என் அருமை ரங்கன்.
அக்கா அண்ணா இருவரிடமும் மாட்டிக் கொண்டு விழிப்பான்.
கேலி காட்டுவதில் மன்னன்.
நடிப்பு பாட்டு எல்லாவற்றிலும் ஆர்வம்.
பதின்ம வயதுகளில் அவன் தலைமுடியைச் சீவி விட்டுக்கொள்ளும் லாகவத்தைப்
பார்க்கவேண்டும்.
தலை சொட்ட ஈரம் செய்து கொண்டு.
குட்டி மரபீரோ மேலிருக்கும் கண்ணாடியில் இப்படி ஒருதரம் அப்படி ஒருதரம்
வாரிக்கொள்வான்.
என்னிடம் வந்து எப்படி டீ இருக்கு.
தெய்வ மகன் சிவாஜி மாதிரி இருக்கா என்பான்.
சகிக்கலையே. முடி வெட்டுக் கொள்ளேண்டா. .
என்பேன்.
ரசனையே இல்லை என்று போய்விடுவான்.
மகா குறும்புக்காரன். மஹா உதவியாளன்.
எள்+எண்ணெய் டைப். திருச்சியில் ,குடும்பமே அம்மா அருள் வந்து
இருக்கும் போது தைரியமாக வந்து இளனீர் சப்ளை செய்தான்.
1967இல் எனக்கு முதல் குழந்தை பிறந்தபோது அவன் ஆடிய ஆட்டம்.
சொல்லி முடியாது. உட்கார்ந்து கொண்டு ,குழந்தையைத் தொடாமல் பார்த்துக் கொண்டே இருப்பான்.
'' ஏய் அவன் அத்திம்பேர் மாதிரி தான் வருவான்.பெரிய கண்ணும் இமைகளும்.
உன்னை மாதிரி சின்னக் கண் இல்ல//''
தான் குழந்தையோடு இருக்கணும் என்பதற்காக
சினேகிதன் வீட்டிலிருந்து முப்பது நாற்பது காமிக்ஸ் புத்தகங்கள்
கொண்டு வந்து கொடுப்பான்.
மூன்றாவது குழந்தை பிறக்கும் போது மற்ற இரண்டு குழந்தைகளும்
இவன் கழுத்தைக் கட்டிக் கொண்டுதான் தூங்கின.
அவர்களோட ''டங்க மாமா.'' இருவருக்கும் ''ர'' நா வராது.
எப்பொழுது கடிதம் எழுதினாலும் , நீ எப்ப வருவே. கேள்விதான்.
அப்பா அம்மாவின் உயிர் நாடி. அவன். நானும் இன்னோரு தம்பியும் வேறு ஊர்களில் இருக்கும் போது அம்மா அப்பாவை வைத்தியரிடம் அழைத்துச் செல்வதும் அவன் தான்.
திடீரென அப்பா மறைந்த போது நாங்கள் மூவரும்
கடற்கரையோரம் அஸ்தி கரைக்க நின்றோம்.
அப்பொழுது அவன் செய்து கொடுத்த சத்தியம் இது.
நீ எப்ப வேணாக் கூப்பிடு, இருபது நிமிடத்தில் உன் வீட்டில்
இருப்பேன்'' இப்போது எல்லாரும் அழைக்க
முடியாத தூரத்துக்குப் போய் விட்டார்கள்.
அடுத்த ஜன்மத்தில் கட்டாயமாக அவர்களைக் கேட்பேன்.
ஏன் இப்படி விட்டுச் சென்றீர்கள் என்று.
இங்கே பக்கத்தில் இருக்கும் ஒரு பெண், தன் குடும்பத்தில்
நிகழும் சொத்து தகறாரைப் பற்றிப் பேசும்போது
என் பெற்றோரோ தம்பிகளோ பணத்தைப் பற்றியே
பேசாமல் நேர்மையாகப் பாசத்துடன் நடந்து கொண்டார்கள் என்று இப்பவும்
நன்றியுடன் நினைக்கிறேன்.
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment