Blog Archive

Saturday, January 22, 2022

(மீண்டும்) பாட்டி,அம்மா, நான்,பெண், பேத்தி பேரன்.

வல்லிசிம்ஹன்

Vallisimhan  October 2011

  ஸ்ரீ ஸ்ரீனிவாசர் கோவில், வெள்ளாளத் தெரு
புரசவாக்கம் தெரு   
1970 வரை என் சொர்க்கமாக இருந்த இடம்:)


புரசவாக்கத்து வீடு, மூன்று அறைகளும் வீட்டுக்கு வெளியே இருக்கும் வெளிவசதிகளும் கொண்டது.

கோலம் போடும் இடத்தைத் தாண்டியதும் ஒரு பத்துக்குப் பத்து வரவேற்பறை. ஒரே ஒரு நாற்காலியும் பெஞ்சும் உண்டு:)

கம்பித்தடுப்பும் அதற்கு மூங்கில் தட்டியினாலான மறைப்பும்(கர்ட்டன்)உண்டு.
இதைத் தாண்டியதும் நான் சொன்ன கூடம். அதில் ஒரு காத்ரேஜ் பீரோ, அரிசி மூட்டை வைக்கும் ஒரு  பெஞ்ச்.

அத்ற்கு முட்டுக் கொடுக்க இரண்டு செங்கல்கள்
அந்தப்பக்கம் சுவரில் ஒரு குட்டி ஜன்னல்.
இந்தப்பக்கம் சுவரில் முப்பத்திரண்டு கடவுள் படங்கள்.:)
மூலையில் நல்ல மரத்தால் செய்த அலமாரி
ஒன்று.
மேல்தட்டில் அலங்கார பொருட்கள்.
இரண்டாவது தட்டில் தாத்தாவின் பிரபந்தம்,பாட்டியின் சிவகாமீயின் சபதம்
மாமாக்களின் எகனாமிக்ஸ் புத்தகங்கள் ,,
அந்தக் காலத்து விஞ்ஞான புத்தகங்கள்
கீழ் தட்டில் இவர்கள் பரிசாக வாங்கிய கோப்பைகள்,தட்டுகள் என்று வரிசையாக இருக்கும்.
அதற்கு
அடுத்த அறை கொஞ்சமே பெரீய புழக்கடையைப் பார்த்த சமையல் அறை.
அதீல் அடுப்பு மேடையின் கீழெ
கற்சட்டிகள் அடுக்கி வைக்கப் பட்டு இருக்கும்.
அதைத்தவிர பாட்டியின் தம்பி, ஹைதராபாத் மிலிட்டரி மாமா வாங்கி வரும்
பீங்கான் ஊறுகாய் ஜாடிகள். என் உயரத்துக்கு இருக்கும்.
கலயங்களில் காய்கறிகள் கழுவி வைக்கப் பட்டிருக்கும்.

தையல் இலைக்கட்டுகளும் இருக்கும்.
எதிர்த்த சுவரில் பருப்பு வகையறாக்களை வைக்கும் காரைக்குடி டப்பாக்கள்
வைக்க ஒரு மரத்தட்டு சுவற்றில் அடித்து வைத்திருப்பார்கள்.
அதன் அருகிலேயே காப்பிக் கொட்டை அரைக்கும் மெஷினும் இருக்கும்..

அந்தப்பலகையில் மாட்டியிருக்கும் கொக்கிகளில் நல்லெண்ணை,தேங்காயெண்ணை,
நெய், 

  நெய். டால்டாவா என்று நினைவில்லை.
ஒரு இனிய பெண்மணி, நெற்றியில் கருப்புக்கலரில் நாமம்
டாட்டூ மாதிரி போட்டிருப்பார்.
அவர் கொண்டு வந்து கொடுக்கும் பட்சண நெய்.  
எவர்சில்வர் தூக்குகளில் தொங்கும்.

சமையலறைக்கு மட்டும் ஓடு வேய்ந்திருக்கும்.
அவ்வப்போது சீனிம்மாவை மட்டும் கடிக்கும் தேள்களும் அங்கிருந்து விழுவதுண்டு.
நான் ஒன்று கூட பார்த்ததில்லை.

