Tuesday, May 03, 2011

பெண் எழுத்து

 படிப்பது எவ்வளவு பயன் தரும் என்பதை நாம் எழுதுவதைச் சிறிது நிறுத்தினால் தான் தெரிகிறது:)


நாச்சியார் பதிவில் படங்களை ஏற்றுவதில் இருக்கும் சுலபம்,

எழுதுவதில் இல்லை.

இ கலப்பையும் உதவ முடியாத இந்த நேரங்கள் மற்ற பதிவுகளைப் படிக்கத் தோதாக அமைகிறது.

முக்கால்வாசி நேரம் மழலைகளுடன் செலவாகிவிடுகிறது.

ஓய்வெடுக்க ஒரு மணி.

மீண்டும் வேலைகள். மருமகளைப் பார்த்தால் அனுதாபம்தான் தோன்றுகிறது.

நம் ஊரைப் போல இஸ்திரி செய்ய ஒரு ஆள். வீடு பெருக்கித் துடைக்க ஒரு ஆள் என்றெல்லாம் இங்கு இல்லை.

தெரிந்த விஷயமே.



இருந்தாலும் கையில் ஏழு மாதக் குழந்தையுடன் எல்லாவற்றையும் கவனிப்பது

கடினம்..

இருந்தும் எனக்குக் கிடைக்கும் சில மணித்துளிகளில் கமலா சடகோபனின்

"என் இனிய மந்திரக் கோலே" படித்தேன்.

பக்கத்துவீட்டில் நடப்பதை நேரில்பார்ப்பது போல இருக்கிறது.



எண்ணங்களில் கீதாவின்  பெண் எழுத்து படித்தேன் அருமையாக பெண்களின்  எழுத்துப் பரம்பரையையே அலசி இருக்கிறார்.

இந்தப் பதிவிலேயே     .எல்.கார்த்திக்
*********************************************அவர்கள் என்னை எழுத அழைத்த  பெண்களின் எழுத்தைப் பற்றிய என் கருத்துகளைப் பதிவிடுகிறேன்.

நாங்கள் பள்ளியில் படிக்கும் காலங்களில் எழுதிய பெண்கள் குறைவாக இருந்தாலும்  எங்களுக்குப் பழகிய சூழ்நிலைக் களமாகக் கொண்டே
கதைகள் அமைந்தன.மிகவும்...பிடித்தவர்....லக்ஷ்மி.....பிறகு///சிவசங்கரி

அதில் புதுப்பாணியைக் கொண்டு வந்தவர் ஆர். சூடாமணி.
பெண் மனசில் உள்புகுந்து அழகுகளையும் விகாரங்களையும் தைரியமாக எழுதியவர்.
பின் என்னைக் கவர்ந்தவர்  ராஜம் கிருஷ்ணன்.
முறுக்கு,சீடை,மைசூர்பாகு என்று உழலாமல்  வேறு  நிலைக்கு எடுத்துவைத்தார்.
அதற்குப் பின்னர் வந்தவர்களின் கதைகளில் , கண்ணம்மா,,டார்லிங் இவைகள் முக்கிய வார்த்தைகளாக உயர் மட்டக் காதல்களும் தியாகங்களும்
வேறொரு பார்வை பார்க்க வைத்தன.
கண்ணம்மா  என்றழைக்கும் கணவன் வேண்டும் என்று என் தோழி ஒருத்தி கனவு காணுவாள்:):சிவசங்கரி,வாஸந்தி,இந்துமதி..)

ஆறடி உயரம் ரிம்லெஸ்  கண்ணாடி,,பியட் கார் என்று வலம் வந்த கதா நாயகர்கள். படித்த காதலி, இப்படிப் போகும் கதை..
இப்பொழுது இணையத்திலும் காதல் கவிதைகளுக்குக் குறைவில்லை.

