Blog Archive

Thursday, July 18, 2019

ஒப்பந்தம் 2

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்

ஒப்பந்தம் 2

 ராகவனின் நினைவுகள் பசுமை மாறாமல் பதிந்திருந்தது,முதன் முதலாக
ஜானுவைப் பார்த்ததும் ,
தான் முந்தின வருடம் பார்த்த சீனத் திரைப்படம் சூசி வாங்க்கின்
நினைவு வந்தது. சின்னவடிவம். உணர்ச்சியும் குதூகலமும் நிறைந்த
கண்கள்.
அன்றிலிருந்து ஜானகி சூசியாக இடம் பெற்றாள்.
முதல் தடவை பேசும்போது இதைச் சொன்னதும்
அவர் எதிர்பாராத கோபம் அவள் முகத்தில்.
நான் என்ன சப்பை மூக்கும் சின்னக் கண்ணுமாக இருக்கிறேனா
என்று கேட்டவளை ஆச்சர்யத்தோடு பார்த்தார்.
நான் காம்ப்ளிமெண்ட் செய்தேன்மா என்று சொன்ன வினாடியே
சுதாரித்துக் கொண்டார்,.
நம்மை விடச் சின்ன வயது. அடங்கிய, கொஞ்சம் exposure போதாத
இந்தப் பெண்ணிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

என்று தீர்மானித்துக் கொண்டு அவளைத் திசை திருப்பி
பேச்சைத் தொடர்ந்தார்.அவள் இசை நாட்டம், படிக்கும் வழக்கம்,
திரைப் படங்கள் எல்லாம் ஒத்துப் போயும் ,தன்னை விடச்
சிறிது மாறுபட்டும் இருப்பதைக் கண்டு அவள் வழியே
புதுக்கோட்டை வாழ்வைத் தொடங்கினார்.

மூன்று மகன் களும், ஒரு மகளும் பிறந்தும் அவர்கள் இடையே
அந்தக் காதல் குறையவே இல்லை.இப்போதும் அவர் ஏதாவது செய்தி
சொன்னால் ஜானுவின் கண்கள் விரிந்து,அதிசயமான
விவரம் கேட்பது போலத் தோற்றம் கொடுக்கும்.

நினைவுகள் தடைப்பட ஜானுவை நோக்கினார்.
தன் கனவுகள் நிறைவேறத் துணை இருந்தவளைத் தான் எக்காரணம் கொண்டும்
பிரிய முடியாது,கடவுள் துணையோடு நினைத்ததை
நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் உறுதிப்பட
தானும் எதிர் இருக்கைக்கு மாறி உறங்கத் துவங்கினார்.
உடல் அலுப்பு ,அவர்களை நன்றாக உறங்க வைத்தது.
 விழுப்புரம் தாண்டி செங்கல்பட்டு வந்ததும்
வெளிச்சம் கண்ணில் பட ஜானகி விழித்துக் கொண்டார்.

இங்கே காப்பி நன்றாக இருக்குமே, வாங்கினால் தேவலை
என்ற நினைப்போடு, முகம் கழுவிய பிறகு
வந்து கணவரைப் பார்த்தார்.
நல்ல உறக்கம். எழுப்ப வேண்டாம். தானே காப்பி வாங்கலாம் என்று
தங்கள் இடத்திலிருந்து,ரயிலின் கதவைத் திறந்து வழக்கமான
காப்பி ஸ்டாலைத் தேடினார்.
இதெல்லாம் பழகிக் கொள்ள வைத்திருந்தது இந்த நான்கு
வருட அலைச்சல்.அதற்குள் அந்தப் பெட்டியில் இருந்த பரிசோதகரே வந்து
அம்மா காப்பி நான் வாங்கித் தருகிறேன்.
சற்று நேரத்தில் புறப்பட்டுவிடும்.
நீங்கள் உங்கள் இடத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.
யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்றபடி சென்றார்.