தேள் கொட்டினால்,சீனிம்மா,தன் வேலையெல்லாம் முடித்துக் கொண்டுதான்,
டாக்டரைப் பார்க்கப் போவார்.
இல்லாவிட்டால் வீட்டுக்கே வந்து ஊசி போடும்  டாக்டரை
அவர் பெயர் நடராஜன் என்று நினைவு.
எல் எம் டி என்று ஞாபகம்.
 வரவழைப்பார்.

இதே வீட்டில் அம்மாவைப் பெண் பார்க்க அப்பா குடும்பம் வந்திருக்கிறது.
மாமாக்கள் திருமணங்கள்,
பிறகு என் திருமணம் எல்லாம் நடந்தன.
வாசல் சிமெண்ட் தரையில் கட்டில்கள் போட்டு ஆண்களும்,
வீட்டின் உள்ளே பெண்களும்,முதல் அறையில் குழந்தைகளும் படுப்போம்.
சரி பாத்திரங்கள் அலம்பற சீனுக்குப் போவோமா::)

அப்போதெல்லாம் சமையலறைக் குழாயில்
சரியாக காலை மூன்று மணி அளவில் கொட கொட
சப்தத்துடன் தண்ணீர்
வரும் சப்தம் கேட்டு நான் விழித்துக் கொ;வேன்.
அதற்கு முன் சீனிம்மா,சமையல் அறையில் பாத்திரங்கள் போட்டு வைத்திருக்கும் இடத்தில்
ஔ மணை போட்டு
அங்கிருக்கும் பாத்திரங்களுக்கு
வேண்டிய உபசாரங்கள் செய்து அலம்ப ஆரம்பிப்பார்.
நடு நடுவில் பக்கத்து மேடையின் மீதிருக்கும் சிமெண்ட்
தொட்டியில்
நல்ல தண்ணீரைப்
பிடித்துச் சேமிப்பார்.
எத்தனை உழைப்பு. (கடைசி வரை இடுப்பு
வலி இருந்தாலும் முகத்தில் காண்பித்துக் கொள்ள
மாட்டார்.)
06.00 Am.
அப்போது மணி ஆறு ஆகியிருக்கும். ஒவ்வொருவராக மாமாக்கள்,தம்பிகள்,அம்மா எல்லோரும் எழுந்து கூடத்தில் அவரவர் படுக்கைகளில் உட்கார்ந்து ,பேசிக்கொள்ள ஆரம்பிப்பார்கள். அது நாட்டு நடவடிக்கைகளிலிருந்து ஊர் நடப்பு,யாருக்குக் கல்யாணம்,என்ன படம்,சிவாஜி மாதிரி உண்டா இப்படி போகும்.


நானும் சீனிம்மா குளிக்கப் போகும்போது இங்கே வந்துவிடுவேன். அம்மாவுடன் ஒட்டியபடி அவர்கள் பேச்சைக் கேட்பதில்,அந்தக் குரல்களின் அன்பு மொழியில் ஒருவிதப் பாதுகாப்பு இருக்கும்.

சீனிம்மா தான் மட்டும் சில்லென்ற பச்சைத்தண்ணீரில் குளித்துவிட்டு,மற்றவர்களுக்கு பெரிய வென்னீர்த்தவலையில் தண்ணீரை நிரப்பிவிட்டு
அடுப்பு மூட்ட அம்மாவைக் கூப்பிடுவார்.
''போறும் பாப்பா, அதுகள் இன்னும் வெளியே கிளம்பணும். பேச்சு நிறுத்திக் கொள்ளுங்கள்''
என்று குரல் கதவுக்குப் பின்னாலிருந்து வரும்.

அத்தனையூண்டு மூன்றே அறை கொண்ட வீட்டில் அத்தனை பேர் எப்படி இருந்தோம்!!

உடமைகள் கொஞ்சம். மனம் பெரிய விசாலமானது.அது ஒன்றுதான் காரணமாக இருக்க முடியும்.
மீண்டும் சீனிம்மா ஒரு பெரிய பாத்திரத்தோடு வாசலில் பால் வாங்கக் கிளம்புவார்.

