Blog Archive

Tuesday, November 29, 2022

மணக்குள வினாயகர் பாண்டிச்சேரி.

வல்லிசிம்ஹன்

Thank you dear Muguntha.






ஸ்ரீ மணக்குள விநாயகர், பாண்டிச்சேரி

மணக்குள விநாயகர் கோயில் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பிருந்து, அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும். 

மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் ஆனது.

தொண்டை மண்டலத்தில் வேதபுரி அகஸ்தீசபுரம் வேதபுரம் எனும் பெயர்களோடு இருந்தது இந்த பாண்டிச்சேரி.

600 ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சுக் காரர் களின் ஆட்சியில் கடற்கரைக்கருகில் உள்ள “மணல்” நிறைந்த “குளத்தின்” கரை யில் அமைந்து மக்கள் வழிபட்டு வந்த விநாயகரை, அன்றைய பிரெஞ்சு அரசு, அந்த இடத்தில் கட்டடம் கட்டுவதற்காக விநாயகர் சிலையை, அருகில் உள்ள கடலில் போட்டதாகவும் அது மீண்டும் மிதந்து கரைக்கு வந்ததாகவும் சொல்லப் படுகிறது. 

இத்துடன் இந்த கோவிலுக்கு மற்றொரு சிறப்புண்டு. புதுவை மற்றும் அதன் சுற்றுபுறத்தில் வாழ்ந்த 41க்கும் மேற்பட்ட சித்தர்களில் தொல்லைக்காது சித்தர் சுவாமிகள் மணக்குள விநாயகரால் கவரப்பட்டு அவரை தினசரி தரிசனம் செய்தார். அவர் வேண்டுகோளை ஏற்று அவர் இறந்த பிறகு அந்த கோவிலுக்கு அருகிலேயே அவரை அடக்கம் செய்தனர். 

புதுவையில் 1908 முதல் 1918 வரை பத்து ஆண்டுகள் தங்கி இருந்த “முண்டாசுக்கவிஞன்’ பாரதி , இந்த விநாயகரை போற்றி;  “நான்மணிமாலை” என்ற தலைப்பில் 40 பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

'பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன் மனமே! எனை நீ வாழ்த்திடுவாய்!’ என்ற பாரதியின் கனவுப்படி இந்தக்கோயில் கருவறை விமானம் பொன்னால் வேயப்பட்டுள்ளது. 

தலவரலாறு

ஒயிட் டவுன்’ எனப்படும் இந்தப் பகுதியின் அருகில் ஒரு குளம் உண்டு; 'மணற் குளம்’ என்பர். இதன் அருகில் கோயில் கொண்டதால், 'மணற்குள விநாயகர்’ எனப் பெயர் பெற்ற கணபதியை, தற்போது 'ஸ்ரீமணக்குள விநாயகர்’ என்கிறோம்!

கஸ்தோனே தே ஃபோஸ்’ என்ற பிரெஞ்சு வரலாற்று ஆசிரியரின் குறிப்பின்படி, 1688-ஆம் வருடம் பிரெஞ்சுக்காரர்கள் இங்கு ஒரு கோட்டை கட்ட திட்டமிட்டனர். அந்தக் கோட்டையின் பின்புறம் மணக்குள விநாயகர் ஆலயம் இருந்தது. 

அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் வாழ்ந்த இந்துக்கள் இந்த விநாயகருக்குத் தினமும் அபிஷேக - ஆராதனைகளுடன் அவ்வப்போது உத்ஸவங்களையும் நடத்தி வந்தனர். 

பிரெஞ்சு ஆட்சியாளர்களால் இதனை சகித்துக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து, ஈஸ்டர் காலம் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமி உத்ஸவம் போன்ற வைபவங் களை நடத்தக்கூடாது என்று அப்போதைய பிரெஞ்சு கவர்னர் தடை உத்தரவு பிறப்பித்தார். 

இதனால் கோபம் அடைந்த அந்தப் பகுதியில் வாழ்ந்த தொழிலாளர் குடும்பத்தினர் எவரும் வேலைக்குச் செல்லாமல் இருந்ததுடன், ஊரைவிட்டே வெளியேறவும் முற்பட்டனர். அப்படி நிகழ்ந்தால், வேலை செய்ய ஆட்கள் இல்லாது திண்டாட நேரிடுமே என்ற அச்சத்தில், அவர்களின் போராட்டத்துக்குப் பணிந்தார் கவர்னர். தடை உத்தரவு வாபஸ் ஆனது.

