Blog Archive

Wednesday, December 29, 2021

ஏற்றுக் கொள்ளுதல்.

வல்லிசிம்ஹன்
முன் பதிவில் புனர்ஜன்மம் பற்றி சில எண்ணங்களைப் பதிந்து இருந்தேன். அதன்
தொடர்பாக இந்தப் பதிவும்.





மனமே பிரச்சினை

தனியாக வேட்டையாடுவதை விருப்பமாக கொண்ட அரசன் ஒருவன் வழிதவறி காட்டுக்குள் வெகுதூரம் சென்றுவிட்டான்.

காட்டில் முனிவர் ஒருவர் குடில் அமைத்து தங்கி இருப்பதை கண்டு அன்று இரவுப்பொழுதை அங்கேயே கழிக்கலாம் என்று முனிவரிடம் தங்க அனுமதி கேட்டான்..

முனிவரும் தாராளமாக தங்கி கொள்ளுங்கள் என கூறினார்..

முனிவரும், அரசரும் அந்த சிறிய குடிலில் தூங்க ஆரம்பித்தனர். 

இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த குடிலை சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. 

அரசரால் தூங்கவே
முடியவில்லை.

அவர், அன்று காலை முழுவதும் வேட்டையாடி களைத்து இருந்தார்..

மறுநாளும் அலைச்சல்
இருக்கிறது.

அதை நினைக்க நினைக்க அரசருக்குக் கோபம் அதிகமானது.

நாய்களோ வெறித்தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன.

ஆனால், இத்தனைக்கும் மத்தியில் முனிவர் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.

அவரை எழுப்பிய அரசர், 

''என்ன மனிதர் நீங்கள்... 
இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது...???'' என்று புலம்பினார்.

முனிவரோ, தனது வழக்கமான நிதானத்துடன் கூறினார்: 

''அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை; 
கோஷமிடவில்லை
அந்த நாய்களுக்கு
இங்கு ஒரு அரசர் தங்கி இருப்பது தெரியாது.
அவைகள் படிப்பதில்லை.
அவற்றுக்கு அறிவும் கிடையாது. 

அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அவை, தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. 

நீங்கள், தூங்குகிற வேலையைப் பாருங்கள்...!!!'' என்றார்.

''நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால், நான் எப்படி தூங்க முடியும்...???'' என்றார் அரசர்.

உடனே முனிவர், ''நீங்கள், அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள்.
அப்படிப் போராடாதீர்கள்
.
பிரச்னை குரைப்பொலி அல்ல, 
உங்கள் எதிர்ப்பு உணர்வு. 

நீங்கள், சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள்; இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால் தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப் போவது இல்லை. 

நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவது இல்லை. 

ஆனால், நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும். நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான். 

நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன பார்த்தீர்களா....??? 

ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால், குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான்...!!!'' என்றார் முனிவர்.

'உதவாக்கரை யோசனை' என்று மனதுக்குள் பழித்தபடி தூங்க போனார் அரசர்.

ஆனால் காலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் எழுந்து முனிவரைச் சந்தித்தார் அரசர்...!!!

''ஆச்சரியம்தான்....!!! எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள் குரைப்பதைக் கவனித்தேன்.

 ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன்'' என்றார் அரசர்.

முனிவர் நமக்குச் சொல்கிறார்:

"இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால், உன் கவனத்தை உள்முகமாகத் திருப்பு.

 எரிச்சலுக்கான காரணம் நீயாகத்தான் இருப்பாய். 

உனது எதிர்பார்ப்பு அல்லது ஆசை வேறாக இருந்திருக்கும்; 

அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய். 

அதுதான் உனது எரிச்சலுக்குக் காரணம்.. 

உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது..
அதை எதிர்த்துப் போராடும்போது நீ வெறுப்படைகிறாய்'' என்கிறார்.

யாரையும்  நம்மால் திருத்த முடியாது ஆனால் அவர்களோடு வாழ்வதற்கு நாம் மாற்றிக்கொண்டால் பார்க்கும் காட்சிகள் அனைத்தும் அழகுதான்.

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
thank you Jayanthi Kannan. God Bless.

11 comments:

ஸ்ரீராம். said...

// எரிச்சலுக்கான காரணம் நீயாகத்தான் இருப்பாய் //

ஆம்.  நான் உணர்ந்திருக்கிறேன்.  பலமுறை மாற்றிக்கொண்டுமிருக்கிறேன்.

ஸ்ரீராம். said...

அருமையான கதையுடன் பாடம் சொல்லும் பதிவு.  ஆமாம், புனர்ஜன்மம் என்றே ஒரு சிவாஜி-சாவித்ரி நடித்த படம் ஒன்று வந்ததே...  ஸ்ரீதர் டைரக்ஷன் என்று ஞாபகம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
உண்மைதான். பல விஷயங்களுக்கு நாமே காரணமாகிறோம். நாமே
உணர்வதும் நன்மைதான்.
நலமுடன் இருங்கள்.

புனர்ஜன்மம் சிவாஜி பத்மினி.சிவாஜி
குடித்துவிட்டுப் பிறகு நல்லவனாவார்.
அப்பொழுதும் யாரும் அவரை நம்ப மாட்டார்கள்.

சிவாஜி சாவித்ரி படம் ப்ராப்தம். மா.
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் பாட்டு வருமே.

KILLERGEE Devakottai said...

அருமையான தகவல் அம்மா எனக்கும்கூட பயனாகும் பகிர்வுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

ஏற்றுக் கொள்ளுதல் - மிகச் சிறப்பாக விளக்கம் சொல்லி இருக்கிறார் முனிவர். நல்லதொரு பதிவு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
நலமுடன் இருங்கள்.
நல்ல வாசகங்கள் நம் வாழ்வுடன் என்றும் இருக்க வேண்டும். நன்றிமா.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் என்றும் நலமுடன் இருங்கள். நல்லோர்
நட்பும் அன்பும் என்றும்
நம்முடன் தொடரவேண்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

மனமே பிரச்சினை//

யெஸ்ஸு ஆமாம் அம்மா நம் பிரச்சனைகளுக்கு நம் மனமேதான் காரணம்.

இந்தக் கதை வாசித்திருக்கிறேன் என்றாலும் மீண்டும் இங்கும் ரசித்தேன். நல்லகதை. பதிவும் அருமை.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கதையும் அருமை அதன் விஷயமும் மிக அருமை. எல்லாமே நம் மனம் தான். மகிழ்ச்சியும் சரி துன்பமும் சரி. வெளியில் இல்லை நம் மனதில்தான்.

மிக்க நன்றி வல்லிம்மா. நல்ல கதை மூலம் நல்ல விஷயம்

துளசிதரன்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன்,
அன்பின் துளசிதரன்.
தாமத பதிலுக்கு மன்னிக்கவும்.
இனிய புத்தாண்டில் என்றும் நல்ல வார்த்தைகளே பிரயோகித்து
நற்பலன் பெறுவோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்.
மிக நன்றி மா.
உங்களுக்கும் ஆதி ,ரோஷ்ணி ,உங்கள் பெற்றோர் அனைவருக்கும் எங்கள் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துகள்.