Blog Archive

Thursday, February 06, 2020

மசாலா வாழைக்காய்.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.

இன்று வாழைக்காயைப் புது முறையில் செய்யும்
குறிப்பு ஒன்று கிடைத்தது. இந்த ஊரின் எல்லையில், ஜெர்மனியின் எல்லை. அதில்
ஒரு இந்திய உணவு விடுதி. இலங்கைத்தமிழர்கள், ஜெர்மானியர்கள் என்று பல பேர் இருந்தார்கள்.

அது ஒரு சைவ அசைவ உணவகம் என்பதால் கொஞ்சம் தயக்கமாக
இருந்தது.

நாங்கள் கேட்டுக் கொண்ட வகைகளில் 
எண்ணெய்க் கலப்போ, அசைவ ஸ்டாக் கலப்போ
இல்லாமல் கவனம் வைக்குமாறு வேண்டிக்கொண்டோம். அவர்களும் தாங்கள்
இந்திய சைவ முறையைப் 
பின்பற்றுவதாகவும். கறி மசால் சேர்த்து வாழைக்காய்
செய்திருப்பதாகவும் மெனு கார்டில் காட்டினார்கள்.
அது கொஞ்சம் வினோதமாக இருந்தாலும்
எங்க அப்பா சொல்லும் கடல் வாழைக்காய் நினைவு
வந்து சிரித்துவிட்டேன்.
மீன் செய்ய இந்த மசாலா உபயோகப் படுத்துவீர்களோ
என்றும் அந்த இளைஞரைக் கேட்க அவர் ஒரு கணம் திகைத்தார்.
 என் ஏற்காட்டுத் தோழி அசைவம் செய்வதில் அரசி.(எதிர் வீட்டில் இருந்தவள், பெயர்   ராஜகுமாரி  )

வெள்ளிக்கிழமை அசைவம்    சாப்பிடாத நாட்களில் 
இது போல மசாலா சேர்த்து உ.கிழங்கு செய்து எனக்கும் கொடுத்தனுப்புவாள்.
மாமியாருக்கு ஒரே சந்தேகமாக இருக்கும்,
 உன்னையும் நான் வெஜ்க்குப் பழக்கி விட்டு விட்டாளா 
என்று கேலி செய்வார். இல்லம்மா. நான் அவளுக்கு நேத்திக்கு அரிசி உப்புமா அனுப்பினேன்.
அந்த டப்பாவில் இந்த உருளைக் கிழங்கு 
கரேமது அனுப்பி இருக்காள் என்று காண்பிப்பேன்.

சிம்முவுக்கு எடுத்து வச்சுட்டு நீங்க எல்லாம் சாப்பிடுங்கோ.
என்பார்:)
 சிங்கம்  ஏற்கனவே  அங்கே சாப்பிடப் போயிருப்பது அம்மாவுக்குத் தெரியாது!!
இப்பொழுது இந்த மசாலாவைப் பார்த்ததும் எனக்குப் 
புரிந்துவிட்டது.

தேவையான பொருட்கள்.

1, 4  , நான்கு பெரிய வாழைக்காய்,

ஒரு பெரிய தேங்காயின்  ஒரு மூடி துருவியது,
சின்னவெங்காயம்  400 கிராம் உரித்தது 
பூண்டு,இஞ்சி,மஞ்சள்,தனியா,    பச்சை மிளகாய்  எல்லாம் பச்சையாக அரைத்த 
கலவை ஒரு கிண்ணம்,

பெரிய வெங்காயம் அரிந்தது ஒரு கிண்ணம்,,
கறிமசாலா  ...சோம்பு,கசகசா ,லவங்கம்,பட்டை,ஏ ல க் காய்  ஒவ்வொன்றும் 
 ஒரு தேக்கரண்டி அளவில்  சேர்த்துப் பொடி செய்து கரைத்துக் கொண்டது 
ஒரு கிண்ணம் 

உப்பு , எலுமிச்சை அளவு புளி .

செய்முறை.

மொந்தன் வாழைக்காயை சதுரம் சதுரமாகப் பெரிய அளவில் நறுக்கி சிறிது உப்பு மஞ்சள் பொடி  போட்டு 
லேசாக வேக  வைத்து உலர விடவேண்டும்.
சின்னவெங்காயம், தேங்காய், தனியாக அரைத்துக்  கொள்ளணும்.
மசாலா பொருட்களைத் தனியாக அரைத்துக் கொண்டு,

ஒரு வாணலியில்  நிறைய நல் எண்ணெய்  விட்டு சின்னவெங்காயத் தேங்காய் கலவையை பழுப்பு நிறத்தில் வதக்கித் தனியாக வைத்துக் கொண்டு,
பெரிய வெங்காயம் போட்டு அதை வதக்கியதும் 
கறி  மசாலாவைச்  சேர்த்து வதக்க வேண்டும்.
இன்னொரு வாணலியில்  எண்ணெய் விட்டு,
சீரகம் வெடிக்க விட்டு, புளியைக் கெட்டியாகக் கரைத்துவிடவேண்டும் ,
புளி  கொதித்து  கெட்டியானதும்  வாழைக்காய்த் துண்டுகள் அரைத்த விழுதுகள்  அத்தனையையும்   சேர்த்துப் பிரட்டி எடுக்க வேண்டியதுதான். ஜம்மென்று   ருசியாக இருக்கும்.