மாடு ஒன்று கட்டியிருக்கும். தோலால் தைத்த கன்று ஒன்றும் நிறுத்தி இருக்கும்.நானும்
அந்தக் கோபாலுக் கோனாரிடம் கேட்பேன். '' இந்தக் கன்னுக்குட்டி கத்தாதா '' என்று அவரும் சலிக்காமல் சொல்லுவார். அது புல் மேயப் போயிருக்கு. நான்
 திரும்பிப்  போகும்போது இந்த உடம்புக்குள்ள வந்துவிடும் என்று.

ஆறு வயதில் எனக்கேன் இந்தச் சின்ன விஷயம் கூட எட்டவில்லை என்று,
இப்பொது யோசிக்கிறேன்.

இப்போது என்றால் காலமே வேறு. பெரிய பேரன் (2006)சொல்கிறான்
 ,150 வருடங்கள் வாழ மருந்து கூடிய சீக்கிரம் வந்துவிடுமாம். முடிந்தால் அவனே கண்டு பிடீக்கப்போகிறானாம்

''நோ படி ஹேஸ் டு டை பாட்டி'':)

இப்போது இந்தக் கதை எழுத என்ன காரணம்???
இருக்கு.அது அடுத்த பகுதியில்

வரும்:))))
அன்று சீனிம்மா எங்களைப் பராமரித்ததற்கும், இப்போது இங்கே நாங்கள்
 வந்து இங்கு(சிகாகோ)

இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இல்லை.
பாட்டிகள் மாறுவதில்லை.
அநுபவங்கள் மாறுகின்றன. அவ்வளவுதான்.

அன்றைய பாட்டிக்கு வேலை செய்ய ஆள் கிடையாது.
இங்கே பேத்திக்கும் அதே நிலைமை.

அவளும் பாத்திரம் தேய்த்து,துணி உலர்த்தி,
வீடு பெருக்கித் துடைத்து எல்லாம் செய்தாள்.
இங்கு பேத்தியும் அதையே இன்னும் கொஞ்சம் நாகரீக லெவலில் செய்கிறாள்.
அப்பளம் வடகம் வத்தல் எல்லாம் செய்ய நேரம் இருந்தது.
இன்றைய பாட்டியான எனக்கு இங்கே வந்தால்தான் அந்த வேலை.
நம்ம ஊரில்தான்
க்ராண்ட் ஸ்நாக்ஸ் எனக்காகவே திறந்திருக்கிறார்களே;)
மேலும் எங்க வீட்டு மொட்டை மாடிக்கு தூசிதும்பு அதிகம் வரும்.
ரோட்டு மேல வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம்.
இந்த ''ஐக் புயல்'' சூறாவளி வருவதற்கு முன்பே கொஞ்சம் ஊறுகாய் வடாம் எல்லாம் போட்டாச்சு.
இரண்டு நாட்களாக சூரியனைக் கண்ணால் பார்க்கவில்லை.
நடுநடுவே பேஸ்மெண்ட் செக்கிங் வேற. அங்க தண்ணீர் சரியாக
வெளியேற்றப் படுகிறதா என்று பார்க்க வேண்டுமாம்.
சரி இந்த தற்கால நிகழ்வுகளுக்கும் சீனிம்மாவுக்கும் என்ன சம்பந்தம்.
அவருக்கு இந்த அமெரிக்க மனிதர்கள் பற்றிய நாவல்கள் ரொம்பவும் பிடிக்கும்.


