முன்பு ஒரு பதிவில் ,
எங்கள் வீட்டில் பாட்டி செய்யும் முறையாகத்
தயிர் சாதம் பற்றி எழுதிய நினைவு இருக்கிறது.
பால் ,வெண்ணெய், தயிர் எல்லாம்
சேர்த்து ஒரு நரசிம்ம ஜயந்திக்கு சூடான
தயிர் சாதம் பிசைந்த ஞாபகம்.
மே 1982
எங்கள் வீட்டு நரசிம்ம சாமிக்கு ஆராதனம் சாயந்திர வேளை. அப்பதானே அவதாரம் செய்யணும்:))))))
பாட்டி மதியம் 12 மணிக்கே கரியடுப்பில்
வெண்கலப் பானையை வைத்துவிடுவார்.
அவருடைய எடுபிடி நான் தான். மண்டை வெல்லத்தை உடைத்து
தூள் செய்து ஏலக்காயையும் அதனுடன் இணைத்துக்
கொடுத்தால் மாமியார் பானகம் தயார் செய்வார்.
அரிசியைக் களைந்து
இருவரிடமும் ஒப்படைப்பேன்.
மாமியாருக்கு 66 வயது, பாட்டிக்கு 88 வயது. எனக்கு 34 வயது:)
பாரிஜாத சமையலறை கொதிக்கும். மே மாத வெய்யில்
தாக்கும். கரியடுப்பில் சமைப்பதுதான் ஆசாரம் பாட்டி எண்ணம்.
என் மாமியாருக்கோ (பாவம்) டயபெதிஸ் ஆரம்ப நிலை.
பசி தாங்காது. இந்த ஆத்மாவின் பொறுமையை
மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.
நரசிம்ம ஜயந்தி என்றால் காலையில் மட்டும் அரிசி உப்புமா
பலகாரம். பிறகு பூஜை முடிந்த பிறகு 6 மணிக்குத் தான் உணவு.
பாட்டிக்குச் சுடச் சுட தயிர் சாதம் சாப்பிட வேண்டும்.
ராஜச குணம் .
அடுப்பில் சாதம் ஆனதும் கீழே இறக்கிக் கஞ்சி
வடித்து...........பாலும் (ஆலிவர் ரோடு பால்காரர் கறந்து கொடுத்தது,)
வெண்ணெயும்( ஒரு கிண்ணம்) சேர்ப்பார். தனியாக உறை
குத்தி வைத்திருந்த கெட்டித் தயிரில் ஒரு கரண்டி . அவ்வளவுதான்.
எல்லாம் கலந்ததுதான் தாமதம். நீளக்கரண்டியில் நெய்யில் பொரித்த உலர் திராட்சை,முந்திரிப்பருப்பு இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை
அனைத்தையும் ,கலந்து தயிர் சாதம் தயார்.:)
பாட்டி கை கூப்பிய படி, ஆராதனை செய்பவர் வரும் வரை காத்திருப்பார்.
அவரும் எல்லா வீட்டுக்கும் போய்விட்டு அவசரமாக
உள்ளே நுழைவார்.
நரசிம்ம கோஷம் வீடு நிறையும். அந்தி சாயும் வேளையில்
அழகான தெய்வ சான்னித்யம் நிறையும்.
பசியுடன் காத்திருந்த அனைவரின் வயிற்றிலும் அமுதமாக அன்னம் இறங்கும்.
ஆற வைத்து சாப்பிடுபவர்கள்
அசத்தாக இருப்பார்கள்
என்று வேறு சொல்வார்கள்.
மாறாக என் மாமியார் எல்லாமே ஆறி தான் சாப்பிடுவார்.
பாட்டியும் மாமியாரும் வட துருவம் ,தென் துருவம்.
இருவரும் எப்படித் தான் ஒன்றாக இருந்தார்களோ.:)))
அனைவரும் வாழ்க வளமுடன்.