Blog Archive

Saturday, April 27, 2019

1978 இல் ஒரு திருமலா பயணம்.

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழவேண்டும் .

 1978 இல் ஒரு திருமலா பயணம்.
++++++++++++++++++++++++++++++++++++++1977இல் சிங்கத்தின் அப்பா
ஒரு வைகாசி மாதம் இறைவனடி சேர்ந்தார்.. ஒரு வருடம் மாதா மாதம் வைதீகக்
காரியங்கள் முடிந்த பிறகு
திருப்பதி செல்வது வழக்கம்.
பாட்டி சொல்லிவிட்டார்.  குழந்தைகள் புதிதாக வேறு வேறு பள்ளிகளில் சேர்ந்திருந்ததால்
உடனே விடுமுறை எடுக்கத் தயக்கமாக இருந்தது.

மாமியார் இரண்டு நாட்களுக்குத் தான் பார்த்துக் கொள்வதாகவும்
நானும் இவரும் நாத்தனார் கல்யாணி குடும்பத்துடன்
அவர்கள் பெரிய வண்டியில் திருப்பதி போய் வரலாம் என்றும் சொன்னார்.

கல்யாணியின் கணவர் இன்னோரு மகன் மாதிரி தான் நடந்து கொள்வார்.

மிக மிக இதமான மனிதர்.
அவர்கள் ஐவரும்,நாங்கள் இருவருமாகக் கிளம்பிவிட்டோம்.
ஒரு நல்ல காலை நேரம்.
இப்போது இருக்கும் கனத்த சரீரம் அப்போது இல்லை இருவருக்கும்

அதனால் சிங்கம் காரை ஓட்ட ,அத்திம்பேரும் ,அவர்களின்
மூத்தமகனும் முன்னால் உட்கார், கல்யாணி,நான்,அவர்களது பெண், இளையமகன்
பின்னால் உட்கார பத்தரை மணி அளவில் கீழ்த் திருப்பதிக்கு வந்து விட்டோம்.

அப்போதெல்லாம் இப்போதிருக்கும் கூட்டம் தள்ளு முள்ளு இருந்ததாக நினைவில்லை.
அலர்மேல்மங்கைத்தாயாரை மனமார வழிபட்டு

அங்கேயே  ஒரு மரத்தடியில் கொண்டு போயிருந்த உணவைப்
பகிர்ந்து உண்டுவிட்டு,மதியம் மூன்று மணி அளவில்

மலையேறத் துவங்கினோம்.
ஒன்றரை மணி நேரம் கழித்து ஏற்கனவே  பதிவு செய்திருந்த
மூன்று அறைகள் கொண்ட  காட்டேஜ் ஒன்றில்
இறங்கிக் கொண்டோம். எனக்கு அங்கப் பிரதட்சிண வேண்டுதல் இருந்ததால்

சீக்கிரம் உறங்கத் தயாரானேன்.. தானும் துணைக்கு வருவதாகக் கல்யாணி சொல்லவே
எட்டு மணி அளவில் வுட்லாண்ட்ஸ்  உணவு விடுதியில்
சாப்பாட்டை  முடித்துக் கொண்டோம். நல்ல சாப்பாடு கிடைத்த காலம்.

குளிர்காற்று சில்லென்று வீடிய காலம் அது. திருமலை தெய்வீகக் காட்சி கொடுக்கும்.
இப்போது மக்கள் வசதிக்காக பலவிதமாகச் சாலைகள்
பலவித வசதி கொண்ட விடுதிக் கட்டடங்கள் அப்போது இல்லை.
உயர்ந்த மரங்கள் வளைந்து செல்லும் பாதைகள்

அமைதியாகச் செல்லும் மக்கள் வரிசை எல்லாமே என் மனதுக்கு
இதமாக இருந்த நினைவு இருக்கிறது.
அப்புறம் திருமலைக்குச் சென்ற வருடங்களில் கூட ஸ்வெட்டரோ
சால்வையோ எடுத்துச் சென்ற ஞாபகம்.

விடுதிக்கு வந்து உறங்கி,  ஒரு மணி அளவில்,குளித்துவிட்டு
கோவில் வாசலுக்குச் சென்றுவிட்டோம்.
அப்போது  கோபுரவாசலிலிருந்தே அங்கப் பிரதட்சிணம் செய்பவர்கள்
நேரே உள்ளே போய்விடலாம்.
அங்கப் பிரதட்சணம் செய்யும் போது புடவை விலகாத வண்ணம்
பார்த்துக் கொண்டு ,முனை வந்தால் சரியாகத் திருப்பிவிட்டு
கோவிந்தா கோஷங்களோடு பெருமாள் கருணையால்
நல்லபடி பூர்த்தி செய்து சன்னிதி வாசலுக்கு துவஜஸ்தம்பம் அருகிலிருந்து
வரிசையில் சேர்ந்து கொண்டோம்.

