Blog Archive

Sunday, June 19, 2022

அன்றைய பயணம் 2002 இல் ஸெர்மாட்.

வல்லிசிம்ஹன்

November  2014  .

நாங்கள் ஸெர்மாட் எக்ஸால்சியர் எனும் விடுதியில் மாலை 4
மணிக்குப் போய்ச்சேர்ந்தோம்.

சுமாரான் மூன்று நக்ஷத்திர விடுதி.

கொஞ்சம் சிறியதோ என்று தோன்றியது.படிகள் ஏறி அறையை அடைந்தோம்.

அறையா கியூபிகிளா என்னும் படி சந்தேகம் வந்தது. இத்தனை காசு கொடுத்து இத்தனூண்டு இடத்திலா, என்று யோசித்தபடி

அங்கிருந்த ஒரே ஒரு நாற்காலியில் அப்பாடி என்று உட்காரப்

போனேன்.

அம்மா ஒரு நிமிசம்னு"" மகன் சொல்லுவதற்கும் முன் கையோடு கால் வந்துவிட்டது.

தடால்....

சே,னு போயிட்டது.

அம்மா தரையில் திடீரென்று உட்கார்ந்த அதிர்ச்சியிலிருந்து

மகன் மீளுவதற்குமுன்னால் அப்பா கட்டிலில் உட்கார்ந்தாச்சு.

கட்டில் இன்னோரு டமால் ஒரு பக்கமாகச் சரிந்தது.

நம்ம சிங்கம் உஷார் சிங்கம்.உடனே சமாளித்து எழுந்தாச்சு.

மேலே இருக்கும் படத்தைப் பார்த்தால் தெரியும்.

சுவரோடு சுவராகக் கட்டில் இருக்கும்.தலைக்கு

மேலெ பாதி சுவர் ஜன்னல்.

அது வழியாக அறுபத்துமூவர் கும்பல் மாதிரி ஒரே சத்தம்.

அதுசரி!!!! சந்தோஷமா இருக்கத்தானே வந்து இருக்கிறார்கள்.!!!!

நமக்கு விழுந்த அதிர்ச்சியில் பாலும் கசந்ததடின்னு

பாட்டு வருது.
மேடராவது ஹார்னாவது.போப்பா சரிதான்னு

தோன்றியது.

இத்தனை குட்டி அறைக்கு 200  ஃப்ரான்க்  வாடகை.அட்டாச்சிடு  பாத்ரூம் இருக்காம்.

நம்ம ஆகிருதியோ சைட்வேஸ்ல

கூடப் போகமாட்டேன் என்கிறது. எப்படியோ சமாளித்து கிடைத்த காபியை முழுங்கிவிட்டு வெளியே வந்தோம்.

இங்கெ ஒரு சுவையான செய்தி என்னன்னால் புகையே கிடையாது.

மனுஷப்புகை பற்றி சொல்லவில்லை. வாகனப்புகையைச் சொல்கிறேன்.

போக்குவரத்து என்பது குதிரை வண்டியில்,இல்லாவிட்டால் மின்சாரக் காரில்.

சுற்றுப்புறத் தூய்மைக்காக இந்த ஏற்பாடாம்

ஆனால் இந்தக் குளிருக்கு மனிதர்களின் சிகரெட் புகை அதிகம்.

மலைக்குப் போவதற்குத் தனி ரயில். உச்சியை அடைந்த கணம்

மறக்கமுடியாத தருணம்.அப்படி ஒரு உயரம்,கம்பீரம்.

சூரியன் சிகரத்தில் விழும் ஒளி கண்கூசவைக்கும் ஜாலமாக

இருந்தது.

அவ்வளவு உயரத்திலிருந்து யாரோ நம்மிடம் பேசவோ

தொடர்பு கொள்ளவோ முயலுவதாகத் தோன்றியது.அது எல்லோருக்கும்

நேரும் அனுபவம் என்று சொன்னர்கள்.
 இந்த அழகும் மேன்மையும் நம் எவரெஸ்ட்,கைலாச பர்வதம்,கங்கை நதி

,ஹரித்வார் இந்த இடங்களிலும் இயற்கையோடு சேரும் , 
ஐக்கியமாகும்,அந்த உணர்வு நம்மை மேன்மைப்படுத்துகிறது.

