Blog Archive

Monday, August 05, 2019

பொறுமையின் பலம் 5

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.


++++++++++++++++++++++++++++++++++++++++++
 பொறுமையின் பலம் 5



உப்பிலி அப்பனைத் தொழுது , தம்பிகளும் ,மனைவிகளும் ,அவர்களது செல்வங்களும்   மனம் நிறை மகிழ்ச்சியுடன்
பந்தல்குடிக்குத் திரும்பினர் .
 காலையில் கிளம்புவதற்கு முன் ,தம்பிகள் இருவரும்
அக்காவிடம் கேட்டார்கள். ஏன் மைலி, நாங்கள் தானே திருமாங்கல்யம் வாங்கணும்.
நீ யேன் வாங்கினே என்றதும் ,மைதிலி விளக்கினாள். நம் அம்மாவுக்கு
பெற்றோர் இல்லைடா. நான் அந்த ஸ்தானத்துல செய்கிறேன்.
செய்யச் சொன்னது உங்க அத்திம்பேர்தான் என்று சிரித்தாள்.

ஓ. அப்போசரி. என்றபடி வெற்றிலை,பாக்கு, மஞ்சள் ,மஞ்சள் வாழைப் பழங்களை
வைத்து அக்கா அத்திம்பேர் இருவரையும் வணங்கி,
ஒருவாரம் முன்னயே வந்து நடத்தி வைக்கணும் என்று
சீரியசாக முகத்தை வைத்துக் கொண்ட தம்பிகள் அணைத்துக் கொண்டாள்
மைதிலி.

வந்துடறோம் டா. நீங்கள் பத்திரமாகப் போய் வாருங்கள்
என்று அனுப்பி வைத்தாள்.









வாரிஜாவின் அடுத்த பக்கத்தைப் பார்க்கலாம்.
பிடிவாதம் உண்டு தான். ஆனால் பாசம் வைப்பதிலும் சளைத்தவள் இல்லை.
மைதிலி அம்மாவை விட மங்கா பாட்டியையும், விஜயராகவன் தாத்தாவையும் மிகவே
பிடிக்கும்.

அம்மாவின் கண்டிப்பு இல்லாமல் சொகுசாகப் பாட்டி வீட்டில் வளைய வரப் பிடிக்கும்.
பாட்டியின் திருநெல்வேலிப் பழக்கங்கள் பிடிக்கும்.
தாத்தாவின் சாமர்த்தியம் பிடிக்கும்.
மாமாக்களின் செல்லம் சற்றே அதிகம்.
 இதோ இப்போது நடக்கப் போகிற விழாவில்  ராஜகுமாரியாக வளைய வரப் போவதும் அவள தான். இரண்டு குடும்பங்களுக்கும் ஒரே  பேத்தி .
மற்ற குழந்தைகள் எல்லாம் பசங்களாகப்
போனதில் அப்பாவின் பெற்றோருக்கும்,
அம்மாவின் பெற்றோருக்கும் அவள்தான் முக்கியம்.
அவளுக்குத் தெரியாததது  மங்காப் பாட்டியின் கண்டிப்பு.
அதைப் பந்தல்குடிக்கு வந்த அடுத்த நாளே உணர்ந்தாள்.

பொண்ணே அங்க இங்க நிக்காதே. நிறைய பேர் வருவா போவா. 
நீ உங்க அம்மா, மாமிகள் நிழலை விட்டுப் போகாமல் உதவி செய்ய வேண்டும்.
வாசல் பக்கம் பந்தல் பக்கம் அலைய வேண்டாம்.
என் பிறந்து வீட்டு மனிதர்களும் வந்திருக்கிறார்கள்.

என் அக்கா,திருவேங்கடம் அவள் பேத்தியை அழைத்து வந்திருக்கிறாள்.
இன்னோரு தங்கை அவள் பேரனை பாம்பேலிருந்து அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாள்.

