Blog Archive

Thursday, January 31, 2008

வந்தாள் மஹா லக்ஷ்மியே!!

சிரஞ்சீவி நாராயணன் சாருக்கும் சௌபாக்யவதி ஜயலக்ஷ்மிஅம்மாவுக்கும்
கொள்ளுப்பேத்தி பொறந்திருக்காங்க.

அமீரகத்தில புதன் கிழமை, சுவாதி நட்சத்திரத்தில்
பிறந்திருக்கும் அந்த லட்சுமியை வலையுலக உயர்ந்தோர்கள் ஆன நண்பர்கள் எல்லோரும் வாழ்த்த வேண்டுகிறேன்.

ஒரு 15 நாட்கள் முன்னாடியே வந்துட்டாங்க.
கொஞ்சம் எல்லாரும் ஆடிப் போயிட்டோம்.
ஸ்ரீலக்ஷ்மிந்ருசிம்ஹனும் ராமனும்,ஸ்ரீனிவாசனும் இருக்க

உனக்கென்ன பாட்டி கவலைனு கேட்டுட்டாங்க:)))
வாழ்த்துக்கள் பெண்ணே!!!












Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Monday, January 28, 2008

263,திருமங்கலம்54...திண்டுக்கல் 60

இந்தப் படம் பார்க்கும் போது பள்ளி நாட்களில் சனிக்கிழமை அனேகமாகக் கட்டு சாதம் எடுத்துக் கொண்டு கண்மாய்க்கரை போவோம். தண்ணீர் இந்தக் கண்மாயில்   இருந்து  நாங்கள் பார்த்ததில்லை.
ஆனால் கரையில் ஒரு பெரிய ஆலமரம் இருக்கும்.
அதில் தொங்கும் விழுதுகளில் ஆடினதுண்டு.
அம்மா கொடுக்கும் டிபன் தூக்கில் தயிர்சாதமும் வறுத்த மோர்மிளகாயும் தான் இருக்கும்.

இங்கயும் அதே கரியடுப்பும், விறகடுப்பும் தான்.
காலை வேளையில் பழையசாதம் மோர். நார்த்தங்காய், இல்லாவிட்டால் கத்திரிக்காய், கொத்தவரங்காய் வற்றல்:))

ஆஹா, அந்த வாசனையை என்ன சொல்வது. அம்மா கையில் பாகற்காயும், கருணைக்கிழங்கும் கூட பிரமாதமாக இருக்கும்.

நாம் இப்போது 1954ஆம் வருட ஜூன் மாத, ஒரு திங்கட்கிழமை மதியத்துக்கு இல்லையா போகணும்!!

அந்த 12 மணி வெய்யிலில் தம்பியிடமும் சொல்லாமல் அவனைத் தனியே விட்டு விட்டு(அவனுக்கு 5 வயது)
தனியாக வரப் பயமாக இருந்தாலும்,
அநியாயம் நிகழ்ந்தது போல ஒரே கோபம்,அழுகை.
கதவைத் திறந்த அம்மா, தம்பி எங்கே என்று கேட்டாலும் ,சாப்பிடலையா என்று விசாரித்தாலும் பதில் சொல்லாமல், பள்ளியில் நடந்ததை மட்டும் சொல்லி நான் இனிமேல் ஸ்கூலுக்குப் போக மாட்டேன் என்று தீர்மானம் சொல்லியாச்சு.
அம்மாவுக்கு ஒரு பக்கம் கோபம், ஒரு பக்கம் சிரிப்பு.
சரி அப்பா வரட்டும், விசாரிக்கலாம் என்று தட்டெடுத்து சாப்பாடையும் எடுத்து வைத்தார்.
சாப்பாடு உள்ளே போனதும் தம்பியைத் தனியே விட்டது
கவலை கொடுத்ததால் மீண்டும் பள்ளிக்கு ஓடி அவனைக் கைப்பிடித்து அழைத்து வந்தேன்.

அப்பா சாப்பிட்டதும் ப்ரச்சினையை அம்மா சொன்னார்.
உனக்கு அவன் உன்னொட படிப்பதால் என்ன கஷ்டம் என்று அப்பா கேட்டார்,.
அதெப்படி அக்காவும் தம்பியும் ஒரே வகுப்பில் இருக்க முடியும் என்பது என் வாதம்.
அப்பா தன் சைக்கிளில் எங்களை ஏற்றிக் கொண்டு
பள்ளி வந்து பெரிய டீச்சரைச் சந்தித்தார்.

அவர் எனக்காக வந்தார் என்று நான் நினைத்தாலும், உண்மை அது இல்லை.
அவர்களிடம் தம்பியின் வயதுக்கு ஏற்றது இரண்டாம் வகுப்பு என்றும் அதற்கு உண்டான பாடங்களைப் படித்தால் சரியாக இருக்கும் என்றும் சொன்னதும்,தலைமை ஆசிரிய்ரும் ஏற்றுக் கொண்டார்,. நானும் தம்பியும் எதிர் எதிர் வகுப்பில் அமர்ந்தோம்.
அப்படியிருந்தும் அவன் 15 வயதிலேயே பள்ளிப்படிப்பை முடித்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்து விட்டான்:))
திருமங்கலத்தில் அப்போது இரண்டு ஹைஸ்கூல்கள் இருந்தன. ஒன்று பெண்களுக்கான போர்ட் ஹைஸ்கூல்,
மற்றது பி.கே.என். நாடார் பள்ளி ஆண்பிள்ளைகளுக்காக.

