Wednesday, May 09, 2018

மதுரையில் ஒரு சித்திரை தங்கல் 6

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

    அன்று மதியம் தாத்தா காப்பி குடித்துவிட்டு, எங்கள் இருவருக்கும் பிஸ்கட்
,பேரீச்சம்பழம் கொடுத்துவிட்டு,
 நிமிரவும்,
வண்டி ஓட்டி மாயாண்டி, ஐயா கார் கொண்டு வந்துவிட்டேன் என்று பணிவாகச்
சொல்லவும் சரியாக இருந்தது.

இதோ வரேன் என்று ,சட்டை போட்டுக் கொண்டு, உத்தரீயத்தையும்
அழகாகப் போட்டுக் கொண்டார்.
பாட்டி தயங்கித் தயங்கி அருகே போனார்.
அக்காவிடம் நான் யாருக்கும் சிபாரிசு செய்யப் போவதில்லை.
என்று பட்டென்று சொன்னார் தாத்தா.
இல்லை, ரங்கத்தின் கடைசிப் பையன் படித்து முடித்து
விட்டான். அவனுக்கும் மதுரையில் வேலை கொடுத்துவிட்டால்
அவன் வழியைப் பார்த்துக் கொள்வான்.
என்று பாட்டி முடித்தார்.

யாராவது மானேஜர் கண்ணில் பட்டால் சொல்கிறேன் . அவர்களுக்கு வாக்குக் கொடுத்துடாதே
என்று கறாராகச் சொல்லிவிட்டு
முரளியை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

ஊரார் வீட்டுப் பிள்ளையை வளர்த்தால் நம் குழந்தைகள் நன்றாக இருக்கும்னு சொல்வார்கள்
என்று முணுமுணுத்தபடி என்னை பின் கட்டுக்கு அழைத்துச் சென்றார்.
உரலை முதலிலேயே அலம்பி வைத்திருந்தேன்.
பாட்டி வந்து குழவியை அல்ம்பி முதலில் ,உளுந்தைக் களைந்து போட்டார்.
அரிசி போடலையான்னு நான் கேட்டதுக்கு,
இதுதான் நன்னா அரை படணும் ஆண்டா. இட்லி மெத்துனு இருக்கணும் இல்லையா
என்று திருக்குறுங்குடி கதைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

எப்படித் தன் தந்தை வயலில் பாடுபடுவார். பாட்டியும் தன் தங்கைகளும், தங்கள்  அம்மாவுக்கு ,
அந்தப் பாட்டிக்கு  தலைசுத்தல் வருமாம்
உடனே இஞ்சியை அம்மியில் படபடவென்று  தட்டி த் தலையில்  தடவிக் கொள்வார் என்று  செய்து காண்பித்தார்

சமையல் உதவி அப்பளம் இடுவது எல்லாம் சொன்னார்.
மகேந்திர மலையிலிருந்து  எப்படி  அனுமார்  ஸ்ரீலங்காவுக்குத் தாவிச் சென்று சீதையைப் பார்த்தார்,
எப்படி தென் கோடியில் இருக்கும் திருக்குறுங்குடியில் பேசினால் சித்ர குப்தனுக்குக்
கேட்கும்.
   அதனால் எப்பொழுதும் நல்ல வார்த்தைகளையே பேச வேண்டும் என்றும்
அறிவுரை சொல்லி முடிக்கவும், உளுந்து அரைபட்டுப்
பந்து போல உருண்டு வரவும் சரியாக இருந்தது.
அந்த உருண்டு வந்த மாவில்  பபிள் வரதான்னு பாருன்னு அன்று சொன்னதை நான் இன்னும்
மறக்கவில்லை.

தாத்தாவும் முரளியும் வரும்போது  சாயந்திரம் ஆகி இருந்தது.
முரளி கையில் பெரிய பிஸ்கட் டப்பா.
அவன் கண்களில் அதீதப் பிரகாசம் தான் பார்த்து வந்த
அதிசயங்களை என்னிடம் விவரித்தான்.
அது பெரிய பங்களாவாம். எல்லா இடமும் வெள்ளை வேளேர்னு இருந்ததாம்.
வீட்டுக்கு முன்னால் ஒரு குட்டிக் குளமாம்.
அதில் தங்க வர்ண மீன் களாம்.

தாத்தாவோட அக்கா  செக்கச் செவேல்னு எப்பவும் சிரித்தபடி இருந்தாராம்.

தாத்தாவுக்குத் தன் பேரனின் சமர்த்துப் பேச்சைக் கேட்டு
ஒரே மகிழ்ச்சி. ஜயாவும், நாராயணனும் நன்றாக வளர்க்கிறார்கள்.
சொன்ன இடத்தில் அசையாமல் உட்கார்ந்து இருந்தான்.