அந்தத் தரிசனத்தை என்னவென்று சொல்வேன்.

அங்கப்பிரதட்சணம் செய்தவர்களுக்கான்  தனி வரிசை.
குளிர் காற்று,புடவையைக் காயவைத்த அதிசயம்.
மனம் முழுவதும் கோவிந்த நாமம்.கண்முன்னே நீண்ட நெடிய தங்க மய ஜோதியாக
கோவிந்தன்.
என்ன புண்ணியம் செய்தேன் என்று என்னை அழைத்தாய் கோவிந்தா
என்று அரற்றியவாறு கூப்பிய கைகளுடன் ஜருகண்டி சொல்லாத தள்ளாத
மனிதர்களுக்கு நடுவில் அடுத்து வருபவர்களுக்கும்
நான் அருள்வேண்டும் என்று அவன் சொல்வது போல ஒரு தோற்றம்.
கல்யாணிக்கும் அதே நிலை. முடக்குவாதம் ஆரம்ப நிலை அவருக்கு.

அதை அவன் சரி செய்துவிடுவான் என்று சொன்னபடியே சன்னிதியைச் சுற்றி வெளிப்பிரகாரத்தில் கிடைத்த சர்க்கரைப் பொங்கலையும்
புளியோதரயையும் அந்த  அதிகாலை மூன்று மணிக்கு
மனதினிக்க சாப்பிட்டது அமிர்தமான நினைவு.
 கால் நடையாகவே விடுதிக்கு வந்து புடவை மாற்றி உறங்க நினைத்தேன்.
பெருமாளைத் தரிசித்த நிறைவு எங்களைத் தூங்க விடவில்லை.
மீண்டும் திருமண உத்சவத்துக்குப் போக வேண்டும் என்று நினைப்பில்
வெளியே வந்து காப்பி விற்றவரிடம் எல்லோருக்கும் காப்பி வாங்கிக் கொண்டு
எல்லோரையும் எழுப்பினோம்.
உத்சவத்துக்கு ஏற்பாடு செய்திருந்த கல்யாணி ,சின்னி அத்திம்பேர் இருவரும்
வைணவ உடையாக முறையாகப் பஞ்சகச்சம், ஒன்பது கஜப் புடவை என்று
உடுத்திக் கொள்ள,மற்ற அனைவரும் புதிய உடைகளை அணிந்து
கொண்டு  காலை உணவை  முடித்து மீண்டும் கோவிலுக்குப் புறப்பட்டோம்.
அந்த முறையும் நேராகக் கல்யாண மண்டபத்துக்குப் போய்விட்டோம்.

தம்பதிகள் சங்கல்பம் செய்து கொள்ள இரண்டு மணி நேரம்.
தாயாரும் பெருமாளும் ஆனந்த தரிசனம் கொடுத்தார்கள்.

தெய்வத் திருமணம் முடிந்த கையோடு மீண்டும் ஸ்ரீனிவாச தரிசனம்..
 மீண்டும் எங்களை அழைத்துத் தரிசனம் அருள்வாய்
என்று மனதார வேண்டிக் கொண்டு  பனிரண்டு பெரிய லட்டுகள்,
வடைகள் எல்லாம் பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு,
தயிர்சாதம், புளியோதரை என்று கூவிகூவிக் கொடுத்ததை வாங்கி அங்கேயே மண்டபத்தில்
உட்கார்ந்து சாப்பிட்டுக்
கொண்டுபோயிருந்த பாட்டில்கள் நிறைய திருமலைத் தீர்த்தத்தை நிரப்பிக்
கொண்டு வண்டி ஏறினோம்.
நானும் சிங்கமும் மீண்டும் மீண்டும் கல்யாணிக்கும் அத்திம்பேருக்கும்
 நன்றி சொல்லிக் கொண்டே வந்தோம்.
அது போல நிறைவான பயணம் கிடைக்க வழி செய்த என் அருமை நாத்தனார்
 மூன்று நாட்களுக்கு முன் உண்மையிலியே வைகுந்த தரிசனத்துக்குக் கிளம்பிவிட்டார்.

20 comments:

KILLERGEE Devakottai said...

சொல்லிய விதம் ரசிக்க வைத்தது.
காணொளி கண்டு தரிசித்தேன் அம்மா.
வாழ்க வையகம்.