அதில்லாவிட்டால் உலகம் இல்லையோ.
இல்லைதான் என்று நினைக்கிறேன்.:)
பிறகுபடித்தவர்கள்....வித்யாசுப்ரமணியம்,உஷாசுப்ரமணியம்.
கமலாசடகோபன்.....அனுராதாரமணன்.

பாட்டியின் பார்வையில் வேறென்ன தெரியும்!
படிக்க அனைத்து எழுத்துகளுமே நன்றாக இருக்கின்றன.
நேரம் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இலவசமாகக் கரும்பு போல இனிக்கும் எண்ணங்களையும்,ஆழ் நோக்குடன் பதியப்படும் முற்போக்குக் கதைகளையும் வாசிக்கக் கிடைக்கின்ற ஒரே இடம் இணையம்.

பெண்பேசும்   தமிழுலகம் இன்னும் விரியும்.
ஆன்மீகத்திலிருந்து, ,பற்பல சுற்றுலா சென்று நம்மை மகிழ்விக்கும்
***************************************************************************
 பதிவுகளிலிருந்தும்,
படித்தாலே சிந்தனையைக் கிளரும் ராமலக்ஷ்மி போன்றவர்களின் தீர்க்கமான கருத்துகளும், லக்ஷ்மியின் மலர்வனமும்,
சித்ரா,அன்புடன் அருணா, மாதங்கி மாலி,அப்பாவி புவனா,ஹுசைனம்மா,மாதேவி,சிறுமுயற்சி   முத்துலட்சுமி,
இவர்களெல்லாம் இளைய தலைமுறை.

பெரியவர்களாக நம் துளசி,கீதா,நானானி,கோமா,கோமதி அரசு, திருமதி
************************************************** லக்ஷ்மி பூனாவிலிருந்து
***************************************************************** எழுதும் பதிவுகள்
***********************************************
 எல்லாமே அள்ள அள்ளக் குறையாத இன்பம் தரும்  எழுத்துகள்.

இவர்களைப் பற்றி  மதிப்பிடவோ,கருத்துக் கூறவோ
 நான் இன்னும் நிறைய தொலைவு கடக்க வேண்டும்.
தெரிந்ததை எழுதி

விட்டேன் கார்த்திக்.!!
 நேரக் குறைவு காரணமாக நிறைய
பதிவர்கள் விட்டுப் போயிருக்க வாய்ப்பு அதிகம்
நம் சின்ன அம்மிணி அகிலா மாதிரி.:)
மற்றவர்கள் மன்னிக்கணும்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Thursday, April 28, 2011

மழலை ஆட்சி !!

Shop in  Germany
paraakeet   

வண்ணத்துப் பூச்சிகளின் சரணாலயம்


பை எடுத்துண்டாச்சா?


செக்.

கார் கீஸ் எடுத்துண்டாச்சா?

செக்.

மொபைல் எடுத்தாண்டாச்சா?

செக்.

வீட்டுச்சாவி?

செக்.

இது அம்மா

***************************************************************************



ஸ்கூலுக்குப் போனா பயம்

செக்.

கிருஷ்ணா அழுவானா

செக்.

அங்க போனால் ஒரே sad ஆ இருக்குமா

செக்.

வீட்லேயே படிக்கலாமா

செக்.

அம்மா விடமாட்டா

செக்.

போய்த்தான் ஆகனும்

செக்



இது பிள்ளை.

கொழுப்பு கொஞ்ச நஞ்சம் இல்ல:))))!!!!!(இடம்  சிகாகோ)
****************************************************************
இங்கே  (இடம் பாஸல்) சுவிட்சர்லாந்த்



"அம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

நான் கையினாலியே சாப்பிடறேன் பாட்டி மாதிரி."



வேணாம். சாரா மிஸ் கிட்ட என்ன சொல்வே .அங்க ஸ்பூன் தான் யூஸ் செய்யணும்.



"அப்ப பாட்டி ஊட்டி விடட்டும்."

நோ !

"அப்போ பொக்கையோ( ஆங்கில கார்டூன்.) போடு."