அடுத்த இரண்டு நாட்கள் சீக்கிரம் சென்று விட்டன.
 நானும் பாட்டியும் மீண்டும் டவுனுக்குப் போய் வந்தோம்.
வெள்ளி  சாயந்திரம் வந்த அப்பாவிடம் சொல்ல நிறைய விஷயங்கள்
இருந்தன.  பாட்டி,நார்த்தங்காய், சுண்டைக்காய்,மணத்தக்காளி  எல்லாம் காகிதத்தில் வைத்து கயிறு கட்டிக்க கொடுத்தார்.
கசப்பு சமாசாரம்டா நாராயணா .  இரண்டணா  கொடுத்துட்டு  வாங்கிக்கோ
 என்று சிரித்தார்.
அடுத்த நாள் எனக்குக் கிடைத்த தாழம்பூவையும், மணி மாலைகள்
பட்டுப் பாவாடை எல்லாம் வைக்க ஒரு பெரிய பையும் கிடைத்தது.

மனசில்லாமல் தாத்தா பாட்டியிடம் விடை பெற்றுக் கொண்டு
,திருமங்கலம் வந்து சேர்ந்தோம்.
சித்தப்பா ஜீப்பில் கொண்டு விடுவதாகச் சொன்னதை அப்பா ஏற்கவில்லை.
வாரம் பூராவும் உழைக்கிறாய். ஓய்வு எடுத்துக்கோ.
லக்ஷ்மி அக்கா வந்த பிறகு பார்க்கலாம்.

இதுகளும் அதற்குள் மதராசுக்குச் சென்று வந்துவிடும் என்றதும் எங்களுக்குப்
பழைய மகிழ்ச்சி தொத்திக் கொண்டது. ஆஹா இன்னோரு பயணம்.
 சுபம். கூடத் தொடர்ந்து
வந்த அனைவருக்கும் நன்றி.
தாத்தா 

Tuesday, May 08, 2018

ஜானா வேணு கதை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

ஒரு நொடிப் பொழுதில் நடந்து விட்டது.
எப்பொழுதும் போலப் பேத்தியை பள்ளியிலிருந்து வரும்போது
உடன் நடந்து வரும் தோழி மிஸஸ். குப்தா ,வழக்கம் போல ஏதோ ஜோக் சொல்லி சிரிக்க
ஜானா , பாதையில் இருந்த வேரொன்று தடுக்கி,
விழுவதை சமாளிக்கக் கை ஊன்றி விட்டாள்.

உடனே தெரிந்து விட்டது. இது கொஞ்சம் கனமான அடி என்று.
கூடவே வந்து கொண்டிருந்த மற்ற தோழிகள் அவளைத் தாங்கிப்
பிடிக்க, சமாளித்துக் கொண்டு  எழுந்தாலும்
வலது கை மணிக்கட்டு வீங்குவதைப் பீதியுடன் பார்த்தாள்.

ஒய் ஜானா யு ஆர் ஆல்வேஸ் ஃபாலிங்க்.
This is not right. remember last year it took a month to heal your ankle
என்று அவளை ஆதரவாகப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள்.
 இரண்டாம் வகுப்பில் படிக்கும்  நவி என்ற நவீனா
பாட்டியைப் பார்த்து அழ ஆரம்பித்தது.
அச்சோ அழண்டா மோளே, அம்மை இதோ வந்துடுவாளே என்று
லீலா நாயர் ,குழந்தையைத் தூக்கிக் கொண்டாள்.

வீட்டுக்கதவைத் திறந்து கொண்டு அனைவரும்
உள்ளே நுழைந்து, முதலுதவியாக
ஃப்ரிட்ஜ் ஐஸ் பெட்டியிலிருந்து ஐஸ் பாக் ஒன்றை அவள் கைமேல்
வைத்தாள் லீலா.
 குடிக்கத் தண்ணீர் கொடுத்தாள்.
சாய் போட்டுத் தரவா. மோளுக்கு என்ன வேணும்.
ரொட்டி ஜாம் செய்து தரேன் என்று நிலமையைச் சமாளித்தாள்.

மருமகள் வர இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கு. வலியோ தாங்கவில்லை.
உலர்ந்த துணிகளை மடிக்க வேண்டும். ரொட்டி, கூட்டு செய்ய வேண்டும்.
கணவர் வேணுவுக்குக் கஞ்சி செய்யணும்.
எண்ணங்கள் ஓட நாற்காலியை விட்டு எழுந்தவள் தலை என்னவோ
செய்ய மீண்டும் உட்கார்ந்து விட்டாள்.
 சத்தம் கேட்டு ,மாடி அறையிலிருந்து இறங்கி வந்தார் வேணு,
ஜானாவைப் பார்த்ததும் அவருக்குப் பதட்டம்.

அங்கிள் பேடியொண்டும் இல்லை. சின்ன அடி.
நான் லேகையை வரச் சொல்லி இருக்கேன்.
நீங்கள்  நவியைப் பார்த்துக் கொள்ளுங்கள்,
 எமெர்ஜென்சியில் கட்டுப் போட்டுக் கொண்டு வந்துவிடுகிறோம்.
அம்மைக்கு ஃப்ராக்ச்சர் ஆகி இருக்கணும். இத்தர வீக்கம்
கண்டேளா, என்றபடி, வாசலுக்கு விரைந்தாள்.
அவளது தோழி பக்கத்து     ரிச்சர்ஸ் ஹாஸ்பிட்டலில் எக்ஸ்ரே பிரிவில் இருந்தாள்.