ஒரே ஒரு நீளமான மெயின் ரோட்.
பஸ் நிலயத்திலாரம்பித்து ஆனந்தா திரை அரங்கத்தைக் கடந்து,மீனாட்சி பவன் ஹோட்டல்,தபாலாபீஸ்,அங்குவிலாஸ் வீடு,
சின்னக்கடைத்தெரு,சன்னதித் தெரு, மீனாட்சி அம்மன் கோவில் வழியாக,வாடிப்பட்டி,
உசிலம்பட்டி,கல்லுப்பட்டி,சோழவந்தான் என்று பஸ்கள் நம் வீட்டு வாயிலாகப் போகும்.

நாங்கள் இருந்த வீட்டுக்குப் பின்னால் ஒரு முனீஸ்வரர் கோவிலும் உண்டு.
அங்கே கேட்கும் உடுக்கைச் சத்தம் கேட்டு ஜுரம் வந்ததும் உண்டு.
பக்கத்து வீட்டில் நாலைந்து குடித்தனங்கள் இருந்தார்கள். ஒரு வீட்டில் கிளி வளர்த்ததால் அங்கேயெ இருந்து,அவர்களது இட்லிமெஸ்ஸுக்கு சட்டினி அரைத்துக் கொடுத்த அனுபவமூம் உண்டு:))
வாரமொருமுறையாவது அங்கிருந்து நான்கு அணாவுக்கு இருபது இட்லி நிறைந்த பாத்திரம் எடுத்து வந்ததும்,
ஒரு அரசு மருத்துவமனையில் அடிபட்டுக் கொள்ளும்போதெல்லாம் டின்க்சருக்கு அலறிக் கட்டுப் போட்டுக் கொண்ட நினைவும் உண்டு.

ஒரு தடவை திருமங்கலம் வழியாக ஒரு சுதந்திரக் கொடியேற்றத்துக்கு வந்த திருமதி இந்திரா காந்திக்கு மாலை போட எங்கள் பெரிய டீச்சர் அழைத்துப்போனதும்

முதல் முதலாக ஒரு வெள்ளைக் கதர்ப் புடவை கட்டி தலையில் முக்காடு போல அணிந்திருந்த ஒரு அபூர்வ பெண்ணைப் பார்த்ததும், சொல்ல வந்த ஜய்ஹிந்த் மறந்ததும் இப்போது சிரிப்பு வருகிறது.
அவர்களுடன் திரு.பட்டாபிராமன் என்பவரும் வந்திருந்தார்.

எங்கள் மூவரின் பல இனிய நாட்கள் இங்கேதான் கழிந்தன.
பெரிய தம்பி வீட்டுக்குள் நிறைய விளையாடுவான். சின்னத்தம்பிக்கு வெளியே வந்து விளையாட வயது பத்தாது.

ஆகக் கூடி ஊர் சுற்றியது நான் ஒருவளே:))















Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Friday, January 25, 2008

ஸ்ரீவில்லிபுத்தூர்....1948 திருமங்கலம் '54



ஸ்ரீரங்கமன்னார் கோதையோடு ஆண்டுகொண்டிருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்ததும் இன்னும் வளம் நிறைந்தது.


கோதை பிறந்தவூர், கோவிந்தன் வாழும் ஊர். கேட்பானேன்!!
குடும்பம் கொஞ்சம் விரிந்தது.சுற்றங்கள் வந்து போகும் இடம் ஆனது.
ஆண்டாளைச் சேவிக்க வருகிறவர்கள் ராத்தங்கல் என்று சிரம பரிகாரம் செய்து கொள்ளும் இல்லமானதும் ஒரு அதிர்ஷ்டமே.
பெரியவர்கள் பெருமாள் கதை பேச அம்மமவும் அப்பாவும் அவர்களை உபசாரம் செய்து,வசதிகள் செய்து கொடுப்பது பார்க்க அருமையாக இருக்கும்.
வீட்டில் இரண்டு கிணறு இருக்கும்.
சமையலறை முற்றத்தில் ஒன்று.
கொல்லைப்புறம் போகும்தோட்ட வழியில் ஒன்று. இரண்டிலும் எட்ட்ட்ட்டிப் பார்த்தால் தான் தண்ணீர் தெரியும்:))
இராமனாதபுரம் ஜில்லா தண்ணீர்ப் பஞ்சத்துக்குப் பேர் வைத்துக்கொண்டிருந்த காலம்.
இருந்தும் அந்த ஊர் மனிதர்களுக்கு ஆண்டாள் ஒருத்தி போதும்.
தங்கள் வீட்டுப் பெண்ணாக ஒரு உற்சவம் விடாமல் கோவிலி திரண்டு வந்து, பூ தொடுத்து, பபட்டுப் பபடி,கோலாட்டம் ஆடி. அந்த அழகான் கம்பீரமானத் தேரை இழுத்து அதை தேர்நிலைக்குக் கொண்டுவர அத்தனை பாடுபடுவார்கள்.
அந்தத் தேருக்கோ எல்லா இடத்திலும் நின்று எல்லாரையும் பார்த்து ஆனந்தப் பட்டு அப்பப்போ நின்று விடும்.
அப்படி எங்க வீட்டு வாசலிலும் ஒரு தடவை நின்று விட்டது:)
அப்பா அம்மா இருவர் கைகளிலும் தேர் வடங்கள் போட, அளித்த அன்புத் தடங்கள் வெகு நாட்களுக்கு இருந்தது.
நான் சொல்வது 55 வருடங்களுக்கு முந்தின கதை.
அப்புறம் டி.வி.எஸ் கம்பனி ஏற்பாட்டில் நல்ல விதமாகத் தேர் ஓடுவதாகக் கேள்விப்பட்டேன்.
இருந்தாலும் தேர் எங்க வீட்டு வாசலில் நின்ற அந்த நாட்கள் அமிர்தமானவை.
காலயில் எழுந்ததும் பல் கூடத் தேய்க்காமல், ஓடி வந்து வாசலில், அத்தனாம் உயர்த்தில் ஆடிக் கொண்டிருக்கும் தொம்பைகளையும், மகா பெரிய தேர்ச் சாக்கரங்களையும்
அதில் பதிந்திருக்கும் அழகிய சிற்பங்களையும், கம்பீரக் குதிரைகளையும், தள்ளி நின்று ஒரு பார்வை பார்த்துவிட்டு வீட்டுக்குள் போய் விடுவோம்.
வோம் என்றால் என் முதல் வகுப்பு, பக்கத்து வீட்டுத் தோழிகள் இந்திரா,செல்லி,கமலி இவர்கள்தான்.
பிறகுதான் வேடிக்கை. இப்போது மாதிரி 8 மணி பெல் அடிக்கும் வழக்கம் அப்போது ஏது.?
ஏதாவது சாப்பிட்டுவிட்டு ஒரு ஸ்லேட் ஒரு சிலேட்டுக் குச்சி எடுத்துக் கொண்டு தேரில் ஏறி விளையாட வேண்டியதுதான்.
தேர் நின்ன உடனே ஆண்டாளும் ரங்க மன்னாரும் அவங்க வீட்டுக்குப் போயிட்டாங்க. (கொஞ்சமா நஞ்சமா இரண்டு பேருடைய நகையும்!) அதனால் எங்கள் விளையாட்டைத் தடுப்பவர்கள் யாரும் இல்லை.