இந்தக் கோமளம் அத்தைகள்ட்ட வாயாடாதே.
இதோ பாரு வரானே  திருமலை அவந்தான் 
பாம்பே பெரியம்மா பேரன். சட்டம் படித்துக் கொண்டிருக்கிறான்
\என்றதுமே வாரிஜாவின் கவனம் திரும்பியது.
22 வயது இளங்காளையாக ,நெடு நெடு உயரத்தோடு
அங்கு வந்து தன் பாட்டியோடு பேசியவனிடம் உடன் அவள் மனம் ஒன்றியது.

16 வயது  சிம்முவும் , எட்டு வயது ஆண்டாளும்  ஆமாம்  அப்பொழுதே என்னைக் கண்டு கொண்டதாகப் பின்னாளில் கேலி செய்வார்.எனக்கு நினைவில்லை.//அவள் கண்ணில்
படவே இல்லை.
திருமலை மற்றவர்கள் கவனம் தன்னிடம் இல்லாத போது
வாரிஜாவின் அழகை ரசித்தான். அவளின் அமரிக்கையான பேச்சு பிடித்திருந்தது. // ஓ வாரிஜாவைன் துடுக்கு வால்  எங்கே போச்சு என்ற கேள்வி வரும். அவள் சிந்தை முழுவதும் திருமலையிடம் போய் விட்டது.

அவள் அவனிடம் பாம்பே பற்றி விசாரிக்க, அவன் கும்பகோணமும், காவிரியும், கோவில்களும் தன்னைப் பிடித்துக் கொண்டதைச் சொல்ல 
அடுத்து வந்த நாட்கள் பறந்தன.

மங்காப் பாட்டிக்கும் விஜயராகவன் தாத்தாவுக்கும் முறையோடு
வேதமந்திரங்கள்  ஒலிக்க, திருமங்கல்ய தாரணம் ஆயிற்று.
பளிச்சென்று பாரம்பரிய உடையில் அனைவரும் மிளிர்ந்தார்கள்.
ஆசீர்வாதம் சொல்லிக் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப் படும்போது
மைதிலிக்கும் உப்பிலிக்கும்  பட்டுப்புடவை, வேஷ்டி , சிகப்புக் கல் பதித்த
நெக்லஸ்  தந்தை தாயை இருவரும் வணங்கினார்கள்.


அடுத்த சம்பந்திகள் சம்பாவனையாக எல்லா சம்பந்திகளுக்கும்
புடவை வேஷ்டி.
மைதிலியின் தம்பிகளுக்கும் மனைவிகளுக்கும் நகையும் பட்டும் வேஷ்டியுமாகக் 
கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

பேத்தி பேரன் களை அருகில் அழைத்து அவர்களுக்குப் பொருத்தமான பரிசுகளை வழங்கினார்
தாத்தா. வாரிஜாவுக்கு தனியாக கெட்டியான சங்கிலியில் அன்னப் பட்சி கோர்த்த செயின்.
அதைப் போட்டுக்கொண்ட அடுத்த நிமிடம் வாரிஜாவின் கண்கள் திருமலையைத் தேடின.

அவன் முகத்தில் தெரிந்த ஆமோதிப்பைப் பெருமையாக
ஏற்றுக் கொண்டாள். இதை யெல்லாம் பார்க்க வேண்டிய கண்கள் கவனித்துக் கொண்டன.


உப்பிலி, மைதிலி அருகே வந்து //நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் 
விழியிலே.// என்று சிரிக்காமல் சொல்ல, //சட்டப் படிப்பு என்னாச்சு என் அருமை 
மாமா// மைதிலி  கேட்க அது கல்யாணத்தில் வந்து முடிந்தது //.

உங்க பெண்ணின் வீராப்பு என்று வினவ, அது சொக்கன் கண்ட மீனாட்சி
போலக் காற்றோடு போச்சு என்று பலமாகச் சிரிக்க
மச்சினர்களும் வந்து கலந்து கொண்டார்கள்.

எப்பொழுது திருமணம். /இதோ திருவேங்கடம் பாட்டியிடமும் 
ஸ்ரீனிவாசன் தாத்தாவிடமும் கேட்டு விடலாம்.

