Blog Archive

Saturday, April 23, 2022

எங்க மதுரை............

வல்லிசிம்ஹன்

  அனைவருக்கும் எல்லா  நலங்களும் கிடைக்க இறைவன் அருள வேண்டும்.
எங்கள்  அழகர் மலை கள்வர் பெருமாள்.
செய்தி அனுப்பிய தம்பி முகுந்தனுக்கு    நன்றி.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


 மதுரைல பைக்கை எடுத்தா இருபது நிமிஷத்துல அழகர் கோவிலுக்குப் போயிடலாம். 
 வருஷம் பூராம் அழகரு அங்கேயே தான் இருக்காரு.  ஆனால், 
அழகரு வருஷத்துல ஒரு தடவ மதுரைப் பக்கம் வந்துட்டுப் போவார்
தங்கச்சி மீனாச்சி கல்யாணத்தப் பாக்க ஆசப்பட்டு அழகர்மலையில இருந்து மதுரைக்கு கிளம்புவார சும்மால்லாம் கிளம்பிட முடியாது, அங்க காவல் தெய்வமான பதினெட்டாம்படிக் கருப்புகிட்ட உத்தரவு வாங்கிட்டு தான் கிளம்ப முடியும். அங்க இருக்கிற ஒத்த கருப்ப சாமி
ஓராயிரம் கருப்பசாமியா மாறி பக்தர்களுக்குள்ள இறங்கி பாதுகாப்புக்குக் கூடவே வரும். சாமி இறங்கினவங்க ’திரி’ப் பந்தம் ஏந்தி, கையில் மொரட்டு அருவாளைத் தூக்கிக்கிட்டு கருப்பன் அருளோட சாமியாடிட்டு வருவதை எதிரில் நின்னு பார்த்தா அடிவயித்துல அமிலம் சுரக்கும்.
வருஷத்துக்கொரு தடவ வெளியே வர்றவர சும்மா விட்டுட முடியுமா? 
வர்ற வழியில கள்ளந்திரி, அப்பன் திருப்பதின்னு எல்லா  ஊர்லயும் மண்டகப்படி போட்டு மரியாத பண்ணி கொஞ்சிக் கூத்தாடும் பக்தர்கள் அன்புல தங்கச்சி கல்யாணத்துக்கு நேரத்துக்குப் போகணும்ங்கிறதையே மறந்துடுவாரு. 

 இந்தப் பக்கம் எங்க ஆத்தா மீனாச்சிக்கும்,  எங்கப்பன் சொக்கனுக்கும் கல்யாணம் நடந்திடும். 
எங்க வீட்டுக் கல்யாணக்
கொண்டாட்டத்துல அந்தப் பக்கம் அழகர் இன்னும் வரலைங்குறதையே இவய்ங்களும் மறந்துடுவாய்ங்க… மங்கையர்க்கரசி திருக்கல்யாணத்துக்காகவே வருஷம் பூராம் காத்திருந்து மதுரை மகராசிக பூராம் மாங்கல்யம் மாத்துவாங்க. 

அதாவது,  அன்னிக்கு அம்புட்டு வீட்லயும்
கல்யாணம்தான் ஆத்தாவையும் அப்பனையும் தேர்ல வச்சு ஊர்வலம் சுத்தி வந்தப்புறம் தான், 
ஐயய்யோ அழகரு வாராம எல்லாம் நடந்துடுச்சேன்னு இவங்களுக்கு சுருக்குனு இருக்கும். 
இருந்தாலும் எப்படியாவது சமாதானப் படுத்துவோம்னு தென்கரையில நினைச்சுட்டு இருக்கிற நேரத்துல, வடகரையில அழகரு ஆடி அசஞ்சு மதுரைக்குள்ள வந்துடுவாரு.

இராத்திரி கொஞ்சம் காலாறுவோம்னு தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு போயிட்டு, அங்க ஏற்கனவே வந்து காத்திருக்கும் நம்ம ஆண்டாள் நாச்சியின் மாலைய தோளில் வாங்கிச் சாத்திக்கிட்டு,  
மறுபடி தங்கக் குதிரையில ஏறி கோயில விட்டு வெளியே வரும் அழகைப் பார்த்ததும்,  கோயிந்தா கோய்ய்ந்தோவ்வ்வ் ”னு இலட்சக்கணக்கான குரல்கள் ஒன்னா கூப்பிடும் பாருங்க
ஆத்மா சிலிர்த்தெழுறதுன்னா என்னானு அப்ப தெரியும்.

