வல்லிசிம்ஹன்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
மதுரைக்கு அடுத்த நிறுத்தம் ஶ்ரீவில்லிபுத்தூர். மொத்த குடும்பத்துக்கும் ஆண்டாள் அம்மாவிடம் அதீதப் ப்ரேமை.
அதனால் ஓட்டுனர் மாயாண்டி ,தாத்தா வின் விருப்பபடி கோவில் அருகே வந்து நிறுத்தினார். பலராமா பல பத்திரா சீட்டு விளையாடிக் கொண்டிருந்த நாங்கள் நால்வரும் கீழே இறக்கப் பட்டோம்:)"வெறும் சீட்டு விளையாட்டு மட்டுமல்ல அது, நாங்களே கார்ட்போர்டு அட்டைகளைச் சதுரமாக வெட்டி, கைப்பட எழுதித் தயாரித்த எங்களின் பொக்கிஷம். மொத்தம் 54 கார்டுகள்! காரில் வரும்போது அந்தச் சீட்டுகளோடு எங்கள் நேரமும், நினைவுகளும் அத்தனை அழகாகக் கழிந்தன."
"அன்றைய காலத்து வண்டிகளில் 'டிக்கி' என்பது ஒரு தனி உலகம். சுமார் 5 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட அந்தப் பெரிய இடத்தில், அப்பா மெத்தை விரித்துத் தயார் செய்திருந்தார். எங்களைப் போன்ற சிறுவர்களுக்கு அது ஒரு மகா சௌகரியமான சொர்க்கம். வண்டி ஓடிக்கொண்டிருக்கும்போது அந்த மெத்தையில் அமர்ந்து கொண்டு பலராமா பலபத்திரா விளையாடுவது ஒரு தனி சுகம்."
பலராமா கார்டுகள் நாங்களே தயாரிப்போம். வீட்டுக்கு வரும் எந்த அட்டையும் எங்களைத் தாண்டிப் போகாது.:)
சின்னச் சின்னக் கத்திரிக்கோலால் 3"பை 3" கத்திரித்துக்
கடவுள்கள் பெயர்களை பென்சிலால் எழுதி( பேனாவுக்கு அனுமதி
இல்லை) மிகுந்த சிரமப் பட்டுத் தயாரிப்போம்.
இங்கே தாத்தா பாட்டி பற்றி ஒரு சிறு குறிப்பு.
"எங்கள் பாட்டி திருவேங்கடம், தாத்தா ஸ்ரீநிவாசன். பெயரிலேயே மஹா பெயர்ப் பொருத்தம்! அந்தப் பெயர்களுக்குள் அடங்கியிருந்த தெய்வீகமும் அன்பும் தான் எங்களை அந்த 14 ஆண்டுகள் பத்திரமாக அரவணைத்தன. பாட்டிக்குச் சர்க்கரை வியாதி இருந்தும், எங்களைப் பசி ஆற வைப்பதிலேயே அவர் குறியாக இருந்தார்."
கோவில்
முன் பிரகாரத்தில் கடைகளிலிருந்து ஒதுங்கி இருந்த
இடத்தில் இரண்டு தூண்களுக்கு இடையில்
விரித்தார் அப்பா. சித்தப்பா உணவுப் பாத்திரங்களையும்
பெரிய தெர்மாஸ் குடுவையையும் கொண்டு வர
தண்ணீர்க் குடத்தை நான் தூக்கிவந்தேன்.
முதல்னாளே தயாரித்து வைத்திருந்த பொல பொல சாதம்.
இரண்டு பெரிய பாத்திரங்களில் புளியோதரையாகவும் , தயிர் சாதமாகவும் மணம் வீசியபடி இருந்தன.
கூடவே ஒரு கூடையில் அப்பள வடகங்கள். ஒரு சின்ன எவெர்சில்வரில் சம்புடத்தில் துண்டு போட்ட மாங்காய் ஊறுகாய்
என்று ஒரே அமர்க்களம் தான். அம்மா, சித்தி,பாட்டி அனைவரும் விறகடுப்பில் சமைத்த உணவு.இந்தத் தாம்பாளம் எங்கே போச்சோ:)ஸ்ரிவில்லிபுத்தூர் கோவில் பிராகாரம், அங்கே இனிமையாகக்
கூவிக்கொண்டிருந்த கிளிகள், பூக்கடைகளின்
மல்லிகை மணம், யானைக் கொட்டாரத்திலிருந்து வந்த
பிளிறல் சத்தம், கோவில் மேளக் கொட்டு,நாதஸ்வர இசை,
உள்ளே தாயாருக்கு நடக்கும் அர்ச்சனைகள் ஒலிகள்
எல்லாம் மிக இனிமையாக இன்னும் என் மனதில் நிற்கின்றன.
அடுத்தாற்போல் திருனெல்வேலி பக்கம் நகர வேண்டும்.
மீண்டும் பார்க்கலாமா. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

No comments:
Post a Comment