இந்தக் காலநேரத்தில் மேலும் இரண்டுஆண்குழந்தைகள் வீட்டிற்கு வந்தாகி விட்டது.ஸ்ரீனிவாசன்,ரங்கனாதன்.
அப்பபவுக்குத் தலமை குமாஸ்தாவாகப் பொறுப்புக் கொடுத்துத்
திருமங்கலம் என்ற தாலுகாவுக்கு ( டவுன்)மாற்றினார்கள்.
அங்கு கஸ்தூரிபாய் ஆதாரப் பள்ளியில் ஆண்டாளுக்கும் அவள் தம்பி ஸ்ரீனிவாசனுக்கும் ஒரே மாதிரி மூன்றாம் வகுப்பில் சீட் கொடுத்ததால் ,(பின்னே! உலகே மாயம் பாட்டு, துன்பம் நேர்கையில் யாழெடுத்து பாட்டு எல்லாம் கரதலைப் பாடமாகப் பாடத்தெரிந்த பெண்ணுக்கு,
உயிரெழுத்து 12 சொல்லத்தெரியவில்லை..
பெரிய மிஸ்ஸைப் பார்த்துப் பயம்) ஆண்டாள் யாருக்கும் தெரியாமல் மதியம் வீட்டுக்கு வந்தாச்சு.:))





Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Thursday, January 24, 2008

261,கயத்தாறு ..ஸ்ரீவில்லிபுத்தூர்...1946


அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எட்டு வயது வித்தியாசம்.
அதைப் பெரிதாக நினைக்காத காலம் அது.
அம்மாவுக்குத் தெரிந்தது, அப்பா நன்றாகச் சாப்பிட வேண்டும்.
தன்னால் அவருக்கு ஒரு தொந்தரவு வரக் கூடாது.
கண்ணைக் கட்டிக் காட்டில விட்ட மாதிரி இருந்தாலும்,
அக்கம் பக்கம் வீடுகள் என்று எதுவும் இல்லாத போதும்,
அதைக் கண்டு சிந்திக்கவோ பயப்படவோ தெரியாத குணம்.
தபாலாபீஸ் ப்யூன் மூலம் காய்கறி வாங்கவும், மற்றபடி சென்னையிலிருந்து தனக்கு வேண்டும் என்கிற
எம்ப்ராய்டரி விஷயங்கள்,துணிகள் இவற்றைத் தன் அம்மாவுக்கு
எழுதி போஸ்ட் பார்சல் என்று வரவழைத்துக் கொண்டார்.
அப்பொழுது கல்கியிலு, ஆனந்த விகடனிலும்
வந்து கொண்டிருந்த தொடர் கதைகளின் சுருக்கம் சீனிம்மா(அம்மாவோட அம்மா)
மூலம் வாராவாரம் அப்டேட் செய்து கொண்டு விடுவார்.
அப்போது கல்கியில் அலை ஓசை வந்திருக்குமோ.
வீட்டு வைத்தியம் என்று ஸ்ரீஹரி என்பவர் எழுதிய வார அத்தியாயங்களை
அப்பா பைண்ட் செய்தது இப்போதும் அப்பா வீட்டில் இருக்கிறது.
இருவருக்கும் பத்திரிகை படிக்கும் வழக்கம் இருந்ததால் த ஹிண்டுவோ ,
இண்தியன் எக்ஸ்ப்ரசோ வாங்கினார்கள்.
அம்மாவுடைய ஆங்கில அறிவு வளர்ந்தது ஃப்ரான்க் மொரேஸ் இது போன்ற
அரசியல் எழுத்தாளர்களீன் சிந்தனைகள்,எப்பவாவது நெல்லை,தூத்துக்குடி போன்ற
பெரிய ஊர்களிலிருந்து அவ்வப்போது கிடைக்கும் ரீடர்ஸ் டைஜஸ்ட்,மஞ்சரி என்றுதமிழ்ப் பத்திரிகை
இவற்றால் தான்.
பிற்காலத்தில் நான் அம்மாவின் தெளிவான பேச்சைக் கேட்டு அதிசயித்திருக்கிறேன்.
இருவருக்கும் ஒரே மாதிரி விருப்பங்கள். கட்டுப்பாடுகள். கயத்தார்றில் கட்டபொம்மன்
தூக்கில் போடப் பட்டது கூட அம்மாவிடம் அப்பா சொல்லவில்லையாம்.வருத்தப் படுவாரோ என்று.
பிற்காலத்தில் 1957ல் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் பார்த்துவிட்டு ,வெளியே வரும்போது நான்
மிகவும் அழுது தலைவலி வரவழைத்துக் கொண்ட போது,
அம்மா ''எல்லாவற்றிலும் என்ன பலன் கிடைத்தது என்று யோசிக்கணும் அவர் அந்த மாதிரி இறந்ததால் நமக்குச் சுதந்திரம் கிடைத்தது. அதே போல நம்மால் பயனுள்ள செயல் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசிக்கணும்னு
சொன்ன போது அப்பா நமட்டுச் சிரிப்பு சிரித்தது இப்பவும் ஞாபகம் வருகிறது.:))
கொஞ்ச நாட்களில் செர்ருப்புப் போட்டுக் கொண்டு வெளியில் நடந்தால் அதிசயமாகப் பார்க்கும்
மற்றப் பெண்களையும்,
பாறைக் கிணாற்றிலிருந்து ஊறின
தண்ணீரை 'சேந்தி' எடுப்பதும் பழகிவிட்டது.
காலையில் குருணைக் கஞ்சி சாப்பிட்டு விட்டுக் காரியாலயம் செல்லும் அப்பா,
மதியம் உணவுக்கு 12 ம்ணிக்கு வருவதற்குள் விறகடுப்பில் வெண்கலப் பானையில்
சாதமும்,கரியடுப்பில் ஒரு குழம்பும்,ரசமும்,பொரியலும் செய்துவிடுவார்களாம்.
விறகு யார் வாங்கிக் கொடுப்பார்களோ என்று நான் கேட்டால் ,விறகு வெட்டும் இடம்தான் பக்கத்தில் இருந்தது.
அதில் நான்கு விறகு(காய்ந்தது) வாங்கினால் ஒரு வாரம் வரும் என்பார்கள்.
அம்மாவுக்கு கதை எழுதவும் பிடிக்கும்.
மதியம் தூங்க ரொம்பவே பிடிக்கும்.
பின்னாட்களில் ,தன் நீண்ட கூந்தலுக்கு ஒரு குட்டி முடிச்சுப் போட்டுக் கொண்டு
கையில் ஹிண்டு பத்திரிகையைப்(பிடித்து) படித்தவாறே தரையில் தூங்கும்
அம்மாவை சீண்டுவதும் நினைவில் இருக்கிறது;)
அப்பா அம்மா குடித்தனம் அழகாக நடப்பதற்கு சாட்சியாக ஒரு சிசு உருவானது.

அதற்கு வழமையாகச் செய்ய வேண்டிய பூச்சூட்டல்,ஸ்ரிமந்தம்,வளைகாப்பு
என்று சகலமும் அழகாகச் செய்து வைத்துத் திருவேங்கடம் பாட்டி சென்னைக்குச் செய்தி சொன்னதும்,
அங்கிருந்து ஸ்ரீ வீரராகவனும் ருக்குமணி அம்மாளும் வந்து செங்கோட்டை எக்ஸ்ப்ரஸ்ஸில்


சேச்சிப் பாப்பாவைப் பூப் போல் அழைத்துப் போனார்கள்.
தன்னைப் போலவே அடக்கமாக இருக்கும் அங்கவஸ்திரத்தைப் பிடித்த கையோடு அப்பா ரயில்வே
ப்ளாட்ஃபார்மில் நிற்கும் காட்சி எனக்குத் தோன்றுகிறது..
அம்மாவுக்கு அப்போது பதினாறு வயது.

பின்குறிப்பு. ;
சென்னையில் அழகாக சுருள் சுருள் முடியாகப் பிறந்த ஆண் குழந்தை சரியாக ஆறாம் மாதம் தலையில்
கரப்பான் எனப்படும் தோல்வியாதி வந்து
குணப்படுத்த முடியாமல் இறைவனடி சேர்ந்தது ஒரு தீராத வருத்தம்.
அதை மறக்க ஒரு வருடம் ஆனது அந்த இளம் தம்பதிக்கு.
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாற்றலாகி வந்துவிட்டார் அப்பா.

இரண்டு வருடங்கள் கழித்து, திருவேங்கடவல்லி என்கிற ,ஆண்டாள் ரேவதி பிறந்தாள்:)


Tuesday, January 22, 2008

தனிக்குடித்தனம் ஆரம்பம்......1945 ..1


திருமணம் முடிந்து அவரவர்கள் ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்.
சிரஞ்சீவி நாராயணனுக்கு ஸ்ரீகாகுளம் ஊரில் முதல் போஸ்டிங்.
நெல்லையைத்தவிர,மதுரையும் சென்னையுமே கொஞ்சம் தெரிந்த அந்த பையனுக்கு,
நிறைய புத்திமதி சொல்லித் தாத்தா வண்டி ஏற்றிவிட்டார்.
அங்கு நடந்த சம்பவங்களை எங்கள் அப்பா சுவைபடச் சொல்லுவார். எனக்குத்தான் மறந்துவிட்டது.


அங்கிருந்த நெல்லை மாவட்டம் கயத்தாறு என்ற கிராமத்துக்கு தபால் ஆபீஸ் குமாஸ்தாவாகப்
பொறுப்புக் கொடுத்தார்கள்.
அப்பா(நாராயணன்) பாளையங்கோட்டையில் படித்தததாகச் சொல்லுவார். அவருடய கல்லூரிப் படிப்பும் அங்குதானா என்று தெரியவில்லை.
அந்தக் காலகட்டங்களில் இண்டர்மீடியட் இரண்டு வருடமும், இளங்கலைப் பட்டதாரியாவதற்கு இன்னும் இரண்டு வருடமும் தேவை.