//ஜானு, உள்ள வாம்மா.நான் போயிருப்பேனே// என்று குரல் கொடுத்த கணவரிடம்
பல் துவக்க பசையையும், ப்ரஷையும் எடுத்துக் கொடுத்தார்.

இன்னும் கொஞ்சம் நீங்கள் தூங்கி இருக்கலாமே/என்று
சொல்லி, தங்கள் பைகளை எடுத்து வைக்கத் துவங்கினார்.

ஆமாம் இந்த ரயில் முன்புபோல் இல்லை. திரும்பிப் பார்ப்பதற்குள் தாம்பரம் ,பின் எழும்பூர்
என்றபடி நிதானமாக எழுந்தார் ராகவன்.

காப்பியும் வந்தது. இருவரும் குடித்துக் கொண்டிருக்கும் போதே
ரயில் நகரத் தொடங்கியது.
தம்பி ஸ்ரீனிவாசனுக்குச் சொல்லிட்டயாம்மா. என்று வினவிய
கணவனை ஆறுதலாகப் பார்த்த ஜானு, நமக்கு முன்னாலயே
அவன் டாக்டரிடம் கடைசி பரிசோதனைக்கு ஏற்பாடு செய்துவிட்டான். நாளைக்கு
 செவ்வாய்க்கிழமை நல்ல நாள். போய்விட்டு வந்து விடலாம் என்றார்.
அன்றிலிருந்து இன்று வரை மாறவில்லை அவன் என்று பெருமூச்செரிந்தார்
ராகவன்.
நம் காலத்து வளர்ப்பு அப்படி.நம் குழந்தைகளும் முறை மாறி
என்றுமே நடந்ததில்லையே..நீங்கள் தான் புதிதாக ரிஷிகேசம் என்று
ஆரம்பிக்கிறீர்கள்.
இது புதிதில்லை ஜானு. நம் முன்னோர்கள் செய்ததுதான்.
சரியான நேரத்தில் வானப்ரஸ்தம் செல்லணும்.

பிள்ளைகள் வளர இடம் கொடுக்க வேண்டும்.
நான் காசிப் பயணத்தின் போதே கேட்டேனே நினைவிருக்கிறதா
என்றவரிடம், மெதுவாக ஜானும சொன்னார்,ஆமாம்
கடமைகள் முடிந்தால் இங்கே வந்துவிடலாம் என்றேன்//

இருவரின் முகத்திலும் பழைய நினைவுகள்.
இப்பதான் நீங்க குடையும் கையுமாக உங்கள் அத்தையுடன்,
கல்யாண சத்திரத்திலிருந்து காசியாத்திரை போனதும்,
அப்பா, உங்களை, மந்திரம் சொல்லி
கல்யாணப் பந்தலுக்கு அழைத்து வந்ததும்
கண்முன் தோன்றுகிறது.
ஆமாம் நீயும் குனிந்த தலை நிமிராமல்
அடக்க ஒடுக்கமாக வந்து நின்றாயே. அப்பா என்ன மல்லிகை வாசனை.

என்று நான் நினைத்ததும்...என்றவரை, சரியான யாதோன் கி பாராத்
நீங்க என்று கேலி செய்தார் ஜானு........அடுத்த பாகம் சென்ட்ரலில் நிறைவுறும்.

17 comments:

ஸ்ரீராம். said...

இனியதொரு பி பி எஸ் பாடல். காபி வாங்க இறங்கிய வயதான அம்மாவை எச்சரித்து தானே காபி வாங்கிக்கொடுக்க இப்போது யாராவது முன்வருவார்களா? ராகவன் ஜானுவின் புரிந்துணர்வு எனக்கு ------ நினைவூட்டுகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் இனிய காலை வணக்கம்,.
ஓ நடக்குமே. இந்த இரண்டு பேரும் சென்னைக்கு வருடத்துக்கு நான்கு
தடவை, இதே வண்டியில், இதே எஸ்1 கோச்சில் ,முதல் வகுப்பில் ,தெரிந்த பரிசோதகரோடு சென்று வந்தால்
இதுபோல நடக்க 80 பர்செண்ட் சான்ஸ் உண்டுமா.
நம் ஹீரோ யாரு, ஹீரோயின் அம்மா யாரு.
நடக்காதா என்ன.
இதோ இன்னோரு ஜோடி தெரிந்துவிட்டதே.
வளமுடன் பாபாவின் அருளுடன் இருவரும் நன்றாக இருப்பீர்கள்
ராஜா.