சித்திர மாசக் கத்திரி வெயிலுல இத்தன இலட்சம் பேரு கூடியிருந்தா வெந்து போயிட மாட்டீங்களானு வெளியூர்க்காரங்களுக்கு தோணலாம். ஆனால்,  தண்ணீர் பீச்சும் பக்தர்கள் தோள் வலிக்க வலிக்க சந்தோசமா
தோப்பறையில தண்ணிய
 நெப்பிக்கிட்டு ரோட்டிலேயும் ஆகாசத்திலும் தண்ணியப் பீச்சிப் பீச்சு மதுரையவே குளிர வச்சுடுவாங் (தோலினால் செய்யப்பட்ட பை. ஒரு பக்கம் பெரிய துவாரம் வழியாக நீரை ஊற்றி அடைத்துவிட்டு இன்னொரு பக்கம் சின்னதா ஒரு துவாரம் வழியாக நீரினைப் பீச்சி அடிப்பது).

இப்படி ஒவ்வொரு மண்டகப்படியா அழகரை இழுத்துப் பிடிச்சு வாங்கய்யா வாங்கய்யானு மதுரக்காரய்ங்க பாசத்தைக் கொட்டிக் கொட்டி அலைக்கழிச்சு ஆத்துக்குள்ள இறங்கிறப்ப விடிஞ்சுடும்
விடியக்காலம் அழகர் ஆற்றில் இறங்கும் போது ஒட்டு மொத்த மதுரையும், 
இலட்சக்கணக்கான குரலில்
அடிமனசிலிருந்து  கோவிந்தாஆஆஆஆனு கூப்பிடும் போது பாற்கடலிலிருந்து பரந்தாமன் லேசா திரும்பி மதுரையைப் பாப்பாரு எங்க அழகர் தங்கக் குதிரையில் பட்டுடுத்தி,  பவனிக்கும் அழகில் மயங்கி மறுபடி சயனத்துக்கே போயிருவாரு

இதான் எங்க ஊரு திருவிழா 
உலகில் வேறெங்கும் இவ்வளவு உயிரோட்டமாய் ஒரு திருவிழா சாத்தியப்படுமா?
தெரிலை
 எங்க  பெண் வாரிசுகளை மீனாட்சியாகவும்..ஆண் வாரிசை அழகராகவும் கொண்டாடுவோம்பா
ஒட்டு மொத்த மதுரை மக்களின் பொதுவான குலதெய்வமாய் அழகரும் மீனாட்சியும் கொண்டாடுவோம்
எங்க மதுரை எங்கள் சொர்க்கம் பா.

13 comments:

Geetha Sambasivam said...

ஆஹா, ஆஹா! சொர்க்கத்தில் வாழ்ந்த நாட்களின் நினைவுகள் என்றென்றும். இந்த வருஷம் அழகர் ஆற்றில் இறங்கிய வைபவத்தை யூ ட்யூபின் மூலம் பார்த்து ரசித்தோம். எத்தனை முறை பார்த்தால் என்ன? இந்த அழகெல்லாம் எங்கெங்கும் காணக்கிடைக்காத ஒன்று.

Geetha Sambasivam said...

மேலே இருக்கும் காணொளியைப் பார்த்தாச்சு. கீழே வரவில்லை. வீடியோ அன் அவைலபில்!

கோமதி அரசு said...


//இதான் எங்க ஊரு திருவிழா
உலகில் வேறெங்கும் இவ்வளவு உயிரோட்டமாய் ஒரு திருவிழா சாத்தியப்படுமா?
தெரிலை
எங்க பெண் வாரிசுகளை மீனாட்சியாகவும்..ஆண் வாரிசை அழகராகவும் கொண்டாடுவோம்பா
ஒட்டு மொத்த மதுரை மக்களின் பொதுவான குலதெய்வமாய் அழகரும் மீனாட்சியும் கொண்டாடுவோம்
எங்க மதுரை எங்கள் சொர்க்கம் பா.//

மிக அருமையாக மதுரை மக்களின் மனநிலையை திருவிழாவை முகுந்தன் அவர்கள் அழகாய் சொல்லி இருக்கிறார்.
உங்கள் பகிர்வுக்கு நன்றி.