ஆனாலும், மணக்குள விநாயகர் ஆலயத்தை அங்கிருந்து அகற்ற திட்டமிட்டனர் பிரெஞ்சுக்காரர்கள். கோயிலுக்கு அருகில், பிரெஞ்சுக்காரர் 'மொம்பரே’ என்பவரின் பூங்கா இருந்தது. அவருக்கும், விநாயகர் கோயிலுக்கு அதிகமான பக்தர்கள் வந்துசெல்வது பிடிக்கவில்லை.

இதையடுத்து, எவரும் அறியாத வண்ணம் இரவோடு இரவாக விநாயகர் சிலையை எடுத்துக் கடலில் போடுமாறு தனது ஆட்களை ஏவினார் மொம்பரே. அவ்வாறே கடலில் போடப்பட்டது விநாயகர் சிலை. ஆனால், மறுநாள் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கோயிலில் எந்த இடத்தில் அந்தச் சிலை வைக்கப்பட்டு இருந்ததோ, அதே இடத்தில் மறுபடியும் இருந்தது.  

மொம்பரே அதிர்ச்சி அடைந்தார். தான் அனுப்பிய ஆட்கள் மீதே அவருக்குச் சந்தேகம் எழுந்தது. மறுபடியும், விநாயகர் சிலையை கடலில் கொண்டுபோய் போடும்படி உத்தரவிட்டவர், அந்தமுறை தானும் உடன் சென்றார்.
மொம்பரேயின் ஆட்கள் சிலையைப் பெயர்த்தெடுத்துக் கடலில் போட முயன்றபோது, திடீரென கண்பார்வை இழந்தார் மொம்பரே. 

மணக்குள விநாயகரின் மகிமையை உணர்ந்தார். தனது செயலுக்காக வருந்தியதுடன், தன்னுடைய தவறுக்குப் பரிகாரமாக கோயிலை அபிவிருத்தியும் செய்தார். 

வெள்ளைக்காரருக்கு மனமாற்றம் தந்ததால் இவரை, 'வெள்ளைக்காரப் பிள்ளையார்’ என்றும் அழைக்கிறார்கள்.

கோவில் அமைப்பு

கிழக்கு நோக்கி அருளும் விநாயகரின் திருமேனியில் பின் இரு கரங்கள் பாசம் அங்குசம் ஏந்தியும், முன் இரு கரங்கள் அபயம் வரதமாகவும் அமைந்துள்ளன. 

மணற்குளம் இருந்ததன் அடையாளமாக விநாயகர் பீடத்தின் முன்புறம் உள்ள குழியில் இப்போதும் நீர் சுரந்துகொண்டிருக்கிறது. 

கோயில் மண்டபத்தைச் சுற்றிலும் விநாயகரின் பல்வேறு வடிவங்களும் அவரது திருவிளையாடல்களும் சுதைச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

பிராகாரத்தில் தென் மேற்கு மூலையில் ஸ்ரீபால விநாயகரும், வடமேற்கில் ஸ்ரீபால சுப்ரமணியரும் அருள்கின்றனர். வடக்குப் புறம் ஸ்ரீசண்டீசர் சந்நிதி உள்ளது. அங்குள்ள உத்ஸவர் மண்டபத்தில் ஸ்ரீநர்த்தன கணபதி, ஸ்ரீஹரித்ரா கணபதி, ஸ்ரீசித்தி புத்தி கணபதி, ஸ்ரீலட்சுமி கணபதி, ஸ்ரீபாலசுப்ர மணியர், வள்ளி-தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமணியர், சண்டீசர், அஸ்திரதேவர் முதலான உத்ஸவ மூர்த்திகளுடன் ஸ்படிக லிங்கமும் உள்ளது.

தங்கத்தேர் உலாவும் உண்டு. 

அனைத்து மதத்தினரும், வெளிநாட்டுப் பயணிகளும் இவரை வணங்கிச் செல்கிறார்கள். 

தினமும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது.