Geetha Sambasivam said...

நல்ல இனிமையான நினைவுகள். இப்போவும் டிடிஆரோ, அல்லது ரயிலில் பயணிக்கும் ரயில்வே ஊழியரோ காஃபி அல்லது பேப்பர் வாங்கித் தர உதவுகின்றனர். எப்போவானும் எங்கேயானும் ஒரு சிலர் கொஞ்சம் முறைத்துக் கொண்டு போகிறார்கள். ஆனால் பெரும்பாலும் உதவிகள் கிடைக்கின்றன. கூடப் பயணிப்பவர்களிலேயே சிலர் உதவுவதும் உண்டு.

வெங்கட் நாகராஜ் said...

நெகிழ்ச்சி.

அன்பும் பாசமும் இருந்து விட்டால் உறவுகள் சுகம்.

அடுத்த பாகத்திற்காகக் காத்திருக்கிறேன்.

KILLERGEE Devakottai said...

இனியதொரு பாடவோடு நினைவுகளை பகிர்ந்த விதம் அருமை அம்மா.

கோமதி அரசு said...

பதிவும், பாடலும் மிக அருமை.
அன்பும், நேசமும் கொடுக்க கொடுக்க திரும்ப கிடைத்தால் ஆனந்ததிற்கு எல்லை ஏது!

//அவர் ஏதாவது செய்தி
சொன்னால் ஜானுவின் கண்கள் விரிந்து,அதிசயமான
விவரம் கேட்பது போலத் தோற்றம் கொடுக்கும்.//

அதுதான் வேண்டும். இதைதான் எதிர்பார்க்கிறார்கள் .

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா இப்படி எல்லாம் தம்பதிகள் இருந்தாலும் வெகு அபூர்வம் என்றே தோன்றுகிறது எனக்கு. நல்ல புரிதல். ஓரு தம்பதியர் எனக்கு நினைவில் வருகிறார்களே!!!!!!!!!!!!!!!

என்ன ஒரு பாசம்.

எனக்கு இப்போது புரிந்தது அம்மா. எபியில் ஒரு வியாழன் பதிவில் ஸ்ரீராம் சுகி சிவம் சொல்லியிருந்த ஒரு கருத்து வானப்பிரஸ்தம்/முதியோர் இல்லம் பற்றி சொல்லியிருந்த கருத்தை வைத்து சூப்பரா சொல்லியிருக்கீங்க..

அது சரி டிக்கெட் பரிசோதகர் இப்படி காஃபி எல்லாம் வாங்கிக் கொடுக்கிறாரா?!!! ஹா ஹா ஹா கொஞ்சம் முந்தைய காலம் போலும். இப்போது டிக்கெட் பரிசோதகரை ரயிலில் பல சமயங்களில் தேட வேண்டியதாக உள்ளது!!!!!!!!!!!

அடுத்த பாகத்திற்கு ஆவலுடன்!!

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
நன்றி.
இது போல டிடியார் நாங்கள் கும்பகோணம் பயணத்திலிருந்து திரும்பும்போது
மிகவும் உதவி புரிந்தார்.
இவருக்கு சளி, வெயிலில் அலைந்து மிகுந்த துன்பம் கொடுத்த போது
தன்னிடம் இருந்த இருமல் சிரப்பை கொடுத்தார்.

