Blog Archive

Saturday, June 15, 2019

தண்ணீர் தண்ணீர்

வல்லிசிம்ஹன்

 கோவையில் இருக்கும்போது, அது இருக்கும் 46 வருடங்களுக்கு முன்னால்,
தடாகம் ரோடு ,டிவிஎஸ் நகரில் பெரியவீடுகள். எல்லோர் வீட்டிலும் கிணறு. எட்டிப் பார்த்தால் தலை சுற்றும் ஆழத்தில் தண்ணீர் இருக்கும்.
சில வீடுகளில் ஒரு கிணற்றுக்கு இரண்டு மோட்டார்கள் வைத்திருப்பார்கள். தினந்தோறும் கிணற்றை ஆழப் படுத்துகிறேன். இன்னும் தண்ணீர் வரும் என்று சொல்லி
கிணறு தோண்டும் பணியில் இருப்பவர்கள்
வருவார்கள்.

ஒரு அடி அந்தக் கற்பாறைகளில் உளிகள் மோத 5 ரூபாய்.
காலையில் அந்த உழைப்பாளி உள்ளே இறங்க மனைவி குழந்தைகளோடு
வெளியே இருந்து பேச்சுக் கொடுப்பாள். நானும் குழந்தைகளும்
சமையலறைக்கு வெளியில் இருக்கும் வராந்தாவில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்போம்.
தண்ணீர், வெற்றிலை,புகையிலை ,பீடி என்று கீழெ அனுப்பிக் கொண்டிருப்பாள்
அவள்.
ஒரு மணி அளவில் அவன் வெளியே வருவான்.
நானும் குழந்தைகளும் சாப்பிட்டு முடித்திருப்போம்.
அவர்களுக்கும் ஒரு பாத்திரத்தில் நிறைய சாதம் போட்டுக்
குழம்பையும் விட்டு அவளிடம் கொடுப்பேன்.
ஒரு பச்சை மிளகாய், வெங்காயம் குடு அம்மிணி
என்பாள்.
சப்புனு இருக்கு எப்படிச் சாப்பிடறீங்க என்று
வினவியபடி பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கும் கல்வாழை  இலைகளைப்
பறித்து சின்னக் குழந்தைகளுக்கு
முதலில் கொடுத்து விட்டுக் கணவனுக்கும் கொடுப்பாள்.
தானும் சாப்பிடுவாள்.
கொஞ்சம் டீத்தண்ணி குடு அம்மிணி என்றும் கேட்டுக் கொள்ளுவாள்.
இந்த சிரம பரிகாரம் முடிந்து
அவன் மீண்டும் கிணற்றுக்குள் இறங்குவான்.
சிலசமயம் அவனுடைய மச்சினர் என்று சொல்லிக் கொண்டு
இன்னொருவனும் இறங்குவான்.
இவர்கள் பேசிக்கொள்வது மேலே கேட்கும்.
சாயந்திரம் 4 மணிக்கு மேலே வந்து விடுவார்கள்.
பத்தடி தோண்டிவிட்டதாகவும்
அடுத்த நாட்கள் காலையில் இரண்டு அடிகளுக்கு மேலே
தண்ணீர் வந்துவிடும். இன்னும் ஆறு மாதங்கள் கவலை இல்லை
என்பான்.

நானும் தலை ஆட்டிவிட்டு, அவர்கள் கையில் நூறு ரூபாயும் அந்தத்
தேவானைக்குப் புடவை,
குழந்தைகளுக்குச் சட்டைகள் என்று கொடுத்து விட்டுக் கிணற்றை எட்டிப் பார்ப்பேன். கலங்கலான காவி வண்ணத்தில் அறுபது
 அடிகளுக்குக் கீழே தண்ணீர் தெரியும்.
சரி இன்று தண்ணீர் வண்டியை வரச் சொல்லி விடலாம்.
நாளைக்கு மோட்டார் போட முடியும்.
மேல் தொட்டியில் தண்ணீர் நிரம்பும்.
எல்லோரும் நன்றாகக் குளிக்கலாம் என்ற கனவுகளுடன்
படுக்கைக்குச் செல்வேன்.

