Friday, June 19, 2026

அப்பா......தாத்தா,மகன்கள்.....

வல்லிசிம்ஹன்


அப்பா காரைக்குடி தபால் அலுவலகத்துக்கு முன் 
எடுத்துக் கொண்டபடம். அப்பாவைப் படம் எடுத்தது என் தம்பி ரங்கன்.

தந்தையர் தினம் தாத்தா பாட்டி தினம் என்று இங்கே
மே ஜூன் மாதங்களில் முழக்கம். நாங்கள் வசிக்கும் 
ஊரில் ஒரு  சீனியர் லிவிங் இருக்கிறது. அதாவது 
நாம் பணம் கட்டி சேர்ந்து கொள்வது.

அங்கே இருப்பவர்கள் அனைவரும் 80, 90 வயதுகளில் ஆரோக்கியமாக உற்சாகமாக இருப்பவர்கள்.

அந்த இடத்தை வண்டியில் கடக்கும் போதெல்லாம் அப்பா அம்மா
நினைவு வருவது அதிகமாகும். 
 எத்தனையோ பாடு பட்டுத்தான் அப்பாவும் அம்மாவும் எங்களை
வளர்த்தார்கள். 
தபால் அலுவலக   குமாஸ்தாவாக ஆரம்பித்து ஒரு  தலைமைப்
பொறுப்பை அடைய அப்பாவுக்கு முப்பது வருடங்கள்
ஆயிற்று.

அப்பழுக்கில்லாத பெயரோடு வெளியில் வந்த
அப்பாவைப் பார்க்க வந்தவர்கள் ஒரு நூறு பேர்
இருப்பார்கள். அவர்கள் தந்த பெரிய தஞ்சாவூர் 
Bronze sculpted plate. மற்றும் வெள்ளிப் பேலா, தங்க நாணயம்
எல்லாம் சென்னையில்  இருக்கும் என்று நம்புகிறேன்.

தன் பேத்தி திருமணத்துக்கு அந்த வெள்ளிப் பேலாவைக் கொண்டுவந்து வந்து கொடுத்தார்.வாழ்க வளமுடன் என்று
அதில் எழுதி இருக்கும்.

இதெல்லாவற்றையும் விட, 
அந்த தி நகர் தேனாம்பேட்டை பஸ்ஸில் என்னை 
ஏற்றிவிட அவர் என்னுடன் நடப்பதும், பஸ்ஸுக்கு வச்சுக்கோன்னு
என் கையில் ஐம்பது ரூபாயைக் கொடுப்பதும்
 பாண்டி பசாரை நான் பஸ்ஸில்  கடக்கும் போது 
அப்போது அங்கிருந்த பிள்ளையார் கோவில்
வாசலில் அவர் ஒரு கல்லில் மேல்
உட்கார்ந்து இருப்பதும் என்றும் நினைவில்.

தனிமை அவரை வாட்டி இருக்க வேண்டும். 

பெற்ற பிள்ளைகள் வேறு வேறு வேலையாக
வெளியே அலைய, இவர் பழைய  மிகப் பழைய படங்களைப்
புதுப்பிப்பதில்    , பகவத்ஹ் கீதைக்கு ஆங்கில
உரை எழுதுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

'Every action is for posterity'' என்பதில் தீவிர நம்பிக்கை.

இதோ நானும் எழுதி வைக்கிறேன்.
அப்பாவின் நற்குணங்கள் என் மேல் அவ்வளவாகப்
படியவில்லை. அந்தப் பெருந்தன்மை, கொடை, சகிப்புத்
தன்மை ,சேமிப்பு எல்லாம் என்னிடம்  வந்து சேரவில்லை.
குடும்பத்தில் என்னைத் தனியாளாக விட்ட
கோபம் இருக்கிறது.

அவரைப் போலவே என் சந்ததிகளுக்கு நல்ல  தாயாகப்,பாட்டியாக
இருக்க அவரே அருள வேண்டும். நன்றி அப்பா.









8 comments:

ஸ்ரீராம். said...

எனக்கு கூட என் முதல் பதவி உயர்வைப் பெறுவதற்கு முப்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிருந்தது.  ஏகப்பட்ட சீனியர்கள்.  அவர்கள் இடத்தை காலி செய்தால்தான் எங்களுக்கு இடம்!

ஸ்ரீராம். said...

