Blog Archive

Saturday, September 05, 2020

வாகன யோகம்.


வல்லிசிம்ஹன்
            Norton Bikeசிங்கத்தின் உபயோகத்தில் கொஞ்ச நாட்கள் இருந்தது.
(●'◡'●)👩
 வாழ்க்கையில்....... நம் கால்களுக்கு நடை வந்த
பிறகு  ஒரே ஓட்டம் தான். பள்ளிக்குச் சென்றது முதல் எல்லா இடங்களுக்கும் நடைதான் .
நாங்கள்  இருந்த இடங்கள் அது மாதிரி.
டவுன் பஸ்கள் வராத காலம்.
நடைக்கு  அஞ்ச மாட்டோம். 
மதுரையிலிருந்து  சித்தப்பா வரும் நாட்கள்  அவரது அலுவலக 
ஜீப்பில்   வந்துவிடுவார்.  எங்களுக்கெல்லாம் 
திருமங்கலம்  டவுனை விட்டு வெளியே சென்று சுற்றிக் காட்டுவார்.
ஆனந்த நாட்கள் அவை.

தாத்தா,பாட்டி, சித்தப்பா குடும்பம்,எங்கள் குடும்பம் 
மொத்தம் 10  நபர்கள் பயணம் செய்த நாட்கள் மதுரை யிலிருந்து கிளம்பி 
திருநெல்வேலி,திருக்குறுங்குடி,ஸ்ரீவைகுண்டம்,
நாங்குநேரி,திருச்செந்தூர்,கன்யாகுமரி, குருவாயூர் 
என்று சுற்றுலா  செல்ல மிக சுகமாக அமைந்த  ஒரு வாகனம்.


பாட்டி எங்களுடன் தங்கிய வருடங்களில்
அவரை மதுரை அழைத்துச் செல்ல,
 மீண்டும் கொண்டுவந்து விட 

வந்து போகும் இந்த வண்டி
எங்கள் சொர்க்க உலகமாக இருந்தது.

  FIAT 1100   

திருமணம் முடிந்த பிறகு, இரண்டு சக்கர வாகனங்கள்
யோகம் ஆரம்பம்.முதல் படத்தில் இருக்கும் ''நார்ட்டன்''பைக்
  ஒரு நண்பருடையது. அவர் மேல் படிப்புக்காக
வெளி நாடு செல்ல, எங்கள் வீட்டில் இதை ஒப்படைக்க

புதுக்கோட்டை சாலைகள் எங்களுக்கு சொந்தமானது.
சேலம் சென்றதும் தட தட புல்லட் வண்டி 
சொந்தமானது. முதலில் இருவர், பிறகு மூவர்,
அதற்கப்புறம் நால்வர் என்று பயணித்தோம்.
நாங்கள் அங்கு இல்லாத சமயம் 
இந்த புல்லட் சத்தம் மதுரை, காரைக்குடி என்று
பயணம் வந்தது.
கோவை வந்த பிறகு ஐந்து பேரும் சென்றோம்.

கோவை தடாகம் ரோடில் இந்த புல்லட்டின் சத்தம் எங்கோ ஒலிக்கும் போதே பெரியவன் கண்டுபிடித்துவிடுவான்.
ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து கைகளை நீட்டுவான்.
அந்த இருட்டு வேளையில் எப்படித்தான் அறிவானோ.
வண்டி வந்து போர்ட்டிகோவில் நின்றதும்,
''அப்பா...நான் கை காட்டினேனே  நீ பாத்தியா?''
என்றதும், ''அதனால் தான் நான் பத்திரமா வந்தேன்''
 என்று சிங்கம் சொல்வதும்
வழக்கமான டயலாக்.!!

திருச்சிக்கு மாற்றலானதும் வாங்கிய வண்டி ஃபியட் 1100.

எங்கள் செல்ல வண்டியாக  சென்னை, மதுரை, சமயபுரம், ஸ்ரீரங்கம் என்று வலம் வந்தது.


மீண்டும் பார்க்கலாம்......

14 comments:

Yaathoramani.blogspot.com said...

வாகன யோகம் இருந்தால்தான் இப்படி அந்த அந்த வயதுக்கு ஏற்றார்ப்போல வாகனங்கள் அமையும்.உங்களுக்கு அந்த யோகம் பூரணமாய் இருக்கிறது...வாழ்த்துகள்..

