Blog Archive

Thursday, October 03, 2019

நவராத்திரி நல் நாட்கள்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் 
நவராத்திரி நல்  நாட்கள் 
+++++++++++++++++++++++++++++++

சின்ன கொலு, பெரிய கொலு, தெய்வங்கள் கொலு,
நாகரிக கொலு,
தீம் கொலு,
வீடு முழுக்க கொலு.

கடித அழைப்பு,   ஈவை ட் அழைப்பு, 
நாம்  கடைகளில் போகும்போது  சட்டென நினைவு வந்தவர்களாக 
அழைக்கும்  அழகு.

இந்தியா செல்லும்போதே கொலு ரிட்டன்    என்று சொல்லப் படும் பரிசு  பொருட்கள் வாங்கி  வந்து விடுகிறார்கள்.

ஒன்பது நாட்களில் நாலு நாட்களாவது   வீட்டில் சமைக்க வேண்டாம் என்று சொல்லும்படி 

சாப்பாடு.  ஒரு விருந்துக்கு 25  நபர்களாவது கலந்து கொண்டு 
 விவரங்கள் பரிமாறிக்கொண்டு 

படங்கள் எடுத்து,அடுத்த நாளே முக நூலிலே யோ 
வாட்சாப்பிலோ வந்து  குவியும்படி 
இந்த ஊர்மக்கள் கொண்டாடும் விதமே 
அலாதி தான்.

நம் ஊரில்  எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். நவராத்திரி  நாயகிகள்  வந்திருக்கும் போது வாசலை   மூடக் கூடாது 
என்பது பாட்டியின் கட்டளை. 

உறவுகளும்  அதிகம் என்பதால், அதிக தேங்காய்கள், வெற்றிலை,
மஞ்சள், பாக்கு, பழம் ,பூ என்று வீடே மணக்கும்.

மாமியாருக்கு ,சரஸ்வதி பூஜை அன்று   ஒன்பது  பெண்களுக்கு 
கட்டாயம், ரவிக்கைத்துணி வைத்துக் கொடுக்க வேண்டும்.
அதுவும் அவர்கள் தைத்துப் போட்டுக் கொள்ளும்படி 
கொடுக்க வேண்டும்.

என் சின்ன மாமியார்  வீட்டில் அதுவே புடவையாகிவிடும்.
எனக்கு ஒன்று கட்டாயம் உண்டு.

ரங்காச்சாரி கடையும் ,நல்லி யுமாக வந்து குமியும்.

வீட்டில் லட்சுமி பூஜை தினமும் உண்டு.
அதற்காகவே ஒரு சுண்டலும்,  ஒரு இனிப்புமாகத் தினம் தயாராகும்.

வெள்ளிக்கிழமை  என்றால் அப்பம் , சனிக்கிழமை என்றால் எள்ளுசாதம்,

இவ்வளவு நாட்களையும் தாண்டி விஜயதசமி அன்று நான் எல்லோர் வீட்டிற்கும் போய் வருவேன்.

இத்தனை விதமான நவராத்திரியை அனுபவிக்க வைத்த 
தேவி களுக்கு என் நமஸ்காரங்கள் . கற்பகாம்பாளும்,  அலர்மேல்மங்கையும் பரிபூரணமாக எல்லோரையும் காப்பார்கள்.

நினைத்தாலே இனிக்கும் நாட்கள்.

Image result for NAVARATHTHIRI PICTURES







19 comments:

ஸ்ரீராம். said...

கொலு வைத்திருப்பவர்களுக்கு ஒரு சங்கடம் உண்டு.   அது அவர்களால் மற்றவர் வீட்டு கொலுவுக்கு நேரத்துக்கு செல்ல முடியாது.  காலை நேரங்களில் சென்று வந்துவிட வேண்டியதாயிருக்கும்.

ஸ்ரீராம். said...

