோ வரும் என்றார்கள்.
வரவில்லை.
நமக்கு இது பழகின விஷயம்தானே. சொன்னால் மழை பெய்யாது.
சொல்லாவிட்டால் பெய்யும்.
அதுபோலத் தானா என்று நினைத்தேன்.
குளிர் தோலுக்குள்போய், நரம்பைத் தொட்டு,தசையைத் தாண்டி ,ரத்தத்தை ஊடுறுவியது.
தெர்மலுக்கும் பெப்பே க்ளௌவ்ஸுக்கும் பெப்பே என்று விட்டது.

நமக்குச் சென்னை நவம்பர் காற்றே
பழகின இதமான தென்றல்.
காரிலோ,பஸ்ஸிலொ போனால் காத்து முகத்தில் அடிக்கும்போது, ' கொஞ்சம் குளிர்தான் இன்னிக்கு'ம்னு போவோம்.

புத்தகக் கண்காட்சியும், கச்சேரிகளும், கச்சேரிக்குப் போகும் பட்டுப் புடவைகளும்,
அறுசுவை காண்டீன்களும்
விமரிசனங்களும் எல்லாத்துக்கும் மேலே தமிழ்ப் பத்திரிகைகளும்
மார்கழி உத்சவம் ஜெயா டிவியும்,
காலைப் பிரவசனங்களும் , சானல் மாற்றி, மாற்றிப் பார்க்கும்
கேட்கும்
பாட்டுக் கச்சேரிகளும்
ம்ம்.

இது எல்லாத்துக்கும் மாறுதல்

இப்போது இருக்கும் நிலைமை.
காலையில் பனி பூராவும் படர்ந்த வெளி.
முதல் நாள் இருந்த புல் படுக்கையைக் காணோம்.
பின்னால் இருக்கும்' யார்டி'லும் பனி.
வெள்ளை,வெள்ளை வெள்ளை.
கண்கூசும் வெள்ளை.

இந்த வாடையிலும் வெளியில் வந்து எட்டிப் பார்க்கும்
பக்கத்துவீட்டு அல்சேஷர்.
விளையாடும் பெரிய சைஸ் அணில்.
ராமர் பார்க்காத அணில்னு நினைக்கிறேன்.

கோடுகளில்லாமல் காட்சிகொடுக்கிறது.
முயல்கள் இந்தப் பனியில் அழகாக
பாதங்கள் பதித்து இருக்கின்றன.

எதிர்த்த பக்கத்து வீடுகளில் பனி விழுந்த
இடங்களில் குழந்தைகள் விளையாட ஆரம்பித்துவிட்டன.
அப்பாக்கள் பனி திரட்டியை வைத்து தள்ள,
வசதி படைத்தவர்கள் அவர்கள் ஸ்னோமஷினை வைத்து
இன்னும் வேகமாக சுத்தம் செய்ய ,

அம்மாக்களும் வேகமாக உதவி செய்ய
பாதைகள் பனியைவிட்டு விலகின.

எங்க வீட்டில கொஞ்சம் வலிமையான
அம்மா நான்தான்.
மத்தவங்களைத் தப்பு சொல்லவில்லை.
ஏதோ நம்மால் ஆனது கையில்
அந்த ஷோவலை எடுத்துப் போட்டோவுக்குப் போஸ் கொடுத்துவிட்டு

சின்னப் பசங்களுக்கு விட்டுக் கொடுத்துவிட்டேன்.
இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு

சுத்தமானது நடைபாதை.
இதையே சென்னையில் செய்து இருப்பேனா
என்று தெரியாது.
முதலில் காலை வேளையாக இருந்தால்
காய்கறிக்காரர்களிலிருந்து எல்லோருடனும்

பேசிவிட்டு,போனுக்குப் பதில் சொல்லி
வெளியில் வந்தால் வெய்யில் வந்துவிடும்.

அப்புறம் இருக்கவே இருக்கிறது
தமிழ்மணம்,தேன்கூடு
பதிவு,பதில் என்று.

நல்லவேளை எனக்கும் வேறுவிதமான வேலைகள்
கிடைக்கின்றன.
அதைப் பற்றி எழுத இப்போதைக்கு நேரமும் இருக்கிறது.
நான்கு மாதங்களை ஓட்டிவிடலாம் என்றுதான் நினைக்கிறேன்.