ஆழி அலைகள் கண்டு கண்டு கண்ணே பழுதானது.
மனமோ அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை உள் வாங்கிக் கொண்டது.
இத்தனைக்கும் நான் ஒரு பார்வையாளி மட்டுமே.
ஜப்பானின் பேரிடர் முப்பதடி அரக்கனாக பத்தாயிரம் கரங்கள் கொண்ட
கார்த்தவீர்யார்ஜுனனாக
ஆவேசத்துடன் நகரங்களையும் , உயிர்களையும், பெரிய பேருந்துகளையும்,
கப்பல்களையும் விழுங்கிய காட்சி,இனி மனதை விட்டு அகலுமா என்பது சந்தேகமே.
ஆனால் அதைவிட மோசமான செய்தி இந்த அணூலைகளின் வெடிப்பு. ஒன்றல்ல மூன்று.
இன்னும் அதிகார பூர்வமாக அவர்கள் அதை வெளியிடாவிட்டாலும்,
அணு உலைபற்றிய விஞ்ஞானம் அறிந்தவர்கள் வெளியிடும் அறிக்கைகள்
மனதைக் கலக்குகின்றன.
நம் ஊரில் சுனாமி வந்த போது ,கல்பாக்கம் அணு உலை பற்றிய கவலை
இருந்த போதும், அது சீக்கிரமாக அடங்கி விட்டது. அடக்கப் பட்டுவிட்டது.
நமக்குத் தான் நம் வாழ்க்கையை நடத்த வேண்டிய அவசரம் இருக்கிறதே...
சமூக அலுவலர்கள்,என் ஜி ஓஸ், கருணை உள்ளம் கொண்ட தனிப்பட்ட
மனிதர்கள். இவர்களின் சேவைக்கு நம்மால் முடிந்த அளவில் ,
பணமும் உடைகளும், பாத்திரங்களும் கொடுத்தோம்.
இப்பொழுது நடந்திருக்கும் அழிவு, ஆபத்தையும் பெரிய அளவில் கொண்டுவந்திருக்கிறது.
எல்லோராலும் போற்றப் பட்டு நாடு முழுவதும் மின்சாரம் அள்ளிக்
கொடுக்கப் போகும் அணு உலைகள்.
அவைகளே இப்பொழுது உயிருக்கும் உலை வைக்கும் அபாயங்களாக நொடிக்கு நொடிக்கு
மாறி வருகின்றன,.
எங்கள் பெற்றோர் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தார்கள். எங்களுக்கு மஞ்சள் பல்ப்
வெளிச்சம்.
கொஞ்ச நாட்களுக்குப் பிறகு பால் வண்ண மெர்க்குரி விளக்கு ஒரே ஒரு கூடத்துக்கு.
நாங்கள் சந்தோஷமாகவே வளர்ந்தோம்.
பிறகு வந்தவை அணு மின் உலையும் அதன் அற்புதங்களும். நாமும் வளர்கிறோமே
என்கிற பெருமை. மும்பையில் பாபா அணு உலை.
போக்ரானில் அணு குண்டு வெடிக்கப் பட்டு நாமும் அணுஇயக்க நாடுகளில்
பெருமைப் பட்டுக் கொள்ள இன்னோரு இறகு.
பிறகு வந்தது ரஷ்யாவின் செர்னோபில்.
அதில் இருந்து மீண்டவர்கள் கொஞ்சம். மீண்டவர்களில் புற்று நோயால்
பாதிக்கப் பட்டவர்கள் ஆயிரக்கணக்கில்.
இப்போது ஜப்பானின் அணு உலைகளின்(வெடித்தது என்று ஒரு சாரார்)
இல்லை தயார் நிலையில் இருக்கிறோம் என்று அரசு தரப்பு.) மக்களை
இருபது கிலோ மீட்டருக்குத் தள்ளிச் செல்லுமாறு உத்தரவிட்டிருக்கிறது.
1 பூகம்பம்,
2,சுனாமி,
3, அணுமின் உலை வெடிக்கும் அபாயம்,
4,நானூறுக்கும் மேற்பட்ட ஆஃப்டர் ஷாக்ஸ்.
இவ்வளவையும் மீறி குடும்பத்தைப் பிரிந்த பெற்றோர்.
பெற்றொரை இழந்த குழந்தைகள்.
அபூர்வமாகத் தப்பிய மனிதர்கள். அனைவருக்கும் வேண்டியது ஆறுதல், அடுத்த வேளைச் சாப்பாடு,
தண்ணீர்,
குளிருந்து காப்பாற்ற நான்கு சுவர்கள்.
அதற்கு மேல் அணு அபாயத்தைப் பற்றிச் சிந்திக்கும் நிலையில் கூட அவர்கள் இல்லை.
நாம் சிந்திக்க வேண்டும். எல்லாத் தண்ணீர் வளங்களையும் அழித்து குளிர்பானங்களை உருவாக்குகிறோம்.
இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று மின்சாரத்துக்கு
என்று கூடங்குளத்தில் அணுமின் உலை கட்டுகிறோம்.
கடவுள் வேறு அவதாரம் எடுத்துவருவாரோ.
இல்லை நாம்தான் விழித்துக் கொண்டு ஆவன செய்வோமோ.
மனிதம் பிறக்க, நாடு தழைக்கும்.
ஜப்பானின் மனித இனத்துக்காக நாம் பிரார்த்தனை செய்யும் நேரம் இது.
நமக்காகவும் செய்து கொள்வோம்.
பின் குறிப்பு.
எந்தவகையிலும் விஞ்ஞான வளர்ச்சியை
அலட்சியப் படுத்தவில்லை.
இயற்கையை எந்த வேளையிலும் பகைக்க வேண்டாம் என்பதே என் எண்ணம்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்



