Blog Archive

Friday, August 21, 2020

சரோஜா சௌண்ட் சர்வீஸ். திருமங்கலம்.


வல்லிசிம்ஹன்

வினாயகனே வினை தீர்ப்பவனே
வேத முதற்கோனே ஞான முதல்வனே
குணா நிதியே குருவே சரணம்...
தென் இந்தியா, தமிழகத்தில் 
சௌண்ட் சர்வீஸ்கள் செய்யும் நலம், சத்தம் எல்லாம் நாம் அறிந்ததே.

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் முதலில் 
சீர்காழியின் குரலும், பின்பு டி எம் எஸ் குரலிலும் பிள்ளையாரும் முருகனும் வந்து விடுவார்கள்.
அந்த ஒலிபெருக்கி மற்றவர்கள் காதுகளை வதைக்கா வண்ணம் கேட்ட நாட்களும் உண்டு.
திருப்பாவை  நாட்களில் ,சென்னையில் 
கோவிலில் வைக்கும் பாடல்கள் காதில் அதிரப் 
புகுந்ததும் உண்டு.

எங்கள் திருமங்கலத்தில் ,சரோஜா சவுண்டு சர்வீஸ் 
1957,58,59 என்று ஒலிபரப்பிய அத்தனை சினிமா வசனங்களும்
அனேகமாக எல்லாப் பசங்களும் சொல்லும்.

பொதுக்கூட்டமாக இருந்தால்  ''வாழ்க வாழ்க பாட்டாளி''
இடம் பெறும்.
மதுரை வீரன் சினிமா வசனம் ''பொம்மி ஈயீயீ'' என்று செல்லும்.
''வீரத்தின் சின்னமே'' என்று வீரபாண்டியக் கட்ட  பொம்மன் முடியும்.!!!

''அக்காளுக்கு வளைகாப்பு" பாடல் வந்தால் அந்த வீட்டில் அந்த விழா
என்று தெரியும்:)
அனார்கலி வசனம் சிவாஜி பேசியது ''அனார்,அனார்'' என்று அல்றும்.

எம் எல் வியின் எல்லாம் இன்ப மயம் பாடல் வந்தால் அது திருமண வீடு.
இன்னும் எத்தனையோ பாடல்களை ஒலி பரப்பிய சரோஜா
சௌண்ட் சர்வீஸ், இருந்த இடம் 
 எங்கள் பள்ளிக்கு செல்லும் வழியில் 
பக்கத்துத் தெருவில் இருந்ததாக ஒரு மங்கிய நினைவு.
அதை இரு இளைஞர்கள் நடத்தி வந்தார்கள்.
அந்தக் கடையைத் தள்ளி நின்று
பார்க்க அப்பா அனுமதிப்பார்.
நானும் தோழி பத்துவும் அங்கு சென்று
வாயில் ஈ புகுந்தால் கூடத் தெரியாமல்
பார்ப்போம்:)

இரண்டு ஸ்பீக்கர்கள், இரண்டு க்ராமஃபோன்கள்,
ஏகப்பட்ட பெரிய பெரிய இசைத்தட்டுகள்
மனதில் நிழலாடுகிறது.
பாப்பா ,பாட்டு போடட்டுமா கேட்கிறாயா
என்று அந்த கடைக்காரர் கேட்டாலும்
மறுத்து விட்டு வீட்டுக்கு ஓடி வந்து விடுவோம்.;)
 அப்போது ஆடி மாதப் பாடல்கள் எல்லாம் கிடையாது.
மீனாக்ஷி அம்மன் கோவிலில்
திருப்பாவை, திருவெம்பாவை, மற்றும் திருப்பள்ளி 
எழுச்சிப் பாடல்கள் டிசம்பர் 16 ஆம் தேதியிலிருந்து ஒலிக்க
ஆரம்பிக்கும்.
அவ்வையார், வேலனே என்று விளித்தபடி
ஆரம்பிக்கும் பாடலும், தொண்டர் தம் பெருமை 
சொல்லவும் அரிதே பாடலும் இன்னும் மனதில் ரீங்கரிக்கின்றன.
மனோரம்மியமான பாடல்கள் கேட்டே வளர்ந்தோம்.
இப்போது எனக்குத் தனிப்பட்ட  வானொலி நிலையமே கிடைத்தது போல 
யூ டியூபுக்கு நன்றி சொகிறேன்.
இப்போதும் திருமங்கலத்தில் அந்த சௌண்ட் சர்வீஸ் இருக்கிறதா
தெரியாது.
பாண்டி விளையாட்டு விளையாடியபடியே
"
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா '' கேட்டது
ஒரு காலம். அனைவரும் நலமுடன் வாழ்க.