தைத்துக்கொள்ளும்படியாக ரவிக்கைத்துணி...    உண்மை.  சிலபேர்கள்தான் அப்படிக் கொடுக்கிறார்கள்.  ஆனாலும் அதையும் ரொட்டேஷனில் விட்டு விடும் பெண்களும்  உண்டு.  வாட்ஸாப் ஃபார்வேர்ட் போல ஒருநாள் கொடுத்தவருக்கே கூட அது திரும்பி வரும்!!

ஸ்ரீராம். said...

உங்களுக்கும் சுண்டல் தின வாழ்த்துகள்மா...

நெல்லைத்தமிழன் said...

நவராத்திரி நல்வாழ்த்துகள்.

வாழ்க்கையின் ஒரு சமயத்தில், நாம் வாழ்ந்த நாட்களை எண்ணி மகிழ்வுறவேண்டி வருகிறது.

Geetha Sambasivam said...

நவராத்திரி வாழ்த்துகள். இங்கேயும் குட்டிக் கொலு வைத்திருக்கிறது. ஆனால் குஞ்சுலு ஒவ்வொரு பொம்மையாகத் தூக்கிக் கொண்டு போய்விடும்! பின்னர் தானே கொண்டு வைக்கும். 2 நாட்களாக உடம்பு சரியில்லை அதுக்கு. ராத்திரி தூங்கவில்லை.ஒரே இருமல். இன்னிக்குத் தான் கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் ஒரே கொட்டம். நவராத்திரி வாழ்த்துகள் அனைவருக்கும்.

கோமதி அரசு said...

நவராத்திரி நினைவுகள் அருமை.
கொலு வைக்க பெட்டிகளை இறக்கி வைக்கும் போது பலத்தை கொடு அம்மா என்றும் இந்த 10, நாளும் நல்லபடியாக போக வேண்டும் என்று வேண்டிக் கொள்வேன்.

KILLERGEE Devakottai said...

சிறு வயதில் கொலு பொம்மையை பார்க்க எல்லோர் வீடுகளுக்கும் சென்று வருவது நினைவில் ஓடியது.

மாதேவி said...

இனிய நாட்கள் மீண்டும் வரட்டும். நவராத்திரி வாழ்த்துகள்.

ஜீவி said...

என் பெண் வீட்டிலும் பிரமாதமான கொலு அலங்காரங்கள்.
நீங்கள் சொல்லியிருக்கிற மாதிரி இதே மாதிரி அழைப்புகள், கெட்டுகெதர்கள், பரிசளிப்புகள், கொலு கொண்டாட்டங்கள் என்று தெய்வீகமாகப் போய்க் கொண்டிருக்கின்றன.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,
இந்தப் பத்து நாட்களும் இனிமையாகக் கடக்க
இறைவனை வேண்டிக் கொள்ளுகிறோம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம். உண்மைதான். அப்பொழுதெல்லாம் மஹலய அமாவாசை முடிந்ததும் பெஞ்சு,
மேஜை எல்லாம் ரெடியான உடன்,ஒரே ஒரு பொம்மை மங்களம் பாடி வாய்த்துவிட்டு,
தொலை பேசி அழைப்புகளைச் சொல்லிவிடுவேன்.
அவரவர் போக வர இருப்பார்கள்.

இதற்காக, தனியாக புடவை மாற்ற எல்லாம் நேரம் இருக்காது. வந்தவர்களுக்குத் தாம்பூலம் கொடுத்தால்,பேசிவிட்டுக் கிளம்பிடுவார்கள். அவரவருக்கு
நூறு வீடு இருக்கும் போவதற்கு.
பிறக், இன்ன நேரத்துக்கா வரேன்னு சொல்ல ஆரம்பித்தார்கள்.
ரங்காச்சாரியில் மொத்தமாக ரவிக்கைத் துணிகளை மூட்டை கட்டிக் கொண்டுவைத்துவிடுவார்கள்.
பம்பரமாகச் சுற்றி வேலை செய்யணும்.
இங்கே நவராத்திரி வீட்டில் கொலு வைக்காததால் மற்ற இடங்களுக்குப் போக முடிகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,