உங்களை பஸ் ஏற்றிவிட்டு அவர் அங்கு கல்லில் அமர்ந்து மறுபடி உங்களுக்கு கையசைக்க காத்திருப்பார் என்கிற காட்சி மனதில் தங்கி விடுகிறது. நானும் என் தந்தையை நினைத்துக் கொள்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம், நன்றி மா. இப்படி எழுதுவது அப்பாவுடன் பேசுவது போல நான் நினைத்துக் கொள்கிறேன். 30 வருட உழைப்பு. உங்கள் பொறுமையைப் பாராட்டுகிறேன். என் அப்பாவுக்கு அல்சர் வந்ததே இந்தப் பொறுமையினால் தான். நீங்கள் எப்பவும் நலமுடன் இருக்க முன்னேற ஆசிகள்.

வல்லிசிம்ஹன் said...

அப்பாவுக்குத் தன் சந்ததி சிறக்க வேண்டும், பாதுகாக்கப் பட வேண்டும் என்பதில் அவ்வளவு சிரத்தை இருந்தது. மகளின் திருமணத்தன்று அவரது சுபஸ்வீகாரம். தன் வாழ்வு முடிவைக் கூட யாருக்கும் தொந்தரவு இல்லாமல் கவனித்துக் கொண்டார். அவர் வாழ நினைத்தார். இறைவன் விடவில்லை. மிக மிக நன்றி மா. சென்னை செல்ல எனக்கு மனத்தயக்கம் கொடுப்பது பாண்டி பஜார்.

வெங்கட் நாகராஜ் said...

அப்பாவின் நினைவுகள்... மறக்கக் கூடியதா என்ன?

உங்களுடைய ஒவ்வொரு செயலையும் அவர் பார்த்துக் கொண்டு தான் இருப்பார். உங்களுடன் இருப்பதாகவே நினைத்துக் கொள்ளுங்கள்! பல சமயங்களில் நானும் என் அப்பா, அம்மாவினை நினைத்துக் கொண்டே தான் இருக்கிறேன் - ஏதோ ஒரு விஷயத்தில் அவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.

பஸ் ஏற்றி விட்டு காத்திருக்கும் அப்பா... ஆஹா... அந்த நிகழ்வு மறக்க முடியாதது தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், என்றும் நலமுடன் இருங்கள். நம் பெற்றோர் நமக்காகச் செய்த தியாகங்கள் மறக்கக் கூடியதாக இல்லை.
அதுவும் என் விஷயத்தில் அவர்கள் அடைந்த சங்கடங்கள் அதிகம். இப்போது வருத்தமாக இருக்கிறது. அவர்கள் ஆனந்தமாகத் தான் எனக்கு உதவினார்கள் மாப்பிள்ளையிடம் அத்தனை அன்பு. இப்போது எப்போதும் நன்றியுடன் இருக்கிறேன். மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

''பல சமயங்களில் நானும் என் அப்பா, அம்மாவினை நினைத்துக் கொண்டே தான் இருக்கிறேன் - ஏதோ ஒரு விஷயத்தில் அவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.'' மிக மிக உண்மை வெங்கட். அதுவும் என் மகளுக்குத் தாத்தா என்றால் உருகி விடுவாள். ஏதாவது ஒரு நிகழ்வு வந்து நினைவில் நிற்கும். பேசித் தீர்த்துக் கொள்வோம்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை அப்பாவின் நினைவுகளை மறக்க முடியுமா.? அப்பா, அம்மாவின் நினைவுகள் என்றும் பொக்கிஷமானவை. உங்கள் அப்பாவின் நினைவுகளை உங்கள் எழுத்தில் படிக்கும் போதே மனதுக்கு உற்சாகமாக உள்ளது. நானும் என் விழி மூடி அந்த காட்சிகளை மனத்துள் ரசித்துப் பார்க்கிறேன்.

நாம் பிற்பாடு நம் வாழ்வில் நமக்கென உண்டான சுற்றங்களுக்கு மத்தியில் வாழ்ந்தாலும், நம் இளவயது காலத்தில் நம் அன்னை, தந்தையோடு வாழ்ந்த அனுபவங்கள் சுகமானவைதான். அழகாக தந்தையர் தினத்தை, உங்கள் அப்பாவின் நினைவுகளோடு சிறப்பித்து இருக்கிறீர்கள். படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

தம்பிகள் பாசம்

வல்லிசிம்ஹன்  எல்லோரும் வளமாகவாழ வேண்டும்.  படிக்காத மேதை. ரங்கன்.  என் தம்பி ரங்கன்படித்த பண்பான அன்பானவன், இந்தப் பாட்டில் வரும் அத்தனை வர...