Blog Archive

Tuesday, May 21, 2019

வேப்பம்பூ ரசம்.....கதை...1

வல்லிசிம்ஹன்

வேப்பம்பூ ரசம்.....கதை.

Vallisimhan
எல்லோரும்  இன்பமாக வாழ  என்  வாழ்த்துகள்.


ஜானம்மா   திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்திருந்தார்.
 காலையில் உள் சென்ற காப்பி செரித்துவிட்டு மறு பசி வந்துவிட்டது.

பாட்டீ.... வேப்பம்பூ ரசம் எப்படி வைக்கணும். அம்மா கேட்கிறாங்க
என்று கீச்சிட்டாள் பேத்தி குயிலி.

சிரமப்பட்டு கீழே இறங்கி உள்ளே சென்ற ஜானம்மா, மருமகளிடம் 
ரசம் வைக்கும் விதத்தைச் சொல்லிவிட்டு,
ஏம்மா கொஞ்சம் கஞ்சி கொடுக்கிறாயா தலை சுத்தற மாதிரி
இருக்கு என்று சொன்னதும் முகம் சுளுக்கினாள் மருமகள் செண்பகா.

ஏற்கனவே உங்க பெரிய மகனும் குடும்பமும் வராங்கன்னு
போன் வந்திருக்கு. இந்த ஊரோட வரப் போறாங்களாமே.

கண்டிப்பா சொல்லி வைங்க ஊருக்கு வெளிய தாம்பரம்
 பக்கத்துல வீடு பார்த்துக்கச் சொல்லி.
அடிக்கடி வரப் போக இருக்க வேண்டாம் என்று சிடுசிடுத்தாள்.

அப்படியா, எனக்குத் தெரியாதே எப்ப வராங்க என்றார்.
மதியம் சாப்பாட்டுக்கு வராங்க.
வேப்பம்பூ ரசம் வைக்கப் போறியா. கசப்பாயிடுமே தாயி என்று கெஞ்சினாள்
மாமியார்.
கசக்கட்டும். பாவக்காய் கறியும், வெறும் குழம்பும் இன்னிக்கு செய்தாச்சு.
அவங்களே புரிஞ்சுக்கட்டும் என்று சமையலறைக்குள்
புகுந்து கொண்ட மருமகளைத் திகைப்போடு பார்த்தார்.
தனக்குக் கஞ்சி கிடைக்காது என்று புரிந்து கொண்டு 
வாசல் திண்ணையில் படுத்துக் கொண்டார்.
பேத்தி மங்களா ,பாட்டியிடம் இரண்டு பிஸ்கட்டைக் கையில் வைத்து அழுத்தினாள்.
ரகசியக் குரலில் சாப்பிடு பாட்டி. மோர் கொண்டுவரேன் என்று ஓடிவிட்டாள்.

உள்ளே செண்பகா தன் தாயிடம் உரக்கப் பேசுவது கேட்டது. 
அந்த அம்மாவும்  இல்லாதப் பட்டவங்க கண்ணுல படாம முக்கியமான
பொருளை மறைச்சு வச்சிடு.
கெட்டும் பட்டணம் சேருன்னு வராங்க போல என்று மகளுக்குப்
புத்திமதி சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஜானம்மாவின் பெரிய மகன் கொஞ்சம் அப்பாவி. 
ஏதோ போக்குவரத்துக் கழகத்தில்  சிறிய வேலையில்
இருந்தான். அவனுக்கும் இரண்டு மகன்கள்  பத்து,எட்டு வயதில் இருந்தார்கள்.

மருமகள் வாடாமல்லி, ஜானம்மாவின் சொந்த ஊரான செய்யாறிலிருந்து வந்தவள்.
கிராமப் பழக்க வழக்கங்களோடு கட்டுப் பெட்டியாக இருப்பாள்.
அதுவே செண்பகத்துக்கு இளப்பமாகத் தெரியும்.
சென்னையில்  தண்டையார்பேட்டையில் வளர்ந்தவளுக்கு
பள்ளி இறுதி வரை படிக்க வாய்ப்பு கிடைத்தது.
கணவனுடன் பேசிப் பழகி ,தனக்குப் பிடித்த பொருட்களை
 வாங்கிச் சேமித்து வைத்திருந்தாள். மாமியாரை வீட்டுக்குக் காவல் வைத்துவிட்டு, சினிமா
,உறவினர் வீடு என்று சென்று வர ஒரு ஸ்கூட்டரும் 
வாங்க வைத்திருந்தாள்.
மருமகளின் சாமர்த்தியத்தை மெச்சினாலும்,
தன்னை ஒதுக்கி வைப்பதைப் புரிந்து பல நேரம் வருந்துவார் ஜானம்மா.