திருப்பி வாங்கிக் கொள்ளக் கூட இல்லை.
இருமல் அவதி இல்லாமல் உறங்கினார்.
நான் இங்கே குறிப்பிடும் தம்பதியர் என் சின்ன மாமனார் ,மாமியார்,.
மாமியார் குள்ளம், மாமனார் 6அடி 5 அங்குலம்.,
அவர்கள் வாழ்வின் சிறு துளிகளைச் சேர்த்துக் கொள்கிறேன் மா.
புரிதலும் பாசமும் இருந்தால் எவ்வளவு தூரமும் பயணிக்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
உங்கள் வாழ்வுலும் எல்லா சந்தோஷங்களும் நிறைய என் ஆசிகள்.
தொடர்ந்து படிப்பதற்கு மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவ கோட்டைஜி, மனம் நிறை நன்றி. வளம் எல்லோரையும் சூழட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தை அம்மா.
இல்லறத்தில் கேட்டலும், மறு சொல் சொல்லாமல் இருப்பதும், சொல்லும்போது இனிமை கூட்டிச் சொல்வதும் இருவருக்குமே உகந்தது.

அந்த இல்லறம் இருவரையும் செழிப்பாக்கும்.
தவறாமல் வந்து கருத்து சொல்வதற்கு மிக் மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா ரங்கன்,
நீங்கள் சொல்வதும் உண்மையே.
இது போலத் தம்பதிகள் அமைந்து இருக்கிறார்கள்.
சிலர் விலகியும் இருக்கிறார்கள்.
எல்லாம் மனதில் இருக்கும் நேசத்தைப் பொறுத்து.

வானப்ரஸ்தம் என்பது மஹாபாரத காலத்தில் இருந்து எடுத்த வார்த்தை. நான் ,திரு சுகிசிவம் அவர்களின் பகிர்வு படிக்கவில்லை.

வலைப்பூக்களின் பொற்காலங்களில் நாங்கள் எல்லோரும் பகிர்ந்து கொண்ட விஷயம் இந்த
முதியோர் வாழ்வு.
அது ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால் என்று நினைக்கிறேன்.

அந்தப் பரிசோதகர் அவர்கள் ஊரிலிருப்பவர் தான்.
புதுக்கோட்டை அவருடைய Base.
இல்லாவிட்டாலும் உதவுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நன்றி மா. அனைத்து தம்பதிகளும் நலமாக இருக்கணும்.

மாதேவி said...

அவர்கள் மனம்போல நல்லதே நடக்கட்டும்.

ஜீவி said...

//ஜானகி விழித்துக் கொண்டார்.//

ஆமாம், இந்த இடத்திலிருந்து ஏன் ஜானகிக்கு 'ர்' விகுதி போட்டு எழுதுகிறீர்கள், தெரியவில்லை.

குடை சகிதமாய் காசி யாத்திரை--- இந்த மாதிரி நினைவுகளை முன்னேயும் பின்னேயும் புரட்டிப் போட்டு எழுத எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

சென்டரலில், அடுத்த பகுதியில் முடிகிறதா?.. ஏன்? ஏன்? ஏன்?....

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் ஜீவி சார்.
ஓஹோ. திடீர்னு ர் போட்டு விட்டேனா.
மாமியார் நினைவு வந்திருக்கும்,
இனிமே ள் ஆக்கிவிடலாம். ஆமாம் நினைவுகளுக்குச் செல்வதும்
நிகழ் காலத்துக்குத் திரும்புவதும்
இதே என் வாழ்க்கை ஆகிவிட்டது. கதையும் அதே போல செல்கிறது.

சென்ட்ரலில் அவர்களின் புது வாழ்க்கை ஆரம்பிக்கிறது.
உங்களுக்கு என் வழக்கம் தெரியாது.
மஹாபாரதமாகப் பழைய தொடர்கள் 12 அத்தியாயங்கள் எழுதி
இருக்கிறேன்.
சுருங்கச் சொல்லலாமே என்ற திட்டம் இந்தக் கதைக்கு.
இந்த மாமியாரின் பிள்ளைக்கே இப்போது 74 ஆகிவிட்டது.
நன்றி சார். பெரிய கிரீடம் வைத்த மாதிரி இருக்கிறது.

துரை செல்வராஜூ said...

அழகாக எழுதியிருக்கின்றீர்கள்..
மனம் நெகிழ்கின்றது..