கொஞ்ச நேரத்தில் சூழ்ந்த மேகங்களும், பனித்திரையும்

மற்ற எதையுமே பார்க்க முடியவில்லை.

அன்றைய வெதர்மேன் எண்ணம் அப்படி.!!

கீழே இறங்கி வந்ததும் சாப்பாடு நினைவு வந்தது.

இவர்கள்தான் எட்டு மணிக்குக் கடைகளை மூடிவிடுவார்கள்.

அதற்குள் நமக்கு வேணும் என்கிற மரக்கறி உணவு கிடைக்கவேண்டுமே

என்ற கவலை.

திறந்த கடை ஒன்றில் வெறும் சாண்ட்விச் கேட்டோம்.

அந்த அம்மாவுக்கு அது பெரிய ஆர்டராகத் தோணவில்லை.

இரண்டு நிமிஷத்தில் கொண்டுவந்து வைத்துவிட்டார்கள்.

திறந்து பார்த்த எனக்குத்தான் அதிர்ச்சி.

ஒரு மீன் சார் உள்ளே திறந்தகண்களோடு பார்க்கிறார்.

அதுதான் வெஜிடேரியன் என்று சாதிக்கிறார் அந்த அம்மா.

இருந்தபசியில் கண்மண் தெரியாமல் கோபம்.

என்ன செய்வது. சரிம்மா  சாதா ப்ரெட் இருந்தாக் கொடுதாயேனு கேட்டு வெண்ணையும் தயிருமாய் இரவு உணவை முடித்தோம்.

நாங்கள் சென்ற காலம் அங்கே அவ்வளவு குளிர் இல்லை.

காலையில் எழுந்து இலவச காலைச்சாப்பாடும் காப்பியும் சாப்பிட்ட கையோடு க்ளேசியர் எக்ஸ்ப்ரஸ் வண்டியைப் பிடித்து

 ஆல்ப்ஸ் மலைகளின் ஊடே அது சென்ற வேகத்திலும்,நடுவில் வந்த குகைளின்

அற்புதத்திலும்,

இத்தனை திடமான ரயில்பாதை மலைகளுக்குள்ளே

அமைத்த ஸ்விஸ் எஞ்சினீயர்களின் அதிமேதாவித்தனத்தையும்,

உழைப்பையும் அதிசயத்தவாறே ................

வில்லியம்டெல் கிராமத்துக்கு வந்து

அந்தக் கதையையும் கேட்டுவிட்டு இண்டர்லாகென் வந்தோம்.

அங்கிருந்து போட்.

லுசெர்ன் மறுபடி வந்து ஒருமணிப் பயணத்தில் வீடு வந்து  ஹப்பாடி!!!!!

விழாத  திடமான கட்டிலில் நிம்மதியாகப் படுத்தேன்.

தூக்கத்தில் விழுவது போலக் கனவு வந்தது.

பரவாயில்லை,அந்த மலையைப் பார்க்க இன்னோரு தடவை போக நான்ஆசைப்படவில்லை.:-))))
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++





   மீண்டும் போனேனே !!! அதுதான் க்ளைமாக்ஸ்.:)

இந்தத் தடவை  பயணம். எப்படி இருந்தது?பார்ப்போம்.

சென்னை வெய்யிலை விட அதிக வெய்யிலை 
இங்கே  பார்க்கிறேன். நேற்று சென்னை 30டிகிரி செல்ஷியஸ்,
இங்கே 36 டிகிரீ!!!!!!!

இதுவும் புவி சூடேறுவதால் என்று சொல்கிறார்கள்.
கண்கள் உஷ்ணத்தால்  பொங்கி மூடிக் கொள்கின்றன.