பெரியவனுக்கு வருமானம் போதாது. தான் அவனுக்குப் பாரமாக இருக்கக்
கூடாது என்றே சிறியவனுடன்  இருந்தார். தொடரும்.

17 comments:

கோமதி அரசு said...

அக்கா, கதை படித்த மாதிரி இருக்கே!
நம்ம ஏரியாவில் எழுதிய கதையா?

அருமையான கதை நினைவிருக்கிறது.
தொடர்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்கிறேன் அம்மா...

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி இளங்காலை இனிய வணக்கம்.
இந்தக் கதை எழுதியதும் கூகிள் கணக்கு விட்டு ப்ளாகருக்கு
மாறியதும் வந்த பின்னூட்டங்களைக் காணவில்லை.

இப்பொழுது மகனுக்கு அனுப்ப மீண்டும் பார்த்த போது
பின்னூட்டங்கள் காணவில்லை மா. அதிர்ச்சியாகிவிட்டது.

அதனால் மீண்டும் பதிவிட்டேன். இப்போது
பார்த்தால் நீங்கள் படித்திருப்பது தெரிய வந்தது, மிக நன்றி மா.
அடுத்த பாகம் வெளியிட வேண்டாம்.என்றும் வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

இது மீள் பதிவு ராஜா. இனிய காலை வணக்கம் தனபாலன்.

ஸ்ரீராம். said...

ஆமாம் அம்மா.. படித்த நினைவு இருக்கிறது.

DD முதலிலேயே சொன்னார். கூகுள் பின்னூட்டங்களை பேக்கப் எடுத்துக் கொள்ளாவிட்டால் திரும்ப எடுக்க முடியாது என்று...

Geetha Sambasivam said...

கதை நானும் படிச்சிருக்கேன் என்றாலும் முழவதையும் வெளியிடுங்கள் வல்லி. நல்ல கதை!

KILLERGEE Devakottai said...

ஜானம்மாவைப் போன்ற பாட்டிகள் பலரும் உண்டு நடைமுறை வாழ்வில்.

தொடர்கிறேன் அம்மா.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நம் அண்டை வீட்டில் நடப்பதைப்போலுள்ளது. தொடர்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா நான் வாசிக்கவில்லை இந்தக் கதை அப்போது...

ஆரம்பமே வேப்பம்பூ போல கொஞ்சம் கசப்பாகத் தொடங்கியிருக்கிறதே! மாங்காபச்சடி போல முடியும் என்று நம்புகிறேன் ஹா ஹா ஹா..

வல்லிம்மா வேப்பம் பூ ரசம் கசக்குமா? வேப்பம்பூவை இறுதியில் பரிமாறும் போது சேர்த்தால் கசக்காது இல்லையாம்மா..?

கதை அருமையாக இருக்கு. ஆரம்பமே அசத்தல்...இப்படித் தொடரும் போட்டுவிட்டீங்களே. அடுத்து என்னனு வெயிட்டிங்க்..

கீதா

மாதேவி said...

நானும் படித்த நினைவு.

வல்லிசிம்ஹன் said...

will reply tomorrow friends

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். இப்போது சின்ன மகன் தமிழ் படிக்க ஆரம்பித்திருக்கிறான்.
அவனுக்கு நல்ல பயிற்சி.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, மூன்று பதிவுகளையும் போட்டு விட்டேன்.

இப்போது அடுத்த தலைமுறைக் குழந்தைகள் மிக ஒற்றுமையாக ஒன்றாக
வளர்கிறார்கள்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவ கோட்டை ஜி,
வயதானவர்களின் கஷ்டம் நினைத்தால் துயரம் தான். இளமையின் துடிப்பில் , கணவனைப் பெற்றவளை
அவமதித்தால் ,நாளை நமக்கும் அது வரும் என்றும் பலர் நினைப்பதே இல்லை.

காலம் கடந்து உணர்வதால் பலனும் இல்லை. நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஐயா,
நீங்கள் வந்து படித்தது மிக சந்தோஷம். ஆமாம் பல வீடுகளில் பார்க்கிறோம்.

பெரியவர்களும், சிறியவர்களும் இனிமையாக இணைவதையும் காண்கிறோம். இறைவன் சித்தம். மிக நன்றி ஐயா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தி/கீதா, வந்து படித்ததற்கு மிக நன்றி ராஜா.

கீதா மாதிரி ஒரு மருமகள் கிடைத்துவிட்டால் யார்க்கும் கவலை இல்லை.
வாழ்வில் எல்லாமே இனிதாகிவிடும்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி நீங்களும் படித்துவிட்டீர்களா.
அட. கருத்துக்கு மிக நன்றி மா.