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரமணி சார்,
உண்மையில் மனதில் வந்த வார்த்தையை
தலைப்பாக வைத்தேன்.

வீட்டில் வண்டி இல்லாத நேரங்களில் நிறைய
நடந்த அனுபவங்களும் உண்டு.

என் கணவருக்கு இந்த வாகன யோகம் பொருந்தும்.
அந்த மாதிரி இடத்தில் பணி புரிந்தார்.

எனக்கும் ஒன்றும் குறைவில்லை.
இன்று வரை தொடர்கிறது.
நீங்கள் வந்து படித்து
கருத்தும் சொன்னது எனக்கு மிக மகிழ்ச்சி .
நன்றி மா.

நெல்லைத்தமிழன் said...

வாகன யோகம் அமையவேண்டும். தைரியமும் வேண்டும். இந்தியாவில் கார் வச்சுக்க இன்னும் தைரியம் வரலை எனக்கு.

அப்பா நான் கை காட்டினதைப் பாத்தியா - நெகிழ்வு. நான் இந்த மாதிரி சம்பவங்களை காணொளி எடுத்துடுவேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய நினைவுகள்...

பாடல்கள் பரவசம்...

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பல முறை கேட்ட இந்தப் பாடல் அருமை.
பதிவுக்கு பொருத்தமாக பகிர்ந்திருப்பது அதை விட அருமையாக உள்ளது. வாகன யோகம் மட்டுமில்லை. வீடு யோகம்,குழந்தைகள் யோகமென மற்ற பல யோகங்களும் அமைவது பூர்வ ஜென்ம புண்ணியம்.. தங்களுக்கு இறைவன் அருளால் வாகன யோகம்
சிறு வயதிலிருந்தே அமைந்திருந்தது மகிழ்ச்சியை
தருகிறது கடவுளுக்கு நன்றி சொல்வோம். சிறு வயது நினைவுகளை பகிர்ந்து கொண்டது மனதிற்கு இதமாக இருந்திருக்கும்.மறக்க முடியாத சில நினைவுகள் மனதுக்குள் அமிழ்ந்திருப்பதே ஒரு சுகந்தானே..
தருகிறது. அதை தருகின்ற கடவுளுக்கு நன்றி. பகிர்வுக்கும் மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Geetha Sambasivam said...

வாகன யோகம் உங்களுக்கு இருக்கு. ஆகவே நிறைய வண்டிகள் பார்த்திருக்கீங்க. எங்களுக்குக் கல்யாணம் ஆனப்புறமா வாகன யோகம் ஆரம்பித்தது. ஆனாலும் கார் வாங்கும் எண்ணம் அறவே இல்லை. வாங்கினால் தொண்ணூறுகளில் குழந்தைகள் எங்களுடன் இருந்தப்போவே வாங்கி இருக்கணும். இப்போ அவங்க அவங்க வீடு, குடும்பம் என ஆனப்புறம் சொந்தமாய் 2 வண்டிகள் கட்டாயம் என ஆகி இருக்கு. நாங்க தொலைபேசியில் அழைத்தால் வரும் வாகனங்களில் பயணிக்கிறோம். தேவைக்கேற்ப விதம் விதமான வாகனங்கள் வரும். நீங்கள் படம் எடுத்துப் போட்டிருக்கும் எல்லா வண்டிகளுமே அருமை.

கோமதி அரசு said...

கடைசி பாட்டின் மகிழ்ச்சி அக்கா பதிவை படிக்கும் போது.
நினைக்கும் போதே ஆஹா! இனிமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டீர்கள்.


//அப்பா...நான் கை காட்டினேனே நீ பாத்தியா?''
என்றதும், ''அதனால் தான் நான் பத்திரமா வந்தேன்''
என்று சிங்கம் சொல்வதும்
வழக்கமான டயலாக்.!!//

குழந்தைகள் அப்பாவின் வரவை எதிர்நோக்கி இருப்பதும் அதில் அப்பா மகிழ்ந்து போவதும் மகிழ்ச்சியான தருணங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா,
நன்றி ராஜா.. இவர் உத்யோகம் அந்த மாதிரி. வண்டிக்கு அடியில் தான் வாழ்க்கை. எல்லோரும் ரிப்பேர் பார்த்திருந்தாலும்
தான் அதை. உறுதி செய்த பிறகே உரியவருக்கு அனுப்புவார்.
பெரிய பெரிய. லாரிகளை அவர் ஓட்டும் போது பிரமிப்பாக இருக்கும்.