 ஜானாவின் அருகில் உட்கார்ந்த வேணு, என்னம்மா  ஆச்சு, நானும் வரட்டுமா
என்று சொல்ல, இல்லை குழந்தை பயப்படுவாள். நீங்கள் குக்கரில்
சாதம் மட்டும் வைத்துவிடுங்கள்.
நான் வந்த பிறகு மற்றதைப் பார்க்கலாம் என்ற மனைவியைப் பார்த்துத் தொண்டை அடைத்துக் கொண்டது.
அவர்களும்  அமெரிக்கா, நியு ஜெர்சி வந்து 7 வருடங்கள் ஆகிறது.
ஒரே மகன் என்பதால்  கோவையில் வீடிருந்தாலும்,
 அவனுக்கு உதவியாக இங்கே வந்துவிட்டார்கள்.
சின்ன நவி பிறந்ததிலிருந்து இங்கே வாசம்.
இப்போது குடி உரிமையும் கிடைத்தாகிவிட்டது.
மாதா மாதம் வரும் சலுகை சம்பளமும் சேர்ந்து கொண்டு வந்தது.
மருமகளின் பெற்றோர்கள் வரும் சமயம், இருவரும்
எல் ஏ வில் இருக்கும் வேணுவின் தங்கை வீட்டிற்குப் போவார்கள்.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கோவை சென்று, மற்ற தெய்வ தலங்களுக்கும் உறவினர் வீட்டுக்கும் போய் வர  இரண்டு மாதங்கள் எடுத்துக் கொள்வார்கள்.
வேணு எண்பது வயதை நெருங்கினாலும் வலுவான உடலமைப்புக் கொண்டவர்.
ஜானா தான் இருவரில் கொஞ்சம் பலவீனம். தைராய்ட் சரியாகாமல் உடல் பருத்து
 வீடுண்டு, வேலைகள் உண்டு என்று பொழுதக் கழித்து விடுவாள்.
யப்ப்  டிவி தான் அவளுக்குப் பொழுது போக்கு.

மருமகளுக்கு எல்லா உதவியும் செய்து அவ்வளவு
பெரிய வீட்டை அழகாக வைத்திருப்பாள்.
இந்த்க் கை முறிவு பின்னடைவுதான். அவர்கள் மருத்துவ மனை போய் வரட்டும்.
நாம் நாளை பார்க்கலாம்.....
Azhakiya   Nambi ThirukkuRungudi
FINDING WAYS.

Monday, May 07, 2018

மதுரையில் ஒரு சித்திரை 1955 5

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  ராமா ராமா என்ற படி படுத்துக் கொள்வது தாத்தாவின் வழக்கம்.
கைகளை நெஞ்சின் மேல் குவித்த வண்ணம், அப்படியே உறங்குவார். புரண்டு படுப்பதோ
அசைவதோ கிடையாது. எப்பொழுதாவது சளித்தொந்தரவு வரும் போது ,
பாட்டி, தவிட்டை வறுத்து மிருதுவான வேஷ்டிக்குள்
வைத்து அருகில் அமர்ந்து மிருதுவாக ஒத்தடம் தருவார்.
தாத்தா ஒழுங்காக மூச்சுவிட ஆரம்பித்ததும் தான்
இறங்கி வந்து படுத்துக் கொள்வார்.

எங்கள்  இருவருக்கும் மிகவும் பயமாக இருக்கும்.
அடுத்த நாள் சுறுசுறுப்பாக எழுந்து விடுவார்.
  குழந்தைகளா எழுந்திருங்கோ. சீக்கிரம் குளித்துவிட்டு
நடக்க வேண்டும்.

அப்புறம் கேட்பானேன். பாட்டி சித்தப்பாவுக்கும் எங்களுக்கும்
உப்புமா  செய்து கொடுப்பார்.
தாத்தா குளித்துப் பஞ்ச கச்சம், வெள்ளை சட்டை ,அங்கவஸ்திரத்தோடு
தயார் ஆகிவிடுவார்.
ஒரு மர ஸ்டூல் தான் தாத்தாவின் சாப்பாட்டு மேஜை.
 அதில் பாட்டி கொண்டு வைக்கும் எந்த உணவையும்
தட்டாமல்  ,வீணாக்காமல் சாப்பிடுவார்.