ரொம்ப டிவி பார்த்தாச்சி-



"அப்ப நான் சாப்பிடமாட்டேன்."

சாமீஈஈ

நானே ஊட்டி விடறேன்.

;)))))))))))))))))))))))))))))))))))




--




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Sunday, April 24, 2011

ஈஸ்டர் தின வாழ்த்துகள்

வீட்டுக்குள் நுழைபவரைகே கேட்காமல் எடுத்த படம். அவரென்ன தமிழா படிக்கப் போகிறார் என்ற தைரியம் தான்:)
தண்ணீரில் அன்னம்.அச்சு அசல் நான் வரைந்த மாதிரியே இருந்தது:)
அழகான ஒரு விடுதி
இங்கே வீட்டுக்குக் கீழே டைனசார் தோற்றத்தில் ஒரு  வேர்ப் பகுதி.
பீல் கிராமம் அதன் ஏரி
ஈஸ்ட்டர்  விடுமுறைக் கோலாகலம் 
எங்கு பார்த்தாலும்  வழக்கத்துக்கு   மீறிய   உத்சாகம்.
கூட்டம்   சித்திரைத்  திருவிழாவை   நினைவுறுத்தியது.
அப்பா தலை மேல மகளோ மகனோ.!

அம்மாவின் தள்ளு வண்டியில் இரண்டு குழந்தைகள்.
ஒரு கையில் பலூன். இன்னொரு கையில் ஐஸ்க்ரீம்.

18  டிகிரி வெய்யிலில் பரம சந்தோஷம்.

ஆங்காங்கே  குட்டி முயல் பொம்மைகள். வண்ண வண்ண ஈஸ்ட்டர் முட்டைகள்.

மூன்று வருடங்களுக்கு முந்தி பார்த்த சுவிஸ் நாடு பலவிதத்தில் மாறி இருக்கிறது. எண்ணி பத்துப் பதினைந்து இந்திய முகங்கள் தென்படும் இடத்தில்
 இப்போது  ஐம்பது அறுபது பேர்களாகக் குடும்பமும் குழந்தைகளுமாக

எங்களைப் போன்ற வயதானவர்கள் சில நபர்களையும் பார்க்க முடிந்தது..
புன்னகை மட்டும் பரிமாறிக் கொண்டு எல்லோரும் நகர்ந்து கொண்டே
இருந்தார்கள்.

பல கணினித் துறையைச் சார்ந்தவர்கள் .மருந்துக் கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் ,ஆடிட்டிங் துறையைக் சேர்ந்தவர்கள்  இப்படிப் பல துறையில் இந்தியர்களைக்
காண முடிந்தது. எல்லோரும்  நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள்.
சில பேர் இங்கே இருக்கும் முடிவுடன் வந்தவர்கள். சிலர் ஒரு பத்து வருடம் இருந்துவிட்டு இந்தியா  திரும்பும் நோக்கோடு இருப்பவர்கள்.

அதற்கேற்றார் போல் இந்த நகரமும்  மாறி இருக்கிறது.
குப்பைகள் நிறையக் கண்ணில் படுகிறது. புகைபிடிப்பவர்கள் அதிகமாகி இருக்கிறார்கள்.

10 வருடங்களுக்கு முன் இருந்த நகரம்  சுத்தத்துக்கு எடுத்துக் காட்டாக   இருந்தது.

நிலைமை  தலைகீழ்-:(
இயற்கை மாறவில்லை. அதே  தண்ணீர் வளம். பசுமை. கொழு கொழு பசு மாடுகள்.

