கசீனோ ,கார் நிறுத்தும் இடமே ஆறு தளங்கள் இருந்ததாக நினைக்கிறேன்.
கசினோ முகப்பு. உள்ளே சிலர் விளையாட அவர்களுக்காகக் காத்திருக்கும் நண்பர்கள் மனைவிகள்,குழந்தைகள்.
நீண்ட லக்ஸுரி பஸ்,எங்க எல்லாம் போகிறதோ!!!
மெயிட் ஆஃப் த மிஸ்ட்..தமிழில் என்ன சொல்லலாம்? பனித்திரை ..கன்னி???
அருவிக்குப் பின்னால் ஒரு பயணம்.அதற்கான வரைபடம்.
இன்னுமொரு வானவில். கனவுலகக் காட்சி.
வானத்திலிருந்து எடுத்த போட்டோ. உபயம் கூகிள்.
இதற்கு வெறும் ''சோ சத்தம்'' போதாது. காது பிளக்கும்,மனது தடதடக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் முகம் எல்லாம் மகிழ்ச்சி. இதுதான் நயகராவின் அடையாளம்.அநேகமாக எல்லா இயற்கை வளங்களுக்கும் பொதுவானதுதான்.
இருந்தாலும் ஒன்றிலிருந்து அடுத்த காட்சிக்கு வரும்போது இது இன்னும் அழகாக இருக்கிறதே என்றுதான் தோன்றுகிறது.
அடுத்த நாள் காலையில் அருவிகளுக்கு நடுவே போகும் படகுப் பயணம்.
படகைச் செலுத்துபவர் விவரித்துக் கொண்டே வந்தார். பெரிய அருவியின் அருகில் வந்துவிட்டோம். கண் கொண்ட மட்டும் அந்த அழகை விழுங்கும்போதே படகுகுகு அடியில் ஓடும் தண்ணீர் படகை உயர்த்துவதை உணர முடிந்தது.
கண் முன்னே அருவி தாழ்ந்தது.நாங்கள் உயர்ந்தோம்.
படகு தாழும்போது மனதும் உடலும் படபடவென்று இறங்கியது. அது உயரும்போது அப்படியே நாம் வானத்தில மிதப்பதுபோல ஒரு உணர்ச்சி.
பெண்ணைக் கேட்டால் உனக்கு அதீதமாகக் கற்பனைம்மா என்கிறாள்.:)
சின்னப் பேரனுக்கு ஸ்ட்ரோலரில் இருப்பே கொள்ளவில்லை.''சிலிச் சிலி சில்'' என்று அனுபவித்தான். பெரியவனுக்கு ஏற்கனவே வந்து பயணம் செய்திருப்பதால் பெரிய மனுஷத்தனமாக நடந்து கொண்டான்.
ஓரமா நிக்காதே பாட்டி. தாத்தாவைப் பிடிச்சுக்கோன்னதும் தாத்தா இரண்டடி தள்ளிப் போய்விட்டார்.:))
பையா படகு ஆடற ஆட்டத்தில பாட்டி இன்னும் ஆடுவா.என்னையே
தள்ளினாலும் அதிசயமில்லை என்று சிரித்தார். இதென்ன வளையாபதி,மந்திரிகுமாரி கதையாச் சொல்றாரே என்று பக்கத்தில இருக்கிற லைஃப்போட்டைப் பிடித்துக் கொண்டேன்:)
வாழ்க்கைப் படகுன்னு வச்சுக்கலாமா.:)
வெளியே வந்து நீலக்கலர் உறைகளைக் களைந்துவிட்டு அங்கயே இருந்த சூவனீர் ஷாப்பில் குட்டி குட்டி சமாசாரங்கள் வாங்கிக் கொண்டோம்.
வெளியில் அமிர்தமான இசை. மேடை போட்டு ஒரு பாடகர் பழைய காலப் பாட்டெல்லாம் பாடிக்கொண்டிருந்தார்.
அங்கேயே பீட்சாவும் வாங்கிச் சாப்பிட்டு விட்டு விடுதிக்குத் திரும்பினோம்.
இரவு அருவிக்குப் பின்னால் போகும் பயணத்துக்குத் தயார் செய்து கொண்டு வந்தால் வெளியே நல்ல மழை.!















