Saturday, May 02, 2026

திருக்குறுங்குடி நாட்கள். பாகம் 6

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழவேண்டும்.




இந்தத்  தாத்தா கூட அருமையாக இருக்கிறார்.
மறு நாள் காலையில் பொங்கலும்  தேங்காய்த்  தொகையல், தயிர்
சாதம் என்று தயார் செய்துகொண்டு  மலை மேல் நம்பியைத்
தரிசித்து வருவதாகத் திட்டம்.

தாத்தாவுக்கும் பாட்டிக்கும் மலை ஏறுவதில்  தயக்கம் இருந்தது.
சித்தப்பாவும் அப்பாவும் உடனே ஏற்றுக் கொண்டனர்.  அப்போது

வழிப்பாதை எல்லாம் கல்லும் முள்ளுமாக இருக்கும் 
என்று நினைவு.கிட்டத்தட்ட 5000 அடிகள் இருக்கலாம் என்றார்கள்.


''திருமலைநம்பி இங்கு ” சங்கு சக்ர கதாபானே துவாரஹா நிலயாச்சுத” என்ற ஸ்லோகத்திற்க்கிணங்க பெருமாள் சங்கு, சக்ர, கதையுடன், ஸ்ரீதேவி பூதேவி ஸமேத காட்சியளிக்கிறார். மேலும் சித்தர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், ரிஷிகள் அனைவருக்கும் அருள்பாலிக்கும் விதமாக நின்ற கோலத்தில் ஸேவை சாதிக்கிறார். இங்கு வீற்றிருக்கும் உற்சவர் வருடத்திற்கு இரண்டு தடவை மட்டுமே கீழே இருக்கும் கோவிலுக்கு எழுந்தருள்வார். ஒன்று தை மாதம் நடக்கும் தெப்போத்ஸவத்திற்கு மற்றொன்று பங்குனி மாதம் நடக்கும் ப்ரம்மோத்ஸவத்திற்கு எழுந்தருளி தன்னுடைய அண்ணன்மார்கள் நால்வருடன் பக்தர்களுக்கு ஸேவை ஸாதிக்கிறார்."

செய்தி தந்தது  Thirukkurugudi.com website .
மனம் நிறை நன்றி அவருக்கு.  ''திருக்குறுங்குடி பெரிய கோவிலில் உள்ள மூன்று நம்பிகள், குறுங்குடி வல்லி நாச்சியார் மற்றும் ஆழ்வார் ஆச்சாரியார்கள், பக்கம் நின்றார் என்றழைக்கப்படும் சிவன் சந்நிதி, காலபைரவர் சந்நிதி ஆகியோரை தரிசித்து விட்டு அங்கிருந்து நாம் 1 கி.மீ தொலைவில் உள்ள திருப்பாற்கடல் நம்பி என்று அழைக்கப்படும் நான்காவது நம்பி “க்ஷீரம்” நதிக்கரையில் அமைந்துள்ள திருப்பாற்கடல் நம்பியை தரிசித்து விட்டு அங்கிருந்து மலைநம்பி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள “உச்சிமாகாளி அம்மன் கோவிலை அடையலாம். அங்கு தான் பங்குனி மாதம் நடைபெறும் ப்ரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளில் ஐந்து கருட வாஹனத்தில் ஐந்து நம்பிகளும் ஒன்றாக அந்த இடத்தில் தான் மலை மேல் வாழும் முனிவர்கள் ,சித்தர்கள், அனைவருக்கும் காட்சி கொடுப்பதாக ஐதீகம்."

2019 ஆம் ஆண்டு  எங்கள் மகன்களோடு போகும் போது
மலை மேல் ஏற முடியவில்லை.
:(   

எங்களுக்கு கடவுள் பற்றிய சகல விஷயங்களை சொல்லிக் கொடுத்த ஒரு ஆசிரியர் அடிக்கடி அறிவுறுத்திய ஒரு செய்தி. கை கால்களில் தெம்பு வலு இருக்கும் போதே எல்லா ஆலயங்களுக்கும் சென்று வாருங்கள்  என்பதுதான்.


ஐந்து கருட  சேவை.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அழகிய நம்பி ராயரும் தேவிகளும்.
நாங்கள் கீழே இறங்கி வருவதற்குள் பாட்டியும்
தாத்தாவும்  இட்லிக்கு  அரைத்துக் கொண்டிருந்தார்கள். சித்தப்பாவுக்குக் காலை உணவு மிக அவசியம். அவர் வேலை அப்படி.

அப்பாவுக்கு வெற்றிலையும் காப்பியும் போதும்.

எங்களுக்குக் காலையில் பழைய சாதமும்  குழம்பும்,.

இப்போது பாட்டியும் அம்மா சித்தி மூவரும் இரவுக்கு
சமைக்க ஆரம்பித்தார்கள். தோட்டத்துக் கீரையும்

காய்ச்சின அப்பளமும் தேங்காய்த் தொகையலும்
பிரமாதமாக இருந்தன.
எல்லாமே பின்னால் இருக்கும் வீட்டின் தோட்டத்தில் இருந்து வந்தவை.


கத்திரி, சுண்டை, வாழை, கொத்தவரங்காய் எல்லாமே வளர்த்திருந்தார்கள்.
தாத்தாவின் குத்தகைக்காரர் வைரக்கண்ணுவும் மலைப் பழங்கள்
நேந்திரங்காய்,  மாங்காய், எலுமிச்சம்பழம்
என்று கொண்டு வந்ததும் பாட்டியின் கண்கள்
மின்னின:) 
''இந்தா நீ ஊறுகாய் போடக் கிளம்பிடாதே!
நாளைக்குக் கன்யாகுமரி  திருச்செந்தூர் எல்லாம்
போகணும் '' என்று மிரட்டினார்:)

நவதிருப்பதியில்  இரண்டு கோயிலாவது காண 
தாத்தாவுக்கு ஆசை. அதுவும்  முதலில் வேலைக்குச் சேர்ந்த
ஶ்ரீவைகுண்டம், நாங்குனேரி சென்ற நினைவு இருக்கிறது.