அடுத்த நாள் எழுந்திருக்கும் போதே உளிச் சத்தம் கேட்கும்.
என்ன வென்று ஜன்னல் வழியே பார்த்தால்
அடுத்த வீட்டில் தேவானை கிணற்றுப் பக்கம் நின்று கொண்டிருப்பாள்.
ஆஹா, தண்ணீர் அங்கே போய்விடுமே என்ற பரபரப்பில் மோட்டார் போடுவேன்.
அது அரை மணி நேரம் ஓடி பாதித்தொட்டி நிரம்பும்.
பின்னால் சிங்கத்தின் குரல் கேட்கும்.
நூறு ரூபாய்க்கு ஒரு நாள் தண்ணீர் வாங்கிட்டியா என்று சிரிப்பார்.
அடுத்தவாரமும் தேவானைக்கு நூறு எடுத்து வை என்று
சொல்லியபடி மோட்டார் சைக்கிளை உதைத்துக் கிளம்பி விடுவார்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் 

இப்போது எல்லோரும் போர்வெல் போட்டிருப்பார்கள்.

11 comments:

ஸ்ரீராம். said...

எப்படியோ அவர்களுக்கும் பிழைப்பு ஒடிக்கொண்டிருந்தது போலும். இப்போது சென்னையில் முன்னூறு அடி அறுநூறு அடியென்று போர் தோண்டிக்கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் அனுமதிக்கும் அளவு நூறு அடி என்று நினைக்கிறேன். சென்னை ஹோட்டல்களில் மதிய உணவை நிறுத்தி விட்டார்களாம்.

கோமதி அரசு said...

46 வருடங்களுக்கு முன்பே இந்த ஆழபடுத்தும் திட்டம் வந்து விட்டதா? அப்போது மனிதர்களை வைத்து இப்போது இயந்திரங்களை வைத்து.

துரை செல்வராஜூ said...

தண்ணீர்ப் பஞ்சம் தீரட்டும்....
நிலத்தடியில் நீரைச் சேமிப்பதற்கு
அனைவருக்கும் அறிவு பிறக்கட்டும்...

துரை செல்வராஜூ said...

தண்ணீருக்காக அரிவாள் வெட்டும் கலவரமும் சென்னையில் தொடங்கியாயிற்று...

ஆனாலும் மக்கள் திருந்துவார்களா?..

ஏதோ ஒரு வாய்ப்பாக நாலு நாட்களுக்கு சென்னையில் அடித்துக் கொண்டு மழை பெய்யட்டும்...

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு என்று ஆங்காங்கே கூச்சல் கிளம்பி விடும் பாருங்கள்...

வெள்ளம் புகுந்து விட்டது என அதற்கும் நிவாரணம் கேட்பார்கள்....

KILLERGEE Devakottai said...

இன்று எல்லா இடங்களிலும் கிணறுகளை மூடி விட்டார்கள் அம்மா.

கிணற்றில் நீர் இறைப்பதுகூட இருபாலருக்கும் ஒருவகை உடல் பயிற்சியே...

இன்று மருத்துவமனையில் கூட்டம் கூடுவதற்கு இதுகூட ஒரு காரணமே...

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், இந்தப் பதிவே,

எங்கள் கிணற்றில் நீர் அடி பாதாளத்துக்குப் போகக் காரணமாயிருந்த
பக்கத்துவீட்டுக்காரரின் போர்வெல் தான். 200 அடிக்குப் புது போர்வெல் போட்டிருக்கிறாராம்.
அதுவும் இந்தக் கிணற்றை ஒட்டிக் காம்பவுண்டுக்கு அந்தப் பக்கம்.
அவர்கள் இருப்பதோ இருவர்.
சரி போகட்டும். யாராவது நன்றாக இருக்க வேண்டும்.
மதிய உணவு ஹோட்டல்களில் கிடைக்காதா.
கடவுளே. சென்னை நரகமாகி வருகிறதே ஆண்டவா காப்பாற்று.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா. அந்தக் காலத்தில் கிணறுகள் இருந்தன. இப்போது கோவை
நகரத்தில் தண்ணீர்ப் பஞ்சமே இல்லை என்று படித்தேன்.
என்னைப் பொறுத்த வரை கோவை நாட்கள் மிக இனியவை.