அப்பாவின் கையெழுத்தும் ஆங்கிலத்தில் அவருக்கிருந்த ஆளுமையும் என்னை எப்பவுமே வியக்க வைத்திருகின்றன.

இப்போது அப்பா அம்மாசம்பந்தப் பட்ட சமாசாரங்களைச் சேகரிக்க மிச்சம் இருக்கும்
நாலைந்து பேரைக் கேட்பதற்குப் பதில் என் பெற்றோரிடம்
நான் ஏன் மனம் விட்டுப் பேசவில்லை என்று இன்னும் வருத்தமாக இருக்கிறது.

அவர்களும் அதுப்போல அனஸ்ஸ்யூமிங் வகைப்பட்ட மனிதர்களாக,வெகுளியாகக் கருமமே கண்ணாயினார் டைப்பாக இருந்திருக்க வேண்டாம்.
சரி கயத்தாறுக்குப் போகலாம் வாருங்கள்.

அங்கு ஒரு தனி வீடு பார்த்துக் குடித்தனம் வைக்க அப்பாவின் அம்மா பையனையும் அழைத்து வந்து விட்டார்.
அம்மா அதான் நம்ம கதா நாயகி சேச்சிப்பாப்பா அலையஸ் ஜெயா, தன் மாமாவின் துணையோடு,
புது வீட்டுக்கான பாத்திரப் பொட்டி,
கார்த்திகை விளகுகள் ...ஒரு பெரிய வாழைத்தண்டு விளக்கு என்பார்கள். திருவனந்தபுரம் டைப்.
அதே போல குட்டி அகல்கள் வெண்கல,பித்தளையிலானவை,
காரைக்குடி டப்பா என்று சொல்லக் கூடிய அரிசி,பருப்பு போட்டு வைக்கிற பெரிய டப்பாக்கள்.
ஊறுகாய் போட மஞ்சளும் வெள்ளையுமாக உயர ஜாடிகள்.
கொலு வைக்க பண்ருட்டிப் பொம்மைகள் என்று
ரெண்டு குதிரை வண்டியில் வந்து இறங்கிய பொருட்களைப் பார்த்துத்
திருவேங்கடப் பாட்டி சிரித்தாராம்.
தாத்தாவும் பாட்டியுமாக புதுத் தம்பதிகள் செட்டில் ஆக உதவி விட்டு,
அதலப் பாதாளத்தில் இருக்கும் கிணற்றில் தண்ணீர் சேந்தும் முறையும்
சொல்லிக் கொடுத்தாராம்.
மெட்ராஸ் பொண்ணு கிணத்தை எங்க பார்த்திருக்கப் போகிறது என்று அவர்களுக்கு வருத்தம்.
அத்ற்காக உதவிக்கு ஒருவயலில் வேலை செய்பவரிடம் சொல்லித் தினமும் இரண்டு குடம் தண்ணீர் எடுத்துக் கொடுக்கச் சொல்லி விட்டு வண்டி ஏறி திருநெல்வேலிக்குப் பயணமானார்கள்.
ஒன்பது கஜம் நூல் புடவையும் கட்டிக் கொண்டு ஒரு செல்லுலாய்ட் பொம்மை போல அம்மா நின்னதாக உறவுக்காரர் சொல்லுவார்.
அப்புறம் அம்மாவும் அப்பாவும் செய்த குடித்தனம் எப்படி என்பது அப்புறம் பார்க்கலாம்.:))

Sunday, January 20, 2008

பாதுகையே நாட்டை ஆளும்




பாட்டி!! ஒரு கதை சொல்லேன். இப்படித்தான் எங்கள் இரவு நேரம் ஆரம்பமாகும்.


நாள் பூராவும் பள்ளிப்பாடங்கள் எழுதிவிட்டுக் கொஞ்ச நேரம் தாத்தாவோடு கேள்விக்கணைகள் தொடுத்து அரட்டை அடித்துவிட்டு,


அவர் தூங்கப் போனதும் என்னிடம் வருவான் பெரிய பேரன்.


இரண்டு வருடங்கள் முன்னால் சொன்ன சாக்கலேட் மரம், ஐஸ்க்ரீம் வீடு, பகாசுரன் கதை இதெல்லாம் இப்ப வேண்டாம்.


நான் பெரியவனாய்ட்டேனே பாட்டி:))




சரி ராமாயணம் சொல்லலாமான்னதும் ரொம்ப ட்ராஜிக்கா இல்லாம சந்தோஷமான பார்ட் மட்டும் சொல்லு'' என்று பதில் வரும்.


இவனுக்காக ராமாயணத்தில் கொஞ்சம் சைடு கதைகள் எல்லாம் இட்டுக் கட்டி சொல்வதும் உண்டு.


ஏனெனில் கேட்கிற கேள்விகள் சுலபத்தில் பதில் சொல்ல முடியாது.


உ-ம், ராமர் பரதன் கிட்ட பாதுகைகளைக் கொடுத்துட்டு வெறும் காலோட போனாரா.


பரதன் வேற ஏற்பாடு(another pair of sandals)


செய்திருக்கலாமே.


அப்போ சீதை,லக்ஷ்மணர் இவர்களும் செருப்பு போட்டுக்கலியா?




சாமி!!னு ஆயிடும்.


நான் என்ன, கம்பரா,வால்மீகியா என்று தேடிப் படித்த வகையும் இல்லை. எல்லாம் கேள்விஞானம்.