எல்லா
எழுத்தாளர்கள்,ஆர்தர் ஹெய்லி,டானியல் ஸ்டீல்,ஜெஃப்ரி ஆர்ச்சர் இவர்களுடைய ஆக்கங்களைத் தமிழ்ப் படுத்தி ராகி.ரங்கராஜன் அவர்கள் குமுதத்தில் எழுதும்போது ஒரு வரி விடாமல் படிப்பார்.
எதைப் பற்றியுமோ யாரைப் பற்றியுமோ அவசரமாகக் கணித்து விடமாட்டார்.
எல்லோருடைய செய்கைகளுக்கும் ஏதாவது காரணம் இருக்கும்,
என்று நிதானமாக அதர்சைட் ஆஃப் மிட்னைட் கதாநாயகியை அலசுவார்.
என்னுடைய திருமணத்தின் போது இருந்த சீனிம்மாவுக்கும்,இப்போது
30 வருடங்கள் கழிந்த நிலையில் புத்தம் புதிதான சீனிம்மாவைப் பார்ப்பதற்கும்
ஏகப்பட்ட வித்தியாசம்.
சந்தோஷமாக இருந்தார். நான் முதல்தடவை டெட்ராய்ட்டுக்கு (1998)வந்த போது நிறைய விவரங்கள் எனக்குக்
கொடுத்தார்.அவரையும் அழைத்து வந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாரோ.
வருவதற்கு சம்மதித்திருக்க மாட்டார்;)பிள்ளைகளை விட்டு வரவேண்டுமே!!
காரணங்கள் இவ்வளவுதான் இந்தக் கொசுவத்திக்கு.
இந்தச் செல்லப்பாட்டி   என்  வாழ்வின்   வெகு முக்கிய அங்கம்
அவளை நட்சத்திரப் பதிவில் கவுரவிக்கணுமா இல்லையா.


at October 23, 2011 7 comments:  

என் பேத்தியும் நானும்.  2010
+++++++++++++++++++++++++++++
'பாட்டி,நான் உனக்கு காயெல்லாம் கட் செய்து கொடுக்கிறேன்.
காஃபி கூட மைக்ரொவேவ்ல போடுவேன்.
உன்னோடயே இருந்துடறேனே. அம்மா அப்பா மட்டும் போட்டும்''
இது ஸ்விஸ் பேத்தியின் கொஞ்சல்.
''இந்த ஊர்ல கொசு இருக்குடா,, கால் வைக்கிற இடமெல்லாம் அழுக்கு இருக்கும்,
தோட்டத்திலிருந்து பூச்சியெல்லாம் உள்ள வந்துடும்''
நீதான் அந்த பெரிய புஸ் புஸ் வச்சிருக்கியே, நாம அதெல்லாம் விரட்டிடலாம்.
நான் சமத்தா சாப்பிடறேன்.

அப்புறமா புதுப் பாப்பா வந்தாட்டு நாம ''பாசல்'' போகலாம்.

இப்படி விதமா விதமாகப் பேசி இங்கேயெ இருக்கேன்னு சொன்ன குழந்தை இதோ கிளம்பப் போகிறது:)

நீ கோவிந்தா உம்மாச்சி,சாயித்தாத்தா உம்மாச்சி எல்லார்கிட்டயும் பெசிண்டிரு பாட்டி.
நான் அப்புறமா வரேன்.
அப்பா பாவம் ,தனியா இருக்கப் பயமா இருக்கும். நான் அவாளோடயே போகிறேன் என்று
''டோரா'' பையையும் தூக்கிக் கொண்டது.

வசந்தமெல்லாம் கொஞ்ச நாட்கள் தான் என்று நமக்குத் தெரியாதா என்ன!!!



எல்லோரும் வாழ வேண்டும்.








27 comments:

நெல்லைத் தமிழன் said...

உங்கள் எழத்து மனதில் பதிகிறது, ஒப்பிட முடிகிறது, பாதிக்கிறது.

காலங்கள் மாறுகின்றன.

நான் கீழநத்தத்தில் நாங்கள் வளர்ந்த வீட்டைப் பார்த்தபோது, இவ்வளவு சின்ன உள் திண்ணையிலா, பசங்க 4, பெரியவங்க 2-3 பேர் படுத்துக்கொண்டோம்னு ஆச்சர்யமா இருந்தது. என் சித்தப்பாவுக்கு போன் பண்ணிச் சொன்னேன். அவர் சொன்னார், அப்போ மனது விசாலமா இருந்தது. தேவையில்லாமல் எதுவுமே அகத்தில் இருந்ததில்லை என்றார். அதையே நீங்களும் எழுதியிருக்கீங்க.

நெல்லைத் தமிழன் said...