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Tuesday, April 19, 2011

சித்திரைத் திருநாள்

fullmoon
 இந்தத் திங்கள்  இந்த நிலா.
இந்தப் படங்கள் எடுப்பதற்குள் 
ஊன்  உருகித்தான் விட்டது.
அவ்வளவு குளிர்.10 டிகிரி 
 நமக்கு ஒத்து வர மாட்டேன் என்கிறது.:)
மாசில் வீணையும் 
மாலை மதியமும்
வீசும் தென்றலும்
வீங்கிள வேனிலும்
 மூசு வண்டரைப் பொய்கையும் 
போன்றதே  ஈசன் எந்தை இணையடி நீழலே

இந்தப் பாடல் தான்  நினைவுக்கு வந்தது.
ஒரு சத்தம் கிடையாது. ஆறு மணிக்கு சாயந்திர வேளையில் நிசப்தம்.
எட்டு மணிக்கு சாப்பாடு முடிந்து 
நித்திரை கொள்ள இந்த ஊர் தயார்.
ஒன்பது மணி வரை சூரிய வெளிச்சம் இருக்கிறது.
"நேரத்தோடு சாப்பிட்டு நேரத்தோடு படுத்துக்கணும்*
தாத்தா குரல் காதில் விழுகிறது:)

  எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Sunday, April 10, 2011

இந்த ஏழு நாட்கள் அமீரகத்தில்

நிழல்  தேடி....
 அனைவரும் நலமா.


ஏப்ரில் மாதம் ஏழாம் தேதியிலிருந்து 15 வரை துபாய் வாசம்.

சென்னையை விட்டுக் கிளம்பு முன்னமே

மண்ணைத் தொட்டுப் பூசிக்கொள்ளும் ஆசை என்

காலுக்கும் முட்டிக்கும் வந்ததால்,

வலிநிவாரண மருந்துகள், சர்க்கரையைக் குறைக்கும் மருந்துகள் சகிதம் விமானத்தில் ஏறி

துபாயின் புதிய டெர்மினலில் வந்து இறங்கினோம்.

ஹுசைனம்மா,தக்குடு எல்லோருக்கும்

தந்தி அடித்துவிட்டேன்.:)

மற்றவர்களுக்கு என்னை நினைவில் இருத்திக் கொள்ள வழியில்லை.

வெகு காலமாயிற்று.:)))
துபாயில் ஒரு வருடத்தில் பல மாற்றங்கள்.


ஏகப்பட்ட சாலைகள் . வாகனங்கள் .கட்டிடங்கள்.

ஒரு சின்ன ஆணி வாங்க நாசர் சதுக்கத்துக்குப் போனால்

திரும்பி வர நான்கு மணி நேரம் ஆகிறது.

மெட்ரோ சௌகர்யமாக இருக்கிறது.

போன வாரமோ என்னவோ ஒரு பெண் கதவுகளுக்கு நடுவில்

மாட்டிக் கொண்டாராம்.

நினைத்தாலே நடுக்கம்:(

எப்பொழுதும் போல வெள்ளிக்கிழமை எல்லாக் கோவில்களிலும் கூட்டம்.

எல்லா ஹோட்டல்களிலும் நெரிசல்.

விமானத்தில் ரேடியோ மிர்ச்சி சுசி, பாடகர் ஸ்ரீநிவாஸ், நடிகர் வினீத் (மே மாதம்,சந்திரமுகி)

என்று பல கலைஞர்களைப் பார்க்க முடிந்தது,.

ஸ்ரீனிவாஸ் நின்று என்னிடம் பேசவும் நேரம் எடுத்துக் கொண்டார்.

ஃபெஸ்டிவல் சிடியில் விஜய் டிவியின் நிகழ்ச்சிக்காக வந்திருக்கிறார்கள்.



இங்கே வீட்டுப் பக்கத்தில் இந்தியன் பள்ளியில்பாடகர். 'எஸ்பி பி' பாடும் நிகழ்ச்சி,.

காற்றினில் மிதந்து வந்த சில துளிகளை ரசிக்க முடிந்தது.