ஸ்ஸ்ஸ்ஸ்  அப்பாடி இத்தனை வேலை கொள்ளும் 
இந்த கரியமுதை  25 வருடங்கள் கழித்து இங்கே பார்த்தேன்.

நான் செய்யாததால் இதை படம் எடுக்கவில்லை.

அதே  காரணத்துக்காக  எங்கள் ப்ளாகுக்கும் அனுப்பவில்லை.

Experts comments are welcome:)😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇

Image result for RAW BIG SIZE BANANA






23 comments:

Angel said...

ஆஹா !!! வாழைக்காய் புளியிட்ட பொடிக்கறி ..அட்டகாசமான குறிப்பும்மா .நான் பொதுவா சோம்பு சேர்க்காம செய்வேன் உருளை /வாழை வெரைட்டிக்கு  மெழுகுப்பிரட்டி தான் எப்பவும் செய்றது இது புது மாதிரி இருக்கு செய்து சொல்றேன்மா .
கடல் வாழை ஹாஆஹாஆ :)) 


//Experts comments are welcome:)😇😇😇😇😇.. i am still a learner vallimmaa :)

Geetha Sambasivam said...

வாழைக்காய்ப் புளி விட்ட கறி நானும் செய்தாலும் இப்படி வெங்காயம், பூண்டு எல்லாம் சேர்த்ததில்லை. ஆனால் கோவையில் ஒரு முறை சாப்பிட்டிருக்கேன். அதில் பூண்டுபோடலைனு நினைக்கிறேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

ஸ்ரீராம். said...

செய்முறை எளிதாக இருப்பது போல தோன்றினாலும், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், அரைத்து, அப்படியே என்பது நினைவில் நிறுத்த வேண்டும் போல..    செய்ய ஆசை வருகிறது.  அல்லது யாராவது செய்துகொடுத்தால் ஒரு கப் எடுத்து போர்க்கில் குத்தி சாப்பிடலாம்!!!

ஜீவி said...

சேப்பங்கிழங்குக்கு பதில் வாழைக்காய். இல்லையா?..

கோமதி அரசு said...

வாழைக்காய்க்கு புளி சேர்த்து செய்வது அருமை.
சாரின் நினைவும் கூட வருவது நெகிழ்வு.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல குறிப்பு.

கொஞ்சம் மெனக்கெட வேண்டுமென்பதால் நானே சமைப்பதற்கு வாய்ப்பில்லை! :)

மேலும் பூண்டு, சோம்பு சேர்த்தால் அவ்வளவாக பிடிப்பதில்லை!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,
நன்றி கண்ணா. உங்க ஊர் குளிர் எப்படி இருக்குமா.
ஆமாம் கடல் வாழை ஒரு சங்கேத பாஷை. மீனுக்குப் பதிலா.
அவர் ஒரு பெரிய வாழைக்காயை பெரிய பெரிய சதுரமாக
நறுக்கி செய்திருந்ததை எல்லொரும் மெச்சினார்கள்.
பூண்டு, சோம்பு எல்லாம் ஆப்ஷன்ஸ் தான். நமக்கு வேண்டும் என்பதை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
நான் வாழைக்காய் வெங்காயம் காம்போவே
கேள்விப் பட்டதில்லை.
புதுமையாக இருந்ததால் பதிவிட்டேன். நன்றி ராஜா,.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு கீதாமா,
நாம் வாழைக்காய்க்கான உபயோகமே வேற விதமா செய்வோம்.

