Blog Archive

Saturday, September 14, 2019

எதிர்பாராமல் நடந்தது 2

வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.


எதிர்பாராமல் நடந்தது 
++++++++++++++++++++++++++மாலா தினம் இரண்டு மணி நேரமாவது நடன அசைவுகளைப் பயிற்சி செய்து
திறன்பட ஆடினாள்.
மதுரைக்கு ஏதோ திருமண விழவிற்காக வந்த கிச்சம்மாப் 
பாட்டியின் வருகை  அவளுக்கு இன்னும் மகிழ்ச்சி கொடுத்தது.
பேத்தியின் அருகாமையில் பாட்டிக்கு இன்னும் மகிழ்ச்சி கூடியது.

மகள் பொன்னாவிடம் தன் ஆசையைத் தெரிவித்தார்.
பொன்னாவுக்கும் மாதவனிடம் மிகுந்த அன்பு உண்டு. மகள் அவனை நினைப்பதையும் அவள் அறிவாள்.

ஆனால் குடும்ப ஒற்றுமை கலைய அவள் விரும்பவில்லை.
அம்மா சொல்வது போல  எல்லாமே சரி என்றாலும், அண்ணா, மதனி மனம் நோக
தான் நடக்கக் கூடாது என்பதில் அவள் வைராக்கியமாக இருந்தாள்.

அம்மாவிடமும் அதையே சொன்னாள்.
மாலா படிக்கட்டும். அவளுக்கு ஏற்ற வரன் கிடைப்பான்.
அவள் மனதில் இன்னும் ஆசையை வளர்க்கக் கூடாது.

இப்போது படிக்காவிட்டால் வாழ்க்கை முழுவதும் சந்தர்ப்பம் கிடைக்காது.
என்று உறுதியாக அம்மாவிடம் மறுத்து விட்டாள்.

கிச்சம்மா பாட்டி சலித்துக் கொள்ளவில்லை.
திருமோகூர், அழகர் கோவில், திருப்பரங்குன்றம், ,மீனாக்ஷி அம்மன் என்று
போய் வந்தார்.
பேத்தியை அழைத்துச் செல்லவும் மறக்கவில்லை.
அந்த அந்தக் கோவில் தல புராணங்களையும்
சொல்லிக் கொண்டே வருவார்.
இடையே ஒரு நாள் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று வந்தார்கள்.
மாதவன் பற்றிப் பேச்சே எடுக்கவில்லை.
காலம் கனியும் போது காரியம் கைகூடும் என்ற திட நம்பிக்கை
அவரிடம் இருந்தது.
பள்ளி ஆண்டுவிழாவும் வந்தது.
அடக்கமான ,ஆடம்பரம் இல்லாத உடையில் 
மாலா மிக அழ்காகத் தெரிந்தாள். அத்தைகள்,அவர்களது 
மக்கள் எல்லோரும் வந்திருந்து கொண்டாடி போனார்கள்.

தேர்வு நாள் வருவதையொட்டி பாட்டிம்மா 
கிளம்பிவிட்டார்.
குழந்தை நல்ல தேர்வடைஅய வேண்டும் என்று யாருக்குத் தான் ஆசை இருக்காது.
அப்போது பதினோராம் வகுப்பு இருந்தது.
மாலா கணக்கு,விஞ்ஞானம் ,சிறப்புத் தமிழ் எல்லாவற்றிலும் நல்ல
தேர்ச்சி பெற்றாள்.
கோடை மாதங்களில் கொடைக்கானல் செல்வது வழக்கம்.
வரதனின் அப்பா அங்கே தனி வீடு வாங்கி இருந்தார்.
மாலா,அவளுடைய அத்தைகள், அவரது மகள்கள் எல்லோரும் உற்சாகக் கிளம்பி அங்கே
சென்றனர்.
வரதனும் பொன்னாவும் வார இறுதிகளில் வந்து சென்றார்கள்.
மே மாத நடுவில் மாதவனின் கல்லூரி சுற்றுலா
அங்கு வந்தது தான் ஒரு கலகலப்புக்குக் காரணமானது.




15 comments:

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான பாடல். கேட்டு ரசித்தேன். நிகழ்ந்ததை அறிய காத்திருக்கிறேன்.

KILLERGEE Devakottai said...

ஆடம்பரம் இல்லாத உடையில்
பெண்கள் அழ்காகத் தெரிவார்கள் என்பது இன்றைய பெண்களுக்கு தெரியவில்லை அம்மா.

தொடர்கிறேன்...

ஜீவி said...

மன்னி மதனியானது எப்படி?..

ஜீவி said...

அமைதியான நதியினிலே ஓடம் -- போல வரிக்கு வரி அமைதி தவழ்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், இனியகாலை வணக்கம். வருகைக்கு நன்றி மா.
கதை எப்படிப் போகிறது என்று பார்க்கலாம்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,

சில நடன நிகழ்ச்சிகளில் அறியாமையால் இப்படி
அவகள் உடை உடுத்துவதைக் கண்டு,
பலரின் கண்கள் ஆடுபவரின் மேல் மட்டுமே படுவதைக் கண்டேன்.
ஆட்டத்தையும் ரசிக்க வேண்டும் அல்லவா.

மாறும் பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜீவீ சார்,
வணக்கம்.
என் பாட்டி, தன் அண்ணா மனைவியை மதினி என்று தான் சொல்வார்கள்.
அந்தப் பழக்கம்.
நான் எங்கள் மாமாக்களின் மனைவிகளை மன்னி என்று அழைப்பேன்.
அதுதான் அப்படி பதிவிட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

நதி இன்னும் கொஞ்சம் வேகமாக ஓட விடலாமா.
பாராட்டுக்கு மிக நன்றி.ஜீவி சார்.

கோமதி அரசு said...

பாடலும் பதிவும் மிக அருமை அக்கா.

பேத்தியை கோவிலுக்கு கூட்டி சென்று அவருக்கு தலவரலாற்றை சொல்லி சென்றதை ரசித்தேன்.

//காலம் கனியும் போது காரியம் கைகூடும் என்ற திட நம்பிக்கை
அவரிடம் இருந்தது.//

பாட்டியின் நம்பிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது.

துரை செல்வராஜூ said...

தெளிந்த நீரோடை போல கதை செல்கிறது...

அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்...

வாழ்க நலம்..

மாதேவி said...

கல்லூரி சுற்றுலாவின் கலகலப்பு ....காத்திருகுகிறோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,

பதறாத காரியம் சிதறாது என்பதில் பாட்டிக்கு மிகவும் நம்பிக்கை.
மிக இளவயதிலேயே துணையை இழந்ததில் அனுபவப் பாடங்கள்
அவரைப் பதப் படுத்தி இருந்தன.

நான் நேசிக்கும் பல பாடல்களில் இதுவும் ஒன்று மா.
நன்மையை நோக்கி நகர்வோம்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,
பரபரப்பில்லாத வயதுக்கு நானும் வந்துவிட்டதால்
எழுத்தும் மெதுவாக நடக்கிறது.

இதுதான வடிவம் என்று தெரிந்தாலும் வண்ணம் சேர்ப்பதில்
நிதானப் படுகிறேன். மிகமிக நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி, தவறாமல் பின்னூட்டம் இடுவது
மனதுக்கு மிக மகிழ்ச்சி.
நீங்களும் எழுத ஆரம்பித்து விட்டீர்களா.

மாதேவி said...

கைபேசியில் பார்பதுடன் சரி.
கடமைகள் இருப்பதில் எழுதுவது என்பது நின்றுபோயுள்ளது.