//150 வருடங்கள் வாழ மருந்து கூடிய சீக்கிரம் வந்துவிடுமாம்.// ஹா ஹா ஹா. 150 வருடங்கள் ஆரோக்கியமாக வாழும்படியும், உறுப்புகள் தேய்மானம் இல்லாமல் கடைசி வரை உழைக்கும்படியும் இருக்குமா என்று கேட்டுச் சொல்லுங்கள்.

பாட்டிகள்/வேலைகள் - இதில் எனக்கு ஒன்றும் குறையாகத் தெரியலை. தொடர்ந்து முடிந்தவரை ஏதாவது செய்து அது பிறருக்கும் உதவியாக இருந்தால் அதில் கிடைக்கும் மகிழ்ச்சி பெரிது.

வல்லிசிம்ஹன் said...

பல வேறு வருடங்களில் நடந்த விஷயங்கள்.

பாட்டியும் பேத்தியும் என்று மெயின் பாத்திரங்கள்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமையாக உள்ளது. நல்ல நினைவலைகள் சகோதரி. அழகாக அதை மனதில் உணர்த்தும் வண்ணம் உங்களின் எழுத்து முறைகள் கண்டு வியக்கிறேன். இப்படி ஒரே வீட்டில் உறவுகள் அனைவரும் உண்டு,உறங்கி வாழ்ந்திருப்பதே ஒரு சுகந்தான்.150 வருடகாலம் வாழ்ந்திருக்கும் மருந்து கண்டு பிடிக்கும் பேரனுக்கு வாழ்த்துகள். நம் அருகாமையை விரும்பும் குழந்தைகளுடனே வாழ்வதே மனதுக்கு இதந்தான். தங்கள் பேத்தியின் விபரமான பேச்சையும் ரசித்தேன். இப்படி மனதுக்கு ஆனந்தம் தரும் நினைவலைகளின் பதிவை எத்தனை முறை வேண்டுமானாலும் படித்து மகிழலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

மிகப் பழைய பதிவு தான் இது.
பாட்டிம்மா நினைவு வந்து கொண்டே இருந்தது.

நானும் இன்னும் ஒரு மாமாவும் தான்
இருக்கிறோம் அந்தத் தலை முறையில்.

கீழ நத்தம் எங்கே , புரசவாக்கம் எங்கே. !!!!1930 களிலேயே தாத்தாவுடனும்
இரண்டு பிள்ளைகளுடனும் சென்னைக்கு வந்து விட்டார்கள் என்று
நினைவு.
கேட்டு வைத்துக் கொள்ளாமல் இருந்து விட்டேன்.
அவர் சொன்ன கதைகள் ஏராளம்.

உங்கள் சித்தப்பா சொல்வதுதான் நிஜம். '
இப்போது நிறைய மனிதர்களுக்கு
மனதில் இடம் இல்லை. வீடு பெரிதாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

ஓ. 150 வயசு பத்தி சொன்ன போது அவனுக்கு
எட்டு வயசு.:)
இப்போது நிறைய மாறி விட்டான். பகவத் கீதை
படிக்கிறான். கேட்கிறான்.
சந்த்யா வந்தனம் ரெகுலராகச் செய்கிறான்.

வைஷ்ணவம் பற்றி எனக்குத் தெரியாதது எல்லாம்
தெரிந்து வைத்திருக்கிறான்:)
அவனும் அவனுடைய பெரியப்பா மகளும்
சனாதன தர்மம் பேசுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
மிக நன்றி மா.
இந்தப் பதிவுகள் எல்லோரும் படித்ததுதான். நீங்கள் புதிதாகப்
படித்து கருத்து சொல்வது எனக்கு மிக மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
நீங்கள் படித்து நன்றாக இருக்கிறது என்று சொல்வதே
மிக மிக மகிழ்ச்சி.

இப்போதெல்லாம் பேரன் சொல்லும் விஷயங்கள் வேறு.
ஆத்மா, பகவான் என்று பல விஷயங்களில் எங்கள்
விவாதம் தொடர்கிறது.

குழந்தைகளின் வெவ்வேறு பருவங்களைக் காணுவது ஒரு பாக்கியம்.