காணொளியும் அருமை. அழகரை இந்த முறை பார்க்கவில்லை. உங்கள் பகிர்வின் மூலம் பார்த்து விட்டேன் நன்றி அக்கா.

Thulasidharan V Thillaiakathu said...

What a lovely post!! ர்சித்து அனுபவித்து எழுதியிருக்கிறார்! ரசித்து வாசித்தேன். காணொளியும் கண்டேன். இந்தக் கூட்டத்திலும் எடுத்திருக்கிறாரே. அழகர் பல்லக்கிலா?

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மதுரையில் இருந்த போது ஒரே ஒரு முறை பார்த்திருக்கிறேன் திருவிழா.

அழகாக உணர்வுபூர்வமாக எழுதியிருக்கிறார்.

துளசிதரன்

ஸ்ரீராம். said...

மதுரையின் சித்திரைத்திருவிழா திருவிழா என்கிற சொல்லுக்கே அர்த்தம் தரக்கூடியது.  பொசுக்கும் வெய்யிலை ஒருவரும் மதிக்க மாட்டார்கள்.  என்ன கூட்டம், என்ன கொண்டாட்டம்...  ரசித்த திருவிழா அது.

வல்லிசிம்ஹன் said...

அனைவருக்கும் வணக்கம்.
இரண்டு நாட்களில் பதில் கொடுக்கிறேன் பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள் .
மாறாத மதுரை. கூட்டம் தான் இன்னும் கூடிவிட்டது.
பழைய மதுரையில் கூட்டம் அழகு.

இந்தப் புது மதுரையில் எல்லாம் பாலங்களும்
லௌட் ஸ்பீக்கர்களும், கட்டிடங்களும் தான்.

இருந்தும் பாசம் விடவில்லை:)
நன்றி மா.



வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
தம்பி முகுந்தன் எப்பொழுதுமே மதுரைக்காரன்.
இதோ 62 வயதாகப் போகிறது.

சந்தோஷமாகவே எல்லாம் செய்கிறான்.
எனக்கு நிறைய செய்திகளைச் சொல்கிறான்.

மதுரை நம் ஊர் என்ற பெருமை.
தாங்கள் வந்து படித்ததில் மிக மகிழ்ச்சி மா.வாழ்க வளமுடன் அன்புத் தங்கச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாரங்கன்,
என்றும் நலமுடன் இருங்கள்.
தாமதமாகப் பதில் சொல்கீறேன்.

மதுரைக்காரர்களுக்கு இந்த எழுத்துப் பைத்தியம் உண்டு.

கள்ளழகர் மலையிலிருந்து புறப்படும் போதும்
திரும்பிப் போகும் போதும்
பல்லக்கில் செல்வார்.
ஆற்றைக் கடக்க தங்கக் குதிரையில்
வருவார்.
மீண்டும் பார்வேட்டை முடிந்ததும்
பல்லக்கில் சென்று விடுவார்.
நன்றி.

வல்லிசிம்ஹன் said...

மேலே இருக்கும் காணொளியைப் பார்த்தாச்சு. கீழே வரவில்லை. வீடியோ அன் அவைலபில்!''
Sorry paa,. Geethaa Sambasivam.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,

என்றும் நலமுடன் இருங்கள்.
நீங்களும் மதுரையில் இருந்தது தான் மகிழ்ச்சி மா.
நன்றி.

வல்லிசிம்ஹன் said...

Dear Sriram,

மதுரையின் சித்திரைத்திருவிழா திருவிழா என்கிற சொல்லுக்கே அர்த்தம் தரக்கூடியது. பொசுக்கும் வெய்யிலை ஒருவரும் மதிக்க மாட்டார்கள். என்ன கூட்டம், என்ன கொண்டாட்டம்... ரசித்த திருவிழா அது.''


அன்பின் ஸ்ரீராம்,
உண்மைதான் இந்த உற்சாகத்தையும் களிப்பையும் வேறெங்கும் காண
முடியாது. மிக நன்றி மா.
நலமுடன் இருங்கள்.