Saturday, May 02, 2026

மே மாதத் திருமணங்கள் .

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமாக இருக்க வேண்டும்.
















Thursday, August 02, 2007

ஆனந்தம் ஆனந்தமே ஜயாநாராயணன் கல்யாணம் சுபமே
நடுவில் கடிதங்கள் ,கேள்விகள் மாப்பிள்ளைக்கு சூட்,





பெண்ணுக்கு எத்தனை பட்டுப்புடவை,நாத்தனார்களுக்குச் சீர்,

கல்யாண சாப்பாடு மெனு எல்லாம் விவாதிக்கப் பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

மாப்பிள்ளை வீட்டாருக்கு வேண்டிய அப்பளம் வடகம்,வடாம் எல்லாம் பெண்வீட்டார் கீழநத்தம் வந்து இறங்கிய அடுத்த நாளிலிருந்து தயாரிக்கப்பட்டன.

அவர்கள் ஒரு மாதம் முன்னதாகவே எம்.சி.எம் ஸ்கூல் விடுமுறை நாட்கள் ஆரம்பித்ததுமே திருநெல்வேலி எக்ஸ்பிரசில் வந்து இறங்கிவிட்டார்கள்.

ஸ்ரீவீரராகவனின் சகோதரசகோதரிகள், திருமதி ருக்குமணியின் அக்கா,தங்கைகள்,பெற்றோர்,பெண்ணின் நான்கு குட்டி சகோதரர்கள் (12,10,6,4)எல்லோரும் வெய்யில் வீணாகாமல் கிராமத்துக்கு வந்தார்கள்.





திருமதி ருக்குமணி...அலையஸ்  சீனிம்மா  எங்க அம்மா வழிப்பாட்டி..அவர்களின் மூத்த சகோதரியும் இளைய சகோதரியும் சமையல் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்கள்.

வாசலை அடைத்து அழகான பந்தல் போடப்பட்டது. பிள்ளைவீட்டார் வீட்டு முன்பாகவும் பந்தலும் கோலங்களும் போடப்பட்டன.





பிள்ளைவீட்டார் வரும் நாளும் வந்தது.அவர்கள் வீட்டு மனிதர்களாக ஐம்பது நபர்கள் தான் வரமுடிந்தது. மற்றவர்கள் பெண்ணை திருநெல்வேலியில் பார்த்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டார்கள்.

வந்திறங்கியதும் உபசாரக்காப்பி,கேசரி,போண்டாஎல்லாம் முடிந்தது.



மாப்பிள்ளைக்குத் தோழனாக அவர் சகோதரரே இருந்ததால் அநேகமாக அவர் திருமணமும் அப்போதே நிச்சயமானதாக அம்மா சொல்லுவார்.



அடுத்த நாள் ஜானுவாசம் . காலையிலிருந்தே பரபரப்பு. திருநெல்வேலியிலிருந்து ஏற்பாடாகி இருந்த சாரட் வண்டிக்காரன் திடீரென உடல்நலமில்லை என்று ஆளனுப்பிவிட்டான். அவன் குதிரைகள் நலமாக இருந்தன நல்லவேளை:)))



அதனால் வேறு ஆள் ஏற்பாடு செய்ய பெண்ணின் மாமா விரைந்தார்.

கையோடு இன்னோரு குதிரைக்காரனோடு அந்த சாரட்டிலேயே கீழநத்தம் வந்துவிட்டார். அதுவே பெரிய அதிசயமாகிவிட்டது அந்தத் தெரு மக்களுக்கு. எட்டாம் வீட்டுக் கல்யாணம் அமர்க்களப்பட்டது. எட்டாம்வீடு என்று அழைக்கப் படுவது பெருமாள் கோவிலுக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் வீடு.



இப்பவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.





ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி சன்னிதியிலிருந்து ஊர்வலம் புறப்படுவதாக திட்டம்.கோவிலில் சர்க்கரைப்பொங்கல் ஏற்பாடு ஆகி இருந்தது.

பெண்வீட்டாரும்,மாப்பிள்ளைவீட்டாரும் ஒரு எட்டில் கோவிலுக்கு வந்து விட்டனர். அலங்கரம் செய்யப்பட்ட 

சாரட்டும் ஒரு ஒல்லிக் குதிரைக்காரரும்:)

அவரைவிடச் சுமாரான வெள்ளளக்குதிரைகளும் நின்றுகொண்டிருந்தன.









அதில் ஒரு குதிரைக்கு வயிறு சரியில்லை. எந்தப் புல்லைச் சாப்பிட்டதோ.





ஸ்ரீவேணுகோபல சுவாமிக்கு அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல் வினியோகம் செய்து, மாப்பிள்ளைக்கு வேஷ்டி,ஷர்ட்,சூட் எல்லாம் வெற்றிலை பாக்குத் தட்டில் வைத்து சம்பிரதாயமாகக் கொடுக்கப்பட்டது.



சி.நாராயணனுக்கு குதிரை வண்டி பழக்கம் உண்டு.என்றாலும் இது போல ஓப்பன் ஊர்வலம் வந்ததில்லை.