மகான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பண்டித வி.மு. சுப்ரமண்ய ஐயர், கோவை நாகலிங்க சுவாமிகள் போன்ற அருளாளர்கள் மணக்குள விநாயகரைப் போற்றிப் பாடியுள்ளனர்.

கிணற்றின் மீதுதான் மூலவர்

தற்போது மூலவரான மணக்குளத்து விநாயகர் இருக்கும் பீடம் இருப்பதே நீர் நிலை அமைந்துள்ள ஒரு கிணறு அல்லது குளத்தின் மீதுதான் என்பது இத்தலத்தை நன்கு அறிந்த பலருக்கும் தெரியாத செய்தி. 

பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு மிக அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்லுகிறது. அதில் தீர்த்தம் உள்ளது. இதன் ஆழம் கண்டுபிடிக்க முடியவிலலை. சென்றுகொண்டே இருக்கிறது. 

இதில் வற்றாத நீர் எப்போது உள்ளது. இது முன்காலத்தில் இருந்த குளமாவும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

தல சிறப்பு

விநாயகர் தலங்களில் வேறு எங்குமே இல்லாத சிறப்பாக பள்ளியறை இங்கு உள்ளது. 

இங்கு பள்ளியறையில் விநாயகரோடு உடன் இருப்பது அவரது தாயார் சக்தி தேவியார் ஆவார்.

தினமும் நைவேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்வார். இதன் அடையாளமாக பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ விக்ரகம் கொண்டு செல்லப்படுகிறது. 

தலபெருமை

அகில இந்திய அளவில் விநாயகருக்கு கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட கோயில் இந்த கோயில் மட்டுமே. 

உற்சவர் வில்புருவமும் மூன்று பதமாகவும் நிற்கிறார். வேறு எங்குமே பார்த்திர முடியாத சிறப்பு இது. 

விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. இங்கு சித்தி புத்தி அம்மைகள் மனைவியாக உள்ளனர்.

சிவதலங்களில் இருக்கும் நடராஜரைப் போல் நர்த்தன விநாயகர் இங்கு இருக்கிறார். 

கோவில் யானை லட்சுமி

மணக்குள விநாயகர் கோவிலில் கோவில் யானை ஒன்று உள்ளது .

அதன் பெயர் லட்சுமி .இந்த யானை மற்ற கோவில் யானைகள் போல் அல்லது மக்களுடன் மிகவும் அன்புடன் பழகி வருகிறது .

லட்சுமி யானை புதுவை மக்களால் பெரிதும் பேரன்புடன் கண்டு செல்ல கூடிய ஒரு நிலை இன்று உள்ளது .

மணக்குள விநாயகர் கோவில் நுழைவாயில் முன் லட்சமி நின்று கொண்டு வரும் பக்தர்களை வரவேற்பதை நாம் இன்றும் காண முடியும் 

பிரார்த்தனை

எல்லா விதமான பிரார்த்தனைகளும் இங்கு நிறைவேறுகின்றன. கல்யாணவரம், குழந்தை வரம் உள்ளிட்ட எந்த காரியமானாலும் இவரை வணங்கினால் நன்மை கிடைக்கிறது. தொழில் தொடங்குவோர், புதுக்கணக்கு எழுதுவோர், கல்யாண பத்திரிக்கை வைத்து வழிபட விரும்புவோர், புது வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவெனில் இந்து மதம் என்றில்லாமல் முஸ்லிம், கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்களும் வெளிநாட்டினர் பெருமளவில் இங்கு வந்து வழிபடுகிறார்கள். 

பாண்டிச்சேரியை விட்டு வெளியூர் கிளம்புவர்கள் இத்தலம் வந்து மணக்குள விநாயகரை வணங்கிவிட்டுத்தான் தாங்கள் போக வேண்டிய ஊருக்கு போகிறார்கள் என்பது ஆச்சர்யமான உண்மை. அத்தனை விசேஷம் படைத்தவர் இந்த மணக்குளத்து விநாயகர்.

நேர்த்திக்கடன்

உண்டியல் காணிக்கை, வெளிநாட்டு பக்தர்களின் உபயம் ஆகியவற்றால் கோயில் மிகுந்த சிறப்புடன் திகழ்கிறது. 

அமெரிக்க வைரத்தாலேயே கவசம் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்பது அதற்கு உதாரணம். 

