Blog Archive

Friday, October 28, 2022

துளியூண்டு பெருங்காயம்....

வல்லிசிம்ஹன்



பெருங்காயம்... கடவுளின் அமிர்தம்! நலம் நல்லது-56 #DailyHealthDose
பாலு சத்யா



விளையாட்டில் ஆகட்டும்... வாழ்க்கையில் ஆகட்டும்... தோற்றுப்போனவர்களை,


விளையாட்டில் ஆகட்டும்... வாழ்க்கையில் ஆகட்டும்... தோற்றுப்போனவர்களை, `காலிப் பெருங்காய டப்பா’ என சிலர் சொல்வதை நாம் கேட்டிருப்போம். பெருங்காயம் அப்படி குறைத்து மதிப்பிடக்கூடியது அல்ல. பன்றிக் காய்ச்சல் முதற்கொண்டு புற்றுநோய் வரை தடுக்கும் ஆற்றல்கொண்டது. 

பெருங்காயத்தின் மணத்தை முகர்ந்து முகம் சுளித்த அமெரிக்கர்கள், ஒரு காலத்தில் அதை, `பிசாசு மலம்’ என்று ஏளனப்படுத்திய வரலாறும் உண்டு. சமீப காலத்தில் நம்மைப் பயமுறுத்திவரும் பன்றிக்காய்ச்சலைப்போல, 1910-ம் ஆண்டு ஸ்பானிஷ் ஃப்ளூ (Spanish Flu) பல்லாயிரம் பேரைக் கொன்று குவித்தது. பெருங்காயம் அந்த வைரஸுக்கு எதிராகச் செயல்படுவதைக் கண்டு, அதை தங்கள் கழுத்தில் தாயத்து மாதிரி அமெரிக்கர்கள் கட்டித் திரிந்தார்கள்; அதற்கு `கடவுளின் அமிர்தம்’ எனப் பெயரிட்டார்கள்; இது வரலாறு. 

பெருங்காயம் தரும் பெரிய பலன்கள்... 

* தைவானில் உள்ள ஆய்வாளர்கள் பெருங்காயம், பன்றிக்காய்ச்சலுக்குப் பயன் தரும் அமாண்டடின்/சைமடின் (Amandatine/Symadine) வைரஸ் மருந்துகளைப்போல, வைரஸ் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டது எனக் கண்டறிந்தார்கள். தினமும் ஒரு கிளாஸ் மோரில் துளிப் பெருங்காயம் போட்டுப் பருகினால், உடல் குளிர்ச்சியாகும். கால்சியமும் பெருகும். லாக்டோ பாசில்லஸ் என்னும் நலம் பயக்கும் நுண்ணுயிரியும் கிடைக்கும். கூடவே, பன்றிக்காய்ச்சல் தரும் நுண்ணுயிரியும் வாலைச்சுருட்டிக்கொண்டு ஓடும். 

* நல்ல, தரமான பெருங்காயம் வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருக்கும். கறுத்திருந்தால் வாங்கக் கூடாது. கலப்படம் இல்லாத பெருங்காயம் கற்பூரம் மாதிரி எரிய வேண்டும். சில தாவர ரெசின்கள், ஸ்டார்ச் பொருள், சோப்புக்கட்டி போன்றவை சேர்க்கப்பட்டு பெருங்காயம் சந்தையில் உலா வருகிறது. அதனால், மூக்கைத் துளைக்கும் வாசம் வந்தாலும், கவனமாகப் பார்த்துத்தான் வாங்க வேண்டும். பெருங்காயத்தின் மணம் எளிதில் போய்விடும் என்பதால், காற்றுப் புகாத கண்ணாடிக் குவளையில் போட்டுவைத்திருந்தால் அதன் மணத்தையும் மருத்துவக் குணத்தையும் பாதுகாக்கலாம். 

* பெண்களுக்கு இது சிறந்த மருந்து. ஆனால், கர்ப்பிணிகள் அதிகம் சேர்க்கக் கூடாது. மாதவிடாய் சரியாக வராத பிரச்னையையும், அதிக ரத்தப் போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் பிரச்னையையும் இது சீர் செய்யும். மாதவிடாய் தள்ளித் தள்ளி வரும், சினைப்பை நீர்க்கட்டி (Polycystic Ovary) உள்ள பெண்களும் பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டே வருவது நல்லது. 

* குறித்த நாளில் மாதவிடாய் வராமல் தவிக்கும் பெண்கள், வாலேந்திர போளம், பெருங்காயம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, இரண்டு மிளகு அளவுக்கு உருட்டிச் சாப்பிட்டால் மாதவிடாய் வந்து, அந்த சூதகக் கட்டும் அகலும். 

* குழந்தை பிறந்த பின்னர் கர்ப்பப்பையில் இருந்து ஒருவகையான திரவம் (லோசியா - Lochia) வெளிப்படும். அது முழுமையாக வெளியேற, பெருங்காயத்தைப் பொரித்து, வெள்ளைப்பூண்டு, பனைவெல்லம் சேர்த்து, பிரசவித்த முதல் ஐந்து நாட்களுக்குக் காலையில் கொடுப்பது நல்லது. 

* அஜீரணத்துக்கு இது சிறந்த மருந்து. புலால் சமைக்கும்போதும், வாய்வு தரக்கூடிய வாழை, கொண்டைக்கடலை, பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைச் சமைக்கும்போதும் துளியூண்டு பெருங்காயத்தை உணவில் சேர்க்க மறக்கவே கூடாது. 

* சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலை, இந்துப்பு ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் இரண்டரை கிராம் பெருங்காயத்தை எடுத்துச் சேர்த்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து, முதல் உருண்டையாகச் சாப்பிடவும். பிறகு சாப்பாடு சாப்பிட்டால், அஜீரணம், குடல் புண் (Gastric Oesophagal Reflex Disease-GERD) முதலான வாயு நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக இருக்கும். 

* நெஞ்சு எலும்பின் மையப் பகுதியிலும், அதற்கு நேர் பின் பகுதியிலும் வாயு வலி வந்து, சில நேரங்களில் இதய வலியோ என பயமுறுத்தும். அதற்கு, பெருங்காயம் ஒரு பங்கு, உப்பு இரண்டு பங்கு, திப்பிலி நான்கு பங்கு எடுத்து செம்முள்ளிக் கீரையின் சாற்றில் அரைத்து மாத்திரையாக உருட்டிக்கொள்ளவும். இதை காலையும் மாலையும் ஒன்றிரண்டு மாத்திரையாக ஏழு நாட்களுக்குச் சாப்பிட்டால் வாயுக்குத்து முழுமையாக நீங்கும். ஆனால், அதற்கு முன்னர் வந்திருப்பது ஜீரணம் தொடர்பான வலியா அல்லது ஒருவகையான நெஞ்சு வலியா (Unstable Angina) என உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியம். 

* இர்ரிடபுள் பௌல் சிண்ட்ரோம் எனும் சாப்பிட்டவுடன் வரும் கழிச்சல், அடிக்கடி நீர் மலமாகப் போகும் குடல் அழற்சி நோய்களுக்கும் பெருங்காயம் பலன் தரக்கூடியது. 

* குழந்தைகளுக்குக் கொஞ்சம் ஓம நீரில், துளியூண்டு பெருங்காயப்பொடியைக் கலந்து கொடுத்தால் மாந்தக் கழிச்சலை நீக்கி பசியைக் கொடுக்கும். 

* புற்றுநோயிலும்கூட வெந்தயத்தின் தாவர ரெசின் பயனளிப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. நுரையீரல், மார்பகம், குடல்புற்றுநோய் செல் வளர்ச்சியை 50 சதவிகிதத்துக்கும் மேலாகக் கட்டுப்படுத்துவதை ஆரம்பகட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. 

ஆக, இது `கடவுளின் அமிர்தம்’ என்றே சொல்லாம்...


 21 ஆம் தேதியிலிருந்து  இன்று வரை 
வீட்டில்  நலமில்லாத சூழல்.

மீண்டு வருவோம்.  இறைவன் முருகன்,
அவன் மாமன் அருள் புரிவார்கள்.

துணை இருப்பார்கள்.





10 comments:

நெல்லைத் தமிழன் said...

உங்களை இப்போதெல்லாம் காணவே முடிவதில்லை. நலமா?

பெருங்காயத்துக்கு மாற்றுதான் பூண்டாமே? நமக்குப் பெருங்காயம், மற்றவர்களுக்குப் பூண்டு. அது சரி..ஏன் பெருங்காயம் கோவிலில் உபயோகப்படுத்துவதில்லை?

பெருங்காயம் சேர்த்த நீர் மோர் - சென்னை காலநிலைக்கு...ஆஹா ஓஹோ

ஸ்ரீராம். said...

எவ்வளவு பயன்கள்...  நம் அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் ஒவ்வொன்றுக்கும் இருக்கும் மகத்துவம்...

கரந்தை ஜெயக்குமார் said...

பெருங்காயம் பற்றி அறியாதன அறிந்தேன்
நன்றி சகோதரி

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. பெருங்காயம் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமானவை. உண்மையானவை. பகிர்ந்த பாடல் கேட்டு ரசித்தேன். நிறைய தடவைகள் கேட்டதுதான். ஆனால், கேட்க கேட்க திகட்டாதது. தங்கள் வீட்டில் அனைவரும் இப்போது நலமாகி இருப்பீர்கள் என நம்புகிறேன். அனைவரையும் இறைவன் நலமுடன் காத்தருள இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Geetha Sambasivam said...

வீட்டில் அனைவரின் உடல்நலனும் முன்னேற்றம் அடைந்து பூரண குணம் அடையப் பிரார்த்திக்கிறேன் எனக்குப் பெருங்காயம் இல்லாமல் சமைக்க வராது. :) நல்ல குறிப்புகள்.

கோமதி அரசு said...

பெருங்காயம் பயன்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி.
வீட்டு சூழல் சரியாக முருகன் , மாலவன் அருள்புரிவார்கள்.
பாடல் அருமை. நானும் பகிர்ந்தேன். சஷ்டி காலத்தில் முருகன் பாடலில் இந்த பாடலும் இடம்பெறும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,
வேலை சரியாக இருக்கிறது.

இரண்டு மூன்று நாட்களில் சரியாகிவிடும்.
குளிரும் ஆரம்பித்தாச்சு.

நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்.
நல்ல பெருங்காயம் நன்மை செய்யும். கலப்படம் இல்லாமல் இருக்க
வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜெயக்குமார். தவறாமல் வந்து படித்து கருத்து சொல்வதற்கு நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
தேறி வருகிறோம்.
ஓய்வு நிறையத் தேவைப் படுகிறது.
விசாரிப்புக்கு மிக நன்றி மா.