தயங்கியவாறு தன் அக்காபிள்ளைகளையும் துணைக்கு அழைத்துக் கொண்டு ஏறி அமர்ந்தார். நான்கு பசங்களும் உற்சாகக் கோஷமிட ஊர்வலம் கிளம்பியது.

நான்கு தப்படி போயிருக்காது.,அதற்குள் பாண்டு வாத்தியக்காரர், ஒரு யானை பிளிறன மாதீரி ஒரு நோட் வாசிக்கவும் குதிரை மிரண்டது.



ஒரே தாவல், அடுத்த குதிரையும் மிரள நான்கு கால்களும் மேலே தூக்க சாரட் கவிழ்ந்தது.



அனைவரும் ஆ என்று அலறுவதற்கு முன்னாலேயே மாப்பிள்ளையும் குழந்தைகளும் வெளில வந்தாச்சு. ஒரு சிராய்ப்பு கூட இல்லை.



அப்பாவின் சித்தி கொஞ்சம் கடுபிடு பண்ணினாராம்.



சகுனமே சரியில்லையே.அது எப்படி இந்த மமதிரி உலகத்த்திலே இல்லாத குதிரை கொண்டுவந்தார் உங்க சம்பந்தி என்றெல்லாம் பேச்சு வர,

மாப்பிள்ளை அசராமல் இருந்ததால் மேற்கொண்டு சிரிப்புகளுடன்



ஒரு வழியாக  இனிமையாக ஜானுவாசம் நடந்து முடிந்தது.



சாயந்திர நிச்சயதார்த்தம் எல்லாம் நிறைவேறி, பந்திக்கு அமர்ந்தபோது மீண்டும் ஒரு சின்ன பிரச்சினை.



மாப்பிள்ளையின் மாமாவைச் சரியாக உபசாரம் செய்து சாப்பிடக் கூப்பிடவில்லை என்று. உடனே ஒரு வயதானவர்கள் படை பிள்ளை தங்கியிருக்கும் வீட்டீற்குக் காசி அல்வாவோடு போய் அழைத்துவிட்டு வந்தார்கள்.



அல்வா செய்த வேலையோ என்னவோ அவர் பிறகு வாய் திறக்கவில்லை.



இலைகள் போடப்பட்டு உட்கார்ந்தவர்களுக்கு நல்ல விருந்துபசாரம் நடந்தது.



திரட்டிப்பால், மைசூர்பாகு அன்றைய இனிப்பு. வழக்கம்போல கதம்ப சாதம்,சித்திரான்னம்,தயிர்ப்பச்சடி,மாங்காய்ப் பச்சடி. சுக்குவெல்லப் பொடி. உருளைக் கிழங்கு பொடிமாஸ்,வாழைக்காய் வறுவல் ,திருக்கண்ணமுது என்று எளிமையான சமையல் தான்.



அடுத்த நாள் விடிந்து காலையிலேயே முகூர்த்தம்.



மாப்பிள்ளையை நல்ல படியாகக் கவனித்துக்கொள்ள இங்கிருந்து இரண்டு பேர் பக்கத்திலேயே இருந்து வென்னீர் வைத்துக் கொடுத்து உண்மையான அன்பில் திக்கு முக்காட வைத்ததாக அப்பா பின்னாட்களில் சொல்வார்.





இப்படியாகத்தானே சௌபாக்கியவதி ஜெயலட்சுமிக்கும் சிரஞ்சீவி நாராயணனுக்கும் இனிதே கல்யாண வைபவம் நடந்து முடிந்தது. மேற்கொண்டு எந்த வித சங்கடமும் இல்லாமல் கட்டுசசதத்துடன், ஏகப்பட்ட பொரித்த பொரிக்காத அப்பளக் கூடைகள்,முறுக்கு சம்புடங்கள்,திரட்டிப்பாலோடு வெள்ளிக்குடம், என்று பலவித சீர் செனத்தியோடு புக்ககம் புகுந்தாள் சேச்சிப் பாப்பா என்கிற புஷ்பாவாக இருந்து மாறிய ஜெயலட்சுமி நாராயணன். சுபம்.

மேற்கொண்டு 1943ல் திருமணம் நடந்தாலும் அவர்கள் தனிக்குடித்தனம் வைக்கப்பட்டது 1945ல் தான். சென்னையில் மிச்சப் படிப்பை முடித்து 15 வயதில்தான் அப்பாவும் அம்மாவும் அப்பாவுக்குப் போஸ்டிங் ஆன கயத்தாறுக்குத் தனிக்குடித்தனம் வைக்கப் பட்டார்கள். அது தனிக்கதை.:)))













-





மே மாதத் திருமணங்கள்.

வல்லிசிம்ஹன்


எல்லோரும் வளமாக வாழ வேண்டும்

லக்ஷ்மிகல்யாண வைபோகமே...2 என் அப்பா அம்மா திருமணம் மே 17 1943.

புஷ்பா என்கிற பாப்பாவுக்கு ஜாதாகம் கணிக்கவில்லை.