எல்லா நாட்களும் நல்ல நாட்களே அமைவது இந்த நவராத்திரி சமயத்தில்.
அதுவும் எனக்கென்று சகோதர்கள் இல்லாத்தால்
அனைவரைஉம் உபசரிப்பதில் அதிகம் மகிழ்ச்சி கிடைக்கும்.
உங்களுக்கும் குடும்பத்துக்கும் நல் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா, குஞ்சுலு செய்வதுதான் குறும்பு. நன்றாக விளையாடட்டும்.
எங்கள் ஹரி மூன்று வயதாக இருக்கும்போது தானே ஒரு படியில் உட்கார்ந்து கொண்டு விடுவான்.
மழையும் குளிரும் மாறி மாறி வருகிறதால் யார் தொண்டையும் சரி இல்லை. இருமல் வீடு முழுவதும்.நவராத்திரி வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி ,இதே தான் நானும் சொல்வேன்.
ஒவ்வொரு பொம்மையையும் ஆதரவாக்ப் பிரிக்கும் போதே,
நம்மை வளப்படுத்த வந்த தெய்வங்கள் என்று ஆனந்தம் பெருகும்.
உங்கள் கொலுவும் உடல் பலம் சேர்க்கட்டும்.
வலி இல்லாமல் இருக்கட்டும்.அன்பு வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

தேவகோட்டையிலும் ஒரு வீட்டுக்கு கொலுவிற்கு வந்திருக்கிறோம். அது ஒரு
47 வருடங்களுக்கு முன்னால்.
பெரிய கொலுவாகப் பார்த்த நினைவு.
நல்ல நினைவுகள் நல்லவை மா.வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் ஜீவி சார்.
இந்த மாதிரி மகிழ்ச்சியைப் பார்க்கும் போது
மனம் பரவசப்படுகிறது.
ஒவ்வொரு வீட்டுக் குழந்தைகளுக்கும் பாட்டு,
வாத்தியங்கள் வாசிப்பது என்று
பல திறமைகள். பெண் வீட்டிலும்
இது போல நடப்பது இங்கே ஒரு இந்தியா வந்துவிட்டது போல இருக்கிறது என்றே
தோன்றுகிறது. உங்களுக்கும் ,மகள் குடும்பத்துக்கும் வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

பாடல் கேட்டு மகிழ்ந்தேன். பிடித்த பாடல்.
ஆனந்த பைரவி ஆதரிக்க வேண்டும்.

வெங்கட் நாகராஜ் said...

//நம் ஊரில் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். நவராத்திரி நாயகிகள் வந்திருக்கும் போது வாசலை மூடக் கூடாது
என்பது பாட்டியின் கட்டளை.//

இப்போது நம் ஊரிலும் மாறிவிட்டது வல்லிம்மா... நேரம் சொல்லி அந்த நாளில் அந்த நேரத்தில் வரவேண்டும் என்று சொல்கிறார்கள்.

பலர் அழைப்பதே இல்லை. ஏதோ வைக்க வேண்டுமே என வைத்து விடுகிறார்கள்.

நானும் இந்த வருடம் தில்லி நண்பர் வீட்டு கொலுவுக்குச் சென்று படங்கள் எடுத்து வந்தேன். வரும் ஞாயிறில் பகிர்ந்து கொள்வேன்.

அழகான அனுபவங்கள் தான் கொலு! தொடர்ந்து நடக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், இங்கு. நாள் மட்டும் குறித்தும் கொண்டு. எப்பொழுது வேண்டுமானாலும் சொல்லி விட்டுப் போகலாம். நான் இருந்த போதே.
எல்லாம் மாறிவிட்டது மா. நலமாக இருங்கள்.