மகனின் மகள் என்னைவிட்டுப் போக மாட்டேன் என்று சொன்னது
அவளுடைய நாலாவது வயதில்.
இப்போது என்னை அங்கே வரச் சொல்லி அழைக்கிறாள்.
தொற்று முடிந்த பிறகு என்ற சொற்றொடரையும் சேர்த்துத்தான்:)

மனம் நிறை நன்றி அம்மா. என்றும் நலமுடன் இருங்கள்.

ஸ்ரீராம். said...

புரசை வீட்டுப் படத்தைப் பார்த்தால் வாசல் கதவு திறந்ததும் சாலையிலிருந்து அப்படியே திடீரென வீடு ஆரம்பிப்பது போல இருக்கிறது.

ஸ்ரீராம். said...

ஆம், இப்போது யோசிக்கையில் அவ்ளோவ்ண்டு  வீட்டுக்குள் எவ்வளவு பேர்கள் இருந்தோம் என்கிற ஆச்சர்யம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் என்றே நினைக்கிறேன்.  சீனியம்மா போன்ற கேரக்டர்கள் அன்பின் உரு, கடமையின் கண்.

ஸ்ரீராம். said...

உங்கள் பேரன் மருந்து கண்டுபிடிக்க தொடங்கியாச்சா?  எனக்கும் ஒரு டோஸ் கொடுத்து அனுப்புங்கள்!  பேரன் பேத்திகள் அன்பு கண்ணாடி போன்றது.  பாட்டி தாத்தாக்களின் அன்பை அது அப்படியே உள்வாங்கி திருப்புகிறது.

Geetha Sambasivam said...

மிக அருமை. இம்மாதிரி நினைவலைகள் நம் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு நிறையவே இருக்கும். என்னுள்ளும் சில, பல நினைவுகள். மீள் பதிவாக இருந்தாலும் சுவாரசியம்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஶ்ரீராம்,
நலமுடன். இருங்கள். ஆமாம் . சின்ன வீடு. பெரிய சந்தோஷம். நல்ல உள்ளங்கள் நிரம்பிய
இடம் அனைவருக்கும் நிம்மதி.

வல்லிசிம்ஹன் said...

புரசை வீட்டின் நுழைவாயிலில் பிள்ளையார் கோவில் இரூக்கும் பா.இது நாங்கள் இருந்த தெரு. அந்தப் படத்தைத் தேடிப் போடுகிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்து ரசித்து வாசித்தேன்.
பொற்
அழகான எழுத்து! வருடிக் கொடுப்பது போன்ற உணர்வு. பாட்டி தாத்தா நமக்கும் விதைக்கும் அந்த அன்பு, கதைகள் எல்லாம் நமக்குள் பதிந்து அது அடுத்த தலைமுறைக்கும் கடத்துகிறதுதான்...

அப்படியே எனக்கும் என் கிராமத்து நினைவுகள் கூடவே வந்தன. சின்ன வீடு அதில் நாங்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த அந்த மகிழ்ச்சி அது பொற்காலம்.

அந்தக்காலம் இந்தக்காலம் என்று சொல்லிச் சென்ற விதம் ரொம்ப ரசிக்க வைக்கிறது அம்மா. உங்களின் எழுத்து மயிலிறகு!! ஈர்த்துவிட்டது.

ரொம்ப அழகாக எழுதுகின்றீர்கள் அம்மா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

புரசை வீடு இதே தானாம்மா? அல்லது அப்போது அது இருந்த பகுதியா? நிறைய பக்கத்துவீட்டுக்காரர்கள் இருந்திருக்கிறார்கள் போல இருக்கே..

உங்களின் சீனிம்மா (பாட்டி) வாவ்!! வாசிப்பும் உங்களுக்குக் கொடுத்த டெட்ராய்ட் போன பொது கொடுத்தது என்ன அருமையான சீனிம்மா பெயருக்கேற்ற இனிமையானவர்தான்!

பேத்தி வாவ்!!! நீங்கள் உங்கள் பாட்டியிடம் எஞ்சாய் செய்தது போல உங்கள் பேத்தி உங்களிடம். குழந்தையின் அந்தப் பேச்சு ரசனை.