Geetha Sambasivam said...

மறக்க முடியாத நினைவுகள். நானும் அவர்களை 23 ஆம் தேதி முகநூலில் பார்த்தேன். நல்லவர்கள் பிறருக்குத் தொந்திரவு தராமல் இறையடி சேர்ந்துவிடுகிறார்கள். மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்! வேறே என்ன சொல்ல முடியும்? :(

ஸ்ரீராம். said...

அப்போது திருமலையில் இவ்வளவு கெடுபிடிகள் இருந்தது இல்லை என்று நினைக்கிறேன். நீங்கள் தரிசனம் செய்த வர்ணனை என்னையும் அந்த அனுபவத்தில் ஆழ்த்தியது. நாத்தனார் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

கோமதி அரசு said...

திருமலை தரிசனம் மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது கடைசியில்

அருமையான பயணம் கிடைக்க வழி செய்த நாத்தனார்
வைகுந்த தரிசனத்துக்குக் கிளம்பிவிட்டார் என்று படித்தவுடன் மனதுக்கு கஷ்டமாய் இருந்தது.

பரமபத வாசல் அடைந்து விட்டார்கள்.அங்கு வைகுந்தனை தரிசனம் செய்து கொண்டு இருப்பார்கள்.

உங்களுக்கும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கும் ஆறுதலை அந்த வைகுந்தன் அருள்வார்.

கோமதி அரசு said...

பாடல் பகிர்வு நன்றாக இருக்கிறது.
கேட்டு மகிழ்ந்தேன்.

Bhanumathy Venkateswaran said...

1986இல் எங்கள் அண்ணாவின் திருமணம் முடிந்ததும் குடும்பத்தோடு திருப்பதி சென்ற சகோதரிகளும், சகோதரனும் அங்க பிரதட்சிணம் செய்தோம். அற்புத தரிசனம் அது. அப்போதெல்லாம் அங்க பிரதட்சிணம் செய்பவரின் உதவிக்கு ஒருவரை அனுமதிப்பார்கள். இப்போது அப்படி இல்லை. தவிர, முதல் நாளே சென்று டோக்கன் வாங்க வேண்டும், அதுவும் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் வழங்குவார்கள்.

துரை செல்வராஜூ said...

மனதை உருக்குகின்றதம்மா.. தங்களுடைய பதிவு...

நல்லதொரு தரிசனத்துக்கு வழி செய்து கொடுத்த தங்களது அன்பின் நாத்தனார் இந்நேரம் பெருமாளின் திருவடிக் கீழிருந்து தங்களுக்காகவும் தம்மைச் சேர்ந்தவர்களுக்குமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்..

கோவிந்த... கோவிந்த...

நெல்லைத்தமிழன் said...

திருப்பதி தரிசனத்தை நினைவுபடுத்திவிட்டீர்கள். பழைய நினைவுகள் அலைமோதுகின்றன.

நீங்கள் அம்பாசிடர்லதானே போயிருப்பீர்கள் (அப்போதானே முன்னால் மூன்றுபேர் டிரைவர் சீட்டில் உள்ளவரையும் சேர்த்து உட்காரமுடியும்).

பெரிய லட்டு.... நினைக்கவே இனிப்பாக இருக்கிறது. சொல்வது தவறு.. நான் சில வருடங்களுக்கு முன்பு, இரண்டு மடங்கு விலைக்கு அதை ஒரு ஆள் மூலம் வாங்கினேன் (ஒரு லட்டு 300 ரூபாய் வீதம் 3 லட்டுகள். சாதாரண விலை 150 ரூபாய் அப்போ)

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி. நன்றிமா.
நாங்கள் இருவரும் மட்டும் சென்றிருந்தால் இந்த ஆனந்தம்
கொஞ்சம் குறைவாகத்தான் இருந்திருக்கும். ஒத்த நினைவுகளுடன் பயணம் அதுவும் தெய்வ தரிசனம் மிகவும் நன்மை.வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா. சமையல் செய்வதில் மிக விருப்பம் கொண்டவர்கள். மிக சுசி ருசியாகச் செய்வார்கள். சக்கர நாற்காலியில் உட்கார்ந்த படியே சமையல் செய்யும் அம்மாவுக்கு செய்முறைகளை விளக்கி செய்யச் சொல்வார்கள். ஆட்கள் இருவர் வேலை செய்தாலும்,துளி அழுக்கு சேராதபடி மிக சுத்தமாக அவ்வளவு பெரிய வீட்டைக் கவனித்துக் கொள்வார்கள்.
பெண்வீட்டுக்கும் தன் வீட்டுக்கும் நடுவே வழி செய்திருந்தார்கள்.
அவள் தன் வேலைகளை முடித்துக் கொண்டு
இங்கே வந்து பார்த்துவிட்டுப் போவாள்.
சகல சீரியல்களையும் பார்த்து சிரித்துக் கொண்டே இருப்பார்கள்.
பெரிய நாத்தனார் பத்மா ரொம்ப நெருக்கம்.
அவர் ஐப்பசியில் கிளம்பினார். இவர் சித்திரையில் அக்காவைத் தேடிப்
போயாச்சு. நலம் பெறட்டும்.நன்றி கீதா மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்.
அப்போது ஒவ்வொரு வருடமும் திருமலை செல்வோம்.
முக்கால் வாசி,பெற்றோர் தம்பிகள் அவர்களின் குழந்தைகள்
என்றூ இரண்டு நாட்கள் பயணமாகப் போவோம்.

