Blog Archive

Thursday, April 21, 2022

நயாகரா பயணம் 4


வல்லிசிம்ஹன்

எங்க நிறுத்தினேன் கதையை. ஆ! வண்டியை இடித்து பிறகு வீட்டிற்குப் போகும் சமயம் அந்த பொண்ணு(நம்ம வண்டி கிட்ட ராங் செய்த பொண்ணு வந்து''கான் ஐ டிராப் யூ சம்வேர், ஏதாவது வாங்கிக்கொடுக்கட்டுமா'' என்று வேறு கேட்டாள்.

நாங்கள் தர்மசங்கடமாக முகத்தை வைத்துக் கொண்டு வேணாம்ம்மா.நாங்களே பார்த்துக்கறோம். எங்களுக்கு இங்கே நண்பர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டோம். பிறகு எண்டர்ப்ரைசஸ் என்ற கம்பெனிக்கு போன் செய்து ஒரு டாட்ஜ் வண்டி வாடகைக்கு எடுத்து அடுத்த நாள் மதியம் கிளம்பி டெட்ராய்ட்டிலிருந்து டொரண்டோ வந்தோம்.




ஆர்ச்சார்ட் லேக் ரோட்+ மைலைத் தாண்டும் போது எல்லோருக்குமே படபடப்பாகத்தான் இருந்தது. சரி ஏதோ போதாத நேரம்தான். ஒரு நாள் வீணாகிப் போனது. லயன் சஃபாரி போக முடியவில்லை. குழந்தைகளும் நாங்களும் மிகவும் எதிர்பார்த்தது இந்தக் காட்டுப் பயணத்தைத்தான்.
டொரண்டோ வந்து சேர்ந்த போது ஆறு மணியாகிவிட்டது. விடுதியில் உடை மாற்றிக்கொண்டு 'சப்வே ' தேடிப்போனோம்.
ஒரு இந்தியர்தான் அந்தக் கடையை நடத்திக் கொண்டிருக்கிறார். அவ்வளவு சுமுகம் இல்லை. போனால் போகிறது. எங்களுக்கு வானவில்லையும், ஏர்போர்ட் அழகும், பிளேன் வந்து இறங்கும் அழகும் பற்றிப் பேசவே நேரம் சரியாக இருந்தது . 



அடுத்த நாள் சிஎன் டவர் பார்த்து விட்டு நயாகரா கிளம்ப வேண்டும் என்கிற ஆவலே உற்சாகமாக இருந்தது. காலையில் எழுந்து கீழே வந்து இலவச காலை உணவையும் உள்ளே தள்ளி, இணையத்தையும் பார்த்து முடித்தபோது 11 மணியாகிவிட்டது.

சிஎன் டவர் கூட்டம் நிறைய இருக்கும்.அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு.
நினைத்தது போலவே கியூ நீளமாக இருந்தது டவர் அடிவாரத்தில்.
இரண்டரை மணி நேரமாவது நிற்கவேண்டும் என்றார்கள். என்னடா செய்யலாம் என்று யோசித்தபோது மாப்பிள்ளைக்கு நல்ல யோசனை ஒன்று தோன்றியது.



'இந்த டவர் கூட பார்க்கவில்லைன்னா நம்ம பயணம் குறையாகவே இருக்கும். இதன் முக்கால் உயரத்தில் ஒரு சுழலும் ரெஸ்டாரண்ட் இருக்கு. அங்கே போகலாம். அத்ற்கு வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை'என்றார். அதாவது சிஎன் டவர் என்கிற இந்தக் கோபுர சுமார் 1800 அடி உய்ரம் என்றால், இந்த உணவு விடுதி 1500 அடியில் இருந்தது. அதற்கு 360 டிகிரி என்று பெயர். அது ஒரு சுற்று முடிக்க 72 நிமிடங்கள் ஆகிறது என்று எழுதி வைத்திருந்தார்கள். இதைவிட உயரமானது நம்ம துபாய் டவர்தான். (ஆமாம் நாம்தானே கட்டினோம்:) 