பெற்றோர் ஸ்ரீ வீரரரகவனுக்கும் அவரது மனைவி திருமதி.ருக்குமணிக்கும் வயது வித்தியாசம் கொஞ்சம் நிறைய.

ருக்குமணி அம்மா ஆயில்ய நட்சத்திரமானதால் திருமணம் தடைப்பட்டு

12 வயதில்தான் தன்னைவிட 14 வயது மூத்த ஸ்ரீ வீரராகவனைத் திருமணம் செய்தாராம்.

அதுவும் அவருடைய அப்பா ,அம்மா இருவரும் ஏற்கனவே காலமாகிவிட்டதால்தான் இந்தத் திருமணம் நடந்ததாக எங்க கொள்ளுத் தாத்தா செவல் ராமய்யங்கார் சொன்னதாக புஷ்பா என்ற பாப்பா அதான் எங்க அம்மா ஜயலக்ஷ்மி நாராயணன் சொல்வாங்க.

அதனால்தான் பெண் பிறந்ததும் ஜாதகம் குறிக்கவில்லையாம்.


குழப்பிட்டேனா. சரி, ஒரிஜனல் கதைக்கு வரலாம்.

இந்த மாதிரி ஜாதகம் இரண்டுபேருக்குமே இல்லைன்னதும்

திருநெல்வேலிலேருந்து தாத்தா ஸ்ரீனிவாசன் சென்னைக்கு கடிதம் போட்டாராம்.


எல்லாம் பகவான் விருப்பம் சங்கல்பம்.

நாராயணனுக்குப் பெண்ணைப் பிடித்தால் பூக்கட்டிப் போட்டு கோவிலில் சம்மதம் வாங்கலாம் என்று சொன்னாராம்.

அதன் படி 22 வயது சிஞ்சீவி நாரயணன் தன் அக்காவோடும் அத்திம்பேர் இன்னும்  ஒரு கசின் அக்கா  (என் வருங்கால மாமியார் திருமதி கமலா சுந்தரராஜன் )இவர்கள் சகிதம் ஒரு டாக்ஸியில்,

அந்த வரிசை ஸ்டோர்வீட்டில் பெண் பார்க்க வந்தார்களாம்.


சேச்சிப்பாப்பாவும் தூக்க முடியாத ஒரு பட்டுப்புடவை கட்டி,கழுத்து நிறைய நாலு வடம் சங்கிலி போட்டு, புதிதாகத் தைத்த பஃப் ஸ்லீவ் ரவிக்கை போட்டு, ஜயதி ஜயதி பாரத மாதா பாடிக் காண்பித்துக் குரல்வளம் உண்டு என்று நிரூபிக்க,


தலை கூட நிமிராமல் உட்கார்ந்திருந்த மாப்பிள்ளை சாரும் சரின்னு சொல்லிட்டாராம்.

மேற்கொண்டு சம்பந்தம் பற்றிப் பேச, பெண்ணின் அப்பா திருநெல்வேலி வந்து சேர்ந்தார். அங்கு காருகுறிச்சியில் ஏற்கனவே சகலை இருந்ததால்

அவரையும் அழைத்துப் போய் லௌகீகம் பேசி முடித்தனர்.

திருமணம் வரும் வைகாசி மாதம்,மே 17 நடக்க நிச்சயம் செய்தனர்.

கீழநத்தத்தில்தான் திருமணம் என்பது உறுதியானது.


அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்த சமயம்.விலை வாசிகள் உயர்ந்த பட்ச விலையில் இருந்ததால் கிராமத்தில் திருமணம் நடத்த ,தீர்மானம் செய்திருக்கவேண்டும்.

பிள்ளை வீட்டார்

திருநெல்வேலியிலிருந்து கீழநத்தம் வரும் வண்டி செலவை பெண்ணின் அப்பா ஏற்றுக்கொண்டார்.

மூன்று நாட்கள் திருமணம். பிள்ளைவீட்டாருக்குத் தனி வீடு அமைத்துக் கொடுத்து சமைக்க ஆளும் ரெடி.

வெள்ளைக்குதிரைகள் பூட்டின சாரட் வண்டியில் மாப்பிள்ளை அழைக்க வேண்டும்,

புஷ்பா என்கிற படு நாகரீகமான பேரை (!) ஜெயலக்ஷ்மி என்று மாற்ற வேண்டும், இதெல்லாம் திருமதி திருவேங்கடவல்லி ஸ்ரீனிவாசன், பையனோட அம்மா போட்ட கண்டிஷன்.:)))

ஆனால் இந்த வெள்ளைக் குதிரை வேற நினைத்து விட்டது.

எங்கள் வீட்டு காமெடி டைம் நிகழ்ச்சி அப்பாவின் குதிரைவண்டி சவாரியும்

குதிரை தறிகெட்டு ஓடினதும்தான்.:))))

மே மாதத் திருமணங்கள் .

வல்லிசிம்ஹன் எல்லோரும்   வளமாக இருக்க வேண்டும். Thursday, August 02, 2007 ஆனந்தம் ஆனந்தமே ஜயாநாராயணன் கல்யாணம் சுபமே நடுவில் கடிதங்கள் ,கேள்...