கூடவே மோரும் உண்டு.
நாங்களும் கிளம்பிவிடுவோம். ஆண்டா, குழந்தை கையைப்
பிடித்துக்கோ, ரோடில் பார்த்து நடக்கணும்.
என்றபடி முன்னாடி போவார். கையில் அழகான கைத்தடி
ஊன்றியபடி தான் நடப்பார்.
காலனியின் வாசலில் தபால் பெட்டி இருக்கும்,
அதில் கறுப்பு சதுரத்தில் ,தபால் எடுக்கப் படும் நேரம்
வைத்திருப்பார்கள்.
நாங்கள் இருவரும் அதைப் படித்து சொல்ல வேண்டும்.
வாக்கிங்க் ஸ்டிக்கை அதன் மேல் தட்டி நேரே படி 7.30 யா 8 மணியா என்றதும்
மீண்டும் பார்ப்போம் 8 மணிதான் தாத்தா என்போம்.
சிரித்தபடி மேலே நடப்பதற்கு முன் , சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஒரு கவரை
தபால் பெட்டிக்குள் அழகாகப் போடச் சொல்வார்..

இது எங்கே போகும் தெரியுமா. அப்பா கிட்ட கேட்க மாட்டீர்களா என்ற படி
 தபாலின் பயணத்தை விளக்குவார்.
தாத்தாவின் பக்கத்திலிருந்து நாங்கள் கற்றது அதிகம்.
பழங்கானத்திலிருந்து பைக்காரா  ஆபீஸ் போகும் வழி மரங்களூம்
 நல்ல சாலையும், வயல் வெளிகளும் நிரம்பி இருக்கும்.
அந்தக் காலை வேளையில் அலுப்பே தெரியாது.

ஒரு சிறிய கட்டிடமாக இருந்தது அப்போது.
அதென்ன பைக்காரான்னு பேரு தாத்தா.
நல்ல தமிழ்ப் பெயர் இருந்திருக்கும் மா. வெள்ளைக்காரன் வாயில் நுழைந்திருக்காது.
திரு நெல்வேலி டின்னவேலி ஆன மாதிரி என்பார்.
தாத்தா உள்ளே நுழைந்ததும், அங்கிருந்த அதிகாரி
பரபரப்பாக வந்தார்.
 என்ன காரியம் சார். . தந்தி அடிக்கணுமா என்று சொன்னபடி தாத்தாவை
உட்கார வைத்தார். நாங்கள் இருவரும் சுற்று முற்றும் பார்த்தோம்.
அப்பாகிட்ட பேச வந்தீர்களா பசங்களா.
.இது சின்ன ஆபீஸ் தான் அடுத்தாப்பில பசுமலையில்
பெரிய கட்டிடம் வரப் போகிறது என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.10 வருடங்களில்
 அங்கே நாங்களே குடிவருவோம் என்றுதான் எதிர்பார்க்கவில்லை.

தந்தி மேஜையின் அருகே உட்கார்ந்த தாத்தா,கட்டுக் கட கடா
அடிக்க ஆரம்பித்தார்.
தந்திக் கட்டை தொடக் கூடாதும்மா. அங்கே வயர் இருக்கு. ஷாக் அடிக்கும் என்றார் தாத்தா.

அவர்கள் எப்படிப் புரிந்து கொள்வார்களோ  எனக்குத் தெரியவில்லை.
வெகு வருடங்கள் கழித்து
பிறகுதானே டெலி ப்ரிண்டர் வந்தது.
 ரங்கன் நீங்க ரெண்டு பேரும் இல்லாமல் படுத்தறானாம்.
உங்க அப்பா சனிக்கிழமை  இங்கே வந்து உங்களை அழைத்துப் போகிறானாம் என்றார்.
எங்களுக்கு ஏமாற்றமாக  இருந்தது.
 ஒரு வாரம் தானா.
தாத்தா எங்களைப் பார்த்ததும் சிரித்துவிட்டார்.
 உங்க அப்பாவுக்கு, தன் அம்மாவுக்கு வேலை நிறைய ஆகிடும்னு யோசிப்பான்.
 அதனால் என்ன
இதோ செப்டம்பரில் லீவு வருமே.அதுக்கு முன்னால் நானும் பாட்டியும்
அங்கே வந்து இருக்கோம்.
டில்லி அத்தை வராளே நாம் எல்லாம் சேர்ந்திருக்கலாம் என்று
சமாதானப் படுத்தினார்.

 எதிர் பக்கம் போய் அடுத்தாற்போல வந்த பஸ்ஸில் ஏறிக் கொண்டு
வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.
பாட்டி மணக்க மணக்கக் கத்திரிக்காய் தொகையிலும்
கீரைக் குழம்பும், பொரித்த அப்பளமும் செய்து வைத்திருந்தார்.
இன்னிக்கு நாம ரெண்டு பேரும் தோசைக்கு அரைக்கப் போறோம்
 முரளி தாத்தாவோட அவர் அக்கா வீட்டுக்குப் போய் வரட்டும் என்று
சொன்னார். அக்கா வீடு என்றால் பெரிய கார் வரும் என்று தெரியும்.
இருந்தாலும் அரைக்கும்போது
\பாட்டி சொல்லும் கதைகளைக் கேட்கலாமே
என்று சரி சொல்லிவிட்டேன்.....தொடரும் பிறகு முடியும்.


