Blog Archive

Wednesday, March 16, 2022

ஸ்ரீரங்க மங்கல நிதி!

வல்லிசிம்ஹன்

    அனைவரும் வளமோடு வாழ வேண்டும்.

[2:04 AM, 3/16/2022] Jayanthi Kanna.: பழையமுதும்...மாவடுவும்!!!
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

ரங்கநாத பெருமான் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தில் எல்லா நாளுமே திருநாள் தான். அதில் வித்தியாசமான, ஆனால் எல்லோரையும் நெகிழ வைக்கும் திருவிழா ஒன்று பங்குனி பிரம்மோற்ஸவத்தின் மூன்றாம் நாள் நடைபெறுகிறது. பழைய சோறும், மாவடுவும் என்று புகழப்படும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள ரங்கநாத பெருமான் ஶ்ரீரங்கம் விட்டு ஜீயர்புரம் என்ற ஊருக்கு கிளம்பி செல்கிறார். அங்கு சவரத் தொழிலாளர்களின் மண்டகப்படி பெருமாளுக்கு நடைபெறுகிறது. அந்த விழாவில் முகம் திருத்தும் தொழிலாளி ஒருவர் ரங்கநாத பெருமாளுக்கு எதிரே கண்ணாடி காட்டி கண்ணாடியில் தெரியும் ஆண்டவரின் பிம்பத்திற்கு முகம் திருத்தம் செய்வது போன்று ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. அதன்பிறகு முகம் திருத்தும் தொழிலாளிக்கு மரியாதை செய்யப்படுகிறது. இந்த திருவிழாவில் ரங்கநாதருக்கு நைவேத்தியமாக பழைய சோறும், மாவடுவும் அளிக்கப்படுகிறது. வெண்ணையும் மண்ணையும் உண்ட அந்த ஆதிமூல பெருமானுக்கு பழைய சோறு, மாவடுவும் விருந்தளிக்கப்படுகிறது என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆம், இதன் பின்னால் நெஞ்சை உருக்கும் ஒரு கதை உள்ளது. ஏழைகளுக்கு உதவும் பரந்தாமன் அன்றோ திருமால், அவன் ஒரு ஏழைப் பாட்டிக்காக அவளின் பெயரனின் வடிவம் தாங்கி வந்த திருவிளையாடலைத் தான் பார்க்க இருக்கிறோம்.

ஜீயர்புரம் என்பது காவிரிக்கரை அருகே உள்ள அழகான கிராமம். அந்த ஊரில் ரங்கநாதரையே சர்வகாலமும் நினைத்து வாழும் ஒரு பாட்டி இருந்து வந்தாள். இளமையிலேயே கணவனை இழந்த அவளுக்கு இரண்டே உறவுகள் தான். ஒருவர் ரங்கநாத பெருமாள், மற்றொருவர் அவளின் பெயரன் ரங்கன். ஏழ்மையிலும் இறைவனை மறக்காத அந்த பாட்டி, உட்கார்ந்தால் 'ரங்கா' எழுந்தால் 'ரங்கா' என்றே வாழ்ந்தவள். அவளுக்கும் ஒருநாள் சோதனை வந்தது. அந்த சோதனை வழியே அவளை ஆட்கொள்ள எண்ணினார் கார்வண்ணன். அன்று பாட்டியின் பெயரன் முகம் திருத்திக்கொண்டு வருவதாக சொல்லிக்கொண்டு காவிரிக்கரைக்கு சென்றான். அங்கு முகம் திருத்தி விட்டு காவிரியில் இறங்கி குளித்தான்.

மென்மையாக ஓடிக்கொண்டிருந்த காவிரி ஊழி வெள்ளம் பாய்ந்ததைப் போல பெருகி வரத்தொடங்கியது. பெருகிய வெள்ளத்தில் பாட்டியின் பெயரன் ரங்கன் இழுத்துச் செல்லப்பட்டான். நேரமாகியும் திரும்பாத பெயரனை எண்ணி பாட்டி கவலைப்பட்டாள். ரங்கநாத பெருமாளை தொழுது அழுது காவிரிக்கரைக்கு சென்றாள். அதே வேளையில் காவிரி இழுத்துச் சென்ற ரங்கன் ஸ்ரீரங்கத்தின் அம்மா மண்டபத்துக்கு அருகே கரை ஒதுங்கினான். உயிர் பிழைத்த ரங்கன், ஸ்ரீரங்கத்து ஆண்டவனை தரிசித்து காப்பாற்றியதற்கு நன்றி சொன்னான். தன்னை எண்ணி இந்நேரம் பாட்டி அழுவாளோ என்று பதறி ரங்கநாதரிடம் முறையிட்டான். உடனே கிளம்பினான். பெயரன் செல்லும் வரை பாட்டி துடிப்பாளே என்று பரந்தாமனும் எண்ணினார். பக்தரை காக்கும் பரந்தாமன் பொறுப்பாரா?