பெரிய தம்பிக்கு நடக்கப் பிடிக்கும் . //வா ரேவ்// என்று என்னை அழைத்துக் கொண்டு வீதிகளில்
நடப்பான். சின்னத்தம்பி செய்யும் முதல் வேலை,இண்டியா காஃபி ஹவுஸ் போய் ,அரைக்கிலோ 15 ரூபாய் என்று 8 பாக்கெட் வாங்குவதுதான்.
பின்னர் தம்பி மனைவிகளுடன் போய் விதவிதமான வளையல்கள்
மராப்பாச்சி பொம்மைகள், வாணலி இப்படி சேர்ப்போம்.

அப்பா தங்கியிருக்கும் இடத்தில் சஹஸ்ரனாமம் சொல்லிக் கொண்டிருப்பார்.
அம்மா ,அப்பாவை விட்டு நகர மாட்டார்.
2011 வரை சென்றோம். அங்கிருந்த கெடுபிடிகள் மனதை தளர வைத்தன.

நல்ல நினைவுகளோடு அவனை வணங்கிக் கொள்ள வேண்டியதுதான். நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா.
அழகு,சாமர்த்தியம்,அன்பு எல்லாம் நிறைந்தவர். அவர் கணவரும் மிக
உயர்ந்த குண நலங்களைக் கொண்டவர்.
எங்கள் சிங்கத்துக்கும் நெருக்கமானவர்,.
நாங்கள் இருந்த இடங்களுக்கெல்லாம் வந்து இருந்துவிட்டுப்
போவார்கள்.குடும்பத்தில் அத்தனை நபர்களுக்கும் குவைத்திலிருந்து



வித விதமான பொருட்கள்,புடவைகள் எல்லாம் வாங்கி வந்து குவிப்பார்கள்.
கணவர் இறைவனடி சேர்ந்ததுமே நலிந்து விட்டார்கள்.
மகள் அருமையாகப் பார்த்துக் கொண்டார்.
வீட்டிலியே வேலைக்காரகளின் சிறு குழந்தைகளுக்கு ஆங்கிலம்,கணக்கு எல்லாம்
பொறுமையாகச் சொல்லிக் கொடுப்பார்கள்
அவர்கள் இப்போது நல்ல வேலையில் இருக்கிறார்கள்.

ஆமாம் இப்பொழுதும் குடும்ப நலனுக்காக இறைவனை வேண்டியே
அங்கே இருப்பார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானு மா.
ஆமாம். 1990 வரை கூடப் பரவாயில்லை.
பிறகு பலவிதமான தரகர்கள் வழியாகத் தரிசனங்களுக்குப் போக முடிந்தது.
நீங்களும் அங்கப் பிரதட்சிணம் செய்தது மகிழ்ச்சி.
இப்போது எல்லாமே மாறிவிட்டது. இனி சீனியர் சிடிசன் சலுகையோடு
போய் வர முயற்சிக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை செல்வராஜு,
என் புக்ககத்தினர்,சிங்கத்தின் சகோதரிகள் அனைவரும் என்னைவிடப் பத்தும்,அதற்கு மேலும்
வயதில் பெரியவர்கள்.
அத்தனை அக்காக்களும் அன்பால் அணைத்தவர்கள்.
படித்தவர்கள்.

சமூகப் பிரக்ஞை உள்ளவர்கள். இப்போது எல்லோருக்கும் மூத்தவரும்,எல்லோருக்கும் இளைவரும் இருக்கிறார்கள் தினம் அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.
அன்பு சகோதரி விட்டுச் சென்ற மகனுடனும்,மகளுடனும்
பேசி என் துயரத்தை மறக்கிறேன்.