Saturday, May 05, 2018

மதுரையில் ஒரு சித்திரை 1955 4

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 சாயந்திரம் 7 மணி ஆகிவிட்டது, ராகவன் மாமா எங்களை வீட்டில் விடும்
போது. பாட்டிக்குக் கொஞ்சம் கவலைதான்.
 தாத்தாவுக்குப் பசி தாங்காது.
சித்தப்பா  அலுவலகத்திலிருந்து வந்திருப்பார். அவருக்கு வாய்க்கு ருசியாக
ஒன்றும் வீட்டில் இல்லை.

மாமாவின் கனத்த குரல் கேட்டது வாசல் விளக்கு எரிந்தது. அழிக்கதவைத் திறந்த சித்தப்பா
என்னம்மா  இவ்வளவு இருட்டில் மழையில்
வருகிறாய், டேய் நீதான் அழைத்து வந்தாயா. அப்ப சரி.
உள்ள வாங்கோ என்றார்.

முரளி வெளியே விரைந்து வந்தான். அவனால் என்னைவிட்டு நிறைய
 நேரம் இருக்க முடியாது.
அம்மா வேற இல்லை.
 //தாத்தா ,சித்தப்பாவோட சஹஸ்ர நாமம் சொன்னேன்.//
 என்னால் நம்ப முடியவில்லை. எனக்கே கஷ்டம் இவன் எப்படி சொல்வான் என்று தாத்தாவைப் பார்த்தேன்.
 எங்களோடு சமத்தா உட்கார்ந்து  எல்லாம் கேட்டுக் கொண்டான்
உன்னைவிட புத்திசாலி அவன் ஆண்டா என்று சிறு புன்னகை பூத்தார்.

பாட்டியும் சித்தப்பாவும் வாங்கிய பொருட்களை
உள்ளே உக்கிராண உள்ளில் வைத்தார்கள்.
இன்னோரு வாணலியா என்னம்மா,இரும்புக் கடையே வைக்கலாமே
நம் அகத்தில் என்றார்.
இது லக்ஷ்மிக்குடா. டெல்லியில் இது போலக் கிடைக்கலையாம் என்றார் பாட்டி.
அத்தை லக்ஷ்மி இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை தெற்கு விஜயம் செய்வார்.
அருமையான மனுஷி..அவர் வீட்டுக்காரர் சுந்தரராஜன் அத்திம்பேர் போல
நல்ல மனிதரைப் பார்க்க முடியாது.
எங்கள் அனைவரிடமும் அவ்வளவு அன்பாக இருப்பார்,
பார்ப்பதற்கு  கொஞ்சம் ரங்காராவ் மாதிரி இருப்பார். அதனாலயே எனக்குப்
பிடிக்கும். எப்போதும் பஞ்ச கச்சமும் ,வெள்ளை ஜிப்பாவும் தான் அவர் உடை.

இதோ இப்பா, பாட்டி சமையலறையில் நுழைந்தாச்சு. குமுட்டி அடுப்பு மூட்டி, வாணலியை
வைத்து  தேங்காய் எண்ணெய் விட்டு, வெண்டைக்காய்களைத் திருத்த ஆரம்பித்தார்.
சித்தப்பாவுக்குத் திருமணமாகி இருந்தது.
சித்தி பிறந்தகம் போயிருந்தார். இல்லாவிட்டால் சித்தியுடன் இன்னும் சந்தோஷமாகக்
காலம் செல்லும். விறகடுப்பில் ரசம் கொதிக்க ஆரம்பித்தது.
ராத்திரி தாத்தாவுக்கு அரிசி நொய்க் கஞ்சிதான். சீரகம் தாளித்து மோர் விட்டு
மணத்தக்காளி வறுத்து தொட்டுக் கொள்ள வைப்பார் பாட்டி.
ராகவன் மாமா கிளம்பினார். இருடா சாப்பிட்டுட்டுப் போ
என்ற பாட்டி அவருக்கும் இலை போட்டார்.

கைகால்களை அலம்பிக் கொண்டு அவரும் வந்தார்.
பாட்டி சின்ன சின்ன வேலைகளை என்னை செய்ய வைப்பார்.

சாப்பாடு ஆனதும் மாமா கிளம்பினார். பத்ரமாப் போடா. இரண்டு நாள்
 கழித்து வரேன்னு சொல்லு// என்றபடி பாட்டி சாப்பிட உட்கார்ந்தார்.

சித்தப்பா தாத்தாவுக்கு படுக்கை விரித்துப் போட்டார்.
தாத்தா எங்கள் இருவரையும் அருகில் அழைத்து  சிறு கதைகளாகச் சொன்னார்.
பாதியில் நான் தூங்கியாச்சு.
 தாத்தா கட்டில் அருகில் எங்களுக்கும் பெரிய ஜமக்காளாம் விரிக்கப்பட்டு,நான்,பாட்டி,முரளி படுத்துக் கொண்டோம்.
எங்கள் இருவருக்கும் நல்ல கனத்த போர்வையைப் போர்த்திவிட்டு. கொசுவலையும் கட்டினார் சித்தப்பா.
வயலை அடுத்து இருப்பதால் கொசு தொந்தரவு உண்டு.
 அப்பா,சித்தப்பா இருவரும் பெற்ற குழந்தைகள் விஷயத்தில்
ஒரே மாதிரி  இருப்பதை நினைத்தபடி நினைத்தபடி தூங்கி விட்டேன்.....
அடுத்த நாள் பைக்காரா தபால் ஆபீசுக்குப் போய் அப்பாவுடன் பேசலாம்...தந்தி வழியே
வயல்வெளிகள் என் நினைவில் 
என்று சொன்னது நினைவுக்கு வந்தது.
Add caption
வைகை இன்று.

Thursday, May 03, 2018

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பலவகைகளில் இளவயதில் ,25 என்று வைத்துக்
கொள்ளலாமா
பலவித சோதனைகள் வந்து சேர்ந்த போது,
அவற்றைச் சமாளிக்க
உடலிலும் மனதிலும் வலு இருந்தது.

கொஞ்ச நாட்கள் கழித்து அந்தத் துன்பங்களுக்குக் காரணமாக இருந்தவர்கள்
மாறினார்கள்.

நம் மனம் மாற மறுத்தது.
பலவிதங்களில் அவர்களைச் சந்திக்க மறுத்தது.

என்னுடன் சேர்ந்து என் மக்களும் அவதிப்பட்டதே
என் சினத்துக்குக் காரணம்.
 அப்போதெல்லாம் சுற்றி நில்லாதே போ  பகையே துள்ளி வருகுது வேல்
என்பதே ஒரு மந்திரம் போல் ஒலிக்கும்.
 பெற்றோர்கள் என்னைத் தாங்கித்தான் நான் வளர்ந்தேன்.
பலவிதங்களில் உயர்ந்துவிட்ட உறவுகள்.
இப்போது மாறிய காலத்தை உணர்ந்து மதிக்கத் துவங்கினார்கள்.
என் கசப்பை எல்லாம் விழுங்கி  ,நானும் நடிக்க ஆரம்பித்தேன்.

இதில் அதிசயம் என்ன தெரியுமா, என் மக்கள்
அவர்களைச் சீக்கிரமே மன்னித்துவிட்டார்கள்.
மனதில் கசப்பை வைத்துக் கொள்ளாதே மா.
இனி எல்லாம் நலமே. மன்னித்து மறந்துவிடு என்பது அவர்கள்
அறிவுரை.
சிங்கம் இருந்தாலும் இதையே சொல்லி இருப்பார்.
அவரது உழைப்பு எங்களை உயர்த்தியது

இதுதான் என் பதிவுகளின் பின்னோக்குப் பயணத்துக்கான காரணம்.
என்னை நானே உழுவதற்கான ஏற்பாடு.
தொடர்ந்து படித்து என் எழுத்துக்கு மதிப்பு கொடுக்கும் நண்பர்களுக்கு மிக நன்றி.

மதுரையில் ஒரு சித்திரை 1955 3

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  மாமா வண்டியைக் கொண்டுவரும் போது சீவு என்கிற ஸ்ரீவரமங்கைப் பாட்டியும் வந்துவிட்டார்.
என்ன திருவேங்கடம் எங்க்கே பார்வேட்டை கிளம்பிட்டாய்னு கேட்டவாறு.

உனக்கும் எனக்கும் என்னடிம்மா பார்வேட்டை. இந்தக் குட்டி வந்திருக்கு, அதுக்கு ஏதாவது
வாங்கிவிட்டு, மாவடு,மாங்காய் மத்த காய்கறிகள் வாங்கலாமே ந்னு கிளம்பினேன்.
கூட்டத்திலே தன் மருமாள் தொலைஞ்சு போயிடுவாளோன்னு ராகவனுக்கு பயம். உங்க காரை எடுத்து வந்துவிட்டான்.// என்றார் பாட்டி.

போறதுதான் போற, எனக்கும் குங்குமம்,தாழம்பூ  ,வெத்திலை எல்லாம் வாங்கிண்டு வா என்றார் சீவுப் பாட்டி.
என்ன விசேஷம்டி அம்மா  உங்க அகத்துல//

நாட்டுப்பெண்ணுக்கு 5 ஆம் மாசம்.
அவ அம்மா நாச்சி வந்திருக்கா. ஏதோ பொன்னுக்குப் பின்னல்ல தாழம்பூ தைக்கணும் .மருதாணி இடணும்னு உட்கார்ந்திருக்கா.

யாரு நாச்சிப் பெரியம்மா வான்னு நானும் ஆவலோடு கேட்டேன்.
ஆமாம் என்ற ராகவன் மாமா,வரும்போது  அம்மாவைப் பார்க்கலாம் என்றார்.
எனக்கு மனம் பூராவும் சந்தோஷம்.