நானும் என் பாட்டியிடம் இப்படித்தான் பேசியிருக்கிறேன்.

பேரனின் அந்த மருந்த்து பார்சல் இப்பவே புக் செய்துவிடுகிறேன்!!! ஹாஹாஹா....

ரசித்தேன் மீண்டும் வாசித்தேன் அம்மா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நிஜம் நிஜம் அப்போது வீடு சின்னது ஆனால் மனது பெரீயீயீயீயீயீயீய்சு.

ஆனால் இப்போது சுருங்கிவிட்டது எல்லாம் உலகமே கைய்டக்கத்துள் மொபைல் வடிவில் வந்துவிட்டதாலோ? வாழ்க்கை முறை மாறிவிட்டதால்..எங்கே கூட்டுக் குடும்பம்?

கீதா

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை எத்தனை மாற்றங்கள்.... பழைய பதிவும் இப்போதைய சூழலும் கலந்து படித்தேன் ரசித்தேன். எங்களது நெய்வேலி வீட்டில் அவ்வப்போது வரும் உறவினர்கள் அனைவருக்கும் இடம் இருந்தது. இப்போது அதைவிட பெரிய வீடு என்றாலும் யாரும் வருவதும் இல்லை. வந்தாலும் இடம் பத்தாது என்றும் சொல்கிறார்கள்.

மாதேவி said...

நீங்கள் கூறியதுபோல மனங்கள் விரிந்து இருந்தன தேவைகள் அளவுடன் இருந்தன.இப்பொழுதோ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனி அறை இருந்தும் பொருட்கள் வைக்க இடம் போதாது என்ற பாட்டுத்தான் காலத்தின் மாற்றங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நன்றி மா.

என் சீனிம்மா பாட்டிக்கு உழைப்பையும் அன்பையும் தவிர வேறொன்றும் தெரியாது.
92 வயது வரை இருந்தார்.

''ஆம், இப்போது யோசிக்கையில் அவ்ளோவ்ண்டு வீட்டுக்குள் எவ்வளவு பேர்கள் இருந்தோம் என்கிற ஆச்சர்யம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் என்றே நினைக்கிறேன்.''
உண்மைதான்.

சிறுகக் கட்டி பெருக வாழ். இதுதான். அந்த நாளைய திட்டம்.
இப்போது மாமாக்களின் குழந்தைகள்
தனித்தனி வீடு கட்டிக் கொண்டுவிட்டார்கள்:)
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உங்கள் பேரன் மருந்து கண்டுபிடிக்க தொடங்கியாச்சா? எனக்கும் ஒரு டோஸ் கொடுத்து அனுப்புங்கள்! பேரன் பேத்திகள் அன்பு கண்ணாடி போன்றது.''

இப்போ அந்த யோசனை எல்லாம் விட்டுவிட்டான். பெரியவனாகை விட்டானே.
நன்றி மா ஸ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

ஆமாம் வயதாகும் போது
அனைவரின் அன்பும் நட்பும் தேவையாகத் தான் இருக்கிறது.

நல்ல நினைவுகளை அசைபோடுவது
மிகப் பெரிய மகிழ்ச்சி.

அல்லாதவைகளை நினைப்பதே பாரமாக இருக்கிறது.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன்,
என்றும் நலமுடன் இருங்கள்.

நம் எல்லோருக்குள்ளும்
அந்த சிறுமி உயிருடன் இருக்கிறாள்.
அவளுக்கு சந்தோஷத்தைத் தவிர ஒன்றும் தெரியாது.

அதுதான் அந்த நினைவுகள்
எல்லோருக்கும் பொருந்திப் போகிறது.


''அப்படியே எனக்கும் என் கிராமத்து நினைவுகள் கூடவே வந்தன. சின்ன வீடு அதில் நாங்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த அந்த மகிழ்ச்சி அது பொற்காலம்.

அந்தக்காலம் இந்தக்காலம் என்று சொல்லிச் சென்ற விதம் ரொம்ப ரசிக்க வைக்கிறது அம்மா. உங்களின் எழுத்து மயிலிறகு!! ஈர்த்துவிட்டது.''