மதிய பூரண உணவுக்குப் பின் அனைவரும் உட்கார்ந்து பேச
அன்றே சம்ப்ரதாயமாகப் பாக்கு வெற்றிலை 
மாற்றிக் கொண்டாகிவிட்டது.
 வரப்போகும் தை மாதத்தில்  இதே பந்தல் குடியில்
 திருவாளர் உப்பிலியின் மகளும், பந்த நல்லூர் சாரங்கபாணி அய்யங்காரின் பௌத்திரியுமான 
வாரிஜா என்கிற விஜயவல்லியை, திருநெல்வேலி ஸ்ரீனிவாச அய்யங்காரின் தௌஹித்ரனும்
ஸ்ரீ சுந்தரராஜனின் புத்திரனுமான திருமலை என்கிற அழகிய நம்பிக்குத்
திருமணம் நடத்த உப்பிலியப்பன், திருக்குறுங்குடி நம்பி ஆசிகளுடன்
நிச்சயிக்கப் பட்டது.
வாரிஜாவின் வாய்த்துடுக்கு எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை.
மும்முரமாகச் சமைக்கக் கற்றுக் கொண்டாள். 
பாம்பே தபாலாபீஸும், கும்பகோணம் தபால் ஆபீசும்
உறங்கவே இல்லையாம்.அவ்வளவு கடிதங்கள்.

மங்காப்பாட்டி 


கதை முடிந்தது. வாரிஜா வின் ஆசையான பட்ட படிப்பும்  பூர்த்தியானது.
பாம்பேயில் திருமணம் முடித்த கையேடு கல்லூரியில் சேர்க்கப் பட்டாள் .

                                         ++++++சுபம்+++++

.


20 comments:

ஜீவி said...

ஒப்பிலியப்பன் எங்கள் குல தெய்வம். சமீபத்தில் எங்கள் பையன் இந்தியா வந்திருந்த பொழுது தரிசித்து விட்டு வந்தோம்.

ஜீவி said...

கவர்ந்த வரிகள்:

பாட்டியின் திருநெல்வேலி பழக்கங்களும் பிடிக்கும்
தாத்தாவின் சாமர்த்தியமும் பிடிக்கும்.

பளிச்சென்று பாரம்பரிய உடையில் அனைவரும் மிளிர்ந்தார்கள்.

சிவப்புக் கல் பதித்த நெக்லஸ் (அது என்ன எப்பப் பார்த்தாலும் சிவப்புக்கல் பதித்த..? அந்த காலத்து ராசியோ?)

கெட்டியான சங்கிலியில் அன்னபட்சி கோர்த்த செயின்
(கண் முன்னேயே டாலடிக்கறது!)

திருவளர்ச் செல்வன் உப்பிலிக்கும்
திருவளர்ச் செல்வி வாரிஜாவுக்கும்

-- அட! அதுக்குள்ளேயே டும் டும்ம்ம்மா....

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் ஜீவி சார்.
நீங்களும் கும்பகோணமா. சரிதான்.
என் மாமியார் பாண்டி நாடு. மாமனார் சோழ நாடு.

வல்லிசிம்ஹன் said...

பாட்டியின் திருநெல்வேலி பழக்கங்களும் பிடிக்கும்
தாத்தாவின் சாமர்த்தியமும் பிடிக்கும்.//

ஆமாம் ஜீவி சார்.
வெட்டிண்டு வான்னு சொன்னால் கட்டிக் கொண்டு வந்துவிடும் சுறு சுறுப்புத் தாத்தா. ஹாஹா.
அப்போது சிகப்புக்கல் ரொம்ப பிரபலம். கெம்ப் கல்லாக இருந்தது என்றால் இன்னும் சிறப்பு.
அப்பாவுடைய அம்மாவை நினைத்தால் கழுத்தும் அட்டிகையும் நினைவுக்கு வரும்.

இந்தத் திருமணம் முன்பே முடிவானது தான். வாரிஜா,திருமலைக்கு
மட்டும் தான் தெரியாது.பாட்டிகளும் தாத்தாக்களும் எடுத்த முடிவு.🙏🙏🙏🙏

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் அம்மா...