இந்த வாழைக்காயை குழந்தைகள் ரசித்து சாப்பிட்டார்கள்.
எனக்கு வாசனை அதீதமாகப் பட்டது.
ஒரு வேளை கத்திரிக்காயாக இருந்தால் இன்னும் பொருந்துமோ.
பூண்டு வெங்காயம் எல்லாம் என் தோழியின் வீட்டில்
நித்ய வாசம்.
நமக்குப் பெருங்காயம் மாதிரி.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி அன்பு ஜெயக்குமார்.நலமாப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், அவர்கள் சமையல் முறையில்
பூண்டு வெங்காயம் எல்லாம் அம்மியில் அரைத்து
கொத்தமல்லி,இஞ்சி,ப மிளகாய்
இதெல்லாம் அரைக்க ஆள் இருக்கும்.
தேர்ந்த சமையல் முறைகள் தெரிந்து வைத்திருந்தாள்.
ஆச்சு ஒரு 10 வருடங்கள் அவளையும் பார்த்து.
சின்ன வெங்காயம் ஒன்றே நமக்குப் போதும்.
முடிந்த போது செய்து பார்க்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜீவி சார்.
வாழைக்காய் தான் அவர் சொன்னார்.
சேப்பங்கிழங்கும் செய்யலாமோ.
மசாலா வெங்காயம்,பூண்டு இல்லாமல்
நாம் செய்யலாம்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கோமதி மா.
புளிகுத்தின்னு பாட்டி சொல்வார்.
அவர் நினைவு வராமல் ஒரு நாளும் செல்வதில்லை மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
கொஞ்சம் நீளமான செய்முறைதான். இதையே செய்துகொண்டிருக்கும் என் தோழிக்கு
இதெல்லாம் வெகு சுலபம்.
அவள் மாமியார் அப்படி அவளைப் பழக்கி இருந்தார்.
புதிதாக இருந்த தால் பதிவிட்டேன் மா.

நெல்லைத்தமிழன் said...

வாழைக்காய் புளியிட்ட கரேமது. வெங் மசாலா இல்லாமல் மனைவியைச் செய்யச் சொல்றேன். நல்ல குறிப்பு

மாதேவி said...

நல்ல குறிப்பு. தேங்காய் அரைத்து செய்ததில்லை கட்டித் தேங்காய்பால் விடுவோம்.

Bhanumathy V said...

வாழைக்காய் புளி குத்திய கறி என்றால் தனியா, மி.வற்றல், தேங்காய், க.பருப்பு வருது அரைத்து செய்வதுதான் வழக்கம் இல்லையா? இந்த முறை வேறு மாதிரி இருக்கிறது. சோம்பு, பூண்டு தவிர்த்து முயற்சிக்கலாம் என்று தோன்றுகிறது.

முற்றும் அறிந்த அதிரா said...

ஆவ்வ்வ் ஒருமாதிரி வல்லிம்மா வீட்டுக்குள் நுழைந்து விட்டேன்...

இங்கும் சமையல் குறிப்பு... மொந்தன் வாழைக்காயில் எது செய்தாலும் எனக்கும் பிடிக்கும் ஆனா ஒன்று இதில் வாய்வு அதிகம் என்பதால், ஆசைக்கு சாப்பிட்டாலும் சில சமயம் வயிறு ஊதி.. மூச்செடுக்க கஸ்டமாக இருக்கும்.

வித்தியாசமான ரெசிப்பி, நன்றாகத்தான் இருக்கும்... மொந்தன் கிடைத்தால் முயற்சிக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
மகள் வீட்டிலும் பூண்டு,வெங்காயம் கிடையாது.
இங்கே ஞாயிறு கொஞ்சம் சேர்ப்பார்கள்.
வேண்டாததை எடித்து விருப்பமானதைச் சேர்க்கலாம்.
என் தோழி காலங்கார்த்தால வெங்காயம் பூண்டில்தான்
கைவைப்பாள். அவர்களது வீட்டு வழக்கம்.
நன்றி மா.

மனோ சாமிநாதன் said...

வித்தியாசமான, சுவை மிக்கதொரு குறிப்பு தந்தமைக்கு நன்றி ! 4 வாழைக்காய்களுக்கு சாமான்கள் அளவுகள் அதிகமாக இருப்பதால் குறைந்த அளவு எடுத்துக்கொண்டு செய்து பார்க்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானுமா.
நாம் அப்படித்தான் செய்வோம்.
இங்குள்ளவர்களுக்குப் பிடித்தமான முறையில் செய்திருந்தார்கள்.

வாழைக்காய்க்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாததாகத் தோன்றியது.
ஆனால் குழந்தைகள் ருசித்து சாப்பிட்டார்கள்.
அதனால் எழுதினேன். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அதிரா இனிய காலை வணக்கம். ஆமாம் வாழைக்காய் , சேப்பங்கிழங்கு இதெல்லாம் எனக்குக் கொஞ்சம் பயம்தான்.
இஞ்சிபூண்டு நிறைய சேர்த்துக் கொண்டால்
வாயு இல்லாமல் தப்பித்துக் கொள்ளலாம்னு தோழியின் கணிப்பு.
மசாலா புதிதாக இருக்கவே எழுதினேன்.
என் பெண் வாழைக்காயே தொட மாட்டாள் அவ்வளவு பயம்.
உடல் வாகு அப்படி இருந்தால் தவிர்த்து விடுங்கள்.
கத்திரிக்காயோடு செய்தால் ஆச்சு.
மிக நன்றி மா. எங்க வீட்டுக்கு வந்ததுக்கு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,
தேங்காய்ப் பாலில் வேகவிட்டுக் கூட செய்யலாம் என்று சொன்னார்.
மறந்து விட்டது எழுத.
அது இன்னும் சுவையாக இருக்கும். நன்றி மா.