என் இன்னோரு பாட்டி சீனிம்மாவின் அக்கா இந்த நாச்சியார் பெரியம்மா.
5 அடிதான் . முகம் கை கால் எல்லாம் மஞ்சள்
நீட்ட ஸ்ரீசூரணம்  பளிச்சென்று பிரகாசிக்கும்.
அந்த சின்ன உடம்பை எப்படித்தான் ஒன்பது கஜத்தால் சுற்றிக் கொள்வாரோ.
ஒடுங்கின கைகள் என் கைகளைப் பிடித்துக் கொள்வது இன்னும் நினைவில் இருக்கிறது.
 வயிற்று வலித் தொந்தரவால் சுருங்கின முகம் எங்களை எல்லாம் பார்த்தாலே விகசிக்கும்.

பெரியம்மாவுக்குப் பெரிய சம்சாரம்.
மணி மாமா முதல்,பிறகு கிச்சன்,ராஜி,மங்கை இப்படிப் போகும்
ராகவ மாமாவைத்தான் அம்மு சித்திக்குக் கொடுத்துவிட்டார்கள்.

பெரியம்மாவின் கணவர் வரதா அத்திம்பேர் . முரட்டு மனிதர்.
 எங்கயோ போய்விட்டேன். புது மண்டபத்தை அடையவும் மழை வரவும்
சரியாக இருந்தது. உருட்டல் மிரட்டல் அதிகமாகவே , நான் வளையல் கடை உள்ளே போய் உட்கார்ந்து விட்டேன்.
பாட்டிக்கு என் பயம் தெரியும், நீ இரு. நாங்கள் போய் மற்ற சமாசாரம் வாங்கி
வருகிறோம் என்று சென்றார்கள். மண்டபக்கடைகள்  முடியும் இடத்தில்
பந்தலுக்கு அடியில் பாட்டி வழக்கமாக காய்கறி வாங்கும் இடத்தில் இரண்டு
கித்தான் பையில் மாவடு, மாங்காய்,கீரை,வாழை, சேம்பு,புடலங்காய்
கத்திரிக்காய், எல்லாம் வாங்கிக் கொண்டு பக்கத்தில் இருக்கும் வாணலிகள்
விற்கும் கடைக்கு வந்தார்கள் . ஒரு மண் அடுப்பும் வாங்கிக் கொண்டார் பாட்டி.

அதுவரை வளையல் கடை அம்மாவின் மகள் ,மகன் வீடு எல்லா வம்புகளையும் கேட்டுக் கொண்டேன்.
என்ன சமையல் வரைக்கும் வந்துவிட்டோம் .
இவர்களூம் வந்துவிட்டார்கள்.
என்ன பேத்தி வாயடிக்கிறாளா என்ற படி வந்த  பாட்டி
Add caption
 எங்கள் வீட்டில் இருக்கும்
 எல்லோருக்கும் வளையல்கள்,
வாங்கினார். ஒரு மஞ்சள் வண்ணப் பையில் அந்த அம்மா கொடுத்ததைப்
பத்திரமாகக் கையில் பிடித்தபடி, வண்ண வண்ணப் பாசிகள் கோர்த்த மாலையைக் கழுத்தில் போட்டுக் கொண்டு,   மழையில் நனைந்திருந்த தளங்களைக்
கடந்து வண்டியை வந்தடைந்தோம்.
மழை நின்று சிறிய தூறலாகி இருந்தது.
மல்லிப்பூ பந்துகள் பக்கம் போனதும் பாட்டிக்குத் தாழம்பு நினைவு வந்தது.
அதையும், மல்லிப்பூ பந்துகளையும் வாங்கிக் கொண்டு சீவுப் பாட்டி வீட்டுக்கு வந்தோம்.

இன்று இங்கே மழை மிரட்டுகிறது. நாளை பார்க்கலாம். தொடரும்.

Tuesday, May 01, 2018

மதுரையில் ஒரு சித்திரை 1955

Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

மதியம் சாப்பாடும் முடிந்தது.  பாட்டிக்குக் கொஞ்ச நேரம் அசதி தீரப் படுத்துக் கொள்ளவேண்டும்.
தாத்தாவும் தூங்க நானும் முரளியும் ட்ரேட் என்று சொல்லப் படும் இப்போதைய
மோனோபோலியை  விளையாட ஆரம்பித்தோம்.

இன்னோரு சித்தப்பாவின் குழந்தைகள் கண்ணனும்,ஸ்ரீதரனும்
வந்தார்கள். சத்தம் இல்லாமல் வெளியே சென்று
ஓடிப்பிடித்து விளையாடப் போனோம்.

அதற்குள் தாத்தா வெளியே வரவும்,அவர்கள் ஓடிவிட்டார்கள்.

தாத்தா வந்ததும், பின்னாடியே பாட்டியும்
அவருக்காகத் தயாரித்த சுக்குக் காப்பியுடன் வந்தார்.