காவிரியின் வெள்ளம் கண்டு அழுது புலம்பிக்கொண்டிருந்த பாட்டியை ஆற்றுதல் படுத்த கிளம்பினார் பரந்தாமன். ஆம், பாட்டி அழுது கொண்டிருந்த ஜீயர்புரத்து காவிரி கரையருகே முகத்திருத்தம் செய்த முகத்தோடு குளித்து எழுந்த நிலையில் பாட்டியின் பெயரன் ரங்கனாகவே வந்தார் பெருமாள். பாட்டி மகிழ்ந்தாள். பெயரனை கட்டி அணைத்து வீட்டுக்கு கூட்டி சென்றாள். பசித்திருந்த பெயரனுக்கு பழைய சோறும் மாவடுவும் அளித்து சாப்பிட சொன்னாள். பரந்தாமன் சாப்பிட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் உண்மையான பெயரன் ரங்கன் வந்து விட்டான். பாட்டி திகைத்தாள். அடியவருக்கு அடைக்கலம் தரும் பெருமான் சிரித்தபடியே மறைந்தான். பாட்டியும் பெயரனும் ரங்கநாத பெருமானின் அருளை எண்ணி தொழுதார்கள். அவரின் திருவுளம் எண்ணி அழுதார்கள். அன்று பக்தையை ஆறுதல் படுத்த வந்து பழைய சோறும், மாவடுவும் உண்ட ரங்கநாத பெருமாள் இன்றும் அதை நினைவூட்ட ஆண்டுதோறும் பிரம்மோற்ஸவ விழாவில் இதை நடத்தி வருகிறார். ஏழைக்கு ஏழையான நம்பெருமாள் என்றுமே நம்மை காப்பார் என்பதையே இந்த நிகழ்ச்சி காட்டுகிறது இல்லையா?
இன்றும் ஸ்ரீரங்கத்தில்... பழையமுதும் மாவடும் பிரபலம்!!!

6 comments:

நெல்லைத் தமிழன் said...

ஸ்ரீரங்கத்தில் அனைத்து சமுதாயத்தினரையும் உள்ளடக்கி ஒவ்வொரு உத்ஸவங்களையும் நிர்ணயித்திருக்கின்றனர். அவற்றை இராமானுசர் ஒழுங்குபடுத்தியிருக்கிறார். நினைக்கவே மிக ஆச்சர்யமாக இருக்கிறது.

திருநாராயணபுரத்தில் (மற்றும் ஸ்ரீரங்கபட்டினத்தில்) பிராமணர் அல்லாதோர், உள்ளம் உருகும்படி பொருள் தெரிந்து ப்ரபந்தங்களைப் பாடியதைக் கேட்டேன். மனம் சிலிர்த்துவிட்டது.

எப்படிப்பட்ட சாதனைகளை இராமானுசர் நிகழ்த்தியிருக்கிறார். தமிழ் தெரியாத கன்னடர்களும் ராமானுஜாசார்யா என்றெல்லாம் பேசும்போது ரொம்பவே ஆச்சர்யப்பட்டேன்.

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான புராணம்.

அதுவும் மாவடு சீஸனில் பொருத்தமான புராணம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,
நலமுடன் இருங்கள்.

எம்பெருமானார் கருணை நாமே எல்லாம் எப்படி சொல்லமுடியும்.

சகல மக்களுக்கும் பகவான் தயை சென்று அடைய வேண்டும் என்ற
முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஆயிரம் வருடம் சென்றும் அவர் பெருமை சொல்லக்
கோவில் வழிமுறைகள்
நடந்து கொண்டிருக்கின்றன.

மக்களுக்குத் தமிழ் சென்று அடைந்திருக்கும் அருமையை
என்ன என்று சொல்வது.
ப்ராம்மணர்களில் எத்தனை பேருக்குப் பாசுரங்கள்
தெரிந்திருக்குமோ எனக்குத் தெரியவில்லை.

அடுத்த மானிலங்களில் காணப்படும் பக்தியையும்
தமிழ் ஓதும் முறையையும் பார்த்து அதிசயப்
பட்டிருக்கிறேன்.
நீங்களும் அதையே சொல்வதுதான் மிக மிக மகிழ்ச்சி மா.

நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள்.

ஆமாம் மா. மாவடு சீசன் .ஹ்ம்ம்.... நினைத்தேன்.
பெருமாளுக்கும் அது சென்றடைந்திருக்கிறது.
அனுபவிப்போம்:)

வெங்கட் நாகராஜ் said...

ஒவ்வொரு முறையும் எங்கள் வீடு வழி தான் பெருமாள் ஜீயர்புரம் (இந்நாளின் ஜீயபுரம்) செல்வார். சேவித்ததுண்டு. புராணக் கதையும் சிறப்பு.

Thulasidharan V Thillaiakathu said...

அட! இப்படி ஒரு புராணக் கதை இருக்கிறதா! அதுவும் பிரசாதமாக! இதுவரை தெரியாது அம்மா. அருமையான பிரசாதம்!! பெருமாளுக்குப் பழையதும் மாவடுவும் சாப்பிட ஆசை...கோயிலில் எப்பவும் சர்க்கரைப் பொங்கல் புளியோதரைன்னு சாப்பிட்டு...ஹாஹாஹா பாட்டி வீட்டுக்குப் போனால் பழையதும் மாவடுவும் கிடைக்கும் பாருங்க ஸோ பெருமாள் தன் பக்தைக்கு அருள் பாலித்து அங்கு சாப்பிட்டு!! வாவ் பாருந்த தன் பிரசாதமாக்கிக் கொண்டார்!

கீதா