டயாபெட்டீஸ் என்னும் சர்க்கரை நோய் எப்படி வருகிறது
என்று சில நாட்கள் முன் எங்கள் ப்ளாகில்
சில கருத்துக்களை பரிமாற்றம் செய்துகொண்டோம்.
அதன் விளைவு இந்தப் பதிவு.
சர்க்கரை இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகளாகக்
கொடுக்கப் பட்ட அட்டவணை.
பார்த்தாலே மயக்கம் வரும். அரிசியே கூடாது.
கோதுமை ரவைதான் சாப்பாடு. ,என்றெல்லாம் பயமுறுத்தி இப்பொழுது
பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு
சமவிகித உணவுக்கு வந்திருக்கிறார்கள்.
பரம்பரையாக வரும் வியாதி என்று பார்த்தால்
பாட்டிக்கு இருந்திருக்கிறது.
பெற்றோருக்குக் கிடையாது. என் சகோதரர்களுக்கு இல்லை
என்னை மட்டும் ஏன் பிடித்தது என்று தெரியவில்லை.
அதுவும் இன்ஷுரன்சுக்காகப் பரிசோதனை செய்யப்
போகும்போது காலை பதினோரு மணிக்கு எடுக்கப்பட்ட
ரத்தத்தில் இருந்த அளவு 400.
தலைசுற்றி விழலியா நீங்க என்றபடி என்னைப்
பார்த்தார் மருத்துவர். ஏதாவது சாப்பிட்டுவிட்டு
வருகிறேன் என்று வெளியே வந்தேன்.
குடும்ப மருத்துவரைப் பார்த்த பிறகு மருந்துகள்
எழுதித் தந்தார்.
தினம் நடக்கச் சொன்னார்.
கடற்கரைக்குச் சென்றால் தெரிகிறது...நம்மை மாதிரி
ஆயிரக்கணக்கில் வெவ்வேறு நோய்கள், உடல் நலம்
பேண என்று நடந்து கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தார்கள்.
இது 2004 இல்.
எங்கள் குடும்ப மருத்துவர் ,குடும்ப நிகழ்ச்சிகளைப்
பார்த்துக் கவனம் செலுத்துவார்.
சின்ன தம்பி திடீரென இறைவனடி அடைந்ததுதும்
என்னை அறியாமல் உடல் பாதிக்கப் பட்டது
என்று அவர் சொன்ன கணிப்பு.
82 வயதில் அந்த முதியவர் ஆதரவாகப் பேசிய போது
மனம் கொஞ்சம் சமாதானம் அடைந்தது.
சர்க்கரை அளவு மாத்திரை அளவும் குறைந்தது.
இதுதான் காரணம் என்று அறுதியிட்டு
சொல்ல முடியவில்லை.
என் மாமியாருக்கும்,அவரது தந்தைக்கும்
டயபெடிஸ் இருந்தது.
ஆனால் என் கணவருக்கோ அவரது சகோதரிகளுக்கோ
பாதிப்பில்லை.
இது என்ன மாதிரி நடக்கிறது என்று புரியவில்லை.
இப்போது எங்கள் மக்கள் எதிலும் சர்க்கரை சேர்ப்பதில்லை.
சேர்த்தாலும் கரும்பு சர்க்கரையே
உபயோகப் படுத்துகிறார்கள்.
இறைவன் எதிர்கால சந்ததிகளைக் காக்க வேண்டும்.
உணவு பழக்க வழக்கங்களுக்கும் இந்தப் பாதிப்புக்கும்
என்ன சம்பந்தம் என்று புரிவது கடினம்.
காப்பிக்கோ டீக்கோ 4 தேக்கரண்டி சர்க்கரை
எடுத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன்.
அந்த அத்தைக்கெல்லாம் நீண்ட ஆயுளும், நிறைந்த ஆரோக்கியமும்
இருந்தது:)
நானும் இணையத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன்.
அனைவரும் நலமாக இருக்க என் பிரார்த்தனைகள்.