ஒரு நிமிஷம் இந்த கே ஆர் எஸ் போன் நம்பரை வாங்கி விஷ்ணு(பேரன்) கிட்ட கொடுத்து விட்டால் என்ன என்று தோன்றியது.


அவர்தான் எல்லாவற்றுக்கும் ரெடியாகப் பதில் தேடித் தருவார்.


போனால் போகட்டும் பாவம் கண்ணபிரான் ரவி என்று விட்டுவிட்டேன்.:)


அதற்குப் பதிலாகப் பாதுகா தேவியின் மகிமையைச் சொல்லலாம் என்று ஆரம்பித்தேன்.




''ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய பாதுகா சஹஸ்ரம் நூலில் இந்த அழகான கதை வருவதாகப் படித்தவர் ஒருவர் எனக்குச் சொன்ன விஷயத்தை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

ஸ்ரீராமன் சேதுக்கரையில் நிற்கிறான்.

சுக்ரீவன்,லக்ஷ்மணன் ,அனுமன்,அங்கதன் இன்னும் மற்ற வானர சேனைகளும்,கரடிப் படைகளும் சீறிவரூம் கடலைப் பார்த்து,ஏங்கி நிற்கின்றனர்.

எப்படிக் கடப்பது இந்தக் கடலை??


அனைவராலையும் தாண்டக் கூடிய தொலைவு இல்லையே என்று யோசித்தபோது,விபீஷணின்
ஆலோசனைப்படி உணவும் நீரும் அருந்தாமல், தர்ப்பசயனத்தில் இருக்கிறான் ஸ்ரீராமன்.
சமுத்திரராஜன் வரவில்லை. ராமபாணத்தைப் பூட்டி கடல் மேல் ஏவும்போதும்
கடல் பொங்கியதாம். ஆனால் வற்றவில்லை. பிறகு நடந்த ,அணைகட்டும் படலம்
ராவண வதை,ஸ்ரீராமபட்டாபிஷேகம் எல்லாம் தெரிந்த,தெளிந்த புராணம்.

கடல் வற்றாமல் போனதற்கு ஸ்ரீமன்நிகமாந்த மகாதேசிகன் தன் பாதுகாசஹஸ்ரத்தில்
புதிய அழகிய அர்த்தமுள்ள காரணம் கொடுக்கிறார்.
ஸ்ரீராம பட்டாபிஷேகம் நடக்கவில்லை. அவருடைய பாதுகைகள் அரியணையில் அமர்ந்தன. அவைகளுக்குப் பட்டாபிஷேகம் நடத்திவைத்தான் பரதன்.
பாதுகாதேவி பெருமான் சரணங்களிலிருந்து கிளம்பி சிம்மாசனத்தில் அமர்ந்தன.
அவர் கைகளைப் பற்றிய திருமகள் சீதையோ கானகத்தில் நடந்தாள்.
இங்கே நந்திகிராமத்தில் பாதுகாதேவிக்குத் தினம்
காலை மாலை என்று சகல புண்ணிய நதிகளிலிருந்தும் கொண்டுவந்த தீர்த்தங்களால்
அபிஷேக ஆராதனை செய்தான் பரதன்.
அவ்வளவு புண்ணிய தீர்த்தங்களும்
சர்யு நதியை அடைந்து சாகரத்தையும் சேர்ந்தனவாம்.
வழக்கமாகக்
கடலில் நதிகள் சங்கமிக்கும்போது கடலுக்கு ஏதும் மாற்றம் கிடையாதாம்.
ஆனால் ஸ்ரீராமபாதுகா தீர்த்தம் அப்படியில்லையே!!
அதற்குத் தனி மகிமை அல்லவா!!

அம்ருதம் போல இந்த ஸ்ரீபாதுகாதீர்த்தம் கடலில் கலந்ததும் கடல் மேலும் விருத்தியாக,
கடல் நீரும் பெருகி விட்டதாம்.
அத்தனையும் அக்ஷ்யமாக வளம் பெருக,
அதே கடல் நீரில் ராம்பாணம் வந்தும் கடல் நீர் வற்ற சந்தர்ப்பமே இல்லாமல்
போய்விட்டதாம்.
ஸ்ரீராமபாணம்,பாதுகா தேவியின் சரண் புகுந்து புறப்பட்ட தீர்த்தத்திடம்
வாக்குவாதம் செய்யாமல் திரும்பிவிட்டதாம்.
என்ன ஒரு கற்பனை.!!
அவ்வளவு பெரிய மகா மகானின் வாக்கியங்களைப் படித்தவுடன்
இதையே கதையாகச் சொல்லத் தோன்றியது.
ஸ்ரீராமா சரணம்.
ஸ்ரீராம பாதுகா சரணம்.
ஸ்ரீ பாதுகா தேவியே சரணம்.
இந்தக் கட்டுரைக்கு ஆதாரம் ஸ்ரீந்ருசிம்ஹப்ரியா தை மாத இதழ்.
நன்றி.
சொற்குற்றம் பொருள் குற்றம் பொறுக்கவேண்டும்.


Thursday, January 17, 2008

தர்ஷீல்...குழந்தையா கதாநாயகனா

இன்று முழுவதும் இதுதான் பிரச்சினை டிவியில்.
தாரேன் சமீன் பர் படத்தின் கதநாயகன் இந்தப் பையன். இவனுக்கு எட்டு வயது என்றும் பத்து வயது என்று சிலரும் சொல்ல,

சிறந்த குழந்தை நடிகனாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிற இந்தச் சின்னப் பையன் கேட்கும் கேள்வி
நான் ஏன் பெஸ்ட் ஆக்டர் என்று சொல்லப் படக் கூடாது??
அதற்கு எல்லா செய்தி சானல்களும் ஒரு போல்(poll)
எடுத்து அதற்கு 90% பார்வையாளர்கள் அவன் சொல்வது சரிதான் என்கிறார்கள்.