உலகம் எத்தனை சுருங்கி விட்டது!
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Wednesday, April 06, 2011

வேலை மாற்றம் திண்டுக்கல் போகிறோம்..1960

அந்தக் காலத்துப் பெண்குழந்தைகள்
அந்தக் காலத்துக்குக் குழந்தைகள்
இன்றைய திருமங்கலம்
திருமங்கலம் மெயின் சாலை


 கஸ்தூரிபாய் காந்தி  ஆதாரப் பள்ளியில்
பலவித கைவேலைகள், ராட்டினம் நூற்பது, நூற்ற நூலைச் சர்வோதய சங்கத்தில் கொடுப்பது  என்றெல்லாம்   நிறைய   விஷயங்கள் கற்றுக்கொண்டோம்.
அப்பா வீட்டிலேயே கைராட்டினமும், தக்கிளியும் வாங்கிக் கொடுத்தார்.
பஞ்சு வாங்கி வந்து நூற்பதற்குப் போட்டி போடுவோம்.:)
அப்போது  'புல்புல் தாரா'' வந்த புதிது .



பிருந்தாவனமும்  நந்த குமாரனும் வாசிக்கக் கற்றுக்கொண்டோம்.
இன்ஃப்ளுயன்சா  என்ற புதுக் காய்ச்சல்  வந்தது . நானும் தம்பியும்
ஜுரம் வந்து  சிரமப்பட்டோம்.
அந்தத் தலைவலி போல்  எப்போதும் வந்ததில்லை.
ரேஷன் அறிமுகப் படுத்தப் பட்டது.
ஏதோ ஒரு  கியூ  வரிசையில் நின்ற நினைவு கூட இருக்கிறது..
அரிசிக்குக் கட்டுப்பாடு வந்தது என்று நினைக்கிறேன்.

அப்பா  கூடப் பரீட்சையெல்லாம் எழுதுவார் என்று அந்த நாளில் தெரிந்து கொண்டேன்:)
நாற்பது நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு அடுத்த பதவிக்காகப்  படித்தார்.
அந்த நாட்கள் வீடு குதூகலமாக இருக்கும்.
எப்பொழுதும் அப்பா அலுவலகத்திலிருந்து  வர நேரமாகும்.
மதியம் காப்பி மட்டும்  ஒருவர் வந்து வங்கிப் போவார். இன்னும் அந்தத் தெர்மாஸ் ஃப்ளாஸ்க் சந்தனக்கலரில்   இருப்பதும், மணக்க மணக்க அம்மா
அதில் காப்பியை ஊற்றுவதும்  நிழலாடுகிறது.
அந்தக் காஃபிக்குடுவைக்காக  அம்மா போட்ட
 க்ரோஷாப் பின்னல் பையும்  ரொம்ப நாள் இருந்தது.
ஏதோ காரணம். அம்மாவின் கைவண்ணம் எனக்கு லபிக்கவில்லை.:(

தையல் ஊசியும்  என் விரல்களும் பள்ளிக்கூட நாட்களுக்குப் பிறகு
தோழமையைக் கத்திரித்துக் கொண்டன:)
பட்டாம்பூச்சி, ரோஜா  இவைகளை வரைந்து எம்ப்ராய்டரி
செய்யக் கற்றுக் கொடுத்தார்  அம்மா.
எல்லாக் கைக் குட்டைகளும் ரோஜாவும் பட்டாம்பூச்சிகளுமாகத் திரிந்தன.:)

ஆநந்தவிகடனும் குமுதமும்    நாலணாவுக்குக் கிடைத்தன.
வெள்ளியன்று  விகடனும் , ஞாயிரன்று   குமுதமும்  வரும்.


அப்போது  அந்தப் பத்திரிகைகளில்  நகைச்சுவையும்,சிறுகதைகளும். சில விளம்பரங்களும்,தொடர் கதைகளும்   வரும். சினிமாச் செய்திகள் அவ்வளவு படித்ததாக நினைவில்லை.

