வல்லிசிம்ஹன்
வளம் பெற வாழ்வோம்
எண்ணெய்க் குளியலும்அதனுடன் தொடரும் வாழ்வும்
வளம் பெற வாழ்வோம்
எண்ணெய்க் குளியலும்அதனுடன் தொடரும் வாழ்வும்
குழந்தைகள் எப்போதும் அவ்வளவாக விரும்பாதது
எண்ணெய்க்குளியல்:)
இப்பொழுது எத்தனை வசதிகள் வந்துவிட்டன.
அப்பொழுது பாட்டியின் கால்களில்
படுக்க வைக்கப்பட்ட 11 நாள் குழந்தை படும் பாடு சொல்லி முடியாது.
எண்ணெய் தடவப் பட்ட பட்டுமேனியில்
கொதிக்க கொதிக்க சுடுனீர் விடப்படும்.
அதன் காச் மூச் கத்தலில் அன்னை காதை மூடிக்கொள்வாள்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடரும்
இந்த வன்முறை!!!!!!!!! பிறந்தகத்தைவிட்டு
அம்மாக்காரி புக்ககத்துக்குப் போகும் வரை தொடரும்.
அன்னை நனைந்து ,பிள்ளை அதற்கு மேல் கதறி
அந்தக் காலனியில் எல்லோருக்கும் காலை பத்து மணி என்றாலே
ஒரு உதறல் பிறக்கும்.
பத்துமாதக் குழந்தையைக் கையாள அன்னையும் பழகி ,
அந்தப் பிள்ளையும் வளர்ந்திருக்கும்.
நடக்க ஆரம்பித்தவுடன் எண்ணெயைய்க் கண்டால்
ஓட ஆரம்பிக்கும்:)
பத்துவயது வரும்போது தனக்கும் எண்ணெய்க் குளியலுக்கும் ஸ்னானப் ப்ராப்தி
கிடையாது என்று முடிவெடுத்துவிடும்.
மேலே நடந்தது எங்கள் வீட்டுக் கதை.
பெரியவனுக்கு அப்புறம் வந்த மகளும்;
சின்னவனும் அத்தனை அழவில்லை.
எனக்கும் 20,22 வயதானதால் முதிர்ச்சி வந்துவிட்டது
என்று நினைக்கிறேன்.
தினசரி யுத்தம் முடிந்து குளியலைக் குழந்தைகள்
ரசிக்க ஆரம்பித்தார்கள்.
ப்ளாஸ்டிக் வந்த புதிது. கோவையில்
இரண்டு பெரிய குளியல் தொட்டிகள் கிடைத்தன.
இரண்டிலும் நீர் நிரப்பி,
அவர்களை விளையாட விட்டதில் எனக்கும் நிம்மதி அவர்களுக்கும்
ஆனந்தம்.
தோட்டத்தில் அவர்களை எனக்கு உதவியாக
இருந்த ராஜம்மா கவனித்துக் கொள்ள
நான் சமையலை முடித்துக் கொள்வேன்.
மூவருக்கும் பெரிய கிண்ணதில் பருப்பு சாதம்,
பிறகு தயிர் சாதம், தனித்தனியே கிண்ணத்தில் காய்கறிகள்
கொடுத்துவிட்டால்,
அவர்களின் அப்பா வரும் நேரம் மதியத் தூக்கத்துக்கு
தயார் ஆகிவிடுவார்கள்.
சிங்கத்துக்கு வெளியே சாப்பிடப் பிடிக்காது.
ஒரு மணிக்கு மதிய சாப்பாடு சாப்பிட வந்துவிடுவார்.
ஓஹோ இது எண்ணெய் சம்பந்தப் பட்ட கதை. மீண்டும் நாளை தொடருகிறேன்.
அனைவருக்கும் இந்த நாள் நல்லதாகட்டும்.