எப்போதும்போல் என்னால் இந்த விஷயங்களை உள்ளே உணர்வது கடினமாக இருக்கிறது.
ஆமீர்கான் எடுத்த படம். அவரும் படத்தில் பாதிக்கு மேல்தான் வருகிறாராம்.

இது டிஸ்லெக்சியா உள்ள ஒரு குழந்தையாக தர்ஷீல்
நடித்திருக்கிறாராம்.
நன்றாகவே நடித்திருக்க வேண்டும்.
நான் இந்தப் படம் பார்க்கவில்லை.

ஆனால் இந்தக் குழந்தையைப் பேட்டி எடுத்தவர் சரமாரியாகக் கேள்வி தொடுத்தாலும்,மகா ப்ரொஃபெஷனலாகப் பதில் சொன்னான்.
துளி பயம் இல்லை.படு காஷுவல்.
தீர்க்கமான தீர்மானம்...... பிரமிப்பாக இருந்தது.

கேள்விகள் வரும் முன்னாலேயே பதில்; ரெடி.!!
நான் தான் பெஸ்ட் எதிலேயும்.
தற்காலக் குழந்தைகள் வயதுக்கு மீறிய மனவளர்ச்சியுடன் இருப்பது அவ்வப்போது க்அண்களில் படுகிறது. அவர்கள் ஊடுருவும் பார்வையும் கணிப்பும் கருத்துகளும்
என்னை எப்போதுமே ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

அதனால் இந்தப் பையனின் துடிப்பும் ஆர்வமும் புதிதாக இல்லாவிட்டாலும்,
எத்தனை குழந்தைகள் வெகு சீக்கிரம்
தங்கள் இளமையை இவ்வாறு
இழந்துவிடுகிறார்களோ என்ற பயம் வருகிறது.

நம் ஊர் குழந்தை நட்சத்திரங்கள் சினிமாக்களில்
வயதுக்கு மீறிய பேச்சு பேசுவதைப் பார்த்து இருக்கிறோம்.
ஆனாலும் ஒருவரும் தாய் தந்தையரை மீறி நடந்ததாக இதுவரை கேள்விப்பட்டதில்லை.

இன்றைய தலைமுறைப் பெற்றோரும் தீவிரம். பிள்ளைகளும் தீவிரம். இதுதான் இந்தப் பேட்டியின் போது தெரிந்தது.
பள்ளி செல்லும் ஒரு சிறுவனின் சாமர்த்தியமன பதில்கள் நமக்கு இப்போது மனமகிழ்ச்சியை வரவழைத்தாலும்,
அதை ஒரு தேசியப் பிரச்சினை போலக் கையாளுவது ஊடகங்களின் தலையாய கடமையா??

கிட்டத்தட்ட அரை மணிநேரத்துக்குப் பிறகு மேலும் பார்க்க விருப்பமில்லாததால்,
டிவியை நிறுத்திவிட்டேன்.
இன்னும் சென்செக்ஸ், தங்க நிலவரம், சிஎன்பிசி இது போல, இந்த தரையில் இறங்கிவந்த நட்சத்திரத்தைப் பற்றியும்
அவனா சாருக் கானா யார் பெஸ்ட் ஆக்டர் என்ற உயர்ந்த தலைப்பைப் பற்றி இன்னும் கருத்துப் பரிமாற்றம் தொடருகிறதோ என்னவோ!!!!



Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Sunday, January 13, 2008

எழுதியதில் பிடித்தது(கண்மணி அழைப்பு)

கண்மணி 'டாக்' செய்து அழைத்துவிட்டார்.

நீங்கள் எழுதியதில் மிகச் சிறந்தது என்று எண்ணும்

'பெஸ்ட்'

பதிவுகளை முதலும்,ரன்னர் அப் என்றும்

வகைப்படுத்திச் சொல்ல வேண்டும் பதிவிட

வேண்டும் என்று கேட்டிருந்தார்.



உங்களுக்கும் இப்போது அவைகளைப்

பகிர்ந்து கொள்கிறேன்.



முதலில் என்னை எனக்கே அறிமுகப்படுத்தியது

இந்தத் தமிழ்மணப் பதிவுகள்தான்.

நாமெல்லாம் நினைவுகளில் நிறைய வாழ்பவர்கள்.

அதுவும் மறக்க முடியாத சில நிகழ்ச்சிகள்

நம்மை மீண்டும் மீண்டும் சுவைக்கச் சொல்லும்.

சிலது சிலுசிலுப்பாக மனசைத் தடவிக் கொடுக்கும்.



சில சம்பவங்கள் மனதில் பதிந்து அவ்வப்போது மிரட்டும்.



அவற்றையெல்லாம் உறவுகள் ,குழந்தைகள் ,சினேகிதர்கள்

இப்படி கூட்டம் போடும்போது பேசிக் கொள்வதுதான்.

மனது இலேசாகிவிடும்.

இப்போது அதற்கு இணையமும் கிடைத்தபிறகு

தூள் கிளப்பக் கஷ்டமே இல்லை.



முதலில் நான் தேர்ந்தெடுப்பது



''ரசமும் நானும் பில்வாக்கரும்''



http://naachiyaar.blogspot.com/2007/01/blog-post_16.html

அனுபவம் புதுமை வகையில் வெகு நாள் எண்ணிச் சிரித்தது இந்த நிகழ்ச்சி.