ஆநந்தாத் தியேட்டரில்
நீலமலைத்திருடன்(சத்தியமே  லட்சியமாய்க் கொள்ளடா)
மஞ்சள் மகிமை,
வீரபாண்டியக் கட்டபொம்மன்,
மின்னல் வீரன்,
கற்புக்கரசி, மணாளனே மங்கையின் பாக்கியம்,
கணவனே கண் கண்ட தெய்வம்   எல்லாம் பார்த்தோம்.
திருமங்கலத்தை விட்டுக் கிளம்பும் நாட்களும் வந்தது.

மக்களே,
சில நாட்கள் ஊரைவிட்டுப் பயணம் கிளம்புகிறோம்.
பயணம்  சௌகரியமாக  அமைய உங்கள் வாழ்த்துகள் வேண்டும்.

















எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Sunday, April 03, 2011

1954லிருந்து 1960 வரை ஒரு நினைவுப் பயணம்


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்இந்தப் படம் பார்க்கும் போது பள்ளி நாட்களில் சனிக்கிழமை அனேகமாகக் கட்டு சாதம் எடுத்துக் கொண்டு
 கண்மாய்க்கரை போவோம். தண்ணீர் இந்தக் கண்மாயில்   இருந்து  நாங்கள் பார்த்ததில்லை.

ஆனால் கரையில் ஒரு பெரிய ஆலமரம் இருக்கும்.

அதில் தொங்கும் விழுதுகளில் ஆடினதுண்டு.

அம்மா கொடுக்கும் டிபன் தூக்கில் தயிர்சாதமும் வறுத்த மோர்மிளகாயும் தான் இருக்கும்.


இங்கயும் அதே கரியடுப்பும், விறகடுப்பும் தான்.

காலை வேளையில் பழையசாதம் மோர். நார்த்தங்காய், இல்லாவிட்டால் கத்திரிக்காய், கொத்தவரங்காய் வற்றல்:))


ஆஹா, அந்த வாசனையை என்ன சொல்வது. அம்மா கையில் பாகற்காயும், கருணைக்கிழங்கும் கூட பிரமாதமாக இருக்கும்.


நாம் இப்போது 1954ஆம் வருட ஜூன் மாத, ஒரு திங்கட்கிழமை மதியத்துக்கு இல்லையா போகணும்!!


அந்த 12 மணி வெய்யிலில் தம்பியிடமும் சொல்லாமல் அவனைத் தனியே விட்டு விட்டு(அவனுக்கு 5 வயது)

தனியாக வரப் பயமாக இருந்தாலும்,

அநியாயம் நிகழ்ந்தது போல ஒரே கோபம்,அழுகை.

கதவைத் திறந்த அம்மா, தம்பி எங்கே என்று கேட்டாலும் ,சாப்பிடலையா என்று விசாரித்தாலும் பதில் சொல்லாமல், பள்ளியில் நடந்ததை மட்டும் சொல்லி நான் இனிமேல் ஸ்கூலுக்குப் போக மாட்டேன் என்று தீர்மானம் சொல்லியாச்சு.

அம்மாவுக்கு ஒரு பக்கம் கோபம், ஒரு பக்கம் சிரிப்பு.

சரி அப்பா வரட்டும், விசாரிக்கலாம் என்று தட்டெடுத்து சாப்பாடையும் எடுத்து வைத்தார்.

சாப்பாடு உள்ளே போனதும் தம்பியைத் தனியே விட்டது

கவலை கொடுத்ததால் மீண்டும் பள்ளிக்கு ஓடி அவனைக் கைப்பிடித்து அழைத்து வந்தேன்.


அப்பா சாப்பிட்டதும் ப்ரச்சினையை அம்மா சொன்னார்.

உனக்கு அவன் உன்னொட படிப்பதால் என்ன கஷ்டம் என்று அப்பா கேட்டார்,.

அதெப்படி அக்காவும் தம்பியும் ஒரே வகுப்பில் இருக்க முடியும் என்பது என் வாதம்.

அப்பா தன் சைக்கிளில் எங்களை ஏற்றிக் கொண்டு

பள்ளி வந்து பெரிய டீச்சரைச் சந்தித்தார்.