எல்லாமே அதிசயமாக இருக்கிறது.











24 comments:

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, முன்னாடியே படிச்சுச் சிரிச்சிருந்தாலும் மறுபடி படிச்சுச் சிரிச்சேன். நல்ல ஓட்டல், நல்ல அறை! என்னவோ போங்க. ரசிகத்தன்மை இருப்பதால் பிழைச்சோம். நினைச்சு நினைச்சுச் சிரிச்சுக்கறேன்.

KILLERGEE Devakottai said...

விபரங்கள் நன்று காணொளி கண்டேன் அம்மா

நெல்லைத்தமிழன் said...

ரசித்துப் படித்தேன். மின்னூலாக்கினால் நிறையபேரைச் சென்றடையும். நல்ல தகவல்கள்.

நார்ட்டன் தெருவில் ;மந்தைவெளி) 1 கோடிக்கு ஏழு வருடங்கள் முன்பு கட்டிக்கொண்டிருந்த ஃப்ளாட்டைப் கார்த்தேன். (1200 ஸ்க் ஃபீட்). அதில் பாத்ராம் கம் டாய்லெட் எனக்குச் சிறியதாக இருந்தது. அதற்கு எதிர்த்த ஃப்ளாட் பாத்ரூம் நன்றாக இருந்தது. விலை அதிகம் கொடுக்கத் தயாராக இருந்தும் வீடு அமையவில்லை.

ஸ்ரீராம். said...

சிறிய வார்த்தைகளில் சிக்கனமாக அழகாக சொல்லிச் சென்றிருக்கிறீர்கள்!  அதென்ன போலி நாற்காலி, கட்டிலா?  ஏதோ ஒரு படத்தில் கார்த்திக் சொல்வது போல 'நாற்காலி இல்லை, நாற்காலி மாதிரி'யா?!!

ஸ்ரீராம். said...

//அவ்வளவு உயரத்திலிருந்து யாரோ நம்மிடம் பேசவோ  தொடர்பு கொள்ளவோ முயலுவதாகத் தோன்றியது.அது எல்லோருக்கும்  நேரும் அனுபவம் என்று சொன்னர்கள்.//

அற்புதமான அனுபவம்.  அதை ஒருமுறை அனுபவித்துப் பார்க்க ஆசை.

ஸ்ரீராம். said...

புவி வெப்பமாவதில் குளிர்ப் பிரதேசங்கள் கூட சூடாகி விட்டால் புவி தாங்குமா?  எதிர்காலம் எப்படி இருக்குமோ என்கிற கவலை வருகிறது.  நம் சந்ததிகளுக்கு எப்படிப்பட்ட பூமியை நாம் விட்டுச் செல்கிறோம்?  அட, நாமே மறுபடி வந்தாலும் எப்படி சமாளிப்பது!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
என்றும் நலமுடன் வாழ்க.

காணொளியை ரசித்துப் பார்த்ததற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,

என்றும் நலமுடன் இருங்கள்.

''ரசித்துப் படித்தேன். மின்னூலாக்கினால் நிறையபேரைச் சென்றடையும். நல்ல தகவல்கள்.''

செய்யலாம் மா.
எடிட் செய்வது, தொகுப்பது எல்லாமே அலுப்பாக
இருக்கிறது.

உங்கள் நார்ட்டன் தெரு,மந்தைவெளி அனுபவம்

யோசிக்க வைக்கிறது.
நல்ல இடம் அமைவதும் இறைவன் கருணையே,.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.

இந்த எக்சல்சியர் அங்கே புதுசா வந்திருந்தது. 2002இல்.
அவசரமாக அசெம்பிள் செய்திருக்க வேண்டும்.

நாற்காலியில் நான் தான் சரியாக உட்கார வில்லையோ என்னவோ.!!
நானும் இவரும் ஓவர் வெயிட்டாகக் கூட இருந்திருக்கலாம்:)

பின்னர் ஓட்டல்காரர்கள் வந்து தட்டிக் கொட்டி சரிப்படுத்தினார்கள்!!!