நாங்கள் கூட இதோ ஆண்டவன் அருளோடு வரும் பதினேழாம் தேதி ஒப்பிலியப்பனை தரிசிக்க வேண்டி காத்து நிற்கிறோம்.

ஸ்ரீராம். said...

கனடா பயண திட்டத்தால் சடசடவென வாரிஜாவின் திருமணம் முடிந்துவிட்டது! வாரிஜா... இது மாதிரி பெயர் இதுவரை கேள்விப்படாதது.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
என்றும் நிற்கும் ஒப்பில்லா அப்பனை நல்ல படியாகச் சேவித்து வாருங்கள்.

இந்தப் பயணத்திற்கு முன்பே முடித்திருக்க வேண்டும்.
டிடைல்ஸ் இல்லாமல் எழுத முடியவில்லை.
அதனால் நீண்டது கதை.
என் வீட்டு சம்பந்தமாக சில வேலைகளை முடிக்க வேண்டி இருந்தது.

பயணம் சென்று வந்து முடிக்க மனமில்லை.
அப்பாடி இப்போது தெரிகிறதா.
வாரிஜா இன்னும் இருக்கிறார் சதாபிஷேகம் செய்து கொண்டு.
தாமரையின் இன்னோரு பெயர் வாரிஜம் என்று நினைக்கிறேன்.
மீண்டும் பார்க்கலாம்.

Geetha Sambasivam said...

மங்காப் பாட்டியை அடிக்கடி பார்த்துப் பழகிப் பேசிய மாதிரி இருக்கு. வாரிஜாவின் துடுக்குத்தனம் போய் நல்லபடியாக மாறியது குறித்து சந்தோஷம். கொஞ்சம் பயம்மாகவே இருந்தது. சஷ்டி அப்தபூர்த்தியில் என்ன வாய்த்துடுக்கைக் காட்டப் போகிறாளோ என்பதை நினைத்துக் கவலையாக இருந்தது. நல்லபடியாக முடித்துவிட்டீர்கள். கனடா பயணமும் நல்லபடியாகப் போகட்டும். நல்லபடியாகப் போய் எல்லாவற்றையும் பார்த்து ரசித்துவிட்டு வாருங்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

நிகழ்விற்கு ஏற்ற பாடல்... அருமை அம்மா...

கோமதி அரசு said...

அருமையான பாடல் பகிர்வு.
அன்பான குடும்ப விழா. விழாவிற்கு அந்த பையன் , விழாவிற்கு வந்த பெண் திருமணமுடிவது முன்பு வழக்கம் தானே! சொல்லி சென்ற விதம் மிக அருமை.இன்னும் இரண்டு மூன்று நாள் கதையை அருமையான பாடல்களுடன் கொண்டு போய் இருக்கலாம் என்று தோன்றவைக்கும் எழுத்து.
பயணம், வேலை குறுக்கே வந்து விட்டது.
வாரிஜாவிற்கு கதை வேறு முறையில் தொடருங்கள்.

பயணமும், வேலையும் இனிதாக முடிய உப்பிலி அப்பன் துணை செய்வார்.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... சுபமாக முடிந்தது வாரிஜா திருமணம்.

பதிவினை மிகவும் இரசிக்க முடிந்தது வல்லிம்மா....

உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள். சென்று திரும்பியதும் பயணம் பற்றியும் எழுதுங்கள்.

KILLERGEE Devakottai said...

சுபமான இறுதிப்பகுதி ஒப்பிலியப்பன் அருள் புரியட்டும். வாழ்க நலம்.

Thulasidharan V Thillaiakathu said...

அட! அதுக்குள்ள வாரிஜா திருமலை மனம் பரிமாறி கல்யாணமும் நடந்துவிட்டதா?!!! ரொம்பவே சீக்கிரமோ? அது சரி வயது வந்த பெண்ணை எல்லாம் வீட்டில் வைத்துக் கொண்டா இருப்பார்கள் பொறுப்பா ஒருவனிடம் ஒப்படைத்துவிடணும் என்று மங்கா பாட்டி சொல்வது கேட்கிறது!!!

