Friday, June 19, 2026

அப்பா......தாத்தா,மகன்கள்.....

வல்லிசிம்ஹன்


அப்பா காரைக்குடி தபால் அலுவலகத்துக்கு முன் 
எடுத்துக் கொண்டபடம். அப்பாவைப் படம் எடுத்தது என் தம்பி ரங்கன்.

தந்தையர் தினம் தாத்தா பாட்டி தினம் என்று இங்கே
மே ஜூன் மாதங்களில் முழக்கம். நாங்கள் வசிக்கும் 
ஊரில் ஒரு  சீனியர் லிவிங் இருக்கிறது. அதாவது 
நாம் பணம் கட்டி சேர்ந்து கொள்வது.

அங்கே இருப்பவர்கள் அனைவரும் 80, 90 வயதுகளில் ஆரோக்கியமாக உற்சாகமாக இருப்பவர்கள்.

அந்த இடத்தை வண்டியில் கடக்கும் போதெல்லாம் அப்பா அம்மா
நினைவு வருவது அதிகமாகும். 
 எத்தனையோ பாடு பட்டுத்தான் அப்பாவும் அம்மாவும் எங்களை
வளர்த்தார்கள். 
தபால் அலுவலக   குமாஸ்தாவாக ஆரம்பித்து ஒரு  தலைமைப்
பொறுப்பை அடைய அப்பாவுக்கு முப்பது வருடங்கள்
ஆயிற்று.

அப்பழுக்கில்லாத பெயரோடு வெளியில் வந்த
அப்பாவைப் பார்க்க வந்தவர்கள் ஒரு நூறு பேர்
இருப்பார்கள். அவர்கள் தந்த பெரிய தஞ்சாவூர் 
Bronze sculpted plate. மற்றும் வெள்ளிப் பேலா, தங்க நாணயம்
எல்லாம் சென்னையில்  இருக்கும் என்று நம்புகிறேன்.

தன் பேத்தி திருமணத்துக்கு அந்த வெள்ளிப் பேலாவைக் கொண்டுவந்து வந்து கொடுத்தார்.வாழ்க வளமுடன் என்று
அதில் எழுதி இருக்கும்.

இதெல்லாவற்றையும் விட, 
அந்த தி நகர் தேனாம்பேட்டை பஸ்ஸில் என்னை 
ஏற்றிவிட அவர் என்னுடன் நடப்பதும், பஸ்ஸுக்கு வச்சுக்கோன்னு
என் கையில் ஐம்பது ரூபாயைக் கொடுப்பதும்
 பாண்டி பசாரை நான் பஸ்ஸில்  கடக்கும் போது 
அப்போது அங்கிருந்த பிள்ளையார் கோவில்
வாசலில் அவர் ஒரு கல்லில் மேல்
உட்கார்ந்து இருப்பதும் என்றும் நினைவில்.

தனிமை அவரை வாட்டி இருக்க வேண்டும். 

பெற்ற பிள்ளைகள் வேறு வேறு வேலையாக
வெளியே அலைய, இவர் பழைய  மிகப் பழைய படங்களைப்
புதுப்பிப்பதில்    , பகவத்ஹ் கீதைக்கு ஆங்கில
உரை எழுதுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

'Every action is for posterity'' என்பதில் தீவிர நம்பிக்கை.

இதோ நானும் எழுதி வைக்கிறேன்.
அப்பாவின் நற்குணங்கள் என் மேல் அவ்வளவாகப்
படியவில்லை. அந்தப் பெருந்தன்மை, கொடை, சகிப்புத்
தன்மை ,சேமிப்பு எல்லாம் என்னிடம்  வந்து சேரவில்லை.
குடும்பத்தில் என்னைத் தனியாளாக விட்ட
கோபம் இருக்கிறது.

அவரைப் போலவே என் சந்ததிகளுக்கு நல்ல  தாயாகப்,பாட்டியாக
இருக்க அவரே அருள வேண்டும். நன்றி அப்பா.









No comments:

அப்பா......தாத்தா,மகன்கள்.....

வல்லிசிம்ஹன் அப்பா காரைக்குடி தபால் அலுவலகத்துக்கு முன்  எடுத்துக் கொண்டபடம். அப்பாவைப் படம் எடுத்தது என் தம்பி ரங்கன். தந்தையர் தினம் தாத்த...