உங்களுக்கும் இருக்கும் பழைய நினைவுகள் எங்களுக்குத் தெரிய வேண்டாமா.
தயவுசெய்து நீங்களும் எழுதுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன்,

அந்தப் படம் கூகிளில் கிடைத்த பழைய புரசவாக்கம் படம். முன்பொரு பதிவில்
வீட்டுக்கு அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலின் படம். போட்டிருந்தேன். தேட
வேண்டும் அம்மா.
''உங்களின் சீனிம்மா (பாட்டி) வாவ்!! வாசிப்பும் உங்களுக்குக் கொடுத்த டெட்ராய்ட் போன பொது கொடுத்தது என்ன அருமையான சீனிம்மா பெயருக்கேற்ற இனிமையானவர்தான்!

பேத்தி வாவ்!!! நீங்கள் உங்கள் பாட்டியிடம் எஞ்சாய் செய்தது போல உங்கள் பேத்தி உங்களிடம். குழந்தையின் அந்தப் பேச்சு ரசனை.''

மகிழ்ச்சியான தருணங்களை இரு வழியிலும் இறைவன் தந்திருக்கிறான்.
நாம் இல்லாவிட்டாலும் நம் நினைவுகள் குழந்தைகளுக்கு
இருக்க வேண்டும்.

சீனிம்மா நினைத்தாலே இன்னும் இனிமைதான்.
உங்களின் அன்புப் புரிதலுக்கு மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

''எல்லாம் உலகமே கைய்டக்கத்துள் மொபைல் வடிவில் வந்துவிட்டதாலோ? வாழ்க்கை முறை மாறிவிட்டதால்..எங்கே கூட்டுக் குடும்பம்?''

நீங்களே சொல்லிவிட்டீர்கள்.
வீடு சின்னது ஆனது மாதிரி
சாப்பாடும் மாத்திரை ரூபத்தில் வந்து விட்டால்
இன்னும்
நன்றாக இருக்கும். ஆளுக்கொரு மாத்திரை
போட்டுக்கொண்டு
பல்லாண்டு சமாதானமாக வாழலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
நலமுடன் இருங்கள் ராஜா.

யாருக்கும் விருந்தினர்கள் வருவது அவ்வளவு விருப்பம் இல்லை.
சென்னையிலியே இத்தனை பேர் இருந்தோமே

ஒருவர் வீட்டிலும் போய்த் தங்கிய நாள் கிடையாது.
காலம் நிறையத்தான் மாறிவிட்டது.
என் மாமாதான் ,
இன்னும் ஆவலுடன் கேட்பார்,இரண்டு நாட்களாவது தங்கக் கூடாதா
என்று.

பரவாயில்லைம்மா. நாம் ஊரோடு ஒத்து வாழ்வோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
நலமுடன் இருங்கள்.

''நீங்கள் கூறியதுபோல மனங்கள் விரிந்து இருந்தன தேவைகள் அளவுடன் இருந்தன.இப்பொழுதோ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனி அறை இருந்தும் பொருட்கள் வைக்க இடம் போதாது என்ற பாட்டுத்தான் காலத்தின் மாற்றங்கள்.''


அதே அதே. மனம் ஒத்து யாரும் யாரையும் விருந்துக்கு அழைப்பதில்லை.
அவரவர் வேலையே சரியாக இருக்கிறது அம்மா.
நாமும் அதே போல இருக்கப்
பழகிக் கொள்வோம்.

கோமதி அரசு said...

மிக அருமையான மலரும் நினைவுகள்.

சின்ன வீடாக இருந்தாலும் வரும் விருந்தினர்களுக்கும் நமக்கும் வீட்டில் இடம் இருக்கும் இப்போது எல்லோருக்கும் கட்டில் வேண்டி இருக்கிறது, தனி அறை வேண்டி இருக்கிறது, மாதேவி சொல்வது போல.

பாட்டி, பேத்தி பாசம் மிக அருமை. உங்கள் பேரன் சொன்னது போல.

பழைய நினைவுகள் எல்லாம் மிக அருமை.
உங்கள் பழைய பதிவுகள் படிக்க படிக்க அருமை.