மேலே இருக்கும்
அந்த உணவு விடுதியில் வெஜிடேரியன் உணவு கேட்ட போது ''இருக்கு' ''என்றார்கள். எல்லாம் பெரிய சைஸ். குடமிளகாய், எக்ப்லாண்ட்,தக்காளி எல்லாவற்றையும் ஆலிவ் எண்ணெயில் வதக்கிக் கொண்டு வந்து வைத்தார்கள். நாங்கள் ஏறி வரும்போது நகரத்தின் ஒரு பக்கத்தை கண்ணாடிச் சுவரில் பார்த்தபடியே (லிஃப்டில்) ஏறினோம். அங்கு சாப்பிட்டால் அந்த ஸ்கை வாக் பகுதியும் பார்க்கமுடியும் என்றார்கள். படு கமர்ஷியல்மா. இல்லாவிட்டால் இவ்வளவு பணம் இங்க சேருமா!!

View from CN Tower


சைவ உணவுதான்:)  வயிற்று கெடுதல் செய்யவில்லை.


சரிதான் நாம் க்ராண்ட் கான்யானிலியே அந்த ஸ்கைவாக் பார்க்கவில்லை. இங்கயாவது பார்க்கலாம். என்று சாப்பிட்டு முடித்தவுடன் அங்கே போனோம். ஒரு முப்பது சதுர அடி இருக்கும் ன்று நினைக்கிறேன். நானும் அந்தக் கண்ணாடித் தரையில் நின்று பார்த்தேன். என் பெண் வர மறுத்து விட்டாள். நானும் இரண்டு பேரன்களும் நின்று படம் பிடித்துக்கொண்டோம்.திகில்தரைதான் அது எல்லோரும் படுத்துக் கொண்டு படமெடுத்துக் கொண்டார்கள். அதில் தமிழ் அம்மாக்கள் அதிகமாகவே இருந்தார்கள். நமக்கெ வீரம் அதிகம்தான்:)
கீழே பார்த்துவிட்டால் கொஞ்சம் நடுக்கம்.கீழே சாலையில் போகும் கார் மற்றவாகனங்கள் எறும்பாகத் தெரிந்தன,.
அப்போது எப்பவோ கேட்ட ஜோக் ஞாபகத்துக்கு வந்தது.''பாருடா கீழே காரெல்லாம்,மனிதரெல்லாம் எறும்பாகத் தெரிகிறார்கள் என்று ஒரு அப்பா தன் முதல் விமானப் பயணத்தில் சொல்ல ,அது நிஜ எறும்புப்பா. இன்னும் ப்ளேன் கிளம்பவே இல்லை என்று பையன் சொல்லுவான்:)''
இது அந்த மாதிரி இல்லை. உண்மையாகவே பூமிக்கும் நமக்கும் இடையில் இந்தக் கண்ணாடித்தரைதான். த்ரில்லிங்காக இருந்தது.




கீழே வந்து வழக்கமா வாங்குகிற குட்டி சூவனீர்கள் எல்லாம் வாங்கி கனடியன் டாலரைக் கொடுத்து வெளியே வந்தோம்.

மாப்பிள்ளை வண்டி ஓட்ட, அவருக்குத் தூக்கம் வராம இருக்க சிங்கம்

 பேசிக்கொண்டு வர நான் கிருஷ்ணாவின் பக்கத்து சீட்டில் அமர்ந்து வன் மழலையோடு பேசுவதைக் கேட்க, பெரிய பேரனும் பெண்ணும் அதற்குப் பின்னால் இருந்த சீட்டில் ஹாரி பாட்டர் பார்க்க, வந்து சேர்ந்தோம் நயாகராவுக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


   என் பதிவுகளுக்கு நிறைய பின்னூட்டங்கள் 
வருவது கிடையாது.
முன் கை நீண்டால் தானே முழங்கையும் நீளும்:)












எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

24 comments:

ஸ்ரீராம். said...