அவர் எனக்காக வந்தார் என்று நான் நினைத்தாலும், உண்மை அது இல்லை.

அவர்களிடம் தம்பியின் வயதுக்கு ஏற்றது இரண்டாம் வகுப்பு என்றும் அதற்கு உண்டான பாடங்களைப் படித்தால் சரியாக இருக்கும் என்றும் சொன்னதும்,தலைமை ஆசிரிய்ரும் ஏற்றுக் கொண்டார்,. நானும் தம்பியும் எதிர் எதிர் வகுப்பில் அமர்ந்தோம்.

அப்படியிருந்தும் அவன் 15 வயதிலேயே பள்ளிப்படிப்பை முடித்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்து விட்டான்:))

திருமங்கலத்தில் அப்போது இரண்டு ஹைஸ்கூல்கள் இருந்தன. ஒன்று பெண்களுக்கான போர்ட் ஹைஸ்கூல்,

மற்றது பி.கே.என். நாடார் பள்ளி ஆண்பிள்ளைகளுக்காக.


ஒரே ஒரு நீளமான மெயின் ரோட்.

பஸ் நிலயத்திலாரம்பித்து ஆனந்தா திரை அரங்கத்தைக் கடந்து,மீனாட்சி பவன் ஹோட்டல்,தபாலாபீஸ்,அங்குவிலாஸ் வீடு,

சின்னக்கடைத்தெரு,சன்னதித் தெரு, மீனாட்சி அம்மன் கோவில் வழியாக,வாடிப்பட்டி,

உசிலம்பட்டி,கல்லுப்பட்டி,சோழவந்தான் என்று பஸ்கள் நம் வீட்டு வாயிலாகப் போகும்.


நாங்கள் இருந்த வீட்டுக்குப் பின்னால் ஒரு முனீஸ்வரர் கோவிலும் உண்டு.

அங்கே கேட்கும் உடுக்கைச் சத்தம் கேட்டு ஜுரம் வந்ததும் உண்டு.

பக்கத்து வீட்டில் நாலைந்து குடித்தனங்கள் இருந்தார்கள். ஒரு வீட்டில் கிளி வளர்த்ததால் அங்கேயெ இருந்து,அவர்களது இட்லிமெஸ்ஸுக்கு சட்டினி அரைத்துக் கொடுத்த அனுபவமூம் உண்டு:))

வாரமொருமுறையாவது அங்கிருந்து நான்கு அணாவுக்கு இருபது இட்லி நிறைந்த பாத்திரம் எடுத்து வந்ததும்,

ஒரு அரசு மருத்துவமனையில் அடிபட்டுக் கொள்ளும்போதெல்லாம் டின்க்சருக்கு அலறிக் கட்டுப் போட்டுக் கொண்ட நினைவும் உண்டு.


ஒரு தடவை திருமங்கலம் வழியாக ஒரு சுதந்திரக் கொடியேற்றத்துக்கு வந்த திருமதி இந்திரா காந்திக்கு மாலை போட எங்கள் பெரிய டீச்சர் அழைத்துப்போனதும்



முதல் முதலாக ஒரு வெள்ளைக் கதர்ப் புடவை கட்டி தலையில்
முக்காடு போல அணிந்திருந்த ஒரு அபூர்வ பெண்ணைப் பார்த்ததும், சொல்ல வந்த ஜய்ஹிந்த் மறந்ததும் இப்போது சிரிப்பு வருகிறது.

அவர்களுடன் திருC.R.பட்டாபிராமன் என்பவரும் வந்திருந்தார்.


எங்கள் மூவரின் பல இனிய நாட்கள் இங்கேதான் கழிந்தன.

பெரிய தம்பி வீட்டுக்குள் நிறைய விளையாடுவான். சின்னத்தம்பிக்கு வெளியே வந்து விளையாட வயது பத்தாது.



ஆகக் கூடி ஊர் சுற்றியது நான் ஒருவளே:))

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...