Blog Archive

Wednesday, September 01, 2021

என்றும் கண்ணன்.

வல்லிசிம்ஹன்

ராமாவதாரத்துக்கும் கிருஷ்ணாவதாரத்துக்கும் ரசிக்கத்தக்க வேற்றுமைகள் உண்டு. 

ராமன் நவமியில் பகல் வேளையில் அரண்மனையில் அவதாரம் செய்தான். 

கிருஷ்ணன் அஷ்டமியில் அர்த்த ராத்திரியில் சிறையில் அவதாரம் செய்தான். 

எண்களில் ஒன்பதை எப்படிப் பெருக்கினாலும் அது தன்நிலையில் மாறாது. அதைப் போன்றவன் ராமன்.

எட்டு என்ற எண், தன் நிலையில் பெருக்கும்போது குறுகிக் கொண்டே வந்து இறுதியில் மாயமாகி விடுகிறது. 

அதைப்போல தன்னை ஒளித்தும், நிதானம் காட்டி பின்னர் மாயையை விரட்டி தர்மத்தை நிலை நாட்டினான் கிருஷ்ணன். 

ஆகவேதான், ‘பகவத் கீதை’ என்ற உபதேசத்தை யுத்தபூமியில் விஜயனை முன்னிட்டு நமக்கெல்லாம் உபதேசம் செய்தான்.

ஒருவருக்கு நால்வராய் வாய்த்தது ராமாவதாரம். 

நால்வருக்கு ஒருவராய் நின்றது கிருஷ்ணாவதாரம். 

அதாவது, பிள்ளை இல்லையே என்று வருந்திய தசரதனுக்கு ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னன் என்று நால்வராக வாய்த்தது ராமாவதாரம். 

வசுதேவர், தேவகி, நந்தகோபர், யசோதை என்கிற நால்வருக்கும் - கண்ணன் என்ற ஒருவனே, மகனாய் வாய்த்தது கிருஷ்ணாவதாரம்.

ராமாவதாரத்தில் சீதைக்குப்புகழ் அதிகம். சிறையிலிருந்து புகழ் பெற்றாள் சீதை. 

அதைத் தோற்கடிக்கும் விதமாக பிறக்கும்போதே சிறையில் பிறந்து சாதனை செய்தது கிருஷ்ண சாமர்த்தியம்.

தூதுபோய் அனுமன் புகழ்பெற்ற சரிதம் ராமாயணம். 

அந்த தூதுப்புகழும் தனக்கே என்பதைக் காட்டியது கிருஷ்ணாவதாரம்.

எல்லாவற்றையும் விட மிக முக்கியம், இராமன், மனிதனும் தெய்வமாகலாம் என்பதன் விளக்கம். 

கிருஷ்ணன், தெய்வமே மனிதனாக வரலாம் என்பதன் சுருக்கம். 

அதனால்தான் ராமனுக்கு விஸ்வரூபம் என்று எதுவும் இல்லை. 

கண்ணனுக்கு விஸ்வரூபம் என்பது சர்வசாதாரணம்.

சூட்சுமமாகப் பார்த்தோமானால் கிருஷ்ணன் என்பது ஒரு சுவையான அனந்தநிலை, உத்சவ உற்சாகம், மனமோகன ஸ்வரூபம்.

கிருஷ்ணனுக்குப் பூப்போட்டு வணங்குவது மட்டும் பக்தியில்லை. தன்னையே ஒரு பூவைப் போல லேசாக்கிக் கொள்ளுதலே கிருஷ்ண அனுபவம்.



🙏சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

கண்ணன். 
தங்கையிடம் இருந்து வந்த செய்தி. நன்றி ஜெயந்தி கண்ணன்.


5 comments:

வெங்கட் நாகராஜ் said...

ராமனும் கிருஷ்ணனும் - நல்லதொரு ஒப்பீடு.

காணொளிகள் பிறகு தான் பார்க்க முடியும்.

Bhanumathy Venkateswaran said...

அருமையான ஒப்பீடு. ஒருவனுக்கு பகைவர்கள் கூடாரத்திலிருந்தும் உதவி கிடைத்தது, மற்றவனுக்கோ உறவே பகையானது. 

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
நன்றி மா. கண்ணன் பாடல்கள் ,இனிமை. இந்தப் பாடல்கள்
என் மாமியாரின் தங்கை எழுதினவை. அதனால்
இன்னும் முக்கியமானவை.
அவரும் அன்பானவர்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் பானுமா,
ஆமாம் பா. எல்லாவற்றையும் மீறி வெற்றி பெற்றானே
அதுதான் நமக்கு அவன் சொல்லும்
பாடம்.

பன்முகத்து அரசன்.
கருத்துக்கு மிக நன்றி மா.

கோமதி அரசு said...

அருமையான பதிவு.
ஓப்பீடு அருமை.
பாடல்கள் மிக அருமை.
கேட்டு ரசித்தேன்.