வந்து இடித்து விட்டு, அப்புறம் உதவியும் செய்வாராமா அந்தப் பெண்?  அந்த ஊர் நாகரீகம் போல இருக்கு!  அவருக்கு தண்டனை எல்லாம் கிடையாதா?

ஸ்ரீராம். said...

வெளிநாட்டில் கடை நடத்தும் நபருக்கு சுமுகம் வேண்டாமோ...  அப்போதானே வியாபாரம் நன்றாய் இருக்கும்?  ஒருவேளை இந்தியர்களிடம் மட்டும் சுமுகம் காட்டமாட்டாரோ!

ஸ்ரீராம். said...

சட்டென முக்கால் பயணம் செய்து ஹோட்டலை அடைந்தது நல்ல ஐடியா.  காத்திருப்பதற்கு அது எவ்வளவோ மேல்.  வெறும் காய்கள் மட்டும்தான் உணவா?  அரிசி, கோதுமை எதுவும் கிடையாதா?

ஸ்ரீராம். said...

அந்தக் கண்ணாடி தரை  பற்றி நிறைய விடியோக்கள் பார்த்திருக்கிறேன்.  இதுபோன்ற கண்ணாடித் தரைகள் வேறு சில மலைப்பாதைகளிலும் உண்டு என்று நினைக்கிறேன்.  ஓரத்தில் அமர்ந்து சுவரை இறுக்கிப் பிடித்துக் கொண்டு நகராமல் அலறும் நபர்களை விடீயோக்களில் பார்த்திருக்கிறேன்!

ஸ்ரீராம். said...

நல்ல பாடல்.  ஆனால் அசோகனை எல்லாம் ஹீரோவாக ஏற்றுக்கொள்வது....?!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. பயணத்தை நன்றாக ரசித்து எழுதியிருக்கிறீர்கள்.உங்கள் எழுத்தால், நாங்களும் உங்களுடன் பயணம் மேற்கொண்டதை போன்ற உணர்வை தந்து விட்டீர்கள். படங்கள் அனைத்தும் பிரமிப்பை தருகிறது. அந்த உயரமான டவரின் அழகு படம் நன்றாக உள்ளது அதே சமயத்தில் கண்ணாடி தரையில் நின்று கொண்டு அங்கிருந்து கீழ் நோக்கிப் பார்க்கும் பயமும் நெஞ்சை திகிலடைய வைக்கிறது. உங்களது தைரியத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை. உங்கள் பதிவின் வழி நானும் இதையெல்லாம் பார்த்தாகி விட்டது. நன்றி.

இது சத்தியம் படப் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கும். பகிர்ந்த பாடலையும் கேட்டேன். சென்ற பகுதி நேற்று படித்தேன். இதன் தொடர்ச்சியான முன் பகுதிகளையும் பிறகு கண்டிப்பாக படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

KILLERGEE Devakottai said...

படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது அம்மா.
சுவாரஸ்யமான தகவல்கள்...

Geetha Sambasivam said...

வரும், வரும். நிறையக் கருத்துகள் வரும். வருத்தப்படாதீங்க. நல்ல அனுபவங்கள். அழகாய்க் கோர்வையாய்ச் சொல்லி இருக்கீங்க. இருந்தாலும் பயணத்தில் சிரமங்கள் தான் அதிகமாய்த் தெரிகிறது. பாவம் குழந்தைகள்! :(

Geetha Sambasivam said...

கமென்ட் கொடுத்தேன். காணாமல் போய்விட்டதே! என்ன ஆச்சுனே தெரியலை. இத்தனை சிரமங்களுக்கு இடையிலும் விடாமல் நயாகரா பார்த்துவிட்டு வந்தது சந்தோஷமாகவே இருந்திருக்கும். குழந்தைகள் தான் பாவம், சிரமப்பட்டிருப்பார்கள். நன்றாகவே எழுதி இருக்கீங்க. கருத்துக்களும் வந்திருக்கும்/வரும்.