இது போல அனுபவம் ஸ்விஸ் நாட்டில் மிக மிகப் புதிது.

வல்லிசிம்ஹன் said...

அற்புதமான அனுபவம். அதை ஒருமுறை அனுபவித்துப் பார்க்க ஆசை.''

இதற்காகவே நீங்கள் இங்கே வர இறைவன் ஏற்பாடு செய்ய வேண்டும்.


நடக்கும்.

வல்லிசிம்ஹன் said...



அன்பின் ஸ்ரீராம்,
யாரும் அதைப்பற்றிக் கவலைப் படுவதாகத் தெரியவில்லைமா.

''புவி வெப்பமாவதில் குளிர்ப் பிரதேசங்கள் கூட சூடாகி விட்டால் புவி தாங்குமா? எதிர்காலம் எப்படி இருக்குமோ என்கிற கவலை வருகிறது. நம் சந்ததிகளுக்கு எப்படிப்பட்ட பூமியை நாம் விட்டுச் செல்கிறோம்? அட, நாமே மறுபடி வந்தாலும் எப்படி சமாளிப்பது!''

இன்று காலையிலேயே வெப்பம் ஆரம்பமாகிவிட்டது.
நாளை மழை வரலாம்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாம்மா.ஊறுகாயில் இருக்கும் வெந்தயம் நன்றாகவே இருக்கும்.டயபெடிஸ்க்கு அவ்வளவு நல்லதாச்சே.நான் இங்கே பருப்புப் பொடியுடன் வறுத்து பொடித்து சாப்பிடுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் பா.ரசிக்கத்தான் வேண்டும்.
.நன்றி மா.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. ரத்தின சுருக்கமாக எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறீர்கள். இவ்வளவு திறமையுடன் எழுதிய கைகளை கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் எனத்தோன்றியது. காணொளி கண்டேன். மேக கூட்டங்களும், பசுமையும் கண்களுக்கு குளிர்ச்சி. ரசித்து எழுதியுள்ளீர்கள் வாழ்வில் ஒருதடவையாவது பார்க்க வேண்டிய இடங்கள். உங்கள் பதிவின் வாயிலாக கண்டு களித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கோமதி அரசு said...

மிக அருமையான நினைத்து நினைத்து மகிழ சிரிக்க விஷயங்கள் இருக்கிறது.

//நேரும் அனுபவம் என்று சொன்னர்கள்.
இந்த அழகும் மேன்மையும் நம் எவரெஸ்ட்,கைலாச பர்வதம்,கங்கை நதி//

நமக்கு எந்த மலையை பார்த்தாலும் இமயமலை, கைலை மலை, நினைவுக்கு வருவது உண்மை.

,ஹரித்வார் இந்த இடங்களிலும் இயற்கையோடு சேரும் ,
ஐக்கியமாகும்,அந்த உணர்வு நம்மை மேன்மைப்படுத்துகிறது.

படங்கள் , காணொளி எல்லாம் அந்த இடத்தின் அழகை சொல்கிறது. ரயில் பயணம், இயற்கை காட்சிகள் பார்வை, இருந்து விட்டால் போதும் என்று தான் தெரியும்.

மாதேவி said...

மிகுந்த ரசனையான பகிர்வு சிரித்துக்கொண்டே படித்தேன் அடிபடாமல் இருவரும் தப்பியது மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அனபின் கீதாமா,
நீங்கள் இந்தப் பதிவை மூன்றாம் தடவையாகப் படிக்கிறீர்கள்
என்று நினைக்கிறேன்.
மீண்டும் அனுபவித்து ரசித்ததில் மஹா சந்தோஷம்.

அப்போதிருந்த நகை உணர்வு இப்போது இல்லையோ(எனக்கு)
என்று தோன்றுகிறது:)
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
தாமதமாகப் பின்னூட்டப் பதில் இடுகிறேன்.