நீயும் சாப்பிடறியா ஆண்டா. பானகம் மாதிரி இருக்கும் என்று சிரித்தார்
பாட்டி.
குழந்தைக்கு கோக்கோ கொடும்மா.

சதைங்கிறதே காணமே. யார் இப்படி ஒல்லியா இருப்பா நம்மாத்தில.
உன்னைக் கொள்ளலியே என்று கேலி செய்தார்.

உங்கள்ட்ட ஒரு விஷயம் சொல்லணும்னதும்
தாத்தா அலெர்ட் ஆகிட்டார்.
என்ன டவுனுக்குப் போகணுமா. கால் தரிக்காதே உனக்கு
வாரத்துக்கு  இரண்டு தடவையாவது தங்கைகளைப் பார்த்து ஊர் வம்பு
கேட்கணும்.

வானத்த்தைப் பார். மேற்கே மின்னல் தட்டறது.
மழைல மாட்டிக்காம வருவியா என்றார்.
மதுரை  கோடை மழை தெரியாதா.  உருட்டி மிரட்டும்.  தூறலோடு போய்விடும்
என்றார் பாட்டி.
சரி உன்பாடு . இந்த வாலும்   உன்னோடு வரதா என்னைக் காட்டினார்.
ஆமாம் புது மண்டபத்துக்குப் போகணும், ,அதுக்கு முன்னால் சந்தையில்
 கொஞ்சம் காய்கறிகளும் மாங்காயும் வாங்கணும் என்றார்.

சரி மணி 3 ஆறது. 7 மணிக்குள் வந்துடு என்று அனுப்பினார்.
 பாட்டியும் அழகாக அரக்குப் பட்டுப் புடவை கட்டிக் கொண்டு எனக்கும்
ஒரு எம் எஸ் ப்ளூ பட்டுப்பாவாடை கொடுத்தார்.
 ஏது பாட்டி இது என்றதும்  ,போன வருஷம் அக்கா அகத்தில் உனக்காக
கொடுத்தார்.
நானும் தைத்து வைத்தேன். கச்சிதமா இருக்கே என்று ஒரு பட்டு சட்டையும் கொடுத்தார்.

புது மண்டபத்தில் உனக்கு கழுத்துக்கு மாலை வாங்கித்தர்கிறேன், என்று
தனக்கான பஸ்பாசை எடுத்துக் கொண்டு

வந்தார்.
முரளியும் தாத்தாவும்  ஏதோ   ஸ்லோகம் கற்பதில் இருந்தார்கள்.

பழங்கானத்து  வாசல் கேட்டைத்தாண்டி, சொர்ணாம்பிகா பஸ்கள் நிறுத்தும் இடத்தைக் கடந்து
பஸ் ஸ்டாப்புக்கு வந்தோம்.
 அப்போது டிவிஎஸ் சில் வேலை செய்பவர்களின் குடும்பத்துக்கு
 பஸ்பாஸ் கொடுத்து விடுவார்கள். இலவச சவாரிதான்.

5 ஆம் நம்பர் பஸ் வந்ததும் இருவரும் ஏறிக்கொண்டு 
பாட்டி இறங்கச் சொன்ன இடத்தில் இறங்கிக் கொண்டோம்.
பாட்டியின் தங்கைகள்
அம்மும்மா, ரங்கம்மாவும் வக்கீல் புதுத் தெருவிலோ ,,,,
Add caption
இல்லை நாயக்கர் புதுத்தெருவோ.
இருந்தார்கள்.

அதற்கு எதிர் வரிசையில் என் அம்மாவின் உறவினர்கள், மங்கை,தேசி, சீவுப் பாட்டி எல்லாரும் இருந்தார்கள்.
இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் தாமிரபரணி ஆத்தங்கரை வந்தது போலத்தான்.
அம்முச்சித்தி  ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டது என் அம்மாவின்
பெரியம்மா பையன். ராகவன்.
தன் மனைவி ஜானகியை அழைத்து// எங்க சேச்சிப் பாப்பா பொண்ணு வந்திருக்கா பாரு.
பஜ்ஜி கொண்டு வா பார்க்கலாம்// என்றார்.
 நான் பாட்டியைப் பார்த்துக் கொண்டேன். பாட்டி சிரித்துக் கொண்டே தலை அசைத்தார்.
ஊஞ்சலில் உட்கார்ந்து ரசித்து முடித்தேன் பஜ்ஜிகளை.
  எங்க பயணம் ,பெரியம்மா என்றார்.
புதுமண்டபத்துல திருவிழாவுக்கு  வளையல், முத்து மாலை எல்லாம் வந்திருக்குமே.
இவளுக்கு வாங்கணும்,
எனக்குப் புது வாணலியும் வாங்கணும் என்றார் பாட்டி.
 எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு பஸ்ஸில எப்படிப் போவாய் பெரியம்மா. தேசியோட காரை எடுத்துண்டு வரேன்  என்று அப்படியே கிளம்பினார் மாமா. தொடரும்

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...