19 comments:

வல்லிசிம்ஹன் said...

எங்கள் லஸ் நவசக்தி வினாயகர் அருளோடு அனைவரும் நோயற்று இருக்க பிரார்த்தனைகள்.

நெல்லைத் தமிழன் said...

அந்தக் காலத்தில் இவைகள்தானே பொழுதுபோக்கு.

நீங்கள், ஒரு வாரமாக சைக்கிளிலேயே வட்டமாகச் சுற்றிக்கொண்டே இருப்பார்களே, மாலையானால் சினிமாப் பாடல்களோடு அங்கேயே ஆட்டம், சைக்கிளிலேயே வித்தை - இவற்றைப் பார்த்திருக்கிறீர்களா?

திண்டுக்கல் தனபாலன் said...

இப்போது சில இடங்களில் மட்டுமே உண்டு...

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா, நாங்கள் இருந்த எல்லா ஊர்களிலும் ஒரு மைதானம் இருக்கும் அதில் தான் சர்க்கஸ், பொருட்காட்சி வரும். இது போல சைக்கிள் ஓட்டுபவர்களும் வருவார்கள்.:)
சைக்கிளிலேயே. குளிப்பார்கள்.. கூடவே ஒரு குரல் பேசிக் கொண்டே இருக்கும். 3 நாட்கள் ஓட்ட பார்ததிருக்கிறேன்.

எங்க மகள் பிறந்திருந்த போது, வீட்டுக்குப் பின்னாடி , விவசாயி பாடல்களும், மாறியது நெஞ்சம். பாட்டும், ரவிச்சந்திரனும்,ஜெயலலிதா பாட்டு...” ராஜா கண்ணு போகாதடி பாட்டும் காதைப் பிளந்து ஒலிக்கும் பாப்பா திடுக் என்று அழும்!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். விக்கின விநாயகர் அனைவர் வாழ்விலும் விக்கினங்களை அகற்றி எல்லோரும் நல்லபடியாக இருக்கச் செய்ய அந்த ஆனைமுகத்தோனை பாதம் ஆதரவுடன் பற்றி வேண்டிக் கொள்கிறேன்.

உங்களின் மலரும் நினைவுகள் பதிவு நன்றாக உள்ளது. ஒவ்வொரு சம்பவத்திற்கும் ஏற்ற மாதிரி வரும் பொருத்தமான பாட்டுகளாக எடுத்து பகிர்ந்திருக்கிறீர்கள். அப்போதெல்லாம் இந்த ஒலிபெருக்கி இல்லமல் எந்த விஷேடமும் கிடையாதே.... எவ்வளவு பாட்டுக்கள், இதன் மூலம் அழுத்தந்திருத்தமாக கேட்டு ரசித்தாகி விட்டது. எனக்கும் மலரும் நினைவுகள் வந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் வல்லிம்மா...   இனிய நினைவுகள்.  அல்லது சத்தமான நினைவுகள்!  ஆம், அந்தக் காலத்தில் இபப்டி ஏரியாவையே அலறவிடுபவர்கள் இருந்தார்கள்.  நலல்வேலை, இப்போது இல்லை.  பொறுமையே போய்விடும்!

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் ,
அன்பு தனபாலன்.
ஆமாம் இப்போது வீடுகளிலேயே இசை முழங்குகிறது. இன்னோருவர் வந்துதான்
செய்ய வேண்டும் என்பதில்லை.

நான் சென்ற வருடம் மதுரையில் நுழைந்த போதே,
இசை கேட்டேன். அருப்புக்கோட்டையிலிருந்து
பழங்கா நத்தம் செல்லும் வழியில்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு சகோதரி கமலாமா,
இனிய வினாயக சதுர்த்தி வாழ்த்துகள்.

கணேஸன் அருள் என்றும் நம்மைச் சூழ்ந்திருக்கட்டும்.