அடுத்த பரம்பரை சிறக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

திருமலை சென்றால் அனைவருமே தன்னை மறந்து அவனுடன் ஒன்றி விடுவார்கள்.

இனி எப்பொழுது அழைக்கிறானோ அப்போது போகலாம். உடல் தெம்பை அவனே கொடுப்பான்.
அழகான அன்பில் தோய்ந்த வார்த்தைகள் உங்களுடையது. இந்த நல்ல மகன் களை எனக்குக் கொடுத்த இணையத்துக்கு நன்றி.என்றும் நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் முரளி மா.
மார்க் 4 என்று அப்போது புதிதாக வந்திருந்தது.பம்பாயில் வாங்கினார்கள். குவெய்த்துக்குப் போகும்போது நண்பரிடம் விட்டுப் போனார்கள்.
அந்த யுத்தத்தின் போது பங்களூருக்கு வீடு வாங்கி வந்து விட்டார்கள்.
1973லிருந்து 1990 வரை குவெய்த் வாழ்க்கை.
நாத்தனாருக்கு அந்த சீதோஷ்ணம் தான் ஆர்த்தரைடிஸ் கொடுத்தது.
பாவம் எத்தனை வலிகளைப் பொறுத்தார்கள் என்று கணக்கே இல்லை.

லட்டு என்றதும் உங்களைத்தான் நினைத்தேன்.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிமா ஆஹா உங்கள் தரிசனம் வெகு சிறப்பு. அன்பான குடும்பம். உங்களுடனே வ்ந்த போன்றதொரு ஃபீல்...நீங்கள் சொல்லும் விதம் அப்படி! இதமான வார்த்தைகள். வரிகள்...

ஆமாம் அப்போதெல்லாம் எந்தக் கெடுபிடியும் கிடையாது. நான் என் அப்பாவழிப் பாட்டி தாத்தாவுடன் திருப்பதி சென்றிருக்கிறேன் அப்போது 4, 5 ஆம் வகுப்போ..74 ஆம் வருடம். கூட்டமே கிடையாது. உள் வரை செல்ல அனுமதி அப்போதெல்லாம். இறைவன் இருக்கும் இடத்திற்கு அடுத்த மண்டபம்...முழுமையாகப் பார்க்கலாம். பாட்டி தாத்தா வெளியில் எதுவும் சாப்பிடமாட்டார்கள். மடத்திற்கோ இல்லை எங்கோ தங்கிச் சாப்பிட்ட நினைவு. ஹோட்டல் இல்லை. சத்திரம் போலத்தான். பேருந்துப் பயணம் மலை ரோடு இப்போது போல் இருக்காது. மலையும் மிகவும் அடர்த்தியாக இருந்த நினைவு. இப்போது செக்கிங்க் கீழே அலை ஏறும் முன் அதெல்லாம் ஒன்றும் கிடையாது. நல்ல நினைவு...ஆனால் எல்லாமே ப்ளாக் அண்ட் வொயிட்டில் ஹா ஹா ஹா ஹா ஹா

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா ரங்கன்,
உண்மையாகவே மரங்கள் சூழ நின்றிருந்த ஸ்ரீனிவாசன்.
எங்கள் பாட்டியுடன் போனாலும் மடம் தான் தங்குமிடம்.
நாங்கள் போகும்போது ஆண்டவன் ஆஸ்ரமத்தில் பதிவு செய்து விடுவேன்.
மூன்றாவது மாடியில் அறையிலிருந்து நேரே கோபுரம் தெரியும்.
அற்புதமான இடம். நன்றி மா.

ஏகாந்தன் ! said...

திருப்பதியில் சுகமான அங்கப் பிரதக்ஷணம், தள்ளாத தரிசனம். சில மணிநேரங்களில் மீண்டும் தரிசனம்! படிக்கும்போதே ஒரு கனவுக்காட்சிபோல் இருக்கிறது. நீங்கள் எல்லோரும் கொடுத்துவைத்த புண்ணியாத்மாக்கள்.

நாத்தனார் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏகாந்தன் ஜி. அப்பொழுது இருந்த திருமலை ஆழ்வார்கள் பாடியதில் பாதி இருந்தது. பிறகு மனிதர்களுக்கான் கூண்டுகள் வந்தன, வி ஐ பி தரிசனம் வந்தது. எல்லாம் மாறியது.
ஆமாம் அப்போது திருப்பதி செல்வது ஒரு இன்ப அனுபவம்.

இனியும் நன்றாக இருக்கும். எனக்கு அவன் அருள வேண்டும். நன்றி ஜி.

மாதேவி said...

மனது உருகுகிறது.