இத்தலத்தில் முக்கியமாக பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனாக சித்தி புத்தி விநாயகருக்கு கல்யாண உற்சவம் நடத்தி வைக்கிறார்கள் வெள்ளித்தேர் இழுத்தும் நேர்த்திகடன் செலுத்துகிறார்கள். 

தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்கிறார்கள்.

திருவிழா

விநாயகர் சதுர்த்தி - இத்தலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். அது தவிர ஜனவரி முதல் தேதி அன்றுதான் இத்தலத்தின் பிரமாண்டமான அளவில் பக்தர்கள் கூடுவர்கள். பிரம்மோற்ஸவம் - ஆவணி - 25 நாட்கள் திருவிழா பவித்திர உற்சவம் - 10 நாட்கள் திருவிழா இது தவிர மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தின் போது மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் மிக விமரிசையாக நடக்கும். அப்போது 
ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வர்

காலை மணி 6 முதல் 1 மணி வரை மாலை 4மணி முதல் இரவ 10 மணி வரை கோவில் திறந்திருக்கும்.

கும்பகோணத்தில் இருந்து 132 km. கும்பகோணத்தில் 
 இருந்து சென்னை சாலையில் வடலூர் சென்று வடலூரில் இருந்து கடலூர் சென்று பாண்டிசேரியை அடையலாம்.

புதுவை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது . புதுவை ரயில் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது .

“தொள்ளைக் காது சித்தர்” பற்றி புதுச்சேரி சித்தர்களின் பூமி ஆகும். 41 சித்தர்கள் இங்கு இருந்தார்கள். அவர்களின் ஜீவ சமாதி இங்குள்ளது.

இள வயதிலேயே தந்தையை இழந்த சுவாமிகள், தாயார் தனக்கு திருமண ஏற்பாடு செய்வதைக் கண்டு மிரண்டு போய் தன் குலதெய்வமான அம்மனிடம் முறையிட்டார். 

அப்பொழுது அம்மன் தன்னை அழைப்பது போன்று ஒர் ஒலி கேட்க, அந்த ஒலியை கேட்டுக் கொண்டே நடக்கத் தொடங்கியவர் ”முரட்டாண்டி” என்ற ஊரை அடைந்தவுடன் தான் தன் நிலை அடைந்தார். அங்கிருந்த முத்து மாரியம்மன் கோவிலை அடைந்து அம்மனை வேண்டினார்.

இடைவிடாது தாயை வணங்கிக் கொண்டேயிருந்தார். அதி அற்புத அழகு வாய்ந்த அன்னையின் தரிசனக் காட்சியை- அன்றிரவு கண்ணாரக்கண்டார். 

வாய் பேசா ஊமையானார்.

ஞான மோன நிலைக்குள் தன்னை நிறுத்திக் கொண்டு –யாவற்றையும் உணர்ந்தார். 

அங்கு சுவாமிகளுக்கு ஞானம் கிடைத்தது. 

அத்துடன் அங்கிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள புதுவைக்குச் சென்று கடற்கரை அருகில் இருந்த மணற் குளத்தங்கரையில் ஒரு விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து அவ்விநாயகரையும் வழிபட்டு வந்தார். 

தினமும் காலையில் ஐந்து மைல்கல் நடந்து புதுவையை அடைந்து, அங்கு விநாயகருக்கு மலர் அலங்காரம் செய்து- பூஜை செய்து வழிபட்டுவிட்டு –பின் அங்கிருந்து திரும்பவும் நடந்து முரட்டாண்டிக்கு வந்து அம்மனை வழிபட்டு வந்துள்ளார். 

இது அவரின் தினசரி வாடிக்கையானது.

முரட்டாண்டியில் பிரஞ்சு அதிகாரிகளின் தொல்லைகள் அதிகமானதால் சுவாமிகள் அவ்விடம் விட்டு நகர்ந்து புதுவை பாலாஜி திரையரங்கு அருகில் உள்ள ஆனந்தரங்கபிள்ளையின் தோட்டத்திற்கு வந்து ஒரு பகுதியில் சிறு குடிசை அமைத்துக் கொண்டு தங்கினார். 