இன்று பதிவிட்ட போது, சீர்காழியின்
பிள்ளையார் பாடல் எதையும் இணைக்க முடியவில்லை.
எங்கள் லஸ் பிள்ளையாரை மனதாரத் துதித்து
அந்த வீடியோவைப் பதிந்தேன்.
உடனே அப்லோட் ஆகிவிட்டது.
எல்லாமே அவர் கருணைதான்.
அவர் நினைத்தால் எல்லாத் துன்பங்களும் தூர விலகிப்
போகும். என்றும் உங்கள் நலத்துக்காகப் பிரார்த்தனைகள்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சகோதரி கமலாமா,
இனிய வினாயக சதுர்த்தி வாழ்த்துகள்.

கணேஸன் அருள் என்றும் நம்மைச் சூழ்ந்திருக்கட்டும்.

இன்று பதிவிட்ட போது, சீர்காழியின்
பிள்ளையார் பாடல் எதையும் இணைக்க முடியவில்லை.
எங்கள் லஸ் பிள்ளையாரை மனதாரத் துதித்து
அந்த வீடியோவைப் பதிந்தேன்.
உடனே அப்லோட் ஆகிவிட்டது.
எல்லாமே அவர் கருணைதான்.
அவர் நினைத்தால் எல்லாத் துன்பங்களும் தூர விலகிப்
போகும். என்றும் உங்கள் நலத்துக்காகப் பிரார்த்தனைகள்.
நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

Saroja Sound Service !

ஆஹா... பெயரே சிறப்பாக இருக்கிறதே.

உங்கள் வலைப்பூ வழியே மூன்று இனிமையான பாடல்களை இந்த நற்காலையில் கேட்டு ரசித்தேன். நன்றிம்மா...

கோமதி அரசு said...

மதுரையில் இன்னும் இருக்கிறது. நல்லது கெட்டதற்கு இந்த செளண்ட் சர்வீஸ் இல்லாமல் இல்லை.


பகிர்ந்து பாடல்களும், மலரும் நினைவுகளும் மிக அருமை.


துரை செல்வராஜூ said...

மணி சவுண்ட் சர்வீஸ் என்றொரு அனுபவம் உண்டு.. தங்களது பதிவு அந்த நாட்களை நினைவுபடுத்துகின்றது...

Anbu said...

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். நானும் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் பற்றி ஒரு பதிவு இட்டு இருக்கிறேன், நேரம் இருந்தால்வந்து படித்து கருத்தை சொல்லவும் நன்றி
விநாயகப்பெருமானை பற்றிய பல அறிந்த அறியாத விஷயங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
பண்டிகை தின வாழ்த்துகள் ராஜா.

பழைய பாடல்களின் இசை இனிமை.
கேட்டு ரசித்ததற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா. இனிய காலை வணக்கம்..
அதைத்தான் நினைத்தேன். மதுரை மாறவில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம்.

எங்கள் சிறிய வயதில் சவுண்ட் சரவீஸ் ஆகத்தான் இருந்தது. தொல்லையாக மாறியது பின்பு தான்.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,
நாங்கள் வளர்ந்த காலம் இவை எல்லாம் பொழுது போக்கு.
உங்களுக்கும் அந்த நினைவுகள் இருப்பது இனிமை மா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் திரு அன்பு.
நன்றி. உங்கள் வலைத்தளம் பார்ககிறேன் நன்றி.

Geetha Sambasivam said...

இப்போதெல்லாம் அதிகம் இந்த சவுன்ட் சர்வீஸ்காரங்களைப் பார்க்க முடிவதில்லை. அவங்க ஸ்பீக்கர் கட்டும் இடம் அருகே நம்ம வீடு இருந்துட்டால்! போதும்டா சாமினு ஆயிடும். ஒரு தரம் பள்ளித் தேர்வு சமயம் யார் வீட்டிலோ கல்யாணத்துக்காகப்போட்டிருந்தார்கள். படிச்சுப் புரிஞ்சுக்கவே முடியலை. இப்போல்லாம் கோயில்களில் கூட டேப் ரிகார்டரைப் போட்டு அதை மைக் மூலம் வெளியே கேட்க வைக்கின்றனர். ஆகவே சப்தம் குறைவாகவே இருக்கிறது.