Thulasidharan V Thillaiakathu said...

காட்டு வழிப்பயணமா. அட! அருமையா இருந்திருக்குமே. அதுவும் லயன் சஃபாரி..மிஸ் ஆகிவிட்டதே..

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

எங்களுக்கு வானவில்லையும், ஏர்போர்ட் அழகும், பிளேன் வந்து இறங்கும் அழகும் பற்றிப் பேசவே நேரம் சரியாக இருந்தது . //

ஆ அம்மா என்னையும் அந்த லிஸ்டில் சேர்த்துக்கோங்க..!!!!!

ஸ்கைவாக், சி என் டவர், எல்லாம் அழகான இடங்கள் என்று கேட்டிருக்கிறேன். அந்தச் சுழலும் உணவகம், கண்ணாடித் தரை வழியே கீழ...வாவ் நினைத்துப் பார்க்கவே அவ்வளவு த்ரில்லிங்காக இருக்கிறது.

அடுத்து இங்கு நயாகரா அனுபவங்கள் அறிய ஆவல்! எனக்கும் தான் ஊர் சுற்ற ரொம்பப் பிடிக்குமே...உங்களோடுசேர்ந்து நானும் இப்ப சுற்றுகிறேன்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஓ துபாய் டவர் இதைவிடப் பெரிதா...(நாமதானெ கட்டினோம் - ஹாஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன்!!)

படங்கள் எல்லாம் அழகா இருக்கும்மா. இந்த நயாகரா கனடா சைட் காட்சியோ?

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

பயணத் தொடர் மீள் பதிவாக இருந்தாலும் எனக்கு சுவாரசியமாக இருக்கிறது. டொரொண்டோ, சிஎன் டவர், அதைப் பற்றிய விவரங்கள் எல்லாம் அறிந்தேன். போகும் வழி காடா? லயன் சஃபாரியும் உண்டா.

அடுத்த பகுதி வாசிக்க ஆவலுடன் தொடர்கிறேன். படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு குறைவு. எனவே இப்படி வாசித்து தெரிந்து கொள்கிறேன்.

துளசிதரன்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.

நாங்கள் திரும்பும்போது சட்டென்று வந்து இடித்துவிட்டார்.
ஏதோ அவசரம் என்று தெரிந்தது.
போலீஸ் வந்ததும் கேஸ் என்று போனால்
எங்கள் பயணம் இன்னும் தாமதமாகி இருக்கும்.

இன்ஷுரன்ஸ் கிடைக்குமா என்று பேசி
அப்படியே மாப்பிள்ளை முடித்துக் கொண்டார்.

வல்லிசிம்ஹன் said...

வெளி நாடென்ன உள் நாடென்ன மா. வட இந்தியக் கடை.
நம்மை அவருக்குப் பிடிக்கவில்லை:)
கடை மூடும் நேரமாக இருந்திருக்கும்.
ஏதோ போகிறது போங்கள்.

வல்லிசிம்ஹன் said...

சட்டென முக்கால் பயணம் செய்து ஹோட்டலை அடைந்தது நல்ல ஐடியா. காத்திருப்பதற்கு அது எவ்வளவோ மேல். வெறும் காய்கள் மட்டும்தான் உணவா? அரிசி, கோதுமை எதுவும் கிடையாதா?''

அங்கேயே வசிப்பவர்களுக்கு எல்லாம் கிடைக்கும் .சைவம்
என்று சொன்னால் இதுதான் மா.
இப்போது நிறைய மாறி விட்டதாகச் சொல்கிறார்கள்.
அரிசியா. கோதுமையா. :) ப்ரெட் உண்டு அவ்வளவுதான்மா ஸ்ரீராம்.

