
புதன் கிழமை மேமாதம்
27 ஆம் தேதி நம் அருமைச் சகோதரி துளசிகோபால் வீட்டு வளர்ப்புச் செல்லம்
(பூனை என்று சொல்ல மனம் வரவில்லை) 14 வயதான கடமை வீரன்,
எட்டு வருடங்கள் துளசியின், திரு.கோபாலின் அன்பன்
சிறிது நாளாக நோய்வாய்ப்பட்டு இருந்து ,அதிக சிரமப் படாமல், துளசி வணங்கும் திருமலைப் பெருமாளின் சரண் புகுந்தான்.
// ஜிகே பாவம்ப்பா. வீட்டுலே சாமான்களை எடுத்து அடுக்குறதையெல்லாம் கவனிச்சுக்கிட்டே ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கான்.கேட்டரியில்தான் விட்டுட்டு வரணும். //
இது துளசியும் கோபாலும் இந்தியாவோ , வெளியூரோ போகும்போது மன வருத்தத்தோடு செய்யும் விஷயம்.
இனிமே அம்மா அப்பா ரெண்டு பேருக்கும் அந்தக் கவலை வேணாம்னு நினைச்சுட்டானோ.அவனை அங்கே விட்டுவிட்டு நம்ம துளசி படும் கவலை இருக்கே,அது இன்னும் பரிதாபம்.
இந்த ஜிகேப் பையன். என்ன செய்தானோ, சரியாச் சாப்பிட்டானோ என்றேல்லாம் கவலைப் படுவார்கள்.
அதற்கு ஏற்றார்ப்போல் இவர்கள் திரும்பி அவனை அழைத்துப் போகும்போது இரண்டு நாள் கோபமாக இருப்பானாம்.
கோபால் அடிக்கடி டூர் போகும்போதும் வீட்டைச் சுற்றி நடமிட்ட படி இருப்பான் என்று துளசி சொல்லுவார்கள். வேளை முடிந்த பிறகு துளசி காலடியில் வந்து படுத்துக் கொள்ளுவானாம்.
துளசியும் கோபாலும் அவனை மறக்க முடியாது. அமைதியாக அடங்கிய அவனை மனத்தில் போற்றிக் காப்பார்கள்.
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.