மும்பை தபால் நிலையமும், கும்பகோணம் தபால் நிலையமும் இன்னும் கொஞ்ச நாட்கள் கூட உறங்காமல் இருந்திருக்கலாமோ என்று ஹா ஹா ஹா..

எப்படியோ வாரிஜாவின் துடுக்கு மறைந்து எல்லாம் நல்லபடியாக முடிந்தது. வாரிஜாவின் துடுக்கினால், அத்தைகளினால் ஏதேனும் கொஞ்சம் மனத்தாங்கள் பகுதி வருமோ என்று நினைத்திருந்தேன். சுமூகமாகப் போய் டக்கென்று டும் டும்...

ரசித்தேன் வல்லிம்மா...நன்றாக இருந்தது ஆனால் விரைவில் முடிந்துவிட்டதே என்றும் இருந்தது!!

கீதா


Thulasidharan V Thillaiakathu said...

நிறைய வரிகளை ரசித்தேன் வல்லிம்மா...

//உப்பிலி, மைதிலி அருகே வந்து //நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும்
விழியிலே.// என்று சிரிக்காமல் சொல்ல, //சட்டப் படிப்பு என்னாச்சு என் அருமை
மாமா//

//உங்க பெண்ணின் வீராப்பு என்று வினவ, அது சொக்கன் கண்ட மீனாட்சி
போலக் காற்றோடு போச்சு //

அட நம்மூரு பையன்!!!

கீதா

மாதேவி said...

பட்டப் படிப்பு பூர்தியானது மகிழ்சியே.

கரந்தை ஜெயக்குமார் said...

பொருத்தமான பாடல்

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா. பயணம் இனிதே முடிந்து இதோ வீடு வந்து விட்டோம்.
இன்னும் கண்ணிலேயே நிற்கும் வட அமெரிக்கப் பசுமை.
மங்காப் பாட்டியாகத் தோற்றம் தருவது என் நாத்தனார் பத்மா பார்த்தசாரதி.
உள்ளத்தாலும் உடலாலும் அவ்வளவு உழைத்தவர்,. நல் வாழ்வு
வாழ்ந்து கடந்த கார்த்திகையில் இறைவனடி சேர்ந்தார்.

வாரிஜாவின் வாய்த்துடுக்கு பெற்றோருடன் முடிந்தது.
எப்பொழுதும் அடைக்கலம் கொடுக்கும்
மங்காப்பாட்டியே எச்சரித்து விட்டதால்
அடங்கி நடந்தாள்.

அவள் விருப்பப்பட்ட படியே சட்டக் கல்லூரியிலும்
சேர்ந்து படிக்க முடிந்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா.
இனிய காலை வணக்கம்.

இன்னும் எழுத ஆசைதான். ஆனால் சரியாகக் கேட்டு எழுத வேண்டும் . கிளம்பும் அவசரத்தில்
முடித்தால் விவரம் பற்றாமல் போய் விடும்.
அதனால் தான் சுருக்கமாக முடித்தேன்.
மீண்டும் எழுதலாம். நம் ஊரில் பாடல்களுக்கா
குறைவு.
அதுவும் உங்களைப் போல ரசிப்பவர்கள் இருக்கும் போது
எழுதுவதற்குத் தானே உற்சாகம் வந்து விடுகிறது.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் இனிய காலை வணக்கம் மா.
பாடல்கள் அதுவும் பழைய பாடல்கள் என்றும்
அருமை. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் ,
இனிய காலை வணக்கம் மா. நீங்கள் எல்லோரும் வாழ்த்தியபடி
பயணம் சென்று திரும்பி வந்து விட்டோம்.கொண்டு வந்த
துணிகள் தோய்த்து , பள்ளி வேலைகள்
ஆரம்பிக்க வேண்டும்.

தொடர்ந்து படித்துப் பின்னூட்டம் இட்டதற்கும் நன்றி.
பயணத்தில் எடுத்த படங்களை
சீரமைத்துப் பிறகே பயணக் கதைகளை
\எழுத வேண்டும்.
முதலில் மற்றப் பதிவுகளைப் படிக்க வேண்டும்.
நன்றி ராஜா.