14 வருடங்கள் ஆகிவிட்டதே.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,

2008இல் நாங்கள் அத்தனை பார்த்ததில்லை.
இப்போது நிறைய வந்துவிட்டது,.
அண்மையில் மூன்று வருடங்களுக்கு
முன் சியாட்டில் சென்றபோது
அந்த ஊர் டவரில் மீண்டும் பார்த்தோம்.
அந்த தலையில் மாட்டிக் கொண்டு
பார்ப்போமே.. சட்டுனு வரவில்லை:(
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அசோகனைப் பார்க்க வேண்டாமா.
கண்ணை மூடிக் கொண்டு கேளுங்கள் ஸ்ரீராம்:)
நமக்குப் பாட்டு தானே வேண்டும்!!!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
நலமாப்பா.
குடும்பத்தில் அனைவரும் நலமாக இருக்கிறார்கள்
என்று நம்புகிறேன்.

''அதே சமயத்தில் கண்ணாடி தரையில் நின்று கொண்டு அங்கிருந்து கீழ் நோக்கிப் பார்க்கும் பயமும் நெஞ்சை திகிலடைய வைக்கிறது. உங்களது தைரியத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை. உங்கள் பதிவின் வழி நானும் இதையெல்லாம் பார்த்தாகி விட்டது. நன்றி.''

பயமும் நானும் சகோதரிகள் மா. மனம் தைரியம் உண்டு
இயற்கையிடம் ஏகப்பயம்.:)

இன்னும் இரண்டு நாட்களில் மிச்சப் பயணத்தை
எழுதுகிறேன்.
வீட்டில் அனைவருக்கும் பெயரிடப்படாத ஜுரம்
பற்றிக் கொண்டிருக்கிறது.
மிக நன்றி சகோதரி.



Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

அடாடா.. வீட்டில் அனைவருக்கும் உடல்நலமில்லையா? கேட்கவே வருத்தமாக உள்ளது சகோதரி. அனைவரும் உடல் நலனை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். அனைவருக்கும் விரைவில் பூரணமாக குணமடைய இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

அன்புடன்
கமலா ஹரிஹரன்.

வெங்கட் நாகராஜ் said...

நீண்ட வரிசையை தவிர்க்க உணவகம் சென்றது நல்லது. அங்கேயும் சிறப்பான அனுபவங்கள் கிடைத்ததே! பயணம் குறித்த தகவல்கள் அனைத்தும் சிறப்பு. தொடர்கிறேன்.....

கோமதி அரசு said...

பாடலும் பகிர்வும் அருமை.
நயாகரா பயணம் அனுபவங்கள் அருமை.
கஷ்டபட்டாலும் குழந்தகள், பேரன்களுடன் பயணம் செய்வது மறக்க முடியாத இனிய பயணம்தான்.
வருடங்கள் பல ஆன போதும் நேற்று சென்று வந்தது போல நினைவாக எல்லாம் பகிர்ந்து இருப்பது
படிக்க நன்றாக இருக்கிறது. உங்கள் நினைவாற்ரல் வியக்க வைக்கிறது.
படங்கள் நன்றாக இருக்கிறது.
அசோகன் நடித்த இந்த படம் குமுதத்தில் தொடர்கதையாக வந்தது, அம்மா பைண்ட் செய்து வைத்து இருந்தார்கள். பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கும்.

மாதேவி said...

பயணம் நன்றாக இருக்கிறது. கண்ணாடித் தரையில் நின்று பார்ப்பதும் துணிச்சல்தான் எங்களுக்கும் மலேசியா,துபாயில் பார்த்த அனுபவம் நினைவுக்கு வந்தது.

வல்லிசிம்ஹன் said...

இப்பொழுது மீண்டு கொண்டிருக்கிறோம்
அன்பின் கமலாமா.

தங்கள் ஆதரவான வார்த்தைகளுக்கு மிக நன்றி.