''மேக கூட்டங்களும், பசுமையும் கண்களுக்கு குளிர்ச்சி. ரசித்து எழுதியுள்ளீர்கள் வாழ்வில் ஒருதடவையாவது பார்க்க வேண்டிய இடங்கள். உங்கள் பதிவின் வாயிலாக கண்டு களித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.''

அப்படியே ஒரு விமானத்தைப் பதிவு செய்து உங்கள் அனைவரையும் இங்கே
வரவழைக்கலாமா என்று தோன்றுகிறது.

இத்தனை இடங்களும் நம் நாட்டிலும் இருக்கும்.
பயணம் சென்றவர்களுக்குத் தெரிந்திருக்கும்.
நான் இன்னும் நம் கொடைக்கானல் கூடப்
பார்த்ததில்லை:))))))))))))))
ரசித்துப் படித்ததற்கு மிக நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
என்றும் வாழ்க வளமுடன்.
தாமதமாகப் பதில் எழுதுகிறேன் .மன்னிக்கணும் தங்கச்சி.

நம் ஊரிலும் எத்தனையோ இயற்கை வளங்கள்
இருப்பதை நீங்கள் எல்லாம் சொல்லிப்
படிக்கிறேன்.

இங்கே வளப்பம் இருப்பதை அழகாகப் பராமரித்து வைக்கிறார்கள்.
இங்கு வரும் வெளி நாட்டவர் வழியாகத்தான்
இந்த ஊரின் வருமானமும் செழிப்பும்.

,''ஹரித்வார் இந்த இடங்களிலும் இயற்கையோடு சேரும் ,
ஐக்கியமாகும்,அந்த உணர்வு நம்மை மேன்மைப்படுத்துகிறது.

படங்கள் , காணொளி எல்லாம் அந்த இடத்தின் அழகை சொல்கிறது. ரயில் பயணம், இயற்கை காட்சிகள் பார்வை, இருந்து விட்டால் போதும் என்று தான் தெரியும்.''

ஆமாம் மா. பார்வையும் நடக்கக் கால்களும் கொடுத்த இறைவனுக்குத் தான்
நன்றி சொல்ல் வேண்டும்.
ஹரித்வார் செல்லும் சந்தர்ப்பத்தையும் அவனே அளிக்க வேண்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
என்றும் நலமுடன் இருங்கள்.

''மிகுந்த ரசனையான பகிர்வு சிரித்துக்கொண்டே படித்தேன் அடிபடாமல் இருவரும் தப்பியது மகிழ்ச்சி.''

ஆமாம் அடி இல்லாமல் இறைவன் அருளினான்.
அந்தப் பயணம் முழுவதும் ஒரே சிரிப்புதான்.
மிக நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

பதிவு வாசித்து சிரித்துவிட்டேன். படங்கள் செமையா இருக்கு அம்மா. இடம் பிரமாதம் அது சரி ஸ்விஸ் லும் வெப்பமா? கட்டிடங்கள் கூடிக் கொண்டே இருக்கிறதே ...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஆமாம் அம்மா இப்படியான மலைப் பிரதேசங்களில் இயற்கையோடு கலந்து மன ஓட்டங்களில் லயித்து அதோடு பேசி...மணாலியில் அனுபவித்திருக்கிறேன் கூட்டம் இல்லாத நேரம் சென்றிருந்ததால். இமயமலை என்ன அழனான அரசி பிரம்மாண்டம். அம்மா காஷ்மீர் லே பாதை ஷிம்லா லே பாதையில் பயணிப்பதைப் பார்த்தால் அதுவும் பனி உறைந்திருக்கும் நேரத்தில் செமையா இருக்கும் காணொளிகள் இருக்கின்றன

கீதா

Ranjith Ramadasan said...

மிகவும் அருமை நல்ல பதிவு,
நண்பர்களே... இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/

I'm providing ultra speed ssd web hosting and domain services in cheap price also..
Please visit.. Prohostor.com