நாங்கள் மாடியில் படுக்கப் போன பிறகு ஜன்னல் கம்பிகளைப் பிடித்த வண்ணம் நின்று பார்த்துக் கொண்டிருப்பான். தூரத்தில் சாலையில்
பைக் வெளிச்சம் கண்டவுடன் உற்சாகக் கூச்சல் தான். இவரும் அவனை மகிழ வைக்க அதை யே திருப்பி சொல்வார் . இரண்டு வயது தங்கையும் ஆமா ஆமா என்பாள்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்.
பாடலகளைக கேட்டு ரசித்து,பதிவையும் படித்தது மிக மகிழ்ச்சி மா. என் மனம் கவர்ந்த பாடல்கள.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,
பெற்றோர், கல்வி, மக்கள்செல்வம் ,திருமணம் எல்லா யோகங்களிலும். நல்ல நிகழ்வகளை மட்டும்
எடுத்துக் கொள்கிறேன்.
நீங்கள் சொல்வது உண்மையே.பழம் கணக்குகளைத் தொகுத்துக் கொண்டு வரும் போது
இந்த எழுத்துகள். அதிக உற்சாகத்தைக் கொடுக்கின்றன.

மனம் தொய்யாமல் இருக்க. பழைய நினைவுகள் கை கொடுக்கின்றன.

உங்கள் பின்னூட்டமே கவிதையாக வந்து மகிழ்விக்கிறது. நன்றி மா

வல்லிசிம்ஹன் said...

தாத்தா உறவுகளால் எங்கள் பயணங்கள் அமைந்தன கீதாமா.

.இவரும் அதே கம்பெனியில் இருந்ததால் முதல் பத்து வருடங்கள் பயணங்களாகவே கழிந்தன.... பிறகு சஎன்னை வாசத்தில்
படிப்பு, நம் சொந்த பிசினஸ் என்று பொறுப்பு சேரும் போது

எல்லாமே மட்டுப் பட்டன. மீண்டும் பயணங்கள் சிறிய வண்டிகள் வாங்கும் போது தொடர ஆரம்பித்தன.

இவருக்கு வேறு யாரும் ஓட்டும் வண்டியில் பயணிக்கப் பிடிக்காத ஒரே காரணத்தால் சொந்த வண்டி வைத்துக் கொண்டோம்.
அவர இல்லாமல் நான் மட்டும செல்லும் போது ட்ராவல்ஸ். வண்டிதான்:)

வல்லிசிம்ஹன் said...

ஆஆமாம் அன்பு கோமதி மா.
குழந்தைகளின் ஆனந்தம் எங்களுக்கு பெரிய திருப்தி.

அவர்களுக்காகத்தான் இந்த இரண்டு சக்கர வண்டிகள். பிகு சிறிய. கார்கள். எல்லாமே செகண்ட் ஹாண்ட் தான்.

வாழ்வு சிறிய சமாசாரங்களிலேயே பெரிய மகிழ்ச்சி பெற்ற காலங்கள்.

பெரியவனுக்கு அப்பா மேல் ரொம்பப் பாசம் அவர் பின்னாடியே சுற்றுவான்.
நினைக்கும் போஓதே பாடல் எப்பொழுதுமே பிடிக்கும் பா!

வெங்கட் நாகராஜ் said...

வாகன யோகம்.

இனியமையான பாடல்கள். இப்படி வாகனங்களில் பயணிப்பது ரொம்பவே சுகமானது - பிடித்திருந்தால்! :) சிலருக்கு பயணங்கள் பிடிப்பதில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், எனக்குப் பயணங்கள் மிகப் பிடிக்கும். எங்கள் மகளுக்கு ஒத்துக் கொள்ளாமல் இருந்தது. இப்போது அவரே ஓட்டுகிறார்.
இருந்தும் பஸ்ஸில் பழகப் பிடிக்காது:).