மனித கூட்டத்தை விட்டு விலகி தனிமையை விரும்பிய சுவாமிகளுக்கு-அந்த இடம், அவர் மனதில் அமைதியை தோற்றுவித்தது. ஞான பூமியிலே, சித்தர்கள்,தவசீலர்கள், ஆத்ம சாதனையாளர்கள் தேடும் பேரின்பம் ஒளிரக்கண்டார். 

தன்னை இப்புதுவைக்கு அழைத்து வந்த அந்த ஓங்கார ஒலியை வணங்கினார். தான் புதுவைக்கு அழைத்து வரப்பட்ட நோக்கத்தை உணர்ந்து கொண்டார்.

அங்கிருந்து மணற் குளத்து பிள்ளையாரை தினமும் இரு வேளையும் வழிபட செல்ல சுவாமிகளுக்கு மிகவும் வசதியாய் அமைந்தது. 

பிள்ளைத்தோட்டத்து பகுதி மக்கள் சுவாமிகளின் மேல் மிகவும் அன்பாயிருந்து பணிவிடை செய்து வந்தனர். காலையில் விநாயகரை பூஜை செய்வது வழக்கம்.பின் முத்து மாரியம்மனிடம் நிஷ்டையில் அமர்வார்.பின் மொரட்டாண்டி செல்வார். 

இவ்வளவும் நடந்தே சென்று முடிப்பார்.காலங்கள் சென்றன.ஆத்ம சக்தி தீவிரமாக வெளிப்படத் தொடங்கியது.

தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து வந்ததுடன் அவர்களின் குறைகளை கேட்டு தீர்த்து வைத்துள்ளார். 

அவரின் சித்து வேலைகளைக் கண்ட மக்கள் சுவாமிகளின் குடிசையை “சித்தன் குடிசை” என்றுஅழைத்து வந்தனர். 

இன்றளவும் அப்பகுதி அப்பெயரிலேயே அழைக்கபடுகிறது. அவரின் அருளால் அப்பெயர் மக்கள் மனதில் நிலைத்து விட்டது. சுவாமிகள், காதில் பெரிய துளை இருந்ததால் பின்னர் அவர் “தொள்ளைக் காது சித்தர்”என அழைக்கப் பெற்றார்.

8 comments:

ஸ்ரீராம். said...

இத்தத்தினை விவரங்களும் இன்றே அறிந்தேன் அம்மா. சுவாரஸ்யமான விவரங்கள்.

நெல்லைத்தமிழன் said...

மணக்குள விநாயகரைப் பற்றிய செய்திகள் அனைத்துமே புதுசு.

நான் மூன்று நான்கு முறைகள் இந்தக் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். நண்பனோடு சென்றபோது போட்டோக்கள் எடுத்திருக்கிறேன்.

Jayakumar Chandrasekaran said...

நான் பாண்டிக்கு அடுத்து உள்ள கடலூர் காரன். அடிக்கடி பாண்டிக்கு சென்றிருக்கிறேன். மணக்குள விநாயகரையும் தரிசித்திருக்கிறேன். ஆனால் நீங்கள் கொடுத்துள்ள விவரங்களை நான் தற்போது தான் அறிகிறேன். மிக்க நன்றி. 

Jayakumar

Thulasidharan V Thillaiakathu said...

பாண்டிச்சேரில இருந்தபோது மணக்குளவிநாயகர் கோயிலுக்கு நிறைய தடவை போயிருக்கிறேன். அருமையான கோயில் அதூவ்ம் கடல் பக்கத்தில். பாண்டி வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக அமைந்தது அப்போது.

மீண்டும் பல நினைவுகள், அம்மா

கீதா

வல்லிசிம்ஹன் said...

அனைவருக்கும் நன்றி . வினாயகர் என்றும்
அருள் செய்யட்டும்.

அவருடைய லக்ஷ்மி யானையின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்.

கரந்தை ஜெயக்குமார் said...

ஒருமுறை சென்றிருக்கிறேன்
நன்றி சகோதரி

Jayakumar Chandrasekaran said...

மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி நடைப்பயிற்சியின் போது மயங்கி வீழ்ந்து இறந்த செய்தியை அறிந்தீர்களா? 

Jayakumar

மாதேவி said...

மணக்குள விநாயகர் மகிமை மிகவும் விரிவான விளக்கங்களுடன் நீண்ட பகிர்வு.படித்து மகிழ்ந்தோம்.