மிக மிக மரியாதையான மனிதர்கள்.
உங்களுக்கும் பழகிய ஊர்தானே.என்றும் வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை செல்வராஜு,
வரிசையில் நின்று தண்ணீர் பிடித்துச் செல்வழிக்கும் மக்களிடம் இருக்கும் சிக்கனம்
அடுக்கு மாளிகைகளில் வசிப்பவர்களிடம் இல்லை.

செய்யத் தொடங்கிய திட்டங்களைச் செயல் படுத்த நேரமில்லை.
பணம் நிறைகிறது.தண்ணீர் குறைகிறது.
இனி தீர்வு இறைவனும் இயற்கையும் செய்ய வேண்டும்.
பூமி அன்னை மகிழ மழை பொழியட்டும்.நன்றி அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி. நானும் எட்டு வயதிலிருந்து தண்ணீர் இறைத்துப் பழகியவள் தான்.
எங்கள் வீட்டுக் கிணற்றிலும் இன்னும் ராட்டினமும் கயிறும் இருக்கின்றன.

இது போல உற்சாகப் பயிற்சி இப்போது அருகித்தான் விட்டது.
நம் தமிழ் நாடும் காக்கப் படும் என்று நம்புவோம் அப்பா.

Thulasidharan V Thillaiakathu said...

தண்ணீர்க் கஷ்டம் தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் என்று தெரிகிறது. இப்போதைக்கு எங்கள் ஊரில் இல்லை ஆனால் வருங்காலத்தில் வரும் வாய்ப்பு உண்டு என்று கேரளத்திலும் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள் என்று சொல்லத் தொடங்கி 4,5 வருடங்களாக.

கோயம்புத்தூரிலும் பல வருடங்கள் முன்பே தண்ணீர்க் கஷ்டம் உண்டே.

மக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்

உங்கள் அனுபவங்களையும் அறிய முடிகிறது.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

தண்ணீர் தண்ணீர் என்றதும் பாலசந்தர் எடுத்த படமும் நினைவுக்கு வந்தது..

அம்மா நாங்களும் கோயம்புத்தூரில் பிஎஸ்ஜி டெக் க்வார்ட்டர்ஸில் இருந்தோம் மூன்று வருடங்கள். அங்கும் தண்ணீர்க் கஷ்டம் இருந்தது. கீழே சென்று 5 அல்லது 6 குடம் தண்ணீர் வைப்பார்கள் அதை எடுத்துக் கொண்டு வர வேண்டும். கேம்பஸ் நன்றாக இருக்கும். தொட்டியில் க்ரவுன்ட் வாட்டர் அது சப்பைத் தண்ணீய்ர் என்போம் அது வரும் குளிப்பதற்குக் குடத்து நீரைத்தான் பயன்படுத்துவோம் குறிப்பாகத் தலை அலச. அதுவரை எங்கள் கிராமத்திலும், அப்புறம் திருவனந்தபுரத்தில் இருந்து தினமும் இரு வேளை குளித்துப் பழகியிருந்தாலும் தண்ணீரை மிச்சப்படுத்தும் வழக்கம் இருந்ததால் எனக்கு கோயம்புத்தூர் வாழ்க்கை கடினமாகத் தெரியவில்லை.

சென்னையில் மக்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். விழிப்புணர்வு அரசிடமும் இல்லை மக்களிடமும் இல்லை. இருக்கும் போது நிறைய செலவழித்துவிடுகிறார்கள்...நீர் மேலாண்மை மிக மிக அவசியம்.

உங்கள் அனுபவம் அப்போவே இப்படியா என்று கேட்க வைத்தது.

கீதா