சித்தப்பா ஆசைக்காகத் திருச்செந்தூர் அலைகளில் நின்ற  
பயம். அன்று பௌர்ணமியோ என்னவோ. கால்கள் தடுமாறி
விழுந்ததும் நினைவில். சற்று  அருகில்  இருந்த அப்பா
என்னைப் பிடித்து நிறுத்தியதும் அழியாத

ஞாபகங்களில் ஒன்று:) 

திருச்செந்தூர்.
தொடரலாம்.


10 comments:

வெங்கட் நாகராஜ் said...

சின்னச் சின்னதாய் நினைவுகளைக் கோர்த்து அழகாக எழுதி இருக்கிறீர்கள்மா... தொடரட்டும் இனிய நினைவுகள். ஊறுகாய் போட கிளம்பிடாதே என்று சொன்னது ஹாஸ்யம்! மாங்காய், எலுமிச்சை என்று பார்த்தாலே ஊறுகாய் போடத் தோன்றும் பலருக்கும்.

நெல்லைத் தமிழன் said...

திருக்குறுங்குடி மலைமேல் நின்ற நம்பி கோயிலுக்கு மூன்று முறைகள் சென்றிருக்கிறேன். ஒரு அமாவாசைக்கு மலைமேல் தர்ப்பணம் பண்ணியிருக்கிறோம். நம்பியாற்றில்தான், மலை மேல் சென்றால் குளிப்போம்.

அந்தக் காலத்தில் மிகச் சாதாரணமான உணவு தந்த மகிழ்ச்சியை தற்போது எந்த உணவும் தருவதில்லையே காரணம் என்ன? உணவின் வழியாக நமக்கு நம் பெரியவர்கள் கொடுத்த அன்பா?

நெல்லைத் தமிழன் said...

நாங்குநேரி என்பதைவிட வானமாமலை என்று எழுதினால் திவ்யதேசம் என்று பளிச்சுனு தெரியும்.

நவதிருப்பதி சென்றீர்களா இல்லையா?

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட் தாத்தாவின் பயம் உண்மையானது. பாட்டி ஊறுகாள் போடாத நாட்கள் மிகக் குறைவு. யார்க்காவது அனுப்பிக் கொண்டே இருப்பார். காய்கறிகளைப் பத்திரப் படுத்துவதில் அத்தனை ஆர்வம். மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளி நீங்கள் கொடுத்து வைத்தவர். அந்த மலை அனுமன் கால்கள் பட்ட மலை அல்லவா.

தாத்தா அங்கே சுந்தரகாண்டமும் படித்தார்.
இப்போது அந்த வீடு இல்லை.

பாட்டி கை முறுக்கு, திரட்டிப்பால் எல்லாம் நினைவில்.
நிறைந்த மனுஷி.
அந்த உணவில் பாசம் நிறைந்ததால் தான் அவை
நம் மனத்தை நிறைத்தன. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீவைகுண்டமும் ,இரட்டைத் திருப்பதியும் சென்றதாக அப்பாவின் டயரியில்
படித்த நினைவு. 2019 இல் பசங்களோடு
சென்றேன்.

வல்லிசிம்ஹன் said...

வானமாமலை ஜீயரை வழிபட்ட நினைவு. எண்ணெய்க் கிணறு எட்டிப் பார்த்தது, மங்கின நினைவுகள். நவ திருப்பதிகளில் ஶ்ரீவைகுண்டம் இரட்டைத்திருப்பதி போனதாக அப்பா டயரியில்
படித்த

ஸ்ரீராம். said...

சக்தி இருக்கும்போதே கோவில்கள் பார்த்து விடு என்பது சரி. இதோ என் மாமியார் திருச்செந்தூர் பார்க்கவேண்டும் போகவேண்டும் என்று பத்து வருடங்களுக்கும் மேலாக சொல்லிக் கொண்டிருந்தார். போகவே இல்லை. அவர் உடல் நிலைக்கு இப்போது நினைத்தாலும் அழைத்துச் செல்ல முடியாது.

பாஸின் சித்தி குடும்பத்தினர் திருக்குறுங்குடிதான். ஏழெட்டு மாதங்களுக்கு முன் கூட அங்கு சென்று வந்திகார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம். மிக நன்றி. பாவம் உங்கள் மாமியார். 40 வருடங்களுக்கு முன் என் பெற்றோர் பத்ரினாத் போகும் போது என்னையும் அழைத்தார்கள் அப்போது மாமியார் பாட்டி எல்லோரும் இருந்ததால் போக முடியவில்லை. இப்பொது விரும்பினாலும் முடியுமோ தெரியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் உங்கள் மனைவியின் உறவினர்கள் பற்றி அறிய ஆவலாக இருக்கிறது. ஆனால் நாங்கள் அங்கிருந்து கிளம்பி பல காலம் ஆகிவிட்டதே:(

மீட்கப் படும் புகைப்படங்கள்

வல்லிசிம்ஹன் 15.5/1996 எல்லோரும் வளமாக வாழ வேண்டும் மகளின் திருமணத்தின் போது எடுத்த படம். அருமையான  தருணங்கள் 30 வருடங்களுக்கு முன். 1965 வா...