உங்களுக்கும் பிடித்திருந்தால் சொல்லுங்கள்:))

அடுத்ததும் அதற்கு அடுத்ததாக


ரன்னர் அப்களாக இரண்டு பதிவுகளைக் கொடுக்கிறேன்.


ஏனெனில் ஒரு பதிவு பெற்ற அம்மா அப்பாவைப் பற்றியது. இன்னொன்று காப்பாற்றிய தெய்வத்தைப்


பற்றியது..


ஜயா நாராயணன் கல்யாண வைபோகமே


http://naachiyaar.blogspot.com/2007/08/blog-post.html





வேறு யாரும் துணை இல்லாத போது

http://naachiyaar.blogspot.com/2006/09/blog-post_27.html



நன்றி கண்மணி. இந்தச் சந்தர்ப்பம் நீங்கள் கொடுத்ததால் என்னையே நான் திரும்பிப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
ஒரே ஒரு வித்தியாசம்.
இந்தக் காக்கைக்கு க் கொஞ்சம் கூடுதலாகவே பொன்குஞ்சுகள்:)

நான் அழைக்க விரும்புபவர்கள்,

அம்பி,
கோபிநாத்,
தி.ரா.ச,
ஜிரா ராகவன்,
இ.கொத்ஸ்,
கீதா சாம்பசிவம்

இவர்கள் பதிவுகள் அனைத்துமே பெஸ்ட் தான்.
இருந்தாலும் த பெஸ்ட் என்று ஒன்றும் இருக்கும்:))
எதிர்பார்க்கலாம். வாருங்கள் நண்பர்களே.

Friday, January 11, 2008

ஜனவரி புகைப்பட போட்டிக்கு




வீட்டிற்குள் இருக்கும் பொருட்கள் போட்டோ எடுத்தாகி விட்டது.


முதல் இரண்டும் நான்காவதும் எங்கள் தங்க சிங்கம் செதுக்கிய


மரத்திலிருந்து வெளிவந்த கரடி,


ஆதிசேஷன் எனப்படும் அல்சேஷன்,




அரபு நாட்களில் வளர்ப்புப் பறவையாக இருக்கும்


கைட்(kite) என்கிற பருந்து.






அடுத்த படம் பிறந்த நாள் கேக்.




உங்க எல்லாரையும் கூப்பிட்டுக் கொடுத்து இருக்க வேண்டும்:))












பங்கெடுக்கப் படங்கள் கைவசம் இருந்தது பற்றி மகிழ்ச்சிதான்.










Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Wednesday, January 09, 2008

அன்பும் அறனும் உடைத்தாயின்..

ஆத்தி
கூகரீ
சட்டை
மொட்டை
குக்கூ
களாக்
லேன்ன்ன்
உம்மாச்சி கோந்தா

இந்த வார்த்தைகளே காதில் நிறைந்து இருப்பதால்
இன்னும் பதிவெழுதும் மோட்(mode) வரவே நாள் ஆகும் என்றே தோன்றுகிறது:))

இந்த நாற்பது நாட்களும் எப்படி ஓடிவிட்டது.
பகல் எது இரவு எது. யார் வந்தர்கள் யார் போனார்கள்.

மார்கழி மாசமா. ஓ.ரெண்டு இழை இழுத்தால் போதும்.
இசை விழாவா. அதனால் என்ன எப்ப வேணும்னாலும் கேட்டுக்கலம்.
அட கடவுளே. கீதை கேட்கவே இல்லையே.
பரவாயில்லை ஒரேயடியா சிடி வாங்கி விட்டால் போகிறது.

தமிழ்மணம் பார்க்கவில்லை.
ஒருவருக்கும் கடிதம் போடவில்லை.
ஜிமெயிலா??ம்ஹூம்.
எங்கள் இருவரின் உலகம் மூன்று குழந்தைகளின் கைகளில் அடங்கிவிட்டது.

ஒன்பது வயது வீட்டுப்பாடங்கள். பள்ளிக்கான ப்ராஜெக்ட்.
கீபோர்ட் பயிற்சி. வயிற்றுவலி. மருத்துவர்.
மருந்துகள்.....

ஒன்றரை வயது பேத்தி. மழலை. திருப்பதி. முடியிறக்கல்.
சளி, காது குத்தல் காதணி விழா.

ஒரு வயது பேரன்.....அதே சளி. காய்ச்சல். தளர்நடை. ஒரு வினாடி அழுகை. அடுத்த நொடி வாய் நிறைய சிரிப்பு.
எல்லாம்
குகரீ செய்யும் மாஜிக்:)

அவர்கள் ஊரில் குகரீ கொடுக்க மாட்டார்கள்.
வயிறு, ஜீரணம் இவை பாதிக்கப் படுமாம்.

மேலே, முதலில் இருக்கும் வார்த்தைகள்
முறையே
குகரீ...ஷுகர்...சர்க்கரை.
ஆத்தி...பாட்டி,நான்,
குக்கூ.....காக்கை
லேன்.......ப்ளேன்
களாக் க்ளாக் கடிகாரம்

என் அகராதி மாற இரண்டு நாட்களாவது ஆகும். மீண்டும் பார்க்கலாம்.
இவர்கள் வெளியூரில் தான் வளர வேண்டுமா?
எங்களுக்கு இந்தப் பாசம் ஏன் மறுக்கப்படுகிறது..
மீண்டும் யாஹூ, வெப்காம்,தொலைபேசி.
உலகம் சுருங்கி விட்டது என்கிறார்கள்.
ஆனாலும் தொட முடியாத தூரத்தில் இருக்கும்
அடுத்த தலைமுறை.

இதோ அடுத்த வீட்டு சீதாராமன் தன் பேரனை டென்னிசுக்கு அழைத்துப் போகிறார். கொடுத்து வைத்தவர்.






Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal